> குருத்து: இளமையின் கீதம் - நாவல் - அறிமுகம்

December 4, 2007

இளமையின் கீதம் - நாவல் - அறிமுகம்


"நான் படித்த நூல்களில், சிறந்த புத்தகங்கள் என பத்து தேர்ந்தெடுத்தால், அந்த வரிசையில் இந்த புத்தகம் நிச்சயம் இடம் பெறும். இது கற்பனை நாவல் அல்ல. ரத்தமும், சதையுமான விடுதலைப் போராட்ட வரலாற்று நாவல்" - என்று... மகா அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு, அவருடைய பதிவில் அறிமுகப்படுத்தியிருந்தார்.

பிறகு, தேடிப்படிக்க சில காலங்கள் கடந்துவிட்டன. நல்ல ஆரோக்கியமான குண்டு புத்தகம் தான். மொத்தம் 748 பக்கங்கள். இப்படி கனமான புத்தகங்கள் நான் படித்தது மிகு குறைவு தான். அதும், நான் விரைவாக படித்த சில புத்தகங்கள் தான்.

அதில், மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் நாவல் முதல் புத்தகம். கடைசியாக படித்தது மொழிபெயர்ப்பு நாவலான பட்டாம்பூச்சி. சில ஆண்டுகளுக்கு பிறகு, இந்த புத்தகம் தான் விரட்டி, விரட்டி படித்த புத்தகம். மகா அவர்கள் சொன்னது போல, அற்புதமான நாவல்.

இன்றைக்கு கதை மட்டும் சொல்கிறேன். வரும் நாட்களில், நாவலில் சொல்லத்தக்க விசயங்கள் நிறைய இருக்கின்றன, அதையும் சொல்கிறேன்.

கதை தொடர்கிறது.

ஒரு நிலப்பிரவுவால் சீரழிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் நாயகி லிண்டாவோ சிங். நெருக்கடியில், தன்னந்தனியாக தன் சொந்த ஊரைவிட்டே வெளியேறுகிறாள்.

தேடிப்போன மாமாவும் அந்த கடலோர கிராமத்தில் இல்லாமல் போக, அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல், ஆதரவின்றி குழப்பத்தில் நிற்கும் அவளை, மேலும் துயரங்கள் துரத்த, மிகவும் தளர்ந்து தற்கொலைக்கு முயல்கிறாள்.

டாவோசிங்கைப் பிடித்துப்போய், அவளும் அறியாமல் பின் தொடரும் யூங்சே என்ற மாணவரால் காப்பாற்றப்படுகிறாள். அடுத்து வரும் காலங்களில் இருவரும் விரும்பி, காதலிக்கிறார்கள். காலங்கள் உருண்டோட, பீப்பிங் நகரத்துக்கு நகர்ந்து, அவன் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் தன் படிப்பைத் தொடர, இருவரும் இணைந்து வாழ்கிறார்கள்.

அப்பொழுது, சீனாவில் 1930க்குப் பிறகான காலகட்டம். ஏகாதிபத்திய நாடான ஜப்பான், வடக்கு சீனாவையும், வடகிழக்கு சீனாவையும் கைப்பற்றி மேலும் தனது ஆக்கிரமிப்பு எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே போனது. நிலவிய கோமிண்டாங் ஆட்சியும் மக்களுக்கு துரோகமிழைத்தது. சீனமண்ணை ஜப்பான் ஏகாதிபத்தியத்திற்கு விட்டு தரக்கூடிய அரசாக இருந்தது. சீன மக்கள் தங்கள் மண்ணை மீட்க, கம்யூனிஸ்டுகள் தலைமையில், போராடிக் கொண்டிருந்த காலம்.

அநீதிகளை எதிர்க்கும் பண்பும், சுதந்திர மனப்பான்மையும் கொண்ட டாவோசிங்கை இயல்பாகவே புற போரட்டச் சூழல் ஈர்க்கிறது. இந்த காலத்தில் கம்யூனிஸ்டுகள் அறிமுகமாகிறார்கள். அவர்களின் மூலம் மார்க்சிய-லெனினிய புத்தகங்கள் அறிமுகமாகின்றன. சமூகத்தையும், நாட்டின் சமகால நிலைமையையும் புரிந்து கொள்கிறாள்.

அறிமுக காலத்தில் முற்போக்காளனாய் தெரிந்த யூங்சே, இப்பொழுது, தன் படிப்பு, அந்தஸ்தான பதவிக்காக மிகுந்த கவனம், சமகால போராட்டத்திலிருந்து ஒதுங்கி நிற்கும் போக்கு, டாவோசிங்கின் கம்யூனிஸ்டுகளுடான தொடர்பில் வெறுப்பு என இன்னும் சில பிற்போக்குத்தனங்களுடன் வெளிப்படையாய் நடந்து கொள்ள, இனி அவனுடன் வாழ்வது சாத்தியமில்லை என்ற உறுதியான முடிவோடு அவனைப் பிரிகிறாள்.

டாவோசிங் சில போராட்டங்களில் ஈடுபட அரசின் உளவாளிகள் பிடித்து மிரட்ட, சுதாரித்து அங்கிருந்து தப்பித்து, ஒரு கிராமத்திற்கு போய் ஆசிரியப் பணி செய்கிறாள். அங்கும் போராட்டத்தில் ஈடுபட, கைது செய்ய அரசு படைகள் நெருங்க, அங்கிருந்தும் சிலரின் உதவியால் தப்பிக்கிறாள். இப்படி அடுத்தடுத்து வரும் நடைமுறை போராட்டங்களில் நிறைய தெளிகிறாள்.

அச்சமயத்தில் கோமிண்டாங் அரசு கம்யூனிஸ்டு என சந்தேகப்பட்டாலே, சிறையில் தள்ளியது. கொடூர சித்திரவதை செய்தது. காட்டிக்கொடுக்க மறுப்பவர்களை உயிரோடு புதைத்தது. இப்படி பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகளை கொன்று குவித்தது. பலவீனமானவர்களை மிரட்டி, காட்டிக்கொடுக்கும் உளவாளிகளாக மாற்றியது.

டாவோசிங் ஒருமுறை நகரம் வந்தடைந்ததும், அரசு படைகளால் பிடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறாள். கடும் சித்ரவதைக்குள்ளாகிறாள். நடமாட முடியாமல் படுத்தப் படுக்கையாகிறாள். அச்சமயத்தில், சிறையில் அடிப்படைத் தேவைகளுக்காக கைதிகள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அந்த மோசமான உடல்நிலையிலும், மனநிலையிலும் மன உறுதியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்கிறாள்.

டாவோசிங்கின் பொராட்டக்குணம், மன உறுதி, துணிவு எல்லாவற்றையும் கம்யூனிஸ்டு கட்சி பரிசீலனை செய்து, தன் உறுப்பினராக்குகிறது. மேலும் உற்சாகத்துடன் கட்சி வேலைகளில் ஈடுபடுகிறாள்.

அச்சமயத்தில், கோமிண்டாங் அரசு ஏற்கனவே நடந்த மாணவர் போராட்டங்களை ஒடுக்க கையாண்ட கடும் அடக்குமுறையால் மாணவர் அமைப்புகள் மந்த நிலையில் இயங்குகின்றன. கட்சி முடிவு செய்து, மாணவர்களிடையே வேலை செய்ய அனுப்புகிறது.

ட்ராஸ்கியவதிகள், கோமிண்டாங் விசுவாசிகள், பிற்போக்குவாதிகடையே கருத்து ரீதியாக மோதி, சில ஆதாரங்களை காட்டி அம்பலபடுத்தி, கம்யூனிஸ்டு மாணவர் அமைப்பு உற்சாகத்துடன் முன்னேறுகிறது.

இறுதியில், ஒரு ஆர்ப்பாட்டத்தை மாணவர் அமைப்பு பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்கிறது. தூக்கமில்லாமல் இரவு பகலாக டாவோசிங்கும், மாணவர்களும் வேலைகள் செய்கிறார்கள்.

திட்டமிட்டப்படி, வெற்றிகரமாக ஊர்வலம் தொடங்கி,

"என் தாய்நாட்டு மக்களே, அணிதிரட்டுங்கள்! ஆயுதமேந்துங்கள்!
தேசத்தைக் காக்க கிளர்ந்தெழுங்கள்!"

என்ற விண்ணை எட்டும் முழக்கங்கள் மீண்டும் மீண்டும் கிளர்ச்சியுடன் ஒலித்தன. தொழிலாளர்களும், இளைஞர்களும், அறிவுஜீவிகளும் இணைந்து கொள்ள, கோமிண்டாங் படைகள் கொடூரமாய் தாக்கி, தடுக்க முயன்று திணறின. டாவோசிங் அந்த மக்கள் திரளில் ஒரு போராளியாய் எதிரி படைகளோடு போராடுவதில் முனைப்பாய் இருந்தாள். தடைகளை எல்லாம் கடந்து, மேலும், மேலும் அந்த தேசபக்த படை முன்னேறிக்கொண்டே இருந்தது.

போராட்டமே மகிழ்ச்சி என்றார் மார்க்ஸ். இங்கு போராட்டத்தை இளமையின் கீதமாக அந்த மாணவர்கள் இசைத்தார்கள். வரலாற்றில் மக்கள் சீனா மலர்வதற்கான துவக்கமாக அந்த கீதம் விடுதலையின் கீதமாக காற்றில் கலந்தது.

1 பின்னூட்டங்கள்:

நந்தன் said...

//டாவோசிங்கின் பொராட்டக்குணம், மன உறுதி, துணிவு எல்லாவற்றையும் கம்யூனிஸ்டு கட்சி பரிசீலனை செய்து, தன் உறுப்பினராக்குகிறது//

தோழர் கட்சி உறுப்பினர் ஆக வேண்டும் என்றால் இவ்வளவு சோதனைகளையும் தாங்க வேண்டும் என்பது இப்பொழுதான் புரிகிறது.