> குருத்து: May 2008

May 31, 2008

பங்குச்சந்தையும் குரங்கு கதையும்!



பங்குச்சந்தையைப் பற்றி அதன் தகிடு தத்தங்களை எளிய முறையில் பதிவில் விளக்கி எழுத வேண்டுமென்று, நிறைய நாள் ஆசைப்பட்டிருக்கிறேன்.

பாமரன் சொன்ன இந்த குட்டிக்கதை பங்குச்சந்தையை அதன் தன்மையை சிறிய அறிமுகமாக தருகிறது. உங்களோடு பகிர்ந்து கொள்ள பதிவிடுகிறேன். பாமரனுக்கு என் நன்றி. இதை மெயிலில் அனுப்பிய நண்பனுக்கும் நன்றி.

*******

2000 புள்ளிகள் சரிந்தன... சதுரங்கள் சிரித்தன...என பங்குச் சந்தையைப் பற்றி வரும் தகவல்கள் எதுவும் என் மர மண்டைக்கு எட்டியதேயில்லை. வாரச் சந்தையையே புரிந்து கொள்ளாத எனக்கு பங்குச் சந்தையைப் பற்றி எப்படிப் புரியப் போகிறது என்றிருந்த வேளையில்... அது ஒன்றும் சிரமமில்லை என்று ஒரு கதை.

தானுண்டு தன் வேலை உண்டு என்று இருந்த கிராம மக்களைப் பார்ப்பதற்காக நகரத்திலிருந்து ஒருவன் வந்து சேர்ந்தான். கிராம மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டிய அவன்... தான் குரங்கு வாங்க வந்திருப்பதாகவும்... கிராம மக்கள் குரங்கு பிடித்துக் கொடுத்தால் அதற்கு 10 ரூபாய் கொடுப்பதாகவும் அறிவித்தான்.

இதை நம்பிய மக்களும் இருக்கிற வேலைகளை விட்டுவிட்டு குரங்கு பிடிக்கக் கிளம்பினார்கள்.

கொஞ்ச நாளிலேயே அந்தப் பகுதியில் குரங்குகள் குறைந்து போக...

இந்த முறை ஒரு குரங்கிற்கு 20 ரூபாய் தருகிறேன் என்று அறிவித்தான் நகரத்திலிருந்து வந்தவன். சில நூறு குரங்குகள் பிடித்து வந்து அவனிடம் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிச் சென்றனர் கிராம மக்கள்.

இதற்கிடையில் அக்கம் பக்கத்திலுள்ள குரங்குகளும் குறைந்து போகவே... குரங்குபிடி தொழிலில் தேக்கம் வந்து சேர்ந்தது.

குரங்குப் பஞ்சம் தலைவிரித்தாடிய நேரமாய்ப் பார்த்து...

நன்றாகக் கேளுங்கள்... இந்த முறை நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு குரங்குக்கும் 50 ரூபாய் தரப் போகிறேன். அதன்பிறகு நீங்கள்தான் பெரிய பணக்காரர்கள் என்று அறிவித்துவிட்டு நான் வெளியூர் செல்வதால் நான் வரும்வரை எனக்கு பதிலாக இவர் வியாபாரத்தைப் பார்த்துக் கொள்வார் என்று இன்னொரு ஆளையும் அறிமுகப்படுத்தி வைத்து விட்டு கிளம்பினான் நகரத்துவாசி. இம்முறை குரங்குகள் பிடிபடுவது லேசுப்பட்ட விஷயமாக இருக்கவில்லை. தேடிச் சலித்த மக்கள் எதுவும் பிடிபடாது விரக்தியுடன் குரங்குபிடி ஆபீசை நோக்கி சோகமாக வந்தனர். நிலைமையைப் புரிந்து கொண்ட அந்த புதிய ஆள் `இதற்கா இவ்வளவு கவலை....? இதோ இந்தக் கூண்டில் இருக்கும் குரங்குகளை நான் உங்களுக்கு வெறும் 35 ரூபாய்க்குத் தருகிறேன்...இதையே நீங்கள் நாளை அந்த ஆள் நகரத்திலிருந்து வந்தவுடன் 50 ரூபாய்க்கு சத்தமில்லாமல் விற்று விட்டு அள்ளிக் கொள்ளுங்கள் உங்கள் பணத்தை' என்றான்.

அதைக் கேட்டவுடன்... அட...பணம் சம்பாதிக்க இவ்வளவு சுலபமான வழியா? குரங்கைத் தேடி அலையாமலேயே இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்திருக்கிறதே என்கிற மகிழ்ச்சியில்... கையில் இருந்த பணம்... சேமித்து வைத்திருந்த பணம்... என எல்லாவற்றையும் கொண்டு வந்து கொடுத்து விட்டு குரங்குகளை ஓட்டிச் சென்றனர்.

மறுநாள் காலை குரங்குகளைக் கொடுத்துவிட்டு பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு வரலாம் என்று கிராமத்தினர் படையெடுத்துப் போக... அங்கே...

குரங்குபிடி ஆபீசில் பெரிய திண்டுக்கல் பூட்டு ஒன்று அவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தது. அதன் பக்கத்திலேயே லேமினேட் செய்து மாட்டப்பட்டிருந்தது ஒரு கீதாசாரம்: `நேற்று உன்னிடம் இருந்தது இன்று என்னிடம் இருக்கிறது. நாளை அது யாரிடமோ?' என்று.

இப்ப அந்த ஊருல காசுக்குப் பஞ்சம் இருக்கோ இல்லியோ...

ஆனா...

குரங்குக்கு மட்டும் பஞ்சமே இல்லை.

எங்கும் குரங்கு. எதிலும் குரங்கு.


- பாமரன்

May 3, 2008

தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் - சில தகவல்கள்


இந்திய அரசு அமைப்புச் சார்ந்த தொழிலாளர்களுக்காக உருவாக்கியிருக்கும் காப்பீட்டுத் திட்டம் இந்த E.S.I. திட்டம்.

சமீப காலங்களில், தனது அருமை பெருமைகளை விளக்கி இப்பொழுதெல்லாம் அடிக்கடி செய்தி தாள்களில் விளம்பரம் தந்து கொண்டிருக்கிறது. நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

இந்தியா முழுவதிலும் 1427 மருந்தகங்கள், 143 மருத்துவமனைகள் மூலம் 327 இலட்சம் மக்கள் பலனைடைகிறார்களாம்.

இந்தியாவிலேயே குறைந்த செலவில் காப்பீட்டு திட்டம் என்றால், அது இது தான் என பெருமையாய் சொல்கிறது.

ஒரு தொழிலாளி வாங்குகிற சம்பளத்திலிருந்து 1.75%யும், முதலாளி 4.75%யும் அரசுக்கு செலுத்த வேண்டும்.

நீங்கள் ரூ. 6000 சம்பளம் பெறுகிறவராய் இருந்தால், நீங்கள் செலுத்த வேண்டிய தொகை மாதம் ரூ. 105/. முதலாளி செலுத்த வேண்டியது ரூ. 285/-. அப்படியென்றால், மாதம் ரூ. 390/- வருடத்திற்கு ரூ. 4680/-. இது தான், இந்தியாவிலேயே குறைந்த செலவிலான திட்டம்.

இந்த திட்டத்தில் சேர வேண்டுமென்றால், உற்பத்தியில் மின்சாரம் பயன்படுத்துகிற நிறுவனமாயிருந்தால் 10 தொழிலாளர்களும், மின்சாரம் பயன்படுத்தாத நிறுவனமாயிருந்த்தால் 20 தொழிலாளர்கள் பணிபுரிய வேண்டும்.

இந்த அறிமுகம் போதும் என நினைக்கிறேன்.

E.S.I. பற்றிய சமீபத்திய அனுபவம் ஒன்றை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

திருமழிசையில் ஒரு உற்பத்தியில் ஈடுபடுகிற நிறுவனம் ஒன்று. அந்த நிறுவனத்திறகு திடீரென, E.S.I. லிருந்து "உடனடியாக ரூ. 1.50 லட்சம் செலுத்த வேண்டும்" என அறிவிப்பு கடிதம்.

முதலாளி "நான் E.S.I. யில் விண்ணப்பிக்கவேயில்லை" என்கிறார். இதை நூல் பிடித்தபடி, ஆராய்ந்தால்...

ஒரு குட்டி பிளாஷ்பேக்.

ஒரு நிறுவனம் ஏற்கனவே கூறிய படி, தகுதி பெற்றால் E.S.I.ல் தானாய் பதிவு செய்து கொள்ள வேண்டும். நம்முடைய முதலாளிகள் தொழிலாளர்களின் மேல் நிறைய அக்கறை உள்ளவர்கள் தானே! ஆகையால், தானாய் E.S.I.ல் பதிவு செய்ய முன்வரமாட்டார்கள்.

இதற்காகவே, E.S.I. அதிகாரிகளை (Inspectors) நியமித்து இருக்கிறது. அவர்களுடைய வேலை தெரு தெருவாய் சுற்றி நிறுவனங்களில் 10 பேர் வேலை செய்கிறார்களா எனச் சோதித்து, செய்தால்.. அந்த முதலாளியை வலுக்கட்டாயமாய் E.S.I. திட்டத்தில் சேர்த்துவிடுவார்கள்.

சேர்த்துவிடுவதோடு, அந்த அதிகாரியின் கடமை முடிந்துவிட்டது.

இதே மாதிரி தான், 2001ம் ஆண்டில் அந்த திருமழிசை நிறுவனத்திற்கு, ஒரு அதிகாரி வந்து வலுக்கட்டாயமாய் சேர்த்துவிட்டிருக்கிறார்.

1.50 இலட்சத்திற்கு கணக்கு என்னவென்றால்...

10 தொழிலாளர்கள் 7 ஆண்டுகள் வேலை செய்தால், என்ன பணம் அரசுக்கு அந்த முதலாளி செலுத்த வேண்டியிருக்குமோ, அதைத் தான் E.S.I. கணக்கிட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

E.S.I.க்கு ஒரு அதிகாரம் உண்டு. முதலாளி பணம் கட்ட மறுத்தால், அவருடைய வங்கி கணக்கிலிருந்து நேரிடையாக எடுத்துக் கொள்ள...அல்லது அந்த முதலாளியினுடைய தனிப்பட்ட சொத்தை கைப்பற்ற, நீதிமன்றத்தில் முறையிட்டு, முதலாளிக்கு சிறைத்தண்டனை வாங்கித் தரவும் முடியும்.

வேறு வழியே இல்லாமல், அந்த பணத்தை அரசுக்கு வட்டியுடன் செலுத்தினார்.

என்றைக்கோ, அபூர்வமாய் நடக்கிற செய்தியில்லை. கடந்த மாதம் ஒரு முதலாளி மூன்று ஆண்டு மொத்தமாய் கட்டியதாய் சொன்னார்.

கடந்த வாரம், அம்பத்தூரில் உள்ள ஒரு நிறுவன முதலாளி இரண்டு ஆண்டுக்கு கட்டச் சொல்லி கடிதம் வந்ததை காண்பித்தார்.

நமக்கு இயல்பாய் கேள்வி என்னவென்றால்...

முதலாளியிடமிருந்து 7 ஆண்டுக்கு செலுத்த வேண்டிய தொகையை அரசு வட்டியுடன் கைப்பற்றி விட்டது.

கடந்த 7 ஆண்டுகளில், அந்த நிறுவனத்தில் மாங்கு, மாங்கு என வேலை செய்தார்களே, அந்த தொழிலாளிகளுக்கு எந்தவித மருத்துவ உதவியும் கிடைக்காமல் போய்விட்டதே!

இதைத் தான் "Operation success. Patient Dead" என்பார்களோ!

மீண்டும், இந்த திட்டத்திற்கான பெயரை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

"தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம்"