> குருத்து: December 2009

December 28, 2009

"ஆபரேசன் கீரின் ஹண்ட்" - எதிர்ப்பியக்கம்!


அன்பார்ந்த நண்பர்களே! பெரியோர்களே! உழைக்கும் மக்களே!

மாவோயிஸ்ட் கட்சியையும், நக்சல்பாரி இயக்கத்தையும் நசுக்கி ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது. இந்தப் போரின் பெயர் – ‘ஆபரேசன் கிரீன்ஹன்ட்’ (காட்டு வேட்டை). சட்டிஸ்கார், ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களிலும் மகாராட்டிரம், ம.பி. ஆந்திர மாநிலங்களின் எல்லைப்புறங்களிலும் பரவியிருக்கும் தண்டகாரண்யா காடுகளிலிருந்து மாவோயிஸ்டு கொரில்லாக்களை ஒழித்துக்கட்டுவதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று அறிவித்திருக்கிறார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

அடர்ந்த காடுகளை அழித்து இராணுவத் தலைமையகமும் விமானப்படைப் படைத்தளமும் அங்கே விரைந்து உருவாக்கப்படுகின்றன. சிப்பாய்களுக்கு கொரில்லா எதிர்ப்பு இராணுவப்பயிற்சி அளிக்கப்படுகிறது. சி.ஆர்.பி.எஃப், கோப்ரா, சி-60, கிரேஹவுன்ஸ், இந்திய திபெத் எல்லைப்படை, நக்சல் எதிர்ப்பு அதிரடிப்படை என விதவிதமான அரை இராணுவப்படைகளைச் சேர்ந்த ஒரு லட்சம் சிப்பாய்கள் குவிக்கப்பட்டுத் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்திய இராணுவ ஹெலிக்காப்ட்டர்களும், அமெரிக்க இராணுவ செயற்கை கோள்களும் விண்ணிலிருந்து காடுகளை வேவு பார்க்கின்றன. இந்திய இராணுவ அதிகாரிகள் போரை வழி நடத்துகிறார்கள். சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக, இந்த மண்ணின் பூர்வீக குடிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் போருக்கு மத்திய அரசு ஒதுக்கியிருக்கும் நிதி ரூபாய் ஏழாயிரத்து முன்னூறு (7300) கோடி.

மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்காக ஏற்கெனவே சட்டிஸ்கர் அரசு உருவாக்கியிருக்கும் சல்வார்ஜூடும் என்ற கூலிப்படை, கடந்த 4 ஆண்டுகளில் 700 கிராமங்களை எரித்து 3 லட்சம் பழங்குடி மக்களை விரட்டியிருக்கிறது. 50,000 பழங்குடி மக்கள் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது ஆப்ரேசன் கிரீன்ஹன்ட்-இன் விளைவாக மேலும் பல ஆயிரம் பழங்குடி மக்கள் காடுகளை துறந்து ஓடுகிறார்கள்.
“இலங்கை இராணுவத்தின் இறுதிப்போர் தான் எங்களுக்கு வழிகாட்டி” என்று வக்கிரமாக பிரகடணம் செய்திருக்கிறார் சட்டிஸ்கர் மாநில டி.ஜி..பி விசுவரஞ்சன்.

இந்த போர் வெறிக்குள் புதைந்திருக்கும் இரகசியம் இது தான்.

தண்டகாரண்யாவின் காடுகளிலும், மலைகளிலும் அற்புதமான அறிய கனி வளங்கள் புதைந்து கிடக்கின்றன. உயர்தரமான இரும்புத்தாது, செம்பு, தங்கம், வைரம், அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்சைட், சிமெண்ட் உற்பத்திக்கு தேவையான சுண்ணாம்பு கற்கள், நிலக்கரி, பளிங்கு, கிரானைட், சிலிக்கா, குவார்ட்சைட் போன்ற இருபத்தெட்டு வகை கனி வளங்களும், காட்டு வளங்களும், நீர் வளமும் நிறைந்திருக்கின்றன. பன்னாட்டு கம்பெனிகளும், இந்தியத்தரகு முதலாளிகளும் விருப்பம் போல இந்தப் புதையலை அள்ளிச் செல்ல முடியாமல் குறுக்கே நிற்கிறார்கள மாவோயிஸ்டு கொரில்லாக்கள். சிதம்பரத்தின் கொலை வெறிக்கு காரணம் இது தான் !

ஆம். தண்டகாரண்யாவின் காடுகள், மலைகள், ஆறுகள் அனைத்தையும் அம்மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களுக்குத் தெரியாமலேயே அறுத்துக் கூறுகட்டி விற்றுவிட்டது அரசு. வேதாந்தா (ஸ்டெர்லெயிட் கம்பெனியின் தாய் நிறுவனம்) என்ற பிரிட்டீஷ் பன்னாட்டு நிறுவனத்துக்கு ஒரிசா அரசு நாற்பது (40) கிலோ மீட்டர் நீளமுள்ள நியமகிரி மலையை தாரை வார்த்திருக்கிறது. இந்த மலையில் உள்ள பாக்சைட் தாதுவின் இன்றைய மதிப்பு 200 லட்சம் கோடி ரூபாய் (20 மில்லியன் கோடி) இதற்கு அரசாங்கம் பெறவிருக்கும் ராயல்டியோ வெறும் ஏழு (7%) சதவிகிதம் மட்டுமே !!

இந்தியாவின் மொத்த நிலக்கரி இருப்பில் 16%, இரும்புத்தாதுவில் 20% சட்டிஸ்கர் மாநிலத்தின் 4 மாவட்டத்தில் புதைந்திருக்கின்றன. இவற்றை டாட்டா, எஸ்ஸார், ஜிண்டால் போன்ற தரகு முதலாளிகளுக்கு கிரயம் எழுதித் தந்துவிட்டது அம்மாநில அரசு. இரும்புத்தாதுவின் இன்றைய உலகச்சந்தை விலை டன்னுக்கு 210 டாலர் (சுமார் 10,000 ரூபாய்). இம்முதலாளிகள் அரசுக்குத்தரவிருக்கும் விலை- டன்னுக்கு 27 ரூபாய் !. இவை போல ஒன்று இரண்டல்ல, நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்கள் !

பழங்குடி மக்களின் கிராமங்களும் விட்டுவைக்கப்படவில்லை. அவர்களுக்கே தெரியாமல் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எழுதிக் கொடுக்கப் -பட்டிருக்கின்றன. சின்னஞ்சிறிய ஜார்கண்டு மாநிலத்தில் மட்டும் 1,10,000 ஏக்கர் நிலங்கள் இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைமாறி விட்டது. இங்கிருந்து மட்டும் 10,00,000 லட்சம் பழங்குடி மக்களும், விவசாயிகளும் வெளியேற்றப்பட இருக்கிறார்கள். டாட்டா, பிர்லா, ஜிண்டால், எஸ்ஸார், மிட்டல் போன்ற தரகு முதலாளிகளும் வேதாந்தா, போஸ்கோ, ஹோல்சிம், லபார்க், ரியோடிண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் தண்டகாரண்யா காடுகளின் மீது பிணந்தின்னிகளை போல வட்டமிடுகிறார்கள்.

பழங்குடி மக்களோ வெளியேற மறுக்கிறார்கள். போஸ்கோ, டாட்டா, வேதாந்தா, மிட்டல், ஸ்டெர்லைட், ரிலையன்ஸ், ஜிண்டால் என ஒவ்வொரு நிறுவனத்துக்கு எதிராகவும் ஆங்காங்கே உள்ள மக்கள் போராடுகிறார்கள். அலுமினிய உருக்காலையை வேதாந்தா நிறுவனம் கட்டிமுடித்துவிட்டது. ஆனால் பாக்சைட் மலையை நெருங்க முடியவில்லை. கோபால்பூரில் டாட்டா-வின் இரும்பு ஆலை தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கம் தோண்டி தங்கமும் பிளாட்டினமும் எடுக்க வந்த ஜிண்டால் நிறுவனம் அங்கே நுழையவே முடியவில்லை. இவையெல்லாம் மாவோயிஸ்டு ஆயுதக்குழுக்கள் நடத்திய தாக்குதல்கள் அல்ல, தங்கள் மண்ணைப் பறிக்கும் மறுகாலனியாக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள மக்களின் போராட்டங்கள். எனவே, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் போர் உண்மையில் மக்களுக்கு எதிரான போர்.

“நமது நாட்டில் இயற்கை வளங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் இடதுசாரித் தீவிரவாதம் தொடர்ந்து வளருமானால், அது முதலீட்டுச் சூழலை பெரிதும் பாதிக்கும்.” என்று இந்தப் போருக்கான காரணத்தை பாராளுமன்றத்தில் பச்சையாகப் பேசியிருக்கிறார் மன்மோகன்சிங். டாட்டா, அம்பானி, மிட்டல் போன்ற தரகுமுதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் பகற்கொள்ளையை பாதிக்கும் விதத்தில் யார் போராடினாலும் அவர்களுக்கு எதிராக அரசு போர் தொடுக்கும் என்பதே மன்மோகன்சிங் கூறும் செய்தி. இந்தப் போர், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் மட்டுமல்ல, மக்களுக்கு எதிரான போராகும்.

காடு என்பது பழங்குடி மக்களின் உரிமை.கனிவளங்களைக் கைப்பற்றுவதற்காக, அவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. கடல் மீனவர்களின் உரிமை. பன்னாட்டு மீன்பிடிக் கம்பெனிகள் மீன்வளத்தை அள்ளுவதற்காக, மீனவர்களுக்கு கடலில் எல்லைக்கோடு போடப்படுகிறது. மீறினால் ‘காட்டு வேட்டை’ போல, ‘கடல் வேட்டை’ ஒன்றை இந்த அரசு அறிவிக்கும். விதை என்பது விவசாயிகளின் மரபுரிமை. ஆனால் அதனைப் பன்னாட்டு முதலாளிகளின் சொத்தாக மாற்றிவிட்டது அரசு. இனி தமது விதைகளின் மீது விவசாயிகள் உரிமை கோரினால் போலீசு அவர்கள் மீது வழக்கு தொடுக்கும். மீறினால் போர் தொடுக்கும்.

பழங்குடிகள், விவசாயிகள், மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மட்டுமல்ல, பரந்து பட்ட மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன. தென்கொரிய போஸ்கோ நிறுவனத்திற்கு உகந்த ‘முதலீட்டுச் சூழலை’ உருவாக்குவதற்குத்தான் ஒரிசாவின் பழங்குடி மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அதே தென்கொரிய ஹூண்டாயின் ‘முதலீட்டுச் சூழலைப்’ பாதுகாக்கத்தான் தொழிற்சங்கம் அமைத்த தொழிலாளர்கள் சென்னையில் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள்.

பன்னாட்டு கம்பெனிகளின் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கத்தான் குறைந்தபட்ச ஊதியம் முதல் பணி நிரந்தரம் வரையிலான எல்லா உரிமைகளும் தொழிலாளி வர்க்கத்திடமிருந்து பறிக்கப்படுகின்றன. கல்வி வியாபாரிகளின் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கித் தருவதற்காக அரசுப் பள்ளிகள், கல்லூரிகளும், மருத்துவ வியாபாரிகளின் முதலீட்டுச் சூழலுக்காக அரசின் இலவச மருத்துவ மனைகளும் அழிக்கப்பட்டு மக்கள் அந்த முதலாளிகளை நோக்கித் துரத்தப்படுகிறார்கள்.

இந்தப் போர்க்களம் தண்டகாரண்யாவின் காடுகளைத் தாண்டி நாடு முழுவதும் வியாபித்திருக்கிறது. போரின் வடிவங்கள் மட்டுமே இடத்திற்கேற்ப மாறுகின்றன. ஆனால் போரின் நோக்கம்-நமது நாட்டையே பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் அடிமையாக்குகின்ற மறுகாலனியாதிக்கம்.

இந்த மறுகாலனியாதிக்க கொள்கைகள் அனைத்திலும் எல்லா ஓட்டுக்கட்சிகளும் கருத்து வேறுபாடின்றி ஓரணியில் நிற்கின்றன. கொள்ளையின் ஆதாயங்களை பங்கு போட்டுக்கொள்வதற்கு மட்டுமே அவை தமக்குள் மோதிக் கொள்கின்றன.
”1994-ல் காட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாளிலிருந்து மத்தியிலும் மாநிலங்களிலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்திருந்தாலும், தனியார்மயக் கொள்கைகளிலிருந்து மட்டும் எந்த அரசும் வழுவியதில்லை” என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பன்னாட்டு முதலாளிகள் கூட்டத்தில் பெருமையுடன் அறிவித்தார் மன்மோகன்சிங்.

ஆம். மறுகாலனியாக்கக் கொள்கைகளைப் பயன்படுத்திக் கொண்டு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களெல்லாம் முதலாளிகளாகியிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டுகளாக, காண்டிராக்டர்களாக, பங்குதார்களாக அவர்கள் மாறியிருக்கிறார்கள். கோடிசுவரர்களின் மன்றமாகியிருக்கிறது நாடாளுமன்றம். அதிகாரிகளும், நீதிபதிகளும் பன்னாட்டு முதலாளிகளின் அடியாட்களாகவே மாறிவிட்டார்கள்.

சீரழிந்து நாறிக்கொண்டிருக்கும் இந்த அரசியலுக்கு வெளியே மக்கள் நலனுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக, தன்னலனைத் துறந்தவர்களாக, இலஞ்சத்தால் விலைக்கு வாங்க முடியாதவர்களாக, பட்டங்களுக்கும் பதவிகளுக்கும் பல்லிளிக்காதவர்களாக, இழப்புக்கும் தியாகத்திற்கும் அஞ்சாதவர்களாக – நாடெங்கும் அரசியல் களத்தில் நிற்பவர்கள் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் மட்டும்தான். ஓட்டுக்கட்சிகள் மீது மக்கள் மென்மேலும் நம்பிக்கை இழந்து வரும் சூழலில், மறுகாலனியாக்கத் தாக்குதல்களின் தீவிரம், மக்களை நக்சல்பாரிப் புரட்சியாளர்களை நோக்கி நகர்த்துகிறது.

எனவேதான், “நம் நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய உள்நாட்டுப் பாதுகாப்பு அபாயம்” என்று நக்சல்பாரி இயக்கத்தைக் காட்டி எச்சரிக்கிறார் மன்மோகன்சிங். அத்வானி முதல் புத்ததேவ் வரை அனைவரும் அதனை வழிமொழிகிறார்கள். தங்களுடைய எதிரிகள் யார் என்பதை ஆளும் வர்க்கங்கள் தெளிவாக அடையாளம் கண்டு அறிவித்து விட்டன.

அதே நேரத்தில் தமது நண்பர்கள் யார் என்பதை மக்கள் புரிந்து கொண்டு விடாமல், ஓட்டுக்கு லஞ்சம், இலவசத் திட்டங்கள், போன்ற ஆயுதங்களால் அவர்களைத் தாக்கி ஓட்டு வேட்டை நடத்துகின்றனர். இந்த ஓட்டு வேட்டைக்கு மசியாமல் நக்சல்பாரிகளின் தலைமையை மக்கள் நாடினால், உடனே ‘காட்டு வேட்டை’ தொடங்குகிறது.

மாவோயிஸ்டுகள் ஆயுதப்போராட்டம் நடத்துவதனால்தான் அவர்களை ஒடுக்கவேண்டியிருப்பதாக ப.சிதம்பரமும், மன்மோகன்சிங்கும் கூறி வருவது கடைந்தெடுத்த பொய். அடுக்கடுக்காகத் தொடுக்கப்படும் மறுகாலனியாதிக்கத் தாக்குதல்களால் வாழ்க்கைப் பறிக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, எதிர்த்துக்கேட்டால் ஒடுக்கப்பட்டு, கிடிக்கப்பட்ட வெடிமருந்தாக வெடிக்கக் காத்திருக்கிறார்கள் மக்கள். இதை அரசு அறிந்தே இருக்கிறது.

இந்த வெடியின் திரியும் அதனைப் பற்றவைக்கும் பொறியும் நக்சல்பாரிகள் தான் என்ற உண்மையும் அரசுக்குத் தெரிந்தே இருக்கிறது. எனவேதான் திரியைக் கிள்ளுவதில் கவனம் செலுத்துகிறது. மறுகாலனியாதிக்க எதிர்ப்பின் கூர்முனையை நக்சல்பாரி இயக்கத்தை முறிக்க முயல்கிறது. ‘ஆபரேசன் கிரீன்ஹன்ட்’ என்ற நக்சல் வேட்டையின் பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!

நக்சல் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும்
நரவேட்டைப்போரைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்!

பன்னாட்டுக் கம்பெனிகள், தரகு முதலாளிகளுடன்
போடப்பட்டிருக்கும் அனைத்து தேசத்துரோக ஒப்பந்தங்களையும் கிழித்தெறிவோம்!

போராடும் பழங்குடி மக்களுக்குத் துணைநிற்போம்!
மறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!

பழங்குடிகள்-மீனவர்கள்
விவசாயிகள் மீதான போர்தான்
அரசு தொடுத்துள்ள
நக்சல் ஒழிப்புப் போர்!

நக்சல் எதிர்ப்பு நரவேட்டைப் போரை முறியடிப்போம்!
மறுகாலனியாதிக்க எதிர்ப்புப்போரில்
நக்சல்பாரிகள் தலைமையில் அணிவகுப்போம்!

தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்
நோக்கம் இதுதான்.

ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றினைந்து குரல் கொடுக்க‌‌ அனைவரும் அணிதிரண்டு வாருங்கள்.

ஜனவரி 30, 2010

சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்.
-
மக்கள் கலை இலக்கிய கழகம்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.
பெண்கள் விடுதலை முன்னணி.
விவசாயிகள் விடுதலை முன்னனி.

தொலைபேசியில் தொடர்பு கொள்ள:
ம.க.இ.க : 94446 48879
பு.ம.இ.மு : 94451 12675
பு.ஜ.தொ.மு : 94448 34519
பெ.வி.மு : 98849 50952.

தொடர்புக்கு:
அ.முகுந்தன், 110, 2-வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம்,
63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24.
கைபேசி: 9444834519.

நன்றி : சர்வதேசியவாதிகள்

December 20, 2009

அமெரிக்கா - நடப்பு டிசம்பரில் இதுவரை 16 வங்கிகள் திவால்!

அமெரிக்காவில், சென்ன ஒரே வாரத்தில் ஏழு வங்கிகள் திவால் ஆகியுள்ளன. இதனையடுத்து, இவ்வாண்டில், இதுவரையிலான காலத்தில், அமெரிக்காவில் மொத்தம் 140 வங்கிகள் திவால் ஆகியுள்ளன். சென்ற 2008-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது (25 வங்கிகள்) இது ஐந்து மடங்கிற்கும் மேல் அதிகமாகும்.

நடப்பு டிசம்பர் மாதத்தில், இதுவரையில் 16 வங்கிகள் திவால் ஆகியுள்ளன. கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் வங்கிகள் திவால் ஆகியுள்ளன.

அமெரிக்காவில், லேமான் பிரதர்ஸ் திவால் ஆன பிறகு, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவடைந்து வந்தது. இந்நிலையில், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இதில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வேலை இழப்பு விகிதமும் குறைந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் வங்கிகள் தொடர்ந்து திவால் ஆகிவருவது, சென்ற ஆண்டில், பொருளாதாரத்தில் ஏற்பட்ட கடும் பாதிப்பு இன்னும் குறையவில்லை என்பதை காட்டுகிறது.

நன்றி : தினத்தந்தி - 21/12/2009

December 10, 2009

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி - பொதுக்கூட்டம்!


அன்பார்ந்த தொழிலாளர்களே! உழைக்கும் மக்களே!

வெளிச்சத்தின் அருமை இருளில் தெரியும் ! நிழலின் அருமை வெயிலில் தெரியும் ! சிறிது நேரம் விளக்குகள் எரியாவிட்டால் குருடர்களாகிப் போகிறோம். மின் விசிறி சுற்றாவிட்டால் வியர்த்துப் போகிறோம். ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லாவிட்டாலே அனைத்தும் செயலிழந்தது போலாகிவிடுகிறது. இப்படி வீட்டை,ஊரை, நாட்டை அனைத்தையும் இயக்கும் மின்சாரத்தை தயாரிப்பது என்பது, சுவிட்சைத் தட்டினால் விளக்கு எரிவதுபோல் அவ்வளவு எளிமையானது அல்ல! எங்கோ சுரங்கத்தில் இருந்து கரியை வெட்டி எடுப்பதில் இருந்து, நம் தெருக்களில் மின் கம்பங்களில் ஒயர்களை இழுப்பது வரை அனைத்திலும் பல லட்சம் தொழிலாளிகளின் இரவு, பகல் பாராத இரத்தமும், வியர்வையும் சிந்தும் உழைப்பு உறைந்து கிடக்கிறது.

தங்களுடைய உழைப்பின் மூலம் வெளிச்சத்தை படைக்கும் இந்த தொழிலாளிகளின் வாழ்க்கையோ இன்னும் இருளில் தான் உள்ளது. நெய்வேலியின் சுரங்கத் தொழிலாளி முதல், வட சென்னையின் அனல் மின் நிலையத்தில் கரி அள்ளும் தொழொலாளிகள் வரை இது தான் நிலைமை. ஏனென்றால் இவர்கள் ஒப்பந்தத் தொழிலாளிகள் !

ஒப்பந்தத் தொழிலாளர் முறைப்படுத்தல் மற்றும் ஒழித்தல், 1970 என்ற சட்டம் இந்தியாவில் உள்ளது. ஒரு ஆலையில் உற்பத்திக்கு தேவையான வேலையில் வருடம் முழுவதும் ஈடுபடும் தொழிலாளிகள், நிரந்தரத் தொழிலாளிகள் பெறும் உரிமைகள் அனைத்தையும் பெறும் தகுதியுடையவர்கள் என்று சொல்கிறது இந்த சட்டம். இந்த சட்டத்தைப் போட்ட அரசின் பொதுத்துறை, அரசுத்துறை நிறுவனங்கள் தான், இந்த சட்டத்தை மீறி இந்தியாவிலேயே அதிகமான அளவில் ஒப்பந்த தொழிலாளிகளை பயன்படுத்துகின்றன.

சிந்தித்துப்பாருங்கள்! கரியை வெட்டி எடுக்காமல், கரியை அள்ளிப்போடாமல் அனல் மின் நிலையம் எப்படி மின்சாரம் தயாரிக்க முடியும் ? ஆனால் இந்த வேலைகளில் ஈடுபடும் தொழிலாளிகள் உரிமை கேட்க முடியாத ஒப்பந்தத் தொழிலாளிகள் என்கின்றன அனல் மின் நிலைய நிறுவனங்கள்.

வட சென்னை அனல் மின் நிலையத்தில் கரி அள்ளும் தொழிலாளிகளாக 300 பேர் கடந்த பத்து வருடங்களுக்கு மேல் வேலை செய்து வருகிறோம். எங்கள் வியர்வையையும், இரத்தத்தையும் சிந்தி தான், எமது உழைப்பால் தான் இந்த நிறுவனத்தை உயர்த்தியிருக்கிறோம். ஆனால் குறைந்த கூலியில் வேலை உத்திரவாதம் இல்லாத ஒப்பந்தத் தொழிலாளிகளாக உரிமைகளின்றி இருக்கிறோம். இந்நிலையில் தான், உழைப்பது மட்டுமல்ல, உரிமைகளுக்காக போராடுவதும் தான் தொழிலாளிகளின் பண்பு, கடைமை என்று உணர்ந்து கொண்டோம்.

ஆகவே நாங்கள் ஒன்று சேர்ந்து தொழிற்சங்கம் துவங்கியுள்ளோம். இதுவரை தொழிலாளிகளாக மட்டும் இருந்த நாங்கள், தற்போது தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட படையணியில் இணைந்துள்ளோம். தொழிலாளர் உரிமைகளுக்காகவும், தொழிற்சங்க உரிமைகளுக்காகவும் நடக்கும் போராட்டங்களில் தொழிலாளி வர்க்கத்தின் தோளோடு தோள் சேர்த்து நிற்போம் என்று உறுதிமொழி ஏற்றுள்ளோம்.

உழுது பயிரிட்ட விவசாயிகளின் உழைப்பு உணவாக, நெசவாலைத் தொழிலாளிகளின் உழைப்பு மானமாக, கட்டுமானத் தொழிலாளிகளின் உழைப்பு கூரையாக என உழைக்கும் மக்களின் உழைப்பே உலகை இயங்க வைக்கிறது. ஆனால் உழைக்கும் மக்களின் வாழ்க்கையோ வறுமையிலும், பட்டினியிலும் தள்ளப்பட்டுள்ளது.‌ உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, உரிமையை நிலைநாட்ட நடக்கும் அரசியல் போராட்டங்களில் முன்நிற்போம்.

அந்த அடிப்படையிலேயே, “உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம்” என்று முழங்கும் நக்சல்பாரி அரசியல் வழியில் போராடும் புரட்சிகர தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைந்துள்ளோம்

மண்ணுக்கடியில் கிடக்கும் கரி தான் வெட்டியெடுத்தால் மாபெரும் மின் சக்தியை கொடுக்கிறது. உழைத்துக் காய்த்த கரங்கள் அனைத்தும் திரண்டெழுந்தால் நாம் தான் மாபெரும் அர‌சியல் சக்தி.
தொழிலாளி வர்க்கமாய் அணிதிரள்வோம். தொழிற்சங்கத்தில் ஒன்றிணைவோம். உழைக்கும் மக்களுடன் திரண்டெழுவோம், அனைவரும் வாரீர் என அறைகூவி அழைக்கிறோம்.

வட சென்னை அனல்மின் நிலைய (NCTPS) ஒப்பந்த‌ தொழிலாளர்களின் தொழிற்சங்க துவக்க விழா.

நிகழ்ச்சி நிரல்

சங்கத் துவக்க விழா

நாள் 11. 12 .09
மாலை 4.00 மணி
NCTPS ஆலைவாயில்

தலைமை
தோழர் சி.மோகன், NCTPS கிளை
கொடியேற்றுபவர்

தோழர் அ.முகுந்தன்
மாநிலத் தலைவர், பு.ஜ.தொ.மு

பெயர்ப்பலகை திறப்பவர்
தோழர் பா.விஜயக்குமார்
மாநிலப்பொருளால‌ர், பு.ஜ.தொ.மு

பொதுக்கூட்டம்


மாலை 6.00 மணி
அத்திப்பட்டு புது நகர்
இரயில் நிலையம் அருகில்

முன்னிலை
தோழர் எம். மதியழகன்
தலைவர், NCTPS கிளை

தலைமை
தோழர் ம.சி.சுதேக்ஷ் குமார்
திருவள்ளூர் மாவட்ட செயலாளர்,பு.ஜ.தொ.மு.

சிறப்புரை
தோழர் சு.ப.தங்கராசு
மாநில பொதுச்செயலாளர்,பு.ஜ.தொ.மு.




ம.க.இ.க மையக் கலைக்குழுவின்
புரட்சிகர கலை நிகழ்ச்சி.

அனைவரும் வருக‌

தோழமையுடன்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
NCTPS கிளை.

தொடர்புக்கு:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
அ.முகுந்தன்,110, 2வது மாடி,
மாநகராட்சி வணிக வளாகம்,
ஆற்காடு சாலை, கோடம்பாக்கம்,
சென்னை 24

9444834519, 9444442374

- நிகழ்ச்சிக்கான துண்டறிக்கையிலிருந்து...

நன்றி : சர்வதேசியவாதிகள்

December 4, 2009

பரஸ்பர நிதிகள் - ஒரு அறிமுகம்!



முன்குறிப்பு : பரஸ்பர நிதிகள் - இது குறித்து அடிக்கடி பத்திரிக்கைகளில் விளம்பரம் பார்க்கிறோம். பரஸ்பர நிதிகள் என்னவென்றும், அதன் பயன்கள் மற்றும் குறைபாடுகள் பற்றி ஒரு அறிமுகத்தை பாலகார்த்திகா அவர்கள் எழுதிய இந்த கட்டுரை விளக்குகிறது.

மற்றபடி, மூழ்காது (risks) என்று சொல்வது, பொருளாதார நெருக்கடியின் பொழுது பரஸ்பர நிதிகளின் கதி என்னவாயிற்று என்பதை வரும் பதிவுகளில் பார்க்கலாம். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

******

பரஸ்பர நிதிகள் என்றால் என்பது ஒரு வித முதலீட்டு நிறுவனங்களே! 'சிறு துளி பெருவெள்ளம்' என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்குவன இந்தப் பரஸ்பர நிதிகள். நீங்கள் எத்தகைய முதலீடு செய்யவேண்டும் என்று விரும்பினாலும் அதற்கேற்ற ஒரு முதலீட்டுத் திட்டத்தை(Investment Scheme), பரஸ்பர நிதியங்கள் வழங்குகின்றன.ஏறத்தாழ இருபது வருடங்களாகப் பிரபலமாக இருக்கும் இந்தப் பரஸ்பர நிதியங்களுக்கான தொடக்கம் 1774ம் ஆண்டே ஹாலந்து நாட்டில் ஏற்பட்டது. இன்று பங்குச்சந்தைக்கு இணையாக பரஸ்பர நிதியங்கள் பல வந்துவிட்டன.

பரஸ்பர நிதியங்கள் எப்படிச் செயல்படுகின்றன?

ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் இருந்து திரட்டப்பட்ட லட்சக்கணக்கான தொகையை, பங்கு நிறுவனங்களில் உள்ள நிதி நிர்வாகிகள் பல விதமான பங்குகளிலும், கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கின்றனர். பங்குகளுக்குக் கிடைக்கும் பங்காதாயமும், கடன் பத்திரங்களில் கிடைக்கும் வட்டியும் முதலீடு செய்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படுகிறது. அது மட்டுமின்றி, நிதியங்கள் தம்மிடம் இருக்கும் பங்குகளை விற்பதால் கிடைக்கும் லாபம், முதலீட்டாளர்கள் தங்கள் பரஸ்பர நிதி முதலீடுகளை நிகர சொத்து மதிப்பினை(Net Asset Value-NAV) விடக் குறைவான விலையில் (Discount) செய்வதால் கிடைக்கும் லாபம் இவையும் பரஸ்பர நிதியங்களில் செய்யும் முதலீடுகளை கவர்ச்சிகரமாக மாற்றுகின்றன.

பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வதால் என்ன பயன்?

சாதாரணமாக நாமே நேரடியாக பங்குகளில் முதலீடு செய்வதை விட பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வதால் கீழ்க்கண்ட பயன்கள் விளைகின்றன.


பயன் ஒன்று:
அபாயக்குறைவு. எந்த முதலீடாக இருந்தாலும் அதில் கொஞ்சம் ஆபத்து (Risk) இருக்கத்தான் செய்யும். ரிஸ்க் என்பதே இல்லாத முதலீடு எதுவுமே கிடையாது. ஆனால், நீங்கள் பங்குகளில் முதலீடு செய்கையில் பல்வேறு விதமான பங்குகளில் உங்களால்
ஈடுபட முடியாது. அதாவது பரவல் (Diversification) குறைவு. அது ரிஸ்க்கை அதிகரிக்கச் செய்கிறது. ஆனால் பரஸ்பர நிதியங்களில் நீங்கள் முதலீடு செய்யும்பொழுது, உங்கள் பணமும், உங்களைப் போன்ற பல முதலீட்டாளர்களின் பணத்துடன் சேர்ந்து பல வகை நிறுவனங்களின் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். இதன் காரணமாக உங்கள் பணத்தின் மீதான ரிஸ்க் குறைகிறது

பயன் இரண்டு: திறமையும் அனுபவமும் மிக்க நிதி நிர்வாகம். நீங்கள் உங்கள் பணத்தை எந்தப் பங்கில் முதலீடு செய்வது என்று தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பணத்தை சிறந்த, லாபம் தரக்கூடிய, நம்பிக்கைக்குரிய பங்குகளில் முதலீடு செய்வது பரஸ்பர நிதி நிறுவனங்களில் உள்ள நிதி நிர்வாகிகளின் பொறுப்பாகி விடுகிறது.

பயன் மூன்று: சிறிய அளவு முதலீடுகள். சிறிய முதலீடாக இருப்பின் பல விதமான பங்குகளில், பல நிறுவனங்களில் முதலீடு செய்ய இயலாது. அதற்கு நிறையப் பணம் தேவைப்படும். பரஸ்பர நிதியங்களில் நீங்கள் எவ்வளவு சிறிய அளவு தொகையையும் முதலீடு செய்ய இயலும். அத்துடன் சில பரஸ்பர நிதி நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரி விலக்கும் அளிக்கப்படுகிறது

பரஸ்பர முதலீடுகளின் வகைகள்:

பரஸ்பர நிதியில் செய்யப்படும் முதலீடுகளைப் பொதுவாக இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை - சமபங்கு நிதி (Equity Share Funds), நிலையான வருமானம் தருபவை (Fixed Income Funds)
சமபங்கு நிதி என்பது பல நிறுவனங்களில் பங்குகளில் முதலீடு செய்யப்படுவது. இப்பங்குகள் கொஞ்சம் அபாயகரமானவை எனினும், இதன் பரவல் (Diversification) காரணமாக, பொதுவாக நல்ல இலாபமீட்டக் கூடியவையாகவே திகழ்கின்றன. இவற்றின் இரண்டு உட்பிரிவுகள் சமநிலைப்பங்கு (Balance Fund) மற்றும் சிறப்பம்சப் பங்குகள் (Speciality Fund). சமநிலைப்பங்கு என்பது, சரியான விகிதத்தில் பங்குகளிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்வதாகும். சிறப்பம்சப் பங்குகள் என்பது ஒரு குறிப்பிட்ட துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கில் மட்டும் முதலீடு செய்வது அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்த் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது. சில பரஸ்பர முதலீடு நிறுவனங்கள், நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் மட்டும் முதலீடு செய்வது, புகையிலை, மது முதலியவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களில் முதலீடு செய்யாமல் இருப்பது என்று சமூக உணர்வுடன் இணைந்த முதலீடுகளை மேற்கொள்கின்றன.

நிலையான வருமானம் தரும் பரஸ்பர நிதி முதலீடுகள்: பங்குகளில் முதலீடு செய்யாமல், திரட்டிய நிதியை அரசு மற்றும் தரமான நிறுவனங்களில் கடன் பத்திரங்களில், பரஸ்பர நிதி நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன. இதனால் கிடைக்கும் வட்டியானது மாதாமாதம் இத்தகைய முதலீடுகளில் பணம் போட்ட முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படுகிறது.

இவை தவிர, குறுகிய கால கருவூல வரைவு (Treasury Bill), பணச்சந்தை முதலீடுகள் (Money Market Instruments) குறியீட்டு நிதி (Index Fund ) என்று மேலும் வகைகள் உள்ளன.

பரஸ்பர நிதி நிறுவனங்களின் குறைபாடுகள்:

கட்டணங்கள்: நேரடியாக நாமே முதலீடு செய்வதை விட பரஸ்பர நிதி நிறுவனங்களில் முதலீடு செய்கையில் லாபம் குறைவது உண்டு. ஏனெனில், நாம் பலவிதமான கட்டணங்களைச் செலுத்த நேரிடுகிறது.
நிதி நிறுவனங்களில் உண்மையாகவே அனுபவமும் திறனும் நிறைந்த நிதி நிர்வாகிகள்தான் இருக்கிறார்களா என்பது நமக்குத் தெரியாது.சரியான முறையில் நிர்வகிக்கப் படாத பரஸ்பர நிதிகளில் செய்யப்படும் முதலீடுகள் சரியான அளவு லாபத்தைக் கொடுப்பதில்லை. எனவே நல்ல தரமான, அனுபவமுள்ள நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்வது அவசியம். பரஸ்பர நிதிகள் குறித்து மேலும் சில தகவல்களைத் தொடரும் கட்டுரைகளில் காண்போம்.

- பாலகார்த்திகா

நன்றி : ஈழநேசன்