> குருத்து: மகளிர் தொழிற்பூங்காவில் மகளிர் நிலை!

January 29, 2013

மகளிர் தொழிற்பூங்காவில் மகளிர் நிலை!

பெண்களை பொருளாதாரத்தில் உயர்த்த வேண்டும் என்பதற்காக, அரசு சிட்கோ மூலமாக பெண் தொழிலதிபர்களை உருவாக்க எண்ணியது. அதற்காக ஆவடி - செங்குன்றம் இடைப்பட்ட பகுதியில் மகளிர் தொழிற்பூங்கா ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்படுத்தியிருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பணி நிமித்தம் காரணமாக அந்த பகுதிக்கு கிளம்பும் பொழுது, நிறைய பெண் தொழிலதிபர்களை சந்திக்கலாம் என்ற ஆவலோடு கிளம்பினேன். கிட்டத்தட்ட 100 நிறுவனங்களுக்கும் மேலாக சிறிதும், கொஞ்சம் நடுத்தரமானதாய் நிறைய நிறுவனங்கள் இயங்கி கொண்டிருந்தன. காலையிலிருந்து மாலை வரை பல நிறுவனங்களுக்கும் ஏறி இறங்கி பார்த்தால், ஒரு பெண் முதலாளியை கூட காணவில்லை. முதலாளியை விடுங்கள். ஒரு பெண் தொழிலாளியை கூட காணவில்லை. அது தான் அதிர்ச்சியாக இருந்தது.

பிறகு, அங்கு கொஞ்ச காலம் பணியாற்றிய பொழுது தான் அறிந்தேன். எல்லா இடங்களையும் பெண்கள் பெயரில் தான் சிட்கோ ஒதுக்கி தந்திருக்கிறது. ஆனால், அதை இயக்குவது பெரும்பாலும் கணவன்மார்கள் தான். பொதுவாக ஆண்கள் தான் இடம் வாங்க, வங்கியில் கடன் வாங்க என அலைவார்கள். இப்பொழுது எல்லா வேலைகளையும் அலைந்து திரிந்து முடித்துவிட்டு, இறுதியில் மனைவியை கையெழுத்திட அழைத்து செல்கிறார்கள். ஆயதபூஜை போன்ற விசேஷ காலங்களில் மனைவிமார்களை கணவன்மார்கள் நிறுவனத்திற்கு அழைத்துவருகிறார்கள்.

கையெழுத்திட்டால் மட்டும் போதும் என்ற அளவில் நின்றால் பரவாயில்லை. கணவன்மார்கள் முதலாளி என்ற அளவில், தொழிலில் செய்யும் எல்லா திருட்டுத்தனங்களுக்கும் மனைவியும் பொறுப்பாளியாகிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு நிறுவனத்தில் 50 பேர் வேலை செய்கிறார்கள் என வைத்துக்கொள்ளுங்கள். அதில் 20 பேருக்கு தான் மருத்துவ காப்பீடுக்கான (இ.எஸ்.ஐ.) பணத்தைக் கட்டுகிறார்கள். இது தான் பரவலான நிலை. மீதி 30 பேரும் பாதுகாப்பாக வேலை செய்தால் பரவாயில்லை. இதில் ஒருவருக்கு வேலை செய்யும் பொழுது, விபத்து ஏற்பட்டு, உயிர் இழந்துவிட்டால் பெரிய பிரச்சனை. பொதுவாக, காவல்துறை உட்பட சகல துறைகளுக்கும் பணம் பாய்ந்து சரிகட்டிவிடுவார்கள். சரிகட்டமுடியவில்லை என்றால், அதிகபட்சம் சிறை செல்ல வேண்டியிருக்கும். ஒரு கையெழுத்து போட்டதற்கு சிறையா என்ற அளவில் தான் மனைவிமார்கள் வருத்தம் கொள்ள வேண்டியிருக்கும்.

சமீபத்தில் மீண்டும் அந்த பகுதிக்கு சென்றிருந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் இன்னும் நூறு நிறுவனங்கள் உருவாகியிருக்கிறது. முன்பு சிட்கோவிற்கு பேருந்து உள்ளே வராது. போக்குவரத்து உயரதிகாரியை 'தனியாக' கவனித்ததால், இப்பொழுது காலை, மாலை இருவேளையிலும் பேருந்து உள்ளே வந்து செல்கிறது. சில நிறுவனங்களில் பெண் தொழிலாளர்கள் கண்ணில் பட்டார்கள்.

இப்பொழுது கணவன்மார்கள் நிறுவனத்தில் தன்னையும் ஒரு தொழில் பார்ட்னராக சேர்த்துக்கொண்டுவிட்டார்கள். இப்பொழுது கையெழுத்திற்கு கூட மனைவியிடம் வாங்குவதில்லை.தமிழ்நாட்டில் மகளிரை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட திட்டத்தின் நிலை இதுதான்!

0 பின்னூட்டங்கள்: