> குருத்து: வறுமைக்கோடு என்றால்!

June 16, 2008

வறுமைக்கோடு என்றால்!




முன்குறிப்பு : பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகளின் வரிசையில், இப்போழுது 'வறுமைகோடு" பற்றி.

சகலருக்கு புரியும் படி எளிமையாக பத்திரிக்கையாளர் ஜவஹர் எழுதியுள்ளார். அவருக்கு நமது நன்றிகள்.

'சுதந்திரம்' கிடைத்து, 60 ஆண்டுகள் கழித்தும் வறுமைக்கோடு பற்றி இன்றைக்கு பேசுகிறோம். அவ‌ல‌ம் தான்.

இந்தியாவையும், உலகையும் குத்தி குத‌றுகிற‌ கழுகான‌ அமெரிக்கா, இந்திய‌ர்க‌ள் தின்று தீர்ப்ப‌தால் தான் உல‌கில் உண‌வு ப‌ஞ்ச‌ம் என்கிற‌து. நாமும் அமைதியாக‌ கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.

*******

"வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் 23 கோடியே 77 லட்சம் பேர்" என்று சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அமைச்சர் சுக்ராம் தெரிவித்துள்ளார். 1987-88ம் ஆண்டுக் கணக்கின்படி இந்த நிலவரம் என்றும் அவர் தெரிவித்தார்.

நேர்கோடு தெரியும்... வளைகோடு தெரியும்... அது என்ன வறுமைக்கோடு?

வறுமையில் வாடுவோர் இத்தனைபேர் என்று சொல்ல வேண்டியது தானே?

அப்படியென்றால் வறுமை என்றால் என்ன?

உடனே நீங்கள் பதில் சொல்லிவிடுவீர்கள்.

"உணவு, உடை, உறையுள், மருத்துவ வசதி, கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகளுக்கே தட்டுப்பாடு உள்ள நிலைமைதான் வறுமை" என்று.

ஆனால் அரசும், பொருளாதார நிபுணர்களும் உங்களது வரையறையை அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

உணவு என்றால் என்ன உணவு? கஞ்சியா? கூழா அல்லது பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்த நல்லுணவா? உடை என்றால் என்ன உடை? காடாத் துணியா? 'கார்டன் வரேலியா'?

உறையுள் என்றால் எட்டடிக் குச்சா? எட்டடுக்கு மாளிகையா?

மருத்துவ வசதி என்றால் சுக்குக் கசாயாமா? அப்பல்லோ ட்ரீட்மெண்ட்டா?

கல்வி என்றால் ஓரோன் ஒண்ணு. ஈரோன் ரெண்டு என்னும் ஆரம்பக் கல்வியா? அல்லது தியரி ஆப் ரிலெட்டிவிட்டி குவாண்டம் தியர் என்று மிரட்டும் உயர் கல்வியா?

இவற்றில் எது கிடைக்கவில்லை என்றால் வறுமை? என்று அவர்கள் கேட்கிறார்கள்.

நாம் அப்படியே திகைத்துப்போய் நிற்கிறோம். உடனே வெற்றிப் புன்னகையுடன் அவர்களே பதிலும் சொல்கிறார்கள்.

"நகரத்தில் உள்ள ஒருவர் சராசரியாக 2100 கலோரி சக்தி அளிக்கும் உணவை சாப்பிட வேண்டும். கிராமத்தில் உள்ளவர் சராசரியாக 2400 கலோரி சக்தி அளிக்கும் உணவை சாப்பிட வேண்டும். இதற்குக்கூட வசதி இல்லாத நிலைமைதான் வறுமை.



இந்த 2100-2400 கலோரி உணவு தான் வறுமைக்கோடு. இந்த அளவுக்குச் சாப்பிட வசதி இல்லாதவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் ஆவர். இந்த அளவுக்கோ அல்லது அதிகமாகவோ சாப்பிட வசதி உள்ளவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்கள் ஆவர்" என அரசின் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கலோரி என்றால்?

ஒரு கிராம் எடையுள்ள தண்ணீரை ஒரு டிகிரி சூடாக்கத் தேவைப்படும் வெப்ப சக்தியின் அளவு ஒரு கிலோ கலோரி.

மனிதன் வேலை செய்ய, உயிர் வாழ சக்தி தேவை. வேலை செய்யும் போது உடம்பில் உள்ள சத்து எரிக்கப்படுகிறது. அதை ஈடு செய்யச் சாப்பிட வேண்டும். உணவில் உள்ள சத்து உடம்பில் சேர்கிறது. மீண்டும் வேலை செய்யும் பொழுது மீண்டும் சத்து எரிக்கப்படுகிறது. இது ஒரு சுழற்சி. உணவில் இருந்து கிடைக்கும் இந்த சக்தியும் 'கிலோ கலோரி' என்ற அதெ அளவிலேயே அளக்கப்படுகிறது. நடைமுறையில் சுருக்கமாகக் 'கலோரி' என்றே குறிக்கப்படுகிறது.

சுலபமாக புரியும் ஒரு எடுத்துக்காட்டைப் பார்த்தால் விசயம் விளங்கிவிடும்.

ஒரு இட்லிக்கு - 75 கலோரி கிடைக்கிறது

ஒரு மணி நேரம் நடந்தால் - 160 கலோரி செலவாகிறது.

ஒரு வேளைக்கு ஒரு கிண்ணம் சோறு - வெறும் சோறு மட்டும் சாப்பிட ஒருவருக்கு வாய்ப்பு வசதி இருக்கிறதா? அவர் வறுமைக்கோட்டுக்கு மேலே இருக்கிறார். அவர் ஏழை அல்ல.

அப்படியென்றால் அவர் பணக்காரரா? இல்லை. 'ஏழை அல்லாதவர்' (Non-poor) அப்படித்தான் அரசு சொல்கிறது.

நகரத்தில் உள்ள ஒருவர் 2100 கலோரி உணவு சாப்பிட வாய்ப்பு இருந்தால் அவர் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர் என்பது அரசின் கணிப்புதானே. அதன்படி பார்த்தால் சுமார் ஒரு லிட்டர் கொள்ளளவு உள்ள கிண்ணத்தில் இருக்கும் சோற்றில் 700 கலோரி சக்தி இருக்கிறது.

ஒருவேளைக்கு கிண்ணம் என்று மூன்று வேளைக்கு மூன்று கிண்ணம் வெறும் சோறு சாப்பிட்டால் 2100 கலோரி சக்தி கிடைத்துவிடும். அவர் வறுமைக் கோட்டுக்கு மேலே போய்விடுவார். அவர் ஏழை அல்ல, 'ஏழை அல்லாதவர்'!

அப்படியானால் மற்ற தேவைகள்? அதற்கும் கொஞ்சம் கொஞ்சம் ஒதுக்கீடு செய்துவிடலாம். மொத்தத்தில் ஒரு கணவன், ஒரு மனைவி, மூன்று குழந்தைகள் ஆகிய 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு 988 ரூபாய் செலவிடும் சக்தி இருந்தாலே மேற்சொன்ன தேவைகள் அனைத்தும் கிடைத்துவிடுமாம். அந்தக் குடும்பத்தினர் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களாம்.

இதில் கணவன் மட்டும் வேலை பார்த்தாலும் சரி... அல்லது மனைவி, குழந்தைகள் அனைவருமே வேலை பார்த்தாலும் சரி... மொத்தத்தில் அந்தக் குடும்பத்தினர் மாதத்துக்கு 988 ரூபாய் செலவழிக்கிறார்களா? அப்படியானால் அவர்கள் ஏழை அல்ல! இவ்வாறுதான் அரசு நிர்ணயித்திருக்கிறது. (இப்போது இந்தத் தொகை சற்று உயர்த்தப்பட்டுள்ளது)

இதில் மற்றொரு சோகம் என்னவென்றால், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களில் சுமார் 80% பேர் உயிர் வாழத் தேவையான குறைந்தபட்ச உணவுக்கும், வழியின்றித் தவிக்கிறார்கள் என்பதையும் அரசின் புள்ளிவிவரமே தெரிவிக்கிறது.

எனவே, இந்த வறுமைக்கோட்டுக்கு நிர்ணயமே சரியல்ல; வறுமையின் தீவிரத்தையும், வறியவர்களின் எண்ணிக்கையையும் இது குறைத்துக் காட்டுகிறது என்று அரசு சார்பற்ற பொருளாதார நிபுணர்கள் பலர் குற்றம் சாட்டுகிறார்கள்.

எனெனில்-

ஏழைகள் பெரும்பாலோர் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுவர்கள் தான். அவர்களுக்கு 2100 கலோரி. 2400 கலோரி என்ற அளவு நிச்சயமாகப் போதாது. இத்தகைய ஆண்களுக்கு 3900 கலோரியும், பெண்களுக்கு 3000 கலோரியும் தேவை. ஆனால் வறுமைகோட்டுக்கு 2100-2400 என்ற சராசரி கணக்குத்தான் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

வறுமைக்கோட்டுக்கு நிர்ணயம் உணவுக்கு மட்டுமே ஓரளவு முக்கியத்துவம் தருகிறது. உடை, வீடு, மருத்துவ வசதி, கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகளுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை. எனவே இது உண்மையில் 'வறுமைக்கோடு' அல்ல. பஞ்சைக்கோடு-பராரிக்கோடு (Not poverty line but 'destitution line')

கணவன், மனைவி குழந்தைகள் ஆகிய அத்தனை பேரும் வேலை பார்த்துச் சம்பாதித்து மாதத்துக்கு 988 ரூபாய் செலவழித்தால் அவர்கள் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்கள் என்று நிர்ணயிக்கப்படுவது அபத்தம். இப்படிச் சராசரி செலவினத்தைக் கொண்டு நிர்ணயிப்பதைவிட, சராசரி நபர் வருமானம் என்பதைக் கொண்டு நிர்ணயிப்பது ஓரளவுக்கு உண்மையான நிலவரத்தைக் காட்டும் என்றெல்லாம் பொருளாதார நிபுணர்கள் பலர் கூறுகிறார்கள்.

ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடக்கூடாது.

வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 23 கோடியே 77 லட்சம்; இதில் 2100 கலோரியை விடக் குறைவாகப் பெறுபவர்களின் சதவிகிதம் 78.2 என்று சொல்லும் பொழுது இதெல்லாம் உயிரற்ற வெறும் எண்கள் அல்ல; ரத்தமும், சதையும், ஜீவனும் கொண்ட நமது சக மனிதர்கள்.. இந்த மனிதர்களின் அவலங்கள்...

18.08.2002 - ஜீனியர் போஸ்ட் இதழில் வெளிவந்தது.

2 பின்னூட்டங்கள்:

Unknown said...

நன்றி தோழர் குருத்து


வறுமைக்கோடு கட்டுரையை என்னுடைய தளத்தில் ஒட்டியுள்ளேன்.(senkodi.multiply.com). பங்குச்சந்தை குறித்த விரிவான கட்டுரை கிடைக்குமா? எத்தனை விளக்கங்கள் படித்தாலும் மண்டையில் ஏற மறுக்கிறது.


தோழமையுடன்

செங்கொடி‌

Anonymous said...

vinavu.wordpress.com