March 15, 2026

Paathirathri 2025 மலையாளம் புலனாய்வு படம்

 


நாயகி ஒரு SI போலீசு அதிகாரி. கணவனுடான உறவு சிக்கலில் இருக்கிறது.   ஒரு போலீசுகாரர். அவருடைய விவாகரத்து வழக்கும் நடந்து வருகிறது.

 

இருவரும் இடுக்கி மாவட்டத்தில் வேலை செய்து வருகிறார்கள். ஒருநாள் இரவு ரோந்து பணிக்கு இருவரும் கிளம்புகிறார்கள்.  ஒரு காட்டுப் பகுதியில் ஒரு கார் தன்னந்தனியாக நிற்கிறது. இவர்கள் அருகே போகும் பொழுது, அந்த காரிலிருந்து ஒரு ஆண் உருவம் தெறித்து ஓடுகிறது.  காரும் வேகமாக நகர்ந்துவிடுகிறது.

 

இருவரும் அந்த உருவத்தைத் துரத்தி போகும் பொழுது,  ஒரு மண் கலந்த குட்டையில் விழுந்துவிடுகிறது.  இடையே ஒரு தீப்பிடித்து எறிந்த வழக்கை கையாள அழைப்பு வரும் பொழுது, அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்கள். அதிகாரி தெரிவிப்போம் என சொல்ல, டிரைவர் போலீசோ  நாம் துரத்தி வந்ததையோ, அந்த ஆள் விழுந்ததையோ யாருமே பார்க்கவில்லை. வாருங்கள் கிளம்பலாம் என கூட்டி கிளம்பிவிடுகிறார்.

 

அடுத்த நாள் அந்த இடத்தில் வந்து பார்த்தால்,  மண்ணைப் போட்டு மூடிக்கொண்டிருக்கிறார்கள்.  பிறகு உடல் தட்டுப்படுகிறது. அவர் ஒரு பத்திரிக்கையாளர் எனவும், அவர் மனைவி புகார் கொடுக்கவும் விசயம் பெரிதாகிறது.

 

இருவரும் முறையாக தெரிவிக்காததால், இவர்கள் மீதே அந்த கொலை வழக்கு திரும்புகிறது.  தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள்.  உண்மையில் நடந்தது என்ன? என்பதை மெல்ல மெல்ல விசாரணையில் தெரிய வரும் பொழுது, ஆச்சர்யப்படுகிறோம்.

 

***

 

Shaji Maraad போலீசாக இருந்து திரைத்துறைக்கு வந்தவர்.  அவருடைய பங்களிப்பில் இள வீழ பூஞ்சிறா (2022) வெளிவந்து புகழ்பெற்றது.  அதன் தொடர்ச்சியில் இந்த கதையையும் அவர் எழுதியிருக்கிறார்.

 

படத்திலும் இயல்பில் உள்ள கதை அம்சம் என அது நன்றாக தெரிகிறது.  என்ன நடந்தது என்பதை கடைசி வரை சஸ்பென்ஸ் வைத்திருந்து சொல்லியிருக்கிறார்கள். சிறப்பு.

 

முன்பெல்லாம் நாயகன், நாயகியைப் பற்றிய குடும்பங்கள் எல்லாம் ”நல்ல” விதமாய் காட்டுவார்கள். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெப் சீரிஸ்களில், சில படங்களில் அவர்களின் குடும்பங்கள் சிதைவு கொண்டதாக தொடர்ந்து காண்பிக்கப்படுகிறது.  இது பொதுவாக அமெரிக்க, ஐரோப்பிய படங்களில் அப்படி நிறைய பார்க்கமுடியும்.  இங்கேயும் குடும்பங்களின் சிதைவு காரணமாக இப்படி காண்பிக்கிறார்களா? அல்லது மேலை நாட்டு படங்களின் தாக்கமா என தெரியவில்லை.

 

இந்த படம் உண்மை சம்பவங்களின் தாக்கம் என சொல்லும் பொழுது, அதிலும் குடும்பங்கள் சிதைவு குறித்து காண்பிக்கும் பொழுது, இயல்பில் உள்ளதை காண்பிக்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது.

 

Shaji Maraad எழுதும் கதைகளில் எல்லாம், போலீசு துறையில் அப்பாவிகள் எளிதாக பலிகடா ஆக்கப்படுவார்கள் என்பதை நினைக்கும் பொழுது ஒரு துறையில் பணிச்சூழலில் அவ்வபொழுது ஒரு திணறல் (suffocation) இருக்கும். எப்பொழுதுமே இப்படி இருக்கும் துறை இது போல! சிரமம் தான்.

 

நாயகியாக அழகிய தீயே நவ்யா நடித்திருக்கிறார். Soubin Shahir  போலீசாக வந்தாலும், அவர் தான் கதையிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்.  இயக்குநர் Ratheena  இயக்கியுள்ளார்.

 

புலனாய்வு கதைகளில் ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் பார்க்கலாம். Zee5ல் வெளிவந்திருக்கிறது. ஆங்கில சப் டைட்டிலுடன் பார்த்தேன்.

 

No comments:

Post a Comment