> குருத்து: The Kashmir files (2022) இந்தி

March 25, 2022

The Kashmir files (2022) இந்தி



தில்லியில் பேரனுடன் வாழ்கிறார் பண்டிட் தாத்தா. பேரன் ஜேன்யூ கல்லூரியில் படிக்கிறார். தாத்தா உடல்நலமில்லாமல் இறக்கிறார். அவருடைய இறுதி ஆசையான அவருடைய அஸ்தியை காஷ்மீரில் கரைக்க செல்கிறார்.


தாத்தாவினுடைய பால்ய கால நண்பர்கள் காஷ்மீரில் காத்திருக்கிறார்கள். காஷ்மீரில் 1990 நடந்தவற்றை சொல்கிறார்கள். ஆயுதம் தாங்கிய குழுவால் இந்து பண்டிட்டுகள் எவ்வாறு துரத்தப்பட்டனர்? கொல்லப்பட்டனர் என்பதை என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களும், வானரப் படைகளும் பயங்கர உற்சாகத்துடன் இருக்கிறார்கள். கலவரம் செய்வதற்கு ஒரு சரக்கு கிடைத்துவிட்டதென குதூகலிக்கிறார்கள். அவர்களுக்கு எப்பொழுதும் உண்மை தேவைப்பட்டதேயில்லை. பொய்கள் தான் வதந்திகளை பரப்புவதற்கு, கலவரங்களுக்கு தோதானவை. இந்தப் படம் கொஞ்சூண்டு உண்மை, ஏகப்பட்ட பொய், புளுகுகளுடன், வன்மத்துடன் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தை கொண்டாடி தீர்க்கிறார்கள்.

பாஜக ஆளும் மாநிலங்களில் 100% வரிவிலக்கு கொடுத்திருக்கிறார்கள். மற்ற மாநிலங்களிலும் வரிவிலக்கு கொடுக்க நச்சரிக்கிறார்கள். தில்லியில் கெஜ்ரிவால் “வரிவிலக்கு எல்லாம் கொடுக்கமுடியாது. அப்படி பலரும் பார்க்கனும்னா, யூடியூப்பில் படத்தை போடு!” என கடுப்பாய் பேசியிருக்கிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு தருகிறார்கள். கட்டாயமாக படம் பார்க்க உத்தரவிடுகிறார்கள். முசுலீம் வெறுப்பு கோஷங்களை எழுப்புகிறார்கள். பார்க்காமல் போய்விடுவார்களோ என பதறி அவர்களே திரையரங்கை வாடகைக்கு வாங்கி, இலவசமாக பார்க்க வைக்கிறார்கள்.

ஆனால், பா.ஜனதா எவ்வளவோ திட்டமிட்டு, பல திரையரங்குகளில் வெளியிட்டாலும், திரையரங்குகள் காத்து வாங்குகின்றன. முந்தாநாள் அம்பத்தூர் முருகன் திரையரங்கில் இணையத்தில் பார்த்தால், மாலை 6.20 வரைக்கும் ஒரு டிக்கெட் கூட விற்கவில்லை. தனியாய் பார்க்க பயமில்லை தான். ஆனால், குறைவான டிக்கெட்கள் என்றால், காட்சியை ரத்துசெய்துவிடுவார்கள். ஆகையால், கோயம்பேடு ரோகிணி போனால், மாலை 7.30 காட்சி. மொத்தமே எட்டு பேர்தான். இதில் இரண்டு காதல் ஜோடிகள் வேறு. எட்டு பேர் என்பதால், ஏசி குளிரைத் தான் தாங்கமுடியவில்லை.

படத்தின் துவக்கம் முதல் இறுதிவரை காஷ்மீரத்து சிறுவன் முதல் வயதான ஆள் வரை கொடூர வில்லனாக்கி வைத்திருக்கிறார்கள். அதனாலேயே நம்பகத்தன்மை இல்லாமல் படம் பல் இளித்துவிடுகிறது.

காஷ்மீரத்து மக்கள் எப்பொழுதும் பாகிஸ்தானோடும் இருக்க விரும்பியதில்லை. இந்தியாவோடும் இருக்கவிரும்பியதில்லை. அதனால் தான், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டும், பல ஆயிரம் மக்களை பலி கொடுத்தும், அவர்கள் தங்கள் இறையாண்மைக்கு தான், தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடிவருகிறார்கள்.

1990களில் காஷ்மீரத்து மக்களின் செல்வாக்கு பெற்ற கட்சியான ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் கொள்கை அறிக்கையை படித்துப் பாருங்கள். உழுபவனுக்கு நிலம் சொந்தம். ஏகப்பட்ட நிலங்களை பிரித்து தந்தார்கள். அப்பொழுது ஆண்ட இந்திய தலைவர்களுக்கு எல்லாம் வயிறு எரிந்தது. மதசார்பற்ற தன்மையை கடைப்பிடித்தார்கள். பாகிஸ்தானோடு இணைந்தால் அது சாத்தியமே இல்லை என்பதால் தான், இந்தியாவோடு கொஞ்சம் இணக்கமாக இருந்தார்கள். அப்படிப்பட்ட மக்களை போய், இப்படி அவதூறுகள் செய்கிறார்கள்.

1990களில் பண்டிட்டுகள் துரத்தப்பட்டது, கொல்லப்பட்டது உண்மை என்றால், இந்துக்களின் ”காவலனான” இவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? பாபர் மஸ்ஜித்தை கையில் வைத்துக்கொண்டு இந்தியா முழுவதும் கலவரம் செய்துகொண்டிருந்தார்களே! பண்டிட்டுகளுக்கு ஏன் நியாயம் கேட்கவில்லை?

இவர்களுக்கு காஷ்மீர் மக்கள் மீதும் அக்கறையில்லை. பண்டிட்டுகள் மீதும் அக்கறையில்லை. அவர்களுக்கு ஒரு ‘ இந்து ராஷ்டிர கனவு’ இருக்கிறது. அந்த கனவை நிறைவேற்ற என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். அவர்களின் வரலாறு அப்படி! அவர்களின் கனவு நிறைவேறினால், பெரும்பாலான உழைக்கும் மக்களை கனத்த இருட்டிற்குள் தள்ளிவிடும். அவர்களின் கனவை கலைத்துப் போடுவோம்!

1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

instead of paying for this propaganda movie, should have torrented it.