> குருத்து: நடிகை பார்வதி – இயக்குநர் சசி

May 18, 2026

நடிகை பார்வதி – இயக்குநர் சசி

 

a

ஒரு நல்ல கதை என்றால் தனக்கு தேவையான எல்லாவற்றையும் அதுவே அடைந்துவிடும் என சொல்வார்கள். அது போல பூ படத்தின் கதைக்கு மிகப் பொருத்தமான ஆளாக நடிகை பார்வதி கிடைத்தார்.  ஒரு மலையாளப் படத்தில் ஒரு சின்ன பாத்திரத்தில் நடித்திருந்தார்.   அந்த ஆல்பத்தை பார்த்து முடிவு செய்தேன்.

 

சம்பளம் பேசும் பொழுது, தயாரிப்பு தரப்பில் பேசச் சென்றவர், “எங்க இயக்குநர் தான் உங்களை தமிழில் அறிமுகப்படுத்துகிறார்!” என பேசியிருக்கிறார்.  “நீங்க இந்த பாத்திரத்திற்கு ஒரு ஆடிசன் நடத்தினீர்கள். நான் கலந்துகொண்டேன்.  இப்பொழுது பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதால் என்னை தேர்வு செய்கிறீர்கள்!” என பதில் அளித்துள்ளார். எனக்கு போன் செய்து, நடந்ததை சொல்லி, கொஞ்சம் கூடுதலாக சொல்லி சிக்கல் செய்ய வாய்ப்பிருக்கு சார் என்றார்.

 

திட்டமிட்ட மாதங்களை விட கூடுதலாக படப்பிடிப்பு கடந்து போய்க்கொண்டிருந்தது.  அடுத்தப் படத்திற்கு கிளம்பி வா! என பார்வதியை வீட்டில் இருந்து தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.  நான் அந்த பெண்ணின் சிக்கலைப் புரிந்துகொண்டு, படப்பிடிப்பும் தொடர்ந்து இருப்பதால்,  பேசிய பணத்தை விட  கூடுதலாக ஒரு லட்சத்திற்கு ஒரு காசோலை தந்து, வீட்டில் கொடுத்துவிடுங்கள்! என கொடுத்தேன். வாங்கிக்கொண்டு சென்றவர், ஒரு அரை மணி நேரம் கழித்து வந்து, “என் முகத்தை கண்ணாடியில் என்னாலேயே பார்க்க முடியவில்லை சார்! மாரியாக (பாத்திரத்தின் பெயர்) நடிக்க வந்து, இப்பொழுது கூடுதலாக ஒரு லட்சம் கொடுத்தால் தான் நடிப்பேன் என சொல்வது நியாயமே இல்லை! என தோன்றியது. அம்மாவிடம் கொடுத்துவிட்டேன் என சொல்லிவிடுங்கள். நான் ஊருக்கு போய் பேசிக்கொள்கிறேன்” என சொன்னார். இதைச் சொன்ன பொழுது, அந்த பெண்ணுக்கு வயது 20 தான்.  முதல் படம் வேறு. மேற்படிப்புக்காக வெளிநாடு செல்வதற்கு பணத் தேவையும் அந்த பெண்ணுக்கு இருந்தது.

 

இப்பொழுதும் ஒரு படம் நடித்தால், அதை முடித்துக் கொடுத்துவிட்டு தான் அடுத்தப்படம் நடிக்கிறார். அர்ப்பணிப்பு உள்ள நடிகை.

 

-         -  சித்ரா லெட்சுமணனுக்கு கொடுத்த நீண்ட பேட்டியிலிருந்து…. 

0 பின்னூட்டங்கள்: