> குருத்து: November 2021

November 29, 2021

”இடமும் இருப்பும்” – மனுஷ்யபுத்திரன் கவிதைகள்


கவிதைகளின் நண்பனாய் இருந்து, சில கவிதைகளும் எழுதி ஒரு கட்டத்தில் ஒருவர் ”கவிஞரே” என அழைத்த பொழுது, பயந்து போய், கட்டுரைகளின் பக்கம் வேகவேகமாய் போய்விட்டேன். மீண்டும் பழைய நண்பனின் நினைவுக்கு வந்தது.


மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை வாசிக்க துவங்கினேன். மதியவேளையில் திரையரங்கின் இருட்டில் தட்டுத் தடுமாறி நடக்கும் ஒரு பார்வையாளனாய் உள்ளே நுழைகிறேன். கவிதைகளை விட்டு மிக நீண்ட தூரம் சென்றுவிட்டேன் என்பது கவிதைகளைப் படிக்கும் பொழுது உணர முடிகிறது.
இந்த நகரத்தில் தான் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிக்கொண்டிருக்கிறேன். நகரத்தைப் பற்றி இப்படி கவலைப்படுகிறார்.

”இந்த நகரத்தை
தூங்கவைக்கவேண்டும்
காலமும் அகாலமும்
குழம்பிய காலத்தில்
அது பிரமைகளில் நீந்துகிறது.

மிகவும் களைப்படைந்துவிட்டது
எனினும் தூங்க மறுக்கிறது.
நகரங்கள்
தூங்க மறந்து போனதால்
கனவு காணும் பழக்கத்தை
இழந்துவிட்டன!
தூக்க மாத்திரைகளின்றி
இந்த நகரத்தைத் தூங்க வைக்கவேண்டும்
புதையுண்ட நகரங்கள் போல

இதைப் படித்த பிறகு, இரவில் இத்தனை நிறுவனங்கள் இயங்குகின்றன. தூங்க வைக்கவேண்டும் என்கிறாரே! என பொருளாதார இழப்பு குறித்து தான் என் மூளை கணக்கிடுகிறது. 

தன் வீட்டில் உள்ள ”போன்சாய் காடு” குறித்த கவிதையில்.. இப்படி முடிக்கிறார்.

”போன்சாய் மனிதர்கள் தோன்றி
அவற்றிக்குள் நுழையும் வரை
அபாயம் ஏதுமில்லை”

கவிஞனின் உலகம், நாம் எதிர்கொள்ளும் உலகம் போல இல்லாமல் வேறு ஒரு பரிமாணத்தில் இருக்கிறது. புதிராக இருக்கிறது. மிக மிக உணர்வுப்பூர்வமாக இருக்கிறது. இத்தனை மனக்கொந்தளிப்புகளோடு எப்படி ஒரு கவிஞனால் இந்த உலகத்தில் வாழமுடிகிறது என நினைத்துப் பார்த்தால், நமக்கு பதட்டமாய் இருக்கிறது.

இந்த உலகத்தில் வாழ நமக்கு ஒரு பாதுகாப்பு வளையம் வேண்டும். அதனால், நாம மீண்டும் கவிதைகளின் பக்கம் எட்டிப்பார்க்காமல், கட்டுரைகளின் பக்கமே பாதுகாப்பாய் சுற்றலாம் என்றும் தோன்றுகிறது.

கவிஞர் 90களில் எழுதியது இந்த தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அக உலகம் சார்ந்த கவிதைகள் தான். ஒரு வேளை ”இடமும், இருப்பும்” என்ற தலைப்புக்கு தகுந்தவாறு தொகுக்கப்பட்டுள்ளன என நினைக்கிறேன்.

கடந்த இருபது ஆண்டுகளில் கவிஞரிடம் கவிதைக்கான தளங்களில், வார்த்தைகளில் படிமங்களில் என நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. என்னைப் போன்றவர்களின் நலன் கருதி அவர் மாறியிருக்கிறார் என்றே புரிந்துகொள்கிறேன்.

அடுத்து, போன புத்தக திருவிழாவின் பொழுது வாங்கிய புத்தகமான ”நீராலானது” தொகுப்பு கண்ணில்பட்டது. சில நாட்கள் கழித்து படிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறேன். ஒரே நேரத்தில் மனிதன் அத்தனை அழுத்தங்களை தாங்க இயலாது.

பக்கங்கள் 110
வெளியீடு : உயிர்மை வெளியீடு

November 27, 2021

Raat Akeli Hai (இரவின் தனிமை) Hindi 2020



உத்திரபிரதேசத்தில் கதை நடக்கிறது. ஊருக்கு வெளியே இருட்டில் ஒரு காரில் ஓட்டுநரும், வயதான ஒரு அம்மாவும் காரில் வந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு லாரி வேகமாக காரை இடித்து கவிழ்க்கிறது. காரில் இருந்து அரை உயிராய் வெளியே வரும் இருவரையும் அந்த கொலைகாரன் கழுத்தை அறுத்து கொலை செய்கிறான்.


ஐந்து வருடங்கள் கழித்து, ஊரில் உள்ள பணக்கார வீடுகளில் ஒன்றான அந்த பங்களா வீடு கல்யாண களையோடு இருக்கிறது. கொல்லப்பட்ட அந்த அம்மாவின் கணவர் தனது 60 வயதில், இரண்டாவது திருமணம் செய்கிறார். அன்றிரவே அவருடைய அறையில் மர்மமான முறையில் அவர் துப்பாக்கியில் சுட்டு கொலைசெய்யப்படுகிறார்.

கொலையை விசாரிக்க ஆய்வாளர் வீட்டிற்கு வருகிறார். வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் விசாரிக்க துவங்குகிறார். உள்ளூரில் ஒரு எம்.எல்.ஏ அந்த குடும்பத்துக்கு நெருக்கமாக இருக்கிறார். விசாரணைக்கு ஒத்துழைப்பதில் சிக்கல் செய்கிறார்கள். உண்மையை கண்டுபிடிக்க முயற்சி செய்யும் ஆய்வாளரையே விரட்டி விரட்டி சுடுகிறார்கள்.

பிறகு குற்றவாளியை கண்டுப்பிடித்தார்களா என்பதை திரில்லாக சொல்லியிருக்கிறார்கள்.

****

கதைக்கான பின்னணி உத்திரப்பிரதேசம் என்பதே ஒரு திரில்லருக்கான பின்னணியை கொடுத்துவிடுகிறது. அந்த எம்.எல்.ஏ உட்பட பலரும் துப்பாக்கிகளோடு தான் திருமணத்திற்கே வருகிறார்கள். விசாரணை செய்யும் ஒரு ஆய்வாளரையே ஜீப்பில் துரத்தி துரத்தி கொல்ல முயல்கிறார்கள்.

படத்தில் பெண்கள் பாலியல் சுரண்டலை தான் அடிநாதமாக பேசியிருக்கிறார்கள். மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் பெண்கள் வீட்டிலும், சமூகத்திலும் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகம். இந்தியாவில் பாலியல் பலாத்கார வழக்குகள் தினமும் சராசரியாக 77 வழக்குகள் (2020ம் வருடத்தில் 28046 வழக்குகள்) பதிவாகி இருக்கின்றன என இந்திய ஆவண காப்பகமே அறிவித்திருக்கிறது..

பொதுவாக பெண்களின் எதிர்கால வாழ்க்கை கருதி பெண்ணின் குடும்பமே வழக்கு தராமல் பெரும்பாலும் தவிர்த்துவிடுகிறார்கள். அப்படி மீறி புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேசன் போனாலும், வழக்கை பதிவு செய்ய எவ்வளவு தவிர்க்க முடியுமோ அவ்வளவு தவிர்ப்பார்கள். இதையெல்லாம் மீறித்தான் சராசரியாக 77 வழக்குகள் பதிவாகிறது என்றால் இதன் தீவிரத்தை புரிந்துகொள்ளமுடியும். அமெரிக்கா ஒருவாரத்திற்கு முன்பாக தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இந்தியாவில் தனியாக பயணிக்காதீர்கள் என தனது குடிமக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. இந்த தலைகுனிவு இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் பெண்களுகு அதிகமாக தான் இருக்கின்றன. நேற்று கூட மெக்சிக்கோவிலும், துருக்கியிலும், சிலியிலும் பெண்கள் மீதான தாக்குதல்கள் பெருகி வருவதை கண்டித்து பெண்கள் போராடியதாக செய்தியில் தெரிவித்தார்கள். மொத்த சமூகமும் இதில் கவனத்துடனும், அக்கறையுடன் இருந்தால் தான் இந்த பிரச்சனையை தீர்க்கமுடியும்.

மற்றபடி, நாயகனாக நடித்த நவாசுதீன் சித்திக், அந்த பெரியவருக்கு இரண்டாவது மனைவியாக வரும் ராதிகா ஆப்தே உட்பட படத்தில் நடித்த அத்தனை பேரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தில் உழைத்த அத்தனை தொழில்நுட்பம் சார்ந்தவர்களும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.

கொரானா முதல் அலையில் நேரடியாக நெட் பிளிக்சில் வெளியாகியிருக்கிறது. இப்பொழுதெல்லாம் பிலிம்பேர் விருதுகள் ஓடிடி படங்களுக்கு தனியாக தருகிறார்கள் போல! இந்தப் படம் சிறந்தப்படத்திற்கான விருதை வென்றிருக்கிறது. நாயகன் நாவசுதீனும் வென்றிருக்கிறார்.

திரில்லர் ரசிகர்களுக்கு பிடிக்கும். பாருங்கள்.

November 23, 2021

நளினி ஜமீலா : ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை – வாழ்க்கை வரலாறு



சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த புத்தகத்தை வாங்கி, படிக்க ஆரம்பித்து, பாதியில் விட்டுவிட்டு, வேறு புத்தகங்கள் பின்னால் போய்விட்டேன். இப்பொழுது மீண்டும் கண்ணில்பட்டது. இரண்டு நாட்களில் மீண்டும் துவக்கத்தில் இருந்தே படித்து, முடித்தும்விட்டேன்.


நளினி 1950களில் கேரளாவில் பிறந்திருந்திருக்கிறார். அந்த ஊரில் உள்ள பெரிய வீடுகளில் ஒன்றாய் அவர்களுடைய வீடும் இருந்திருக்கிறது. பிறகு அப்பாவின் தொழிற்சங்க போராட்டத்தினால், அம்மாவின் வேலை போய்விட, வறுமை வாட்ட மூன்றாவதோடு பள்ளி படிப்பு முடிவுக்கு வந்திருக்கிறது. பிறகு குழந்தை தொழிலாளியாய் மண் அள்ளியிருக்கிறார்.,

அண்ணனின் திருமணத்திற்கு உதவி செய்ததற்காக, அப்பா கோபத்தில் 18 வயதில் இவரை ”வீட்டை விட்டு போ!” என துரத்தியுள்ளார். அவசர கோலத்தில் ஒருவரை திருமணம் செய்ய, இரண்டு குழந்தைகள் இருக்கும் பொழுது, கணவர் இறந்துவிட, ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய் கொடுத்தால் தான் பிள்ளைகளை கவனித்துக்கொள்ள முடியும் என உறவினர் சொல்ல, பாலியல் ”தொழிலில்” ஈடுபட துவங்கியுள்ளார். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, இந்த ‘தொழிலில்’ ஈடுபட்டதால், குழந்தைகளுக்கும் இவருக்குமான உறவை உறவினர்கள் கத்தரித்துக்கொண்டுள்ளனர்.

பிறகு, ஒரு வேறு ஒரு திருமணம் முடிந்து, ஒரு குழந்தை பிறந்து, அவரையும் பிரிந்து, முசுலீம் ஒருவரோடு 13 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து. தொழில் செய்து, பிறகு நட்டமாகி பிறகு அந்த உறவும் நிலைக்காமல்… கடுமையான வறிய நிலைக்கு தள்ளப்பட்டு பிறகு பாலியல் ”தொழிலில்” மீண்டும் ஈடுபட்டுள்ளார். அந்த ஒரு பெண் குழந்தையை வளர்க்கவும், பாதுகாக்கவும், செட்டில் செய்யவும் படாதப்பாடு பட்டிருக்கிறார்.

பிறகு பாலியல் ”தொழிலாளர்களுக்கென” ஒரு அமைப்பை அணுகி, தொடர்ச்சியாக இந்த ”தொழிலில்” ஈடுபட்டவர்களுக்காக சட்ட ரீதியில் உதவ தொடங்கி… இப்பொழுது ஒரு அமைப்பை துவங்கி, அதன் தலைவியாகவும் இருந்து வருகிறார். பாலியல் ”தொழிலாளர்கள்” பற்றிய சில ஆவணப்படங்கள் எடுத்துள்ளார்.

இப்படி அவருடைய பிறப்பு, வளர்ப்பு, திருமண வாழ்க்கை, பிறகு “தொழில்” வாழ்க்கை, மீண்டும் குடும்ப வாழ்க்கை, அமைப்போடு தொடர்பு, அவர் வாழ்வில் நடந்த மாற்றங்கள் என தன்னுடைய ஐம்பது வயது வாழ்க்கையை ஒரு பறவை பார்வையில் எழுதியுள்ளார்.
****

நளினி ஜமீலா வாழ்க்கையில் சமூக அடிப்படையில் பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் பல அம்சங்கள் இருக்கின்றன. அதில் சில அம்சங்களை மட்டும் தொட்டுச் செல்வோம்.

சமூக நாணயத்தின் ஒரு பக்கத்தை தான் நாம் பெரும்பாலும் அறிவோம். திருடன் மணியன் பிள்ளை வாழ்க்கையும், நளினி ஜமீலா அவர்களுடைய வாழ்க்கையும் சமூக ”நாணயத்தின்” மறுபக்கமாக இருக்கிறது. அதனால் இவர்களை படிக்க வேண்டியிருக்கிறது. இருவருடைய வாழ்க்கையின் ஊடாக, மக்களின் சிந்தனையையும், ஒரு காலக்கட்டத்தையும் ஒரு பறவை பார்வையில் பார்த்துவிட முடிகிறது.

போலீசின் அற்பத்தனம். நளினியின் முதல் போணியே ஒரு போலீசு அதிகாரி தான். இரவு கொஞ்சிவிட்டு, காலையில் கைது செய்ய ஆளை அனுப்பிவிடுகிறார். என்ன ஒரு வில்லத்தனம்?

நளினி ஒரு இடத்தில் கடவுள் நம்பிக்கை குறித்து பேசுகிறார். அவர் வாழ்வில் நடந்த துயரங்கள், தன்னுடைய பெண் பிள்ளையை வைத்துக்கொண்டு பட்ட பாடு, தர்ஹாவை சுற்றி நடக்கும் அவலங்கள் அவருக்கு கடவுள் மீது நம்பிக்கையை கேள்விஎழுப்பியிருக்கிறது. இருப்பினும் ”தர்ஹாக்கள்” சில காலம் சோறும் போட்டுள்ளதால், தப்பு தப்பு என கன்னதில் போட்டுக்கொள்கிறார். என் வாழ்விலும் அப்படித்தான். நான் பிறந்தது. வளர்ந்தது எல்லாம் மதுரையில் தொழிலாளர்கள் வாழும் பகுதியில் தான். தெருவிற்கு ஒரு மாரியம்மன் குடியிருப்பார். அம்மா வணங்குவார். தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளியன்று சிறப்பாக தெப்பக்குளம் மாரியம்மனை போய் தரிசிப்பார். வருடத்திற்கு ஒருமுறை ஊரில் குலசாமியை கும்பிடுவார். ஆனால் அவர்கள் வாழ்வில் பெரிய மாற்றமில்லை. இது அம்மாவிற்கு மட்டுமில்ல! அங்கு வாழ்ந்த அத்தனை மக்களுக்கும் தான் நேர்ந்தது. பிறகு எல்லா தொழில்களும் நசிந்து, வேறு வேறு ஊர்களுக்கு நகர்ந்தனர். அதனாலேயே கடவுளின் இருப்பில் பதினைந்து வயதிலேயே கேள்விவந்துவிட்டது.

காதலர்களுக்கு எப்பொழுதும் ஒரு புகார் உண்டு. ஒரு இடத்தில் நிம்மதியாக உட்கார்ந்து பேச முடியலையே! இப்படி போறவன் வர்றவன் எல்லாம் உத்து உத்துப் பார்த்துட்டு போறான் என புகார் செய்வார்கள். அது போல நளினியும் அலுத்துக்கொள்கிறார். என்னைத் தேடி வருபவர்களில் பலர் பாலியல் ரீதியான ஆலோசனைக்கு வருபவர்கள் தான். அவர்களோடு உட்கார்ந்து பேசுவதற்கு ஒரு நல்ல இடம் இல்லையே! என்கிறார். ஆட்டோவில் போனால், ரூ.10க்கு 75 ரூ பில்லை போடுகிறார்கள். ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினால், ரூ.100க்கு ரூ. 600 கேட்கிறார்கள். சாப்பிட்டால், ஏகப்பட்ட பில்லை போடுகிறார்கள். சேச்சே! என்கிறார்.

இந்த பதிவில் பாலியல் தொழில் என வருமிடத்தில் எல்லாம் “தொழில்” என குறிப்பிட்டிருப்பேன். ஏனென்றால் இதை தொழில் என அங்கீகரிக்க முடியுமா? என்ற எனக்குள் எழுந்த கேள்வி தான். நளினியும் ஒரிடத்தில் அதைப் பற்றி எழுதுகிறார். இந்த நிலையை மாற்றுவது தானே சரி! ஆனால் அவர் அனுபவ வாதத்தில் இந்த பிரச்சனையை ஒழிக்கமுடியாது என்கிறார். அதுவரைக்கும் அதில் ஈடுபட்டவர்கள் வதைபட வேண்டுமா? சாகவேண்டுமா? என கோபமாய் கேட்கிறார். உண்மை தானே! இந்த முதலாளித்துவ சமூக அமைப்பில் வறுமையை ஒழிக்க முடியாது. குடும்பம் என்கிற நிறுவனம் சாதியாலும், மதத்தாலும், உடைமை சிந்தனையிலும் இன்னும் இறுக்கமாக இருக்கிறது. ஆகையால், குடும்பத்திலிருந்து வெளியேறுகிற ஆணோ, பெண்ணோ தனித்துவிடப்படுகிறார்கள். அவர்களுடைய குழந்தைகள் நிர்கதியில் விடப்படுகிறார்கள். சீனாவில் 1949க்கு பிறகு நடந்த புரட்சிக்கு பிறகு, நளினி மாதிரி இருந்தவர்களுக்கு எல்லாம் வேலைகள் தரப்பட்டன. அவர்கள் காதலித்தார்கள். கல்யாணம் முடித்தார்கள். அங்கு இருந்த நிலைமை மாறியதாக ஒரு நீண்ட கட்டுரை படித்தேன். (இப்பொழுது நிலைமை மாறியிருக்கும்)

மற்றபடி நளினி ஜமீலா அமைப்பு என்ற கூட்டுத்துவத்திற்குள் வந்த பிறகு, அவருடைய வாழ்க்கை மாறியிருக்கிறது. கண்ணோட்டம் மாறியிருக்கிறது. அவருடைய பெண்ணுக்கு அவர்களை புரிந்துகொண்ட ஒரு ஆட்டோ டிரைவர் வாழ்க்கை துணையாக கிடைத்திருக்கிறார். அவரைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியாக உதவுகிறார். சமீபத்தில் பாலியல் “தொழிலாளி”யினுடைய வாழ்க்கையைப் பற்றி எடுத்த ஒரு படத்திற்கு உடை வடிவமைப்பாளராக பணியாற்றி விருதும் வென்றியிருக்கிறார்.

மொழியாக்கம் பொறுத்தவரையில் குளச்சல் யூசூப் தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். எல்லாவற்றையும் தாண்டி கொஞ்சம் மலையாள வாடை அடிக்கிறது. அப்படித்தான் அடிக்கும் போல! கேரளா என்றால், மழை, பசுமை என ”கடவுளின் தேசம்” என்பார்கள். நளினியை போன்றவர்களும் அங்கு தான் வாழ்கிறார்கள்.

அனைவரும் படிக்கவேண்டிய வாழ்க்கை வரலாறு. படியுங்கள்.

பக்கங்கள் 184
வெளியீடு : காலச்சுவடு
தமிழ் மொழியாக்கம் : குளச்சல் யூசூப்

November 22, 2021

Ludo (2020) இந்தி Anthology Black Comedy Crime movie



ஆறு சிறு கதைகளை கோர்த்து ஒரு மாலையாக்கி இருக்கிறார்கள். எல்லோரும் உள்ளூர்காரர்களாக இருந்தால், அவ்வபொழுது குறுக்கிடுவார்கள் அல்லவா! அவ்வாறு ஒவ்வொர் வாழ்விலும் இன்னொருவர் குறுக்கிடுகிறார்கள்.


ஒரு ரவுடியின் வலதுகை. தான் விரும்பிய பெண்ணுடன் வாழ விரும்பி திருந்துகிறான். பழைய தவறுகளினால் ஏற்படும் சிக்கல்கள் அவனை அலைக்கழிக்கின்றன.

தன்னுடன் படிக்கும் ஒரு பெண்ணை ஆசை ஆசையாய் ஒருவன் காதலிக்கிறான். அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆன பிறகும் அதே காதலுடன் இருக்கிறான். என்ன உதவி வேண்டுமென்றாலும் தயங்காமல் செய்கிறான்.

இருவர் சந்தித்து டேட்டிங் செய்கிறார்கள். அவளுக்கு ஆடம்பரத்தின் மீது அத்தனை காதல். ஆகையால் பிரிகிறார்கள். அவர்கள் இணைந்த சுற்றி கொண்டிருந்த காலத்தில் ரகசியமாக எடுக்கப்பட்ட ஒரு காணொளி இணையத்தில் வைரலாக உலா வருகிறது. நான்கு நாட்களில் திருமணம். அதை உடனே கண்டுப்பிடித்து அழிக்கவேண்டும்.

பரமபதம் போல எல்லா கதாப்பாத்திரங்களும் வாழ்க்கை விளையாட்டில் விளையாடுகிறார்கள். கிடைத்த சிறு ஏணியிலோ, பெரிய ஏணியிலோ ஏறுகிறார்கள். திடீரென பாம்பு கொத்தி இறங்குகிறார்கள். இறுதியில் யாரெல்லாம் வெற்றி பெற்றார்கள். யார் தோற்றார்கள் என்பதை சுவாரசியமாய் சொல்லி முடிக்கிறார்கள்.

***

படத்தில் ஏகப்பட்ட பாத்திரங்கள். . சின்ன சின்ன கதாப்பாத்திரங்கள் கூட மனதில் நிற்பது பெரிய ஆச்சர்யம். அந்த ”குடும்ப” பெண்ணின் கணவர் கோபமாய் தன் மனைவியை அடித்துவிட்டு, ”20 லட்சம் கொடுங்கள். என் மனைவி சாட்சி சொல்வாள்” என கேட்பது எதிர்பார்க்காதது. உள்ளே இருந்து அதே மனைவி 40 லட்சம் கேளுங்கள் என்பது! இறுதியில் கிடைத்த பணத்துடன் புது காதலனுடன் ஓடுவது!

படத்தின் மைய இழையாய் ஓடுவது அன்பும், புரிதலும் தான். தன் மகளுக்காய் ஏங்கும் தந்தை. பெற்றோர்களின் அருகாமைக்காக ஏந்தும் அந்த சுட்டிக் குழந்தை. திருமணம் முடித்துப் போன தன் ”காதலிக்காக” என்ன வேண்டுமென்றாலும் செய்ய தயாராக இருக்கும் காதலன். பலான காணொளியை தேடும் பயணத்தில், புரிதலில் இணையும் காதல் ஜோடி. அந்த நர்சை விரும்பும் ரவுடி.

ராஜ்குமார், அபிசேக்பச்சன், பங்கஜ் திரிபாதி, சன்யா என படத்தில் நடித்த எல்லா கதாப்பாத்திரங்களுமே
அருமையாக
பொருந்தியிருக்கிறார்கள். தொழில்நுட்பம் சார்ந்தவர்களும் நன்றாக உழைத்திருக்கிறார்கள். இயக்குநர் அனுராக் பாசினுடைய மற்ற படங்களையும் பார்க்கவேண்டும் என தூண்டியுள்ளார்.

நெட்பிளிக்சில் தமிழ் டப்பிங்கிலும் கிடைக்கிறது. பாருங்கள்.

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாதவர்களை என்ன செய்வது?

 


திரைத்துறை குறித்த பதிவுகளை தொடர்ச்சியாக எழுதி வருபவர் ஒரு பதிவர். கொஞ்சம் மூத்தவர். அதற்கு தகுந்தபடி அவருடைய பதிவுகளும், பழைய நடிகர்களை புகழ்ந்து புகழ்ந்து எழுதிக்கொண்டிருப்பார். அதில் ஏதும் பிரச்சனையில்லை.


பிற்போக்கான விசயங்களையும் புகழ்ந்து எழுதும் பொழுது தான் சிக்கல். ஏதாவது விமர்சனம் செய்தால் போச்சு! விமர்சன விசயத்தில் சங்கி போல! உடனே புண்பட்டுவிடுவார். ”சூப்பர்”. ”அருமை” என எழுதும் பொழுது பெருமகிழ்ச்சி கொள்கிறார். அதே போல விமர்சனத்தை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக்கொள்ளும் பக்குவமில்லை. அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது அல்லவா!

அவருடைய தனிப்பட்ட டைம்லைனில் போய் நாம் எதுவும் கருத்து சொல்வதில்லை. ஒரே குழுவில் ஒன்றாக பயணிக்கும் பொழுது, அவருடைய பதிவுகளும் கண்ணில் படுகின்றன. முன்பு ஒரு முறை விமர்சனம் சொல்லி, மிகவும் புண்பட்டுவிட்டார். அதற்கு பிறகு அவருடைய பதிவுகளைப் பார்த்தாலும், கண்டுகொள்ளாமல் போய்விடுவேன்.

இன்று குழுவில் அவருடைய பதிவைப் பார்த்ததும், வேறு சிலர் அந்த பதிவில் விவாதித்து இருந்ததைப் பார்த்ததும், நானும் ஒரு பின்னூட்டத்தைப் போட்டேன். அவ்வளவு தான் புண்பட்டுவிட்டார். அந்தப் பதிவையே உடனே அழித்துவிட்டார். எதுவும் நடக்காதது போல புதிதாக அதே பதிவை பதிவிடுகிறார். இது என்ன மனநிலை?

எதற்கு எடுத்தாலும் வரலாறு வரலாறு பழைய நிகழ்வுகளை பேசுகிறவருக்கு, விவாத மரபும் தமிழ் மரபு தான். ”பொன்னியின் செல்வன்” நாவலில் கவனித்தீர்கள் என்றால், சிவனடியாராக இருப்பவரும், பெருமாள் அடியவராக இருப்பவரும் நேரில் சந்திக்கும் பொழுதெல்லாம், காரசாரமாய் விவாதித்துக்கொள்வார்கள். சமண சமய துறவிகளுடன் இந்துத்துவ ஆட்கள் தொடர்ச்சியாக விவாதித்து இருக்கிறார்கள். இப்பொழுது பட்டி மன்றம் என்பது என்ன? இரண்டு தரப்பு கருத்துக்களை முன்வைத்து ஒரு சரியான முடிவுக்கு வருவது தானே!

தான் நினைப்பது தான் ஆகச்சரி. யாரும் எதிர்க்கருத்து சொல்லக்கூடாது என நினைத்தால், பதிவர் தன்னுடைய நாட்குறிப்பில் எழுதவேண்டும். அதை ஒத்த சிந்தனை நண்பர்களுக்கு மட்டும் வாட்சப்பில் அனுப்பிவிட்டு கம்முன்னு இருந்துக்கனும்.

அறிவு வளர்ச்சியில் விவாதத்திற்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. அதை எல்லாம் சங்கி மனநிலை கொண்டவர்கள் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. மோடியினுடைய காணொளிகள் எல்லாம் மக்கள் அதிகம் Dislike செய்வதால், யூடியூப்காரனை மிரட்டி, Dislike பட்டனையே தூக்கப்போகிறார்கள் என சமீபத்தில் ஒரு செய்திப் படித்தேன்.

சங்கி தானும் சிந்திக்கமாட்டான். சுயமாக சிந்திப்பவர்களை பார்த்தாலும், மாற்று கருத்து கொண்டவர்களை பார்த்தாலும் கோவம் கோவமாக வரும். எதுக்கு ஒரு ஜீவனை சிரமப்படுத்தவேண்டும். ஆகையால், சம்பந்தப்பட்ட பதிவரை பிளாக் செய்திடலாம் என யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

நண்பர்கள் என்ன சொல்கிறீர்கள்?

- முகநூலில் இருந்து...!

November 19, 2021

The Finch (2021) Post – Apocalyptic science fiction drama


பூமியின் ஓசோன் மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டு, பூமி மிக மோசமாக பாதிக்கப்படுகிறது. ஒரு கைவிடப்பட்ட கிரகம் போல இருக்கிறது பூமி. மக்கள் பெரும்பாலோர் இறந்துவிடுகிறார்கள். மீதி இருப்பவர்களும் தங்கள் உயிரை தக்க வைப்பதற்காக வழிப்பறியில் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்.


நாயகன் ஒரு ரோபாட்டிக் என்ஜினியர் உயிர் தப்பித்து தன் ஆய்வுக்கூடத்தில் வாழ்கிறார். கிடைப்பதை வைத்துக்கொண்டு வாழ்ந்துவருகிறார். ஒரு நாய்க்குட்டியும் ஒரு குட்டி ரோபாட்டும் அவரோடு இருக்கிறது. அவருடைய உடல்நிலை வயோதிகத்தாலும், நிலவுகிற பிரச்சனையாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இருக்கிற வசதிகளைப் பயன்படுத்தி ஒரு ரோபோவை உருவாக்குகிறார். தன்னுடைய காலத்திற்கு பிறகு, நாயைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என அந்த ரோபாட்டிற்கான கட்டளைகளில் ஒன்றாக தருகிறார்.

இந்த இக்கட்டான நிலையில் ஒரு மோசமான புயல் வந்துகொண்டிருக்கிறது. அந்த இடத்தை விட்டு உடனடியாக நகரவேண்டும். நாயகன், அந்த குட்டி நாய், ஒரு சின்ன ரோபா, கொஞ்சம் சிந்திக்க கூடிய உயரமான பெரிய ரோபா அங்கிருந்து கிளம்புகிறார்கள். இவர்களுக்குள் நடக்கும் உரையாடலும், உணர்வுகளுமே மீதி கதை.
****

குறைவான காலம் தான் இருக்கிறது. நேற்று பிறந்து, இன்று நடப்பதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிற அந்த ரோபாட்டிற்கு பயிற்சி கொடுப்பது என்பது சவாலாக இருக்கிறது. அது எழுப்புகிற கேள்விகளும், செய்கிற சேட்டைகளும் சுவாரசியம். ஒரு மனிதன். ஒரு ரோபாட். இருவருக்குள்ளும் இருக்கும் இடைவெளி என்பது எவ்வளவு யோசித்தாலும் இடைவெளி பெரிதாகத்தான் இருக்கிறது.

மொத்தப் படத்தையும் நாயகன் Tom Hanks தாங்குகிறார். உடல் வாதையை, மக்கள் மனநிலையை வெளிப்படுத்தும் பொழுது, அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நல்ல படம். பாருங்கள். ஆப்பிள் டிவியில் இருப்பதாக இணையம் சொல்கிறது பாருங்கள்.

November 17, 2021

கடவுள் தொடங்கிய இடம் - அ.முத்துலிங்கம் நாவல்


ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்த நாவல் இது. இப்பொழுது புத்தகமாக தொகுக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது.


கதையை ஒரு பறவைப் பார்வை பார்த்தால்….

1990களில் இலங்கையின் யாழ்ப்பணத்து இளைஞன் ’இயக்கத்தில்’ சேர்ந்துவிடுவான் என்ற பயத்தில், பெற்றோர் அவனை நாடு ’கடத்த’ முடிவெடுக்கிறார்கள். அவனோடு அவனைப் போலவே வேறு வேறு காரணங்களுக்காக ஏஜெண்ட் மூலம் சிலர் இலங்கையிலிருந்து கிளம்புகிறார்கள். மாஸ்கோவை அடைந்து, உக்ரைன் சென்று, ஜெர்மன் போயி… எல்லை தாண்டும் பொழுது அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டு, மிதிப்பட்டு, சிறைப்பட்டு, செய்யாத வேலைகளை எல்லாம் செய்து, ஒரு வழியாக கனடாவை சேர்ந்தானா என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்.

அகதிகளின் வாழ்க்கை நாம் அறியாத வாழ்க்கை. அதனால், நாவல்களில் வருகிற எல்லா நிகழ்வுகளுமே புதிதாக இருக்கிறது. வந்து போகும் ஒவ்வொரு அகதி கதாப்பாத்திரமும் அவர்களுக்கு பின்னால் இருக்கும் ஒவ்வொரு கதையும் மனதை கனக்க செய்கிறது.

நாவலின் மைய இழை அகதிகளின் அவல வாழ்க்கை தான். அகதிகள் எதற்காக உருவாகிறார்கள் என யோசித்தால்… ஏகாதிபத்திய நாடுகளும், ஒவ்வொரு நாட்டை ஆளும், ஆளும் வர்க்கங்களும் தங்களுடைய சமூக, பொருளாதார, அரசியல் நலன்களுக்காக உருவாக்குகிற கோளாறுகள் தான் உள்நாட்டு பிரச்சனையிலிருந்து சர்வதேச பிரச்சனைகள் வரை வெடித்து கிளம்புகின்றன. இதன் விளைவாக கடுமையாக பாதிக்கப்படுவது பரந்துப்பட்ட பொதுமக்கள் தான். ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டின் பெரும்பாலான குடி மக்களே இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படும் பொழுது, ஒரு நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு அடைக்கலம் தேடி போகும் அகதிகளை இந்த நாடுகள் எப்படி நடத்தும்? மிக கேவலமாக தான் நடத்தும்.

தமிழ்நாட்டில் இருக்கும் ஈழ அகதிகளின் வாழ்க்கையை தொடர்ந்து கவனித்துவருபவர்களுக்கு இந்த துயரத்தை உணரமுடியும். ஆகையால் தான் ஈழ அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கவேண்டும் என கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

சர்வதேச நாடுகளில் சிலவற்றில் வலதுசாரிகள் அரசியல் அதிகாரத்திற்கு வந்திருப்பதை விட, இந்தியாவிலும் வந்திருக்கிறார்கள். ஆகையால், நாட்டின் பெரும்பாலான மக்களை எப்பொழுதும் பதட்டத்திலேயே வைத்திருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட மதத்தினரை உள்நாட்டிலேயே புதிய சட்டங்கள் வழியாக அகதிகளாக்க பார்க்கிறார்கள். இவர்கள் எப்படி அகதிகளை உரிய மரியாதையுடன் நடத்துவார்கள்? மக்களின் ஜனநாயகத்திற்கான தொடர்ச்சியான, விடாப்பிடியான போராட்டம் தான் இதற்கெல்லாம் தீர்வாக அமையமுடியும்.

மற்றபடி, நாவலின் வடிவத்தை கவனித்தோம் என்றால்…. வீரப்பனை தேடுகிறேன் என பழங்குடி மக்களை சிறப்பு போலீசு செய்த சித்திரவதையை ”சோளகர் தொட்டி” நாவல் வழியாக சமூக செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான பாலமுருகன் சிறப்பாக எழுதியிருப்பார். அந்த கதையை சமூகத்தின் பால் அக்கறை கொண்ட ஒரு எழுத்தாளர் எழுதியிருந்தால், நாவல் இன்னும் பல எல்லைகளை தொட்டிருக்கும் என ஒருத்தர் எழுதியிருந்தார்.

அது போல, இந்த அகதிகளின் கதையை வேறு ஒரு எழுத்தாளர் எழுதியிருந்தால் ”ஜெய்பீம்” போல பலருடைய கண்களை குளமாக்கியிருக்கும். ஆசிரியர் முத்துலிங்கம் எழுதியதால், அவருடைய அங்கதம் நம்மை பேலன்ஸ் செய்கிறது. “தம்பி என் முகத்தில் மேதாவிலாசம் தெரிகிறதா? என்றார் கனகலிங்கம். இவனுக்கு நான்கு நாட்கள் தாடி தான் தெரிந்தது”. அதே கனகலிங்கம் வள வளவென பேசுகிற ஆள். கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் கூடுதலாக பேசுகிற ஆள். அதனாலேயே அவர் அதிகாரிகளால் சிறைப்படுத்தப்படுவார் என எண்ணிக்கொண்டிருக்கும் பொழுது, குடித்து மட்டையாகி, ஏர்போர்ட் அதிகாரிகளை எளிதாய் கடந்து போன கதையை எழுதியதை படித்ததும் நெடு நாட்களுக்கு பிறகு இரவு ஒரு மணிக்கு நெடு நேரம் சிரித்தேன். மனுசன் பத்திரமாக போய் சேர்ந்துவிட்டார் என்ற நிம்மதியுடன் கூடிய சிரிப்பு அது.

அகதிகளின் வாழ்க்கையை எழுத சொல்லிவிட்டு, ”திரில், திகில் நாவல்” என ஆனந்தவிகடன் இதற்கு விளம்பரப்படுத்தியதெல்லாம் அநியாயம். அதுவே ஆசிரியருக்கு எழுதுவதில் சங்கடத்தை கொடுத்திருக்கும். அவருடைய எழுத்தில் யாழ்ப்பாணத்து தமிழ் கூடுதலாக எப்பொழுதும் வந்து போகும். அவருடைய தாய் மொழி அது தானே! இதில் தமிழக தமிழர்களுக்காக யாழ்ப்பாண தமிழை கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார்.

படத்தின் தலைப்பு கூட அத்தனை பொருத்தமில்லை. நாவலில் வருவதெல்லாம் துயரம். ஐந்து ஆண்டுகளாக சிக்கி, சின்னாபின்னாமாகி நாயகன் கனடா போய் சேரும் பொழுது, அங்கு “கடவுள் தோன்றினார்” என எழுதுவதெல்லாம் ரெம்ப ஓவர். இன்னொரு அர்த்ததத்தில் சொல்லவேண்டுமென்றால், கிண்டலின் உச்சம்.

மற்றபடி, அனைவரும் படிக்கவேண்டிய நாவல். படியுங்கள்.

November 14, 2021

இசை அல்லது இளையராஜா - பாடலாசிரியர் யுகபாரதி


இளையராஜாவைப் பற்றி ஒரு பாடலாசிரியரின் பார்வையில் தன் அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்துள்ளார். அவர் சொன்ன செய்திகளில் சில அறிந்தவையாக இருந்தாலும், சில குறிப்புகள் புதிதாக இருந்தன. ஆச்சர்யம் தந்தன.


இளையராஜாவிற்கு மொழி அறிவு அதிகம். அவரே வெண்பா வடிவில் பல நூல்கள் எழுதியிருக்கிறார். அதற்காக அவர் எழுதிய பத்து நூல்களின் பட்டியலும் தருகிறார். ஆகையால் தான் மெட்டுக்கேற்ற பாடல் வரிகளை எழுதும் பொழுது, பொருத்தமான வரிகள் இல்லையெனில் பாடலாசிரியர்களோடு முரண்பட்டிருக்கிறார் என்கிறார். அதற்கு சில பாடல்களையும், தன் அனுபவத்தையும் சொல்கிறார்.


ஒரு இசையமைப்பாளருக்கு மொழி, மக்கள், நிலப்பரப்பு குறித்த அறிவு அவசியம் என்கிறார். இல்லையெனில் அதற்கு நியாயம் செய்யமுடியாது. அது இளையராஜாவிற்கு இருந்ததால் தான் மக்களின் இதயம் தொட்டிருக்கிறார் என்கிறார். சரி தான்.


அதே போல எழுதிய பாடலுக்கு இசை என்பது ஒரு வரம்புக்குள் நின்றுவிடும். அதனாலேயே மெட்டுக்கு பாடல் இசைப்பது என்பதை தொடர்ந்து இளையராஜா செய்திருக்கிறார் என்கிறார். இதைப் படித்ததும், வேறு ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. எம்.எஸ்.வி ஆர்மோனியத்தில் மெட்டு சொல்ல, கண்ணதாசன் சரளமாக பாடல் சொல்வார் என சொல்வார்கள். இளையராஜா காலத்திற்கு பிறகு இப்படி பாடலாசிரியரோடு உட்கார்ந்து பணியாற்ற நேரமில்லாமல் போயிருக்கிறது. ராஜா போட்ட தான் போட்ட மெட்டை ஒரு கேசட்டில் பதிவு செய்து கொடுப்பார். அதற்கு பாடலாசிரியர்கள் எழுதி தரவேண்டும் என்பதாக நிலைமை மாறியிருக்கிறது. அதனாலேயே கண்ணாதாசனுடன் இணைந்து பணியாற்றுவது ராஜாவிற்கு மிகவும் குறைந்திருக்கிறது.. இதை திரைத்துறை சார்ந்த ஒருவர் பேட்டியில் இதைக் குறிப்பிட்டார்.


இராஜா எப்பொழுதுமே எளிய ரசிகனை எட்டக்கூடிய இசையை தந்திருக்கிறார். தன்னுடைய அபரிமிதமான இசை அறிவை எந்த இடத்திலும் உறுத்துகிறபடி காட்டியதில்லை. இசை நுட்பம் அறிந்துவர்கள் அறிந்துகொள்ள சாதுர்யமான சில இடங்களில் காட்டுவார் என்கிறார். சரிதான்.


ஒரு பாடல் வெளியீட்டு நிகழ்வில் “ஒரு நல்ல இயக்குநராக மிளிர வளரும் இயக்குநர்கள் இராஜா அவர்களுடன் பணியாற்றவேண்டும்” என மிஷ்கின் சொன்னார். அதையே நானும் சொல்கிறேன். “ஒரு நல்ல பாடலாசிரியராக நிலைபெற வேண்டுமென்றால் அவருடன் பணியாற்றவேண்டும்”. ஒவ்வொரு முறையும் அவருடன் பணியாற்றும் கற்றுக்கொள்கிறேன் என்கிறார்.


30 பக்கங்களில் நிறைய குறிப்புகளை எழுதியிருக்கிறார். அவரே சொல்வது போல இசை, மொழி, நிலப்பரப்பு, பாடும் முறை, பாடலை பாடுபவரின் உச்சரிப்பில் தென்படவேண்டிய நெளிவு சுழிவுகள் என இன்னும் பல தலைப்புகளில் எழுதவேண்டும் என்கிறார். தொடர்ந்து எழுதுங்கள் யுகபாரதி.

இரண்டு நோபல் பரிசு பெற்ற முதல் பெண் அறிவியலாளர் மேரி க்யூரி – சித்திரக்கதை

நோபல் பரிசின் வரலாற்றில் இரண்டுமுறை நோபல் பரிசு பெற்று அசத்தியிருக்கிறார். ஒருமுறை இயற்பியலிலும், மறுமுறை வேதியியலிலும் என்பது இன்னும் ஆச்சர்யம். ஒரு பறவை பார்வையில் மேரி க்யூரி அவர்களின் பிறப்பு முதல் கண்டுபிடிப்பு வரை இந்த சித்திரக்கதை விளக்குகிறது.



மேரி க்யூரி 1867ல் போலந்தில் பிறந்தார். மேரியின் பெற்றோர்கள் ஆசிரியர்கள். சிறப்பாக படித்து பள்ளிப்படிப்பை முடித்தார். நாம் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் இருந்தது போல, அப்பொழுது ஜார் மன்னனின் ஆட்சியதிகாரத்தில் இருந்த ரசியா ஆதிக்கத்தின் கீழ் போலந்து இருந்தது. ஆகையால் போலந்தில் மேற்கொண்டு படிக்க முடியாது என உணர்ந்து, மேற்படிப்புக்காக பாரிசு செல்கிறார்.


படிப்பை முடித்துவிட்டு, சோறு, தண்ணியை கூட கண்டுகொள்ளாமல் ஆய்வில் இறங்குகிறார். தன்னை போலவே ஒரு அறிவியலாளரை திருமணம் செய்துகொள்கிறார். 1903ல் முதல் இயற்பியலில் நோபல் பரிசு வேறு ஒருவருக்கும், இவருக்கும் தரப்பட்டுள்ளது. தன் ஆய்வை தொடர்ந்து செய்ததில் 1911ல் வேதியியலில் பங்களிப்பை செய்தற்காக நோபல் பரிசு பெற்றிருக்கிறார்.

பெற்றோருடைய வழியிலேயே ஆய்வு செய்த மகளுக்கும், மருமகனுக்கும் 1935ல் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. மேரி குடும்பத்தை ”நோபல்” குடும்பம் என தாரளமாக அழைக்கலாம். மேரி அவர்களுடைய கண்டுபிடிப்புக்கு அமெரிக்க நிறுவனம் ஒன்று காப்புரிமைக்காக விலை பேசியிருக்கிறது. எல்லா மக்களுக்கும் தன் கண்டுபிடிப்பு போய் சேரவேண்டும் என உறுதியாக இருந்திருக்கிறார். அதே போல தன் தேசத்தின் மீதான அன்பில் தன் கண்டுபிடிப்புக்கு போலந்து பெயரையே “பொலோனியம்” என பெயர் வைத்திருக்கிறார். துவக்க காலம் என்பதால், உரிய பாதுகாப்பு இல்லாமல் ஆய்வில் ஈடுபட்டதால், ரேடியத்தின் பாதிப்பு அதிகமாகி 66 வயதில் மரணமடைந்தார்.

அமெரிக்க அறிஞர் நோம் சோம்ஸ்கி “முகத்துக்கு பூசுகிற கிரீமை தயாரித்து, வித்து காசு சம்பாரிச்சுக்கிட்டு திரியறீங்க! முதல்ல கொரானாவிற்கு மருந்து கண்டுபிடிங்கப்பா” என பெரு முதலாளிகளை சாடினார். அம்பது லட்சத்திற்கு மேற்பட்ட மனித உயிர்களை உலகம் முழுவதும் கொரானாவும், அனைவருக்கும் மருத்துவம் தராத முதலாளித்துவமும் கொன்றிருக்கிறது. பரந்துபட்ட மக்களை நேசிக்கிற மேரி க்யூரிக்கள் தான் உலகத்திற்கு இப்பொழுது தேவை.

ஆங்கிலத்தில் வெளிவந்ததை தமிழில் மொழிபெயர்த்து தந்த குமரேசன் முருகானந்தம் அவர்களுக்கு நன்றி. இது போல பல அறிவியலாளர்கள் கதைகளை இளம் தலைமுறைக்கு உருவாக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

பக்கங்கள் : 25

November 12, 2021

Jungle Cruise (2021) Fantacy Adventure Movie


20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நகர்கிறது கதை. அமேசான் காடுகளின் உட்புற பகுதியில் எல்லா நோய்களையும் குணப்படுத்துகிற ஒரு மலர் இருப்பதாக ஒரு கதை நிலவுகிறது. அதை பலர் மறுக்கிறார்கள். எப்பொழுதும் போல சிலர் அதை நம்புகிறார்கள். நாயகி அதை கண்டுபிடித்தால், மக்களின் உயிரை காப்பாற்றலாம் என தேடிச்செல்கிறாள். உடன் தன் தம்பியையும் அழைத்து செல்கிறாள்.


சுற்றுலாவாசிகளை தன் கப்பலில் அமேசான் காடுகளின் வழியே அழைத்து சென்றுவருகிறார் நாயகன். சில ஜிம்மிக்ஸ் வேலைகள் எல்லாம் செய்து கூடுதலாக சம்பாதிக்கிறார். அந்த மருந்து கிடைத்தால், மொத்த உலகையும் ஆளலாம் என கணக்குப் போட்டு, ஒரு நவீன கப்பல், கருவிகளுடன் ஒரு ஜெர்மானிய தளபதியும் அங்கு வருகிறான்.

அந்த மலர் யாருக்கு கிடைத்தது, இறுதியில் என்ன ஆனது என்பதை அமேசான் காடுகள் வழியே கப்பல் பயணம், அருவி, பயங்கர பாம்புகள், சண்டைகள், சாசகம் என சொல்லியிருக்கிறார்கள்.
****

உலகெங்கும் இருக்கிற டிஸ்னியின் தீம் பார்க்குகளில் ஒரு பகுதியாக இருக்கும் ஜங்கிள் க்ரூஸை லைவ் ஆக்ஷன் படமாக்க வேண்டுமென்பது டிஸ்னியின் பல ஆண்டுக்கால ஆசை. அதை இதில் சாத்தியப்படுத்தியிருக்கிறார்களாம்.

வழக்கம் போல ராக் சாகசகாரனாக வருகிறார். சண்டை போடுகிறார். வில்லனிடமிருந்து நாயகியை காப்பாற்றுகிறார். இந்த ரொமான்ஸ் தான்.. இன்னும் கொஞ்சம் வந்திருக்கலாம். நாயகி Emily சுறுசுறுப்பாக சாசகங்கள் செய்கிறார். இவரை இதற்கு முன்பு Quiet Place படத்தில் பார்த்திருக்கிறேன். படத்தில் எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறைவது போலவே எனக்கு இருக்கிறது. நீங்கள் கண்டுபிடித்தால் சொல்லுங்கள்.

பெரிசா எதையும் எதிர்பார்க்காதீர்கள். வீட்டில் குழந்தைகள் இருந்தால், சேர்ந்து பாருங்கள். ஜாலியாக இருக்கும். ஹாட் ஸ்டாரில் தமிழிலேயே இருக்கிறது.

November 9, 2021

கதைகளின் வழியே ஜென் - கே. ஜி. ஜவர்லால்


ஜென் என்றால் என்ன? என விளக்கம் புத்தகத்தில் இல்லை. இணையத்தில் தேடிய பொழுது…

ஜென் என்றால் என்ன?"
ஒரு மாணவனிடமிருந்து கேள்வி எழுந்தது.
அவனைச் சற்று நேரம் ஆழ்ந்து பார்த்துவிட்டுச் சொன்னார்
"யாரும் அதை தெரியும் என்று சொன்னாலும் அல்லது தெரியாது என்று சொன்னாலும் அது பொய்யாகத்தான் இருக்கும்"
மாணவன் விடுவதாய் இல்லை
"அப்படியானால் சுவாமி. ஜென் என்னதான் சொல்லுகிறது?"
"zen teaches nothing. ஜென் சொல்லித்தருவது எதுவுமில்லை".
“அப்படியானால்…..” மாணவன் இழுத்தான்…
“சும்மாயிரு..” வெகு வேகமாய் குருவின் குரல். மாணவன் தெளிந்தான்.
****

இதுவும் இணையத்தில் தான் கிடைத்தது.

'ஜென் நிலை... ஜென் நிலை' எனச் சொல்கிறார்களே அப்படின்னா என்ன பாஸ்?

ஜப்பானைச் சேர்ந்த ஜென் துறவியான 'பொகூயூ' மற்றவர் ஞானிகளை விட ரொம்பவே வித்தியாசமானவர். இவருக்கு ஏராளமான சீடர்கள் உண்டு.
ஒருமுறை இவரை சந்திக்க வந்தவருக்கும் இவருக்கும் நடந்த உரையாடல் ஒன்றே போதும், ஜென் நிலை என்றால், என்ன என்பதை அழகாக விளக்கிவிடும். ஜென் தத்துவத்தை இதைவிட எளிமையாக எவரும் சொல்லவிட முடியாது என்பதைப் பறைச்சாற்றும் .
பொகூயூவுக்கும் அவரைச் சந்திக்க வந்தவருக்கும் நடந்த உரையாடலைப் பார்ப்போம்.
வந்தவர்: உங்கள் பயிற்சி என்ன?
பொகூயூ: பயிற்சி என்று எதுவும் இல்லை. பசிக்கும்போது உண்பேன். உறங்கத் தோன்றும்போது உறங்குவேன்.
வந்தவர்: நானும் இவற்றையெல்லாம் செய்கிறேன். நான் மட்டும் அல்ல. உலகிலுள்ள அனைவரும் இதைத்தான் செய்கிறார்கள். இதில் என்ன பயிற்சி இருக்கிறது?
பொகூயூ: நீங்கள் செய்யும் செயல் என்ன என்பதையே உணராமல் செயல்படுகிறீர்கள். மேலும் திட்டங்கள் போடுகிறீர்கள். என்ன சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமலே, வேறு ஒன்றை சிந்திக்கிறீர்கள். வேறு ஒன்றைப் பார்க்கிறீர்கள். வேறு ஒன்றைப் பற்றி பேசுகிறீர்கள். அத்துடன் உங்களை அறியாமலேயே சாப்பிட்டு முடிக்கிறீர்கள். அதாவது நீங்கள் சாப்பிடுவது உங்களுக்கே தெரியாமல் நடக்கிறது.
உறங்கும்போது பல எண்ணங்கள் குறுக்கிடுகின்றன. உருண்டு புரண்டு தூங்குகிறீர்கள். கனவு காணுகிறீர்கள், விழிக்கிறீர்கள், மீண்டும்உறங்குகிறீர்கள்.
நான் உண்ணும்போது உண்பதை மட்டும்தான் செய்கிறேன், உறங்கும் போது உறங்குவதை மட்டும்தான் செய்கிறேன். ஆனால், எல்லா செயல்களையும் முழுமையாகச் செய்கிறேன்.
(நன்றி : விகடன்)
****

ஆக ஜென்னைப் பற்றிய உங்களுக்கு நிச்சயம் புரிதல் கிடைத்திருக்காது என நம்புகிறேன். 🙂

ஆனால் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் 95 அத்தியாயங்களில் ஜென்னை கதைகளின் வழியே விளக்க முயற்சித்திருக்கிறார்.

அதில் எனக்குப் பிடித்த ஒரு கதையை உங்களுக்கு சுருக்கித் தருகிறேன்.

மனைவியின் ஆவி!

அவர்கள் அன்னியோன்யமான தம்பதி. சாகிற பொழுது “எனக்கு பின்னால், வேறு ஒருத்தியோடு வாழ்வதை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இன்னொரு திருமணம் செய்தால், ஆவியாய் வந்து தொல்லை கொடுப்பேன்” என்றாள்.

மூன்று மாதத்திற்கு பிறகு ஒருத்தியை காதலிக்க ஆரம்பித்தான். அன்றிரவே ஆவி வர ஆரம்பித்தது. எங்கு சந்தித்தார்கள்? என்ன பேசிக்கொண்டார்கள்? என்பதை புட்டு புட்டு வைத்தது

ஒரு ஜென் துறவியை பார்க்க ஆலோசனை தந்தார்கள். எல்லாவற்றையும் கேட்டார். “சாதுர்யமான ஆவி தான். கை நிறைய புளியங்கொட்டைகளை எடுத்துக்கொள். இன்றிரவு ஆவி வரும் பொழுது “இதில் எத்தனை புளியங்கொட்டைகள் இருக்கிறது என கேள். இதற்கு பதில் சொல்லாவிட்டால் இனி அந்த ஆவி வராது” என்றார்.

அன்றிரவும் ஆவி தவறாமல் வந்தது. ”ஜென் துறவியை எல்லாம் பார்க்கிறாய்?” என்றது நக்கலாய். “இவ்வளவு பேசுகிறாயே! எத்தனை புளியங்கொட்டைகள் இருக்கிறது என சொல்? என்றார். ஆவியிடமிருந்து பதிலில்லை. அதற்கு பிறகு வரவும் இல்லை. ஆவிகள் கணக்கில் வீக்கா?

அவனுக்கு தெரிந்திருந்த எல்லாம் ஆவிக்கும் தெரிந்திருக்கிறது. அவனுக்கு தெரியாதது ஆவிக்கும் தெரியவில்லை. அப்படி என்றால், ஆவி என்பது அவனுடைய மனப்பிராந்தி.
Iluusion.

(இப்படியே எல்லாக் கதைகளும் இருக்குமென்று நினைத்துவிடக்கூடாது)

இனி கீழே வரும் கருத்துக்கள் எல்லாம் புத்தகத்தில் ஆங்காங்கே சிதறி கிடந்தவை.

செய்யும் வேலையில் ஈடுபாடும், நிகழ்காலத்தில் வாழ்கிற பக்குவமும் இருந்தால் பொழுது போகவில்லை என்கிற பிரச்சனையே கிடையாது. பக். 72

எதுவும் சொந்தமில்லை என்ற பக்குவம் இருந்தால் தான் எந்த இடத்துக்கு போனாலும் சந்தோசமாக வாழலாம். பக். 85

விளம்பரம் இல்லாமல் நற்பணிகளை செய்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நோக்கத்துடன் இருக்கும் பொழுது என்ன அவப்பெயர், எத்தனை அவமானம் வந்தாலும், அவர்கள் பொருட்படுத்துவதில்லை. பக். 92

“கெட்ட சிந்தனையை விட்டுவிடுவது எளிதல்ல. நல்ல சிந்தனைகளைக் கொண்டு மனத்தை நிரப்பும் பொழுது கெட்டது வழிந்தோடிவிடுகிறது” பக். 108.

“விழிப்புணர்வு என்பது நம்மைச் சுற்றி நடப்பவைகள் குறித்து அறிந்திருத்தல். அதாவது நிகழ்காலத்தில் இருத்தல்” பக். 110

“ஞானம் பெறாதவன் போதிக்கிற பொழுது அரை குறை ஞானிகளை உண்டாக்குகிறான். ஒரு முட்டாளால் விளைகிற தீமைகளை விட ஒரு புத்திசாலியால் விளைகிற தீமைகளை விட தன்னை புத்திசாலி என்று கருதிக்கொள்ளும் முட்டாள்களால் தீமைகள் அதிகம். அவனுக்குத்தான் செய்வது தப்பு என்கிற சந்தேகம் கூட எழாது. பக். 114.

எந்த ஒன்றில் முழுமை அடைந்துவிட்டதாக நாம் நிறைவடையாமல் இருக்கிறோமோ அதில் விற்பன்னராக இருக்கலாம். பக். 163

your absence must be felt
பக். 166

ஜென் யாருக்கும் புரியாமல் போனதற்கு புத்தரும் ஒரு காரணமோ? (ஆசிரியர் ) பக். 168

போதித்து புரிய வைப்பவைகளை விட முன்னுதாரணமாக இருந்து காட்டுகிற விசயங்கள் வெகு சீக்கிரம் கற்றுக்கொள்ளப்படுகின்றன. மன்னிப்பை விட பெரிய தண்டனையில்லை! பக். 182

****
மற்றபடி, ஜென் குறித்த புதிர் கதைகள் படித்துள்ளேன். சில கவிதைகள் படித்துள்ளேன். முன்பு கலீல் ஜிப்ரான் எழுதிய ஒரு பதிவு என்னை மிகவும் ஈர்த்தது.

இது ஜென்னில் வருமா என தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

வெள்ளைக் காகிதம்
ஒன்று பனிக்கட்டி போலப்
பிரகாசமாய், பரிசுத்தமாய்
இருந்தது.

அது சொன்னது,
"நான் பரிசுத்தமானதாய்ப் படைக்கப்பட்டேன்..
இறுதி வரை பரிசுத்தமானதாகவே இருப்பேன்..
இருள் என் அருகில் வர
இறுதி வரை நான் அனுமதிக்க மாட்டேன்..
சுத்தமில்லாத எதுவும்
என்னைத் தொடவும் கூடச் சம்மதிக்க மாட்டேன்..!"

கறுப்பு மைபுட்டி ஒன்று
காகிதம் சொன்னதைக் கேட்டது..
தனக்குள் சிரித்துக் கொண்டது..
ஆனாலும் காகிதத்தை நெருங்க
அதற்குத் தைரியம் வரவில்லை..!

பல வண்ண வண்ண பென்சில்களும் கூட
வெள்ளைக் காகிதம் சொன்னதைக் கேட்டன..
ஆனால் அவையும்
அதை நெருங்கத் துணியவில்லை..!

இன்று வரை
வெள்ளைக் காகிதம்
தான் விரும்பியபடி
பரிசுத்தமானதாகவே இருக்கிறது..
ஆனால்,
வெறுமையாக இருக்கிறது..!!
***

சில கதைகள் ஈர்த்தன. சில கதைகள் யோசிக்க வைத்தன. ஆசிரியருக்கு பாராட்டுகள். எழுத்தின் மீதான ஆர்வத்தில் தான் செய்த மேலாளர் பதவியை துறந்திருக்கிறார். ஆச்சர்யம்.

கதைகளை புரிய வைப்பதற்காக ஆசிரியர் சொல்லும் பல கருத்துக்கள் மேலோட்டமாக இருந்தன. ஆசிரியர் இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம் என்று மட்டும் எனக்குப்பட்டது.

விலை : ரூ. 200
பக்கங்கள் : 200
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

#பின்குறிப்பு : ஜென் குறித்து வெறொரு சமயத்தில் விரிவாக விவாதிக்கலாம். இப்பொழுது வேறு ஒரு அவசரத்தில் இருக்கிறேன். நன்றி.