> குருத்து

August 24, 2026

PF பணத்தை பெறுவதில் (Claim) முக்கிய மாற்றங்கள் - 2026



புதிய Employees’ Provident Funds Scheme, 2026-ல் தொழிலாளர்களுக்கு மிகவும் முக்கியமான மாற்றங்களில் ஒன்று PF Claim / Withdrawal தொடர்பான விதிமுறைகள் ஆகும். குறிப்பாக, Partial Withdrawal, Final Settlement, Minimum Balance மற்றும் Claim filing ஆகியவற்றில் மாற்றங்கள் வந்துள்ளன.

 

1 ஜூலை 2026 முதல் புதிய Employees’ Provident Funds Scheme, 2026 நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் தொழிலாளர்கள் PF தொகையை Claim செய்வது தொடர்பாக சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 

1. PF பணத்தை முழுமையாக எடுத்துவிட முடியாது

வேலை செய்து கொண்டிருக்கும் காலத்தில்  பகுதி அளவில் எடுக்கும் பொழுது (Partial Withdrawal), பி.எப். கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை கட்டாயமாக மீதம் இருக்க வேண்டும்.

இந்த குறைந்தபட்ச தொகை (Minimum Balance), பணியாளர் மற்றும் நிறுவனம் செலுத்திய மொத்த தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகியவற்றின் அடிப்படையில் 25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதாவது, மொத்த PF தொகை – 25% Minimum Balance = தகுதியான Withdrawal தொகை என்ற அடிப்படையில் கணக்கிடப்படும்.

 

2. பகுதியாக எடுக்கும் (Partial Withdrawal) விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன

 

மருத்துவச் செலவு, கல்வி, திருமணம், வீடு போன்ற பல்வேறு காரணங்களுக்காக இருந்த பழைய பல்வேறு விதிகள் எளிமைப்படுத்தப்பட்டு, புதிய Scheme-ல் விரிவான வகைப்படுத்தல் கொண்டு வரப்பட்டுள்ளது.  சில வகையான பணம் பெறுவதற்கு 12 மாத காலம் வேலை செய்திருக்கவேண்டும் போன்ற தகுதி நிபந்தனைகள் உள்ளன.

 

3. வேலை இழந்தால் PF தொகையைப் பெறுவதிலும் மாற்றம்

 

வேலை இழந்த உடனேயே முழு பி.எப் தொகையையும் மொத்தமாக (Final Settlement) ஆக எடுத்துக்கொள்ளும் பழைய நடைமுறைக்கு பதிலாக, புதிய திட்டத்தில் நீண்ட காத்திருப்பு காலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

பொதுவாக, வேலை முடிவடைந்த பிறகு 12 மாதங்கள் வேலை இல்லாத நிலையில் இருந்த பின்னரே முழுமையாக (Final Settlement) பெறுவதற்கான தகுதி ஏற்படும்.

 

4.  பணம் பெறுவதற்கு இணைய வழியில் (Claim Online) தாக்கல் செய்யலாம்

 

பணியாளர்கள் வேலையை விட்டு வெளியேறும் போது,  பி.எப். உறுப்பினர் தளத்தில் தாக்கல் செய்யலாம். தொழில்நுட்ப காரணங்களால் இணைய வழியில் சமர்ப்பிக்க முடியாத நிலையில், சில சூழ்நிலைகளில் நேரடியாக விண்ணப்பத்தை (Physical Claim) நிறுவனத்தின் (Employer) மூலம் சமர்ப்பிக்கவும் திட்டம் அனுமதிக்கிறது.

 

5. பணியாளர் கவனிக்க வேண்டியது

PF Claim செய்வதற்கு முன்பு, Aadhaar → UAN → Bank Account → KYC → Nomination ஆகிய விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது மிகவும் அவசியம்.

 

இறுதியாக... புதிய பி.எப் விதிகளின் நோக்கம், தேவையான நேரத்தில் பணியாளர்களுக்கு பி.எப் தொகையைப் பெறும் வசதியை எளிமைப்படுத்துவதுடன், ஓய்வுக்கால சேமிப்பில் ஒரு பகுதி தொடர்ந்து பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்வதாகும்.


இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

எல்.ஐ.சி. முகவர்

📞 95512 91721


August 23, 2026

ஒரு விடுமுறை நாள்


விடுமுறை நாள் என்றால் நம்மில் பலருக்கும் ஒரே ஒரு ஆசைதான். இன்று எப்படியாவது எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும்!”

 

ஆனால் அதற்காகவே காலை 6 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து, 6.05 மணிக்கு கைபேசியை எடுத்துக்கொண்டு, மதியம் வரை WhatsApp, YouTube, Facebook என்று சுற்றிக்கொண்டிருந்தால்... அது ஓய்வு இல்லை. 

 

*வேலைக்குப் பதிலாக கைபேசியில் overtime!*

 

ஆரோக்கியமான மனநிலை கொண்ட ஒருவர் விடுமுறை நாளை கொஞ்சம் வித்தியாசமாகத்தான் கழிப்பார். முதலில், அலாரம் அடித்தால் உடனே எழுந்திருக்க மாட்டார். அலாரத்தையே பார்த்துவிட்டு,  *இன்று உங்களுக்கு வேலை இல்லை. நீங்கள் போய் தூங்குங்கள்...”*  என்று சொல்லிவிட்டு மறுபடியும் படுத்துக்கொள்வார்.  இதுதான் உண்மையான சுதந்திரம்!

 

நன்றாகத் தூங்கிவிட்டு, அவசரமில்லாமல் எழுந்து, ஒரு காபி அல்லது தேநீர் குடிப்பார். அன்று காலை உணவு சாப்பிடும்போது கூட, “அடுத்த கூட்டம் எப்போது?” என்று பார்க்க மாட்டார்.

 

மாறாக, *இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் போலிருக்கே...”* என்று யோசிப்பார். அதன்பிறகு சிறிது நடை.  உடற்பயிற்சி செய்ய முடிந்தால் செய்வார். முடியவில்லை என்றால், வீட்டுக்குள் இரண்டு சுற்று நடந்து, *இன்றைக்கு உடற்பயிற்சி முடிந்தது”* என்று மனதுக்குள் சான்றிதழ் கொடுத்துக்கொள்வார்.

 

பிறகு ஒரு புத்தகம். சில பக்கங்கள் படிப்பார். புரிந்தால் தொடர்ந்து படிப்பார். புரியவில்லை என்றால் புத்தகத்தை மூடிவிட்டு, *இதைப் பற்றி நாளை யோசிக்கலாம்...”* என்று வாழ்க்கையின் மிகப்பெரிய தத்துவ முடிவை எடுத்துவிடுவார்.

 

சில நேரம் நண்பர்களுடன் பேசுவார். குடும்பத்தினருடன் வெளியே செல்வார். எங்காவது சாப்பிடுவார். எதற்கும் அவசரப்பட மாட்டார். சில நேரங்களில் ஒன்றுமே செய்யாமல் இருப்பார். அதுவும் முக்கியம்தான்.

 

ஏனென்றால், நமது உடலுக்கு மட்டும் ஓய்வு தேவையில்லை. மூளைக்கும் ஓய்வு வேண்டும்.

 

ஆனால் இங்கேதான் நம்மிடம் ஒரு பெரிய குழப்பம். கைபேசியை இரண்டு மணி நேரம் பார்த்துவிட்டு, இன்று ரொம்ப ரிலாக்சாக இருந்தேன்!” என்று நினைத்துக்கொள்கிறோம்.

 

உண்மையில் மூளை இரண்டு மணி நேரம் வேலை செய்துகொண்டுதான் இருந்திருக்கிறது. ஒரு வீடியோ. அதற்குப் பிறகு இன்னொரு வீடியோ. அதற்குப் பிறகு யாரோ போட்ட பதிவு.  அதற்குப் பிறகு யாரோ போட்ட புகைப்படம். அதற்குப் பிறகு நமக்குத் தெரியாத ஒருவர் என்ன சாப்பிட்டார் என்பதையும் தெரிந்துகொள்கிறோம்! இது நிச்சயம் ஓய்வு இல்லை.

 

*மூளைக்கு வேறு துறையில் வேலை கொடுத்திருக்கிறோம். அவ்வளவுதான்!*

 

ஆரோக்கியமான வாழ்க்கை என்றால் தினமும் productive ஆக இருப்பது மட்டும் அல்ல. சில நாட்களில் productive ஆக இருக்க வேண்டும். சில நாட்களில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். சில நேரங்களில் பயனற்ற விஷயங்களையும் செய்ய வேண்டும்.

 

ஒரு மாலை சும்மா உட்கார்ந்து தேநீர் குடிப்பது கூட வாழ்க்கையின் ஒரு பகுதி. ஒரு நண்பருடன் காரணமே இல்லாமல் ஒரு மணி நேரம் பேசுவதும் வாழ்க்கையின் ஒரு பகுதி.  ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருப்பதும் வாழ்க்கையின் ஒரு பகுதி.

 

*எல்லாவற்றுக்கும் பயன் இருக்க வேண்டும் என்று நினைத்தால், வாழ்க்கையே ஒரு கணக்குப் புத்தகமாகிவிடும்.*

 

விடுமுறை நாள் என்பது அடுத்த வாரத்திற்கான வேலைகளைத் திட்டமிடும் நாள் மட்டும் அல்ல.

 

*நாம் ஏன் இவ்வளவு வேலை செய்கிறோம் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளும் நாளும் கூட.*

 

வேலை செய்வதற்காக வாழ்க்கை இல்லை. வாழ்க்கையை நன்றாக வாழ்வதற்காகத்தான் வேலை. அதனால் ஒரு நல்ல விடுமுறை நாளின் முடிவில், “இன்று என்ன சாதித்தேன்?” என்று கேட்பதற்குப் பதிலாக,  *இன்று நன்றாக இருந்ததா?”* என்று கேட்டுப் பாருங்கள். பதில்ஆம்என்றால்... அந்த நாளை சரியாகத்தான் வாழ்ந்திருக்கிறோம். இதுதான் *Rytham of Life.*

 

வேகம் வேண்டும். வேலையும் வேண்டும். பொறுப்பும் வேண்டும். ஆனால்...

*சில நேரங்களில் வாழ்க்கை நம்மைத் துரத்தாமல், நாமே வாழ்க்கையை ரசித்துக்கொண்டும் இருக்க வேண்டும்!*

 

-          இரா. முனியசாமி

 

*Rytham of life*

*வாழ்க்கையின்_தாளம்*