> குருத்து

May 5, 2026

விசில் சத்தம்


நேற்று வழக்கமாய் செல்லும் பகுதி டிபன்கடைக்கு சென்ற பொழுது, அந்த கடையை நடத்தும் அந்த அம்மாவிற்கு வயது 50க்கும் மேல். ஊரில் இருந்து அவருடைய அம்மா அழைத்து, ”விஜயை உன் தம்பியை நினைச்சு ஓட்டு போடும்மா!” என பரிந்துரை செய்தார்களாம்.


ஒரு நிறுவனத்தின் லிப்டில் போய் கொண்டிருந்த பொழுது, துடைத்து பெருக்கும் அந்த அம்மாவிற்கு 60 வயதிருக்கும். யாருக்கு ஓட்டு போட்டீங்க! என கேட்டால், ”விசில்” என்றார். ”ஏன்” என கேட்டதற்கு, நான் எப்பொழுதும் உதய சூரியனுக்கு தான் போடுவேன். நிறுவனத்தின் நடுத்தர வயது பெண் முதலாளி விசிலுக்கு வாக்களிக்க சொன்னாராம். அன்று மாலை ஸ்டாலின் தோற்று போன செய்தி கேட்டு மிகவும் வருத்தப்பட்டார்.


அந்த நிறுவனத்தின் நிர்வாகி, 50 வயது கடந்தவர், தேர்தல் முடிவுகள் இனி நடக்க இருக்கும் விளைவுகள் என பேசியே களைத்துப்போனார். அவர் வீட்டில் மொத்தம் நான்கு பேர். இவரும் இவருடைய கணவரும் உதயசூரியனுக்கு வாக்களித்திருக்கிறார்கள். பிள்ளைகள் இருவரும் விசிலுக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். எங்கள் குடும்பத்தில் (பங்காளி குடும்பங்களைச் சேர்த்தால்)  20 வாக்கு சார். பெரும்பாலும் விசிலுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றார்.


திராவிட கட்சிகள் செய்யும் ஊழல், அவர்களுடைய குறைபாடுகள், மாற்று வேண்டும் என மாற்றி குத்திவிட்டார்கள். அவசரகதியான இந்த மாற்றத்தால் உள்ள இந்தியாவின் அரசியல் நிலை, தமிழ்நாட்டின் நிலை இன்னும் கவலைக்குள்ளாகிவிட்டது என நிச்சயமாய் சொல்லலாம். இதன் எதிரொலிப்புகள் சமூகத்தில் நீண்ட காலத்திற்கு ஒலிக்கும்.


நேற்று மாலை தெருவில் குடியிருக்கும் ஒரு வீட்டில் இருந்து தொடர்ந்து இரண்டு இள வயது பெண்கள் விசிலை வைத்து அடித்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் அமைதியாகி விடுவார்கள் என நினைத்தால், விடவேயில்லையாம். போய் சொன்னாலும் கேட்கவில்லை. அருகில் வயதானவர்கள் இருப்பார்கள். குழந்தைகள் தூங்கிக்கொண்டு இருப்பார்கள். எதைப் பற்றிய கவலையும், அக்கறையும் இல்லமல், சொல்லி வந்த பிறகும் நெடுநேரம் விசில் அடித்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். இந்த விசில் சத்தம் (Noise) தொடர்ந்து கேட்க போகிறது.


நேற்றிரவு வீட்டுக்கு போனதும் எப்பொழுதும் 15, 20 நிமிடத்தில் பேசிவிட்டு தூங்கப் போய்விடுவோம். மகள் இலக்கியா இரண்டு மணி நேரம் தேர்தல் முடிவுகள் குறித்த கவலைகளைப பகிர்ந்துகொண்டாள். தன் நண்பர்களின் மனநிலை குறித்து, இன்று அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தைகள் குறித்து, இனி நாம் என்ன செய்யவேண்டும் என்பதை குறித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.


மக்களின் அரசியல் விழிப்புணர்வு, பண்பாட்டு உணர்வு எந்த அளவிற்கு இருக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரி தான் தலைவர்கள் கிடைப்பார்கள் என்பதில் முழு உடன்பாடு. (இப்பொழுது விஜய் ஜெயித்ததால், இதைச் சொல்லவில்லை. ) நாம் மக்கள் இடத்தில் தொடர்ந்து செயல்படுவது அவசியம். வேறு ஏதும் குறுக்கு வழிகள் இல்லை.

May 3, 2026

Big bad wolves (2013) – இஸ்ரேலிய திரைப்படம் Horror Thriller movie

 


பள்ளி செல்லும் மூன்று சிறுமிகள் மூவர் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தீடீரென ஒரு சிறுமி காணாமல் போகிறாள். தலைவெட்டப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்டு உடல் மட்டும் ஓரிடத்தில் கிடைக்கிறது.   யூதர்களை பொறுத்தவரையில் முறையாக முழுமையாக உடல் அடக்கம் செய்யப்படவேண்டும். இல்லையெனில் அதை பெரிய சிக்கலாக கருதுகிறார்கள்.

 

ஒரு அதிகாரி ஒரு ஆண் ஆசிரியரை   சந்தேகித்து போலீசு தன் ஆட்களை இருவரை வைத்து அடித்து உதைத்து “உண்மையை” கக்க வைக்க முயற்சி செய்கிறார்.  ஆனால், அந்த காட்சிகள் மக்கள் மத்தியில் வைரலாகிறது.

 

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு வேலை பறிபோகிறது. ஆனால் அந்த ஆசிரியரை பள்ளியில் மாணவர்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். அவருடைய வேலையும் சிக்கலாகிறது.

 

வேலை இழந்த அதிகாரி அந்த ஆசிரியரை கடத்தி வந்து ”உண்மையை” வரவழைத்து வேலையை காப்பாற்றிக்கொள்ளலாம் என திட்டமிடுகிறார். அதே வேளையில் அந்த பெண்ணின் அப்பா அந்த ஆசிரியர் மீது கொலைவெறியோடு சுற்றிக்கொண்டிருக்கிறார்.

 

அதற்கு பிறகு நடப்பதெல்லாம் களேபரம் தான்.

****

 


படத்தின் இறுதியில் எதையும் பளிச்சென சொல்லாமல், பார்வையாளர்களே சிந்திக்கட்டும் என இயக்குநர் விட்டுவிடுகிறார்.

 

எந்த ஆதாரங்களின் அடிப்படையில் அந்த போலீசு அந்த ஆசிரியரை சந்தேகிக்கிறது என்பதை கடைசி வரை சொல்லமாட்டார்கள். அந்த ஆசிரியரும் கடைசி வரை தான் குற்றம் செய்யவில்லை என சொல்லிக்கொண்டே இருப்பார்.

 

ஆதாரங்களின் அடிப்படையில் முறையாக சட்ட விசாரணை நடைபெறாமல், கொலைவெறியோடு முன்முடிவோடு “விசாரணை” செய்வது எவ்வளவு பெரிய கொடூரம் என்பதைத் தான் படம் சொல்கிறது.

 

படத்தில் குதிரையில் ஒருவர் சுற்றிக்கொண்டிருப்பார்.  ஓரிடத்தில் கேட்பார். அரேபியன் என்றாலே ஏன் கொலை செய்ய போகிறவர் என்றே பார்க்கிறீர்கள்? என்பார். அப்பொழுது தான் இது இசுரேலிய படம் என்பது நினைவுக்கு வருகிறது.

 

இந்தப் படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. இரண்டு இயக்குநர்கள் எழுதி, இயக்கியுள்ளனர்.

 

எந்த ஓடிடியிலும் இல்லை. யூடியூப்பில் இருக்கிறது. அதன் சப்டைட்டில் செட்டிங்க்ஸ்ல் கொஞ்சம் மாற்றினால் தமிழிலேயே கிடைக்கிறது. பாருங்கள்.

April 30, 2026

மே நாள் – பயத்தை உடைக்கும் நடை



அந்த நாள்
காலை மட்டும் பிறக்கவில்லை
ஒரு சிந்தனை பிறந்தது

 

மூடப்பட்ட கதவுகளுக்குள்
சுருண்டு கிடந்த பயம்
வெளியே வந்தது
மனிதர்களின் காலடியில் நசிந்தது.

 

தொழிற்சாலைகளின் புகை
இன்று வானத்தில் ஏறவில்லை
மாறாக
மனங்களில் ஏறிய கோபம்
மேகமாக திரண்டது

 

சாலைகளில்
ஒரு கூட்டம் நகரவில்லை
நெஞ்சங்கள் நகர்ந்தன
நாளையை நோக்கி

 

நாம் வேலைக்காரர்கள் அல்ல
நாம் மனிதர்கள்!”
என்ற குரல்
ஒரு வாயில் இருந்து இல்லை
நூறு இதயங்களில் இருந்து வெடித்தது

 

கைகளில் உயர்ந்த கொடிகள்
காற்றை மட்டும் வெட்டவில்லை
அடக்குமுறையின் அமைதியை வெட்டின

 

ஒவ்வொரு அடியும்
அதிகாரத்திற்கு எதிரான சாட்சியம்
ஒவ்வொரு முழக்கமும்
நீண்ட மௌனத்திற்கு முடிவு

 

அம்மா நின்றாள்
அவள் கண்களில் பயம் இருந்தது
ஆனால்
அதை விட பெரியது
புரிதல்

 

தன் மகன் நடப்பதைப் பார்த்தாள்
ஆனால்
அவள் உணர்ந்தது
ஒரு தலைமுறை எழுந்ததை

 

அந்த நடை
சாதாரண பாதை இல்லை
வரலாறு திசை மாறும் வழி

 

போலீஸின் கண்ணோட்டம்
பயத்தை விதைக்க முயன்றது
ஆனால்
மக்களின் பார்வை
அதை மிதித்தது

 

அடி வாங்கிய உடல்கள்
தாழவில்லை
மாறாக
உயர்ந்து நின்றன

 

இரத்தம் சிந்திய இடம்
வலி மட்டுமில்லை
விதை போல்
எதிர்ப்பை விதைத்தது

 

அன்று
அவர்கள் வென்றார்களா?
அல்ல

 

ஆனால்
அவர்கள் பயத்தை இழந்தார்கள்

 

அது போதும்
ஏனெனில்
பயம் இழந்த மனிதனை
எந்த சக்தியும் அடிமையாக்க முடியாது

 

சூரியன் மறைந்தபோது
ஒளி குறையவில்லை
மாறாக
ஒவ்வொரு உள்ளத்திலும்
ஒரு புதிய விடியல் ஏறியது

 

-          ”தாய்” நாவலில் வரும் மே நாள் நினைவுகளை கொண்டு எழுதப்பட்டது.