> குருத்து

July 4, 2024

இந்த உலகம் எப்போது மாறும்? - சாம்ஸ்கி


ஒரு நல்ல காபி அருந்தினால், ஒரு நல்ல புத்தகம் வாங்கினால், ஒரு நல்ல சட்டை அணிந்தால், பூங்காவில் சற்று நேரம் நிம்மதியாக நடந்தால், உட்கார்ந்து ஒரு நாலு வரி எழுதினால் மனம் உடனே சோர்ந்துவிடுகிறது. நான் என்ன தவறு செய்தேன்? எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது? நான் என்ன செய்தால் நிலைமை மாறும்?


ஒன்றுமே புரியவில்லையே சாம்ஸ்கி! இவை எல்லாம் நல்ல விஷயங்கள்தானே? இவற்றை எல்லாம் செய்தால் மனம் மகிழ்ச்சிதானே அடைய வேண்டும்? உங்களுக்கு மட்டும் ஏன் சோர்வு ஏற்படுகிறது? சம்பந்தம் இல்லாமல் ஏன் என்னென்னவோ யோசிக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். எனக்கு என்னவோ எல்லாவற்றுக்கும் சம்பந்தம் இருப்பதாகவே தோன்றுகிறது.


அமெரிக்கா எனும் செழிப்பான நாட்டில் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என் வீதி பளபளப்பானது. ஒரு நாளைக்கு நான்கு முறை துடைத்துத் தேய்த்துச் சுத்தப்படுத்துவார்கள். மைதானம்போல் கடைகள் விரிந்திருக்கும். அங்கே இல்லாததே இல்லை. என் வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளிக்கூடத்தைப் பார்த்தால் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல் இருக்கும். அவ்வளவு ஒழுங்கு! ஒரு வீட்டில் ஐந்து பேர் இருந்தால் குறைந்தது ஐந்து கார்களாவது அவர்களிடம் இருக்கும்.


குழாயைத் திருப்பினால் சுத்தமான தண்ணீர் பெருகும். நல்ல பழங்கள், நல்ல காய்கறிகள், நல்ல பால், நல்ல உணவு வகைகள் என்று விரும்பும் அனைத்தும் கிடைக்கும். எங்கள் பூங்காக்கள் அழகானவை. எங்கள் வீடுகள் நேர்த்தியானவை. எங்கள் தோட்டங்கள் அற்புதமானவை. எங்கள் குழந்தைகள் விரும்பும் அனைத்தையும் நாங்கள் வாங்கிக் கொட்டுகிறோம். அவர்களுக்குத் தேவைப்படும் எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறோம். எவ்வளவு விலை உயர்ந்த விளையாட்டுப் பொருள் கேட்டாலும் இதோ என்று வாங்கி வந்து கொடுத்துவிடுவோம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எங்களுக்கு ஒரு விஷயம் பிடித்திருக்கிறது என்றால் தயங்காமல் வாங்கிவிடுவோம். அதன் விலை என்ன, இது எவ்வளவு என்றெல்லாம் யோசிக்கவே மாட்டோம்.


வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் உல்லாசமாகவும் உற்சாகமாகவும் வாழ வேண்டும். எப்போதும் இன்பமாகவும் சுகமாகவும் இருக்க வேண்டும். இதுதான் இங்குள்ள ஒவ்வொருவரின் கனவு. அந்தக் கனவைத் தேடித்தான் இங்கே ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.


அந்தக் கனவுதான் என்னைச் சோர்வில் தள்ளுகிறது. அந்தக் கனவுதான் என்னை உறங்கவிடாமல் செய்கிறது. நம் வானில் எவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கின்றவோ அதைக் காட்டிலும் அதிகமான மக்கள் இருளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். கறுப்புப் காபி அருந்தலாமா அல்லது பழச்சாறா என்று இங்கே நாம் அமர்ந்து விவாதித்துக்கொண்டிருக்கிறோம். கையில் இருப்பதை இப்போதே சாப்பிட்டுத் தீர்த்துவிட்டால் அடுத்த வேளைக்கு என்ன செய்வது என்று உலகம் முழுக்க ஒரு பெரும் கூட்டம் கவலையோடு இருக்கிறது. நான்கு பேர் உணவை ஒருவரே சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒரு தட்டின் முன்னால் ஒரு முழுக் குடும்பமும் உட்கார்ந்து கொண்டிருக்கிறது.


அழகிய பூ வேலைப்பாடுகள் கொண்ட ஒரு பெரிய பீங்கான் கோப்பை என் மேஜையில் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. அதில் நிறைந்திருக்கும் காபியின் நறுமணம் அறை முழுக்கப் பரவி இருக்கிறது. நான் வாழும் இதே உலகில் குழந்தைகள் நாள் முழுக்கக் குப்பைக்கூளங்களைக் கிளறி, பை பையாக பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சம்பாதிக்கும் காசைவிட நான் சில நிமிடங்களில் அருந்தி முடிக்கப்போகும் காபியின் விலை பல மடங்கு அதிகம். என் வீட்டு நூலகத்தில் இருக்கும் ஒரு புத்தகத்தின் விலையில் பத்துக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க முடியும்.


இந்த நொடி பல நாடுகளில் போர் நடந்துகொண்டிருக்கிறது. பல வீடுகள் சிதறி விழுந்துகொண்டிருக்கின்றன. நானோ அமைதியான ஒரு நாட்டில் அமர்ந்து எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறேன். போர் எப்படி அவர்களைப் பாதிக்கிறதோ அதேபோல் அமைதி என்னைப் பாதிக்கிறது. என் மேஜையில் உள்ள காபியும் பழங்களும் பாலும் இறைச்சியும் என்னை நோக்கி ஆயிரம் கேள்விகளை வீசுகின்றன. காற்றோட்டமான என் வீட்டைக் கண்டு, அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் என் ஆடைகளைக் கண்டு, தூசு படாத என் புத்தகங்களைக் கண்டு, சுத்தமான என் பூங்காவைக் கண்டு, பளபளப்பான வீதிகளைக் கண்டு, விலை உயர்ந்த கார்களைக் கண்டு நான் தலைகுனிந்து நிற்கிறேன்.


உலகின் பெரும்பகுதி உடைந்துபோய் இருக்கும்போது எனக்கு அருகில் இருக்கும் சுத்தத்தை எப்படி என்னால் கொண்டாட முடியும்? என் காபியின் நறுமணத்தை எப்படி என்னால் ரசிக்க முடியும்? என் அமைதியான, அழகான, வசதியான வாழ்வை எப்படி என்னால் சகித்துக்கொள்ள முடியும்? என் உலகின் கால்களில் கனமான சங்கிலிகள் சிக்கி இருக்கும்போது நான் மட்டும் எப்படிச் சுதந்திரமாக நடைபோட முடியும்? என் உலகம் துன்பத்தில் இருந்து மீளும்வரை எனக்கு இன்பம் இல்லை. நிம்மதி இல்லை. நிறைவு இல்லை.


என்னிடம் இருக்கும் ஒரே வளம் சிந்தனை. அதை நான் என் உலகுக்கு வழங்குகிறேன். அது மட்டுமே முடியும் என்னால். எனவே, அதைச் செய்கிறேன். எனது உலகம் தன் கவலைகளைக் கைவிடும்போது நானும் என் கவலைகளில் இருந்து வெளியே வருவேன். அப்போது என் காபியை ரசித்துப்  பருகுவேன்.


- மருதன்


(தேன்மிட்டாய், மாயாபஜார், இந்து தமிழ் திசை)

June 27, 2024

The last stop in Yuma county (2023) திரில்லர் படம்

 


முன்ன ஒரு காலத்தில… கதை. அந்த நெடுஞ்சாலையில் ஒரு கேஸ் நிலையம். அருகே ஒரு உணவகம்.


சமையல் கத்தி விற்பவர் தன் மகளின் பிறந்தநாளை கொண்டாட போய்கொண்டிருக்கிறார். நிலைய பொறுப்பாளர் கேஸ் தீர்ந்துப் போனதால், ”இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடும்! உணவகத்தில் காத்திருங்கள்!” என்கிறார்.

போலிஸ் அதிகாரியான ஷெரீப்பின் மனைவி தான் அந்த உணவகத்தை நடத்திவருகிறார். கத்தி விற்பவர் உள்ளே அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். வங்கியில் இருந்து சுடச்சுட கட்டுக்கட்டாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு, அவர்களும் அந்த உணவகத்தில் நுழைகிறார்கள்.

காலையிலேயே வங்கி கொள்ளை செய்தி, காட்டுத்தீயாய் பரவிவிட்டதால், கத்திக்காரரும், அந்த அம்மாவும் பேசிப் புரிந்துகொண்டு, தன் கணவனான போலீசிடம் சொல்லலாம் என போன் செய்தால், கொள்ளைக்காரன் சுதாரித்து போன் வயரை அறுத்துவிடுகிறான்.

”மரியாதையா பொழப்ப பாரு!” என மிரட்டுகிறான். கேஸ் வர இன்னும் தாமதமாகிறது, ஒரு வயதான தம்பதி அங்கு வருகிறார்கள். ஒரு இளஞ்ஜோடி அங்கு வருகிறார்கள். இன்னும் ஒருவர் அங்கு வருகிறார்.

நிலைமை பதட்டமாகிறது. கத்திக்காரர், உணவக முதலாளி இருவரிடம் மட்டும் துப்பாக்கி இல்லை. மற்ற எல்லோருமே விதவிதமாய் துப்பாக்கிச் சனியனை வைத்திருக்கிறார்கள். பிறகு என்ன ஆனது என்பதை, பதட்டமாய் சொல்லியிருக்கிறார்கள்.
****


படத்தின் துவக்கத்தில் ஒரு குருவி அங்கு காத்திருக்கும். படத்தின் முடிவிலேயேயும் ஒரு குருவி நடக்கிற எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கும்.

ஒரு உணவகம். அதன் சுற்றுப்புறம் மட்டும் தான் கதை. கதையில் நிறைய டிவிஸ்டுகள் இல்லை. அங்கு புழங்கும் மனிதர்களின் மனநிலை தான் கதை.

எனக்கு ஆச்சர்யம். பெரும்பாலோர் கையில் துப்பாக்கி எப்படி? அரசு என்ற உருவாக்கத்தின் துவக்கமே, மக்களிடத்தில் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்து, தான் மட்டும் ஆயுதங்களை வைத்திருந்தது தான். வரி, வசூல் என மக்களை நசுக்கும் பொழுது, கோபப்பட்டு சுட்டுவிட்டால் என்ன செய்வது? என்ற பயம் தான்.

சமூகம் ஏற்றத் தாழ்வான சமுதாயமாய் இருக்கும் பொழுது, சொத்து வைத்திருக்கும் நிலப்பண்ணையார்கள், பிறகு முதலாளிகள் என எல்லோருமே அரசு அனுமதியுடன் துப்பாக்கி வைத்திருந்தார்கள். இன்னும் வைத்திருக்கிறார்கள். சென்னையிலேயே நிறைய பேர் அப்படி துப்பாக்கி வாங்கி வைத்திருக்கிறார்கள் தான். குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை பதிவை புதுப்பித்துக்கொள்ளவேண்டும். சமீபத்தில் நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ் விமான நிலையத்தில் துப்பாக்கி, குண்டுகள் வைத்திருந்ததாய் செய்தியில் வந்தார். பிறகு அனுமதி வாங்கித்தான் வைத்திருக்கிறார் என முடித்துக்கொண்டார்கள்.

அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள், அப்பப்ப மண்டை குழம்பி பள்ளியில், பொது இடங்களில் பலரை சுட்டுக்கொன்றுவிடுகிறார்கள். உலகத்திலேயே அதிக ஆயுதங்களை வைத்துக்கொண்டு உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது அமெரிக்கா.

ஏற்ற தாழ்வற்ற சமூகம் தான் ஆயுதங்களே தேவையில்லாத சமூகம். அதை நோக்கி மனித சமூகம் நகர்வது பற்றி சிந்திப்பது தான் சரியானது.


90 நிமிடங்கள். சின்னப் படம். சில பாத்திரங்கள் தான். இதில் வில்லன் பாத்திரங்களில் மூத்தவராக வரக்கூடியவர் புத்திசாலி. நடிப்பும் அருமை. அந்தப் படத்தை எடுத்தவரின் நிதானம் ஆச்சர்யமூட்டக்கூடியதாக இருந்தது.

இப்போதைக்கு எந்த ஓடிடியிலும் இல்லை என இணையம் சொல்கிறது. வேறு வழிகளில் முயலுங்கள்.

June 21, 2024

சக்தி, உமா மகள் அறிவுமதி திருமணம் - வாழ்த்துகள்!

 


இன்று காலையில் இரமேஷ்குமார் சார், மணிமேகலை அக்கா அவர்களுடன் காலையில் பாண்டிச்சேரி விரைவு ரயிலில் சென்று திருமணத்தில் நானும் கலந்துகொண்டேன்.  நீண்ட வருடங்களுக்கு பிறகு காலை வேளையில் ரயிலில் பயணம் நன்றாக இருந்தது.  மதுரை நண்பர்கள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டே போனதில் நேரம் போனதே தெரியவில்லை.



குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என சொல்வார்களே, அச்சிறுப்பாக்கத்தில் சின்ன குன்று, அங்கு தான் … இனியன் – உமா அவர்களின் மகள் “அறிவுமதி – ஜகதீசன்” திருமணமும் நடைபெற்றது.  அறிவுமதி நல்ல உயரம்.  உமாவையும், இனியனையும் நினைவுப்படுத்தினார்.



நேற்று அந்த பகுதியில் மழை பெய்து இருந்ததால்,  வெயில் அடித்தாலும், வலிக்காத அளவிற்கு குளுமையாகவும் இருந்தது. அங்கிருந்து பார்த்தால், ஊரை நன்றாக பார்க்க முடிந்தது.


முருகன் அகத்தியருக்கு அருளிய இடம் என கோயிலில் எழுதியிருந்தார்கள். தெற்கு முகமாக நிற்கும் முருகன் அபூர்வம் என்றார். இந்த முருகன் கோயிலும், இராஜஸ்தானில் ஒரு முருகன் கோயிலும் என இரண்டு கோயில்கள் மட்டுமே உண்டு என இரமேஷ்குமார் சார் தகவலைச் சொன்னார். ”முருகன் எங்க! எப்ப இராஜஸ்தான் போனாரு” என உமா சீரியசாய் கேள்விக்கேட்டார்.


மதுரையில் இருந்து, மோகன் – கயல் குடும்பம், வேல் - விஜி குடும்பம் சகிதமாய் வந்திருந்தார்கள்.   எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.  அய்யப்பன் தனியாக வந்திருந்தார். இப்பொழுது சிபிஐ வழக்குகளை மட்டுமே கையாள்வதாய் தெரிவித்தார். மகிழ்ச்சி.


நம்ம  டிவிஎஸ் சரவணன் அவர்கள் கடைசி நேர நெருக்கடியில் வர இயலவில்லைஎன தெரிவித்தார்கள்.


பிறகு திருமண வீட்டுக்காரர்கள் அனைவரும் மேல்மருவத்தூர் கோயிலுக்கு கிளம்ப, சென்னைக்காரர்கள் சென்னை திரும்பிவிட்டோம். மற்ற மதுரை நண்பர்கள் இன்று இரவு பாண்டியன் விரைவு ரயிலில் கிளம்புவதாக தெரிவித்தார்கள்.


அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி.


”வாழ்க மணமக்கள்”