> குருத்து

July 10, 2025

முகப்பேர் மேற்கு : அருமையான காலை உணவகம் - ராணி டிபன் சென்டர்


சென்னை மாதிரி பெருநகரங்களில், அவசரகதியில் வாழும் பொழுது, நமது வீட்டு சமையலறைகளைப் பொலவே அதன் நீட்டிப்பாய் அவசர காலங்களில், தேவையான பொழுது பகுதியில் உள்ள நல்ல உணவகங்கள் தான் நம்மை காக்கின்றன.


வீட்டு உணவு போல இருக்கவேண்டும். சுத்தமாக இருக்கவேண்டும். சுவையாக இருக்கவேண்டும். விலை நமக்கு கட்டுப்படியாகவும் இருக்கவேண்டும். இப்படி பல இருக்கவேண்டும். அப்படி பல உணவகங்கள் அமையாவிட்டாலும், சில உணவகங்களாவது அமைவது மிகவும் அவசியம்.


நாங்கள் வசிக்கும் முகப்பேர் மேற்கு பகுதியில் இயங்கும் இராணி டிபன் சென்டர் அப்படி ஒரு உணவகம். ராணியம்மாள் ஒரு முருக பக்தர். ஆகையால் எப்பொழுதும் முருக கடவுளின் பக்தி பாடல்கள் எப்பொழுதும் ஒலிக்கும்.


அம்மா, அப்பா, இளைஞரான மகன் கண்ணன் என மூவரும் நடத்திவருகிறார்கள். காலை ஏழு மணி துவங்கி… 11 மணி வரை நீளும். இட்லி, தோசை, வடை, பொங்கல், பூரி உண்டு.  சுடச்சுட தோசையும், பூரியும் கிடைக்கும். அதற்கு துணையாக, நல்ல சுவையான சாம்பாரும், இரண்டு வகையான சட்னியும், வடை கறியும், பூரிக்கிழங்கும் உண்டு.


வீடு போல கடை என சொல்லும் பொழுது, சுவையாக இருக்கக்கூடிய சில கடைகளில் வீட்டு களேபரங்கள் அங்கும் நிகழும். கண்டுகொள்ள மாட்டார்கள். ஒன்றுக்கு இரண்டுமுறை கேட்கவேண்டும்.  ஆனால் இந்தக் கடையில் மூவரும் நன்றாக வரவேற்பார்கள். நன்றாகவும் கவனித்துக்கொள்வார்கள்.



ஏற்கனவே கடையில் கூட்டம் அள்ளும். பிறகும், ஏன் எழுதுகிறேன் என்றால்… அங்கு சாப்பிட்ட சாப்பாடு தான் காரணம். வேறு என்னவாக இருக்கமுடியும். நல்ல உணவகங்களை இப்படி பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொள்வது அவசியம். அதனால் பகிர்கிறேன்.


இப்போதைக்கு காலை உணவு மட்டும். மதிய உணவு துவங்கவேண்டும் என அவர்களுக்கு விருப்பம் இருக்கிறது. விரைவில் துவங்குவதற்கும், அடுத்தடுத்து முன்னேறுவதற்கும் நாம் வாழ்த்துவோம்.


நன்றி.


- இரா. முனியசாமி


முகவரி :
ராணி டிபன் சென்டர்,
369C, விஜிபி நகர்,
பாரதி சாலை,
முகப்பேர், சென்னை – 600037.
தொலைபேசி 
8056731464
9600441255

July 9, 2025

பறந்து போவும் ஒரு நினைவும்! – விமர்சனமல்ல


படத்தின் ஓரிடத்தில் சிவாவின் அப்பா ”பையனுக்கு எவ்வளவு பீஸ் கட்ற?” என கேட்கும் பொழுது… ”மூன்றே கால் லட்சம்” என்பார்.

 

***

 

தொழில்முறையில் நடுத்தர வயதில் ஒருவரைத் தெரியும். பெயரைத் தவிர்க்கலாம். தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்கள் விற்கும் கடை வைத்திருந்தார். துவக்கத்தில் நன்றாக விற்பனை ஆனது. விற்பனை அதிகரிக்க கடன்கள் கொடுக்க ஆரம்பித்தார்.  அதில் இரு நிறுவனங்கள் சில லட்சங்களில் பாக்கி வைத்து ஓடிப்போனார்கள். இன்னும் ஒன்றிரண்டு நிறுவனங்கள் அவர்கள் பெரும் கடன் பாக்கியில் சிக்க, அவர்கள் இவரிடம் பெரிய தொகையாக நிறுத்திவைத்தார்கள். மெல்ல மெல்ல வீழ்ச்சியைச் சந்திக்கத் துவங்கினார்.

 

அவர் கொஞ்சம் பந்தா பேர்வழி. அவருடைய சொந்த அண்ணனின் முன்பு, அவருடைய நண்பர் கிண்டலோடு ஒரு சம்பவத்தைச் சொன்னார். ஒரு நாள் மழை பெய்த பொழுது…. சட்டை நனைஞ்சிருச்சுன்னு… கலர் ப்ளஸ் கடையில் நுழைந்து மூவாயிரத்துக்கு சட்டை வாங்கி, மாற்றிக்கொண்டு கிளம்பினான் என்றார்.

 

அவருக்கு இரண்டு பையன்கள். அவர்களை இண்டர்நேசனல் பள்ளி ஒன்றில் சேர்த்திருந்தார்.  வருடத்திற்கு ஒன்றரை லட்சம் கட்டணம். இரண்டு பையன்களுமே அங்கு படித்தார்கள்.  தொழில் வீழ்ச்சியடைய, அடைய பொருளாதார நெருக்கடியில் சிக்கினார். அதைச் சரிக்கட்ட வீட்டை அடமானம் வைத்து வட்டிக்கு சில லட்சங்களை கடன் வாங்கினார். நிலைமையை சரி செய்யமுடியவில்லை. தொடர்ச்சியான, பிறகு அதிகமான குடிப்பழக்கம் சொந்தங்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும் அவர் மீதான மதிப்பையும் குறைத்திருந்தது. அவர் மீள்வதற்கு நிறைய யோசனைகள் அவர் வைத்திருந்தாலும், அவரால் நடைமுறைப்படுத்த இயலவில்லை.

 

வருமானம் பெரிதாக உயரவில்லை. செலவுகளை குறைக்கலாமே! பசங்களை வேறு பள்ளியில் மாற்றலாமே! என்றால்… அந்தப் பள்ளி எத்தனை சிறந்தப் பள்ளி தெரியுங்களான்னு நமக்கே பாடம் எடுப்பார். 

 

அவரிடம் பத்து, பதினைந்து நிமிடம் பேசினாலே, எத்தனை உற்சாகம் நம்மிடம் இருந்தாலும்… வற்றி பதட்டமாகிவிடுவோம். ”தற்கொலை பண்ணிக்கலாம்னு இருக்கேன்னு” என்று தான் ஒவ்வொருமுறையும் முடிப்பார்.

 

இடையில் சில மாதங்கள் அவரைச் சந்திக்கவேயில்லை. அவருடைய தொழில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. அந்தப் பக்கம் போகும் பொழுதெல்லாம், கடை அடைத்தே கிடக்கும்.

 

வேறு ஒருவர் அவர் நலம் குறித்து விசாரித்தப் பொழுது சொன்னார். “தீபாவளிக்கு முதல்நாள் இருவருக்கும் சண்டை வந்து… இவர் தண்ணியடித்து எழ முடியாத அளவிற்கு தூங்க…. அன்று இரவில் அவருடைய துணைவியார் தூக்கு மாட்டிக்கொண்டு, இறந்துவிட்டார். இவர் மீது சந்தேகம் கொண்டு வழக்கு நடந்தது அவருடைய மூத்தப் பையன்  நடந்ததை சொன்னதால்… அவர் வழக்கிலிருந்து மீண்டார்” என்றார்.

 

அடுத்த சில மாதங்களுக்கு பிறகு அவரையேச் சந்தித்தேன். நடந்த விசயங்கள் குறித்து அவரே புலம்பியபடி சொன்னார். இப்பொழுது இரண்டு பசங்களும் தன்னுடைய மாமானார் வீட்டில் வளர்கிறார்கள். அவர்களை நாங்கள் நன்றாக கவனித்துக்கொண்டது போல கவனித்துக்கொள்வதில்லை என மிகவும் விசனப்பட்டார்.  சில மனிதர்கள் அப்படித்தான் போலிருக்கிறது!

கண்ணப்பா (2025)


வேடர் குலத்தைச் சார்ந்த தலைவருக்கு மகனாக பிறக்கிறான் நாயகன் திண்ணன். அவர்களிடத்தில் காளி வழிபாட்டில் பலி கொடுக்கும் வழக்கத்தில்அதில் நாயகனின் நண்பனை பலிகொடுக்கும் பொழுது, கடவுள் வழிப்பாட்டையை எதிர்க்கிறான்.

 

அங்கு ஒரு தனிக்காட்டில் வாயு லிங்கத்தை வைத்து தான் மட்டும் சடங்குகள் செய்து வழிபாட்டு வருகிறார் வேதங்களைக் கற்றுத் ”தேர்ந்த” சாஸ்திரி.  வாயு லிங்கத்தைப் பற்றி கேள்விப்பட்டு அதைக் கைப்பற்ற வருகிறான் காளா முகி என்ற பெரும் படைக்குத் தலைவன்.

 

பிரிந்துக் கிடக்கும் ஐந்து வேடர் குழுக்களும் ஒன்றாய் இணையவேண்டிய நெருக்கடி வருகிறது. நாயகனின் காதலால், ஒற்றுமையில் குழப்பம் வருகிறது. மகனைத் தள்ளி வைக்கிறார்.

 

காளா முகி வந்தானா? திண்ணன் தான் கண்ணப்பனா? என்ற கேள்விக்கு ஆக்சன், பக்தி என கலந்து கட்டி தந்திருக்கிறார்கள்.

 

***


சிவனின் திருவிளையாடல்களை 63 நாயன்மார்கள் கதையை விரிவாக சொல்கிறது பெரிய புராணம்.  அதில் ஒருவர் கண்ணப்ப நாயனார். ஆகம முறைப்படி சடங்கு சம்பிராயதங்களுடன் வழிபாடும் சிவகோசாரியார், வேடன் குலத்தைச் சேர்ந்த திண்ணன் சிவன் மீது கொண்ட பேரன்பினால், தான் சாப்பிட்டும் கறியைப் படைத்து, லிங்கத்தின் கண்ணீல் ரத்தம் வடிய, தன் கண்ணைக் கிழித்து தந்த கண்ணப்பன் கதையை கேள்விப்பட்டிருப்போம்.

 

கண்ணப்பர் பிறந்த இடம் ஆந்திராவின் காளஹஸ்தி என இருப்பதால், தெலுங்குகாரர்கள் அந்த கதையை எடுத்துக்கொண்டு…. அதைச் சுற்றியும் கற்பனையாய் கதையை அமைத்து இந்திய அளவில் அக்சய் (சிவன்)  – காஜல் (பார்வதி), சரத்குமார் (நாயகனின் அப்பா), மோகன்லால், மோகன்பாபு, பிரபாஸ் போன்ற நட்சத்திரங்களையும் நடிக்க வைத்து பான் இந்தியா படமாக இயக்கியிருக்கிறார் முகேஷ் குமார் சிங்.  நாயகனான விஷ்ணு மன்சு கதை, திரைக்கதையும் சேர்த்து எழுதியிருக்கிறார். திருச்சியைச் சார்ந்த ப்ரீத்தி நாயகியாக நடித்திருக்கிறார்.  எல்லோருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதே போல தொழில்நுட்ப குழுவும்.

 

வில்வித்தையில் வீரனான் திண்ணனை அர்ஜூனின் அடுத்தப் பிறப்பு என்கிறார்கள். அதுவும் கற்பனை தான். 

 

தமிழ் மொழிமாற்றம் சிறப்பாக இருக்கிறது. திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. விரைவில் ஓடிடிக்கு வரும்.