கடந்த வாரம் டெல்லியிலிருந்து புனே செல்லும் விமானத்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தேன். அந்தப் பயணத்தில் நடந்த ஒரு சிறிய சம்பவம், வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்கும் நினைவாக மாறிவிட்டது.
ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது ஏழு வயதுக்கு மேல் இருக்காத ஒரு சிறுவன், தன் தந்தையின் கையைப் பிடித்தபடி என்னருகில் நின்றான்.
"மாமா... உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால்... நான் ஜன்னலோர இருக்கையில் அமரலாமா?"
நான் பதில் சொல்லும் முன்பே அவன் தந்தை அவசரமாகப் பேசினார்.
"மிகவும் மன்னிக்க வேண்டும், ஐயா. அவனைத் தவறாக நினைக்க வேண்டாம். விமான நிலையத்துக்குள் வந்ததிலிருந்தே ஜன்னல் இருக்கை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறான். உங்களுக்கு விருப்பமில்லை என்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை."
நான் சிரித்தபடி, "இந்த இருக்கை இனி உன்னுடையது, தம்பி," என்றேன்.
அந்தச் சிறுவனின் முகம் உடனே மலர்ந்தது. அவன் உற்சாகமாக ஜன்னலருகே சென்று, கண்ணாடியில் கைகளை வைத்து வெளியே பார்த்தான். சில நிமிடங்கள் அந்தக் காட்சியில் மூழ்கியிருந்தான். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, தந்தையின் தோளில் தலை சாய்த்து அமைதியாக உறங்கிவிட்டான். முழுப் பயணத்தையும் அவன் பெரும்பாலும் தூக்கத்திலேயே கழித்தான். தரையிறங்க இன்னும் இருபது நிமிடங்கள் இருக்கும்போது, அவன் தந்தை என்னைப் பார்த்து புன்னகைத்தார்.
"நீங்கள் கொடுத்த ஜன்னல் இருக்கையை அவன் பெரிதாகப் பயன்படுத்தவே இல்லையே."
"பரவாயில்லை. மிகவும் களைப்பாக இருந்திருப்பான்," என்றேன்.
சில நொடிகள் அமைதியாக இருந்தார். பிறகு மெதுவாகச் சொன்னார். "ஆமாம்... மிகவும் களைத்திருக்கிறான்."
"கடந்த எட்டு மாதங்களாக நாங்கள் டெல்லியில்தான் இருந்தோம். அவனுக்கு Severe Aplastic Anemia நோய்க்காக Rajiv Gandhi Cancer Institute and Research Centre மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பல நாட்களில் இப்படி வீட்டிற்குத் திரும்பும் நாள் வரும் என்பதே எங்களுக்குச் சந்தேகமாக இருந்தது. இன்று தான் மருத்துவர்கள் பயணம் செய்யலாம் என்று அனுமதி அளித்தார்கள்."
நான் மீண்டும் அந்தச் சிறுவனைப் பார்த்தேன். சில நிமிடங்களுக்கு முன்பு வரை, ஜன்னலோர இருக்கை கேட்ட ஒரு குழந்தையை மட்டுமே பார்த்திருந்தேன். இப்போது என் கண்முன் இருந்தது... பல மாதங்களாக உயிரோடு போராடி வெற்றி பெற்ற ஒரு சிறிய வீரன்.
அப்போது அவன் தந்தை என்னைக் கேட்டார். "அவனுக்கு ஏன் அந்த ஜன்னல் இருக்கை அவ்வளவு வேண்டும் தெரியுமா?" நான் தலையசைத்தேன். அவர் மெதுவாகச் சொன்னார். "அவன் என்னிடம் சொன்னான்...
'அப்பா... மேகங்களுக்கு மேலே போனால், நான் கடவுளுக்கு இன்னும் கொஞ்சம் அருகில் இருப்பேன். என்னை குணமாக்கியதற்கு அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.'"
அந்த வார்த்தைகளுக்குப் பிறகு என்னால் எதுவும் பேச முடியவில்லை. என் முகத்தைத் திருப்பிக் கொண்டு, கண்களில் வழிந்த கண்ணீரை அமைதியாகத் துடைத்துக் கொண்டேன்.
விமான நிலையத்திலிருந்து வெளியே நடந்து செல்லும்போது, அந்தத் தந்தை திரும்பிப் பார்த்து சிரித்தபடி சொன்னார். "நன்றி, ஐயா. இன்று என் மகனின் நாளை நீங்கள் அழகாக்கிவிட்டீர்கள்."
ஆனால் உண்மை என்னவென்றால்... அன்று என் நாளை அழகாக்கியது அந்தச் சிறுவன்தான். அந்தப் பயணம் எனக்கு ஒரு பெரிய உண்மையை உணர்த்தியது.
நாம் சந்திக்கும் ஒவ்வொருவரையும் சில நிமிடங்களே அறிந்திருக்கலாம். ஆனால் அவர்கள் பல மாதங்களாகவோ, பல ஆண்டுகளாகவோ யாருக்கும் தெரியாத போராட்டங்களைச் சுமந்துகொண்டு இருக்கலாம்.
அவசரமாகப் பேசும் வாடிக்கையாளர்... கவனம் சிதறிய அலுவலகத் தோழர்... சோர்வுடன் இருக்கும் பெற்றோர்... ஜன்னலோர இருக்கை கேட்கும் அமைதியான ஒரு குழந்தை... நாம் பார்ப்பது அவர்களின் நடத்தையை மட்டுமே. அதன் பின்னால் இருக்கும் வாழ்க்கைப் போராட்டத்தை அல்ல.
பிறரைப் புரிந்துகொள்வது பெரிய உதவிகளால் மட்டுமே தொடங்குவதில்லை. தீர்ப்பளிப்பதற்கு முன் கருணையுடன் அணுகும் ஒரு மனநிலையில்தான் அது தொடங்குகிறது.
ஒவ்வொருவரும் நமக்குத் தெரியாத ஒரு கதையைச் சுமந்துகொண்டே வாழ்கிறார்கள். நாம் செய்யும் ஒரு சிறிய அன்புச் செயல், ஒருவரின் வாழ்நாள் நினைவாக மாறக்கூடும்.
சில நேரங்களில் அழகான காட்சி ஜன்னலோர இருக்கையில் கிடைப்பதில்லை. மனதை மாற்றும் ஒரு புதிய பார்வையில்தான் கிடைக்கிறது. அன்று நான் விட்டுக்கொடுத்தது ஒரு ஜன்னல் இருக்கை மட்டுமே.
ஆனால் நான் பெற்றது... வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு வாழ்க்கைப் பாடம்.
- - Anup Kumar Bedi
-
(இவர் வங்கி மற்றும் நிதித்துறையில் இருபது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்டவர். தற்போது FIS நிறுவனத்தில் மூத்த பொறுப்பில் பணியாற்றுகிறார்.)
தமிழில்
: இரா. முனியசாமி

