> குருத்து

May 19, 2026

உறவு பேணுதல்

 


வழக்கமாய் தீபாவளி விடுமுறைக்கு மதுரைக்கு செல்வதுண்டு. நல்ல மழைக்காலம் என்பதால், பார்க்க திட்டமிடும் தோழர்களை பார்க்க முடியாமலே போய்விடுகிறது.

 

இலக்கியாவிற்கு கல்லூரி விடுமுறை காலம் என்பதால், மதுரைக்கு இந்த மாதம் போய் வரலாம் என கிளம்பினோம்.  ரயிலில் தட்கல் உதவியது.

 

நண்பன் வேலுவையும்,  விஜியையும் வீட்டுக்கு போய் பார்த்தோம்.  நம்முடைய காலத்திலேயே பிள்ளைகளின் இழப்பு என்பது எப்பொழுதுமே தாங்க முடியாதது. வேலு தேறிவிட்டார். விஜி தேறிவருகிறார். வேலைக்கு சென்றுவருவதும் நல்ல விசயம்.

 

மணிமேகலை அக்காவையும் போய் பார்த்தோம்.  அவருடைய இளைய மகனுடனும், சகோதரி அவர்களுடனும் இருக்கிறார். அக்காவும் தேறி வருகிறார். இளைய மகன் ஒரு பெண்ணை விரும்புவதாகவும், அவர் சென்னையில் வேலை செய்து வருவதாகவும், விரைவில் திருமணம் இருக்கும் என்றார். மகிழ்ச்சி. கொஞ்சம் முன் கூட்டி சொல்லிவிடுங்கள். நிச்சயம் கலந்துகொள்கிறேன் என்றேன்.

 

வழக்கறிஞர் இராஜேந்திரன் அவர்களுக்கு  ஒரு சின்ன விபத்தில் காலில் சின்ன முறிவு (Minor Crack).  ஆகையால் சில நாட்கள் வீட்டில் தான் ஓய்வில் இருக்கிறார்.  அவரைப் பார்த்து பேசி வந்தோம்.  அவருடைய மகள் மதிக்கு இன்னும் திருமணத்திற்கான முயற்சிகளில் இருக்கிறார்கள். நம்மால் ஆன உதவிகளை செய்வோம்.

 

இன்னும் இரண்டு நண்பர்களை அவர்களுடைய குடும்ப நிகழ்வுகளுக்காக பார்த்தோம்.   ஒரு நண்பருக்கு ஐம்பது வயதில் ஸ்ட்ரோக் வந்து, உடனடியாக மருத்துவம் பார்த்ததில், தப்பித்துவிட்டார்.  ஆனால் பேச்சு குழறுகிறது.   பிசியோதெரபி போய்க்கொண்டிருக்கிறார்.  என்ன பதட்டம் என்றால், மனைவி அரசு பள்ளி ஆசிரியர், மகனும் அதே பள்ளியில் படிக்கிறார். இருவரையும் காலை 7.30க்கு பேருந்துக்கு கொண்டு போய் விடுவதற்குள் அத்தனைப் பதட்டத்தை உண்டாக்கிவிடுகிறார்கள் என்றார்.  இது தவிர வீட்டை கட்டுவதற்கான வங்கி கடனுக்காக கொஞ்சம் வேலைகள் செய்தோம்.  நாட்கள் போதவில்லை.  இன்னும் சிலரை கூட சந்தித்திருக்கலாம். 

 

இப்படி மேலே நண்பர்களையும், தோழர்களையும் பார்க்க போன பொழுது, மகள் இலக்கியாவும் உடனிருந்தது முக்கியமானது. உறவுகளைப் பேணுவதில் நாம் கவனத்துடன் இருக்கவேண்டிய காலமிது. 

 

சொந்தங்களில் இன்னும் நீ என் வீட்டுக்கு வந்தயா? நான் உன் வீட்டுக்கு வருகிறேன்? என்ற வழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.  நாம் மேம்பட்ட பண்பாட்டை வைத்திருக்கிறோம் என்பதை நாம் அடுத்த தலைமுறைக்கு நாம் அதை செய்து தான் பழக்க வேண்டியிருக்கிறது.

May 18, 2026

நடிகை பார்வதி – இயக்குநர் சசி

 

a

ஒரு நல்ல கதை என்றால் தனக்கு தேவையான எல்லாவற்றையும் அதுவே அடைந்துவிடும் என சொல்வார்கள். அது போல பூ படத்தின் கதைக்கு மிகப் பொருத்தமான ஆளாக நடிகை பார்வதி கிடைத்தார்.  ஒரு மலையாளப் படத்தில் ஒரு சின்ன பாத்திரத்தில் நடித்திருந்தார்.   அந்த ஆல்பத்தை பார்த்து முடிவு செய்தேன்.

 

சம்பளம் பேசும் பொழுது, தயாரிப்பு தரப்பில் பேசச் சென்றவர், “எங்க இயக்குநர் தான் உங்களை தமிழில் அறிமுகப்படுத்துகிறார்!” என பேசியிருக்கிறார்.  “நீங்க இந்த பாத்திரத்திற்கு ஒரு ஆடிசன் நடத்தினீர்கள். நான் கலந்துகொண்டேன்.  இப்பொழுது பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதால் என்னை தேர்வு செய்கிறீர்கள்!” என பதில் அளித்துள்ளார். எனக்கு போன் செய்து, நடந்ததை சொல்லி, கொஞ்சம் கூடுதலாக சொல்லி சிக்கல் செய்ய வாய்ப்பிருக்கு சார் என்றார்.

 

திட்டமிட்ட மாதங்களை விட கூடுதலாக படப்பிடிப்பு கடந்து போய்க்கொண்டிருந்தது.  அடுத்தப் படத்திற்கு கிளம்பி வா! என பார்வதியை வீட்டில் இருந்து தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.  நான் அந்த பெண்ணின் சிக்கலைப் புரிந்துகொண்டு, படப்பிடிப்பும் தொடர்ந்து இருப்பதால்,  பேசிய பணத்தை விட  கூடுதலாக ஒரு லட்சத்திற்கு ஒரு காசோலை தந்து, வீட்டில் கொடுத்துவிடுங்கள்! என கொடுத்தேன். வாங்கிக்கொண்டு சென்றவர், ஒரு அரை மணி நேரம் கழித்து வந்து, “என் முகத்தை கண்ணாடியில் என்னாலேயே பார்க்க முடியவில்லை சார்! மாரியாக (பாத்திரத்தின் பெயர்) நடிக்க வந்து, இப்பொழுது கூடுதலாக ஒரு லட்சம் கொடுத்தால் தான் நடிப்பேன் என சொல்வது நியாயமே இல்லை! என தோன்றியது. அம்மாவிடம் கொடுத்துவிட்டேன் என சொல்லிவிடுங்கள். நான் ஊருக்கு போய் பேசிக்கொள்கிறேன்” என சொன்னார். இதைச் சொன்ன பொழுது, அந்த பெண்ணுக்கு வயது 20 தான்.  முதல் படம் வேறு. மேற்படிப்புக்காக வெளிநாடு செல்வதற்கு பணத் தேவையும் அந்த பெண்ணுக்கு இருந்தது.

 

இப்பொழுதும் ஒரு படம் நடித்தால், அதை முடித்துக் கொடுத்துவிட்டு தான் அடுத்தப்படம் நடிக்கிறார். அர்ப்பணிப்பு உள்ள நடிகை.

 

-         -  சித்ரா லெட்சுமணனுக்கு கொடுத்த நீண்ட பேட்டியிலிருந்து…. 

May 17, 2026

வருத்தம்!


சின்ன வயதில் நாய் வளர்க்க ஆசைப்பட்டு அம்மாவிடம் சொல்கிற பொழுது, “உங்களை வளர்க்கிறதே பெரும்பாடாக இருக்கிறது! இதுல இன்னொரு ஜீவன் வேறயா!” என்பார்.  அது என்னவோ உண்மை தான்.  நானெல்லாம் தமிழ்நாடு முழுவதும் கடுமையான பஞ்ச காலத்தில் பிறந்தவன்.


மதுரையில் புற நகர் பகுதியில் அக்கா குடும்பம் வாழ துவங்கும் பொழுது,  குடும்ப உறுப்பினர்கள் வேலைக்கு சென்ற பிறகு, பாதுகாப்புக்காக ஒரு நாய் அல்ல இரண்டு நாட்டு நாய்களை வளர்க்க துவங்கினார்கள்.  ஒன்று பைரவா. இரண்டாவது நரசிம்மா.


காட்டு விலங்குகளை வீட்டு விலங்குகளாக மாற்றியதில் பெண்களுக்கு பெரிய பங்குண்டு.  மனிதனுக்கும் நாய்களுக்குமான உறவு நீண்ட நெடுங்காலமானது. விவசாயத்திற்கு முன்பிருந்தே, வேட்டை காலத்திலேயே மனிதனுக்கு உதவியாக இருந்துள்ளது. கால்நடை வளர்ப்பில் உதவி என துவங்கி, பிறகு நவீன காலங்களில் கூட மனிதனுக்கு தனிமையை போக்க, போரில் உதவி, போலீசுக்கு துப்பறிந்து சொல்ல என பல அம்சங்களில் நாய்களின் உறவு மிக அதிகம்.


அக்கா தன் பிள்ளைகளோடு பிள்ளைகளாக தான் அவைகளையும் அன்போடு வளர்த்தார்.   ஊருக்கு செல்லும் பொழுது,  என்னை அறிமுகப்படுத்தும் பொழுது கூட, “மாமாடா!” என்பார்.


சில ஆண்டுகளுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு பைரவா இறந்தது. வீட்டின் புகைப்படங்களில் இப்பொழுது பைரவாவும் இடம் பெற்றிருக்கிறது.


15 ஆண்டுகளாக குடும்பத்தில் ஒருவராக இருந்த நரசிம்மா இன்று காலையில் நரசிம்மாவும் உடல்நலமின்றி இறந்ததாக அக்கா அழுதுகொண்டே தெரிவித்தார்.  அக்கா சொல்லும் பொழுது, குடும்பத்தில் ஒருவர் இறந்ததாக தான் நானும் உணர்கிறேன்.