> குருத்து

May 25, 2026

Prompt என்றால்? ஒரு சுமாரான promptக்கும், நல்ல Promptக்கும் என்ன வித்தியாசம்?

 


Prompt என்றால்?

 

👉 AI-க்கு (Artificial Intelligence) நாம் கொடுக்கும் கட்டளை / கேள்வி / விளக்கம் ஆகும்.

 

தெளிவாக கேட்கும் கேள்வியே தெளிவான பதிலை உருவாக்கும்” — Andrew Ng

 

சுமாரான Prompt :

ஒரு GST அலுவலக படம் உருவாக்கு.”

👉 முடிவு என்ன வரும் தெரியுமா?
மூன்று பேர் லேப்டாப் பார்த்துக்கொண்டு,
ஒருவர் சிரித்துக்கொண்டு,
பின்னாலே காரணமே இல்லாமல் graph…
மேசையில் coffee cup…
அதுவும் “freepik corporate people” மாதிரி முகங்கள். 😄

 

Good Prompt :

சென்னையில் இயங்கும் ஒரு வரி ஆலோசகர் அலுவலகம்.
மேசையில் GST கோப்புகள், notice papers, dual monitor setup.
ஒருவர் client call-ல் பதட்டமாக பேசிக்கொண்டிருக்க வேண்டும்.
மற்றொருவர் reconciliation sheet பார்க்க வேண்டும்.
Corporate blue + white theme.
Realistic lighting.

தமிழ் பெயர்ப் பலகை: ‘GST Professionals Society’.”

 

👉 இப்போது வரும் படம்?

இது நம்ம ஆபீஸ்ல எடுத்த photoவா?” என்று உறுப்பினர்களே கேட்பார்கள். 😄

 

சுருக்கமாக சொன்னால்:

 

சுமாரான Prompt :   சாப்பாடு வேணும்.”

 

Good Prompt :    சூடான நெய் தோசை, கெட்டிச் சட்னி, மிதமான கார சாம்பார், மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லிஸ்டீல் தட்டில் வேண்டும்.” 😄

To catch the Killer (2023) ஒரு பரபரப்பான கிரைம் திரில்லர்


 

அமெரிக்காவின் ஒரு பரபரப்பான பெருநகரம்.  பப்புகளிலும், ஹோட்டல்களின் உச்சிகளில் நடனமும், களிப்புமாக இருக்கின்றன.  திடீரென எங்கிருந்து சுடுகிறார்கள் என தெரியாமலேயே, ஆங்காங்கே சுடப்பட்டு செத்து, செத்து கீழே விழுகிறார்கள். மக்கள் பதறிப்போய் அங்கிருந்து வேகவேகமாய் நகர்கிறார்கள். எங்கிருந்து சுட்டார்களே அந்த இடம் வெடித்து சிதறுகிறது.  எந்த தடயமும் கிடைக்கவில்லை.

 

நாயகி போலீசாக இருக்கிறார்.  அங்கு பார்க்கும் காட்சி கொடூரமாய் இருக்கிறது. FBI வருகிறது. துப்புத் துலக்க ஆரம்பிக்கிறது.  போலீசுகளின் மத்தியில் அதன் முக்கிய அதிகாரி  இது குறித்து பேசுகிறார். யாராவது கருத்து இருந்தாலும் சொல்லுங்கள் என்கிறார்.  நாயகி தன் சக அதிகாரியிடம் “சுட்டவன்  கொசுக்களை சுடுவதாக சுட்டிருக்கிறான்.  அவன் சுட நினைத்திருந்தால், இன்னும் பலரை சுட்டிருக்கலாம்.   அவனுக்கு பசி அடங்கியிருக்கிறது” என்கிறார்.   இதை எதைச்சையாக கேட்ட FBI அதிகாரி நாயகியை தன் குழுவில் சேர்த்துக்கொள்கிறார்.

 

கொலைகாரன் ஒரு மாலில் வேறு ஒருவரின் துணியை எடுத்துக்கொண்டு விட, சம்பந்தட்ட்டவர் புகார் கொடுக்கிறார். அங்குள்ள பாத்ரூம் வாஷ் பேசினில், தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு, சாப்பிட்ட தட்டுகளில் இருந்து ஏதாவது கிடைக்குமா என தேடிக்கொண்டு இருக்கும் பொழுது,  இரண்டு போலீசு வர, களேபரமாகி மீண்டும் சுடத் துவங்குகிறான்.

 

இந்த இரண்டு மாஸ் கொலைகளும் மக்கள் மத்தியில் பதட்டமாக்க, அரசுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என நகர்கிறது.  அதிகாரிக்கும், நாயகி குழுவிற்கும் அழுத்தம் அதிகமாகிறது.

 

அந்த கொலைகாரன் எதற்காக கொலைகள் செய்தான்? அவனை கைது செய்தார்களா? என்ன நடந்தது என்பதை மீதிக்கதையில் பரபரப்பாய் சொல்லியிருக்கிறார்கள்.

 

இந்தப் படம் போலீசு கொலைகாரன் படம் மட்டும் இருந்திருந்தால், ஒரு வழக்கமான படமாக இருந்திருக்கும்.   அமெரிக்காவின் பள்ளிகளில், பொதுவெளிகளில், மால்களில் என அவ்வப்பொழுது யாராவது துப்பாக்கியை தூக்கி வந்து, பலரை சுட்டுக்கொன்றுவிடுவது நடைபெறுகிறது.

 

மனம் பிறழ்ந்தவன் என்றோ, தீவிரவாதி என்றோ கதை எழுதி சட்டென அந்த பைலை மூடிவிடுகிறார்கள்.   அமெரிக்காவில் துப்பாக்கி எளிதாக கிடைக்கிறது என்பது தான் பிரச்சனை என்கிறார்கள். உளவியல் சார்ந்தும் சிக்கல்கள் இருக்கின்றன ஒரு சாரர் பேசுகிறார்கள்.

 

படம் உளவியல் சார்ந்து பேசியது தான் முக்கியம். இதில் நாயகி இளவயதில் வேறு வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு, உடைந்து போய் இருந்தாலும், அதனால் கடுமையான வெறுப்புக்குள்ளாகிவிடாமல், இன்னும் நம்மை சரி செய்துகொள்ளமுடியும். மனிதர்களோடு இணைந்து வாழமுடியும் என்ற நம்பிக்கை நாயகிக்கு இருக்கிறது. இதில் சுடுகிறவன்  அந்த கோபத்தை வெளியே காண்பிக்கிறான் என புரிந்துகொள்கிறாள்.

 

மனிதர்கள் மட்டும் உடைந்து போகவில்லை.  ஒரு பக்கம் கொலைகள்.  இன்னொரு பக்கம் ஊடகம், மேலிருந்து அழுத்தம்.  ஆகையால் போலீசு செயற்கையாக ஒரு ஆளை போட்டுத்தள்ளும் இடம் இருக்கிறதே! இந்த சிஸ்டமும் உடைந்து தான் போயிருக்கிறது என்பதை சொல்கிறது.

 

உள்ளுக்குள் உடைந்து போய், தொடர்ந்து விமர்சனம் செய்வதை தாங்கிக்கொண்டு இருக்கும் அந்த பாத்திரத்தை அருமையாக செய்திருக்கிறார் நாயகி  Shailene Woodley.  Divergent சீரிசில் இவரைப் பார்த்திருக்கிறேன்.   அந்த அதிகாரியும் சிறப்பு.

May 19, 2026

உறவு பேணுதல்

 


வழக்கமாய் தீபாவளி விடுமுறைக்கு மதுரைக்கு செல்வதுண்டு. நல்ல மழைக்காலம் என்பதால், பார்க்க திட்டமிடும் தோழர்களை பார்க்க முடியாமலே போய்விடுகிறது.

 

இலக்கியாவிற்கு கல்லூரி விடுமுறை காலம் என்பதால், மதுரைக்கு இந்த மாதம் போய் வரலாம் என கிளம்பினோம்.  ரயிலில் தட்கல் உதவியது.

 

நண்பன் வேலுவையும்,  விஜியையும் வீட்டுக்கு போய் பார்த்தோம்.  நம்முடைய காலத்திலேயே பிள்ளைகளின் இழப்பு என்பது எப்பொழுதுமே தாங்க முடியாதது. வேலு தேறிவிட்டார். விஜி தேறிவருகிறார். வேலைக்கு சென்றுவருவதும் நல்ல விசயம்.

 

மணிமேகலை அக்காவையும் போய் பார்த்தோம்.  அவருடைய இளைய மகனுடனும், சகோதரி அவர்களுடனும் இருக்கிறார். அக்காவும் தேறி வருகிறார். இளைய மகன் ஒரு பெண்ணை விரும்புவதாகவும், அவர் சென்னையில் வேலை செய்து வருவதாகவும், விரைவில் திருமணம் இருக்கும் என்றார். மகிழ்ச்சி. கொஞ்சம் முன் கூட்டி சொல்லிவிடுங்கள். நிச்சயம் கலந்துகொள்கிறேன் என்றேன்.

 

வழக்கறிஞர் இராஜேந்திரன் அவர்களுக்கு  ஒரு சின்ன விபத்தில் காலில் சின்ன முறிவு (Minor Crack).  ஆகையால் சில நாட்கள் வீட்டில் தான் ஓய்வில் இருக்கிறார்.  அவரைப் பார்த்து பேசி வந்தோம்.  அவருடைய மகள் மதிக்கு இன்னும் திருமணத்திற்கான முயற்சிகளில் இருக்கிறார்கள். நம்மால் ஆன உதவிகளை செய்வோம்.

 

இன்னும் இரண்டு நண்பர்களை அவர்களுடைய குடும்ப நிகழ்வுகளுக்காக பார்த்தோம்.   ஒரு நண்பருக்கு ஐம்பது வயதில் ஸ்ட்ரோக் வந்து, உடனடியாக மருத்துவம் பார்த்ததில், தப்பித்துவிட்டார்.  ஆனால் பேச்சு குழறுகிறது.   பிசியோதெரபி போய்க்கொண்டிருக்கிறார்.  என்ன பதட்டம் என்றால், மனைவி அரசு பள்ளி ஆசிரியர், மகனும் அதே பள்ளியில் படிக்கிறார். இருவரையும் காலை 7.30க்கு பேருந்துக்கு கொண்டு போய் விடுவதற்குள் அத்தனைப் பதட்டத்தை உண்டாக்கிவிடுகிறார்கள் என்றார்.  இது தவிர வீட்டை கட்டுவதற்கான வங்கி கடனுக்காக கொஞ்சம் வேலைகள் செய்தோம்.  நாட்கள் போதவில்லை.  இன்னும் சிலரை கூட சந்தித்திருக்கலாம். 

 

இப்படி மேலே நண்பர்களையும், தோழர்களையும் பார்க்க போன பொழுது, மகள் இலக்கியாவும் உடனிருந்தது முக்கியமானது. உறவுகளைப் பேணுவதில் நாம் கவனத்துடன் இருக்கவேண்டிய காலமிது. 

 

சொந்தங்களில் இன்னும் நீ என் வீட்டுக்கு வந்தயா? நான் உன் வீட்டுக்கு வருகிறேன்? என்ற வழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.  நாம் மேம்பட்ட பண்பாட்டை வைத்திருக்கிறோம் என்பதை நாம் அடுத்த தலைமுறைக்கு நாம் அதை செய்து தான் பழக்க வேண்டியிருக்கிறது.