> குருத்து

April 19, 2026

பெங்களூர் : லால் பாக் கார்டன் நகரின் நடுவே ஒரு பெரிய பூங்கா

ஹைதர் அலி காலத்தில் 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் துவங்கி, அவரது மகன் திப்பு சுல்தான் அதை இன்னும் விரிவுப்படுத்தியுள்ளார்.


உலகில் இருந்து நிறைய அரிய தாவரங்களை சேகரித்து வளர்த்துள்ளனர். ஆங்கிலேயர்கள் இன்னும் கொஞ்சம் செழுமைப்படுத்தியுள்ளனர்.

240 ஏக்கர் +, 1800 வகை தாவரம் + மரம் என விதவிதமாய் வளர்ந்து நிற்கிறது.

இத்தனை ஆண்டு கால வரலாறு பூங்காவின் மரங்களே பெரிதாய், மிகப்பெரியதாய் வளர்ந்து நிற்பதே சாட்சி. பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சி. எத்தனை வெயில் அடித்தாலும் வாங்கப்பா பார்த்துக்கலாம் என பூங்கா சவால் விடுகிறது.


நடந்து கடப்பது அத்தனை கால் வலியையும், உடன் மகிழ்ச்சியையும் தருகிறது. பூங்காவை சுற்றி வர சின்ன வண்டிகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ரூ.100 கட்டணம். அது கேட் எண் 2 ல் இருக்கிறது என்கிறார்கள்.

நாங்கள் இந்த வசதி அறியாமல், எண் நான்கில் நுழைந்து கேட் எண் 2 கண்டுப்பிடிப்பதே சிரமமாகிவிட்டது.

ஒன்று மொழி பிரச்சனை. எந்த பக்கம் என கேட்டாலும் சிலருக்கு தெரியவில்லை. இன்னொன்று ஆங்காங்கே நிர்வாகம் போர்டு வைக்காதது ஒரு குறை.

இன்று ஞாயிறு விடுமுறை குடும்பங்களோடு பலர் வந்திருந்தார்கள்.


நுழைவுக்கட்டணம் ரூ. 50. இது எப்பொழுதாவது பயணிப்பவர்களுக்கு கூட சரி. ஆனால் உள்ளூர் வாசிகளுக்கு இது சிரமம் தான்.

மாத பாஸ் போல ஏதேனும் ஏற்பாடு செய்து கொடுத்தால் சரியானது.

சம்பவம் அத்தியாயம் ஒண்ணு (2026) Time Looping Movie


நாயகனான போலீஸ் அதிகாரி நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் தன் துணைவியாரிடம் சொல்லிவிட்டு, புதிய இடத்திற்கு பணிக்கு வந்து சேர்கிறார்.  அது ஒரு காட்டுப் பகுதி. போகிற பாதையில் ஒரு போலீசு அதிகாரி ஜீப்பில் அடிபடுகிறார். அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.

 

அடிப்பட்ட போலீசிடம் ஒரு வாக்கி டாக்கி இருக்கிறது.  அதில், கைதிகளை அழைத்துக் கொண்டு, செல்லும் பொழுது, கைதிகள் தப்பியதாகவும், அவர்களை பிடிக்க  காட்டிற்குள் வந்ததாகவும், தனக்கு காலில் அடிப்பட்டு இருப்பதால், தன்னால் நகர முடியவில்லை. ஆகையால் தன்னைக் காப்பாற்றும்படி அழைக்கிறார்.

 

நாயகனுடன் ஒரு மேலாதிகாரியும், ஒரு போலீசும் உள்ளே செல்கிறார்கள்.  ஆனால் அவரை கண்டுப்பிடிப்பது மிக சிரமமாக இருக்கிறது. அந்த காடு குறித்தான செய்திகள் கொஞ்சம் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன.  உள்ளே சென்றபவர்கள் யாரும் மீண்டும் திரும்பியதில்லை என்றும் சொல்கிறார்கள்.

 

அதற்கேற்றபடி, அங்கு நடக்கும் சம்பவங்கள், திரும்ப திரும்ப நடக்கின்றன.  வேறு காலத்தை சேர்ந்தவர்கள் காட்டில் அலைந்துகொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு மோதலிலும் மண்ணில் ரத்தம் சிந்தும் பொழுது  அங்கு நடக்கும் காட்சிகள் மாறுகின்றன.

 

இறுதியில் என்ன ஆனது என்பதை சுவாரசியமாக சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

***


 

இதே இயக்குநர் இந்த தளத்தில் ஒரு குறும்படம் ஒன்றை எடுத்து, அதை இப்பொழுது முழு நீளப்படமாக மாற்றியிருக்கிறார்கள். படத்தில்  இரண்டாம் பாகத்திற்கும் அடி போட்டிருக்கிறார்கள்.

 

ஆங்கிலத்தில் இந்த வகையான படங்கள், வலைத் தொடர்கள் நிறைய வந்திருக்கின்றன. தமிழில் சிம்புவின் ”மாநாடு” வந்திருக்கிறது. அந்த வரிசையில் இந்த படமும் சேரும்.  மலையாளத்தில் இப்பொழுது வந்திருப்பதால், மக்களுக்கு புரியுமா என்ற சந்தேகத்தில் ஆங்காங்கே விளக்கம் கொடுக்கிறார்கள். அது உண்மை தான். இந்த மாதிரி படங்களை பார்த்திராதவர்களுக்கு குழப்பங்கள் உருவாவது சகஜம். ஏற்கனவே இந்த மாதிரி படங்களை நிறைய பார்த்திருப்பதால் எனக்கு பெரிய ஆச்சர்யம் தரவில்லை.

 

ஜித்து சதீசன் இயக்குநருக்கு முதல் படம் என்பதால் அதற்கேற்ப இயல்புகளுடன் தான் படம் இருக்கிறது. கேரளத்தில் ஓரளவு ஓடியிருக்கிறது.

 

நாயகனின் அப்பாவை நாயகன் பார்த்ததேயில்லை.  படத்தில் ஒரு இடத்தில் பார்க்கிறார்.  இருவரிடமே கொஞ்சம் கூட ரியாக்சனே இல்லை. சில காட்சிகளுக்கு பிறகு, அவரை வழியனுப்பும் பொழுது, “அப்பா இல்லாம வளர்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?” என சன்னமான குரலில் சொல்கிறார். அவ்வளவு தான்.  காட்டுக்குள்ளேயே பெரும்பாலான படம் என்பதால், பசுமையாக இருக்கிறது.

 

ஹாட் ஸ்டாரில் தமிழிலேயே இருக்கிறது.  இந்த மாதிரி படங்களை ஆர்வமாக பார்ப்பவர்கள் பாருங்கள். மற்றவர்களுக்கு பிடிக்குமா? தெரியவில்லை.

 

April 10, 2026

Bou Buttu Bhuta (2025) Odia Horror movie

 


ஒரிசாவின் ஒதுக்குப்புறமான ஒரு கிராமம். ஊரில் யாருக்கு பேய் பிடித்தாலும், அந்த வயதான அம்மாவிடம் அழைத்து வருகிறார்கள். அந்த அம்மாவும் பேயை விரட்டுகிறார். கொடுக்கும் சொற்ப பணத்தை கொண்டு தன் மகனுடன் வாழ்ந்து வருகிறார்.

 

(நாயகனான) மகன் -  ஊரில் குளத்தை குத்தகைக்கு எடுத்து அதில் கிடைக்கும் சொற்பமான மீன்களை ஊரில் விற்று வருகிறார்.  ஊரில் ஒரு மருத்துவரின் மகளோடு காதல் வயப்படுகிறார்.  துபாய்க்கு போய்விடலாமா என்றால், அதற்கும் ஒரு கணிசமான தொகை தேவைப்படுகிறது.

 

ஒரு இரவு நண்பனுடன் ஊர் திரும்பும் பொழுது, பைக் சாவி தொலைந்து போனது என ஒரு பெரிய மரத்தில் ஆணியடித்து  இருந்ததை தற்செயலாக புடுங்க, அவனுக்குள் ஒரு ஆவி உள்ளே புகுந்துவிடுகிறது.

 

அந்த ஆவி பக்கத்து ஊரில் ஒரு பெரிய மனிதரின் மகளை ஒரு ஏழை காதலித்தான் என்பதற்காக, பெண்ணை அப்பனே கொ*ன்று அந்த பழியை அவன் மீது போட்டு, ஒரு பெரிய கும்பல் கொடூ*ரமாக அடித்தே கொ*ன்று விடுகிறது.  அந்த ஆவி எப்ப இவர்களை போ*ட்டுத்தள்ளலாம் என வெ*றியுடன் காத்திருக்கிறது.

 

பிறகு நடப்பது எல்லாம் களேபரம் தான். திடீர் திடீரென ஆடுகள் காணாமல் போகின்றன. கொலைகள் நடக்கின்றன. அந்த அம்மா தன் மகனை ஆவியிடமிருந்து  காப்பாற்ற போராடுகிறார். பிறகு என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

***

 

யாரோ இருவர் இந்த படத்தை ஆஹோ ஓஹோ என எழுதியன் என் கண்ணில் பட இந்த படத்தை தேடி பிடித்து வைத்திருந்தேன். IMDB யிலும் 7.8 யாக இருந்தது. ஆனால் குறைவான ஆட்கள் தான் வாக்களித்திருக்கிறார்கள்.

 

நம் தமிழ் உலகில் இது மாதிரி படங்களை எடுத்து, எவ்வளவோ முன்னேறி வந்துவிட்டோம். அவர்கள் இப்பொழுது தத்தி, தவழ்ந்து வருகிறார்கள்.

 

அங்கு இந்த படம் ஓரளவு நல்ல வசூலாகியிருக்கிறது.  நாயகன், நாயகி பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால்  அந்த நாயகனின் அம்மா ஈர்த்தார். பேய் பிடித்தவரிடம் சமயோசிதமாக நடந்துகொள்வது.  பேய் உள்ளே புகுந்ததாய்,  வீட்டாரை ஆட்டி வைப்பது என நன்றாக செய்திருந்தார்.  மகனை ஏதோ செய்யப்போகிறான் என (அவனும் பேய் ஓட்டுபவன் தான்) கணவனையே தூக்கி மரத்தில் தொங்கவிடுவது எல்லாம்… “வேற லெவல்”

 

யாரும் ஆர்வமாக தேடிப் போய் பார்த்து என்னைத் திட்டாதீர்கள்.