> குருத்து

September 12, 2026

வேர்க்கடலை — மண்ணின் அடியில் ஒளிந்திருக்கும் அரிய செல்வம் - இன்று தேசிய வேர்க்கடலை தினம்


இன்று
தேசிய வேர்க்கடலை தினம்


ஏழையின் பாதாம் பருப்பு என்று அன்புடன் அழைக்கப்படும் இந்த சிறு விதை, உண்மையில் இயற்கை நமக்களித்த மாபெரும் ஊட்டச்செல்வம். வெறும் பலகார பொருளாக மட்டுமல்லாமல், ஒரு முழுமையான ஆரோக்கிய உணவாகவும் இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

 

ஆரோக்கியத்தில் வேர்க்கடலையின் இடம்

 

நூறு கிராம் வேர்க்கடலையில் சுமார் 25.8 கிராம் புரோட்டீன் அடங்கியுள்ளது. இது பாதாம், முந்திரி, அக்ரூட் போன்ற பல வகை கொட்டைகளை விடவும் அதிகம். இதனுடன் இதயத்திற்கு நல்ல ஒற்றை-நிறைவுறா கொழுப்புகள் (monounsaturated fats), நார்ச்சத்து, வைட்டமின் E, நியாசின், மெக்னீசியம், போலேட் போன்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. கொலஸ்ட்ரால் இல்லாத இந்த தாவர புரோட்டீன் இதய ஆரோக்கியத்தையும், இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டையும், நீண்ட நேர பசியின்மையையும் தரவல்லது.

 

ஒரு மனிதனுக்குத் தேவையான புரோட்டீன்

 

பொதுவாக, ஒரு சராசரி வளர்ந்த மனிதனுக்கு ஒரு கிலோ உடல் எடைக்கு 0.8 கிராம் புரோட்டீன் என்ற அளவில் தேவைப்படும். அதாவது, 60 கிலோ எடை கொண்ட ஒருவருக்கு தினமும் சுமார் 48-50 கிராம் புரோட்டீன் தேவை. உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் வளரிளம் பருவத்தினருக்கும் இது இன்னும் அதிகமாகவே இருக்கும்.

 

எவ்வளவு வேர்க்கடலை சாப்பிடலாம்?

 

வேர்க்கடலை சத்துக்கள் நிறைந்திருந்தாலும், அதிக கலோரி கொண்டது (100 கிராமுக்கு சுமார் 567 கலோரி). ஆகவே, அளவோடு உண்பதே ஞானம். ஒரு நாளைக்கு 25-30 கிராம் (சுமார் ஒரு பிடி அளவு) வேர்க்கடலை போதுமானது. இது தினசரி புரோட்டீன் தேவையில் ஏறத்தாழ 15-20 சதவீதத்தை நிறைவு செய்யும், அதே நேரம் கலோரி மிகையையும் தவிர்க்கும்.

 

எந்த வடிவில் உண்பது நல்லது?

 

அவித்த வேர்க்கடலைநீரில் வேகவைப்பதால் புரோட்டீன் சத்து சற்று குறைந்தாலும் (சுமார் 24 கிராம் வரை), எண்ணெய் சேர்க்கப்படாததால் இதுவே ஆரோக்கியமான தேர்வு. இதயத்திற்கும், எடை கட்டுப்பாட்டிற்கும் ஏற்றது.

 

கடலை மிட்டாய்வெல்லம் அல்லது சர்க்கரையுடன் இணைந்திருப்பதால், வேர்க்கடலையின் நன்மையுடன் கூடுதல் சர்க்கரையும் உடலுக்குள் செல்கிறது. எப்போதாவது சிற்றுண்டியாக நல்லது, தினசரி உணவாக ஏற்றதல்ல.

 

மசாலா கடலைஎண்ணெயில் பொரிக்கப்பட்டு, உப்பும் காரமும் சேர்க்கப்படுவதால், சுவையில் முதலிடம் பெற்றாலும் ஆரோக்கிய அடிப்படையில் இதுவே கடைசி இடத்தில் நிற்கும். அதிக எண்ணெயும் உப்பும் இதய ஆரோக்கியத்திற்கு உகந்தவை அல்ல.

 

ஆக, சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் இடையே சமநிலை தேட விரும்பினால்அவித்த வேர்க்கடலை > வறுத்த வேர்க்கடலை > மசாலா கடலை > கடலை மிட்டாய் என்ற வரிசையில் தேர்வு செய்யலாம்.

 

வரலாற்றில் வேர்க்கடலையின் மகிமை

 

நம் நாட்டு வரலாற்றிலும் வேர்க்கடலைக்கு தனி இடம் உண்டு. 1946ஆம் ஆண்டு, காந்தி அவர்கள்  தமது "ஹரிஜன்" இதழில் "வேர்க்கடலையின் பயன்பாடு" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். அதில், வேர்க்கடலை மாவில் மற்ற எந்த தாவர பொருளையும் விட அதிக புரோட்டீன் இருப்பதாகவும், வங்காள பஞ்சத்தின்போது மக்களை காப்பாற்றியது தானியங்களை விட புரோட்டீனே என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ஒரு ஏக்கர் நிலத்தில் விளையும் வேர்க்கடலை, அதே நிலத்தில் விளையும் கோதுமை அல்லது அரிசியை விட பன்மடங்கு புரோட்டீனைத் தரும் என்பதும் அவரது கருத்தாக இருந்தது.

 

மேலும், 1930களில் காந்தி அவர்களின் தூண்டுதலால் தொடங்கப்பட்ட கிராம தொழில்கள் இயக்கம்பின்னாளில் கதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் (KVIC) என உருவானதுவேர்க்கடலை எண்ணெய் ஆட்டும் நாட்டு "செக்கு" தொழிலை கிராமப்புற பொருளாதாரத்தின் அடிப்படையாக மேம்படுத்த முயன்றது.

 

இன்றும் இந்தியாவே உலகிலேயே வேர்க்கடலை எண்ணெய் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது; குஜராத், தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இது அன்றாட சமையலின் அங்கமாக இருக்கிறது. இதனாலேயே வேர்க்கடலை "ஏழையின் பாதாம்" (poor man's almond) என்றும், எண்ணெய் வித்துக்களின் அரசன் என்றும் நம் நாட்டில் பாராட்டப்படுகிறது.

 

முடிவுரை

 

மண்ணின் அடியில் அமைதியாக வளரும் இந்த சிறு விதை, நம் உடலுக்குத் தேவையான புரோட்டீனையும், இதய ஆரோக்கியத்தையும், நீடித்த ஆற்றலையும் அளிக்கும் இயற்கையின் அற்புத பரிசு. அளவோடு, அவித்த வடிவில் தினமும் ஒரு பிடி வேர்க்கடலையை உண்பதுஎளிய, சிக்கனமான, ஆனால் ஆழமான ஆரோக்கிய பழக்கமாக அமையும். இந்த தேசிய வேர்க்கடலை தினத்தில், நம் அன்றாட உணவில் இந்த சிறு விதைக்கு ஒரு சிறப்பிடம் தரலாம் அல்லவா?

 

      இரா. முனியசாமி

 

(13/09/2026 – இன்று தேசிய வேர்கடலை நாள்)

 

September 11, 2026

சாலமன் பாப்பையா அவர்களுக்கு அஞ்சலி!

 


என்னுடைய 15 வயதில், அதாவது 80 களில், மதுரை கோயில் திருவிழாக்கள் நடைபெறும் பொழுது  கலை நிகழ்ச்சிகளில் ஒன்றாக பட்டிமன்றம் நடத்துவார்கள்.  

 

மதுரையில் கோயில்கள் அதிகம். ஆகையால் பட்டிமன்றங்களும் சுற்றி சுற்றி நடக்க துவங்கின. பல இரவுகள் அவருடைய பட்டிமன்றத்தை கேட்டிருக்கிறேன்.

 

ஒருமுறை மதுரை மேலமாசி வீதியில் திரு. குன்றக்குடி அடிகளாரின் தலைமையில் ஒரு பட்டிமன்றம் நடைபெற்றது.  முதலில் பேசியவர் சில நகைச்சுவைகளைப் பேசி, தன்னுடைய உரையை முடித்துவிட்டார்.   நடுவர் ”பேசிய பேச்சாளர் (பெயரைச் சொல்லி) நன்றாக  விசயம் அறிந்தவர் தான். ஆனால் இன்று அவருடைய பேச்சில் நகைச்சுவை அதிகம் இருந்தது. ஆனால் விசயம் பெரிதாக இல்லை” என மக்கள் மத்தியில் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.  அடுத்தமுறை அந்த பேச்சாளர் தான் எடுத்துக்கொண்ட தலைப்பில் அத்தனை அழுத்தமாக பேசினார். இந்த முறை அவரைப் பாராட்டி பேசினார்.

 

அப்படி இருந்த பட்டிமன்றத்தின் பண்பாட்டை, மக்களுக்கு எளிமையாக புரியவைக்கிறோம் என எடுத்துக்கொள்கிற தலைப்பில் பேசுகிற பேச்சில்  சொல்ல வந்த விசயத்தின் அழுத்தம் குறைவாகவும், நிறைய மொக்கை நகைச்சுவைகள் அதிகமாகவும் துவக்க காலத்தில் கலந்தவர்கள் என சாலமன் பாப்பையா குழுவிற்கு பெரிய பொறுப்பு உண்டு. 

 

அதற்கு பிறகு வந்தவர்கள் பட்டிமன்ற வடிவத்தையே இன்னும் கீழே இறக்கிவிட்டார்கள் என்பதை நாமும் வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்தோம்.

 

"வாழ்க்கையோட இறுதிப்பயணத்துல இருக்கேன். இந்த வாழ்க்கை ஒரு ரயில் பயணம்போலத்தான். நான் இறங்க வேண்டிய ஸ்டேஷன் இன்னும் கொஞ்சநேரத்துல வந்துடும். எனக்கு முன்னாடி போனவங்க இறங்கிட்டாங்க. பின்னாடி இறங்க வேண்டியவங்க உட்கார்ந்திருக்காங்க. நான் பெட்டிப் படுக்கையோட இறங்க தயாரா கேட் பக்கத்துல நின்னுட்டு இருக்கேன். எனக்கு வாழ்க்கை நிறைவா இருக்கு. ஒரேயொரு வருத்தம். இந்த வாழ்க்கையில இன்னும் நிறைய புத்தகங்கள் படிச்சிருக்கலாம். இன்னும் நிறைய எழுதியிருக்கலாமுன்னு தோணுது. " என பேசியதாக ஒரு பதிவர் பகிர்ந்திருந்தார்.

 

அவர் சொன்னதோடு. ”இன்னும் ஆரோக்கியமான நல்ல தலைப்புகளில், இன்னும் அழுத்தமாக மக்களிடம் பேசியிருக்கலாம். கொண்டு சேர்த்திருக்கலம்” என்பதை சேர்த்துக்கொள்ளலாம். ஏனென்றால் அவருக்கும், அவருடைய குழுவிற்கு  பேசுவதற்கு சரக்கோ, ஆற்றலோ இல்லாமல் இல்லை. ஆனால் அதை கவனமாக செய்யவில்லை என்பது தான் குறை.

 

மற்றபடி அவருடைய தமிழ் தொண்டிற்கு எப்பொழுதும் மரியாதை உண்டு. அவருக்கு அஞ்சலி.

 

-         - இரா. முனியசாமி

September 9, 2026

Internal Audit : இரண்டு பேரின் வேலை பறிபோனது!

 தேவக்கோட்டை மில்லில்….

 

துவக்க காலத்தில், என்னுடைய 20 களில் தணிக்கையாளர் திரு. சிதம்பரம் அவர்களிடம் மூன்று ஆண்டுகள் உதவியாளராக இருந்தேன். மூன்று உதவியாளர்கள். பெரும்பாலும் அலுவலகம் பக்கம் தலை வைத்தே படுக்கமாட்டோம்.  நேரே நிறுவனங்களுக்கு போய், சோதனை (internal Audit) செய்வது தான் எங்களது வேலை.

 

ஒருமுறை தேவகோட்டை, காரக்குடியில் இரண்டு பஞ்சாலைகள் இருந்தன. அதில் தேவகோட்டையில் இருந்த பஞ்சாலைக்கு நானும் சக ஊழியரும் சோதிக்க போயிருந்தோம். அந்த பஞ்சாலையில் தான் துவக்க காலத்தில்  ஊழியராகவும் எங்கள் தணிக்கையாளர் வேலை செய்திருந்தார்.  தணிக்கையாளரானதும் கூடுதல் பொறுப்புகளை தந்துவிட்டனர்.

 

முதல்நாளில் 50+ வயதில் இருந்த கணக்காளரிடம்  கையிருப்பு ரொக்கத்தைப் பார்த்தால் மூன்று லட்சம் வரை இருந்தன.  எண்ணிப் பார்த்தால், 85 ஆயிரம்  குறைந்தது.   இளவயது என்பதால்… என்னை ஏற்கனவே எண்ணிவிட்டீர்கள் என ஏமாற்றப் பார்த்தார். பரவாயில்லை. வாங்க முதலில் இருந்து எண்ணுவோம் என எண்ணினால், மீண்டும் அதே தொகை குறைந்தது. அதற்கு  பிறகு அவர் அமைதியாகிவிட்டார்.

 

நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டுமே! தெரிவித்தேன்.  தணிக்கையாளரின் வீட்டு தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டால்… பழுதாகி இருந்தது. நேரே வீட்டுக்கே போய்விட்டேன். என்னைப் பார்த்ததும், “காலையில் தான் தேவகோட்டை போனீங்க! இப்ப வந்து நிற்கிற!” என்றார்.   விசயத்தைச்  சொன்னதும், அந்த கணக்காளருக்கு பள்ளி முடிக்கிற காலத்தில் இரண்டு பசங்க இருக்காங்களே! இப்படி ஆகிப்போச்சா! என வருந்தினார்.  பிறகு அவரை வேலையை விட்டு தூக்கிவிட்டதாக செய்தி வந்தது.

 

மதுரை மோட்டார்ஸ் நிறுவனம்

 

ஹீரோ ஹோண்டா நிறுவனம். மாதத்திற்கு ஒருமுறை தணிக்கைக்கு போவோம்.  அந்தமுறை நான் முதன் முதலாக போயிருந்தேன்.   இந்தமுறையும் கையிருப்பு ரொக்கத்தை சோதித்த பொழுது, நிறுவனத்தின் கணக்கு சரியாக இருந்தது.

 

ஆனால்,  வண்டிகள் பதிவு செய்வதற்காக,  வாடிக்கையாள்ர்கள் RTO செலுத்தவேண்டிய பணத்தை .. தனித்தனி கவர்களில் போட்டு வைத்திருந்ததில், நான்கு கவர்களில் பணம் இல்லை. பொய்க்கவர்களாக இருந்தது.  கேட்டால், ”வீட்டின் அவசர மருத்துவ தேவைக்கு அதை எடுத்துச் செலவழித்துவிட்டேன். நிர்வாகத்திடம் தெரிவித்துவிடாதீர்கள்” என பாவமாக கெஞ்ச ஆரம்பித்துவிட்டார்.   அவருக்கும் வயது 50+ ல் இருந்தார்.

 

தணிக்கையாளருக்கு போனில் தெரியப்படுத்தினால்,  எப்பொழுதும் கொஞ்சம் கிண்டலாக பேசுகிறவர் “என்னப்பா! போகிற இடத்தில் எல்லாம், கேசியரை காலி பண்ணிடற! சரி! நிர்வாகத்திடம் முறையாக தெரிவித்துவிடு!” என்றார்.

 

-         - இரா. முனியசாமி