> குருத்து

June 25, 2026

குழந்தைகள் கேட்டது பொம்மை அல்ல... பெற்றோர்களின் நேரம்!

 

குழந்தைகள் கேட்டது பொம்மை அல்ல... பெற்றோர்களின் நேரம்!

 

"உங்கள் குழந்தையின் நினைவில் நிற்பது நீங்கள் வாங்கி கொடுத்த பொருள் அல்ல; நீங்கள்  கவனத்துடன் அவர்களுடன் செலவழித்த நேரம் தான்”

 

****

2018-ம் ஆண்டு ஜெர்மனியில் ஒரு வித்தியாசமான ஊர்வலம் நடந்தது. பொதுவாக மக்கள் தெருவில் இறங்கினால் என்ன கேட்பார்கள்? சம்பள உயர்வு கேட்பார்கள். சாலை கேட்பார்கள். தண்ணீர் கேட்பார்கள். மின்சாரம் கேட்பார்கள்.

 

ஆனால் அந்த நாள் தெருவில் இறங்கியது குழந்தைகள். அவர்களது கோரிக்கையும் வித்தியாசமானது. "எங்களுடன் விளையாடுங்கள்; உங்கள் மொபைலுடன் அல்ல!" என்று பதாகை தூக்கிக்கொண்டு நடந்தார்கள். இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்தது 7 வயது சிறுவன் Emil என்றால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.

 

சில குழந்தைகள், "நாங்கள் இங்கே இருக்கிறோம். ஆனால் நீங்கள் மொபைலைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்" என்றும் எழுதிக்கொண்டு வந்திருந்தார்கள்.

 

செய்தியைப் படித்தபோது முதலில் சிரிப்புதான் வந்தது. ஜெர்மனியில் கூட இதற்காகவா போராட்டம்? பிறகு கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் சிரிப்பு மெதுவாக மறைந்துவிடுகிறது. ஏனென்றால் அது ஜெர்மனியின் பிரச்சினை மட்டும் அல்ல. அது நம்முடைய வீட்டுக் கதையும் கூட.

 

ஒரு காலத்தில் வீட்டில் குழந்தைகள் அம்மா அப்பாவைத் தேடினார்கள். இப்போது சில வீடுகளில் குழந்தைகள் அம்மா அப்பாவின் முகத்தைக் காண்பதற்கே நேரம் தேட வேண்டியிருக்கிறது.

 

காலை எழுந்ததும் மொபைல். உணவு சாப்பிடும்போது மொபைல். பயணத்தில் மொபைல். இரவு தூங்குவதற்கு முன் மொபைல். சில நேரம் பார்த்தால் வீட்டில் நான்கு பேர் இருப்பார்கள். ஆனால் நான்கு பேரும் நான்கு உலகத்தில் இருப்பார்கள்.

 

ஒருவர் காணொளி பார்க்கிறார். ஒருவர் குறுஞ்செய்தி அனுப்புகிறார். ஒருவர் விளையாட்டு விளையாடுகிறார். மற்றொருவர் சமூக வலைத்தளத்தில் மூழ்கியிருக்கிறார்.

 

வீடு இருக்கிறது. குடும்பம் இருக்கிறது. ஆனால் உரையாடல் இல்லை.  ஒரு குழந்தைக்கு உண்மையில் என்ன வேண்டும்?

 

பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொம்மையா? புதிய மிதிவண்டியா? புதிய உடையா? இல்லை. அது அப்பாவிடம் ஒரு கதையைச் சொல்ல வேண்டும். அம்மாவுடன் ஐந்து நிமிடம் சிரித்துப் பேச வேண்டும். பள்ளியில் நடந்த ஒரு சிறிய சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.  அவ்வளவுதான்.

 

குழந்தைகளின் ஆசைகள் பெரியவை அல்ல. நாம் அவற்றைக் கவனிக்காததால்தான் அவை பெரியதாகத் தோன்றுகின்றன.

 

ஒரு சிறுவன் சொன்னதாக ஒரு வரி படித்தேன். "அப்பா, உங்கள் கையில் இருக்கும் மொபைலுடன் நான் போட்டி போட முடியவில்லை." இந்த ஒரு வரி போதும். குழந்தை தோற்றுப் போய்விட்டதாக ஒப்புக்கொள்கிறது.

 

அப்பாவை வெல்ல வந்தது இல்லை. அப்பாவின் கவனத்தில் ஒரு சிறிய இடம் கேட்டது. அதுவும் கிடைக்கவில்லை.

 

வாழ்க்கையில் ஒரு விசித்திரமான உண்மை இருக்கிறது. பணம் சம்பாதிக்காமல் இருந்தால் பிறகு சம்பாதிக்கலாம். வீடு கட்டாமல் இருந்தால் பிறகு கட்டலாம். வண்டி வாங்காமல் இருந்தால் பிறகு வாங்கலாம். ஆனால் குழந்தையின் பத்து வயதை பிறகு வாங்க முடியாது. அதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய கணக்கு.

 

இன்று உங்கள் அருகில் உட்கார்ந்து பேச விரும்பும் குழந்தை, பத்து ஆண்டுகள் கழித்து தனது உலகத்தில் பிஸியாகிவிடும். அப்போது நேரம் இருக்கும். ஆனால் அந்த வயது இருக்காது.

 

ஒரு நாளில் ஒரு மணி நேரம் கூட வேண்டாம். இருபது நிமிடம் போதும். மொபைலை ஓரமாக வைத்துவிட்டு, "இன்று என்ன நடந்தது?" என்று கேட்டுப் பாருங்கள். குழந்தையின் முகத்தில் வரும் ஒளி எந்த திரையிலும் கிடைக்காது.

 

இறுதியாக...

 

ஜெர்மனியில் குழந்தைகள் தெருவில் இறங்கி போராடியது உணவுக்காக அல்ல. புதிய பொம்மைக்காக அல்ல. பெற்றோரின் நேரத்திற்காக. குழந்தைகள் நம்மிடம் கேட்பது பணத்தை அல்ல. நேரத்தை.

 

அவர்கள் எதிர்பார்ப்பது பரிசுகளை அல்ல. நம் இருப்பை.

 

-        -  இரா. முனியசாமி

 


புகைப்படம் : ஜெர்மனியில் அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சிறுவர்களில் ஒரு பையனின் படம்.


மொபைல் அடிக்சன் எந்த அளவிற்கு பாதிக்கிறது?


 

1.    1.  வேலை தொடங்கும் திறன் குறைகிறது

 

பலர் கவனிப்பது இதுதான். ஒரு வேலை செய்ய அமர்கிறார்கள். அப்போது ஒரு WhatsApp செய்தி வருகிறது. "இதற்கு மட்டும் பதில் சொல்லிவிடலாம்" என்று நினைக்கிறார்கள்.

 

அதிலிருந்து YouTube. அதிலிருந்து Facebook. அதிலிருந்து செய்திகள். அரை மணி நேரம் எங்கே போனது என்று தெரியாது. வேலையைச் செய்வதில் உள்ள சிரமம் அல்ல, வேலையைத் தொடங்குவதிலேயே சிரமம் உருவாகிறது.

 

2. ஆழமாக சிந்திக்கும் திறன் குறைகிறது

 

வரி ஆலோசனை, சட்ட ஆய்வு, கணக்குப் பணி, எழுத்துப் பணி போன்ற வேலைகளுக்கு தொடர்ச்சியான சிந்தனை தேவை.

 

மொபைல் தொடர்ந்து கவனத்தை உடைத்துக்கொண்டே இருந்தால், மூளை "ஆழமான வேலை" (Deep Work) செய்ய முடியாமல் போகிறது.

அதன் விளைவு சாதாரண விஷயங்களிலும் தவறுகள் , கணக்கில் கவனக்குறைவு , ஆவணங்களை முழுமையாகப் படிக்க இயலாமை ,மேலோட்டமான புரிதல்

 

3.      நினைவாற்றல் பலவீனமாகிறது

 

முன்பு ஒரு தொலைபேசி எண், ஒரு முகவரி, ஒரு சட்டப் பிரிவு எண் மனதில் இருக்கும். இப்பொழுது "தேவைப்பட்டால் Google பார்க்கலாம்" என்ற மனநிலை உருவாகிறது. தகவலை நினைவில் வைத்துக்கொள்வதற்கு பதிலாக, தகவல் இருக்கும் இடத்தை மட்டும் நினைவில் வைக்கத் தொடங்குகிறோம்.

 

4. முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படுகிறது

 

மொபைல் உலகம் உடனடி இன்பத்தை தருகிறது. ஒரு வீடியோ  ஒரு Like  ஒரு Message  ஒரு Notification  எல்லாமே உடனடி மகிழ்ச்சி.

 

ஆனால் வாழ்க்கையின் முக்கிய வேலைகள் -  தொழில் வளர்ச்சி தேர்வு தயாரிப்பு , புதிய திறன் கற்றல், உடல்நலம் , இவை எல்லாம் தாமதமான பலனைத் தருபவை. அதனால் நீண்டகால நன்மையை விட உடனடி மகிழ்ச்சியைத் தேர்வு செய்யும் பழக்கம்  ருவாகிறது.

 

5. வேலை நேரம் அதிகரிக்கிறது

 

இது ஒரு வித்தியாசமான பிரச்சினை. ஒரு வேலையை 2 மணி நேரத்தில் முடிக்க முடியும். ஆனால் இடையில் 20 முறை மொபைல் பார்த்ததால், அதே வேலை 5 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது.

 

பிறகு:  "வேலை அதிகம்" என்று தோன்றுகிறது. உண்மையில் வேலை அதிகமாகவில்லை. கவனம் சிதறியது.

 

6. மனஅழுத்தம் அதிகரிக்கிறது

 

செய்ய வேண்டிய வேலைகள் முடிவதில்லை. நாள் முடிவில் குற்ற உணர்வு வருகிறது. "இன்று என்ன செய்தேன்?" என்ற கேள்வி எழுகிறது. இதுவே மனஅழுத்தத்திற்கும் தன்னம்பிக்கை குறைவிற்கும் வழிவகுக்கிறது.

 

மொபைல் அடிமைத்தனம் என்பது நேரத்தைத் திருடும் திருடன் மட்டும் அல்ல.

அது மெதுவாக: கவனத்தைத் திருடுகிறது,  சிந்தனையைத் திருடுகிறது,  நினைவாற்றலைத் திருடுகிறது,  வேலை முடிக்கும் திறனைத் திருடுகிறது.

 

ஒரு நாள் முழுவதும் மொபைலில் இருந்தவர் சோர்வாக இருப்பார். ஆனால் அவர் கடினமாக உழைத்ததால் அந்த சோர்வு வரவில்லை. ஆயிரம் சிறிய கவனச்சிதறல்களால் மூளை களைத்துப் போனதால் அந்த சோர்வு வருகிறது.


இறுதியாக...

 

மொபைல் அடிமைத்தனத்தின் மிகப்பெரிய பாதிப்பு நேர இழப்பு அல்ல. தனது வாழ்க்கையைத் தானே நடத்தும் திறன் மெதுவாகக் குறைவதுதான் அதன் மிகப்பெரிய விலை.

 

-          இரா. முனியசாமி

 

#Mobile_Addiction_Series2