> குருத்து

April 20, 2024

Porter லில் உள்ள சிரமம்


ஒரு சொசைட்டி என் வழியாக என் பகுதியில் இருக்கும் தணிக்கையாளர் ஒருவருக்கு ஒரு பொருளை அனுப்ப கொடுத்தனுப்பியது. போர்ட்டரை தேர்ந்தெடுத்து அனுப்பினேன்.


என் வீட்டில் இருந்து அவருடைய அலுவலகம் நான்கு கிலோ மீட்டர் தூரம் இருந்தது. அவர்களுடைய ஆப்பில் அடிப்படை விவரங்களை கொடுத்ததும்.. அதற்கான கட்டணம் என ரூ. 25ஐ காட்டியது. குறைவாக காட்டுகிறதே என மனதில் பட்டது. நீண்ட நாட்கள் கழித்து பயன்படுத்துவதால், தள்ளுபடியில் தருவதாக நினைத்துக்கொண்டேன்.

பைக்கில் ஒருவர் வந்து அந்த பொருளை வாங்கும் பொழுது... ”பணம் நீங்கள் தருகிறீர்களா?” என கேட்டார். ”நீங்கள் பொருளைக் கொடுப்பவரிடம் வாங்கி கொள்ளுங்கள்” என்றேன். சரி என்றார்.

சம்பந்தப்பட்டவருக்கு ரூ. 25 என கட்டணம் காட்டிய தகவலை அனுப்பிவிட்டு மறந்துபோனேன். சரியாக 45 நிமிடங்கள் கழித்து ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. போர்ட்டலில் இருந்து ஒரு இளம்பெண் பேசினாள்.

“என்ன சார்? 25ரூ தான் சார்ஜ் கொடுத்திருக்கிறீர்கள்?” என கேட்டார். ”நான் ஏதும் சார்ஜ் தீர்மானிக்கவில்லையே! உங்களுடைய ஆப் தான் இவ்வளவு கட்டணம் என காட்டியது!” என்றேன். தங்கள் நிறுவனத்துக்கு ஏற்பட்ட அநீதி குறித்து கேள்வி கேட்பதாக அவளின் குரல் ஓங்கி இருந்தது. “அது எங்கள் ஆப் காட்டியது இல்லை! கூகுள் மேப் குறைவான தூரத்தைக் காட்டுகிறது.” என்றாள். “கூகுள் மேப் காட்டும் தூரத்தை வைத்து விலை தீர்மானிப்பது உங்கள் ஆப் தானே! நானில்லையே” என்றேன். இருவர் பேசும் பொழுது, கொண்டுப் போய் சேர்த்த நபரும் லைனிலேயே இருந்தார். அவருடைய பொது அறிவில் அது என் மேல் தவறு இல்லை. போர்ட்டர் ஆப்பில் தான் தவறு இருக்கிறது! புரிந்துகொண்டார். பிறகு ஒருவழியாக உரையாடல் முடிவுக்கு வந்தது. அந்த பெண்ணால் அது என் பிரச்சனையில்லை, தங்களுடைய நிறுவன ஆப்பில் உள்ள பிரச்சனை என்பதை கடைசிவரை புரிந்துகொள்ளவே முடியவில்லை.

சென்னையில் பொருளை எடுத்து செல்லும் பல வாகனங்களில் போர்ட்டர் விளம்பரத்தைப் பார்க்கிறேன். அப்படி ஒரு பெரிய நெட்வொர்க்கில் அடிப்படையாக இப்படி ஒரு பிரச்சனை இருப்பது ஆச்சர்யமாய் இருக்கிறது.

ஆகையால் போர்ட்டரைத் தேர்ந்தெடுக்கும் பொழுது கவனமாய் இருங்கள். இல்லையெனில் இப்படியொரு சிக்கலை நீங்களும் எதிர்கொள்வீர்கள்.

பி.எப். தளமும், இ.எஸ்.ஐ தளமும் வேலை செய்யாமல், நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் மிகவும் சிரமப்படுத்துகிறது.


சமீப காலங்களில் பி.எப். தளமும், இ.எஸ்.ஐ தளமும் பல சமயங்களில் வேலை செய்யாமல், நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் மிகவும் சிரமப்படுத்துகிறது.


பல சமயங்களில் வேலை செய்யவில்லை என்பதால், ஒரு நிறுவன முதலாளி தளம் கொடுக்கும் தாமதத்தை, சிரமத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல், "உங்களுடைய கணக்கிற்கு தொகையை அனுப்பிவிடுகிறேன். நீங்கள் கட்டிவிடுகிறீர்களா?" என கேட்கிறார்கள். அதே தளத்தில் தானே நானும் பணம் செலுத்தவேண்டும். சிரமமாய் இருக்கிறது.

தொகையைச் செலுத்துவது கூட பிரச்சனையில்லை. நிறுவனங்களுக்கு வரி செலுத்தும் பொழுது, வரி ஆலோசகர்கள் தங்களுடைய கணக்கில் இருந்து செலுத்துவதைத் தவிருங்கள். நாளை நிறுவனம் ஏதோ ஒரு பிரச்சனையில் அவர்களுடைய வங்கி முடங்கும் போழுது, உடனே நம்ம வங்கிக்கணக்கில் பணத்தை எடுப்பதற்கு உத்தரவிட்டுவிடுவார்கள் என சொன்னதில் இருந்து.... ஒரே திகிலாகவே இருக்கிறது.

தொழிலாளர்களுக்கான பி.எப். தளம் எப்பொழுதுமே தகராறு தான். தொழிலாளர்கள் பணத்தை எடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே அந்த தளத்தை அப்படியே விட்டு வைத்திருக்கிறார்கள் என நினைப்பேன். தளம் தருகிற அத்தனை சிரமங்களையும் தொழிலாளர்கள் எதிர்கொள்கிறார்கள். பாதுகாப்பு அம்சங்களுக்கன என கடந்த சில மாதங்களில் ஆதார் ஓடிபி இருந்தால் தான் உள்ளேயே நுழையமுடியும் என மாற்றிவிட்டார்கள். பி.எப். தளமே எப்பொழுதாவது தான் வேலை செய்யும். அப்படி வேலை செய்யும் பொழுது, ஆதார் தளம் ஓடிபி அனுப்பாமல் தகராறு செய்கிறது.

இதில் இ.எஸ்.ஐ தளமும் அப்படித்தான். இப்படி வேலை செய்யவில்லை என இ.எஸ்.ஐ. தலைமை அலுவலகத்திற்கு குறிப்பாக தொழில்நுட்ப பிரிவுக்கு போன் செய்தால், கொஞ்சம் கூட கூசாமல், "ஆறு மணிக்கு மேல் வேலை செய்யுமே" என என கூலாக பதில் சொல்வார்கள்.

நாம் வரி ஆலோசகர்கள் ஆறு மணிக்கு மேல் வேலை செய்துவிடுவோம். ஆனால் பல நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் என்ன செய்வார்கள்? இதற்காகவே ஆறு மணிக்கு மேல் வரை இருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.

பிஎப். தொழிலாளர்களுக்கான தளத்தை குறித்து ஒரு அனுபவம் :

ஒரு நிறுவனம் சென்னையில் இருக்கிறது. அவர்கள் பக்கத்து மாநிலத்தில் ஒரு
பெரிய கல்லூரியில் கேன்டின் கான்டிராக்ட் தொழில் செய்து வருகிறார்கள்.

அங்கு வேலை செய்யும் தொழிலாளி ஒருவருடைய குழந்தைக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தவேண்டும் என பி.எப்.பில் தன் கணக்கில் கடன் விண்ணப்பித்து தாருங்கள் என கேட்டுள்ளார்.

1. நான் அந்த நிறுவனத்தின் பி.எப். ஆலோசகர் என்பதால் முதலில் என்னைத் தொடர்புகொண்டு எனி டெஸ்கில் இணைத்துகொள்ளவேண்டும். (இது முதல் டாஸ்க். நான் சிஸ்டத்தில் இருக்கும் பொழுது தான் என்னை இணைக்கமுடியும்.)

2. சென்னையில் உள்ள பணியாளர் நேரடியாக அங்கு வேலை செய்யும் அந்த தொழிலாளியிடம் பேசக்கூடாது. கடந்த கால கசப்பான நினைவுகள் இந்த விதிக்கு தள்ளியிருக்கிறது. அங்கு இருக்கும் மேற்பார்வையாளரிடம் தான் ஓடிபி கேட்கவேண்டும். அவர் தன் வேலைகளில் எப்பொழுதுமே ரெம்ப ரெம்ப பிசி. அவர் தான் அந்த தொழிலாளியிடம் ஓடிபி கேட்டுத்தரவேண்டும். இது அடுத்த பெரிய டாஸ்க்.

3. தளத்தில் உள்ளே நுழைவதே பெரிய டாஸ்க். தளம் நம் ”அதிர்ஷ்டத்திற்கு” வேலை செய்து, ஓடிபி கேட்கும் பொழுது ஆதார் தளம் பல சமயங்களில் ஓடிபி தருவதில்லை. அப்படியே ஆதார் ஓடிபி தந்துவிட்டால், மேற்பார்வையாளரிடம் தெரிவித்து, அவருடைய பிசியான வேலையில் நினைவில் வைத்து அவர் அந்த தொழிலாளியை தொடர்புகொள்ளும் பொழுது, (அப்பொழுது தான் பஜ்ஜியோ, போண்டாவோ சுடச்சுட சுட்டுக்கொண்டிருப்பார்) ஓடிபி வாங்கித் தருவதற்குள் அந்த ஓடிபி அநேகமாக காலவதியாகிவிடும். விக்கிரமாதித்தன் போல சற்றும் மனம் தளராமல் மீண்டும் முயற்சி செய்து...

இந்த மாதத்தில் மட்டும் மூன்று முறை முயற்சி செய்தும் பி.எப்பில் முன்பணத்திற்கு விண்ணப்பிக்க முடியவில்லை.

அந்த தொழிலாளியை அவர் வேலை செய்யும் இடத்திற்கு அருகிலேயே இணையம் இருக்கும் ஒரு ஜெராக்ஸ் கடையில் விண்ணப்பிக்க சொல்லுங்கள். எளிதாக வேலை முடிந்துவிடும் என சொன்னால்... நிறுவனத்தின் விதி அதை சொல்லக்கூடாது என கறாராக சொல்கிறது. அதிலும் கடந்த கால கசப்பான நினைவுகள் இருக்கின்றன என்கிறார்கள்.

குறிப்பாக அந்த நிறுவனத்தில் விசேச சூழல் ஒரு பக்கம் இருக்கட்டும். பி.எப். தளம் சீரான நிலையில் வேலை செய்து, ஆதார் தளமும் ஓடிபி தந்துவிட்டால், எல்லாம் உடனே முடிந்துவிடும். பூனைக்கு யார் மணி கட்டுவது?

நம்மால் சாத்தியமானது எல்லாம், சம்பந்தப்பட்ட இ.எஸ்.ஐ, பி.எப் இரண்டுக்குமான மின்னஞ்சலுக்கு புகார் அனுப்புவது மட்டுமே! அதை செய்யலாம் என முடிவெடுத்திருக்கிறேன்.

Killa (கோட்டை) 2014


மராத்தி மண்ணில் கொங்கன் பகுதிக்கு அம்மா தன் மகனுடன் வந்து சேர்கிறார். அவர் வருவாய் துறையில் ஒரு இடைநிலை அதிகாரி. மகன் ஏழாவது படிக்கிறான். அவருடைய கணவன் கடந்த ஆண்டு நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறார்.

புதிய அலுவலகம். புதிய சக ஊழியர்கள். வளைந்து போகச் சொல்லும் உள்ளூர் பிரமுகர்கள் என புதிய சூழலை சிரமத்துடன் எதிர்கொள்கிறார். புதிய ஊர். புதிய பள்ளி. சுற்றிலும் புதிய மனிதர்கள் அவனால் இயல்பாக அங்கிருக்க முடியவில்லை. அவன் நினைவில் அவன் வாழ்ந்த பூனே இன்னும் நிறைய தங்கியிருக்கின்றன.

புதிய நண்பர்களை கண்டடைந்து, முரண்பட்டு, திரும்ப பேசி…. அந்த பையன் நிலைமையை புரிந்து கொண்டு, இயல்பு நிலைக்கு மாறும் பொழுது, அம்மாவிற்கு அடுத்த மாற்றல் உத்தரவு வந்து சேருகிறது.



அந்த பையன் அவன் வயதுக்குரிய தொல்லைகளுக்கு ஆளாக்காமல், கொஞ்சம் தெளிவாக தான் இருக்கிறான். சூழ்நிலை தான் அவனை இறுக்கமாக்குகிறது.

அம்மா – மகன் முரணுக்கு பிறகான புரிதல், பள்ளி நண்பர்கள் முரணுக்கு பிறகான நெருக்கம் எல்லாம் இயல்பாக இருக்கிறது. அந்த பெண்ணின் மீது அக்கறை கொண்டு, இன்னொரு திருமணத்தை யோசிக்கவில்லையா என கேட்பது அழகு.

கடற்கரையை ஒட்டிய நிலம், மழையும், ஈரமுமாய், அலைகள் சத்தம் எதிரொலிக்கும் கோட்டையுமாய் கொங்கன் நம்மை அத்தனை ஈர்க்கிறது. நம்மூர் நாகர்கோவில் நிலத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது. அந்த நிலம் தான் அந்த பையனின் மனநிலையை விரைவில் சமநிலைக்கு கொண்டு வந்தது எனலாம். மீண்டும் அந்த ஊரை விட்டு போகும் பொழுது, பூனே நிலம் அவன் நினைவில் மங்கி, கொங்கன் நிலம், அதன் நினைவுகளும் அவனை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கின்றன.

அந்த பையன், அவனின் அம்மா, சக பள்ளி மாணவர்கள் எல்லோரும் படம் முடிந்தும் நினைவில் நிற்கிறார்கள். புகழ்பெற்ற “பாதாள் லோக்” வலைத்தொடர், திரீ ஆப் அஸ் படத்தை எடுத்த இயக்குநர் அவினாஷ் அருணுக்கு இந்தப் படம் முதல்படம்.

ஜீ5ல் இருக்கிறது. அமைதியான, அழகான படத்தை விரும்புவர்கள் மட்டும் முயற்சி செய்யுங்கள்.