வளரிளம் பருவம் என்பது குழந்தைகளின் கற்பனை உலகத்திற்கும், பெரியவர்களின் எதார்த்த உலகத்திற்கும் இடைப்பட்ட ஒரு காலம். முழுமையான குழந்தைத்தனமும் அல்லாத முழுமையான முதிர்ச்சியையும் பெறாத குழப்பமான காலகட்டம் அது. குழந்தைகளுக்கே உரிய ‘உடனடியாக கிடைக்க வேண்டும்’ என்ற மனநிலையும், பெரியவர்களுக்கே உண்டான “சுய முடிவெடுத்தல்’ க்கு உண்டான ஆசையையும் ஒருங்கே கொண்டிருக்கும் பருவம் இது. இந்த பருவம்அழகானதுமாக, அதே நேரத்தில் குழப்பமூட்டுவதாகவும் இருக்கும்.
அதுவரை குழந்தையாக இருந்த ஒருவனின் உடல் திடீரென வளரத் தொடங்குகிறது. இந்த வளர்ச்சி அத்தனை துரிதமாக நடக்கிறது. சட்டென உயரமாகி நிற்பார்கள், குரல் கரகரத்துவிடுகிறது, ரோமங்களும், அந்தரங்க பகுதிகளும்திடீரென ஒரு பொலிவிற்கு வந்துவிடுகிறது. உடலில் நடக்கும் இந்த மாற்றங்களின் வேகத்திற்கு இணையாக மனதில் மாற்றங்கள் நிகழ்வதில்லை. உடலளவில் சட்டென வளர்ந்துநிற்கும் வளரிளம் பருவத்தினர் உள்ளுக்குள் அதேகுழந்தையாகவே இருக்கிறார்கள்.
உடலுக்கும், மனதுக்குமான வளர்ச்சியில் ஏற்படும் இந்த சமநிலையின்மை வளரிளம் பருவத்தினரின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது. விலையுயர்ந்தபொருளை கையில் வைத்திருக்கும் ஒருவர் அதை எப்படி பயனபடுத்துவது என தெரியாமல் தவிப்பது போல வளரிளம் பருவத்தினர் தவிக்கிறார்கள். இந்த தவிப்பை அவர்கள் உணர்வதில்லை. ஆனால் அவர்களின் பெற்றோர்கள் உணர்ந்திருக்கிறார்கள்! . இதனால் தான் பல பெற்றோர்களுக்கு“இப்போது நாங்கள் எப்படி நடந்து கொள்வது?” என்ற கேள்வி எழுகிறது.
பல நேரங்களில் இளம்வயது குழந்தைகளின் நடத்தைகள் பெரியவர்களுக்கும் புரியாமல் குழம்புகிறார்கள். ஒரு நாள் அமைதியாக இருப்பவர்கள், மறுநாள் கோபமாக இருக்கிறார்கள். அவர்கள் விருப்பு, வெறுப்புகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. எண்ணங்கள், கனவுகள் நிலையானதாக இல்லை. நண்பர்களும் மாறிக்கொண்டேயிருக்கிறார்கள். பெற்றோர்களால் இந்த மாறிக்கொண்டேயிருக்கும் குணநலன்களை புரிந்து கொள்ளமுடியவில்லை.
“கொஞ்ச நாள் முன்பு இது தான் வேண்டும் என சொன்னவன், இப்போது இது வேண்டவே வேண்டாம் என்கிறான்” என கோபப்படுகிறார்கள். அவர்களின் நடவடிக்கைகளின் மீது சந்தேகம் கொள்வார்கள். இது முரண்பாடு அல்ல வளர்ச்சியின் இயல்பான அங்கம். ஆம். மனிதனின் வளர்ச்சியில் வளரிளம் பருவத்தில் நடப்பது போல அத்தனை துரிதமான வளர்ச்சி வேறெந்த பருவத்திலும் நிகழ்வதில்லை. மேலும், உடலுக்கும், மனதுக்கும் இடையேயான சமநிலையற்ற வளர்ச்சியும் இந்தபருவத்திற்கே உண்டானது. அதனால் பெரியவர்களாகிய நாம் இந்த பருவத்தை “கட்டுப்படுத்த வேண்டிய பருவம்” என்றுபார்க்காமல், “புரிந்து கொண்டு வழிநடத்த வேண்டிய பருவம்” என்று பார்க்கும்போது தான் வளரிளம் பருவத்தினரின்குணநலன்களில் நேர்மறையான நல்ல மாற்றம் உருவாக முடியும்.
உடல் ரீதியான மாற்றங்கள்: வெளியே வளர்ச்சி; உள்ளேகுழப்பம்
இளமைகாலத்தின் முதல் அடையாளம் உடல் வளர்ச்சிதான். சில மாதங்களிலேயே உயரம் அதிகரிக்கலாம். உடல் வடிவம்மாறலாம். குரல் மாறலாம். பெண்களில் மார்பக வளர்ச்சி, ஆண்களில் தசை வளர்ச்சி, உடல் முடி அதிகரித்தல் போன்றமாற்றங்கள் நடக்கலாம்.
இந்த மாற்றங்களை பெரியவர்கள் சாதாரணமாகஎடுத்துக்கொண்டாலும், இளம் பருவத்தினருக்கு இது பெரும்அனுபவமாக இருக்கும். “நான் எப்படி தெரிகிறேன்?”, “என்னைக்குறித்து நண்பர்கள் என்ன நினைப்பார்கள்?” என்ற கவலைஅவர்களுக்குள் அதிகமாக இருக்கும். மிகச்சிறந்த வகையில்தங்களை தங்களின் நண்பர்களிடம் வெளிப்படுத்துவது தான்இந்த வயதின் மிக முக்கியமான உந்துதலாக இருக்கும். சமூகவலைதளங்களின் காலகட்டத்தில் தங்கள் இந்த உடல் ரீதியானமாற்றங்களுக்கான அங்கீகாரத்தை பெரும்பாலும் சமூகவலைதளங்களில் இருந்தே எதிர்பார்க்கிறார்கள்.
சிலர் தங்கள் உடலை ஏற்க முடியாமல் வெட்கப்படுவார்கள். சிலர் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு குறையாகஉணர்வார்கள். இது உடலின் பிரச்சனை அல்ல. இன்றையஇளைய தலைமுறையினரிடம் உருவாகியிருக்கக்கூடிய ஒருஒப்பீட்டு அழுத்தம்.
இன்றைய சமூக வலைதளங்கள் உடல் ரீதியான ஒப்பீட்டைஅதிகரித்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இந்த ஒப்பீட்டைமிகைபடுத்தியும் இருக்கின்றன. நிஜவுலகம் என்பது அசலானது. அங்கு பார்க்கும் அனைவரும் அசலானவர்கள். அசலானநண்பர்கள், அசலான முகம், அசலான நடவடிக்கைகள். அதனால் அங்கு எதிர்கொள்ளும் உடல் ரீதியானவெளிப்பாடுகளும், ஒப்பீடுகளும் அசலானவை. அங்கே பார்க்கும்தங்களின் சக வயதினர் தங்களை போலவே அத்தனைபோதாமைகளுடன் இருக்கிறார்கள் என்பது ஒருவகையில்எதார்த்தத்தை புரிய வைக்கும். ஏற்றுக்கொள்ள வைக்கும். ஆனால், சமூக வலைதளங்கள் மிகைப்படுத்தப்பட்டவை. அங்குபார்க்கும் கணக்குகள் மிகையான வெளிப்பாடுகளாகஇருக்கின்றன. மிகையான அழகு, மிகையான வாழ்க்கை, மிகையான ஒப்பீடுகள். இந்த மிகையும், போலியும் இந்தவயதினரை தாழ்வு மனப்பான்மை கொள்ள செய்கிறது. தங்களின்உடலின் மீதும், அழகின் மீதும் அவமானம் கொள்ள வைக்கிறது. அதனால் தான் இன்றைய கால வளரிளம் பருவத்தினரிடம்தங்களின் உடல் மீதும், உருவ அமைப்பின் மீதும் ஏராளமானதாழ்வு மனப்பான்மையை பார்க்க முடிகிறது. இந்த தாழ்வுமனப்பான்மை அவர்களின் அடையாளத்தை, ஆளுமையை, அதன்இயல்பான வளர்ச்சியை பாதிக்கிறது. இந்த வகையான பாதிப்புதான் வளரிளம் பருவத்தினரின் பெரும்பாலான உளவியல்பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது.
இந்த பிரச்சினையை பெரியவர்களாகிய நாம் சரியாகஅணுகுகிறோமா? பெற்றோர்கள் இந்த பிரச்சினையை புரிந்துகொண்டிருக்கிறார்களா?
நிச்சயமாக இல்லை.
வழக்கம் போல, உடல் தோற்றங்களை ஒப்பீடு செய்கிறோம், உடல் ரீதியாக அவர்கள் கொண்டிருக்கக்கூடிய தாழ்வுமனப்பான்மையை அகற்றாமல் அதை இன்னும் மோசமாக்கும்வகையில் அவர்களின் உடல் குறித்து விமர்சிக்கிறோம். “பாடிஷேமிங்” குறித்து முந்தைய தலைமுறைகள் கொண்டிருந்தமதிப்பீடுகளுக்கும், இன்றைய தலைமுறையினர்கொண்டிருக்கும் பதட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள்இருக்கின்றன. அதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
உடல் குறித்த ஆரோக்கியமான சிந்தனைகளை வளர்த்தெடுக்கவேண்டும். சமூக வலைதளங்களின் மிகைத்தன்மை குறித்துஉரையாட வேண்டும். அதை பற்றியான நேர்மறையானஎண்ணங்களை உருவாக்க வேண்டும். குறிப்பாக
* உடல் குறித்து கேலி செய்யக்கூடாது
* வளர்ச்சி ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது என்பதை சொல்லவேண்டும்
* உடல் தோற்றத்தை விட ஆரோக்கியத்தைப் பற்றி பேசவேண்டும்
ஒரு அன்பான உரையாடல், ஒரு கேலி வார்த்தையை விடஆயிரம் மடங்கு தாக்கம் உண்டு.
வளரிளம் பருவத்தினரின் அடையாள தேடலும், சிக்கலும்:
இளமைகாலத்தின் மிக பெரிய தேடல் அடையாள தேடலே!.
இந்த வயதில் தான் ஒருவர் தன் விருப்பம், திறமை, தனித்தன்மைஆகியவற்றை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இந்த தேடல்ஒரு நீண்ட பயணத்தை போன்றது. ஒரு சந்தர்ப்பத்தில், ஒருசூழலில் இந்த இந்த அடையாளம் உருவாகிவிடுவதல்ல. நீண்டபயணத்தின் இறுதியிலேயே முழுமையான அடையாளத்தைஉணர்ந்துகொள்ள முடியும். அந்த நீண்ட பயணத்தில் சமூகமும், பெற்றோரும், ஆசிரியரும், கல்வியும் இவர்களுடன் இணக்கமாகஇருக்கும் போது ஆரோக்கியமான அடையாளம் உருவாகிறது. ஒன்றுக்கொன்று முரணாக ஆகும்போதும் சிதறுண்டஅடையாளமாக உருவாகி விடுகிறது. இன்றைய காலத்தில் இந்தஅடையாள தேடலை சமூக வலைதளங்கள் இன்னும்சிக்கலாக்கியிருக்கின்றன.
ஒருவர் தனது உண்மையான அடையாளத்தை விட, திணிக்கப்பட்ட ஒரு அடையாளத்தை தனது அடையாளமாகஉணரக்கூடிய ஆபத்தை சமூக வலைதளங்கள்உருவாக்கியிருக்கின்றன. நண்பர்கள், சமூகம், சமூகஊடகங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் தங்கள் கருத்தைத்திணிக்கின்றன. இதனால் பல இளைஞர்கள் தங்களைப்பற்றிஉண்மையாக அறியாமல், வெளிப்படையான அங்கீகாரத்தைநாட ஆரம்பிக்கிறார்கள்.
ஒரு மாணவர் ஓவியம் வரைவதில் திறமை இருந்தாலும், சமூகவலைதளங்களில் அதற்கான அங்கீகாரத்தை பெறமுடியவில்லை என்றால் அந்த தனித்துவமான திறனைநிராகரிக்கிறார். எதற்கு சுலபமான அங்கீகாரம் கிடைக்கிறதோஅதை தேடி செல்கிறார். தனித்துவத்தை இழக்கிறார்கள். ஒருமந்தைகளாக இன்றைய இளைஞர்கள் திரள்வதற்கு இப்படிதனித்துவமான அடையாளத்தை இழப்பதே காரணமாகஇருக்கிறது. தனித்துவ சிந்தனைகள், தனித்துவமான பண்புகள், தனித்துவமான அறிவு, தனித்துவமான பார்வை என அத்தனையும்இந்த சமூக வலைதள மந்தை கலாச்சாரம் இழக்க வைக்கிறது.
பெற்றொர்களும், சமூகமும் இளைஞர்களிடம் உருவாகி வரும்இந்த மந்தை கலாச்சாரத்தை புரிந்து கொண்டு, இளைஞர்களின்தனித்துவத்தை மீட்டெடுப்பதற்கான செயல்திட்டங்களைஉருவாக்க வேண்டும். அதற்கு சமூக வலைதளங்களை எப்படிஆரோக்கியமாக பயன்படுத்துவது என்று பார்க்க வேண்டும். குழந்தைகளிடம் கலை, இலக்கிய செயல்பாடுகளைஊக்குவிக்கும் போது அவர்களின் இழந்தை அடையாளங்களைமீட்டெடுக்க முடியும் அதன் வழியாக தனித்துவமானஇளைஞர்களை உருவாக்க முடியும் அதன் வழியாகஇளைஞர்கள் மந்தைகளாக திரள்வதை தடுக்க முடியும்.
சுதந்திரம் வேண்டுமா? பாதுகாப்பும் வேண்டுமே!
பதினைந்து வயதிலேயே இன்று அனைவரின் கைகளுக்கும்தனிப்பட்ட அலைபேசி வந்திருக்கிறது. இன்றையபதின்பருவத்தினரின் தன்னிச்சையான உணர்வு என்பதுதங்களுக்கென்று தனிப்பட்ட அலைபேசியை அடைவதிலிருந்துதொடங்குகிறது. பெற்றோர்களை பொறுத்தவரை, குழந்தைகள்சீக்கிரமே வளர்ந்துவிட வேண்டுமென்று நினைக்கிறார்கள். அதனால், அவர்களின் தன்னிச்சையாக செயல்படும் உணர்வைஎந்த மேற்பார்வையுமின்றி அனுமதிக்கிறார்கள். அதன்விளைவாக மிக இளம் வயதில் அவர்கள் முழுமையானதன்விருப்பப்படி நடக்கும் உரிமையை அடைந்து விடுகிறார்கள்.
ஆனால் அதற்கான போதுமான அனுபவங்கள் இன்றைய இளம்வயதினரிடம் இருக்கிறதா என்றால் இல்லை. அவர்களின்அனுபவங்கள் திரை வழியாக உருவானவைகளாகவேஇருக்கின்றன. எதார்த்த வாழ்வில் அவர்களுக்கானஅனுபவங்கள் இன்னும் கிடைக்கவே தொடங்கவில்லை ஆனால்அதற்குள்ளாகவே சிக்கலான விஷயங்களுக்கெல்லாம் தனியாகமுடிவெடுக்கும் நிலைக்கு சென்றுவிட்டார்கள். இதுதான்பெற்றோர்-குழந்தை மோதல்களின் காரணமாகிறது.
சில பெற்றோர் கடுமையாக கட்டுப்படுத்த முயல்கிறார்கள். சிலர்முழு சுதந்திரம் கொடுக்கிறார்கள். இரண்டு வகையானநிலைப்பாடுகளும் பிரச்சினைகளை உருவாக்குகின்றன.
முதலில் அனுபவங்களை உருவாக்க வேண்டும். அந்தஅனுபவங்களை எதார்த்த வாழ்வில் இருந்து பெறுவதற்கானவழிகளை உருவாக்க வேண்டும். அந்த அனபவங்கள் சார்ந்த ஒருவெளிப்படையான உரையாடல் அமைவதற்கான வெளியைஏற்படுத்தி தர வேண்டும். எந்த வித கட்டுபாடுகளும் இல்லாமல், முன் முடிவுகளும் இல்லாமல் இப்படிப்பட்ட அனுபவங்கள்சார்ந்த உரையாடல்கள் அமையும் போது அதுசுதந்திரத்திற்கான கதவை திறக்கிறது. தன்னிச்சையாகமுடிவெடுப்பதற்கான பக்குவத்தை உருவாக்குகிறது. இந்தபக்குவம் அவர்கள் சமூக வலைதளங்களை முதிர்ச்சியாககையாள்வதற்கும் தேவையானதாக இருக்கும். அதனால்பெற்றோர்களை பொறுத்த வரையில்,
* சுதந்திரத்தை பல்வேறு கட்டங்களாக அளிக்க வேண்டும்.
* அதற்கான அனுபவங்களை முதலில் பெறுவதற்கான சூழலைஉருவாக்க வேண்டும்
* வெளிப்படையான உரையாடல் நிகழ்வதை அனுமதிக்கவேண்டும்
* அதற்கான நம்பிக்கையை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்
* பாதுகாப்புணர்வையும், எதை வேண்டுமானாலும்பகிர்ந்துகொள்வதற்கான சூழலையும் குடும்பத்தில் உருவாக்கிதர வேண்டும்
* தவறுகள் நடந்தாலும் பேசக்கூடிய சூழல் இருக்க வேண்டும்
எதிர்ப்பு, மீறல், விலகல் — உண்மையில் என்ன நடக்கிறது?
இளம்வயதில் மூளையின் முடிவெடுக்கும் பகுதி இன்னும்வளர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் உணர்ச்சிகள் வேகமாகவரும். கோபம் சீக்கிரம் வரும். பிறரின் பார்வையை புரிந்துகொள்வது சற்று கடினமாக இருக்கும்.
இதனால் பெற்றோருக்கு “எல்லாவற்றிற்கும் எதிராகபேசுகிறான்” என்ற உணர்வு வரலாம். ஆனால் பெரும்பாலும் இதுமரியாதையின்மை அல்ல; குழந்தைகளிடம் இயல்பாகஉருவாகக்கூடிய எதிர்ப்பு மனநிலை.
வளரிளம் பருவத்தை அடையும் போது அதுவரை பெற்றோர்களைசார்ந்திருந்த மன நிலை மாறி, பெற்றோர்களை சாராமலேயேஎன்னால் செய்ய முடியும் என்ற மனநிலை உருவாக தொடங்கும். உண்மையில், இப்படிப்பட்ட மன நிலை ஆரோக்கியமானது. அதன் வழியாக தனித்துவ திறமைகளின் மீதான தேடல்தொடங்கும். இந்த தேடலுக்கு அடிப்படை மீறல் தான். அத்தனையில் இருந்தும் மீறல். இந்த மீறல் தான் எதிர்ப்பு மனநிலையை உருவாக்குகிறது. அது இந்த பருவம் சார்ந்த மனநிலையே!. தனித்துவ அடையாளங்கள் உருவாகும் போது மீறல்மன நிலையும் வடிந்து போகும். அதன் பிறகு தனதுஅடையாளத்தின் வழியாக மீண்டும் அத்தனையுடனும்ஒன்றிணைந்து கொள்வார்கள். அதனால் இந்த வயதில்குழந்தைகளிடம் உருவாகக்கூடிய எதிர்ப்பு மன நிலையும், மீறலும், விலகலும் தற்காலிகமானதே. இதை வைத்துக்கொண்டுகுழந்தைகள் மாறிவிட்டார்கள் என நம்பிக்கையிழக்கதேவையில்லை.
இதற்காக குழந்தைகளை தண்டிப்பது, அவர்கள் மீது கோபம்கொள்வது, வருத்தப்படுவது தேவையில்லை. அதுபெற்றோர்களின் பதட்டத்தினால் உருவாகக்கூடியது. பெற்றோர்களின் இந்த நடவடிக்கைகள் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்குமான இடைவெளியை அதிகரிக்கும். அதுவளரிளம் பருவத்தில் இன்னும் மோசமான பாதிப்புகளை இரண்டுதரப்பிலும் ஏற்படுத்தி விடும்.
டிஜிட்டல் காலத்தில் இளைஞர்கள்:
வளரிளம் பருவம் என்பது எப்போதுமே வாழ்க்கையில் தீவிரமானமாற்றங்கள் நடைபெறும் ஒரு முக்கியமான கட்டமாகஇருந்துள்ளது. ஆனால் இன்றைய இந்திய இளம்வயதினர்எதிர்கொள்ளும் சூழல், அவர்களின் பெற்றோர் தலைமுறையினர்சந்தித்த சூழலிலிருந்து மிகவும் வேறுபட்டதாக உள்ளது. உடலியல் மாற்றங்கள் பழையபடி இயல்பாகவே நடந்தாலும், சமூக எதிர்பார்ப்புகள், கல்வி அழுத்தம், குடும்ப அமைப்பில்ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் டிஜிட்டல் உலகின் தாக்கம்ஆகியவை இன்றைய இளம்வயதினரை முற்றிலும் புதிய சூழலில்வளரச் செய்கின்றன.
வெளிப்படையாக பார்க்கும்போது இன்றைய இளைஞர்கள்பெரியவர்களாக மாறுவது மெதுவாக நடக்கிறது போலத்தோன்றலாம். பெரியவர்களின் பாரம்பரிய அடையாளங்கள்பொறுப்புகளை ஏற்குதல், சுயமாக முடிவெடுப்பது போன்றவைதாமதமாக நிகழ்கின்றன. ஆனால் உள்ளார்ந்த நிலையில்அவர்கள் மனதிலும் உணர்ச்சிகளிலும் முன்பு இல்லாத அளவுக்குவேகமாக நகர்கிறார்கள். கடுமையான போட்டி, டிஜிட்டல்தொடர்புகள் மற்றும் தொடர்ந்து சாதனை எதிர்பார்க்கும்சமூகத்தின் வேகத்துக்கு ஏற்ப தங்களை அமைத்துக்கொள்ளஅவர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த வெளிப்படையான மெதுவும், உள்ளார்ந்த வேகமும்கொண்ட முரண்பாட்டை புரிந்துகொள்வது, இன்றைய இந்தியசூழலில் இளம்வயதினருடன் பணிபுரியும் பெற்றோர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு மிகவும் அவசியமானது.
இந்திய குடும்பங்களில் இன்று இளம்வயதினர்கள் முந்தையதலைமுறையுடன் ஒப்பிடும்போது அதிக நேரத்தை வீட்டிலேயேசெலவிடுகிறார்கள். முன்பு இளம் வயதிலேயே பொறுப்புகளைஏற்கவும், தனியாக பயணம் செய்யவும், வெளியில் விளையாடவும், அல்லது குடும்பத்திற்கு பொருளாதார பங்களிப்பு செய்யவும்ஊக்குவிக்கப்பட்டார்கள். இன்று பாதுகாப்பு பற்றிய கவலைகள், கல்வி தேவைகள் மற்றும் பெற்றோர் அணுகுமுறையின்மாற்றங்கள் இந்த பழக்கத்தை மாற்றியுள்ளன. பல இளைஞர்கள்தனியாக பயணம் செய்வதை தாமதமாக ஆரம்பிக்கிறார்கள், கண்காணிப்பு இல்லாத வெளிப்புற தொடர்புகள் குறைவாகஉள்ளன, பள்ளி நேரத்துக்கு வெளியே பெரும்பாலும் வீட்டில், டியூஷன் மையங்களில் அல்லது கோச்சிங் வகுப்புகளில் நேரம்செலவிடுகிறார்கள். அவர்கள் வீட்டில் இருந்தாலும், அவர்களின்சமூக வாழ்க்கை பெரும்பாலும் ஆன்லைனில்தான்நடைபெறுகிறது ஸ்மார்ட்போன்கள், மெசேஜிங் பயன்பாடுகள், கேமிங் தளங்கள், சமூக ஊடகங்கள் வழியாக. நண்பர்கள், சண்டைகள், ஒப்பீடுகள், அங்கீகாரம் போன்றவை அனைத்தும்இப்போது டிஜிட்டல் உலகத்தில் நிகழ்கின்றன.
இந்திய சமூகத்தில் நண்பர்கள் மதிப்பு மற்றும் சமூகப் புகழ்முக்கிய பங்கு வகிப்பதால், ஆன்லைன் உலகம் சில நேரங்களில்புறக்கணிக்கப்படுவோம் என்ற பயம், வெட்கம், மதிப்பீடுசெய்யப்படுவோம் என்ற அழுத்தம் ஆகியவற்றை அதிகரிக்கிறது.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதுமூளையை எப்போதும் விழிப்புடன் வைத்தாலும், அமைதியாகஇருக்க உதவாது. நீண்ட நேர கவனம், பொறுமை மற்றும்சலிப்பை ஏற்றுக்கொள்ளும் திறன் மெல்ல குறைந்து வருகிறது.
இளம்வயது மூளை இயற்கையாகவே அங்கீகாரத்தையும்சேர்ந்துணர்வையும் தேடுகிறது. முன்பு இந்த அங்கீகாரம்குடும்பம், ஆசிரியர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மூலம்கிடைத்தது. இன்று சமூக ஊடகங்கள் அதை எண்களாகமாற்றியுள்ளன லைக்குகள், பார்வைகள், கருத்துகள். இதனால்எதிர்பார்ப்பு மற்றும் ஏமாற்றம் தொடர்ந்து நடைபெறும் சுழற்சிஉருவாகிறது.
மேலும், இந்திய இளைஞர்கள் மிகவும் இளம் வயதிலேயேபெரியவர்களின் பிரச்சனைகளைப் பற்றிஅறிந்துகொள்கிறார்கள் — போட்டித் தேர்வுகள், வேலை வாய்ப்புபற்றிய அச்சம், பொருளாதார அழுத்தம், சமூக ஒப்பீடுகள், உலகளாவிய நெருக்கடிகள் போன்றவை. இந்த முன்கூட்டியவெளிப்பாடு பலருக்கு வெளியில் தெரியாத மன அழுத்தத்தைஉருவாக்குகிறது.
மனநலத்தின் உண்மை நிலை: இடைவெளி இல்லாத அழுத்தம்
இன்றைய இந்திய இளம்வயதினர்கள் எதிர்கொள்ளும் மனநலசவால்கள் கல்வி எதிர்பார்ப்புகளுடனும், சமூக ஒப்பீடுகளுடனும்ஆழமாக இணைந்துள்ளன.பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகளில் சிறப்பாக செயல்பட வேண்டிய அழுத்தம், பெற்றோர்மற்றும் ஆசிரியர்களை ஏமாற்றிவிடுவோமோ என்ற பயம், கல்வி, தோற்றம் மற்றும் சமூக நிலைமையில் நண்பர்களுடன்தொடர்ந்த ஒப்பீடு போன்றவற்றை டிஜிட்டல் உலகம் மேலும்அதிகரிக்கிறது. பள்ளி நேரம் முடிந்த பிறகும் நண்பர்கள்மதிப்பீடு நிற்காது. குழு உரையாடல்கள், சமூக ஊடகச்செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. சிலருக்கு இதுஆதரவாக இருக்கும்; மற்றவர்களுக்கு இது பதட்டம், உடல்தோற்ற குறை உணர்வு மற்றும் உணர்ச்சி சோர்வாக மாறலாம்.
ஒரு நல்ல மாற்றம் என்னவென்றால், இன்றைய இளைஞர்கள்மனநல சிக்கல்கள் குறித்து பேசத் தயாராக உள்ளனர். முந்தையதலைமுறையுடன் ஒப்பிடும்போது ஆலோசனை, கவுன்சிலிங், சிகிச்சை போன்றவற்றை ஏற்கும் மனப்பான்மை குறிப்பாகநகர்ப்புற மற்றும் நகரம் சார்ந்த பகுதிகளில் அதிகரித்துள்ளது.
ஆனால் இன்னும் பலர் அமைதியாகவே போராடுகின்றனர். தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் அது பலவீனமாககருதப்படுமோ அல்லது படிப்பில் கவனம் இல்லாததற்கானகாரணமாகப் பார்க்கப்படுமோ என்ற அச்சம் இருக்கிறது.
மதிப்புகள், விழிப்புணர்வு மற்றும் எதிர்பார்ப்புகளின் சுமை:
இன்றைய இந்திய இளைஞர்கள் சமூக ரீதியாக முன்பை விடஅதிக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். ஊடகங்களின்தொடர்ச்சியான தாக்கம் காரணமாக சமத்துவம், காலநிலைமாற்றம், பாலின சமநிலை, சமூக நீதி போன்ற விஷயங்களில்அவர்கள் ஆழமான சிந்தனை கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் பொதுவாக பாரம்பரியக் கருத்துகளை கேள்விகேட்கும் மனப்பான்மை கொண்டவர்களாகவும்,வேறுபாடுகளைஏற்றுக்கொள்ளும் மனநிலை உடையவர்களாகவும், நியாயம்மற்றும் தனிப்பட்ட எல்லைகள் குறித்து தெளிவாகபேசுபவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அதே சமயம், இந்திய சமூகத்தில் சாதனை, பொருளாதார ஸ்திரத்தன்மைமற்றும் மரியாதைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் அதிகம். வெற்றிகரமான தொழில் வாழ்க்கையே பாதுகாப்பிற்கும் சமூகஅங்கீகாரத்திற்கும் முக்கிய பாதையாகக் காட்டப்படுகிறது.
இதனால் ஒரு தனிப்பட்ட முரண்பாடு உருவாகிறது. “பெரியகனவு காணுங்கள்” என்று சொல்லப்படுகிறார்கள்; ஆனால் அதேநேரத்தில் தோல்வி, போட்டி மற்றும் ஆபத்து குறித்து தொடர்ந்துநினைவூட்டப்படுகிறார்கள். வெற்றிகரமான எதிர்காலத்தைஉறுதிசெய்ய வேண்டிய அழுத்தம் மிகவும் இளம் வயதிலேயேதொடங்குகிறது. இதனால் ஆராய்ந்து பார்க்கவும், தவறுகள்செய்யவும், ஓய்வு எடுக்கவும் வாய்ப்புகள் குறைகின்றன.
இதன் விளைவாக, பல இளைஞர்கள் மனதில் நீண்டகாலபதட்டத்தை அனுபவிக்கிறார்கள். அவர்கள் ஆசை இல்லாததால்அல்ல; எதிர்காலம் உறுதியற்றதாகத் தோன்றுவதால்தான் அந்தஅச்சம் உருவாகிறது.
இளமைகாலம் ஒரு சிக்கல் அல்ல; அது உருவாகிக்கொண்டிருக்கும் வாழ்க்கை. அவர்கள் தவறுகள் செய்கிறார்கள்என்றால் அது வளர்ச்சியின் ஒரு பகுதி. அவர்களுக்குதேவைப்படுவது தீர்ப்பு அல்ல துணை நிற்கும் ஒருவர்.
அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் உடனடி ஆலோசனைகளை அல்ல. முன்முடிவுகள் அல்லாமல் அவர்கள் சொல்வதை கேட்டுக் கொள்வதை தான்!. யாரிடமும் ஒப்பீடு செய்யாமல் அவர்களுக்கு நம்பிக்கையையும், பாதுகாப்பும்அளிக்கும் பெற்றோர்களை தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அன்பும் புரிதலும் சேர்ந்த இப்படிப்பட்ட வழிகாட்டுதலே இளம்தலைமுறைக்கு நாம் தரக்கூடிய மிகப் பெரிய பரிசாகும்.
- Dr. சிவபாலன் இளங்கோவன்



