> குருத்து: June 2021

June 19, 2021

திரைப்படம் சார்ந்த குழு!


முகநூலில் திரைப்படங்களுக்கென்று சில குழுக்கள் தமிழில் சிறப்பாக இயங்குகின்றன. அதில் @world Movies Musuem குழு கடந்த நாலைந்து வருடங்களாக சிறப்பாக இயங்கி வருகிறது. உறுப்பினர்கள் 48 ஆயிரத்து சொச்சம் பெயர்கள் இருக்கிறார்கள்.


குழுவில் கலவையான ஆட்கள் இருக்கிறார்கள். வெரைட்டியாக எழுதக்கூடிய ஆட்களும் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு படம் குறித்த விவரம் தேவை என்றால், இந்த குழுவில் போய் தான் தேடுவேன்.

கடந்த இரண்டு வருடங்களாக நானும் குழுவில் இருக்கிறேன். கடந்த மே மாதத்தின் டாப் 10 பட்டியலில் நானும் இருக்கிறேன். (பார்க்க படம்.) எல்லாம் ஊரடங்கின் விளைவு. நான்கு படங்கள் பார்த்தால் ஒரு படத்தை அறிமுகம் செய்கிற ஆள் நான். ஊரடங்கு எனும் பொழுது பார்க்கிற பெரும்பாலான படங்களை அறிமுகப்படுத்துவதால், பட்டியலில் வந்துவிட்டேன்.

என் முகநூல் நண்பர்களில் பலருக்கு இந்த குழு அறிமுகமாகி இருக்கும். திரைப்படம் குறித்த அர்வம் உள்ளவர்கள் இந்த குழுவில் இணையுங்கள்.

Remember The Titans (2000) Biographical Sports Movie - அருமையான படம்


ஒடுக்கப்பட்ட வரலாறுகளில் கருப்பின அடிமைத்தளத்தின் வரலாறும் முக்கியமான ஒன்று. 1862ல் தான் அடிமைப்படுத்தப்பட்டிருந்த கருப்பினத்தை சார்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் விடுதலை அறிவிக்கப்பட்டது. விடுதலை அறிவிக்கப்பட்டாலும் அதற்கு பிறகும் சமூகம் இன்னமும் நிறவெறியுடன் தான் நடந்துகொள்கிறது. தொடர்ந்து வரும் செய்திகள் அதைத்தான் நிரூபிக்கின்றன.


கருப்பின அடிமைத்தள விடுதலையை முன்னிட்டு ஜூன் 19ந் தேதியை விடுமுறை தினமாக அமெரிக்கா இப்பொழுது அறிவித்திருக்கிறது. வரவேற்போம். தொடர்ந்து போராடுவதின் மூலம் தான் நிரந்தரமாக இனவெறி ஒழியும்.

****

1981ல் ஒரு ரக்பி வீரரின் இறப்பில் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள். 1971க்கு படம் நகர்கிறது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான விர்ஜினியா மாகாணம். அங்கு சமூகத்தில் நிறவெறி மிக அதிகமாக இருக்கிறது. அங்கு ஒரு Titans உயர்நிலைப்பள்ளியில் ரக்பி விளையாடும் குழு இருக்கிறது. அதில் உள்ள வீரர்களும், கோச்சும் வெள்ளையினத்தவராக இருக்கிறார்கள்.

கருப்பு, வெள்ளை மாணவர்களை இணைத்து ஒரு குழுவை உருவாக்கவேண்டும். அதற்கு தலைமை பயிற்சியாளராக ஒரு கருப்பினத்தைச் சேர்ந்த நாயகனை நியமிக்கிறார்கள். வெள்ளையின கோச்சே கருப்பினருத்தவருக்கு கீழே பணிபுரிய மறுக்கிறார். அவர் இல்லையென்றால், வெள்ளையின மாணவர்களும் விளையாட மறுக்கிறாரகள். அவர்கள் விளையாடாமல் போனால், அவர்களுக்கு கிடைக்க கூடிய உதவித்தொகை கிடைக்காமல் போகும் என்பதால், வெள்ளையின கோச் அவருக்கு கீழே வேலை செய்ய சம்மதிக்கிறார்.

பயிற்சியின் பொழுது மாணவர்களிடையே சண்டை வருகிறது. நாயகன் தன் அதிகாரத்தை பயன்படுத்தி, கருப்பின மாணவன், வெள்ளையின மாணவன் இருவரும் தங்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந்துகொள்ளவேண்டும். அதை தன்னிடம் வந்து தெரிவிக்கவேண்டும் என அறிவிக்கிறார்.
இப்படி பல சவால்களை எதிர்கொண்டு, அந்த ரக்பி குழு வெற்றிகளை ஈட்டியதா? என்பதை முக்கால்வாசிப் படத்தில் உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
*****

ஒரு விளையாட்டுக்குழுவில் ஏற்படும் மாற்றம் சமூகத்தில் என்னவித மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பார்க்கும் பொழுது ஆச்சர்யமாய் இருக்கிறது. குழுவில் உள்ள கேப்டன் மாணவன் தன் கருப்பின நண்பனை தன் காதலியிடம் அறிமுகப்படுத்துவான். அவன் கையை நீட்டுவான். அவள் கை கொடுக்கமாட்டாள். பின்னாட்களில், அவளே வந்து கைகொடுப்பாள். ஒரு கருப்பின மாணவன் அருகே அந்த போலீஸ் ரோந்து வண்டி நிற்கும். அந்த வெள்ளையின அதிகாரியைப் பார்த்து இவன் கொஞ்சம் தயக்கம் கொண்டு”ஆபிசர்?” என்பான். ”நேற்று
அருமையாக
விளையாடினீர்கள்.
வாழ்த்துகள்
” என்பார். இந்த நல்ல மாற்றத்திற்கு அடிப்படையானவர்கள், வெள்ளையினத்தைச் சேர்ந்த ஜனநாயக உணர்வு கொண்டவர்கள் தான்.

படத்தில் Denzel Washington தான் தலைமை பயிற்சியாளராக வருகிறார். ஆளுமையான,
அருமையான
நடிப்பு. உண்மைக் கதை என்பதால், படத்தில் பலருக்குமே நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும். எல்லாருமே நன்றாக செய்திருக்கிறார்கள்.

நல்ல படம். பாருங்கள். Hot Starல் இருப்பதாக Just Watch சொல்கிறது.

Cure (1997) Japan - சைக்காலஜிக்கல் திரில்லர்



நகரில் ஆங்காங்கே சில கொலைகள் நடக்கின்றன. மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்கிறார். உடன் வேலை செய்கிறவரை ஒருவர் கொல்கிறார். இதற்கான காரணத்தை விசாரிக்கும் பொழுது மிகவும் மேலோட்டமாகவும், பொருத்தமில்லாமலும் இருக்கின்றன. அதற்கு பிறகான அவர்களின் நடத்தைகளும் வித்தியாசமாக இருக்கின்றன.


கொலைகளை விசாரிக்கும் விசாரணை அதிகாரி மிகவும் குழம்பி போய்விடுகிறார். ஏற்கனவே அவருடைய துணைவியார் மனநிலை சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கிறார். நடக்கின்ற மர்மமான கொலைகளும் அவரின் மனநிம்மதியை குலைக்கின்றன.

சந்தேகப்படும் இளைஞர் ஒருவரை கைது செய்கிறார்கள். அந்த ஆளிடம் விசாரித்தால், தன்னை யார் என்றே அவருக்கு சொல்ல தெரியவில்லை. திரும்ப திரும்ப கேட்ட கேள்விகளை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார்.

அவரைப் பற்றி விசாரித்தால், அவர் முன்னாள் மருத்துவ மாணவராக இருக்கிறார். மெஸ்மரிசம், ஹிப்னாட்டிசம் பற்றிய பல புத்தகங்களை படித்த ஆளாக இருக்கிறார். இவர் தான் நகரில் நடக்கும் கொலைகளுக்கு காரணம் ஆக தெரியவருகிறது.

அந்த ஆளோ சிறிது நேரத்திலேயே ஒரு ஆளை தன்வயப்படுத்திவிடுகிறான். ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும் உள்ள விகாரங்களை தூண்டிவிட்டுவிடுகிறான். உடனேயே தனக்கு பிடிக்காதவர்களை கொலை செய்துவிடுகிறார்கள். கொலை செய்த பிறகு இவனை அவர்கள் சுத்தமாக மறந்துவிடுகிறார்கள்.

பிறகு அந்த சைக்கோ ஆளை எப்படி தண்டித்தார்கள் என்பது மீதிக்கதை
*****

பொதுவாக ஒரு படத்தை தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் பார்த்துவிடுவது தான் வழக்கம். ஆனால் இந்தப் படத்தை விட்டு விட்டு, நாலைந்து முறைகளில் பார்த்தேன். Most depressed Movie எனலாம். ஊரடங்கு முடியும்வரை இந்த இயக்குநர் பக்கமே எட்டி பார்ப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறேன்.

இந்தப் படத்தை IMDBயில் 12000 மக்கள் வாக்களித்து 7.4 தர மதிப்பிடு கிடைத்திருப்பது ஆச்சர்யம். மெஸ்மரிசம், ஹிப்னாடிசம் பற்றிய படங்கள் மிக குறைவு. சமீபத்தில் Get out படத்தில் ஹிப்னாடிசம் செய்திருப்பதை பார்த்திருக்கிறேன்.

படத்தில் அந்த சைக்கோ, விசாரணை அதிகாரி, அவருடைய துணைவியார், அவருடைய நண்பராக வரும் மருத்துவர் என முக்கிய பாத்திரங்கள் நன்றாக செய்திருக்கிறார்கள். படத்தை இயக்கியவர் Kiyoshi Kurosawa ஜப்பானிய இயக்குநர்களில் முக்கியமானவர் என்கிறார்கள்.

வித்தியாசமான படங்களை விரும்புவர்கள் பாருங்கள்.

Inside man (2006) வங்கி கொள்ளை திரில்லர்


நகரத்தின் மையத்தில் பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கும் ஒரு வங்கியில் பெயிண்டர்கள் போல நால்வர் நுழைகிறார்கள். உள்ளே நுழைந்ததும் வாசலை மூடுகிறார்கள். சிசிடியை முடக்குகிறார்கள். வங்கியில் இருந்த ஊழியர்கள், பொதுமக்களை எல்லாம் ஆடைகளை கழற்ற சொல்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் இவர்கள் அணிந்திருப்பது போலவே, முகமூடியுடன் ஆடைகள் தருகிறார்கள். இதற்குள் போலீசுக்கு விவரம் தெரிந்து ஒரு படையே திரண்டு வருகிறது.


பயணக்கைதிகளுடன் தப்பித்து செல்ல ஒரு பேருந்தும், தாங்கள் செல்ல ஒரு விமானமும் வேண்டும் என கேட்கிறார்கள். கொடுக்கவில்லை என்றால் பயணக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் நபர்களை கொன்றுவிடுவோம் என மிரட்டுகிறார்கள்.

இதுவரை சொன்னதெல்லாம் ஒரு இயல்பான வங்கி கொள்ளை படம் போல தான் தெரிகிறதா? படம் அப்படியே பயணிக்காமல், கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் பயணிக்கிறது. பிறகு ஒரு சில திருப்பங்களுடன் முடிகிறது.

*****

வழக்கமான வங்கிக்கொள்ளைப் படம் போல இல்லாமல் இருப்பதே நமக்கு பெரிய ஆறுதல். வங்கி கொள்ளையை தடுக்க வந்திருக்கும் அந்த போலீசு அதிகாரி இவர்களின் நடவடிக்கையைப் பார்த்து குழம்புவது போல நம்மையும் குழப்புவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். படம் பார்த்துக்கொண்டிருந்த பொழுது பாக்யராஜ் நடித்து 1991ல் வெளிவந்த ’ருத்ரா’ படத்தில் வரும் வங்கி கொள்ளைக் காட்சி நினைவுக்கு வந்து போனது.

Denzel Washington தான் அந்த புத்திசாலி போலீசு அதிகாரியாக வருகிறார். இவரை பிடித்துப் போனதால், இவருடைய புகழ்பெற்ற படங்களை தேடித்தேடி பார்த்து வருகிறேன். புகழ்பெற்ற மால்கம் எக்ஸ் படத்தை இயக்கிய Spike Lee தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

படம் துவங்குவதே ஏ.ஆர். ரகுமானின் ”சைய்யா! சைய்யா!” பாட்டில் தான்! தமிழ் டப்பிங்கில் ஏதோ கலாட்டா பண்ணியிருக்கிறார்கள் என நினைத்தால், ஆங்கிலத்திலும் அந்த பாடல் இருக்கிறது.

நெட்பிளிக்சில் இருப்பதாக இணையம் சொல்கிறது. பாருங்கள்.

Mirage (2018) ஸ்பானிஷ் டைம் டிராவல் திரில்லர்


கதை. நாயகி தன் கணவனுடன், தனது செல்ல குட்டிப் பெண்ணுடன் அந்த வீட்டில் புதிதாய் குடி வந்திருக்கிறார். அவள் மருத்துவமனையில் பணிபுரிகிறாள். அந்த வீட்டில் முப்பதாண்டுகளுக்கு முன்பான ஒரு தொலைக்காட்சி பெட்டியை காண்கிறாள். அங்கு ஒரு கேமராவும் இருக்கிறது. அதை பார்க்கும் பொழுது அந்த வீட்டில் முன்பு குடியிருந்த ஒரு சிறுவனைப் பற்றிய சொந்த பதிவுகளாக இருக்கின்றன. அந்த பையன் 1989ல் பக்கத்து வீட்டில் ஒரு கொலை நடந்த சத்தத்தை கேட்டு போய் பார்த்து, அவன் கார் விபத்தில் அடிபட்டு இறந்துபோகிறான் என பழைய கதையை சொல்கிறார்கள்.


அவள் வசிக்கும் பகுதி முழுவதுமே இடி, மின்னலுமாக ஒரே களேபரமாக இருக்கிறது. இதே போல தான் 1989லும் இருந்ததாக தொலைக்காட்சியில் விவரிக்கிறார்கள். இரவில் திடீரென சத்தம் கேட்கிறது. நாயகி போய்ப் பார்த்தால், 1989ல் ஒளிப்பரப்பான நிகழ்ச்சிகள் அந்த தொலைக்காட்சியில் தெரிகின்றன. திடீரென 1989ல் அந்த பையன் தொலைக்காட்சியில் வருகிறான். அவனும் இவளும் பேசிக்கொள்கிறார்கள். பக்கத்துவீட்டில் கொலை நடக்கும் சத்தம் கேட்கிறது. நாயகி பதட்டத்தில் ”அங்கு போகாதே! போனால் நீ செத்துவிடுவாய்!” என எச்சரிக்கிறாள். அந்த பையன் பிழைத்துக்கொள்கிறான்.

ஆனால், அந்த நிமிடத்திலிருந்து இவள் வாழ்க்கை வேறாகிவிடுகிறது. மருத்துவமனையில் முக்கிய மருத்துவராக இருக்கிறாள். திருமணம் ஆகவில்லை. ஆகையால் அந்த குட்டி பொண்ணைப் பற்றிய சுவடே இல்லை. பதட்டமாகிறாள். தன் பெண்ணை மீண்டும் பெறவேண்டும். என்ன செய்ய என தேட ஆரம்பிக்கிறாள்.

இதெல்லாம் துவக்க சில நிமிடங்கள் தான். பிறகு பழைய வாழ்க்கையை அவள் அடைந்தாளா? அந்த பையன் காப்பாற்றபட்டனா? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

******

டைம் டிராவல் படங்களில் குழப்பம் இல்லாமல் சொன்ன படங்கள் மிகவும் குறைவு. அதில் இந்தப் படமும் ஒன்று. அதனாலேயே எனக்கு மிகவும் பிடித்துப்போனது.

நாயகி அந்த தலைகீழ் மாற்றத்திற்கு பிறகு, முன்பை விட ஒரு நல்ல வாழ்க்கையைத் தான் அவள் பெற்றிருப்பாள். ஆனால், அவளின் குட்டிப்பெண்ணை இழப்பது அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அம்மா சென்டிமெண்ட்.

முகநூலில் டைம் மெசின் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என சமீபத்தில் கூட ஒரு மருத்துவர் கேட்டிருந்தார். இந்த மாதிரி படம் பார்க்கலைன்னா சட்டுன்னு சொல்லிரலாம். ஒருவேளை நாம் போய் மாத்தி (!) இப்ப வாழுகிற வாழ்க்கையை விட இன்னும் மோசமாக போயிருமோன்னு ஒரு பயமே தொத்திக்கிடுது! 🙂

புகழ்பெற்ற Invisible Guest எடுத்த இயக்குநர் தான் இந்தப்படத்தின் இயக்குநரும்! படத்தின் நாயகி நம்மூர் டாப்சியை நினைவுப்படுத்தினார். நல்ல நடிப்பு.

படம் நெட்பிளிக்சின் வெளியீடு. ஆகையால் கிடைக்கும். பாருங்கள்.

இளையராஜாவும் கண்ணதாசனும்!


இளையராஜா அன்னக்கிளியின் முலம் அறிமுகமாகி, பிரபலமாகி, அவருடைய வளர்ச்சி ஏறுமுகமாகி கொண்டே போகிறது.


இதில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விக்கு வாய்ப்புகள் குறைந்துகொண்டே போகின்றன. ஒரு காரணம் இளையராஜா என்றாலும், அவர் காலத்திய நாயகர்களான எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்ததால் நடிப்பதை நிறுத்திவிடுகிறார். சிவாஜிக்கு படங்கள் குறைகின்றன. இதில் முக்கிய விசயம் எம்.எஸ்.வி படம் தயாரித்து நஷ்டமாகி கடும் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளார்.

எம்.எஸ்.வி கவிஞர் கண்ணதாசனிடம் தனது பொருளாதார பிரச்சனைகளை உரிமையுடன் புலம்புகிறார். எம்.எஸ்.வியை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் என அவருடைய குடும்பத்தாரிடம் அக்கறையுடன் பேசுகிறார்.

கவிஞர் கண்ணதாசன் சரியான புரிதல் இல்லாமல் இளையராஜா மீது கோபம் கொள்கிறார். சில பத்திரிக்கைகளில் தாக்கியும் எழுதுகிறார். யாருக்கு புரிந்ததோ இல்லையோ இளையராஜாவிற்கு புரிந்துவிடுகிறது.

ஒருமுறை கண்ணதாசனின் மகனான என்னை இளையராஜா எதைச்சையாய் பார்க்கும் பொழுது இது குறித்து கேட்கிறார். அப்பாவிடம் இது குறித்து கேட்கிறேன் என அவருக்கு ஆறுதலாய் சொன்னேன். அதே போலவே ஒருமுறை கேட்டேன். ஏதும் சொல்லவில்லை. அதற்கு பிறகு அப்பா இளையராஜாவை புரிந்துகொண்டு திட்டுவதை நிறுத்திக்கொண்டார். கண்ணதாசனின் திரையிசை கடைசி பாடலான ”கண்ணே கலைமானே” இளையராஜாவிற்கு தான் எழுதினார்.

இளையராஜாவின் இசையில் கண்ணதாசன் பாடல்கள் குறைவு. ஏன் என்றால், அப்பொழுது இளையராஜா மிகவும் பிசி. மற்ற பாடலாசிரியர்கள் என்றால், டியூனை கேசட்டில் பதிவு செய்து அனுப்பினால் போதும். பாடலை எழுதி தந்துவிடுவார்கள். கண்ணதாசன் என்றால் அவர் நேரடியாக வரவேண்டும். இந்த நடைமுறை பிரச்சனையில் தான் பாடல்கள் குறைந்தன. மற்றபடி இன்றைக்கு வரைக்கும் கவிஞர் கண்ணதாசனின் மீது மிகுந்த மரியாதையுடன் தான் பேசிவருகிறார்.

இளையராஜாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

- கவியரசு கண்ணதாசனின் மகனின் நினைவு அலைகளில் இருந்து…..

Déjà vu (2006) Time travel Thriller


Déjà vu என்றால் “முன்பு பார்த்தது” என பொருள். அதாவது நாம் ஒரு செயலை செய்யும் பொழுதோ அல்லது ஒரு இடத்திற்கு செல்லும் பொழுதோ அப்பொழுது நடக்கும் செயல்கள் அதற்கு முன்பு பார்த்தது போன்றோ அல்லது நடந்தது போல தோன்றும். இது நம் மூளை நிகழ்த்தும் ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் மட்டுமே. சொல்லப்போனால் இதை நம் நினைவகத்தில் நிகழும் சிறு கோளாறு (Memory Glitch) எனலாம். இந்த தேஜா வூ ஏதோ ஒரு சிலருக்கு மட்டும் நிகழும் அறிய நிகழ்வு கிடையாது. உலக மக்கள் தொகையில் 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு இது அவ்வப்போது நிகழ்கிறது. அதுவும் குறிப்பாக 15 முதல் 25 வயதிற்குள் இருப்பவர்களுக்கு, இது அதிக அளவில் நிகழும்.

- இணையத்திலிருந்து….

கதை. அமெரிக்க கடற்படையில் வேலை செய்யும் வீர்ர்கள் ஒரு பயணிகள் கப்பலில் தங்கள் குடும்பங்களை சந்திக்கிறார்கள். அப்பொழுது அங்கு சக்தி வாய்ந்த குண்டு வெடிக்கிறது. 500க்கு மேற்பட்டவர்கள் செத்துப்போகிறார்கள்.

உடனடியாக ஒரு குழு விசாரணைக்கு செல்கிறது. சிறப்பு அதிகாரியாக நாயகனும் போய் இணைந்துகொள்கிறார். குண்டுவெடிப்பு நடந்த ஆற்றின் கரையில் ஒரு பெண் பிணம் கரை ஒதுங்கியிருக்கிறது. இந்த குண்டுவெடிப்புக்கு ஏதோ தொடர்பு இருக்கு என கணிக்கிறார். சாட்டிலைட், அவர்களின் நவீன கண்டுபிடிப்புகளின் உதவியால் நான்கு நாட்கள், 6 மணி நேரம், 3 நிமிடங்கள், 45 செகண்ட்ஸ் மட்டும் பின்னோக்கி பார்க்க முடியும் என்கிறார்கள். அந்த பெண்ணின் முகவரியை கண்டுபிடித்து ஆராய்கிறார்கள்.

நாயகன் நினைத்தப்படியே குண்டுவெடிப்புக்கும் அவளுக்கும் தொடர்பு இருக்கிறது. கால இயந்திரத்தின் (Time Travel) உதவியால் நாயகன் பின்னுக்கு போய், குண்டு வெடிப்பு நிகழாமல் இருக்க குண்டு வெடிப்பு நிகழ்த்திய தீவிரவாதியை எதிர்கொள்கிறார்.

தீவிரவாதியை கண்டுபிடித்தாரா? அந்த பெண்ணுக்கும் தீவிரவாதிக்கும் என்ன சம்பந்தம்? குண்டு வெடிப்பை நிகழவிடாமல் தடுக்க முடிந்ததா? என்பதை பரபரப்பாக சொல்லி முடிக்கிறார்கள்.
****

கால பயணம் என்பது ஒரு நல்ல கற்பனை. உலக அளவில் அல்லது குறைந்த பட்சம் ஹாலிவுட்டிலாவது கால பயணம் குறித்த ஒரு வரையறையை ’தெளிவாக’ சொல்லிவிடுங்கள். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரி விளக்குவது எங்களுக்கெல்லாம் ரெம்ப மண்டை குடைச்சலாக இருக்கிறது. 🙂

ஹாலிவூட்டின் விஜயகாந்த் என தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிற Denzel Washington தான் படத்தின் நாயகன். நாயகி Paula Patton. எல்லோருமே நன்றாக செய்திருக்கிறார்கள்.

பர பர வென இறுதிவரை செல்கிற திரில்லர். பாருங்கள்.

November Story 2020 - 7 அத்தியாயங்கள்


கதை. நாயகி கணிப்பொறி இன்ஜினியராக இருக்கிறார். எழுத்தாளராக இருக்கும் நாயகியின் தந்தை அல்சைமர் நோயின் துவக்கத்தில் இருக்கிறார். அவரை பராமரிப்பதற்காக நிறைய பணம் தேவைப்படுகிறது. தாங்கள் முன்பிருந்த சொந்த வீட்டை விற்பதற்காக மெனக்கெடுகிறார். தந்தையோ வீட்டை விற்கமாட்டேன் என அடம்பிடிக்கிறார்.


அந்த பூட்டிக்கிடக்கும் அந்த‌ வீட்டில் 50 வயது மதிக்கத்தக்க பெண் கொலைசெய்யப்பட்டு கிடக்கிறார். யார் செய்தது போலீசு விசாரிக்க ஆரம்பிக்கிறது. அந்த கொலை ஏன்? எதற்காக? என்பதை கண்டுபிடித்ததா என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

***

தமிழில் வந்த சீரிஸ்களில் இரு துருவத்திற்கு பிறகு நான் பார்த்த இரண்டாவது சீரிஸ் இது தான். துவக்கத்தில் இருந்து கடைசிக்கு முதல் அத்தியாயம் வரை விறுவிறுப்பாகவே கொண்டு சென்றார்கள். இறுதி பாகமான ஏழாவது அத்தியாயம் மட்டும் கொஞ்சம் இழுவையாக இருந்தது.

படத்தில் கொலையைப் பற்றி விவாதிப்பதற்காக இன்ஸ்பெக்டர் ஸ்டேசனில் இருக்கும் கடைநிலை போலீசு வரை வீட்டிற்கு போகாமல் நிறுத்தி வைத்து…. ஒவ்வொருவரும் அவரவர் நிலையில் இருந்து கருத்து சொல்வது, தூங்கி வழிவது, சலித்துக்கொள்வது எல்லாம் நன்றாக இருந்தது. இயல்பில் இப்படி செய்வார்களா என தெரியவில்லை.

இறுதியில் துவக்கத்தில் இருந்த சந்தேகங்களுக்கு பதில் கிடைத்தது. அந்த மூன்று மாணவர்கள் மீதான குற்றச்சாட்டு கொஞ்சம் குழப்பமாகவே இன்னும் இருக்கிறது.

தமன்னா, இயக்குநர் ஜி.எம். குமார், மருத்துவராக வரும் பசுபதி. இன்ஸ்பெக்டராக
வரும் அருள்தாஸ் என அனைவரும் நன்றாக செய்திருக்கிறார்கள்.

நல்ல சீரிஸ் தான். பாருங்கள்.

The Game (1997) திரில்லர்!


கதை. நாயகன் ஒரு பெரும் பணக்காரர். மனைவியை பிரிந்து ஒரு பெரிய வீட்டில் தனியாக வாழ்கிறார். குழந்தைகளும் இல்லை. அவருடைய பிறந்தநாளன்று அவருடைய தம்பி, தான் ஒரு விளையாட்டை முன்பு விளையாடியதாகவும், ”நீயும் விளையாடு! உன் வாழ்க்கையையும் மாற்றும்” என ஒரு நிறுவனத்தின் கார்டை கொடுத்துவிட்டு சொல்கிறார்.


தனக்கு நிறைய வேலைகள் இருந்தாலும், விளையாட்டை தெரிந்துகொள்ள போகிறார். அவர் உடல்நிலையை சோதித்து, அறிவுத்திறனையும் பல்வேறு கேள்விகள் கேட்டு தெரிந்துகொள்கின்றனர். என்ன மாதிரி விளையாட்டு என்றெல்லாம் சொல்லப்படவில்லை. உங்களுக்கு பிடிக்கும் என சொல்லி அனுப்பிவிடுகின்றனர்.

ஒருநாள் வேலை முடிந்து வீட்டுக்கு வருகிறார். வாசலில் ஒரு பொம்மை இருக்கிறது. எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் போனால், விளையாட்டு துவங்குகிறது. அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் துவக்கத்தில் அவருக்கு கோபம், ஆச்சர்யம் ஏற்படுத்தினாலும், பிறகு மிகுந்த சிக்கலாகிறது. மன உளைச்சல் ஆகிறார். அவருடைய வங்கி கணக்கில் இருந்து மொத்தப் பணத்தையும் எடுத்துக்கொள்கின்றனர். அவரை கொல்லப்பார்க்கிறார்கள்.

பிறகு என்ன ஆனது என்பதை மீதி பாதி படத்தில் பரபர காட்சிகளுடன் சொல்லி முடிக்கின்றனர்.

*****

இயக்குநர் திரு விஷாலை வைத்து ’சமர்’ என ஒரு படம் எடுத்திருப்பார். Game படத்திலாவது அவருக்கு விளையாட்டு என சொல்லி துவங்கப்படும். சமரில் எதவும் சொல்லாமலேயே நாயகனின் வாழ்க்கையில் விளையாடுவார்கள். சுத்தலில் விடுவார்கள்.

இப்படிப்பட்ட விளையாட்டு கற்பனையா? அல்லது உண்மையில் வெளிநாடுகளில் இருக்கிறதா என தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். அப்படி இருந்தால் அபத்தம் என்பேன்.

முற்றும் துறந்த முனிவரிடம், ஒரு செல்வந்தன் ”இத்தனை பணம் இருந்தும், எனக்கு நிம்மதியே இல்லை” தன் செல்வங்களை எல்லாம் மூட்டைக் கட்டி காலடியில் வைத்தனாம். மொத்தப் பணத்தையும் எடுத்துக்கொண்டு முனிவர் ஓட ஆரம்பித்தாராம். அடடா! முற்றும் துறந்தவர் என நினைத்தோம். சரியான பிராடா இருப்பார் போலிருக்கே! மொத்த பணமும் போச்சேன்னு பின்னாடியே தலை தெறிக்க ஓடினானாம். ஒரு கட்டத்தில் முனிவர் ஓடுவதை நிப்பாட்டி, பின்னாடி ஓடிவந்தவனிடம் அந்த மூட்டையை கொடுத்தாராம். ”இப்ப நிம்மதியா இருக்கா?” என கேட்டாராம். அந்த கதையை நினைவுப்படுத்தியது இந்தப்படம்.

படம் பொம்மையை கையில் எடுத்த பிறகு, இறுதிவரை விறுவிறுவென செல்கிறது. புகழ்பெற்ற Seven படத்திற்கு பிறகு David Fincher இயக்கிய படம். படத்தின் நாயகனாக வரும் மைக்கேல் டக்ளஸ் அருமையாக செய்திருப்பார்.

பாருங்கள்.

Wild (2014) Travel Movie




Tracks என ஒரு படம். 1970களில் ஆஸ்திரேலியாவில் பாலைவனத்தின் வழியாகவும் 2700 கிமீ தனது மூட்டை முடிச்சுகளுடன் மூன்று ஒட்டகத்தின் துணையுடன் பயணித்த கதை.


அது போல இதுவும் நீண்ட நடைபயணம் குறித்த படம் தான். Pacific Crest Trial சுருக்கமாய் PCT. மெக்சிகோவில் துவங்கி அமெரிக்கா வழியாக கனடா வரை 4270 கிமீ நீண்ட பயணமிது. இந்த பயணத்தில், மிக வறட்சியான பாதை, குளு குளு ஓடைகள், அருவிகள், முழங்காலுக்கு பனிப்பாதை என கலவையாக இருக்கிறது. தனியாக, குழுவாக பயணம் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

படத்தில், நாயகியின் நடுத்தர வயது அம்மாவை புற்றுநோய் கொன்றுவிடுகிறது. சிறுவயதிலேயே குடிகார அப்பாவிடமிருந்து பிரிந்து வந்துவிடுகிறார்கள். இவளின் தாறுமாறான நடவடிக்கைகளில் திருமண உறவும் முறிந்துவிடுகிறது. ஒரு மாறுதலுக்காக அந்த நீண்ட பயணத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்தை (1800 கி.மீ.) தேர்ந்தெடுத்து தனியே பயணிக்கிறாள்.

மூன்று மாதத்திற்கான தேவையான பொருட்களை சேகரித்து, அடுக்கி அதை முதுகில் மாட்டி நிற்கவே பெரிய போராட்டமாகிவிடுகிறது. இருப்பினும் வெற்றிகரமாய் நடக்க துவங்குகிறாள். ”எல்லா பயணமும் முதல் காலடியில் தான் துவங்குகிறது” என்பார்கள். பயணம் முழுவதும் அவளின் கடந்த கால கசப்பான வாழ்க்கை நினைவலைகள் வந்து அலைகழிக்கின்றன. இருப்பினும் உறுதியுடன் முன்னேறி போய்க்கொண்டிருக்கிறாள்.

போகிற வழியில் வாங்கிப்போன அடுப்பு சொதப்பிவிடுகிறது. ஒரு மலையின் உயரத்தில் அமர்ந்திருக்கும் பொழுது ஒரு ஷீ கீழே விழுந்துவிடுகிறது. ஓரிடத்தில் தண்ணீர் இருக்கும் என்பார்கள். ஆனால் அங்கிருக்காது. இப்படி பல்வேறு சோதனைகளுக்கு பிறகு தனது இலக்கை சென்று சேர்ந்தாளா என்பதை முக்கால்வாசி படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

இது ஒரு உண்மைக்கதை. பயணத்தின் அனுபவத்தை புத்தகமாக எழுதியிருக்கிறார். அந்த புத்தகம் நிறைய விற்று தீர்த்திருக்கிறது. அந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு படம் எடுத்திருக்கிறார்கள். அதனால் அதற்கே உரிய இயல்புகளுடன் படம் பயணிக்கிறது. ஒளிப்பதிவு தரமாக இருக்கிறது. படம் இந்த பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அவளின் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. நாயகி சிறப்பாக நடித்திருக்கிறார்.

இந்த பயணம் குறித்து நிறைய டாக்குமெண்டரி படங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. நன்றாக எடுத்திருக்கிறார்கள். நம்மூரில் இப்படிப்பட்ட டாக்குமெண்டரிகளுக்கு ஏன் முக்கியத்துவம் தருவதில்லை என ஏங்க வைக்கிறார்கள்.

“I knew that if I allowed fear to overtake me, my journey was doomed. ...
மொத்த வாழ்க்கைக்கும் இந்த வரிகள் பொருந்தும் தானே!

1. உண்மை நாயகி
2. நிழல் நாயகி
3. நீண்ட பயணத்தின் வரைபடம்

பெட்ரொல், டீசல் விலை உயர்வு : பா.ஜ.க மோடி தேர்தல் வாக்குறுதியாக சொன்னது என்ன? ஏழு ஆண்டுகளில் செய்ததும் என்ன?


ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க தேர்தல் நேரத்தில் பிரதம வேட்பாளர் மோடி முதல், பா.ஜ.க தொகுதி வேட்பாளர் வரை மக்களின் வாழ்க்கை சுமையை குறைப்போம். குறிப்பாக பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையைக் குறைப்போம் என வாக்களித்தனர்.


தேர்தல் நேரத்தில் ”பெட்ரோல் விலை பதறவைக்கிறது. சிலிண்டர் விலை கவலைக்குள்ளாக்குகிறது” என பாஜக பிரமுகர் தமிழிசை ஒரு காணொளியில் பொங்கி பொங்கி பேசியது அனைவருக்கும் நினைவிருக்கும். போன தேர்தலில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கிறேன் என சொன்ன வாக்குறுதியை பிஜேபி நிறைவேற்றவில்லை. ஆகையால், இந்த தேர்தலில் பிஜேபிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யமாட்டேன் என பாபா ராம்தேவ் சொன்னது எல்லாம் நினைவில் வந்து போகிறது.

இப்படி வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள், கடந்த ஆறரை ஆண்டுகளில் (டிசம்பர் 2020 வரை) பெட்ரொல், டீசல், இயற்கை எரிவாய் மூலம் மக்களிடம் அடித்த கொள்ளை மட்டும் 19 லட்சம் கோடி.

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் வருமானத்தின் அளவு 2014-15ல் 5.4% தான் அதாவது ரூ. 74,158 கோடி. ஆனால், 2020 – 21 ஆண்டில் 12.2% யாக ரூ. 2.95 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது.

ஜூன் 2014ல் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 109 டாலராக இருந்தது. அப்பொழுது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 71.51. ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 57.28.

ஜூன் 2021ல் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 61 டாலராக இருக்கிறது. இப்பொழுது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 96.71. ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 90.92.

பெட்ரொல், டீசல், சிலிண்டர் விலை அதிகரிக்க, அதிகரிக்க அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஏற்கனவே இந்த கொரானா முதல், இரண்டாம் அலைகளில் வருமானம் இழந்து, வேலை இழந்து, மருத்துவத்திற்காக தாங்கள் சிறுக சிறுக சேமித்த மொத்த சேமிப்பையும் தொலைத்துவிட்டு நிற்கும் இந்த நெருக்கடியான காலத்திலும், எரிகிற வீட்டில் கிடைத்த வரை லாபம் என பா.ஜ.க மோடி அரசு பெட்ரொல், டீசல் விலையை ஏற்றிக்கொண்டே செல்கிறார்கள்.

’இந்துக்கள். இந்துக்கள்’ என பேசி பேசி ஆட்சிக்கு வந்த பிஜேபிகாரர்கள், பெரும்பான்மை ’இந்துக்களை’ பற்றிய எந்தவித கவலையும் இல்லாமல், கொள்ளையடித்து கொண்டே இருக்கிறார்கள். பெரும்பான்மை ’இந்துக்கள்’ தான் இந்த உண்மையை புரிந்துகொள்ளவேண்டும்.

****

பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏன்? - நான்காவது அத்தியாயம்.

பெட்ரொல், டீசலை ஜி.எஸ்.டியில் சேர்ப்பதில் என்ன பிரச்சனை? யாருக்கு லாபம்? யாருக்கு இழப்பு?


ஒன்றிய அரசு ஜூலை 2017ல் ”ஒரே தேசம்! ஒரே வரி” என பந்தாவாக முழங்கி ஜி.எஸ்.டியை அவசரகதியில் அறிமுகப்படுத்தியது. ஒன்றிய அரசிற்கே ஜி.எஸ்.டியில் தெளிவில்லாத பொழுது, மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டியில் தெளிவில்லை என்பது இயல்பானது. அப்போதே, ஜி.எஸ்.டி வரித் திட்டத்தை அமுல்படுத்தினால், உற்பத்தியில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் வரி இழப்பால் பாதிக்கப்படும் என்றார்கள் வரி ஆலோசகர்கள். அது உண்மையும் கூட!


வரி இழப்பு ஒரு பக்கம் என்றாலும், ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி வசூலித்த பணத்தை மாநிலங்களுக்கு உரிய காலத்தில் தருவதில்லை. இழுத்தடிக்கிறார்கள். மாநில அரசுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துத்தான் தங்கள் பங்குகளை பெறுகிறார்கள். அதை வாங்கித்தான் மாநிலத்தில் அவர்களது திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.

இதில் ஜி.எஸ்.டி வரி வரம்புக்குள் பெட்ரோல், டீசல், எரிவாயுவை சேர்ப்பதில் ஒன்றிய அரசு “நாங்க ஒண்ணும் எதிர்க்கலை. மாநிலங்கள் தங்களுக்கு வரி வருவாய் குறையும் என்று தான் எதிர்க்கின்றன” என நல்லபிள்ளை போல பேசுகிறார்கள்.

ஏனென்றால், ஒன்றிய அரசு பெட்ரொல், டீசல், எரிவாயுவை ஜி.எஸ்.டியில் சேர்த்து, ஒன்றிய அரசிற்கான வரியையும், கூடுதலான பிற வரிகளையும் தங்கள் விருப்பத்திற்கு போட்டு வசூல் செய்துகொள்ளும். ஆனால், மாநிலங்கள் ஏற்கனவே தங்களுக்கு வருமானத்திற்கான வழிகள் வேறு இல்லாத பொழுது, பெட்ரோல், டீசல், எரிவாயுவிலும் வருமானத்தை இழந்தால் என்ன செய்வது? ஆகையால் தான் மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கின்றன.

ரிலையன்ஸ் இந்தியா முழுவதும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறந்து, பாரத் பெட்ரோலியம், இண்டியன் ஆயில் போன்ற நிறுவனங்களுடன் போட்டிபோட முடியாமல் நஷ்டமாகி, எல்லா விற்பனை நிலையங்களையும் சில ஆண்டுகளுக்கு முன்பு இழுத்துமூடினார்கள் என்பது நமக்கு நினைவிருக்கும். அதற்கு காரணம், பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியமும், இந்தியன் ஆயிலும் அரசின் மானியத்தால் ரிலையன்சைவிட குறைவான விலைக்கு விற்க முடிந்ததுதான்.

அதானால்தான், இந்த தொழிலில் இருக்கும் பெட்ரோலிய, இந்திய, உலக முதலாளிகள் ஒன்றிய அரசை வேறுவகையில் நெருக்குகிறார்கள். பெட்ரோலிய பொருட்களுக்கு ஒன்றிய அரசு தரும் மானியங்களை முழுவதுமாக வெட்டு என்கிறார்கள். தங்களது கொள்ளைக்கு திறந்துவிட கேட்கிறார்கள். ஒன்றிய அரசும் இந்திய தரகு முதலாளிகள், கார்ப்பரேட்டு முதலாளிகள் சொல்வதைதானே உடனே செயல்படுத்தும். அது போல இந்த பட்ஜெட்டில் பெட்ரோலிய பொருட்களுக்கான மானியத்தை கணிசமாக வெட்டியது.

ஆக, முழுவதுமாக பெட்ரோலிய பொருட்களுக்கான மானியத்தை வெட்டுவது! ஒரு லிட்டர் பெட்ரொல் விலை 100ஐ தாண்டுவது எல்லாம், முதலாளிகளுக்கு மகிழ்ச்சி. மக்களுக்கு பெரும்சுமை. ஆனால், பெரும்பான்மை மக்கள் துன்பப்படுவதை பற்றி மோடி கவலைப்படுவாரா என்ன?

பெட்ரொலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து வருகிற 11ந்தேதி நாடு தழுவிய அளவில் அடையாள போராட்டம் நடத்துவோம் என காங்கிரசு கட்சி அறிவித்துள்ளது. எதிர்கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரண்டு, மக்களைத் திரட்டி நாடு ஸ்தம்பிக்கும் வகையில் போராடுவது தான் மாட்டுத்தோல் கொண்டவர்களுக்கு கொஞ்சமாவது உரைக்கும்.

*****

பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏன்? - மூன்றாவது அத்தியாயம்.