> குருத்து: 2009

December 28, 2009

"ஆபரேசன் கீரின் ஹண்ட்" - எதிர்ப்பியக்கம்!


அன்பார்ந்த நண்பர்களே! பெரியோர்களே! உழைக்கும் மக்களே!

மாவோயிஸ்ட் கட்சியையும், நக்சல்பாரி இயக்கத்தையும் நசுக்கி ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது. இந்தப் போரின் பெயர் – ‘ஆபரேசன் கிரீன்ஹன்ட்’ (காட்டு வேட்டை). சட்டிஸ்கார், ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களிலும் மகாராட்டிரம், ம.பி. ஆந்திர மாநிலங்களின் எல்லைப்புறங்களிலும் பரவியிருக்கும் தண்டகாரண்யா காடுகளிலிருந்து மாவோயிஸ்டு கொரில்லாக்களை ஒழித்துக்கட்டுவதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று அறிவித்திருக்கிறார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

அடர்ந்த காடுகளை அழித்து இராணுவத் தலைமையகமும் விமானப்படைப் படைத்தளமும் அங்கே விரைந்து உருவாக்கப்படுகின்றன. சிப்பாய்களுக்கு கொரில்லா எதிர்ப்பு இராணுவப்பயிற்சி அளிக்கப்படுகிறது. சி.ஆர்.பி.எஃப், கோப்ரா, சி-60, கிரேஹவுன்ஸ், இந்திய திபெத் எல்லைப்படை, நக்சல் எதிர்ப்பு அதிரடிப்படை என விதவிதமான அரை இராணுவப்படைகளைச் சேர்ந்த ஒரு லட்சம் சிப்பாய்கள் குவிக்கப்பட்டுத் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்திய இராணுவ ஹெலிக்காப்ட்டர்களும், அமெரிக்க இராணுவ செயற்கை கோள்களும் விண்ணிலிருந்து காடுகளை வேவு பார்க்கின்றன. இந்திய இராணுவ அதிகாரிகள் போரை வழி நடத்துகிறார்கள். சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக, இந்த மண்ணின் பூர்வீக குடிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் போருக்கு மத்திய அரசு ஒதுக்கியிருக்கும் நிதி ரூபாய் ஏழாயிரத்து முன்னூறு (7300) கோடி.

மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்காக ஏற்கெனவே சட்டிஸ்கர் அரசு உருவாக்கியிருக்கும் சல்வார்ஜூடும் என்ற கூலிப்படை, கடந்த 4 ஆண்டுகளில் 700 கிராமங்களை எரித்து 3 லட்சம் பழங்குடி மக்களை விரட்டியிருக்கிறது. 50,000 பழங்குடி மக்கள் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது ஆப்ரேசன் கிரீன்ஹன்ட்-இன் விளைவாக மேலும் பல ஆயிரம் பழங்குடி மக்கள் காடுகளை துறந்து ஓடுகிறார்கள்.
“இலங்கை இராணுவத்தின் இறுதிப்போர் தான் எங்களுக்கு வழிகாட்டி” என்று வக்கிரமாக பிரகடணம் செய்திருக்கிறார் சட்டிஸ்கர் மாநில டி.ஜி..பி விசுவரஞ்சன்.

இந்த போர் வெறிக்குள் புதைந்திருக்கும் இரகசியம் இது தான்.

தண்டகாரண்யாவின் காடுகளிலும், மலைகளிலும் அற்புதமான அறிய கனி வளங்கள் புதைந்து கிடக்கின்றன. உயர்தரமான இரும்புத்தாது, செம்பு, தங்கம், வைரம், அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்சைட், சிமெண்ட் உற்பத்திக்கு தேவையான சுண்ணாம்பு கற்கள், நிலக்கரி, பளிங்கு, கிரானைட், சிலிக்கா, குவார்ட்சைட் போன்ற இருபத்தெட்டு வகை கனி வளங்களும், காட்டு வளங்களும், நீர் வளமும் நிறைந்திருக்கின்றன. பன்னாட்டு கம்பெனிகளும், இந்தியத்தரகு முதலாளிகளும் விருப்பம் போல இந்தப் புதையலை அள்ளிச் செல்ல முடியாமல் குறுக்கே நிற்கிறார்கள மாவோயிஸ்டு கொரில்லாக்கள். சிதம்பரத்தின் கொலை வெறிக்கு காரணம் இது தான் !

ஆம். தண்டகாரண்யாவின் காடுகள், மலைகள், ஆறுகள் அனைத்தையும் அம்மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களுக்குத் தெரியாமலேயே அறுத்துக் கூறுகட்டி விற்றுவிட்டது அரசு. வேதாந்தா (ஸ்டெர்லெயிட் கம்பெனியின் தாய் நிறுவனம்) என்ற பிரிட்டீஷ் பன்னாட்டு நிறுவனத்துக்கு ஒரிசா அரசு நாற்பது (40) கிலோ மீட்டர் நீளமுள்ள நியமகிரி மலையை தாரை வார்த்திருக்கிறது. இந்த மலையில் உள்ள பாக்சைட் தாதுவின் இன்றைய மதிப்பு 200 லட்சம் கோடி ரூபாய் (20 மில்லியன் கோடி) இதற்கு அரசாங்கம் பெறவிருக்கும் ராயல்டியோ வெறும் ஏழு (7%) சதவிகிதம் மட்டுமே !!

இந்தியாவின் மொத்த நிலக்கரி இருப்பில் 16%, இரும்புத்தாதுவில் 20% சட்டிஸ்கர் மாநிலத்தின் 4 மாவட்டத்தில் புதைந்திருக்கின்றன. இவற்றை டாட்டா, எஸ்ஸார், ஜிண்டால் போன்ற தரகு முதலாளிகளுக்கு கிரயம் எழுதித் தந்துவிட்டது அம்மாநில அரசு. இரும்புத்தாதுவின் இன்றைய உலகச்சந்தை விலை டன்னுக்கு 210 டாலர் (சுமார் 10,000 ரூபாய்). இம்முதலாளிகள் அரசுக்குத்தரவிருக்கும் விலை- டன்னுக்கு 27 ரூபாய் !. இவை போல ஒன்று இரண்டல்ல, நூற்றுக்கணக்கான ஒப்பந்தங்கள் !

பழங்குடி மக்களின் கிராமங்களும் விட்டுவைக்கப்படவில்லை. அவர்களுக்கே தெரியாமல் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு எழுதிக் கொடுக்கப் -பட்டிருக்கின்றன. சின்னஞ்சிறிய ஜார்கண்டு மாநிலத்தில் மட்டும் 1,10,000 ஏக்கர் நிலங்கள் இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைமாறி விட்டது. இங்கிருந்து மட்டும் 10,00,000 லட்சம் பழங்குடி மக்களும், விவசாயிகளும் வெளியேற்றப்பட இருக்கிறார்கள். டாட்டா, பிர்லா, ஜிண்டால், எஸ்ஸார், மிட்டல் போன்ற தரகு முதலாளிகளும் வேதாந்தா, போஸ்கோ, ஹோல்சிம், லபார்க், ரியோடிண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் தண்டகாரண்யா காடுகளின் மீது பிணந்தின்னிகளை போல வட்டமிடுகிறார்கள்.

பழங்குடி மக்களோ வெளியேற மறுக்கிறார்கள். போஸ்கோ, டாட்டா, வேதாந்தா, மிட்டல், ஸ்டெர்லைட், ரிலையன்ஸ், ஜிண்டால் என ஒவ்வொரு நிறுவனத்துக்கு எதிராகவும் ஆங்காங்கே உள்ள மக்கள் போராடுகிறார்கள். அலுமினிய உருக்காலையை வேதாந்தா நிறுவனம் கட்டிமுடித்துவிட்டது. ஆனால் பாக்சைட் மலையை நெருங்க முடியவில்லை. கோபால்பூரில் டாட்டா-வின் இரும்பு ஆலை தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கம் தோண்டி தங்கமும் பிளாட்டினமும் எடுக்க வந்த ஜிண்டால் நிறுவனம் அங்கே நுழையவே முடியவில்லை. இவையெல்லாம் மாவோயிஸ்டு ஆயுதக்குழுக்கள் நடத்திய தாக்குதல்கள் அல்ல, தங்கள் மண்ணைப் பறிக்கும் மறுகாலனியாக்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள மக்களின் போராட்டங்கள். எனவே, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் போர் உண்மையில் மக்களுக்கு எதிரான போர்.

“நமது நாட்டில் இயற்கை வளங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் இடதுசாரித் தீவிரவாதம் தொடர்ந்து வளருமானால், அது முதலீட்டுச் சூழலை பெரிதும் பாதிக்கும்.” என்று இந்தப் போருக்கான காரணத்தை பாராளுமன்றத்தில் பச்சையாகப் பேசியிருக்கிறார் மன்மோகன்சிங். டாட்டா, அம்பானி, மிட்டல் போன்ற தரகுமுதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் பகற்கொள்ளையை பாதிக்கும் விதத்தில் யார் போராடினாலும் அவர்களுக்கு எதிராக அரசு போர் தொடுக்கும் என்பதே மன்மோகன்சிங் கூறும் செய்தி. இந்தப் போர், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் மட்டுமல்ல, மக்களுக்கு எதிரான போராகும்.

காடு என்பது பழங்குடி மக்களின் உரிமை.கனிவளங்களைக் கைப்பற்றுவதற்காக, அவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. கடல் மீனவர்களின் உரிமை. பன்னாட்டு மீன்பிடிக் கம்பெனிகள் மீன்வளத்தை அள்ளுவதற்காக, மீனவர்களுக்கு கடலில் எல்லைக்கோடு போடப்படுகிறது. மீறினால் ‘காட்டு வேட்டை’ போல, ‘கடல் வேட்டை’ ஒன்றை இந்த அரசு அறிவிக்கும். விதை என்பது விவசாயிகளின் மரபுரிமை. ஆனால் அதனைப் பன்னாட்டு முதலாளிகளின் சொத்தாக மாற்றிவிட்டது அரசு. இனி தமது விதைகளின் மீது விவசாயிகள் உரிமை கோரினால் போலீசு அவர்கள் மீது வழக்கு தொடுக்கும். மீறினால் போர் தொடுக்கும்.

பழங்குடிகள், விவசாயிகள், மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மட்டுமல்ல, பரந்து பட்ட மக்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன. தென்கொரிய போஸ்கோ நிறுவனத்திற்கு உகந்த ‘முதலீட்டுச் சூழலை’ உருவாக்குவதற்குத்தான் ஒரிசாவின் பழங்குடி மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அதே தென்கொரிய ஹூண்டாயின் ‘முதலீட்டுச் சூழலைப்’ பாதுகாக்கத்தான் தொழிற்சங்கம் அமைத்த தொழிலாளர்கள் சென்னையில் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள்.

பன்னாட்டு கம்பெனிகளின் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கத்தான் குறைந்தபட்ச ஊதியம் முதல் பணி நிரந்தரம் வரையிலான எல்லா உரிமைகளும் தொழிலாளி வர்க்கத்திடமிருந்து பறிக்கப்படுகின்றன. கல்வி வியாபாரிகளின் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கித் தருவதற்காக அரசுப் பள்ளிகள், கல்லூரிகளும், மருத்துவ வியாபாரிகளின் முதலீட்டுச் சூழலுக்காக அரசின் இலவச மருத்துவ மனைகளும் அழிக்கப்பட்டு மக்கள் அந்த முதலாளிகளை நோக்கித் துரத்தப்படுகிறார்கள்.

இந்தப் போர்க்களம் தண்டகாரண்யாவின் காடுகளைத் தாண்டி நாடு முழுவதும் வியாபித்திருக்கிறது. போரின் வடிவங்கள் மட்டுமே இடத்திற்கேற்ப மாறுகின்றன. ஆனால் போரின் நோக்கம்-நமது நாட்டையே பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் அடிமையாக்குகின்ற மறுகாலனியாதிக்கம்.

இந்த மறுகாலனியாதிக்க கொள்கைகள் அனைத்திலும் எல்லா ஓட்டுக்கட்சிகளும் கருத்து வேறுபாடின்றி ஓரணியில் நிற்கின்றன. கொள்ளையின் ஆதாயங்களை பங்கு போட்டுக்கொள்வதற்கு மட்டுமே அவை தமக்குள் மோதிக் கொள்கின்றன.
”1994-ல் காட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாளிலிருந்து மத்தியிலும் மாநிலங்களிலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்திருந்தாலும், தனியார்மயக் கொள்கைகளிலிருந்து மட்டும் எந்த அரசும் வழுவியதில்லை” என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பன்னாட்டு முதலாளிகள் கூட்டத்தில் பெருமையுடன் அறிவித்தார் மன்மோகன்சிங்.

ஆம். மறுகாலனியாக்கக் கொள்கைகளைப் பயன்படுத்திக் கொண்டு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களெல்லாம் முதலாளிகளாகியிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டுகளாக, காண்டிராக்டர்களாக, பங்குதார்களாக அவர்கள் மாறியிருக்கிறார்கள். கோடிசுவரர்களின் மன்றமாகியிருக்கிறது நாடாளுமன்றம். அதிகாரிகளும், நீதிபதிகளும் பன்னாட்டு முதலாளிகளின் அடியாட்களாகவே மாறிவிட்டார்கள்.

சீரழிந்து நாறிக்கொண்டிருக்கும் இந்த அரசியலுக்கு வெளியே மக்கள் நலனுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக, தன்னலனைத் துறந்தவர்களாக, இலஞ்சத்தால் விலைக்கு வாங்க முடியாதவர்களாக, பட்டங்களுக்கும் பதவிகளுக்கும் பல்லிளிக்காதவர்களாக, இழப்புக்கும் தியாகத்திற்கும் அஞ்சாதவர்களாக – நாடெங்கும் அரசியல் களத்தில் நிற்பவர்கள் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் மட்டும்தான். ஓட்டுக்கட்சிகள் மீது மக்கள் மென்மேலும் நம்பிக்கை இழந்து வரும் சூழலில், மறுகாலனியாக்கத் தாக்குதல்களின் தீவிரம், மக்களை நக்சல்பாரிப் புரட்சியாளர்களை நோக்கி நகர்த்துகிறது.

எனவேதான், “நம் நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய உள்நாட்டுப் பாதுகாப்பு அபாயம்” என்று நக்சல்பாரி இயக்கத்தைக் காட்டி எச்சரிக்கிறார் மன்மோகன்சிங். அத்வானி முதல் புத்ததேவ் வரை அனைவரும் அதனை வழிமொழிகிறார்கள். தங்களுடைய எதிரிகள் யார் என்பதை ஆளும் வர்க்கங்கள் தெளிவாக அடையாளம் கண்டு அறிவித்து விட்டன.

அதே நேரத்தில் தமது நண்பர்கள் யார் என்பதை மக்கள் புரிந்து கொண்டு விடாமல், ஓட்டுக்கு லஞ்சம், இலவசத் திட்டங்கள், போன்ற ஆயுதங்களால் அவர்களைத் தாக்கி ஓட்டு வேட்டை நடத்துகின்றனர். இந்த ஓட்டு வேட்டைக்கு மசியாமல் நக்சல்பாரிகளின் தலைமையை மக்கள் நாடினால், உடனே ‘காட்டு வேட்டை’ தொடங்குகிறது.

மாவோயிஸ்டுகள் ஆயுதப்போராட்டம் நடத்துவதனால்தான் அவர்களை ஒடுக்கவேண்டியிருப்பதாக ப.சிதம்பரமும், மன்மோகன்சிங்கும் கூறி வருவது கடைந்தெடுத்த பொய். அடுக்கடுக்காகத் தொடுக்கப்படும் மறுகாலனியாதிக்கத் தாக்குதல்களால் வாழ்க்கைப் பறிக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, எதிர்த்துக்கேட்டால் ஒடுக்கப்பட்டு, கிடிக்கப்பட்ட வெடிமருந்தாக வெடிக்கக் காத்திருக்கிறார்கள் மக்கள். இதை அரசு அறிந்தே இருக்கிறது.

இந்த வெடியின் திரியும் அதனைப் பற்றவைக்கும் பொறியும் நக்சல்பாரிகள் தான் என்ற உண்மையும் அரசுக்குத் தெரிந்தே இருக்கிறது. எனவேதான் திரியைக் கிள்ளுவதில் கவனம் செலுத்துகிறது. மறுகாலனியாதிக்க எதிர்ப்பின் கூர்முனையை நக்சல்பாரி இயக்கத்தை முறிக்க முயல்கிறது. ‘ஆபரேசன் கிரீன்ஹன்ட்’ என்ற நக்சல் வேட்டையின் பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!

நக்சல் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும்
நரவேட்டைப்போரைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்!

பன்னாட்டுக் கம்பெனிகள், தரகு முதலாளிகளுடன்
போடப்பட்டிருக்கும் அனைத்து தேசத்துரோக ஒப்பந்தங்களையும் கிழித்தெறிவோம்!

போராடும் பழங்குடி மக்களுக்குத் துணைநிற்போம்!
மறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!

பழங்குடிகள்-மீனவர்கள்
விவசாயிகள் மீதான போர்தான்
அரசு தொடுத்துள்ள
நக்சல் ஒழிப்புப் போர்!

நக்சல் எதிர்ப்பு நரவேட்டைப் போரை முறியடிப்போம்!
மறுகாலனியாதிக்க எதிர்ப்புப்போரில்
நக்சல்பாரிகள் தலைமையில் அணிவகுப்போம்!

தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்
நோக்கம் இதுதான்.

ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றினைந்து குரல் கொடுக்க‌‌ அனைவரும் அணிதிரண்டு வாருங்கள்.

ஜனவரி 30, 2010

சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்.
-
மக்கள் கலை இலக்கிய கழகம்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.
பெண்கள் விடுதலை முன்னணி.
விவசாயிகள் விடுதலை முன்னனி.

தொலைபேசியில் தொடர்பு கொள்ள:
ம.க.இ.க : 94446 48879
பு.ம.இ.மு : 94451 12675
பு.ஜ.தொ.மு : 94448 34519
பெ.வி.மு : 98849 50952.

தொடர்புக்கு:
அ.முகுந்தன், 110, 2-வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம்,
63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24.
கைபேசி: 9444834519.

நன்றி : சர்வதேசியவாதிகள்

December 20, 2009

அமெரிக்கா - நடப்பு டிசம்பரில் இதுவரை 16 வங்கிகள் திவால்!

அமெரிக்காவில், சென்ன ஒரே வாரத்தில் ஏழு வங்கிகள் திவால் ஆகியுள்ளன. இதனையடுத்து, இவ்வாண்டில், இதுவரையிலான காலத்தில், அமெரிக்காவில் மொத்தம் 140 வங்கிகள் திவால் ஆகியுள்ளன். சென்ற 2008-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது (25 வங்கிகள்) இது ஐந்து மடங்கிற்கும் மேல் அதிகமாகும்.

நடப்பு டிசம்பர் மாதத்தில், இதுவரையில் 16 வங்கிகள் திவால் ஆகியுள்ளன. கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் வங்கிகள் திவால் ஆகியுள்ளன.

அமெரிக்காவில், லேமான் பிரதர்ஸ் திவால் ஆன பிறகு, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவடைந்து வந்தது. இந்நிலையில், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இதில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வேலை இழப்பு விகிதமும் குறைந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் வங்கிகள் தொடர்ந்து திவால் ஆகிவருவது, சென்ற ஆண்டில், பொருளாதாரத்தில் ஏற்பட்ட கடும் பாதிப்பு இன்னும் குறையவில்லை என்பதை காட்டுகிறது.

நன்றி : தினத்தந்தி - 21/12/2009

December 10, 2009

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி - பொதுக்கூட்டம்!


அன்பார்ந்த தொழிலாளர்களே! உழைக்கும் மக்களே!

வெளிச்சத்தின் அருமை இருளில் தெரியும் ! நிழலின் அருமை வெயிலில் தெரியும் ! சிறிது நேரம் விளக்குகள் எரியாவிட்டால் குருடர்களாகிப் போகிறோம். மின் விசிறி சுற்றாவிட்டால் வியர்த்துப் போகிறோம். ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லாவிட்டாலே அனைத்தும் செயலிழந்தது போலாகிவிடுகிறது. இப்படி வீட்டை,ஊரை, நாட்டை அனைத்தையும் இயக்கும் மின்சாரத்தை தயாரிப்பது என்பது, சுவிட்சைத் தட்டினால் விளக்கு எரிவதுபோல் அவ்வளவு எளிமையானது அல்ல! எங்கோ சுரங்கத்தில் இருந்து கரியை வெட்டி எடுப்பதில் இருந்து, நம் தெருக்களில் மின் கம்பங்களில் ஒயர்களை இழுப்பது வரை அனைத்திலும் பல லட்சம் தொழிலாளிகளின் இரவு, பகல் பாராத இரத்தமும், வியர்வையும் சிந்தும் உழைப்பு உறைந்து கிடக்கிறது.

தங்களுடைய உழைப்பின் மூலம் வெளிச்சத்தை படைக்கும் இந்த தொழிலாளிகளின் வாழ்க்கையோ இன்னும் இருளில் தான் உள்ளது. நெய்வேலியின் சுரங்கத் தொழிலாளி முதல், வட சென்னையின் அனல் மின் நிலையத்தில் கரி அள்ளும் தொழொலாளிகள் வரை இது தான் நிலைமை. ஏனென்றால் இவர்கள் ஒப்பந்தத் தொழிலாளிகள் !

ஒப்பந்தத் தொழிலாளர் முறைப்படுத்தல் மற்றும் ஒழித்தல், 1970 என்ற சட்டம் இந்தியாவில் உள்ளது. ஒரு ஆலையில் உற்பத்திக்கு தேவையான வேலையில் வருடம் முழுவதும் ஈடுபடும் தொழிலாளிகள், நிரந்தரத் தொழிலாளிகள் பெறும் உரிமைகள் அனைத்தையும் பெறும் தகுதியுடையவர்கள் என்று சொல்கிறது இந்த சட்டம். இந்த சட்டத்தைப் போட்ட அரசின் பொதுத்துறை, அரசுத்துறை நிறுவனங்கள் தான், இந்த சட்டத்தை மீறி இந்தியாவிலேயே அதிகமான அளவில் ஒப்பந்த தொழிலாளிகளை பயன்படுத்துகின்றன.

சிந்தித்துப்பாருங்கள்! கரியை வெட்டி எடுக்காமல், கரியை அள்ளிப்போடாமல் அனல் மின் நிலையம் எப்படி மின்சாரம் தயாரிக்க முடியும் ? ஆனால் இந்த வேலைகளில் ஈடுபடும் தொழிலாளிகள் உரிமை கேட்க முடியாத ஒப்பந்தத் தொழிலாளிகள் என்கின்றன அனல் மின் நிலைய நிறுவனங்கள்.

வட சென்னை அனல் மின் நிலையத்தில் கரி அள்ளும் தொழிலாளிகளாக 300 பேர் கடந்த பத்து வருடங்களுக்கு மேல் வேலை செய்து வருகிறோம். எங்கள் வியர்வையையும், இரத்தத்தையும் சிந்தி தான், எமது உழைப்பால் தான் இந்த நிறுவனத்தை உயர்த்தியிருக்கிறோம். ஆனால் குறைந்த கூலியில் வேலை உத்திரவாதம் இல்லாத ஒப்பந்தத் தொழிலாளிகளாக உரிமைகளின்றி இருக்கிறோம். இந்நிலையில் தான், உழைப்பது மட்டுமல்ல, உரிமைகளுக்காக போராடுவதும் தான் தொழிலாளிகளின் பண்பு, கடைமை என்று உணர்ந்து கொண்டோம்.

ஆகவே நாங்கள் ஒன்று சேர்ந்து தொழிற்சங்கம் துவங்கியுள்ளோம். இதுவரை தொழிலாளிகளாக மட்டும் இருந்த நாங்கள், தற்போது தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட படையணியில் இணைந்துள்ளோம். தொழிலாளர் உரிமைகளுக்காகவும், தொழிற்சங்க உரிமைகளுக்காகவும் நடக்கும் போராட்டங்களில் தொழிலாளி வர்க்கத்தின் தோளோடு தோள் சேர்த்து நிற்போம் என்று உறுதிமொழி ஏற்றுள்ளோம்.

உழுது பயிரிட்ட விவசாயிகளின் உழைப்பு உணவாக, நெசவாலைத் தொழிலாளிகளின் உழைப்பு மானமாக, கட்டுமானத் தொழிலாளிகளின் உழைப்பு கூரையாக என உழைக்கும் மக்களின் உழைப்பே உலகை இயங்க வைக்கிறது. ஆனால் உழைக்கும் மக்களின் வாழ்க்கையோ வறுமையிலும், பட்டினியிலும் தள்ளப்பட்டுள்ளது.‌ உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, உரிமையை நிலைநாட்ட நடக்கும் அரசியல் போராட்டங்களில் முன்நிற்போம்.

அந்த அடிப்படையிலேயே, “உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம்” என்று முழங்கும் நக்சல்பாரி அரசியல் வழியில் போராடும் புரட்சிகர தொழிற்சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைந்துள்ளோம்

மண்ணுக்கடியில் கிடக்கும் கரி தான் வெட்டியெடுத்தால் மாபெரும் மின் சக்தியை கொடுக்கிறது. உழைத்துக் காய்த்த கரங்கள் அனைத்தும் திரண்டெழுந்தால் நாம் தான் மாபெரும் அர‌சியல் சக்தி.
தொழிலாளி வர்க்கமாய் அணிதிரள்வோம். தொழிற்சங்கத்தில் ஒன்றிணைவோம். உழைக்கும் மக்களுடன் திரண்டெழுவோம், அனைவரும் வாரீர் என அறைகூவி அழைக்கிறோம்.

வட சென்னை அனல்மின் நிலைய (NCTPS) ஒப்பந்த‌ தொழிலாளர்களின் தொழிற்சங்க துவக்க விழா.

நிகழ்ச்சி நிரல்

சங்கத் துவக்க விழா

நாள் 11. 12 .09
மாலை 4.00 மணி
NCTPS ஆலைவாயில்

தலைமை
தோழர் சி.மோகன், NCTPS கிளை
கொடியேற்றுபவர்

தோழர் அ.முகுந்தன்
மாநிலத் தலைவர், பு.ஜ.தொ.மு

பெயர்ப்பலகை திறப்பவர்
தோழர் பா.விஜயக்குமார்
மாநிலப்பொருளால‌ர், பு.ஜ.தொ.மு

பொதுக்கூட்டம்


மாலை 6.00 மணி
அத்திப்பட்டு புது நகர்
இரயில் நிலையம் அருகில்

முன்னிலை
தோழர் எம். மதியழகன்
தலைவர், NCTPS கிளை

தலைமை
தோழர் ம.சி.சுதேக்ஷ் குமார்
திருவள்ளூர் மாவட்ட செயலாளர்,பு.ஜ.தொ.மு.

சிறப்புரை
தோழர் சு.ப.தங்கராசு
மாநில பொதுச்செயலாளர்,பு.ஜ.தொ.மு.




ம.க.இ.க மையக் கலைக்குழுவின்
புரட்சிகர கலை நிகழ்ச்சி.

அனைவரும் வருக‌

தோழமையுடன்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
NCTPS கிளை.

தொடர்புக்கு:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
அ.முகுந்தன்,110, 2வது மாடி,
மாநகராட்சி வணிக வளாகம்,
ஆற்காடு சாலை, கோடம்பாக்கம்,
சென்னை 24

9444834519, 9444442374

- நிகழ்ச்சிக்கான துண்டறிக்கையிலிருந்து...

நன்றி : சர்வதேசியவாதிகள்

December 4, 2009

பரஸ்பர நிதிகள் - ஒரு அறிமுகம்!



முன்குறிப்பு : பரஸ்பர நிதிகள் - இது குறித்து அடிக்கடி பத்திரிக்கைகளில் விளம்பரம் பார்க்கிறோம். பரஸ்பர நிதிகள் என்னவென்றும், அதன் பயன்கள் மற்றும் குறைபாடுகள் பற்றி ஒரு அறிமுகத்தை பாலகார்த்திகா அவர்கள் எழுதிய இந்த கட்டுரை விளக்குகிறது.

மற்றபடி, மூழ்காது (risks) என்று சொல்வது, பொருளாதார நெருக்கடியின் பொழுது பரஸ்பர நிதிகளின் கதி என்னவாயிற்று என்பதை வரும் பதிவுகளில் பார்க்கலாம். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

******

பரஸ்பர நிதிகள் என்றால் என்பது ஒரு வித முதலீட்டு நிறுவனங்களே! 'சிறு துளி பெருவெள்ளம்' என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்குவன இந்தப் பரஸ்பர நிதிகள். நீங்கள் எத்தகைய முதலீடு செய்யவேண்டும் என்று விரும்பினாலும் அதற்கேற்ற ஒரு முதலீட்டுத் திட்டத்தை(Investment Scheme), பரஸ்பர நிதியங்கள் வழங்குகின்றன.ஏறத்தாழ இருபது வருடங்களாகப் பிரபலமாக இருக்கும் இந்தப் பரஸ்பர நிதியங்களுக்கான தொடக்கம் 1774ம் ஆண்டே ஹாலந்து நாட்டில் ஏற்பட்டது. இன்று பங்குச்சந்தைக்கு இணையாக பரஸ்பர நிதியங்கள் பல வந்துவிட்டன.

பரஸ்பர நிதியங்கள் எப்படிச் செயல்படுகின்றன?

ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் இருந்து திரட்டப்பட்ட லட்சக்கணக்கான தொகையை, பங்கு நிறுவனங்களில் உள்ள நிதி நிர்வாகிகள் பல விதமான பங்குகளிலும், கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கின்றனர். பங்குகளுக்குக் கிடைக்கும் பங்காதாயமும், கடன் பத்திரங்களில் கிடைக்கும் வட்டியும் முதலீடு செய்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படுகிறது. அது மட்டுமின்றி, நிதியங்கள் தம்மிடம் இருக்கும் பங்குகளை விற்பதால் கிடைக்கும் லாபம், முதலீட்டாளர்கள் தங்கள் பரஸ்பர நிதி முதலீடுகளை நிகர சொத்து மதிப்பினை(Net Asset Value-NAV) விடக் குறைவான விலையில் (Discount) செய்வதால் கிடைக்கும் லாபம் இவையும் பரஸ்பர நிதியங்களில் செய்யும் முதலீடுகளை கவர்ச்சிகரமாக மாற்றுகின்றன.

பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வதால் என்ன பயன்?

சாதாரணமாக நாமே நேரடியாக பங்குகளில் முதலீடு செய்வதை விட பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வதால் கீழ்க்கண்ட பயன்கள் விளைகின்றன.


பயன் ஒன்று:
அபாயக்குறைவு. எந்த முதலீடாக இருந்தாலும் அதில் கொஞ்சம் ஆபத்து (Risk) இருக்கத்தான் செய்யும். ரிஸ்க் என்பதே இல்லாத முதலீடு எதுவுமே கிடையாது. ஆனால், நீங்கள் பங்குகளில் முதலீடு செய்கையில் பல்வேறு விதமான பங்குகளில் உங்களால்
ஈடுபட முடியாது. அதாவது பரவல் (Diversification) குறைவு. அது ரிஸ்க்கை அதிகரிக்கச் செய்கிறது. ஆனால் பரஸ்பர நிதியங்களில் நீங்கள் முதலீடு செய்யும்பொழுது, உங்கள் பணமும், உங்களைப் போன்ற பல முதலீட்டாளர்களின் பணத்துடன் சேர்ந்து பல வகை நிறுவனங்களின் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். இதன் காரணமாக உங்கள் பணத்தின் மீதான ரிஸ்க் குறைகிறது

பயன் இரண்டு: திறமையும் அனுபவமும் மிக்க நிதி நிர்வாகம். நீங்கள் உங்கள் பணத்தை எந்தப் பங்கில் முதலீடு செய்வது என்று தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பணத்தை சிறந்த, லாபம் தரக்கூடிய, நம்பிக்கைக்குரிய பங்குகளில் முதலீடு செய்வது பரஸ்பர நிதி நிறுவனங்களில் உள்ள நிதி நிர்வாகிகளின் பொறுப்பாகி விடுகிறது.

பயன் மூன்று: சிறிய அளவு முதலீடுகள். சிறிய முதலீடாக இருப்பின் பல விதமான பங்குகளில், பல நிறுவனங்களில் முதலீடு செய்ய இயலாது. அதற்கு நிறையப் பணம் தேவைப்படும். பரஸ்பர நிதியங்களில் நீங்கள் எவ்வளவு சிறிய அளவு தொகையையும் முதலீடு செய்ய இயலும். அத்துடன் சில பரஸ்பர நிதி நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரி விலக்கும் அளிக்கப்படுகிறது

பரஸ்பர முதலீடுகளின் வகைகள்:

பரஸ்பர நிதியில் செய்யப்படும் முதலீடுகளைப் பொதுவாக இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை - சமபங்கு நிதி (Equity Share Funds), நிலையான வருமானம் தருபவை (Fixed Income Funds)
சமபங்கு நிதி என்பது பல நிறுவனங்களில் பங்குகளில் முதலீடு செய்யப்படுவது. இப்பங்குகள் கொஞ்சம் அபாயகரமானவை எனினும், இதன் பரவல் (Diversification) காரணமாக, பொதுவாக நல்ல இலாபமீட்டக் கூடியவையாகவே திகழ்கின்றன. இவற்றின் இரண்டு உட்பிரிவுகள் சமநிலைப்பங்கு (Balance Fund) மற்றும் சிறப்பம்சப் பங்குகள் (Speciality Fund). சமநிலைப்பங்கு என்பது, சரியான விகிதத்தில் பங்குகளிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்வதாகும். சிறப்பம்சப் பங்குகள் என்பது ஒரு குறிப்பிட்ட துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கில் மட்டும் முதலீடு செய்வது அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்த் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது. சில பரஸ்பர முதலீடு நிறுவனங்கள், நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் மட்டும் முதலீடு செய்வது, புகையிலை, மது முதலியவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களில் முதலீடு செய்யாமல் இருப்பது என்று சமூக உணர்வுடன் இணைந்த முதலீடுகளை மேற்கொள்கின்றன.

நிலையான வருமானம் தரும் பரஸ்பர நிதி முதலீடுகள்: பங்குகளில் முதலீடு செய்யாமல், திரட்டிய நிதியை அரசு மற்றும் தரமான நிறுவனங்களில் கடன் பத்திரங்களில், பரஸ்பர நிதி நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன. இதனால் கிடைக்கும் வட்டியானது மாதாமாதம் இத்தகைய முதலீடுகளில் பணம் போட்ட முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படுகிறது.

இவை தவிர, குறுகிய கால கருவூல வரைவு (Treasury Bill), பணச்சந்தை முதலீடுகள் (Money Market Instruments) குறியீட்டு நிதி (Index Fund ) என்று மேலும் வகைகள் உள்ளன.

பரஸ்பர நிதி நிறுவனங்களின் குறைபாடுகள்:

கட்டணங்கள்: நேரடியாக நாமே முதலீடு செய்வதை விட பரஸ்பர நிதி நிறுவனங்களில் முதலீடு செய்கையில் லாபம் குறைவது உண்டு. ஏனெனில், நாம் பலவிதமான கட்டணங்களைச் செலுத்த நேரிடுகிறது.
நிதி நிறுவனங்களில் உண்மையாகவே அனுபவமும் திறனும் நிறைந்த நிதி நிர்வாகிகள்தான் இருக்கிறார்களா என்பது நமக்குத் தெரியாது.சரியான முறையில் நிர்வகிக்கப் படாத பரஸ்பர நிதிகளில் செய்யப்படும் முதலீடுகள் சரியான அளவு லாபத்தைக் கொடுப்பதில்லை. எனவே நல்ல தரமான, அனுபவமுள்ள நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்வது அவசியம். பரஸ்பர நிதிகள் குறித்து மேலும் சில தகவல்களைத் தொடரும் கட்டுரைகளில் காண்போம்.

- பாலகார்த்திகா

நன்றி : ஈழநேசன்

November 26, 2009

தேசம் கடக்கும் முதலாளிகளும் தற்கொலையால் சாகும் விவசாயிகளும்!


பாட்ஷா படத்தில் ஒரு காட்சி!

மாணிக்கத்திற்கும் (ரஜினி) அப்பாவிற்கும் (விஜயகுமார்)க்கும் உரையாடல்.

"ஏதோ நீ என் பிள்ளைன்றதால தப்பிச்சே!"

பதறிப்போய், ரஜினி "அப்ப அனவர்?" என்பார்.

'அவ்வளவு தான்" என வார்த்தையை முடிக்கிற பொழுது....

அன்வரை சுற்றி நின்று வில்லனின் ஆட்கள் கொடூரமாக வாளால் வெட்டிக்கொண்டிருப்பார்கள்.

நிற்க!

***

அன்வரை போல அநாதையாய், இந்திய அரசால் கைவிடப்பட்டவர்களாய் இந்த நாட்டின் விவசாயிகள் கொத்து கொத்தாக தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். (மறைமுகமாக) கொலை செய்யப்பட்டு கொண்டிருக்கிறார்கள்)

இந்நாட்டில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கைகள் அமுல்படுத்த துவங்கி 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிவிட்டன. கடந்து வந்த பாதையெங்கும் விவசாயிகளின் பிணங்கள். (அரசு தரப்பே 1 லட்சத்திற்கும் மேலாக தற்கொலை என ஒப்புக்கொண்டுள்ளது - 8 மணி நேரத்திற்கு 1 தற்கொலை).

இந்த ஆண்டில் நவம்பர் இன்றைய தேதி வரைக்கும் 892 விவசாயிகள் தற்கொலை. மராட்டியத்தின் விதர்பா மாவட்டத்தில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 6 பேர் தற்கொலை (தினமணி - 27/11/2009 - பக். 10)

மரபணு மாற்ற விதைகள், உரங்களின் கட்டுபடியாகாத விலை, அரசு கடன், அதன் மீதான வட்டி, கந்து வட்டி கும்பலிடம் கடன், இப்படி பல மலைகளை கடந்து, விளைச்சல் விளைந்து, துன்பம் தொலையும் நினைக்கும் பொழுது, பருவநிலை மாற்றம், விளைச்சல் பல்லிளிப்பது, விளைச்சல் வந்தாலும், உரியவிலை கிடைக்காதது என்பதில் விவசாயிகள் துவண்டு போகிறார்கள்.

இதே இந்தியாவில், இன்னொரு புறம், தரகு முதலாளிகளின் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடுகிறது. காரணம் - அரசு இவர்களை செல்லப்பிள்ளையாக நடத்துகிறது.

கடந்த பல ஆண்டுகளாக பெருமுதலாளிகள் வங்கிகளில் வாங்கிய கடன் 'வராக்கடன்' என தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் ஜப்தி, கைது நடவடிக்கைகளை தரகு முதலாளிகளுக்கு, பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிராக அரசு எடுக்க மறுக்கிறது.


39000 கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி, 20000 கோடி ரூபாய் சுங்கவரி, கலால் வரி, சேவை வரி என நிலுவையாக உள்ளதை அரசு கறாராக வசூலிக்க மறுக்கிறது.

இது தவிர, (2007 - 08) கார்ப்பரேட் வரி, கலால் வரி, சுங்க வரி என பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய வரியில் 2.3 லட்சம் கோடி அரசால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. மொத்த வரியில் இதன் பங்கு 50%. மேலும், 42100 கோடி வருமான வரியை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறடு.

இப்படி அரசு செய்கிற தள்ளுபடிகள், மானியங்கள், சலுகைகள், தன் தொழிலில் வருகிற வருமானம், வெளிநாட்டு கடன் என எல்லாம் சேர்ந்து, கடந்த சில ஆண்டுகளில், தரகு முதலாளிகள் வெளிநாட்டு நிறுவனங்களை நாளும் வாங்கி குவித்து, தேசங்கடந்த தரகு முதலாளிகளாக பரிணாமம் பெற்றிருக்கிறார்கள்.

டாட்டா குழுமம் கோரஸ் உருக்காலையை (13000 கோடிக்கு) வாங்கியிருக்கிறது. இது தவிர, டாட்டா குழுமத்திற்கு இங்கிலாந்தில் மட்டும் 18 நிறுவனங்களை வாங்கியிருக்கிறார்கள். பிர்லா குழுமத்திற்கு ஆஸ்திரேலியாவிலும், ஆப்பிரிக்காவிலும் இரும்பு தாது சுரங்கங்கள் இருக்கின்றன.

உண்மை நிலை இவ்வாறு இருக்க, விவசாயிக்கு வட்டியை தள்ளுபடி செய்தாலோ, கடன் தள்ளுபடி செய்தாலோ இங்குள்ளவர்கள் முனகுகிறார்கள். அரசுக்கு இதே வேலையா போச்சு! என சலித்துக்கொள்கிறார்கள். அறியாமை கூட வன்முறை தான்.

தொடர்புடைய சுட்டிகள் :

2 ஆண்டில் 143 அமெரிக்க நிறுவனங்களை இந்திய நிறுவனங்கள் வாங்கி சாதனை - தமிழ் தேசம்

Tata steel gets corus boost, net at Rs. 12322 Cr. - Financial Express


One Farmer's sucide Every 30 minutes - பத்திரிக்கையாளர் சாய்நாத்

November 25, 2009

கானிகோசென் - அதிகம் விற்கும் மார்க்சிய நாவல்! விரும்பும் படம்!


அமெரிக்காவிற்கு அடுத்து மிகப்பெரிய பொருளாதார நாடு ஜப்பான். 1995ல் குமிழி பொருளாதாரம் ஜப்பானில் வெடித்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பங்கு சந்தை குறியீட்டு எண்கள் சட சடவென சரியத் துவங்கின. (20000 புள்ளிகளுக்கும் மேலாக). சிறிசும், பெரிசுமாய் பல வங்கிகள் ஆயிரக்கணக்கில் திவாலாகின. நிறுவனங்கள் மஞ்சள் கடுதாசியை வரிசையில் நின்று கொடுத்தன.

பொருளாதார சரிவிலிருந்து மீட்க... ஜப்பான அரசு வங்கி விகிதத்தை குறைத்துப் பார்த்தது. ஆயிரக்கணக்கான கோடிகளில் மக்களின் வரிப்பணத்தை அரசு பங்குச் சந்தையில இறக்கி பார்த்தது. அமெரிக்க அரசைப் போல திவாலான முதலாளிகளை காப்பாற்ற அள்ளிக்கொடுத்தது. நிலைமையிலிருந்து மீள்வதற்குள் உலக பொருளாதார மந்தத்தில் ஜப்பான் மாட்டிக்கொண்டது.

இதுநாள்வரை ஜப்பானில் இருந்து தொழிலாளர்களை சுரண்டி கொண்டிருந்த பன்னாட்டு நிறுவனங்கள், நெருக்கடியில் மாட்டியுள்ள ஜப்பானை கண்டுகொள்ளாமல், அடுத்து மலிவுவிலை உழைப்புச் சந்தையான சீனாவிற்கு மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜப்பானில் நிரந்தர தொழிலாளர்களை லட்சகணக்கில் வீட்டிற்கு அனுப்புகிறார்கள். ஒப்பந்த தொழிலாளர்களை அதிகமாக்கி கொண்டே போகிறார்கள். (650 லட்சம் தொழிலாளர்களில் 200 லட்சம் ஒப்பந்த தொழிலாளர்கள்) . ஜப்பானிய தொழிலாளர்கள் இன்றைக்கு வேலைக்காக சீனாவுக்கு போகிறார்கள். மன அழுத்தம், நோய்க்கு வைத்தியம் பார்க்க முடியாத வசதியின்மை, கடன் தொல்லை போன்ற காரணங்களால்... ஆண்டுக்கு 33500 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.(தினமலர் - ஆக. 2008) சராசரியாக தினம் 100 பேர். தற்கொலையில் உலகத்தில் முதலிடம். வயதானவர்கள் அதிகம் வசிக்கும் நாடும் ஜப்பான் தான்.

ஜப்பானில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகள், நிதிமூலதன கும்பலகள்
மக்களின் சேமிப்புகளை கைப்பற்றி, பங்குச்சந்தையில் கொட்டு, எங்களுக்கு கொடு என ஜப்பான் அரசை மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். உலகில் அதிகம் சேமிப்பவர்கள் ஜப்பானியர்கள் தான்.

ஜப்பான் மக்கள் முதலாளித்துவத்தை நம்பினார்கள். தொழிற்சங்கங்களில் இணைவது சொற்பமானார்கள் தான். முதலாளிகளோ பலமுறை கழுத்தறுப்பு செய்தார்கள். கம்பி நீட்டினார்கள். இன்றைக்கு, அரசிடம் காப்பாற்ற சொல்லி, கையேந்தி நிற்கிறார்கள்.

இனி முதலாளித்துவத்தை நம்பி பயனில்லை என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். இன்றைக்கு ஜப்பானில் அதிகம் விற்கும் நாவல் 'கானிகோசென்" என்ற நாவல். 6 லட்சம் பிரதிகளூக்கும் மேல் விற்பனையாகியிருக்கிறது. 1929ல் வெளிவந்தது. இதை எழுதியவர் டகீஜீ கோயாஷி என்னும் கம்யூனிஸ்ட். தனது 29வயதிலேயே காவல்துறையின் சித்தரவதையால் கொல்லப்பட்டவர்.

நாவல், ஒரு கொடூரமான கப்பல் தலைவனின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து வேலை நிறுத்தம் செய்ய விழைவதைப் பற்றியது. முதலாளித்துவத்தையும், அதன் பெருமுதலாளிகளையும் வெல்ல அவர்கள் சபதமேற்பதே அந்நாவலின் முடிவு

இந்நாவலை 1953லும், 2007 லிலும் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த பூஷன் திரைவிழாவில் திரையிட்டிருக்கிறார்கள்.

மேலை நாடுகளில் மார்க்ஸின் "மூலதனத்தை" புரட்டுகிறார்கள். ஜப்பானில், கம்யூனிசத்தைப் பற்றி சிந்திக்கிறார்கள். மார்க்ஸிற்கு மறைவில்லை.


தொடர்புடைய சுட்டிகள் :


அதிக அளவில் விற்பனையாகும் புத்தகங்கள் வரிசையில் மார்க்சிய நாவல் - இனியொரு

கானிகாசென் - விக்கிபீடியா

கானிகாசென் - திரைப்பட விமர்சனம்

தொழிலாளர்கள் பற்றிய இலக்கியங்கள்

November 22, 2009

பொருளாதாரம் - சில குறிப்புகள்

பொருளாதார சமச்சாரங்கள் மற்ற துறை சமாச்சாரங்களை போல நாம் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், பொருளாதார சமச்சாரங்கள் தான் நாட்டின் போக்கை தீர்மானிப்பதாக இருக்கின்றன.

பொருளாதார செய்திகளை பல தளங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பொருளாதார விசயங்களை ஒருங்கிணைந்த முறையில் புரிந்து கொள்ள கூடிய கட்டுரைகள் தமிழில் கிடைப்பது அரிதாக தான் இருக்கிறது.

இதற்கு முன்பாக பொருளாதாரம் தொடர்பாக, கட்டுரைகள் எழுதப்பட்ட பொழுதும், வேறு சில பதிவர்கள் எழுதிய கட்டுரைகளையும் நன்றி சொல்லி வெளியிட்ட பொழுதும், எளிமையாகவும், பயனுள்ளதாகவும் இருந்ததாகவும் நண்பர்களும், தோழர்களும் தெரிவித்திருந்தார்கள்.

குருத்து தளத்தில் அரசியல், திரைப்படம், பண்பாடு என தலைப்புகளில் எழுதினாலும், கூடுதலாக பொருளாதார விசயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தலாம் என நினைக்கிறேன். (நமக்கு எது உருப்படியாக வருகிறதோ அதையே செய்வோம் என்ற நல்லெண்ணம் தான்) உங்கள் கருத்துக்களையும் தெரியப்படுத்துங்கள். முடிந்தமட்டிலும் சுவாரசியமாக படிக்கும் விதங்களில் எழுத முயற்சிக்கிறேன்.

கட்டுரைகளின் தலைப்புகளை கிளிக்கினால், அந்தந்த கட்டுரைகளுக்கு இட்டுச்செல்லும்.

கடந்த பதிவுகளில்... எழுதப்பட்ட பொருளாதார கட்டுரைகள்:

* பணவீக்கம் என்றால் என்ன? - பத்திரிக்கையாளர் ஜவஹர்

* வறுமைக்கோடு என்றால்? - பத்திரிக்கையாளர் ஜவஹர்

* அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி - புதிய ஜனநாயகம்

* முதலாளித்துவ பொருளாதாரம்

* பங்குச்சந்தை சூதாட்டம்

* பங்கு சந்தையும் குரங்கு கதையும்

* டாலர் யானை புகுந்தாலும் நட்டம்; வெளியேறினாலும் நட்டம்

* ஊக வணிகம் - பந்தய ஒப்பந்தங்கள் என்றால்?

* கொள்ளையடிப்பது நிதிமூலதன கும்பல்கள்! பரிதவிப்பது தொழிலாளர்கள்!

* பந்தய ஒப்பந்தங்கள் - சில குறிப்புகள்

* பெட்ரோலில் முடிந்தமட்டும் கொள்ளையடி! - பதிவர் லைட்ங்க்

* என்ரான் ஊழல் - அமெரிக்க திவாலின் ஒரு வெள்ளோட்டம்!

* பந்தய ஒப்பந்தங்களின் தன்மை

* இந்திய வளர்ச்சியின் உண்மைநிலை - டாக்டர் அர்ஜூன் சென்குப்தா - மொழிபெயர்ப்பு - லைட்ங்க்

*. அந்நிய முதலீடு - சில குறிப்புகள் - பதிவர் லைட்ங்க்

* அமெரிக்க திவால் - பொன் முட்டை இடும் வாத்து" திட்ட ஊழல்

* அமெரிக்க திவால் - திவாலான நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் - புதிய ஜனநாயகம்

* முதலாளித்துவம் ஆளும் தகுதியை இழந்துவிட்டது.

* அமெரிக்க திவால் - மார்க்சியமே உரைகல் - புதிய ஜனநாயகம்

* சத்யம் கம்யூட்டர்ஸ் - இன்னொரு என்ரான் ஊழல்

* கார்ப்பரேட் கிரிமினல்கள் - பதிவர் லைட்ங்க்

* பற்றி பரவுகிறது வர்க்கப் போராட்டம், அஞ்சி நடுங்குகிறது ஆளும் வர்க்கம்.

* நான்கே மாதங்களில் 32 யு.எஸ். வங்கிகள் திவால் - தட்ஸ்தமிழ்

* காங்கிரசு அரசின் புள்ளிவிவர பித்தலாட்டங்கள் - பதிவர் லைட்ங்க்

* பணவீக்கமும், பொருளாதார வீழ்ச்சியும்

* பணவீக்கமும், பொருளாதார வீழ்ச்சியும் - பாகம் 2

* தங்கம் விலை எகிறுவது ஏன்? -பாகம் 1 - டிமேட் அக்கவுன்ட் என்றால்? - தினமணிக்கதிர்

* தங்கம் விலை எகிறுவது ஏன்? - பாகம் 2 - தங்கம் எதற்காக? - செல்லமுத்து குப்புச்சாமி - உயிர்மை

* தங்கம் விலை எகிறுவது ஏன்? - பாகம் 3 - தங்கம் எதற்காக? கட்டுரையின் தொடர்ச்சி - செல்லமுத்து குப்புச்சாமி - உயிர்மை

November 21, 2009

தொழிலாளர்கள் பற்றிய இலக்கியங்கள்


"குறைந்த உழைப்பு, நிறைய பணம்" - ஈஸி மணி என்னும் கலாச்சாரம் சென்னை மாதிரி பெருநகர சூழலில் மனிதர்களை பிடித்திருக்கும் ஒரு வியாதி. இந்த நாட்டில் இப்படியெல்லாம் சிந்திக்க தெரியாத மனிதர்கள் காலம் காலமாக கடுமையாக உழைத்து, இந்த நாட்டை தாங்கி பிடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

அந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் சொல்ல முடியாத துயரமும், அவலமும் இருக்கிறது. இன்றைக்கு சென்னையில் மிகப்பெரிய கட்டிடங்கள் பிரமாண்டமாய் எழுந்து நிற்கிறது. அந்த கட்டிடங்களை உருவாக்குவதற்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவும் பகலுமாய் வேலை செய்கிறார்கள். அங்கு அடிப்படை வசதியான கழிவறை வசதி இருக்காது. நல்ல குடிநீர் கூட இருக்காது. ஒவ்வொரு கட்டிடமும் கட்டி முடிக்கும் பொழுது, குறைந்த பட்சம் ஒரு தொழிலாளியாவது மண் மூடியோ, மேலிருந்து கீழாக விழுந்தோ, மின்சாரம் பாய்நதோ பலியாகியிருப்பார். நம்மில் எத்தனை பெருக்கு தெரியும்?

10 ஆண்டுகளுக்கு முன்பாக ஆசியாவில் கைத்துண்டு உற்பத்தியில் பெரும்பான்மை பங்கு வகித்த பகுதி மதுரையில் செல்லூர் பகுதி. அந்த சமய்த்தில் தினமணியின் வணிகமணியில் இது குறித்து சிறப்பு கட்டுரை ஒன்று வெளிவந்தது. உலகுக்கு கைத்துண்டு கொடுத்த அந்த கைத்தறி தொழிலாளர்களின் வீட்டில் நல்ல துண்டு வீட்டில் இருக்காது. நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

தமிழகத்தில் வேலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மற்றும் சென்னை குரோம்பேட்டை - நாகல்கேணி பகுதிகளில் தோல் பதனிடும் தொழில் நடைபெறுகிறது. 50000 தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். தோல்களை பதப்படுத்துவதற்காக அமிலம், ரசாயன உப்பு பயன்படுத்தப்படுவதால்... கை, கால்களில் புண்கள், கொப்பளம் ஏற்பட்டு மாதக்கணக்கில் புரையோடி போவதும், சில சமயங்களில் உறுப்புகள் வெட்ட்டி எடுக்கப்படுவதும் சகஜமாக உள்ளது. தோல் நோய் இல்லாதவரை காண்பது அரிது. நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இதுவரை அறியாமல் இருந்தது போகட்டும். இனி அறிந்து கொள்ளலாம். தொழிலாளர்களை நெருக்கமாக அறிந்து அவர்களின் துயரங்களை சில நாவல்கள், சில கவிதைகள், சில கட்டுரைகள் சொல்ல முயற்சிக்கின்றன. நான் அறிந்த சில நாவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். படித்து சில ஆண்டுகள் ஆகிவிட்டதால், சில குறிப்புகள் மட்டும் தருகிறேன். இதுபோல நீங்களும் அறிமுகப்படுத்துங்கள்.

படித்த நாவல்கள் :

* பஞ்சும் பசியும் - 1950 -களில் தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய நாவல்களில் ஒன்று. திருநெல்வேலி மாவட்ட நெசவாளர்களை பற்றிய நாவல். தமிழில் யதார்த்தவாத நாவலில் முதல் நாவல் என்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு படித்தேன். கதையின் போக்கு, கதாபாத்திரங்கள் பழைய தமிழ் படம் பார்த்தது போல இருந்தது.

* உப்பு வயல் - ஸ்ரீதர கணேசன் எழுதிய நாவல். தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளகத் தொழிலாளர்கள் பற்றிய வாழ்க்கைப் பற்றிய கதை. சிபிஐ அல்லது சிபிஎம் வட்டத்திலிருப்பவர் என நினைக்கிறேன். நாவலில் இறுதி காட்சி தாய் நாவலில் வரும் இறுதி காட்சியை காப்பியடித்திருப்பார்.

* நிழல் முற்றம் _ பெருமாள் முருகன் எழுதிய நாவல்களில் ஒன்று. திரையரங்கில் பணிபுரியும் இளைஞர்களைப் பற்றியது. கொஞ்சம் விவரமாக அறிய இங்கு சொடுக்கவும்.

* தாய் - ருசிய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி எழுதிய உலக புகழ்பெற்ற நாவல் இரண்டு பாகங்களை கொண்டது. முதல் பகுதி ஆலைத்தொழிலாளர்களின் வாழ்க்கைப் பற்றியது. இரண்டாம் பகுதி - விவசாயிகளைப் பற்றியது. உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்களில் முதலிடம் என படித்திருக்கிறேன்.

இன்னும் படிக்காத நாவல்கள்


* கல்மரம் - திலகவதி எழுதிய நாவல். கட்டுமான தொழிலாளர்கள் பற்றிய நாவல். படித்தவர்கள் எப்படி இருக்கிறது என சொன்னால், நன்றாக இருக்கும்.

* எரியும் பனிக்காடு - பி.எச். டேனியலால் எழுதப்பட்ட நாவல். வால்பாறை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வைப் பற்றிய நாவல். எஸ். இராமகிருஷ்ணன் இது குறித்து விரிவாக எழுதியுள்ளார். இங்கு சொடுக்கவும்.

* சுரங்கம் - கு.சின்னப்ப பாரதி எழுதிய நாவல். கல்கத்தா நிலக்கரிச் சுரங்கங்கள், அவற்றில் பணி செய்யும் தொழிலாளர்கள் வாழ்க்கை அவலம் பற்றிய நாவல்.

கவிதைகள்

* பூக்காயம் - துரை. சண்முகம் எழுதிய கவிதை.


பூக்கட்டும் தொழிலாளியின் சிரமங்களை சொல்லும் அருமையான கவிதை. இங்கு சொடுக்கவும்.

கட்டுரைகள்

* ஓனிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் துப்புரவு தொழிலாளிகளைப் பற்றிய கட்டுரை. - புதிய கலாச்சாரத்தில் வெளிவந்தது. படியுங்கள். இங்கு சொடுக்கவும்.

* 30 ரூபாய் கூலிக்காக நாளொன்றுக்கு 150 கீ.மீ ரயில் - சிறு நகரத்திலிருந்து கிராமம் நோக்கி வேலை தேடிப்போகும் விவசாய கூலி தொழிலாளர்களின் அவலத்தைப் பற்றிய பத்திரிக்கையாளர் சாய்நாத் எழுதிய கட்டுரை. இங்கு சொடுக்கவும்.

****

* நான் எழுதியிருப்பது எல்லாம் ஒரு அறிமுகத்திற்காக தான். இதை விட நீங்கள் நிறைய படித்திருக்க கூடும். பின்னூட்டங்களில் அறிமுகப்படுத்துங்கள்.

November 18, 2009

காவல்நிலையங்களின் தரம் - "ஏ" கிரேடு யாருக்கும் கிடைக்கவில்லை!

சென்னையில் இருக்கும் காவல்நிலையங்களின் தரம் பற்றி அறிய துறைவாரியான ஆய்வுக்கு கமிசனர் ராஜேந்திரன் ஓர் ஆய்வு ஒன்றை நடத்தி இருக்கிறார். முதலில் காவல்நிலையங்களில் உள்ள செயல்பாடுகளை 23 வகைகளாக பிரித்திருக்கிறார்கள். பிறகு, துணை கமிசனர்கள் தனக்கு கீழ் இயங்கும் காவல்நிலையங்களுக்கு பணிகளின் தரம் குறித்து, நேரடியாக சென்று ஆய்ந்து (!) மார்க் போட்டிருக்கிறார்கள். பிறகு, இணை கமிசனர்களும் மார்க் போட்டிருக்கிறார்கள்.

எல்லா ரிப்போர்ட்டுகளும் ஒன்றாய் சேர்த்து பார்த்தால், மொத்தம் 104 நிலையங்களில் "ஏ" கிரேடு எந்த காவல்நிலையத்துக்கும் கிடைக்கவில்லை. "பி" கிரேடு 22 காவல் நிலையங்களுக்கு கிடைத்திருக்கின்றன.
மற்றவையெல்லாம் "சி" கிரேடுகள். 104க்கு 22 தேறுகிறது என்றால்... சதவிகித அடிப்படையில் 21%. அப்படின்னா பெயில். எல்லா இன்ஸ்பெக்டர்களையும் நேரடியாக அழைத்து, கமிஷனர் (என்ன இப்படி மானத்தை வாங்கிட்டீங்க என!) அட்வைஸ் செய்கிறாராம். இனி, தரத்தை உயர்த்துவது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுமாம்.

இந்த நாட்டில், சட்டங்களை மீறுவது யார் என பட்டியலிட்டால்... அதில் முதலிடத்தை பெறுவது காவல்துறையாக தான் இருக்கும். ஆளும் வர்க்கத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும் விசுவாசமாய் நடப்பது, பாவப்பட்ட தொழிலாளி ஏதேனும் புகார் கொடுக்க போனால், டீ வாங்கி வா! ஒரு குயர் பேப்பர் வாங்கி வா! என விரட்டுவதும். புகார் கொடுப்பவரிடம் காசு வாங்குவது, புகார் கொடுக்கப்பட்டவரிடமும், மிரட்டி காசு பிடுங்குவது, சட்ட விரோதமாக இரண்டு தரப்பினரையும் வைத்து கட்டபஞ்சாயத்து செய்து அநியாய தீர்ப்பு வழங்குவது, கைதிகளை சட்டவிரோதமாக அடிப்பது, உதைப்பது, தன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், டாஸ்மார்க் பாரிலிருந்து, தரையில் பரிதாபமாய் கடை விரித்திருக்கும் பாட்டி வரைக்கும் மிரட்டி மாமூல் வாங்குவது, ஏதேனும் போராட்டமென்றால், உடனே ஆஜராகி, துவைத்தெடுப்பது, பெண்கள் புகார் கொடுக்கப்போனால், அவர்களை பலாத்காரம் செய்வது. (இதற்காக தான் மொத்தம் 104 காவல் நிலையங்களில் 18 மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன) என மக்கள் விரோத, அராஜக செயல்களை செய்வதில் நம்பர் ஒன்னாக இருப்பது காவல்துறை தான். இதெல்லாம் கற்பனையாக சொல்லவில்லை. தினசரி செய்திகளில் மலிவாக கிடைக்கும் செய்திகள் தான். நிலைமை இவ்வாறு மோசமாக இருக்க, எப்படி "ஏ" கிரேடு கிடைக்கும்?

துறைவாரியாக அந்தந்த துறை நிர்வாகம் செய்யும் துணை கமிஷனர்கள் மார்க் போட்டதால் தான், 22 காவல்நிலையங்களுக்காகவாவது "பி" கிரேடு கிடைத்திருக்கிறது. மனித உரிமை அமைப்பு மற்றும் வேறு துறை சார்ந்த நபர்களை குழுவாக நியமித்திருந்தால், எந்த காவல் நிலையத்துக்கும் "சி" கிரேடு கூட கிடைத்திருக்காது.


செய்தி ஆதாரம் : தினத்தந்தி, 19/11/2009 இதழில்

November 12, 2009

தங்கம் - விலை எகிறுவது ஏன்? - பாகம் 3



குறிப்பு : தங்கம் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே வருவதில், பல காரணிகள் இருக்கின்றன. அதில் தங்கம் எதற்காக என்று கேள்வி எழுப்பி, கட்டுரையில் பதிலளித்திருக்கிறார் செல்லமுத்து குப்புச்சாமி. இந்த கட்டுரை உயிர்மை தளத்தில் வெளிவந்தது. முதல் பகுதியை இரண்டாம் பாகத்தில் பார்த்தோம். அதனுடைய தொடர்ச்சியைப் படித்து விட்டு தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

****

தங்கம் எதற்காக? - செல்லமுத்து குப்புச்சாமி

உதிரித் தகவல்.

- பெரும்பாலான தங்க வயல்கள் ஒரு டன் தாதுவிற்கு 1 முதல் 5 கிராம் வரை தங்கம் கொண்டிருக்கின்றன. அதாவது பத்து இலட்சம் துகள்களில் 1 முதல் 5 துகள்கள் தங்கமாக இருக்கலாம். இதெல்லாம் மண்ணில் உள்ள தங்கம். கடல் நீரில்கூடத் தங்கம் இருக்கிறது தெரியுமா உங்களுக்கு? ஆயிரம் கோடியில் ஒன்றிரண்டு பங்கு தங்கம் அதில் செறிந்திருக்கிறது. முதலாம் உலகப் போருக்குப் பிறகு கடல் நீரில் இருந்து தங்கம் பிரித்தெடுக்கும் முயற்சி Fritz Haber என்ற விஞ்ஞானியின் முயற்சியால் ஜெர்மனியில் நடந்தது. பொருளாதாரச் சாத்தியமின்மை காரணமாக அது கைவிடப்பட்டது.

- தங்கம் பாதரசத்தைத் தவிர வேறு எதிலும் கரையாது. அதனோடு கலக்கப்படும் வெள்ளி முதலிய உலோகங்கள் நைட்ரிக் அமிலத்தில் கரையும். எனவே அந்த அமிலத்தில் தங்கத்தை கரைத்துப் பார்த்தால் சுத்தத் தங்கம் போக மற்றதெல்லாம் கரைந்து போகும். கரையாமல் அப்படியே இருந்தால் அது சுத்தத் தங்கம். இதனை 'அமிலப் பரிசோதனை' (acid tect) என்கிறார்கள். தனி மனிதனோ அல்லது நிறுவனங்களோ பெரிய சிக்கலை எதிர்நோக்கும் போது அதை acid test என்று வேடிக்கையாகவும் சொல்வதுண்டு, தீக்குளித்து தன் பரிசுத்தத்தை நிரூபித்த சீதையை நாம் அடிக்கடி உதாரணத்திற்கு இழுப்பது போல.

*********************

அதிகமாக உற்பத்தி செய்வது தென்னாப்பிரிக்காவாக இருக்கலாம். அதிகம் வைத்திருப்பது அமெரிக்காவாக இருக்கலாம். ஆனால் ஆபரணத்திற்காக அதிகம் பயன்படுத்துவது இந்தியாவே! நமது வருடாந்திய கோல்டு ஜூவல்லரி சந்தையின் மதிப்பு ரூ 50,000 கோடிக்கு மேல். உலக
அரங்கில் எந்த நாட்டிலும் இந்த அளவிற்குக் கிடையாது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒட்டு மொத்தத் தங்கத்தின் அளவைக் கணக்கில் கொண்டால் ரிசர்வ் வங்கி வைத்திருப்பதைவிட, அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி வைத்திருப்பதைவிட நம் மக்களிடம் அதிகமாக இருந்தாலும் வியப்படைவதற்கில்லை.

சுத்தத் தங்கத்தை அப்படியே நகை செய்யப் பயன்படுத்த முடியாது. தங்கத்தின் தரத்தை 'காரட்' கணக்கில் குறிக்கிறோம். 24 காரட் என்றால் முழுக்க முழுக்க தங்கம். ஆனால் அதன் கடினத்தன்மை குறைவு என்பதால் தாமிரம் அல்லது வெள்ளி போன்ற உலோகங்களைக் கலந்துதான் ஆபரணம் செய்கிறார்கள். அப்போது அது 22, 20, 18 காரட் என்றாகும். 18 காரட் தங்கம் என்றால், 24 கிராம் எடையில் வெறும் 18 கிராம் மட்டுமே தங்கம். மிச்ச 6 கிராம் வேறு ஏதாவது இருக்கும். அதனால்தான் சுத்தத் தங்கத்திற்கும், ஆபரணத் தங்கத்திற்கும் விலை வித்தியாசம் உள்ளது. காரட் குறையக் குறைய விலையும் குறையும்.

பெரும்பாலான ஜூவல்லரி கடைகளில் நகை வாங்கும் போது நம்மால் தங்கத்தின் தரத்தை - அதாவது காரட் அளவை - பரிசோதனை செய்ய முடியாத நிலையே நிலவுகிறது. ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் ஏராளம். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதற்குப் பதிலாக தங்கத்தில் போட்டு சேமிக்கலாம் என்று நினைக்கும் போது குருட்டாம் போக்கில் ஏதாவது கடையில் நகையாக வாங்கும் போது செய்கூலி மற்றும் சேதாரத்தில் பெருமளவு இழப்பது மட்டுமல்லாமல், வாங்குகிற நகை தரமானதா என்ற ஆபத்து இன்னொரு பக்கம். அதற்குப் பதிலாக 'பிஸ்கெட்' அல்லது 'காசு' வடிவத்தில் வாங்கிச் சேமிக்கலாம். அப்படிச் செய்யும் போது ஆபரணத் தங்கமாக இல்லாமல் சுத்தமான 24 காரட் தங்கமாக வாங்கிக் கொள்ளலாம். வங்கிகளேகூட பொற்காசுகளை விற்பனை செய்கின்றன. அவை நம்பகமானவை. கூடவே அத்தாட்சிப் பத்திரமும் பெறலாம். அஞ்சல் நிலையங்களில்கூடத் தங்கக் காசுகளை விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர் ராசா அறிவிக்கிறாராம்.

மதிப்பு குறைந்து கொண்டே செல்லக் கூடிய முதலீடுகளில் இருந்து தற்காப்பதற்காகவும், பணவீக்கத்தைச் சமாளிப்பதற்காகவும் நமது செல்வத்தின் ஒரு பகுதியைத் தங்கத்தில் இட்டுச் சேமிப்பது சரியான அணுகுமுறைதான். அதே நேரம் ஆபரண வடிவத்தில் வாங்காமல் காசு வடிவத்தில் வாங்குவது புத்திசாலித்தனமான காரியம். ஆனால் அதற்கு உங்கள் மனைவி சம்மதிக்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில் பகுத்தறிவின் பயன்பாடு குடும்ப வாழ்க்கையில் இருப்பதே இல்லை அல்லவா?

"ஏங்க. ஷேர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் எல்லாமே கம்மி ஆகிருக்கு. பவுன் மட்டும் பத்தாயிரத்தில இருக்கு. கொறைஞ்சிருக்கிறத வாங்குவீங்களா இல்ல அதிகமா இருக்கறத வாங்குவீங்களா?" என்று மட்டும் கேட்கிற மனைவி உங்களுக்கு அமைந்தால், நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி!! தங்கம் போனால் போகிறது விடுங்கள்.

நன்றி : உயிர்மை

November 6, 2009

லெனின் மீண்டும் இளமையாகிவிட்டார்...

நன்றி : போராட்டம்


















அவதூறுகளின் குப்பைகளால்
மூடப்பட்டு கிடக்கின்றன
வரலாற்றின் பக்கங்கள்.
கண்களை திசை திருப்பலாம்,
காதுகளை செவிடாக்கலாம்.
காற்றை என்ன செய்வாய்?

இதோ,
திசைகளைக் கிழிக்கும்
காற்று வீசுகிறது!
மண்டி கிடக்கும் குப்பைகள்
பறந்து போகின்றன…
ஜாரின் அரண்மனையை
சுற்றி வளைத்த குரல்கள்
நியூயார்க்கில் ஒலிக்கின்றன…
இராக்கில் எதிரொலிக்கின்றன!
பணப்பெட்டிகள்கவிழ்ந்து விழ,
பல்லிளித்தவாறு நிற்கிறாய்!

“முதலாளித்துவம் ஒழிக!”
“கம்யூனிசமே வெல்லும்!”
உனது கோட்டைக்குள்ளேயே
முழக்கங்கள் அதிருகின்றன…
உலகெங்கும் எதிரொலிக்கின்றன!
கொக்கரித்த சிரிப்படங்கி
நீ முகம் சிவக்கிறாய்!
மேசைக்கடியில்
ஒளிந்து கொள்கிறாய்!
அவசரமாக ஆயுதங்களை
தொட்டுப் பார்க்கிறாய்…

நனவான கனவுகளின்
நீண்ட பாதையில்
சில மைல் கற்களை
நீ பெயர்த்தெடுத்திருக்கலாம்!
அவசரமாக அவற்றைகுழி
தோண்டி புதைத்திருக்கலாம்.
எனினும்,
முளைத்துக் கொண்டேயிருக்கின்றன
புதிய மைல்கற்கள்.நனவுகளை நொறுக்கலாம்.
கனவுகளை என்ன செய்வாய்!

இதோ,
எதிர்காலத்தின் கனவுகள்
எமது மக்களின் கண்ணீரிலிருந்தும்,
உனது கொலைவாட்கள் ருசித்த குருதியிலிருந்தும்,
விடை தேடும் எங்கள் வியர்வையிலிருந்தும்,
நொடிக்கொரு முறை அலை அலையாய்
எழுந்து ஆர்ப்பரிக்கின்றன…

எங்கள் போர் மீண்டும் துவங்குகிறது..
இதயங்கள் பலமாகத் துடிக்கின்றன..
லெனின் மீண்டும் இளமையாகி விட்டார்…
அக்டோபர் மீண்டும் மலர்கிறது…*




இக்கவிதை இன்று நவம்பர்-7, ரசியப் புரட்சி நாளையொட்டி எழுதப்பட்டுள்ளது.

* என்.டொப்ரொன்ரவோவ் எழுதிய பாடல் வரிகளிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. 1927-ல் செர்கேய் ஐசன்ஸ்டீன் இயக்கிய ‘அக்டோபர்’ திரைப்படத்தில், ரசியப் புரட்சியின் நாட்களை உணர்வுபூர்வமாக விவரிக்கும் காட்சித் தொகுப்பிற்கு இப்பாடல் பயன்படுத்தப்பட்டது. அக்காட்சி தொகுப்பு மேலே தரப்பட்டுள்ளது. இப்படம் ஜான் ரீடின் “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” நாவலை அடிப்படையாகக் கொண்டது.

November 5, 2009

தங்கம் விலை எகிறுவது ஏன்? - பாகம் 2


முன்குறிப்பு : தங்கம் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே வருவதில், பல காரணிகள் இருக்கின்றன. அதில் தங்கம் எதற்காக என்று கேள்வி எழுப்பி, கட்டுரையில் பதிலளித்திருக்கிறார் செல்லமுத்து குப்புச்சாமி. இந்த கட்டுரை உயிர்மை தளத்தில் வெளிவந்தது. படித்து விட்டு தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

//தக்காளி, வெங்காயத்தைப் போல தங்கத்தின் விலையை அதன் உற்பத்திக்கும் தேவைக்குமான சமன்பாடு தீர்மானிப்பதில்லை. தங்கத்தின் தேவை என்பது 'ஆபரணத்திற்கான பயன்பாடு' என்ற சங்கதியைச் சார்ந்தது மட்டுமல்ல. பல காரணிகள் அதைத் தீர்மானிக்கின்றன. சவரன் கணக்கில் நகை வாங்குவதெல்லாம் தாண்டி உலகத்தில் உள்ள எல்லா நாடுகளின் மத்திய வங்கிகளும் (நமது ரிசர்வ் வங்கியைப் போல) தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றன. //

****

தங்கம் எதற்காக? செல்லமுத்து குப்புசாமி

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வியாக்கியானம் சொல்லப்படுகிறது. விளைவுகளுக்கான காரணிகளும், காரணிகளினால் ஏற்படும் விளைவுகளும் புதிது புதிதாகக் கண்டறியப்படுகின்றன அல்லது புதுப்பிக்கப்படுகின்றன. மழை பெய்தால் சிமெண்ட் கம்பெனிகளின் இலாபம் குறையும்; வட்டி வீதம் அதிகரித்தால் வங்கிகளின் பங்குகள் சரியும்; கச்சா எண்ணெய் விலை ஏறினால் ஷேர் மார்க்கெட் சறுக்கும். இப்படியெல்லாம் ஒவ்வொருவர் மீதும் ஒரு கற்பிதம், ஒரு வாய்ப்பாடு சுமத்தப்படுகிறது. அல்லது அது மாதிரியான கற்பிதத்தை அவர்களே விரும்பி ஏற்றுக்கொண்டு தமக்கும் பண்டிதத்தனம் வந்து விட்டதாகக் கருதுகிறார்கள்.

கச்சா எண்ணெய்க்கும், உலகலாவிய பங்குச் சந்தைகளுக்கும் எதிர்மறையான நிரந்தரத் தொடர்பு இருப்பதாக நம்பப்பட்டது. அப்படியே நடக்கவும் செய்தது. ஆனால் பங்குச் சந்தை, கச்சா எண்ணெய், ரியல் எஸ்டேட் என யாவும் ஒரு சேரக் குறைவதுகூடச் சாத்தியமே என்று கணித்தவர்கள் வெகு சிலரே. அப்படிப்பட்ட சூழலே பொருளாதாரத் தேக்கம் அல்லது பின்னடைவு என உருமாற்றம் கொள்கிறது, தற்போதைய சூழலைப் போல. எல்லாமே ஒரு சேரச் சரிந்தாலும் தங்கம் மட்டும் ஸ்டெடியாக நிமிர்ந்து நிற்கிறது.

இந்த உலகத்திலேயே உபயோகம் மிகுந்த உலோகங்களைப் பட்டியலிட்டால் அதில் இரும்பு அதிமுக்கியமான இடத்தைப் பெறும். உபயோகம் இல்லாத உலோகங்களைப் பட்டியலிட்டால் அதில் தங்கத்திற்கு மிக முக்கியமான இடம் உண்டு. இருந்தாலும் அதற்கு ஏகப்பட்ட கிராக்கியும், மதிப்பும் வாய்க்கிறது. துருப்பிடிக்காத, ஜொலிப்பான, அடர்த்தியான உலோகமாக அனைவரையும் ஈர்க்கிறது. பன்னெடுங்காலமாக செல்வத்தின் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. ஷேர் மார்க்கெட், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட முதலீடு செய்வதற்கு ஏதுவான அனைத்து உபகரணங்களோடும் ஒப்பிடப்படும் ஒரு பொருள் உண்டென்றால் அது தங்கத்தைத் தவிர வேறேதும் இல்லை.

அத்து அவசரத்துக்கு ஆகும் என்றுதான் நம் ஊரில் காலங்காலமாக தங்க நகைகளைச் சேகரிக்கும் கலாச்சாரத்தைப் பேணுகிறோம். ஷேர் வாங்கினால் முறைக்கும் மனைவிமார்கள், செய்கூலி சேதாரத்திற்கு 20 சதவீதம் போனாலும் பூரிப்போடு பொன்னகையை வரவேற்கிறார்கள். நம்மைப் பொறுத்த மட்டில் 'பொன்' என்பது வெறும் முதலீடு என்ற அளவோடு நின்று விடுவதில்லை. அது சமூக அந்தஸ்தின் அடையாளமாகவும், சேமிப்பின் வடிவமாகவும், எப்போது வேண்டுமானாலும் விற்க முடிகிற தன்மையோடும் திகழ்கிறது. அப்பழுக்கில்லாத மனிதனை, பத்தரை மாற்றுத் தங்கம் - அல்லது 24 காரட் தங்கம் - என்கிறோம்.

ஆபரணக் கண்ணோட்டத்தைத் தவிர்த்துவிட்டு தங்கத்தை முதலீட்டுக் கண்ணோட்டத்தோடு நோக்க வேண்டியது அவசியம். (அப்படி நோக்கும் போது காதலிகளைப் பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டாம்) உண்மையைச் சொல்ல வேண்டுமானால் தங்கம் என்பது இரும்பைப் போல பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு உலோகம். அதன் மதிப்பு அல்லது விலை என்பது அதை வெட்டி எடுப்பதற்கு ஆகும் செலவுக்குச் சமமாக இருக்க வேண்டும். வெங்காயத்தை விளைவித்து சந்தைக்கும் கொண்டு வருவதற்கு ஆகும் செலவு வெங்காயத்தின் விலையை நிர்ணயிப்பது போல, இரும்பை வெட்டி எடுக்க ஆகும் செலவு அதன் விலையை நிர்ணயிப்பது போல, தங்கத்தை வெட்டியெடுக்க ஆகும் செலவுதான் அதன் விலையை நிர்ணயிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான சமயங்களில் அப்படி நடப்பதில்லை. ஒரு லாரி வெங்காயத்தையோ, பத்து டன் இரும்புக் கம்பியையோ நாம் பத்து வருடத்திற்கு சேமித்து வைப்பதில்லை. ஆனால் தங்கத்தை சேர்த்து வைக்கிறோம். சிறிதளவே தேவைப்படுகிற இடம், ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சுலபமாக எடுத்துச் செல்லும் வசதி, காலத்தால் அழியாத தன்மை மற்றும் இயல்பாகவே தங்கத்தின் மீது பெண்களுக்கு உள்ள மோகம் ஆகியன

தங்கத்தின் தேவையை நிர்ணயித்து அதன் விலையையும் நிர்ணயிக்கின்றன.
ஆக தங்கத்தின் தேவை என்பது அதன் பயன்பாடு சார்ந்தது மட்டுமல்ல. நகை வாங்குவதற்குச் சொல்லப்படும் முதன்மையான காரணம் 'பணவீக்கத்தைச் சமாளிப்பது'. உண்மையே! எப்படியானாலும் பணத்தின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகும், அதாவது விலைவாசி ஏறிக்கொண்டே போகும். பணத்தை அப்படியே வைத்திருப்பதற்குப் பதிலாக தங்கத்தில் போடலாம். விலைவாசி ஏற்றத்திற்கு எதிரான இன்சூரன்ஸ் என்றுகூட இதைக் கருதலாம்.

ஆனாலும் தங்கத்தை சேமிப்பாகக் கருத வேண்டுமே தவிர முதலீடு என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்ற வாதத்தை ஏற்க வேண்டும். பணத்தை ஒரு நிறுவனத்தில்/தொழிலில் இட்டால் அதன் மூலம் உற்பத்தி கூடுகிறது. வேலை வாய்ப்பு ஏற்படுகிறது. தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அது உதவுகிறது. அப்படிப் போடும் பணத்திற்கு இலாபமும் கிடைக்கிறது. 'முதலீடு' என்பதன் உண்மையான பொருள் இதுதான். அப்படிச் செய்யாமல் நாட்டில் இருக்கிறவர்கள் எல்லோரும் தங்கத்தை வாங்கி வைத்துக்கொண்டு அல்லது ஒருவர் மாற்றி ஒருவர் தங்கத்தை விற்றுக்கொண்டும் வாங்கிகொண்டும் இருந்தால் உற்பத்தி எப்படிப் பெருகும், வேலைகள் எப்படிப் பெருகும்? சேமிப்பதைவிட முதலீடு செய்வதே நாட்டிற்கு மட்டுமல்லாமல் தனி நபருக்கும் நல்லது.

பொருளாதாரம் வலுவாக இருக்கும் போதும், வளரும் போதும் தொழில் முயற்சிகளில் அல்லது பங்குகளில் பணம் போடலாம். மேலே சொன்னது போல அது முதலீடு. வருங்காலத்தில் ஏற்படவிருக்கும் தொழில் வளர்ச்சியின் ஒரு அலகுதான் பங்கு. பெரும்பாலும் இது எதிர்காலம் குறித்தானது, எதிர்கால வளர்ச்சி குறித்தானது. ஒளிமயமான எதிர்காலம் புலப்படும் போது எல்லோருமே இப்படி முதலீடு செய்வதைக் காண்கிறோம். ஆனால் பொருளாதாரம் தேக்க நிலை அடையும் போதும், எதிர்காலம் குறித்தான கவலைகள் தோன்றும் போதும் மக்களுக்கு எழுகிற பிரதானமான கேள்வி, நிலையில்லாத எதிர்காலத்தை நம்பியிருப்பதா அல்லது நிலையான நிகழ்காலத்தைப் பாதுகாப்பதா என்பதே. முதலீடு வாயிலாகக் கிடைக்கப்போகும் இலாபம் என்பது எதிர்காலம் சம்மந்தப்பட்டது. அதைவிட நிகழ்காலத்தில் இருப்பதைச் சேமிப்பதே முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு நிறுவனத்தின் எதிர்கால இலாபத்தைக் குறிக்கும்

அதன் 'பங்குகளை'விட, நிகழ்காலத்தில் குறிப்பிட்ட மதிப்புள்ள ஒரு பொருளைச் சேமிப்பதை மக்கள் நாடுவது நடந்தேறுகிறது. ஒரு கிராம் தங்கத்தில் எவ்வளவு என்ன இருக்கிறது என்பதை உறுதியாக எடை போட்டுச் சொல்ல முடியும். ஆனால் ஒரு இன்ஃபோசிஸ் ஷேரில் என்ன இருக்கிறது என்பதை யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆகவேதான் பொருளாதாரத் தேக்க நிலை என்று வரும் போது தங்கத்தின் மவுசு ஏகத்திற்கு ஏறிப்போகிறது.

தக்காளி, வெங்காயத்தைப் போல தங்கத்தின் விலையை அதன் உற்பத்திக்கும் தேவைக்குமான சமன்பாடு தீர்மானிப்பதில்லை. தங்கத்தின் தேவை என்பது 'ஆபரணத்திற்கான பயன்பாடு' என்ற சங்கதியைச் சார்ந்தது மட்டுமல்ல. பல காரணிகள் அதைத் தீர்மானிக்கின்றன. சவரன் கணக்கில் நகை வாங்குவதெல்லாம் தாண்டி உலகத்தில் உள்ள எல்லா நாடுகளின் மத்திய வங்கிகளும் (நமது ரிசர்வ் வங்கியைப் போல) தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றன.

இருக்கிற பணத்தைத் தங்கமாக மாற்றி வைத்திருந்தால் அந்தப் பணத்தின் மதிப்பு சரியாமல் காப்பாற்றப்படுமே தவிர அது உயராது என்பதையே கடந்த காலம் நமக்குப் புலப்படுத்துகிறது. நீண்ட கால அடிப்படையில் பணவீக்கத்தைக் கணக்குப் போட்டுப் பார்த்தால் தங்கத்தில் செய்த சேமிப்பு ஏறத்தாழ அதே அளவில் மட்டுமே இருந்திருக்கும். ஆனால் இது சீராக இருந்ததில்லை. அதாவது பணவீக்கம் எந்த அளவுக்கு கூடுகிறதோ அதே அளவு தங்கத்தின் விலை கூடியதில்லை. பணவீக்கம் குறையும் போது அதே அளவுக்குக் குறைந்ததும் இல்லை. தங்கத்தின் விலை கூடுவதற்கும் குறைவதற்கும் பொருளாதார நிலைத்தன்மை முக்கியமான காரணியாக இருந்து வந்திருக்கிறது.

உதாரணத்திற்கு அமெரிக்க டாலரைக் கருதுவோம். பல காலமாக டாலர் கரன்சியின் புன்புலமாகத் தங்கம் செயல்பட்டது. 1 அவுன்ஸ் தங்கம் = 35 டாலர் என்று அமெரிக்கா நிர்ணயித்திருந்தது. அந்த நாட்டு கஜானாவில் அவ்வளவு தங்கம் இருந்தது. அப்போதெல்லாம் டாலர் என்பது நிஜமாலுமே as good as gold. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1945 தொடங்கி சுமார் 1970 களின் ஆரம்பம் வரை இதே அளவில் தங்கத்தின் விலை நிலவியது. அதன் பிறகு டாலரைத் தங்கமாக மாற்ற முடியாத சூழ்நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டதும் தங்கத்தின் விலை டாலர் கணக்கில் உயரத் தொடங்கியது. 1980 ஜனவரியில் அதிகபட்சமாக ஒரு அவுன்ஸ் 850 டாலர். 1970 களின் பொருளாதாரச் சூழல் அப்படி.

பிறகு எதிர்காலம் ஒளிமயமாக அனைவருக்கும் தோன்றியது. பங்குகள் உயர்ந்தன. தங்கம் சரிந்தது. படிப்படியாகக் கீழே இறங்கி வந்து 1999 இல் ஒரு அவுன்ஸ் வெறும் 252 டாலருக்கு இறங்கியது. 'டாட் காம் குமிழ்' என்று சொல்லப்படுகிற கணினி நிறுவனங்களின் பங்குகள் முன்னெடுத்துச் சென்ற மாபெரும் ஷேர் மார்க்கெட் விலையேற்றத்தின் மும்முரமான நாட்கள் அவை. குமிழ் உடைந்து பங்குச் சந்தைக்கும், பொருளாதாரத்திற்கும் கஷ்ட காலம் மீண்டும் வந்த போது தங்கம் மறுபடியும் ஏறியது. தங்கம் தனது 1980 உச்சக் கட்ட விலையை இந்த ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதி மீண்டும் எட்டிப் பிடித்தது. அதன் பிறகு மார்ச் மாதம் ஆயிரம் டாலரையும் எட்டியது. என்னதான் ஆயிரம் டாலர் என்றாலும், 1980 விலையைக் காட்டிலும் குறைவே என்கிறார்கள். பணவீக்கத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் 1980 இல் 850 என்பது இப்போது 2,400 என்று சொல்கிறார்கள்.

அப்படிப் பார்த்தால்கூட 1980 விலையின் பாதியில்தான் இப்போது இருக்கிறோம். ஆனால் தற்போதைய உலகப் பொருளாதாரச் சிக்கல் அப்போதைய சூழலைக் காட்டிலும் மோசமானதா என்றும், அப்படி இருந்தால் தங்கத்தின் விலை மேலும் ஏறக் கூடுமே என்றும் ஒரு தரப்பினர் விளக்கம் கொடுக்கிறார்கள். கவனிக்க வேண்டிய விஷயம்.

தங்கத்தின் முதன்மையான சந்தை இலண்டன் மாநகரம். அங்கே நாளுக்கு இரண்டு முறை விலை நிர்ணயிக்கிறார்கள். தங்கத்தின் விலையைத் தீர்மானிப்பது ஆபரணம் செய்வதற்கான தேவையைக் காட்டிலும், தேசங்களின் மத்திய வங்கிகள் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்கள் வாங்கி விற்கும் செயலே ஆகும். மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கிச் சேகரிப்பது அந்தந்த தேசங்களின் கரன்சி மதிப்பு நிலையாக இருக்க வேண்டும் என்பதற்கே. மேலும் 1991 சமயத்தில் வெறும் இரண்டு வார இறக்குமதிக்குத் தேவையான அளவு மட்டுமே அந்நியச் செலவாணியை இந்தியா வைத்திருந்த போது ரிசர்வ் வங்கிக் கையிருப்பில் இருந்த தங்கத்தை இரண்டு விமானத்தில் ஏற்றி பேங்க் ஆஃப் இங்கிலாந்திற்கு அனுப்பி அடமானம் வைத்த நிகழ்ச்சி 'தங்கம் எதற்காக?' என்ற கேள்விக்கு விடை தருகிறது.

2004 கணக்குப்படி மனித குல வரலாற்றில் அது வரை தோண்டியெடுக்கப்பட்ட மொத்தத் தங்கம் என்று கணிக்கப்படுகிற சுமார் 1,60,000 டன்னில் கிட்டத்தட்ட 19 சதவீதம் பல்வேறு மத்திய வங்கிகள் வசம் இருந்தன. அதில் முதலிடம் அமெரிக்காவிற்கு. இந்தியாவிற்கு 14 ஆவது இடம். உலகத்திலேயே அதிகமாகத் தங்கம் வைத்திருப்பது அமெரிக்கா என்றால் அதிகமாகத் தோண்டி எடுப்பது தென்னாப்பிரிக்கா. 1886 ல் இருந்தே அந்த ஆப்பிரிக்க அடிமை தேசம் கணக்கில்லாமல் தங்கத்தைத் தோண்டி உலகத்திற்குக் கொடுத்துள்ளது. சுரங்க வேலைக்குப் போனவர்கள் உருவாக்கிய ஜொகன்னஸ்பர்க் நகரம் அந்த நாட்டின் மிகப் பெரிய ஊர்களில் ஒன்றாக உருவெடுத்தது. கேப்டவுன் நகரம் 200 ஆண்டுகளில் எட்டிய வளர்ச்சியை ஜொகன்னஸ்பர்க் வெறும் பத்தாண்டுகளில் எட்டியது. 1970 ஆம் வருட உலக உற்பத்தியில் தென்னாப்பிரிக்காவின் பங்கு மட்டும் 79 சதவீதம்.

நன்றி : உயிர்மை
****

பின்குறிப்பு : இந்த கட்டுரையின் இறுதியில் சில உதிரி தகவல்கள் இருக்கின்றன. கட்டுரையின் நீளம் கருதி... அடுத்த பதிவிடுகிறேன். உடனே படிக்க வேண்டும் என விரும்புவர்கள் உயிர்மை லிங்கை கிளிக்கவும். நன்றி.

தங்கம் - விலை எகிறுவது ஏன்?


முன்குறிப்பு : தங்கத்தின் விலை கடந்த 2000ல் ரூ. 3320, 2005ல் -ரூ. 6048, 2009 - பிப்ரவரியில் ரூ. 11232, இன்றைய விலை ரூ. 12520. கட்ந்த மூன்று நாட்களில் மட்டும் ரூ. 592 எகிறி இருக்கிறது.

எகிறுவதற்கான காரணங்களாக... தங்கம் வெட்டி எடுப்பது குறைந்து வருகிறது. இது தவிர பணவீக்கம், பங்கு சந்தை, டாலர் மதிப்பு, சர்வதேச அளவில் ஏற்படும் கச்சா பொருட்களின் விலை உயர்வு, ஆன்லைன் வர்த்தம் என சொல்லப்படுகின்றன. நம் அறிவுக்கு இவர்கள் சொல்வது சரிதானா என வரும் பதிவுகளில் தங்கத்தை உரசிப் பார்க்கலாம்.

கீழே உள்ள தினமணி கதிர் கட்டுரை நேசனல் ஸ்டாக் எக்சேஞ்சின் எம்.சி.எக்ஸ், என்.சிடி.இ.எக்ஸ் மூலமாக தங்கம் விற்கப்படுவதை பற்றி, அதன் விவரங்களை தருவதாக இருக்கிறது. தங்கத்தின் விலை எகிறுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. படியுங்கள். உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

*****

வணிகம்: இன்றைய விலைக்கு 5 ஆண்டு கழித்து தங்கம்!

தேவைப்படும்போது தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தால் தங்கத்தின் விலையோ எப்போதும் ஏறுமுகமாகவே இருக்கிறது. தங்கத்தின் விலை குறைவதெல்லாம் முழம் ஏறி சாண் சறுக்குவதாகவே இருக்கிறது.

""இன்றுள்ள விலையில் தங்கத்தை நீங்கள் வாங்குவதாக ஓர் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டு சிறிது அட்வான்ஸôகப் பணம் செலுத்திவிட்டு உங்களுக்குத் தேவையானபோது மீதித் தொகையைச் செலுத்தி தங்கத்தைப் பெற்றுக் கொள்ளும் வசதி இப்போது வந்துவிட்டது. தங்கத்தை நீங்கள் கையில் பெறும்போது உள்ள மார்க்கெட் விலையைச் செலுத்தத் தேவையில்லை'' என்கிறார் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஃபின்மார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பழ.லக்ஷ்மணன்.

இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்சின் என்சிடிஇஎக்ஸ் மற்றும் எம்சிஎக்ஸ் மூலமாக தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறும் அவரிடம் மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்வதற்காகப் பேசினோம்.

""முதலில் எல்லாம் கையில் பணத்தை வைத்துக் கொண்டு எதில் முதலீடு செய்யலாம் என்று விழித்துக் கொண்டிருந்தவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்தார்கள். பங்குச் சந்தையில் எவ்வளவுதான் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தாலும் சமயத்தில் காலை வாரிவிட்டுவிடும். அதில் ரிஸ்க் அதிகம்.

ஆனால் தங்கத்தில் முதலீடு செய்தால் நஷ்டம் வர வழியில்லை. தங்கத்தின் விலை எப்போதாவது குறைந்தாலும் ஏறிக் கொண்டே இருப்பதுதான் அதன் இயல்பாக இருக்கிறது.
......

சாதாரணமாக தங்கத்தை வாங்க நினைக்கும் ஒருவர் கடைகளில் விற்கும் 22 காரட் தங்கத்தை வாங்குவார். அது அன்றைய மார்க்கெட் விலையை விடச் சற்றுக் கூடுதலாகவே இருக்கும். அதாவது செய்கூலி, சேதாரம் என்று நிறையச் சொல்வார்கள். அதுபோல வாங்கிய தங்கத்தை விற்கப் போனாலும் அன்றைய மார்க்கெட் விலையைத் தரமாட்டார்கள்.

தங்கத்தின் தரத்தைத் தெரிந்து கொள்வதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

இப்போது வங்கிகளில் தங்கம் விற்கிறார்கள். அப்படி வாங்கிய தங்கத்தை விற்க வேண்டும் என்றால் நீங்கள் வங்கிகளை அணுக முடியாது. கடைக்காரர்களையே அணுக வேண்டும்.
மக்களுக்கு தங்கம் வாங்குவதில் உள்ள இந்தச் சிரமங்களைப் போக்கும்விதமாக இப்போது தங்கம் வாங்குவதில், விற்பதில் புதியமுறைகள் வந்துவிட்டன.

நேஷனல் ஸ்டாக் எக்சேஞ்சின் எம்சிஎக்ஸ், என்சிடிஇஎக்ஸ் மூலமாகத் தங்கம் விற்கப்படுகிறது.
நீங்கள் கடையில் தங்கம் வாங்க வேண்டும் என்றால் முழுத் தொகையையும் உடனே செலுத்த வேண்டும். ஆனால் இந்த நிறுவனங்களின் மூலமாகத் தங்கம் வாங்க வேண்டும் என்றால் வாங்கும் தங்கத்தின் மொத்த மதிப்பில் 15 சதவீதத்தை உடனே செலுத்த வேண்டும். பின்னர் தங்கத்தைப் பெறும்போது மீதித் தொகையைச் செலுத்த வேண்டும்.

இதற்கு எம்சிஎக்ஸ் அல்லது என்சிடிஇஎக்ஸ்யுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்ள வேண்டும். உதாரணமாக 3 மாதத்திற்குப் பின் தங்கத்தை வாங்கிக் கொள்கிறேன் என்று நீங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஒரு மாதத்திற்குப் பின், இரண்டு மாதத்திற்குப் பின் என்றும் கூட நீங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இந்த 3 மாத அளவை தொடர்ந்து புதுப்பிப்பதன் மூலம் எத்தனை ஆண்டுகாலம் வேண்டுமானாலும், ஒப்பந்தத்தைத் தொடரலாம்.
தங்கத்தை வாங்குவதில் நீங்கள் தங்கத்தைக் கைகளில் வாங்கிக் கொள்ளவும் முடியும். கைகளில் வாங்கிக் கொள்ளாமலேயே உங்கள் அக்கவுண்டில் வரவு வைத்துக் கொள்ளவும் முடியும்.

வங்கியில் நீங்கள் பணத்தைப் போட்டு வைத்துக் கொள்வதை சேமிப்புக் கணக்கு என்கிறோம். அதுபோல தங்கம், வெள்ளி போன்றவற்றைச் சேமித்து வைப்பதற்கு டி மேட் அக்கவுண்ட் என்கிறோம். இந்த டி மேட் அக்கவுண்டில் நீங்கள் வாங்குகிற தங்கத்தை உங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். தங்கத்தை நீங்கள் விற்றுவிட்டால் அந்தத் தங்கத்தை உங்கள் கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளலாம். இத்தனைக்கும் தங்கத்தை நீங்கள் கண்ணில் பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை.

இதில் என்ன லாபம் என்றால் தங்கத்தின் மார்க்கெட் விலை ஏறிக் கொண்டே இருப்பதால் நீங்கள் டி மேட் அக்கவுண்டில் போட்ட தங்கத்தின் மதிப்பும் உயர்ந்து கொண்டே இருக்கும்.
நீங்கள் போட்டு வைத்த பணத்திற்கு வங்கியில் வட்டி கிடைக்கிறது. இந்த டி மேட் அக்கவுண்டில் தங்கத்தின் விலை உயர்வால் உங்களுடைய தங்கத்தின் மதிப்பு ஏறுகிறது. அதனால் உங்களுக்கு லாபம் கிடைக்கிறது.


தங்கம் வாங்கும் போது 8 கிராம், 16 கிராம், 24 கிராம் என்று எட்டின் மடங்குகளாக நீங்கள் வாங்கலாம். கொஞ்சம் வசதியான பார்ட்டியாக நீங்கள் இருந்தால் 100 கிராம், 200 கிராம், 300 கிராம் என்று வாங்கலாம். அதைவிட வசதியாக நீங்கள் இருந்தால் 1 கிலோ, 2 கிலோ, 3 கிலோ என்று கூட வாங்கலாம்.

இந்தப் புதிய முறையில் தங்கத்தை வாங்கிக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது. ஐந்து வருடம் கழித்து நடக்க வேண்டிய திருமணத்திற்கு இப்போதுள்ள விலையில் தங்கத்தை வாங்குவதாக ஒப்பந்தம் செய்து கொண்டு குறிப்பிட்ட அளவு பணத்தை முன் பணமாகச் செலுத்திவிட்டு மீதிப் பணத்தைத் தவணை முறையில் செலுத்தலாம். தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே போவதைப் பற்றிக் கலங்காமல் இருக்கலாம்.

சில நகைக் கடைகளில் தங்கம் வாங்குவதற்குச் சேமிப்புத் திட்டத்தை அறிவித்திருப்பார்கள். அந்தத் திட்டத்தில் சேர்ந்து மாதம் மாதம் குறிப்பிட்ட அளவு பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்தி முடித்தவுடன் அன்றைய தங்க விலை நிலவரத்தின் அடிப்படையில் உங்களுக்குத் தங்கத்தைத் தருவார்கள். இதில் இன்னொரு ரிஸ்க்கும் உள்ளது. நீங்கள் தங்கம் வாங்குவதற்காகப் பணத்தைச் செலுத்திய கடை ஆறு மாதம் கழித்துக் காணாமல் போனாலும் போய்விடும்.
இன்றைய விலையில் தங்கத்தை வாங்குகிறபோது தங்கத்தை விற்கும் எக்சேஞ்சிற்கு நஷ்டம் ஏற்படுமே, அதை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்ற கேள்வி எழும்.

நீங்கள் 100 கிராம் தங்கத்தை இன்றைய விலையில் வாங்குவதாக ஓர் ஒப்பந்தம் போடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்காகக் குறிப்பிட்ட தொகையைச் செலுத்திவிட்டு மீதிப் பணத்தை மூன்று மாதம் செலுத்துவதாகக் கூறுகிறீர்கள். மூன்று மாதம் கழித்து நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் தங்கம் உங்கள் கைகளுக்கு வரும். ஆனால் உண்மையில் நீங்கள் என்று ஒப்பந்தம் போட்டீர்களோ அன்றே தங்கத்தை வாங்கிவிட்டீர்கள். நீங்கள் ஒப்பந்தம் போட்ட அன்று யாராவது தங்கத்தை விற்பார்கள் அல்லவா? அந்தத் தங்கத்தை உங்களுக்கு மாற்றிவிட்டு விடுவார்கள். எனவே இன்றைய விலையில் தங்கத்தை உங்களுக்கு விற்பதால் நஷ்டம் ஏதும் எக்சேஞ்சிற்கு ஏற்படாது. தங்கம் விற்பது, வாங்குவது என்பது ஏதோ ஓரிரு நபர்கள் மட்டுமே பங்கு பெறும் நிகழ்வாக மட்டும் நடப்பதில்லை. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் தங்கத்தை வாங்குகிறார்கள்; விற்கிறார்கள்.

தங்கத்தை எம்சிஎக்ஸ் நிறுவனத்தின் புரோக்கர்கள் மூலமாகவே வாங்கவோ, விற்கவோ முடியும். தங்கத்தை வாங்கும்போது மொத்த மதிப்பில் .03 சதவீதம் புரோக்கர், சப்புரோக்கர் கமிஷனாகத் தர வேண்டும். எங்களுடைய ஃபின் மார்ட் நிறுவனம் சப் புரோக்கராகச் செயல்படுகிறது.
****

நன்றி : ந. ஜீவா, தினமணி கதிர் (21/06/2009)

பின்குறிப்பு : கட்டுரையின் நீளத்தை கருதி, சில அவசியமில்லாத பத்திகளை நீக்கியுள்ளேன். முழுதாக படிக்க... லிங்கை கிளிக்கவும்.

November 4, 2009

அழகிரியின் அதிரடி பத்திரிக்கை!


எந்தக் கழகம் ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அந்தக் கட்சியின் தலைமை மற்றும் அமைச்சர்களைப் புகழ்ந்து சிலர் பத்திரிகை நடத்துவதும், அதன் மூலம் விளம்பரங்கள் பெறுவதும், அமைச்சர்களிடம் காரியம் சாதித்துக் கொள்வதும் வழக்கமானதுதான். ஜெயலலிதா ஆட்சியில் சில பத்திரிகைகள் அப்படி முளைத்ததுண்டு. தற்போதும் கருணாநிதி மற்றும் ஸ்டாலினை புகழ்வதற்கென்றே சில பத்திரிகைகள் வருகின்றன.


இதில், மு.க. அழகிரியைத் துதி பாடுவதற்காக வரும் ‘கலைஞரின் மு.க. அழகிரி’ என்ற மாதமிருமுறை இதழ் வித்தியாசமாக இருக்கிறது. சமீபத்தில் அதன் இரு இதழ்களை வாசிக்க நேர்ந்தபோது, வேடிக்கையாகவும், அதிரடியாகவும் இருப்பதை உணர முடிந்தது. அந்த அழகிரி இதழிலிருந்து சில பக்கங்களைப் பார்ப்போம்:

இதழின் முதல் பக்கத்திலேயே,

“இந்த இதழில் எங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். தி.மு.க. தலைமையே கூட கொஞ்சம் எரிச்சல் அடையலாம். அதற்காக நாங்கள் வருத்தப்படப் போவதில்லை. எங்களுக்கு கலைஞர் மற்றும் அழகிரிதான் முக்கியம். இவர்கள் இருவரைத் தவிர வேறு யாராக இருந்தாலும், அவர்களை நேர்சீர்களை தூக்கிப் பார்த்துத்தான் எழுதுவோம்”

– என்று ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்தப் பக்கத்தில் அமைச்சர் கே.என். நேருவைப் பாராட்டி விட்டு,

அரசியலில் தன்னைத் தக்க வைத்து கொள்வதற்காக அவர் சில விதிகளை மீறலாம், கலைஞரைப் போல! அதனால் அதை நாங்கள் கண்டுகொள்வதில்லை. அதுதான் நியாயமும் கூட; தர்மமும் கூட”

– என்று குறிப்பிடுகிறது அழகிரி பத்திரிகை.

மு.க. அழகிரியின் தியரி’ என்ற கட்டுரையில்,

“ஓட்டர்களையே விலைக்கு வாங்கும் பணம் தியரி யாருக்கு வரும்? தாதா, ரௌடியிஸம் எதுவும் இல்லாமல், அவரால் எப்படி ஒரு புது தியரியை உருவாக்க முடிந்தது என்று எதிரிகளே அசந்து போய்விட்டார்கள். பெயருக்குக் கூட காசு அவிழ்க்காத கலைஞரின் வாரிசில் இப்படியொரு பிள்ளையா? பணம் பாதாளம் வரை பாயும் என்ற பழமொழி எல்லோருக்கும் தெரியும். ஆனால், பணம் மக்களின் மனம் வரை பாயும் என்பதை, அழகிரி ஒருவரால்தான் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால்தான் சொல்கிறோம், கலைஞரின் மைந்தா வா! தலைமை ஏற்க வா!”

– என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருச்சி போலீஸ் கமிஷனர், திருச்சியில் பல கெடுபிடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆளும் கட்சி என்ற பாகுபாட்டைப் பெரிதாக அவர் கண்டுகொள்வதில்லை. அவரைக் கண்டித்து ஒரு கட்டுரை அழகிரி பத்திரிகையில் உள்ளது. ‘போலீஸைக் கட்டவிழ்த்து விட்டது கலைஞரா, துணை முதல்வரா?’ என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில்,

தலைமை மட்டும் சூட்கேஸ் மாற்றிக் கொண்டால் போதாது. தொண்டன் ஒரு சுருக்குப் பையையாவது மாற்றிக் கொள்ள வேண்டாமா? ஒரு தொண்டனைப் போஸ்டர் ஒட்டுவதற்கும், நோட்டீஸ் ஒட்டுவதற்கும் பயன்படுத்திக் கொண்டு, அவனைப் பசை தின்னவா சொல்ல முடியும்? தலைவன் பிரியாணி தின்றால், தொண்டன் பழைய சோறாவது தின்ன வேண்டாமா?”

– என்று கேட்கும் கட்டுரை மேலும் விரிகிறது.


“துணை முதல்வர் பதவி வந்ததற்குப் பின்தான், இப்படி தி.மு.க.வின் பலத்தைக் குறைக்கிறார்கள். வட இந்தியப் போலீஸ் அதிகாரி வரும்போது ஆளும் கட்சிக்கே சவால் விடுகிறான். கேட்டால், நேரடியாக துணை முதல்வர் கண்காணிப்பில் வந்தவன் என்கிறார்கள். வடஇந்தியர்களின் கையில் தமிழகம் போய்விட்டதா? தயாநிதி மாறன் வீட்டில் தி.மு.க. கரைவேட்டிக் கட்சியினரை விட, வடநாட்டு மார்வாடிப் பயல்கள் கூட்டம்தான் அதிகமாக இருக்கிறது. இது எப்படி?

“ஜெயலலிதா ஆட்சிதான் போலீஸ் ஆட்சியாக இருந்தது. ஜெயலலிதா போல துணை முதல்வர் செயல்படுவதாக அறிகிறோம். மக்களுக்கு நலத் திட்டங்கள் அறிவித்தால் மட்டும் போதாது. தி.மு.க.வினரின் நலன்களையும் பார்க்க வேண்டும். மேல்மட்டத் தலைவர்கள் தேனை நக்கும்போது, தொண்டன் விரல் சூப்பிக் கொண்டா இருக்க முடியும்? ஸ்ரீரங்கம் 4-ஆவது வட்டச் செயலாளர் ராம்குமார், அமைச்சர் நேருவுக்காகப் பாடுபடும் தொண்டன். இவரை ஆன்லைன் லாட்டரி நடத்தினார் என்று போலீஸ் வழக்குப் போட்டுள்ளது. ‘காவல்துறை தன் கடமையைச் செய்யட்டும்’ என்று துணை முதல்வர் விட்டுவிட்டாராம். இது எதைக் காட்டுகிறது? துணை முதல்வரின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது. நேருவின் கையை யார் கட்டிப் போட்டது? அஞ்சா நெஞ்சனிடம் இது நடக்குமா?”

– என்று போகிறது அந்தக் கட்டுரை.

அழகிரி பத்திரிகை, பக்கத்துக்கு பக்கம் அழகிரியின் படத்தோடு, அழகிரி பற்றிய செய்திகளையும் வெளியிட்டுள்ளது. இந்த அழகிரி பத்திரிகையின் பதிவு அலுவலகம் திருச்சியில் இருந்தாலும், மதுரையில் அழகிரியின் கல்யாண மண்டபம் அருகே ஒரு அலுவலகமும், டெல்லியில் ஒரு அலுவலகமும் இருப்பதாக இம்ப்ரின்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘அஞ்சா நெஞ்சன்தான் கட்சிக்குத் தலைமையேற்க வேண்டும்’ என்று பல இடங்களில் குறிப்பிடும் இப்பத்திரிகையில், அழகிரியின் பேட்டி ஒன்றும் வெளியாகி இருப்பதால், அழகிரியின் ஆசியுடன் இந்தப் பத்திரிகை வெளிவருவதாகவே கருத வேண்டியுள்ளது.
(நன்றி: துக்ளக்)

நன்றி : இட்லிவடை

November 2, 2009

"மாநிலத்தை விட்டு வெளியேறுங்கள்!" தில்லி அரசு!



'ராஜ்தாக்கரேயின் வழியில் பிச்சைகாரர்களை வெளியேற சொல்வது விசித்திரமாக உள்ளது'

- தில்லி உயர்நீதி மன்றம் கண்டிப்பு.

தலைநகர் தில்லியில் காமன்வெல்த் போட்டிகள் ஜனவரி 2010-ல் துவங்க இருக்கின்றன. இதில் பங்கெடுக்க, பார்க்க-என வெளிநாட்டினர் லட்சகணக்கில் வருகை தருவார்கள். இவ்வேளையில், ஏற்கனவே தலைநகரில் கூட்டம் கூட்டமாய் வாழும் 65000 இந்திய பிச்சைகாரர்கள்

வெளிநாட்டினரை தொல்லை படுத்தி, 'வல்லரசு' இந்தியாவின் 'கெத்'-ஐ நாசப்படுத்திவிடுவார்கள் என முடிவெடுத்து, எல்லா பிச்சைகாரர்களையும் சிறையில் தள்ள முயன்றது. (பார்க்க முந்தைய பதிவு : காமென்வெல்த் போட்டியும் இந்திய பிச்சைகாரர்களும்!)

அரசு அத்தனை பிச்சைகாரர்களுக்கும் சிறை பற்றாது என நினைத்ததா! அல்லது இவர்களுக்கு எதற்கு சில மாதங்கள் சோறு போடவேண்டும் என நினைத்ததா தெரியவில்லை. இறுதியில், "தில்லியை விட்டு வெளியேறுங்கள்! அவரவர் மாநிலத்திற்கு போய்விடுங்கள்" என உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஒருவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

நேற்று இந்த வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.


"பிச்சை எடுப்பது ஒன்றும் கிரிமினல் குற்றம் அல்ல! அரசு அவர்களுக்கு ஏதாவது வாழ்வாதாரத்துக்கு வழி செய்து இருக்கலாம். அதை விட்டு, அவரவர் மாநிலத்துக்கு போகும்படி உத்தரவிடுவது நியாயமில்லை.

மகாராஷ்டிராவில் ராஜ்தாக்கரேயின் நவநிர்மாண் கட்சி அங்கு குடியேறியுள்ள உ.பி., பீகார் மாநிலத்தவரை வெளியேற சொல்வதை போல தில்லி அரசின் இந்த உத்திரவு அமைந்துள்ளது. உள்ளுக்குள் கிரிமினல்களை வைத்துக்கொண்டு பரிதாப நிலையில் பிச்சை எடுப்பவர்களை வெளியேற சொல்வது விசித்திரமாக உள்ளது.

இந்த உத்தரவிற்காக அரசை கண்டனம் செய்கிறோம்."

October 30, 2009

பலான தியேட்டர்களும்! அரசின் ஒத்துழைப்பும்!


ஷகீலா படங்களுக்கு புகழ்பெற்ற பரங்கிமலை ஜோதி, போரூர் பானு, ஆதம்பாக்கம் ஜெயலட்சுமி வரிசையில்... நெற்குன்றம் ஈகிள் திரையரங்கு கடந்த வாரம் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஷகீலா ரசிகர்கள் நிச்சயம் குலுங்கி, குலுங்கி அழுதிருப்பார்கள்.

மதன மர்ம மாளிகை, சாயாக்கடை சரசு, மாயக்கா, ட்யூசன் டீச்சர் போன்ற ஷகீலா படங்களைப் பற்றி சில பதிவுகளில் லக்கிலுக்கும், சுகுணாதிவாகரும் பேசியிருக்கிறார்கள். இந்த பதிவு அந்த படங்களைப் பற்றி அல்ல! அந்த படங்களை திரையிடும் திரையரங்குகளைப் பற்றியது!

மதுரவாயிலில் இயங்கும் ஈகிள் திரையரங்கு இப்படித்தான் தமிழ்படங்களை திரையிட்டு கொண்டிருந்தார்கள். மூன்று வருடங்களுக்கு முன்பு, நண்பனுடன் ஒரு நாள் இரவு 'குமரன் s/o. மகாலட்சுமி' என்ற படத்திற்கு தப்பி தவறி போய், போன கால்மணி நேரத்தில் வெளியே வந்துவிட்டோம். எல்லாமே மோசம். தரையிலிருந்து, சவுண்ட் சிஸ்டம் வரை. அடுத்து வந்த சில நாட்களில், பலான படங்களை திரையிட துவங்கினார்கள்.

இப்படி பலான படங்களை வெளியிடும் திரையரங்குகளின் தகுதி மோசமான சேர்ஸ், மோசமான ஸ்கீரின், மோசமான கழிவறை என எல்லா மோசங்களும் அடங்கியது தான். பொதுவாக தமிழ் படங்களை திரையிடும் திரையரங்குகள் கொஞ்சம் கொஞ்சமாய் பராமரிப்பை கைவிடும் பொழுது மக்கள் அந்த திரையரங்குக்கு போவதை கொஞ்சம் கொஞ்சமாய் தவிர்க்கிறார்கள். ஒரு கட்டத்தில்... திரையரங்கை நடத்த வேண்டும். "மக்களும் வரவேண்டும்" என்கிற பொழுது... பலான வகை படங்களை திரையிட துவங்குகிறார்கள். மோசமான பராமரிப்பு, கூடுதல் கட்டணம் வசூல் என்பது இந்த திரையரங்கிற்கான தகுதி. இரண்டு மாநகராட்சி, நிறைய நகராட்சிகளை கவனித்த பொழுது இதுதான் எதார்த்த நிலைமை. விதிவிலக்குகள் இருக்கலாம்.

இப்படிப்பட்ட திரையரங்குகள் ஒருவேளை கைமாறும் பொழுது, செலவழித்து திரையரங்கை புதுப்பிக்கும் பொழுது மீண்டும் பலான படங்களை திரையிடுவதில்லை. ஏனென்றால், என்ன தான் மாதம் மாதம் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கோ அல்லது திரைப்பட கண்காணிப்பு சார்ந்த அரசு அதிகாரிகளை 'கவனித்தாலும்' ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஒப்புக்கு ஒருமுறை பலான பிலிமை கைப்பற்றி ஆபரேட்டரையும், திரையரங்கு நிர்வாகியையும் கைது செய்து, வழக்குப் போடுகிறார்கள். இது மானக்கேடாய் ஆகிவிடுகிறது.

ஆக, அரசு மக்கள் கூட்டம் கூட்டமாய் செல்லும் திரையரங்கை, அதற்கு உரிய பராமரிப்பை செய்ய சொல்லி, கறாராய் இருந்தாலே போதும். பலான திரையரங்குகள் உருவாவதை தடுக்க முடியும்.

இந்த அரசு மக்களைப் பற்றி கவலைப்பட்டது? மதித்தது? அந்தந்த பகுதியில் இயங்கும் முற்போக்கு அமைப்புகள், சமூக மன்றங்கள், குடியிருப்பு சங்கங்கள் ஒன்றாய் சேர்ந்து....

"அரசே!

ஆபாச படங்களை திரையிட அனுமதிக்காதே!
திரையரங்கை இழுத்து மூடு!"


என போஸ்டர் ஒட்ட வேண்டும். அதற்கும் நடவடிக்கை இல்லையெனில்... மக்களை ஒன்று திரட்டி, உருட்டை கட்டைகளை எடுத்து போய் நிர்வாகிகளை உதைக்க வேண்டியது தான். நிலைமை சரியாகிவிடும்.

தமிழக வரலாற்றில் இப்படி ஏற்கனவே நடந்திருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் தீபா, ரூபா என இரண்டு திரையரங்குகள் இருந்தன. மேலே சொன்ன மோசமான எல்லா தகுதிகளுக்கும் திரையரங்கு வந்தடைந்த பொழுது, ஆபாச படங்களை திரையிட துவங்கினார்கள். ஒருமுறை புரட்சிகர பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பெண் தோழர்கள் குழு உள்ளே நுழைந்து... பிலிமை எடுத்து வந்து, முக்கிய சாலையில் கொண்டுவந்து நடுரோட்டில் போட்டு கொளுத்தினார்கள். தமிழகம் முழுவதும் பரபரப்பான செய்தி அது.

மக்களுக்கான புரட்சிகர இயக்கங்கள் வளர வேண்டும். அது ஒன்றே இதையெல்லாம் தீர்க்க வழி.

October 13, 2009

லஞ்சம் விளையாடும் புழல்சிறை!


இந்த நாட்டில் சட்டத்தை மீறுபவர்கள் முதலில் யார் என போட்டி வைத்தால் நிச்சயமாய் காவல்துறை தான் ஜெயிக்கும். காவல்துறையின் சகல நடவடிக்கைகளிலும் மக்கள் இதை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.

காவல்துறையின் கண்காணிப்பில் உள்ள சிறையும் இதில் விதிவிலக்கல்ல! புழல் சிறையில் லஞ்சமும், முறைகேடுகளும் மலிந்திருக்கின்றன என்ற தொடர்ச்சியான புகார்களின் அடிப்படையில்... வரலாற்றில் முதன் முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருக்கிறது.

கடந்த வாரம் எஸ்.பி, டி.எஸ்.பிக்கள் அடங்கிய 50 பேர் கொண்ட ஒரு குழு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறை என்று பெயர் பெற்ற சென்னை புழல் சிறையில் சோதித்தனர்.

சிறையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான பீடி, சிகரெட், பான்பராக், குட்கா தாராளமாய் கட்டு கட்டாய் சிக்கியிருக்கின்றன. கைதிகளுக்கான உணவு பொருட்கள் அதன் உண்மை இருப்பைக் காட்டிலும் மிக அதிகமாகவோ அல்லது மிக குறைவாகவோ இருந்திருக்கின்றன. வெளி மார்க்கெட்டில் நிறைய கடத்தி விற்பனை செய்கிறார்கள் என்று எழும் புகார் தனி.

இது தவிர... ஆபாச டிவிடிக்கள் நிறைய சிக்கியிருக்கின்றன. அதுவும் துணை ஜெயிலர் அறையில் 21 ஆபாச சிடிக்கள் கிடைத்தனவாம். நான்கு கைதிகளின் அறையில் விதிமுறைகளை மீறி கேபிள் டிவி இணைப்புடன் தொலைக்காட்சி பெட்டிகள் இருந்திருக்கின்றன.



சிறை அதிகாரிகள், வார்டன்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை, கிளுகிளுப்பான படங்களை ஏன் கைதிகளுக்கு சப்ளை செய்கிறார்கள்? கைதிகள் மீது பாசமா? எல்லாம் பணத்திற்காக தான்.

சோதனையின் பொழுது.. சிறை அதிகாரிகள், வார்டன்கள், சிறை மருத்துவர் ஆகியோர்களிடம் சில ஆயிரம் லஞ்சப்பணம் சிக்கியிருக்கிறது.

வெளியே ஒரு சிகரெட் ரூ. 3 என்றால்.. சிறையில் ரூ. 10. வெளியே கஞ்சா பொட்டணம் ரூ. 5 என்றால்... உள்ளே பல மடங்கு. இது தவிர மருத்துவமனைக்கு போக வேண்டுமா? மருத்துவருக்கு லஞ்சம் கொடுத்தால்... அவர் பரிந்துரைப்பார். கறிக்கஞ்சி வேணுமா? மருத்துவருக்கு பணம் கொடுத்தால்... அவர் பரிந்துரைப்பார்.

ஏற்கனவே புழல் சிறையில் கடந்த துறை வாரியான சோதனையின் பொழுதே... 30க்கும் மேற்பட்ட செல்போன்கள், 2 பென்டிரைவர்கள், 12 கிலோ கஞ்சா சிக்கியிருக்கின்றன. மேலும் ஆபாச டிவிடிக்கள் சிக்கியிருக்கும் பொழுது...டிவிடி பிளேயரும் மாட்டியிருக்க வேண்டும். சிறையில் சகல நடவடிக்கைகளிலும், சகல மட்டத்திலும் லஞ்சம் விளையாடும் பொழுது, பிடிபட்ட பொருள்களும், பணமும் குறைவாக இருக்கிறதே என யோசிக்கும் பொழுது, அதற்கும் பதில் இருக்கிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை மதியம் 1 மணிக்கு போய் அனுமதி கேட்டு, வேண்டுமென்றே அரை மணி நேரத்திற்கும் மேலாக இழுத்தடித்து தான் உள்ளே அனுமதித்திருக்கிறார்கள். அரைமணி நேரத்தில் எவ்வளவோ மறைக்கலாமே!

சகல மட்டத்திலும் இப்படி லஞ்சம் விளையாடுவது அரசுக்கு தெரியாதா என்ன? எல்லாம் தெரியும். தெரிந்து... கண்டும் காணாமல் இருக்கிறது. சிறைக்கு வெளியே பத்திரிக்கைகள், பொதுமக்கள் என கண்காணிப்பு இருக்கும் பொழுதே சமூகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடும் பொழுது, சிறை காவல்துறையின் பேட்டை! அங்கு சொல்லவா வேண்டும்.

காசு கொடுத்தால் எல்லாம் கிடைக்கும் இந்த சிறையில் தான்.... அரசியல் ரீதியாக கைதாகும் முற்போக்கு மற்றும் கம்யூனிஸ்ட் தோழர்கள் சிறையில் இருக்கும் பொழுது தான், அவர்கள் ஒவ்வொரு அடிப்படை உரிமைக்கும் போராடும் பொழுது, அங்கு நடக்கும் முறைகேடுகள் பற்றிய செய்திகள் வெளியே வருகின்றன.

குற்றங்கள் புரிந்து உள்ளே செல்லும் கைதிகளை சீர்ப்படுத்தி, திருத்தி அனுப்பும் வேலையை சிறை செய்வதாக சொல்கிறார்கள். கிரிமினல்களே நிர்வகிக்கும் பொழுது.... இது எப்படி சாத்தியப்படும்?

****

தொடர்புடைய மேலும் சில பதிவுகள்

பயங்கரங்களுக்கு பஞ்சமில்லாத புழல்சிறை

விசாரணை கைதிகள் - சிறையில் சமையல்காரர்கள்- குருத்து

October 9, 2009

தீபாவளி - தமிழர்களின் திருவிழா அல்ல! 'இந்துக்களின்' திருவிழா!



முன்குறிப்பு : தீபாவளியை கொண்டாட தமிழ்நாடு தயாராகி வருகிறது. துணிக்கடைகளில் கூட்டம் பிதுங்கி வழிவதும், எந்த பக்கம் திரும்பினாலும், முதலாளிகள் தங்கள் பொருளை விற்று தீர்ப்பதற்கு விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ரயில்களிலும், பேருந்துகளிலும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிரம்பிவிட்டன. இடம் கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிறார்கள். ஆங்காங்கே தீபாவளிக்காக வாங்கப்படும் வெடிகள் பல உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன. நிற்க.

தீபாவளி - தமிழர்களின் திருவிழா அல்ல! 'இந்துக்களின்' திருவிழா.

பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் மகாவீரர் இறந்ததை தான், நரகாசுரன் அழிந்ததாக கொண்டாடப்படுகிறது என வரலாற்று வழி ஆதாரங்கள் மற்றும் மரபு வழிப்பட்டும் விளக்குகிறார்

- பண்பாட்டு துறை ஆய்வாளர் தொ. பரமசிவன், இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தார், பிறகு, திருநெல்வேலியில் உள்ள மனோன்மனியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியராகவும், பதிவாளராகவும் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். (தற்பொழுது எதுவும் பணியில் இருக்கிறாரா என தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும்)

****

தீபாவளி

இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப்பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, என்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் 'தேசிய திருவிழா' போலக் காட்டப்படுகிறது. ஆயினும் தைப்பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் ஒரு திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் சடங்குகளோடும் கொண்டாடப் பெறுவதாகவும் தீபாவளி அமையவில்லை. தைப்பொங்கல் சமய எல்லையினைக் கடந்து நிற்கும் திருவிழா. இது பழந்தமிழரின் அறுவடைத் திருவிழா. எனவே தான் இன்று ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்களில் கூடத் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஆனால் தீபாவளி தமிழரின் திருவிழாவாக அமையாமல் 'இந்து'க்களின் திருவிழாவாக அமைகிறது.

தமிழர் திருவிழா - இந்துக்களின் திருவிழா என்ற வேறுபாட்டினை எவ்வாறு பிரித்தறிவது? பழைய வழிபாட்டு முறைகளோடு கூடிய தொல் சமய வழிபாடுகள், இவற்றின் சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த சைவம், வைணவம் ஆகியவையே தமிழர்கைன் பழைய மதங்களாகும். இவை காட்டும் திருவிழாக்களான கார்த்திகைத் திருவிழா, திருவாதிரைத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, மாசிக்களரி எனப்படும் சிவராத்திரித் திருவிழா, பங்குனி உத்திரம், சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ஆகியன சைவமும் வைணவமும் பெருஞ்சமயங்களாக நிலைபெறுவதற்கு முன்னரே தமிழர்கள் கொண்டாடிய திருவிழாக்களாகும். பக்தி இயக்கத்தின் வளர்ச்சியில் இவை சைவ வைணவ மதங்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தீபாவளி, தமிழ்நாட்டின் மரபுவழிப் பொருளாதாரத்தோடும் பருவ நிலைகளோடும் சடங்குகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழா. பார்ப்பனியத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. தீபாவளியின் அடையாளமான வெடி, அதன் மூலப்பொருளான வெடிமருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்குப் பதினைந்தாம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீப+ஆவளீ) என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை. தமிழர்களின் விளக்குத் திருவிழா என்பது திருகார்த்திகைத் திருவிழாவே.

நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும். இந்த நாளே பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் இருபத்து நாலாம்
தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த (இறந்த) நாளாகும். தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுகொண்டார். ஆகவே, பிராமணீய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மாகாவீரர் இறந்த நாளையே அக்கும். விசயநகரப் பேரரசான, 'இந்து சம்ராஜ்ஜியம்', தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தக் காரணம் பற்றியே தமிழ்ப் பிராமணர்களைவிட, தமிழ்நாட்டில் உள்ள தெலுங்குப் பிராமணர்களே தீபாவளியைப் 'பக்தி சிரத்தை'யுடன் கொண்டாடுகின்றனர். வடநாட்டு இந்துக்களிடமும் சமணர்களிடமும் இல்லாதபடி தமிழ்நாட்டில் இத்திருவிழா நாளன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது தமிழ்நாட்டில் நீத்தார் நினைவில் இறுதி நாளைக் குறிக்கும் சடங்காகும். தமிழ்நாட்டுப் பிராமணர்களும் இத்திருவிழாவை இறந்தார் இறுதிச் சடங்கு போல 'கங்கா ஸ்நானம்' செய்து கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. ஆகவே உண்மையில் இத்திருவிழா பார்ப்பனிய மதத்தின் திருவிழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.

'நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா' என்று பாரதி தாசன் பாடுவதும் இங்கே நினைவுக்குரியது.

- தொ.பரமசிவன் எழுதிய பண்பாட்டு அசைவுகள்' லிருந்து. பக்.58, 59

****

மேலும் சில தகவல்கள்

தீபாவளி பற்றிய இன்னபிற கதைகள் - தமிழ்ச் சமணம்

தொ.பரமசிவன் எழுதிய நூல்கள் குறித்த தகவல்

தேவையில்லாத தாலியும், சில உருப்படியான தகவல்களும் - தொ.பரமசிவன் - நந்தவனம்

தமிழ் - தொ. பரமசிவன் எழுதிய நூல் அறிமுகம்

"தெய்வம் என்பதோர்" - தொ. ப. எழுதிய கட்டுரை தொகுதி குறித்த ஒரு பார்வை