> குருத்து: July 2022

July 11, 2022

”அழகிய” சுவர்களும், கேள்வி கேட்டு குடைச்சலைத் தருகிற சுவரொட்டிகளும்!


கடந்த இரு வாரங்களுக்குள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டியதற்காக ஒரு லட்சம் வரை அபராதம் வசூலித்திருக்கிறது சென்னை மாநகராட்சி. கூடுதலாக ஒட்டியவர்கள் மீது 451 வழக்குகளையும் போட்டிருக்கிறது.

 

சுவரொட்டிகள் என்ன செய்யும்?

 

சுவரொட்டிகள் மக்களின் உரிமைகளை உரத்துப்பேசும்.. அநீதிக்கு எதிராக நியாய குரலை எழுப்பும். அரசின் அலட்சியங்களை கண்டிக்கும்.  சமூக பிரச்சனைகளுக்கு தீர்வைத் தேடுபவர்களுக்கு வழிகாட்டும்.  ஒரு சரியான அமைப்பை கண்டறிய உதவும்.

 

தேர்தல் கட்சிகளும் சுவரொட்டிகளும்



.

தேர்தல் கட்சிகள் அரசியல் ரீதியாக நீர்த்துப்போய்விட்டன. அதனால், சென்னையில் பல பகுதிகளின் சுவர்களில் தங்கள் தலைவர்களின் பெயர்களை பெரிது பெரிதாக எழுதி வைத்திருக்கிறார்கள். தலைவர்களின் முகங்களை பெரிது பெரிதாக வரைந்து வைத்திருக்கிறார்கள். சுவரொட்டிகள் ஒட்டினாலும், அதையே செய்கிறார்கள்.

 

தேர்தல் கட்சிகள் தேசிய நீரோட்டத்தில் ஒன்று கலந்ததால், பதவி, பணம், செல்வாக்கு என எதற்கும் பஞ்சமில்லாமல் வளர்ந்துவிட்டார்கள்.  அதனால் பத்திரிக்கைகளை நடத்துகிறார்கள்.  தொலைக்காட்சி ஊடகங்களை வைத்திருக்கிறார்கள்.  தங்களுக்கு சாதகமான செய்திகளை பார்த்து, பார்த்து வெளியிடுகிறார்கள். தங்களை தொந்தரவு செய்கிற செய்திகளை கவனமாக தவிர்த்துவிடுகிறார்கள்.

 

தமிழக முதல்வரும் சுவரொட்டியும்



 

சமீபத்தில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் முதல்வர் பேசும் பொழுது, தன் இளமைக் காலத்தில் தமது தோழருடன் சுவரொட்டி ஒட்டியதாகவும், போலீசு அழைத்து சென்று எச்சரித்து அனுப்பியதாகவும் தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

 

அப்பொழுது திமுக எதிர்க்கட்சி. அதனால் ஆளும் கட்சியின் செயல்பாடுகளை கண்டித்து சுவரொட்டி ஒட்டி, சுவர்களின் வழியே மக்களிடம் அரசியல் பேசினார். இப்பொழுது ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு சுவர்கள் பேசும் அரசியலின் வீரியம் மற்றவர்களை விட அவருக்கு நன்றாகவே புரியும் அல்லவா! அதனாலேயே சென்னை மாநகரம் முழுவதும் தமிழக பண்பாட்டு அடையாளங்களை வரைந்து ”அழகிய” சுவர்களாக மாற்ற உத்தரவிட்டுவிட்டார்.  மீறுபவர்களை தண்டிக்கிறார்.

 

அழகிய சுவர்கள் வேண்டுமா? ஆரோக்கியமான சமூகம் வேண்டுமா?

 

தேசிய நீரோட்டத்தில் கலக்காததாலும், மக்கள் பிரச்சனைகளைப் பேசுவதாலும், ஆளும் அரசுகளைப் பார்த்து ஓயாது கேள்விகளை எழுப்புவதாலும், ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர அமைப்புகளின் செய்திகளை ஊடகங்களில் கவனமாக மறைத்துவிடுகிறார்கள். சமூகப் பிரச்சனைகளைப் விவாதிக்கும் பொழுது அழைப்பதை தவிர்க்கிறார்கள்.

 

ஆக அவர்களுக்கு தான் மக்களிடம் பேசுவதற்கு சுவர்கள் தேவை. அந்த சுவர்களைத் தான் மாநகராட்சி ”அழகிய” சுவர்களாக்கி தடை செய்து வைத்திருக்கிறது.  

 

ஓவியங்கள் நிறைந்த ”அழகிய” சுவர்கள் வேண்டுமா, ஏன் எதற்கு எப்படி என சுவரொட்டி மூலம் கேள்விகள் கேட்டு சிந்திக்கும் சமுதாயமாக மாற வேண்டுமா என மக்கள் தான் முடிவு செய்யவேண்டும்.

-

July 10, 2022

இலங்கையின் இன்றைய நிலைமைக்கு காரணமும் தீர்வும்!


1. தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பறித்து, ஆயுதப் போராட்டத்தில் தள்ளியது. அதற்கான எதிர்விளைவாய், சில பத்தாண்டுகள் உள்நாட்டில் போர் நீடித்தது!


2. போரைத் தூண்டிவிடுவதும், அதற்கு ஆயுதம் சப்ளை செய்வதும், ஏகாதிப்பத்தியங்கள் தான். இலங்கைக்கு நிறைய ஆயுதங்களும், அரசியல் ஆதரவும் தந்தார்கள்.

3. விடுதலைப் புலிகளையும், இறுதிப் போரில் மக்களையும் கொன்று குவித்து, "தற்காலிகமாக" வென்றார்கள். ஆனால் ஏகாதிப்பத்தியங்களின் கடன் வலையில் சிக்கிக்கொண்டார்கள். அதில் ஒரு பகுதி தான் சீனாவிற்கு துறைமுகத்தை எழுதிக்கொடுத்தார்கள்.

4. உள்நாட்டுப் போர் ஏகாதிப்பத்தியங்களால், முடித்து வைக்கப்பட்ட பொழுதும், அதற்கு பிறகாவது உற்பத்தியை அதிகப்படுத்த, பொருளாதார நிலையை சரி செய்ய மெனக்கெடவில்லை. போரில் "வென்று"விட்டோம் என்ற திமிரிலேயே சுற்றினார்கள்.

5. மேலே உள்ள காரணங்கள் தான் பிரதானமானவை. ஊடகங்கள் சில விசயங்களை பேசுகிறார்கள். அதெல்லாம் இரண்டாம் நிலையில் உள்ளவை.

6. இலங்கைக்கு சுற்றுலா வருமானம் முக்கியமானது. கொரானா உலக மக்களை முடக்கிவைத்தது. ஆகையால், இலங்கையின் சுற்றுலா வருமானம் குறைந்தது.

7. கொரானா காலத்தில் உலகம் முழுவதுமே உற்பத்தி சிக்கலானதால், இலங்கையில் உள்ள மக்கள் பல்வேறு வெளிநாடுகளில் வேலை செய்து பணம் அனுப்புவது சிக்கலானாது.

8. தேர்தல் வாக்குறுதியாக தேசிய வரியை 15% லிருந்து சரிபாதியாக குறைத்தார்கள். அதனால் தேசிய வருமானமும் பாதியாக குறைந்தது. இது ஒரு கணிசமான நெருக்கடி தந்தது.

(உடனே இந்தியாவில் உள்ள அதிகார வர்க்கம், நமது நாட்டிலும் மாநிலங்களின் தேர்தலின் பொழுது, நிறைய இலவசங்களை அறிவிக்கிறார்கள். இலங்கை நிலைமை இங்கும் வந்துவிடும் என ஆலோசனை செய்தார்கள். மக்களுக்கு தரும் மான்யங்களை விட, கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித்தருவதை நிறுத்துங்கள் என ஒருபோதும் ஆலோசனை தரமாட்டார்கள்

9. ஒரு நாட்டில் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருப்பது ஆரோக்கியமான நிலைமை இல்லை. அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாக குறையும். இலங்கையின் மேல்த்தட்டு வர்க்கத்தின் நுகர்வு அதிகம் இருந்தது. ஆகையால், தான் இறக்குவதி மிகவும் அதிகமானது என்கிறார்கள்.

10. நிரவாக குளறுபடி. தேர்தலில் ஜெயித்த பிரதிநிதிகள் 250 பேர் என்றால், துறைவாரியான அமைச்சர்களின் எண்ணிக்கை சரிபாதிக்கு மேல் இருந்திருக்கிறார்கள். தன்னுடன் ஒத்துழைக்க அவ்வளவு பேரை தாஜா செய்ய வேண்டியிருந்தது முக்கியமான நிலைமை.

11. ஒவ்வொரு துறையிலும் ராணுவத்தின் ஆட்கள் மேலே உட்கார்ந்து கொண்டு நிர்வாகம் செய்திருக்கிறார்கள். இதுவும் குளறுபடிகளுக்கு காரணம் என்கிறார்கள்.

இதெல்லாம் இலங்கை நிலைமையை தொடர்ந்து கவனித்ததின் வாயிலாக, பல பத்திரிக்கைகளில் படித்து நான் அறிந்தவை.

இதெல்லாம் நிலைமை சிக்கலானதற்கு காரணம். நிலைமையை சரி செய்ய, என்னுடைய கருத்து, பெரும்பாலான மக்களின் பிரதிநிதியாக‌ ஒரு சரியான கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கி, தலைமை தாங்கினால், நிலைமை சரியாகும். அங்கு சிலர் இருந்தாலும், இப்பொழுது மக்கள் மத்தியில் அப்படி ஒரு சரியான கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கு பெறாததால், தலைமை தாங்குவது உடனடி சாத்தியம் இல்லை.

மீண்டும் ஏகாதிப்பத்தியங்களுக்கு ஆதரவான, அங்குள்ள கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான முதலாளித்துவ ஆட்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்பது தான் கசப்பான நிலைமையாக இருக்கிறது.

நீங்கள் இலங்கை நிலைமைக்கு காரணமாகவும், தீர்வாகவும் என்ன சொல்கிறீர்கள்?

July 9, 2022

மூன்றாம் ஆண்டு கொண்டாட்டமும்... மெல்ல எழும் நினைவுகளும்


மூன்றாம் ஆண்டு கூட்டம் குளு குளு ஏற்காட்டில் என பேச்சு ஆரம்பித்து, உறுப்பினர்களின் பர்சை பதம் பார்த்துவிடக்கூடாது, எல்லோரும் கலந்துகொள்ள‌வேண்டும் என்ற தொலைதூர சிந்தனையால், இறுதியில் உள்ளூரிலேயே சந்திப்பு என முடிவானது.  அது அப்படித்தான். ஒரு குழந்தை பிறந்ததும் எழுந்து ஓடிவிடுகிறதா என்ன?  தவழும். தத்தி தத்தி நடக்கும். பிறகு தான் ஓட ஆரம்பிக்கும். ஓட ஆரம்பித்த பிறகு நம்மால் தான் பிடிக்கமுடியாது. 


நிறைய பயணங்களை கடந்துவந்திருக்கிறேன். பெரும்பாலோர் நேரத்துக்கு வந்தது இந்தப் பயணத்தில் தான்.  எல்லா பயணங்களிலும் அந்த "இரண்டு பேர். ஒருவர்" கொஞ்சம் தாமதமாக தான் வந்து சேர்வார்கள். உலகம் உருண்டை என இப்படித்தான் நாம் நிரூபித்துக்கொள்கிறோம்.  🙂


காலையில் அந்த மினி டிபன் சுவையான உணவு. நமக்காக முன்கூட்டியே சாப்பிட்டு சோதித்து, அத்தனை பேரின் வயிறையும் நிர்வாகிகள் காப்பாற்றிவிட்டார்கள். சிரமங்கள் மேற்கொண்ட சந்திரசேகர் அவர்களுக்கு மிக்க நன்றி. அத்தனை டிராபிக்கிலும், திட்டமிட்ட நேரத்தில் போய் சேர்ந்துவிட்டோம். கூட்டத்தையும் துவங்கிவிட்டோம். 


உறுப்பினர்களின் சுய அறிமுகம். அவசியம் தேவை.  உறுப்பினர்களின் எண்ணிக்கை எதிகம் என்பதால்,  விரிவான சுய அறிமுகமாகிவிட்டது. இருப்பினும் எல்லா உறுப்பினர்களும் ஒவ்வொருவரைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. 



நானெல்லாம் எப்பொழுதும் கடைசி பெஞ்ச் மாணவன் தான். ஆனால், அந்த அரங்கில் பின்னாடி இருந்த‌தால், எவ்வளவு உன்னிப்பாக கவனித்தாலும் மைக் சத்தம் தெளிவாக கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் களைப்பாகி முன்னாடி வந்து உட்கார்ந்துவிட்டேன். 


மூன்று ஆண்டில் சொசைட்டி கடந்து வந்த பாதை குறித்து நிர்வாகிகள் சொல்ல சொல்ல‌ விரிவாக பதிந்தார்கள். அவசியமான பதிவு. ஆனால் அந்த சமயம் மட்டும் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டதாக எனக்குப்பட்டது. சொசைட்டி துவங்கும் எண்ணம் எப்பொழுது முதலில் உருவானது? எப்படி சாத்தியப்படுத்தினோம். நிர்வாகிகள் ஒவ்வொரு கூட்டத்தையும் எத்தனை திட்டமிடலுக்கு பிறகு கூட்டம் நடத்துகிறோம். எங்கெல்லாம் நமக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். எல்லோரையும் எப்படி நட்புடன் பராமரிக்கிறோம். உறுப்பினர்களின் வளர்ச்சிக்காக என்னென்ன திட்டங்களை அமுல்படுத்தினோம். உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக என்னென்ன செய்தோம் என்பதை ஒவ்வொரு நிர்வாகியும் அவரவர் அனுபவத்தை லைவ்வாக சொல்லியிருந்தால் மூன்று ஆண்டு கடந்து வந்த பாதை இன்னும் உயிர்ப்புடன் இருந்திருக்கும். அனைத்து உறுப்பினர்களும் உங்கள் அனுபவத்தை தங்கள் அனுபவமாக உள்வாங்கியிருப்பார்கள். (இது எனது ஆலோசனை தான். இதை பேருந்திலேயே தெரிவித்தேன்.)


"செயற்குழு ஒன்றை உருவாக்க யோசித்து அழைப்புவிடுத்திருக்கிறோம்.  சொசைட்டியை உற்சாகமாக கொண்டு செல்ல ஆர்வத்துடன் முன்வாருங்கள்" என செந்தமிழ்ச் செல்வன் சார் கேட்டுக்கொண்டார். ஒரு அமைப்பு என்பது அறிவும், அனுபவமும் உள்ள மூத்தவர்களும், இளரத்தம் ஓடுகிற இளைஞர்களும் கலந்து செயல்படவேண்டும்.  அப்பொழுது தான் சொசைட்டியின் செயல்பாடுகள் இன்னும் வேகமெடுக்கும்.  செயல்பட இளைஞர்கள் தாமாக முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


சாப்பாடு. நல்ல சாப்பாடு. சந்தோஷ் சுப்பிரமணியன் படத்தில் ஜெனிலியா தனக்குத் தானே சொல்லிக்கொள்வது போல, "நிறைய ஐயிட்டம் இருக்கு. கொஞ்சமா சாப்பிடு. கொஞ்சமா சாப்பிடு" எனக்குள் நானே சொல்லிக்கொள்ளவேண்டியதாகிவிட்டது.  🙂


விளையாட்டுகளில், கிரிக்கெட் ஹைலாட்டாகிவிட்டது.  காற்றே இல்லை. வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்தது. இருப்பினும்  மிகவும் கர்ம‌ சிரத்தையாக இரண்டு முறை விளையாடினார்கள்.  புல் தடுக்கி எல்லாம் விழுந்தார்கள். சிரித்தார்கள். கோபப்பட்டார்கள். கிண்டல் செய்தார்கள். அழுகை மட்டும் தான் இல்லை. ஒரு விளையாட்டில் எல்லா உணர்ச்சிகளையும் காட்டினார்கள். 😍


இதில் எனக்கு ஹைலெட். என்னை இரண்டாவது விளையாட்டில் ஒன்லி ஒன் அம்பயராக்கியது தான். எனக்கு கிரிக்கெட் தெரியாது என உண்மையை சொன்னேன். விளையாட்டுக்கு சொல்கிறேன் என நினைத்து... அம்பயராக்கிவிட்டார்கள். பள்ளிக் காலத்தில் மட்டும் சில மாதங்கள் மட்டும் கிரிக்கெட் அத்தனை ஆர்வமாயிருந்தது.  பிறகு அந்த ஆர்வம் சுத்தமாக போய்விட்டது. சும்மா ஜாலிக்காகத்தானே விளையாடுகிறார்கள் என நினைத்தேன். விளையாட்டில் மேலே சொன்ன அத்தனை உணர்ச்சிகளும் உள்ளே வந்த பொழுது கொஞ்சம் தடுமாறித்தான் போனேன்.  ஒரு வீரரின் வாழ்வா சாவா என முடிவு செய்வது கூட என் கையில் வந்தது. பிறகு சுதாரித்துக்கொண்டு, ஒரு பேப்பரை எடுத்து பொறுப்பாக குறிக்க‌ துவங்கிவிட்டேன்.  வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் இது. 😇


அதன் பிறகு கொஞ்சூண்டு பரிசல், கொஞ்சூண்டு கேரம், கொஞ்சூண்டு செஸ் என பல  உறுப்பினர்கள் உற்சாகமாக விளையாடினார்கள்.


பேருந்தில் கிளம்பிய பொழுது, ஒவ்வொருவரும் அவரவர் அனுபவத்தை நன்றாக‌ சொன்னார்கள். அடுத்தமுறை ஒரு மைக், ஸ்பீக்கரும் ஏற்பாடு செய்தால்  பேருந்தில் கடைசிவரை உறுப்பினர்கள் என்ன‌ சொன்னார்கள் என கவனமாக கேட்டிருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.


பலரும் பல ஆலோசனைகளை சொன்னார்கள். அதில் ஒரு உறுப்பினர் சொன்ன ஆலோசனை "தங்கத்தை" விட மதிப்பு வாய்ந்தது. ஒவ்வொரு உறுப்பினரும் தங்களது சுக துக்கங்களை சொசைட்டி உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும்.  அதில் உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளவேண்டும். அப்பொழுது தான் உறுப்பினர்களிடையே நெருக்கம் வரும். இனி அந்த பழக்கத்தை கடைப்பிடிப்போம்.


ஒரு பயணம் முடிந்ததும், அடுத்த பயணத்திற்கான துவக்கத்திற்கான ஆலோசனையும், உடனடியாக அமுல்படுத்தவும் துவங்கிவிட்டார்கள். இன்னொருமுறை பயணம் கிளம்பும் பொழுது பணம் தடையாக இருக்ககூடாது என ஆலோசனை சொன்னார்கள். மாதம் ஒரு தொகை தருகிறோம். பணம் தடையாக மாறாது என பலரும் ஆமோதித்தார்கள். சிலர் முதல் மாத தவணைத்தொகையை உடனே அனுப்பிவைத்துவிட்டார்கள். இதோ குழந்தை தவழத்துவங்கிவிட்டது. அடுத்து ஓடத்துவங்கும். நாம் நம்புவோம்.


பிறகு கீச்செயின் நன்றாக  இருந்தது. தினசரி பயன்பாட்டிற்கு உகந்தது..  வீட்டிற்கு வந்ததும் நினைவுக்கு வந்தது. எல்லோருக்கும் இரண்டு கீச்செயினாவது கொடுத்திருக்கலாம் என தோன்றியது.


முக்கிய குறிப்பு : இந்த ஒருநாள் பயணத்திற்கு நிர்வாகிகள் கொடுத்த கடுமையான‌ உழைப்பும், சக உறுப்பினர்கள் கொடுத்த உழைப்பும், ஒத்துழைப்பும் மிக முக்கியமானவை.  இந்த கடுமையான உழைப்பு இல்லாமல், இந்த பயணமும், மகிழ்ச்சியும் சாத்தியமில்லை.  நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.  இதில் உணவு, பேருந்து, ரிசார்ட்டில் பதிவு செய்வது, வரத்தயங்கிய சில உறுப்பினர்களிடம் தொடர்ந்து பேசி என‌ எல்லா ஏற்பாடுகளிலும் தன் உழைப்பைத் தந்து, கடைசி நேரத்தில் உடல் நிலை சரியில்லாது வரமுடியாமல் போன நாராயணசாமி சாரை பலரும் பல சமயங்களில் நன்றிகளுடன் நினைவுப்படுத்தினார்கள்.  உடல்நலம் சரியில்லாமல் இருந்தும் நிகழ்ச்சி சிறப்பாக அமையவேண்டும் என்ற அயராத உழைப்பை, நல்ல  பண்பை எல்லோரும் அவரிடமிருந்து கற்றுக்கொள்வோம்.


மோடி அரசு கேஸ் மானியத்தை நிறுத்தியதே விலை உயர்வுக்கு காரணம்! சிலிண்டர்களை கொண்டு சாலையை மறிப்போம்!


 இப்பொழுது அரசு மானியம் தருவதை நிறுத்திவிட்டது என இந்தியன் ஆயில் நிறுவன இயக்குநர் இராம்குமார் 2021 அக்டோபர் மாதத்தில் ஊடகங்களிடம் வெளிப்படையாக தெரிவித்தார்.

****

ஒரு சிலிண்டரின் விலை ரூ. 1065.50

வீடுகளில் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டரின் விலை வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில் ரூ. 1068.50- என உயர்ந்திருக்கிறது. தில்லியில் ரூ. 1053க்கும், மும்பையில் ரூ. 1052.50க்கும் விற்கிறார்கள். கடந்த 14 மாதங்களில் 12முறை விலை ஏற்றியிருக்கிறார்கள். இதெல்லாம் நாம் தான் விரல்விட்டு எண்ணி நிறைய கவலைப்படுகிறோம். அவர்களுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலையே இல்லை.

இப்படி கடுமையாக விலை ஏறியதன் விளைவாக தமிழகத்தின் கிராமப்புறங்களில் சிலிண்டர் வாங்க முடியாமல், மீண்டும் மரபு வழி எரிபொருளான விறகு, மாட்டுச்சாணத்தால் செய்யப்படும் எருவாட்டி என பயன்படுத்த துவங்கிவிட்டார்கள் என ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

ஆண்டுக்கு ஐந்து லட்சம் பெண்கள் இறக்கிறார்கள்


கடந்த காலங்களில் விறகு, எருவாட்டி, மண்ணெண்ணெய், மரம் அறுக்கும் தூள் என அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் பொருட்களை எரிபொருளாக கொண்டு, சமைத்துவந்தார்கள். இப்படி சமையல் செய்வதில் உள்ள பெரிய சிக்கல் என்னவென்றால் வெளியேறும் புகை கார்பன் உமிழ்வை அதிகம் உண்டாக்குகிறது. இது சுற்றுப்புற சூழலை கடுமையாக மாசுப்படுத்துகிறது. இந்தியாவில் பெரும்பாலும் பெண்கள் தான் சமைப்பதால், புகை மண்டலத்தால் நிறைய சுவாச நோய்கள் உண்டாகின்றன. சமைப்பதில் எழும் புகை ஒரு மணி நேரத்துக்கு 400 சிகரெட்டுகள் புகைப்பதற்கு இணையானது என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இப்படி கரும்புகையோடு மல்லுக்கட்டி சமைப்பதால், ஆண்டுக்கு ஐந்து லட்சம் பெண்கள் சுவாச நோய்களால் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இம்மரணங்களில் பெரும்பாலானவை, இதய நோய், பக்கவாதம், நுரையீரல் நோய் மற்றும் புற்றுநோய் காரணமாக ஏற்படுபவை. சமையல் எரிவாயு என்பது மற்ற எல்லாவற்றையும் விட தூய்மையான எரிபொருள் என்கிறார்கள்.

மோடியின் உஜ்வாலா திட்டம் பல்லிளித்துவிட்டது.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, ஏழைப் பெண்கள் சமைப்பதை எளிதாக்க, சுவாச நோய்களிலிந்து தப்பிக்க என உஜ்வாலா (ஒளி) என்ற திட்டத்தை 2016ல் பந்தாவாக துவங்கினார்கள். இந்த திட்டம் துவங்கப்பட்டு, சமையல் எரிவாய் பதிவு கட்டணம் இல்லாமல் இணைப்பு வழங்கினார்கள். தொடங்கியதிலிருந்து இன்றைக்கு வரை இந்த திட்டத்தில் 9 கோடி இணைப்புகள் வழங்கியுள்ளதாக சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இவ்வளவு விலை உயர்ந்துவிட்டதே! பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை விட ஒப்பீட்டளவில் வளர்ந்து நிற்கும் தமிழ்நாட்டிலேயே மக்கள் மாற்று எரிபொருளை தேட ஆரம்பித்துவிட்டார்கள். மற்ற மாநிலங்களின் நிலை என்னவென்று சமூக ஆர்வலர் சந்திரசேகர் உஜ்வாலா திட்டத்தின் தற்போதைய நிலை என்னவென்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்விகளை எழுப்பினார்.

அதற்கு வந்த பதில். 2021 – 22 நிதியாண்டில் மட்டும் இத்திட்டத்தில் இருந்த 90 லட்சம் பயனாளிகள் தங்களுக்கு வழங்கிய சமையல் எரிவாயு சிலிண்டர் தீர்ந்த பிறகு, மீண்டும் வாங்கவில்லை. குறிப்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் 65 லட்சம் சிலிண்டர்கள் வாங்கவில்லை. இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசனில் 9 லட்சம் பேர் வாங்கவில்லை. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனில் 16 லட்சம் பேர் வாங்கவில்லை. ஆக ஒரு ஆண்டிலேயே 90 லட்சம் பேர் வாங்கவில்லை. வாங்குவதற்கு பணமில்லை என்பதே எதார்த்த நிலைமை. உஜ்வாலா திட்டத்தின் வழங்கப்பட்ட பெரும்பாலான சிலிண்டர்கள் வீட்டில் காட்சிப்பொருளாக மாறிவிட்டன.

எரிவாயுக்கான மானியத்தை அரசு நிறுத்திவிட்டது


இவ்வளவு விலை உயர்வுக்கு என்ன காரணம். முதலில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என எரிபொருளுக்கு அரசு விலை நிர்ணயம் செய்வதை தன் வசம் வைத்திருந்தது. அப்பொழுது விலை கட்டுக்குள் இருந்தது. இப்படி கட்டுக்குள் வைத்திருந்ததின் மூலம் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு நிறைய மானியம் கொடுத்துக்கொண்டிருந்தது. ”மக்களுக்கு மானியம் தராதே” என ஏகாதிப்பத்தியங்களும், தங்களால் ”தொழில்” செய்யமுடியவில்லை என கார்ப்பரேட்டுகளும் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தார்கள். அவர்களின் ஆட்சி தானே நடக்கிறது. ஆகையால், சில ஆண்டுகளுக்கு முன்பு விலை தீர்மானிப்பதை ஆயில் நிறுவனங்களிடமே விட்டுவிட்டார்கள்.

மொத்தமாய் மானியம் தராமல் கைவிட்டுவிட்டால், மக்கள் கொந்தளிப்பார்களே என யோசித்த அரசு, நைச்சியமாய் சமையல் எரிவாயு இணைப்புடன் வங்கி, ஆதாரை இணையுங்கள். மானியத்தை வங்கிக்கணக்கில் தந்துவிடுகிறோம் என்றார்கள். பணமும் போட்டார்கள். 2018ல் அதிகப்பட்சமாக ரூ. 465 வங்கியில் மான்யமாக வரவு வைத்தார்கள். (பார்க்க படம்). கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக 2021ல் ரூ. 25 மட்டுமே பெயரளவில் வரவு வைக்கிறார்கள். இன்று வரைக்கும் ரூ. 25 யாக தொடர்கிறது.

இன்னொரு வாக்குமூலம் சொல்லவேண்டுமென்றால்… “இந்தியாவில் 90% பேர் சிலிண்டர் பயன்படுத்துகிறார்கள். இதில் இந்தியா 50% எரிபொருளை இறக்குமதி செய்கிறது. உலக சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இந்தியா மானியம் வழங்கிவந்தது. இப்பொழுது மானியம் தருவதை நிறுத்திவிட்டது என இந்தியன் ஆயில் நிறுவன இயக்குநர் இராம்குமார் 2021 அக்டோபர் மாதத்தில் ஊடகங்களிடம் வெளிப்படையாக தெரிவித்தார்.

காலி சிலிண்டர்களை கொண்டு சாலைகளை மறிப்போம்

உஜ்வாலா திட்டம் மூலம் சமையல் எரிவாயு தருகிறோம் என சொன்னதின் மூலம், அரசு ரேசன் கடைகளின் மூலமாக தந்த மண்ணெண்ணெய்யும் நிறுத்திவிட்டார்கள். ஆக, பழைய நிலைமையை விட மோசமான நிலைக்கு வந்து நிற்கிறோம்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கூடிக்கொண்டே போவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை எல்லாமே கணிசமாக உயர்ந்திருக்கிறது. சிலிண்டர் விலை குறித்து மக்களிடம் பேசும் பொழுது, குமுறுகிறார்கள். ஒன்றிய ஆட்சியாளர்களை திட்டித்தீர்க்கிறார்கள். கொந்தளிக்கிறார்கள்.


ஆக, பழைய மரபு வழி சமையலுக்கு திரும்புவதால், முன்பு வருடத்திற்கு ஐந்து லட்சம் பெண்கள் செத்துப்போனோம். உச்சத்தில் இருக்கும் இன்றைய விலையால் சாவு எண்ணிக்கை மேலும் சில லட்சங்கள் நிச்சயம் உயரத்தான்போகிறது. ”இனிமேல் மூன்று வேளை சாப்பிட முடியாது. இரண்டு வேளை தான் சாப்பிடமுடியும்” என தொலைக்காட்சியில் ஒரு அம்மா மனம் உடைந்து பேசினார்.

ஏன் இவ்வளவு மனம் உடையவேண்டும். ஏன் இத்தனை லட்சம் பேர் சாகவேண்டும். இந்த நாட்டை மலிவு விலையில் வாங்கி கொள்ளையடிக்கும் கார்ப்பரேட்டுகளையும், அவர்களுக்கு பாதந்தாங்கிகளாக இருக்கும் காவி ஆட்சியாளர்களையும் பணிய வைக்க, வீட்டில் காட்சிப்பொருளாய் இருக்கும் சிவப்பு காலி சிலிண்டர்களை எல்லாம் தூக்கி வந்து சாலையை மறிப்போம். சாலைகள் சிவப்பாகும். எதிரிகளை கதறவிடலாம். நம் பிரச்சனையையும் எளிதாய் தீர்த்துவிடலாம்.




July 7, 2022

ஓலா ஓட்டுநரால் கணிப்பொறியாளர் கொலை! மக்களையும் ஓட்டுநர்களையும் சுரண்டுகிறார்கள் கார்ப்பரேட்டுகள்! மக்களை மோதவிட்டு அரசு வேடிக்கைப் பார்க்கிறது!


பயணத்தை பதட்டமாகவும், சிக்கலாக்கியும் வைத்திருப்பது ஓலா, ஊபர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும், இதை முறைப்படுத்த தவறிய  ஒன்றிய அரசும் தான் காரணம். 


*****

கணிப்பொறியாளர் கொலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி அருகே கன்னிம்பாக்கம் கிராமம். கணிப்பொறியாளர் உமேந்தர் கோயமுத்தூரில் வேலை செய்கிறார். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் சென்னையில் தன் சொந்த வீட்டுக்கு வருவது வழக்கம். ஞாயிறன்று தன் மனைவி, இரண்டு குழந்தைகளுடன், மனைவியின் தங்கை, தங்கையின் இரண்டு குழந்தைகளுடன் மொத்தம் ஏழு பேர் மாலுக்கு சென்றுள்ளனர்.

கிளம்பும்பொழுது, மனைவியின் தங்கை ஓலாவில் இன்னோவா கார் பதிவு செய்திருக்கிறார்.  காரும் வந்திருக்கிறது. எல்லோரும் ஏறி அமர்ந்ததும், ஓலா ஓட்டுநர் ஓடிபி கேட்டிருக்கிறார். தன் மனைவியின் தங்கை செல்போனில் பதிவு செய்ததை மறந்து, தன் செல்லில் தேடியவர். வரவில்லை என சொல்லியிருக்கிறார். “வரவில்லை என்றால் கீழே இறங்குங்கள்” என ஓட்டுநர் தெரிவித்திருக்கிறார்.

கீழே இறங்கிய பயணி, கோபத்தில் காரின் கதவை வேகத்துடன் சாத்தியிருக்கிறார்.  “எப்படி என் காரின் கதவை வேகமாக சாத்தலாம்?” என சண்டை தீவிரமாகியிருக்கிறது.  இருவரும் கைகலப்பில் ஈடுபட்டு, பயணி கீழே விழுந்ததில் அவருக்கு அடிபட, மருத்துவமனைக்கு கொண்டு போய் சோதிக்கும் பொழுது ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர் தெரிவித்திருக்கிறார். இப்பொழுது ஓலா ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

டீசல், பெட்ரோல் விலை ஏற்றம்

அலுவலகத்தில் சக ஊழியருடன் பேசும் பொழுது, மக்களிடையே சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது என பொதுவாக சொன்னார்.   உண்மை நிலவரத்தை நாம் சரியாக‌ புரிந்துகொள்ளவேண்டும். கொரானா அலைகளில் ஊரடங்கின் பொழுது கார்களை ஓட்டமுடியாமல், கடனுக்கு எடுத்த காருக்கு மாதாந்திர கடன் (Due) கட்ட முடியாமல், ஓட்டுநர்கள் மேலும் கடன் வாங்கித்தான் வாழ்க்கையை ஓட்டினார்கள்.



ஊரடங்கிற்கு பிறகாவது நிலைமையை சமாளிக்கலாம் என நினைக்கும் பொழுது, வரலாறு காணாத விலையில் ஒன்றிய அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக‌ பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றிக்கொண்டே வந்தது.  கடந்த எட்டு ஆண்டுகளில் 26 லட்சம் கோடி ஒன்றிய அரசு, பெட்ரோல், டீசல், எரிவாயு பொருட்களில் மட்டும் வரிகளை ஏற்றி  மக்களை கொள்ளையடித்திருக்கிறது.  பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு  தொழில்ரீதியாக கார் ஓட்டுபவர்களை கடுமையாக பாதித்தது.

ஓலா, ஊபர் கார்ப்பரேட்டுகள் அராஜகம்

இந்தியாவில் ஓட்டுநர்கள் ஒருங்கிணைந்த முறையில் ஒன்றிணைக்கப்படாததால்,  கார் ஓட்டுநர்களும், பயணம் செய்பவர்களும் தொடர்பு கொள்வதில், விலையை தீர்மானப்பதில் என நிறைய‌ சிரமங்களை எதிர்கொண்டார்கள்.  இருவரையும் ஒருங்கிணைத்தால், நன்றாக சம்பாதிக்கலாம் என ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் முடிவு செய்தன. துவக்கத்தில் ஜீரோ கமிசன் என பெரும்பாலான கார் ஓட்டுநர்களை ஒன்றிணைத்தார்கள்.பிறகு 5% கமிஷன் என பிடிக்கத் துவங்கினார்கள்.  இப்பொழுது அதிகபட்சமாக ரூ. 1000க்கு ரூ 350 வரை கமிசனாக பிடித்துக்கொள்கிறார்கள். அதாவது 35% சதவிகிதம் வரை கமிஷன் என்ற பெயரில் சுரண்டுகிறார்கள்.. இந்த கமிசனுக்கு பயந்துகொண்டு தான்,  ஓலா, ஊபர் ஓட்டுநர்கள் பதிவு செய்த பயணத்தை ரத்து செய்யுங்கள், “எங்களிடம் பணமாக கொடுங்கள்” என பயணிகளை கேட்டுக்கொள்கிறார்கள்.  இப்படி பல ஓட்டுநர்கள் கோருவதை சமூக வலைத்தளங்களில் பலர் எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

பயணிகளிடமும் கொள்ளை



ஓட்டுநர்களிடம் அதிகப்பட்சம் 35% கமிஷன் என்ற பெயரில் சுரண்டுபவர்கள் பயணிகளையும் விட்டுவைக்க‌வில்லை. ஓலா, ஊபர் நிறுவனங்கள் விதவிதமான வழிகளில் வசூல் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்.  காலை, மாலை நேரங்களில்  டிராபிக் அதிகம் உள்ள (Peak Hours) நேரங்களில் வழக்கமான கட்டணத்தை விட‌ அதிகப்பட்சம் 5 மடங்கு வரை  வசூலிக்கிறார்கள்.  பயணத்தை ரத்து செய்தால் ஒரு கட்டணம்.பாதியில் இறங்கினால் அதற்கொரு கட்டணம். இப்படி விதவிதமாக கட்டணங்களை வசூலிக்கிறார்கள்.

ஒன்றிய அரசு தலையீடு

தொடர்ந்து புகார்கள் வருவதால், இப்பொழுது ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் வசூலிப்பதில் புதிய நடைமுறையை கொண்டுவர‌ பரிசீலனையில் இருப்பதாக‌ சொல்கிறார்கள். காலை, மாலை என டிராபிக் நெருக்கடி உள்ள சமயங்களில் 2 மடங்கு மட்டுமே வசூலிக்கவேண்டும்.  அதுவும் ஒரு நாளைக்கு ஒரு ஓட்டுநர் புக் செய்யும் பயணங்களில் 10% மட்டுமே (பீக் அவர்) வசூலிக்கமுடியும். இப்படி இன்னும் எத்தனை கொலைகளுக்கு பிறகு நடைமுறைப்படுத்துவார்கள்?

மக்களுக்குள் மோதவிடுகிறார்கள்

சமீபத்தில் அண்ணா ஆர்ச் அருகே ஐம்பது வயது ஷேர் ஆட்டோ ஓட்டுநரும்,  20 வயதுள்ள‌ மருத்துவ கல்லூரி மாணவியும் சத்தமாகவும், மரியாதை இல்லாமல் தாக்கி பேசிக்கொண்டார்கள். சமாதானப்படுத்தி இருவரையும் அனுப்பிய பிறகு,  எதனால் சண்டை என விசாரித்தால், ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு இதுவரை 15ரூ வாங்கிக்கொண்டிருந்தவர்,  விலை உயர்வை காரணம் சொல்லி கூடுதலாக ரூ5 கேட்டிருக்கிறார். அதை அந்தப் பெண் ஏற்றுக்கொள்ளவில்லை. இது தான் காரணம்.

இப்படி தினந்தோறும் மக்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் தகராறு நடந்துகொண்டே இருக்கிறது. அந்த சண்டை முற்றிப்போய், இப்பொழுது கொலை வரைக்கும் போயிருக்கிறது.

தினந்தோறும் மக்கள் பயணங்களை மேற்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட பயணத்தை பதட்டமாகவும், சிக்கலாக்கியும் வைத்திருப்பது ஓலா, ஊபர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும், இதை முறைப்படுத்த தவறிய  ஒன்றிய அரசும் தான் காரணம்.

மக்களும் ஓட்டுநர்களும் ஒன்று சேர்ந்து  எதிர்த்து சண்டையிடவேண்டியவர்கள் ஓலா, ஊபர் போன்ற கார்ப்பரேட்டு நிறுவனங்களையும், ஒன்றிய அரசை எதிர்த்தும் தான்.

'வெற்றிகரமாக' ஆறாவது ஆண்டில் ஜி.எஸ்.டி! பரிசாக ! மக்கள் வாங்கும் மோர், தயிர்க்கு எல்லாம் வரி!


“ஒரு தேசம். ஒரு வரி” என பந்தாவாக முழங்கி, ஜி.எஸ்.டி வரிமுறையை துவங்கினார்கள். ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டது. அரசு அதை கொண்டாடும் விதத்தில் 47வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் சண்டிகாரில் கூடி, பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு புதிதாக வரியும், சில முக்கிய பொருட்களுக்கு கூடுதல் வரியும் போட்டிருக்கிறார்கள்.


தினந்தோறும் மக்கள் பயன்படுத்தும் பாக்கெட் தயிர், மோர்க்கு எல்லாம் இப்பொழுது வரி விதித்திருக்கிறார்கள். பிஜேபி ஆதரவு வழக்கறிஞர் தொலைக்காட்சி விவாதத்தில் ‘வசதியில்லாதவர்கள் வீட்டில் உறை ஊத்திப் பயன்படுத்துவார்கள். வசதியானவர்கள் தான் கடைகளில் பாக்கெட் தயிர் வாங்குகிறார்கள்’ என கூசாமல் முட்டுக்கொடுக்கிறார்.

கோடை விடுமுறைக்கு பிறகு, பள்ளிக்கட்டணமும், கல்லூரிக் கட்டணமும் கட்டுவதற்காக மக்கள் கடன் வாங்குவதற்கு அலையாய் அலைந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் மாணவர்கள் பயன்படுத்தும் பேனா இங்க் போன்ற பொருட்களுக்கு வரியை அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.


பம்புசெட்க்கு 12% வரியிலிருந்து, 18%ஆக உயர்த்தியிருக்கிறார்கள். வரி உயர்ந்ததின் விளைவாக பம்புசெட்டின் திறனுக்கேற்ப ஏழு ஆயிரத்திற்கு மேலே விலை உயரும் என்கிறார்கள். தமிழ்நாட்டில் இதனை கணிசமாக உற்பத்தி செய்யும் கோயமுத்தூர் உற்பத்தியாளர்கள், ‘குறைந்த விலையில் மூலப்பொருட்கள் குஜராத்தில் கிடைப்பதால் அவர்களோடு ஏற்கனவே விலையில் போட்டி போடமுடியவில்லை. அதனால் விலையைக் குறையுங்கள் என அரசுக்கு கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தான் வரியை அதிகப்படுத்தி இருக்கிறார்கள் ‘ என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் விவசாயம், நிலத்தடி நீரை மட்டுமே பிரதானமாக நம்பி செயல்பட்டு வருகிறது. 1,000 அடி, 1,500 அடிக்கு கீழ் உள்ள தண்ணீரை,’ போர்வெல் பம்ப்செட் ‘ பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றோம். மேலும் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில்’ பம்ப்செட் ‘முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் பம்ப்செட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக அதிகரித்துள்ளது இந்த விலையேற்றம் விவசாயத்தை கடுமையாக பாதிக்கும். ஏற்கனவே பலர் விவசாயத்தில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். இதனால் விவசாயம் அழிந்து வருகிறது. எனவே விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் மோட்டார் பம்ப்செட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு முற்றிலும் நீக்க வேண்டும் என’ தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ‘- பழனிசாமி கருத்து தெரிவிக்கிறார்.

‘ஒரு பக்கம் சூரிய சக்தியில் பயன்படுத்தும் பொருட்களுக்கு இதே ஆண்டிலேயே மானியமும், இன்னொரு பக்கம் சூரிய சக்தி அடுப்புகளுக்கு வரியை அதிகப்படுத்தவும் செய்கிறார்கள்’ என்கிறார், ‘ புதிய தலைமுறை நெறியாளர்’ -“கார்த்திகேயன்”.

“கொரானா அலைகளில் நிறைய தொழில்கள் நொடித்து இலட்சக்கணக்கான குறு, நடுத் தொழில்கள் செய்பவர்கள் விழி பிதுங்கி நிற்கும் பொழுது இப்படி அடிப்படை பொருட்களுக்கு விலை ஏற்றம் என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது !”என்கிறார், ‘இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர்’ -“ரகுநாதன் “அவர்கள்.

ஒரு அரசின் அச்சாணியே வரி தான்! மாநிலங்களின் வரி வசூலிக்கும் உரிமையையும் பறித்ததே ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி வரி சிஸ்டம்.

மாநில கட்சிகள், அடிப்படையில் இதை ஏற்றுக்கொண்டிருக்கவே கூடாது. அவர்கள் பணியவைத்தார்கள். இவர்களும் பணிந்தார்கள்.

ஜி.எஸ்.டி அமுலாக்கத்தின் விளைவால் தொழிற்துறையில் முன்னேறி நிற்கும் மாநிலங்களுக்கு பெரும் இழப்புதான். அந்த இழப்பை ஈடுகட்டுவதற்கு ஐந்து ஆண்டுகள் மட்டும் இழப்பீடு தருவதாக சொன்னார்கள். இவர்களும் தலையாட்டி ஏற்றுக்கொண்டார்கள்.

இதோ ஐந்து ஆண்டுகள் கடந்து போய்விட்டன. மேலும் ஐந்து ஆண்டுகள் இழப்பீடு தரவேண்டும் என பாதிக்கப்படும் மாநிலங்கள் இப்பொழுது ஜி.எஸ்.டி கவுன்சிலிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார்கள்.

அவர்கள் மறுத்துவிட்டால், அந்த சுமையையும் மக்கள் மீது தான் மாநிலங்கள் சுமத்தப்போகின்றன.

இலங்கையில் அரசு திவாலாகி மக்கள் போராட்டங்கள் கொழுந்துவிட்டு எரியும் பொழுது, இங்குள்ள, ‘ இந்திய அதிகார வர்க்கம்’ , ‘ மாநில தேர்தல்களின் பொழுது தேசிய கட்சிகள், மக்களுக்கு இலவச திட்டங்களை அறிவிக்கிறார்கள்! இதனால் , இலங்கையை போல இங்கும் நிலைமை மோசமாகிவிடும்! ‘ என ஒன்றிய அரசுக்கு அறிவுரையை அள்ளி வழங்கினார்களாம்!

ஒரு நாடு ,நேர்முக வரியான வருமானவரி போன்ற வரிகளை அதிகரித்து, மறைமுக வரிகளான ஜி.எஸ்.டி போன்றவற்றை குறைப்பது தான் ஒரு நல்ல அரசுக்கு இலக்கணம் என்கிறார்கள். நடந்து கொண்டிருப்பது கார்ப்பரேட்- காவி அரசு: இது ‘மக்கள் விரோத அரசு ‘என்பதால் மறைமுக வரியை ஏற்றி, மக்கள் மீது சுமையை அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள்!

ஏற்கனவே சில பொருளாதார சமிக்ஞைகள் தெரிய ஆரம்பித்துள்ளன. இந்தியாவில் டாலரின் மதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது: அமெரிக்காவின் மத்திய வங்கி, வட்டி விகிதத்தை அதிகரித்து இருக்கிறார்கள்: இதனால் ஆசிய நாடுகளின் பணமதிப்பு இன்னும் வீழ்ச்சி அடையலாம் என்கிறார்கள்!

இந்திய பங்கு சந்தையிலிருந்து நிறைய முதலீடுகளை நகர்த்திக்கொண்டு இருக்கிறார்கள் என்ற செய்தியும் வருகிறது. மக்களிடையே பணப்புழக்கம் குறைந்துகொண்டே வருகிறது: ஏற்கனவே பெரும்பாலான மக்கள் மீது மீண்டும் மீண்டும் சுமையை சுமத்துகிறவர்கள் வர இருக்கும் பொருளாதார ஆபத்துகளையும் சுமத்துவார்கள் என நினைக்கும் பொழுதே பகீரென இருக்கிறது.

இலங்கை மக்கள், கடும் நெருக்கடி வந்த பின்பு தான் உக்கிரமாக போராட துவங்கினார்கள். மக்கள் விரோத ஆட்சியாளர்களை ஓட ஓட விரட்டி அடித்து துரத்தினார்கள்!

நெருக்கடி வரும்முன்விழித்துக்கொண்டு போராடுவது நமக்கு நல்லது!

Fingertip. (2022) - சீசன் 2


அம்மாவும், அப்பாவும் சென்னையில் வாழ்கிறார்கள். வீடு மொத்தமும் சிசிடிவி பொருத்தப்பட்டு அமெரிக்காவில் வாழும் மகன் கண்காணிக்கிறார். இத்தனை ”டிஜிட்டல் பாதுகாப்பு” இருந்தும், பெற்றோர்கள் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். கொலை செய்யும் பொழுது வீடியோ எடுக்கிறார்கள். ஏன்?


செல்போனில் ஒரு பிரச்சனை. கடையில் சரிசெய்ய பெண் தருகிறார் திருப்பி தரும் பொழுது, உள்ளே ஒரு கேமராவை வைத்து தந்துவிடுகிறார்கள். படுக்கை வரைக்கும் அந்தப்பெண் செல்போனை கொண்டு செல்கிறார். எல்லாவற்றையும் பார்த்து, ”பதிவு” செய்து மிரட்டுகிறார்கள்.

ஒரு கல்லூரியில் மாணவர்கள் தேர்தல். ஒரு மாணவன் 70%க்கு மேலாக வாக்கு வாங்கி வெற்றி பெறும் நிலையில் இருக்கிறான். எதிர்த்து நிற்கும் ஒரு மாணவி, ஒருவனை அணுகுகிறார். அந்த மாணவனைப் பற்றிய வதந்தி ஒன்றை பரப்பி, அதையே தன் ஆட்களை வைத்து காரசாரமாக விவாதிக்க வைத்து, ”டிரெண்டாக்கி”, தேர்தல் காலையின் பொழுது, அவனைப் பற்றிய ஒரு தப்பான படத்தை இவர்களே உருவாக்கி சமூக வலைத்தளத்தில் போடுகிறார்கள். அந்தப் படம் உண்மை இல்லை என்றாலும், எதிர்த்து நிற்கும் பெண் ஜெயிக்கிறாள். இதன் தொடர்ச்சியில் அவன் அமைச்சருக்கு வேலை செய்ய துவங்குகிறான்.


திரைப்படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை. அவள் படிக்கிற காலத்தில் அவள் மூக்கை தோழி ஒருத்தி கிண்டல் செய்ய, அவள் மனதில் வடுவாகப் பதிந்துவிடுகிறது. அந்த எண்ணம் நாளாக நாளாக வளர்ந்து… தன் மூக்கு லேசாக கோணலாகத்தான் இருக்கிறது என ”ஆழமாய்” நம்புகிறாள். தன் மூக்கை வெறுக்க துவங்குகிறாள். இதற்காக ஒரு சிகிச்சையில் ஈடுபட, முகத்தின் அமைப்பு வேறு மாதிரியாகிறது.

பிறகு இவர்களுக்கெல்லாம் என்ன ஆனது என்பதை உளவியல்பூர்வமாகவும், உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள். முதல் சீசனும் சமூக வலைத்தளங்கள் மனிதர்களின் வாழ்க்கையை எப்படி பாதிக்கின்றன என்பதைத்தான் சொல்லியிருந்தார்கள். இந்த சீசனில் பிரசன்னா, ரெஜினா, அபர்ணா உட்பட சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.



உலகம் டிஜிட்டல் மயமாகிவருகிறது. இந்தியாவும் டிஜிட்டல் மயத்தை விரைவுப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதில் டிஜிட்டல் குற்றங்களும் வருடந்தோறும் அதிகமாகி கொண்டே வருகின்றன. 2016-ல் 12317 குற்றங்களும், 2017ல் 21796 குற்றங்களும், 2018ல் 27248 குற்றங்களும், 2019ல் 44735 குற்றங்களும், 2020ல் 50035 பெருகியுள்ளன. ஐந்து ஆண்டுகளில் 400% அதிகமாகி இருப்பதை கவனியுங்கள். டிஜிட்டல் குற்றங்களுக்கு எங்கு, யாரிடம் புகார் தருவது என மக்களுக்கு புரிபடவில்லை. இந்த டேட்டாவை தருபவர்களே 99% டிஜிட்டல் குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. இந்த குற்றங்களில் குற்றவாளிகளை பிடிப்பதும், பணத்தை மீட்பதும் சவாலாக இருக்கிறது என்பதையும் சேர்த்தே சொல்கிறார்கள்.

செல்போன் நமது அன்றாட தேவைகள் அத்தனைக்கும் பயன்படுத்துகிறோம். அதில் எவ்வளவு நேர்மறை அம்சங்கள் இருக்கிறதோ, அவ்வளவு எதிர்மறை அம்சங்களும் இருப்பதை அறியாமலேயே மக்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். படத்தில் ஒரு இடத்தில் கணவனும் மனைவியும் தங்களது படுக்கையறையில் அலெக்சாவை வைத்திருப்பார்கள். குரல் கொடுத்தாலே புரிந்துகொண்டு வினையாற்றக்கூடிய ஒரு எலக்ட்ரானிக்ஸ் பொருள் தான் அலெக்சா. உள்ளாடைகள் வாங்கவேண்டும் என பேசிக்கொள்வார்கள். அடுத்தநாள் அந்த கடையை கடக்கும் பொழுது, தள்ளுபடி விலையில் தருவதாக ஒரு குறுஞ்செய்தி வரும். அவர்கள் அந்த கடைக்குள் மகிழ்ச்சியுடன் நுழைவார்கள். நமக்கு அலெக்சா நினைவுக்கு வந்து போகும். நம் படுக்கையறை வரை சந்தைப்படுத்துபவர்கள் நுழைந்துவிட்டார்கள் என்பது முக்கிய செய்தி.

சிசிடிவிக்கள் நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில், வீடுகளில், தெருக்களில் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. சிசிடிவிக்களைப் பொருத்த சொல்லி, போலீசே தொடர்ந்து வலியுறுத்துகிறது. சமூகத்தில் குற்றங்களுக்கான அடிப்படைகளை கண்டறிந்து சரி செய்ய முயலாமல், சிசிடிவிக்களை பொருத்திக்கொண்டு போவது அறிவுடைமை செயலா? அமெரிக்காவின் தெருக்களில் 10 டாலருக்காக கொலை செய்யப்படுவீர்கள் என்பார்கள். அந்த நிலைமையை நோக்கி நாமும் போகிறோமா?

உலகம் டிரெண்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. தங்களது எதிர்ப்பையோ, ஆதரவையோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக்கிவருகிறார்கள். இந்தியாவில் இதை மற்றவர்கள் புரிந்துகொண்டார்களோ இல்லையோ, சங்கி காவிப்படைகள் சமூக வலைத்தளங்களில் மிக வலுவாக இருப்பதை ஊடகங்கள் திரும்ப திரும்ப சொல்கிறார்கள். களத்திலும், சமூக வலைத்தளங்களிலும் அவர்கள் தான் நிகழ்ச்சி நிரலை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். எது விவாதிக்கப்படவேண்டும். எது விவாதிக்கப்படக்கூடாது என்பதை அவர்கள் தீர்மானிக்கிறார்கள். நாம் அதன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

உலகம் டிஜிட்டல்மயமாகி வருகிறது. உலக ரவுடி அமெரிக்கா உலகத்தில் தன்னை எதிர்க்கும், ஆதரிக்கும் பலரையும் உளவுப் பார்த்தே வருகிறது. இதைத்தான் ஸ்னோடன் விக்கிலீக்ஸ் மூலம் அம்பலப்படுத்தினார். இதற்காக அவரை அமெரிக்கா டார்ச்சர் செய்து கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் இப்பொழுது அரசு தன்னை எதிர்க்கும் பல அரசியல் தலைவர்களை, பத்திரிக்கையாளர்களை, சமூக செயற்பாட்டாளர்களை இஸ்ரேலிடமிருந்து பெகாசஸ் ஸ்பைவேரை வாங்கி உளவுப் பார்த்ததாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் பொய் வழக்குகள் போட்டு சிறையில் தள்ளி வதைத்து வருகிறது.

உலகம் டிஜிட்டல் மயமாவது கார்ப்பரேட்டுகளுக்கும், அரசுகளுக்கும் மிகவும் வசதியாக இருக்கிறது. இந்தியாவில் கார்ப்பரேட்டுகளுக்கும், காவி பயங்கரவாதிகளுக்கும் வசதியாக இருக்கிறது. அதனால் தான் விரைவுப்படுத்துகிறார்கள்.