> குருத்து: 2011

December 30, 2011

முல்லை பெரியாறு - தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்!




முல்லை பெரியாறு அணையைப் பாதுகாப்போம்!
தமிழக உரிமையை நிலைநாட்டுவோம்!

* பழைய அணையை இடித்துவிட்டு
புதிய அணையைக் கட்டத்துடிக்கும்
கேரள அரசின் சதியை முறியடிப்போம்!

* கேரள அரசின் அடாவடித்தனத்திற்கு
துணைநிற்கும் மத்திய அரசை எதிர்த்துப்
போராடுவோம்!

* இரட்டைவேடம் போடும்
தேசியக்கட்சிகளை தோலுரிப்போம்!

*தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட
ஓரணியில் திரள்வோம்!

தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம்

உழைக்கும் மக்களே,

தமிழகத்தின் ஐந்து தென் மாவட்டங்களின் வாழ்வுக்கும் வளத்திற்கும் உயிராதாரமாக இருப்பது முல்லைப் பெரியார் அணை. அந்த அணை பலவீனமாக உள்ளது என்றும், அணை உடையும் அபாயத்தில் உள்ளது என்றும், 40 லட்சம் கேரள மக்களின் உயிரை, உடைமைகளை காவு வாங்கப்போகிறது என்றும் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சதித் திட்டத்தோடு கோயபல்சு பாணியில் பொய்ப்பிரச்சாரம் செய்கிறது கேரள அரசும், ஓட்டுக்கட்சிகளும் மற்றும் ஊடகங்களும்.

கேரளத்தின் புளுகுனித்தனத்தின் உச்சக்கட்டமாக கடந்த ஒரு வாரகாலமாக கம்பம்-குமுளி எல்லைப்புறத்தில் பதற்றச் சூழ்நிலையை உருவாக்கி வருகிறது கேரளக்கட்சிகள். அன்றாடம் பிழைப்புக்காக கேரளாவிற்கு கூலி வேலைக்குச் செல்லும் தமிழ் மக்களை தாக்குவது, ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களை இழுத்துப்போட்டு அடிப்பது, தமிழ்நாட்டு வாகனங்களில் ஆபாசமாக இனவெறுப்பை கக்கி எழுதுவது, தமிழக முதல்வரின் உருவ பொம்மையை எரிப்பது போன்ற இனவெறி காலித்தனம் செய்து, தமிழின வெறுப்பை உமிழ்கிறார்கள். இந்த காலித்தனத்தை கேரள போலீசின் பாதுகாப்போடு அனைத்து ஓட்டுக்கட்சிகளும் முன்னின்று நடத்துகிறார்கள்.

உண்மையில் அணை உடையும் ஆபத்தில் உள்ளதா? இல்லையெனில், ஏன் இந்த பொய்ப்பிரச்சரம்? புரிந்து கொள்ள முல்லைப்பெரியார் அணையின் சில உண்மைகளை தெரிந்துகொள்ளவேண்டும். உண்மைகளை எப்பொழுதும் வெல்லமுடியாது.

முல்லைப்பெரியாறு அணைத்தோற்றம்!

1850களில் மதுரை, இராமநாதபுரம் பகுதிகளில் ஏற்பட்ட பஞ்சத்தையும் அதனால் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சரி செய்யவும், வரிவசூல் செய்யவும், விவசாயத்தை சீரமைக்கவும் நினைத்து வெள்ளை அரசு அதற்கு நிலையான நீர்த்தேக்கம் தேவை என கருதி மேற்கு நிலையான நீர்த்தேக்கம் தேவை என கருதி மேற்கு தொடர்ச்சி மலையில் வீணாகக் கடலில் கலக்கும் முல்லைப்பெரியாரின் நீரைக்கட்டி, தேக்கி தமிழகத்திற்கு திருப்புவது என முடிவெடுத்தது. அத்திட்டத்தை பென்னிகுயிக் என்ற பொறியாளரிடம் ஒப்படைத்தது.

இதற்காக 1886 இல் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கும் சென்னை மாகாண கவர்னருக்கும் பெரியார் அணைக்கட்டுமான 999 வருட குத்தகை ஒப்பந்தம் ஏற்பட்டது.

தமிழக மக்களின் உழைப்பை, உயிரை, உதிரத்தைக் கொடுத்தும் பென்னி குயிக்கின் முன்முயற்சியில் பெரியார் அணை கட்டப்பட்டது.

பெரியார் அணையினால் தமிழகத்தில் 4 லட்சம் ஏக்கர் பாசனம் செய்யப்படுகிறது. 1958 லிருந்து மின்னுற்பத்தியும் செய்யப்படுகிறது. தமிழக மக்களின் நலனை கருத்திற்கொண்டு கட்டப்பட்ட பெரியார் அணை நிலக்குத்தகை ஒப்பந்தத்தை முழுக்க முழுக்க தமிழகத்திற்கு சொந்தமானது. ஒப்பந்தப்படி அணை கட்ட தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை குத்தகை பணம் தவறாமல் செலுத்தப்பட்டிருக்கிறது.

அணையில் சீரமைப்புப் பணிகளும் வல்லுநர் குழு ஒப்புதலும்!

1979இல் மலையாள மனோரமா இதழில் அணை உடையப்போகிறது என புரளி செய்தி வெளியிட்டது. இதையொட்டி அணையின் பலம் குறித்து பிரச்சனையை கேரள அரசு தீவிரமாகக் கிளப்பியது.

அதனால், மத்திய நீர்வல ஆணையத்தின் தலைவர் கே.சி. தாமஸ் தலைமையில் இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி, அணையில் சீரமைப்புப் பணிகள் செய்து முடிப்பது என்று உடன்பாடு ஏற்பட்டது.

அதில் முதற்கட்டப் பணிகள் முடியும் வரை நீர்மட்டம் 136 அடியும் முதற்கட்டப் பணிகள் முடிந்தவுடன் 142 அடியாகவும் அனைத்துப் பணிகளும் முடிந்தவுடன் 152 அடியாகவும் உயர்த்திக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. சீரமைப்புப் பணிகளுக்கு கேரள அரசின் வனத்துறை, நீர்வளத்துறை, காவல்துறை போன்ற துறைகள் பல வகைகளில் இடையூறு செய்து பணிகளை தடுத்து நிறுத்தியது. இருந்தும், பேபி அணையைப் பலப்படுத்தும் சீரமைப்புகளைத் தவிர மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்த அனைத்துப் பணிகளையும் செய்து முடித்தது தமிழக அரசு. அணையின் பலம் பாதுகாப்பாக உள்ளது என்பதற்கு இந்தியாவில் உள்ள முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவியல் ரீதியாக சோதனை செய்து அறிக்கையை அளித்துள்ளனர். மத்திய நீர்வள ஆணையத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த பொறியாளர்களும் அணையின் பலம் குறித்து விவாதித்த பின் அணியின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி வழங்கி உள்ளனர்.

நாட்டின் சிறந்த நீரியல் பொறியாளர்கள் 6பேர் அடங்கிய குழுவை மத்திய நீர்வள ஆணைய உறுப்பினர் டாக்டர் பி.கே. மிட்டல் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழுவில் இடம்பெற்ற கேரள அரசின் பிரதிநிதி தவிர அனைவரும் அணையின் வலிமைக்கு சான்றளித்து 142 அடி நீரைத் தேக்கலாமென அறிக்கை தந்தார்கள். ஆனால், கேரள அரசு நீர்மட்டத்தை உயர்த்த அடாவடித்தனமாக மறுத்து வருகிறது.

தமிழகம் அணையின் மீதுள்ள பல உரிமைகளை இழந்துள்ளது. மீன்பிடிக்கவும் படகு விடவும், சாலைகள், பாதுகாப்பு உட்பட அனைத்தையும் இழந்துள்ளது. இப்போது அணையில் நீர்த்தேக்கும் உரிமையையும் கேரளா அடாவடித்தனமாக மறுக்கிறது. பெரியார் அணை சம்பந்தமாக 'இல்லாத' ஒரு பிரச்சனையை எழுப்பி இவ்வளவு பிடிவாதம் செய்ய காரணம் என்ன?

அடாவடித்தனத்தின் உள்நோக்கம்!

முக்கியக் காரணம் இடுக்கி அணையின் 800 வாட் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இதற்கு பெரியார் நீர் தேவை. ஆகையால் பெரியார் அணையில் 136 அடிக்கு மேல் நீர் தேக்கினால் மின் உற்பத்தி பாதிக்கும்.

ஆனால், 1886 ஆம் ஆண்டு குத்தகை ஒப்பந்தப்படி அணையும், 152 அடி நீர்த்தேக்கும் உரிமையும் தமிழகத்துக்கு சொந்தமாக இருக்க இடுக்கி அணைக்கு நீர் தேவை என்பதை நேர்மையான முறையில் கூறி, தனது நோக்கத்தை நிறைவேற்ற முடியாது என்பதால், அணை உடையும் ஆபத்து என்ற பீதியைக் கிளப்பி 136 அடி நீர்மட்டத்தை நிரந்தரமாக்க முயற்சிக்கிறது கேரள அரசு. எங்கே சென்றாலும் நாம் தோற்றுப்போவோம் என்று தெரிந்து தான் சட்டப்படியான தீர்வுகளுக்கோ அல்லது அறிவியல் முறையிலான தீர்வுகளுக்கோ ஒத்து வராமல் கேரள அரசு பிரச்சனைகளை இழுத்துக்கொண்டே இருக்கிறது.

இப்பொது, புதிதாக அணை கட்டும் வாதத்தை வைத்து அங்கே புதிய அணையை புவியியல் அமைப்பின்படியும் கட்டுமான பொறியியலின் படியும் 140 அடிக்கு மேல் கட்ட இயலாது. 136 அடிக்கு மேல் நீரையும் தேக்கமுடியாது. ஆக மொத்தம் கேரள அரசின் நோக்கம் நிறைவேறும். புதிய அணை, புதிய ஒப்பந்தம் என்று கூறுவதன் நோக்கம் அணையையும் தமிழக உரிமையையும் களவாடுவதுதான்.

மத்திய அரசு மற்றும் நீதிமன்றத்தின் கயவாளித்தனம்!

உச்சநீதிமன்றம் 142 அடி நீரைத் தேக்க உத்தரவிட்டது. நீதிமன்றத் தீர்ப்பை மீளாய்வு செய்யக்கோரி தாக்கல் தாக்கல் செய்யப்பட்ட கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பையும் உறுதி செய்து தீர்ப்பையும் உறுதி செய்தது நீதிமன்றம். தனது தீர்ப்பை அமுல்படுத்தாமல் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையிலான 5 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவிடம் ஒப்படைத்து பிரச்சனையை கேரள அரசு விரும்பியபடி துவங்கிய இடத்திற்கே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

மத்திய அரசு, உச்சநீதிமன்றத் தீர்ப்பை, வல்லுநர் குழுவின் முடிவுகளை - எதையும் ஏற்றுக்கொள்ளாமல் அடாவடி செய்யும் கேரளத்தை கண்டித்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்கவேண்டும். அணையை மத்திய நீர்வலத்துறையின் கட்டுப்பாட்டில் எடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு புதிய அணை கட்டுவதற்கான இடத்தை ஆய்வு செய்ய கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி கேரளத்தின் அடாவடித்தனத்திற்கு துணை போகிறது. நம்மை மீண்டும் மீண்டும் பேச்சு வார்த்தை, ஆய்வுகுழு என்று 30 ஆண்டு காலமாக செக்கு மாட்டைப் போல சுற்றிவரச் செய்கிறது.

காங்கிரசு, பி.ஜே.பி. போலிக்கம்யூனிஸ்டுகளின் பித்தலாட்டம்!

தேசிய ஒருமைப்பாடு பேசும் அகில இந்திய கட்சிகளான காங்கிரசு, பி.ஜே.பி., போலிக் கம்யூனிஸ்டு கட்சிகள் ஓட்டுக்காக தேசிய இனவெறியைத் தூண்டிவிட்டு குளிர்காய்ந்து கொண்டிருக்கிறது. கேரள மக்களுக்காக தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்து அனுப்பு உணவு தானியங்கள் -காய்கறிகள் முதலானவற்றுக்கு தேவையான நீரின் அளவு 511 டி.எம்.சி ஆகும். அந்த அளவிற்கான நீரையாவது தமிழகத்திர்கு தரவேண்டும் என்ற நியாய உணர்வு கூட அக்கட்சிகளிடம் இல்லை.

வல்லுநர்கள் ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்ற போதும் அணையில் நீர்க்கசிவு உள்லது என திருத்தச் சொல்லி பயபீதி ஊட்டியும் குறுகிய தேசிய வெறியைக் கிளப்பிவிட்டு புதிய அணை கட்டும் திட்ட்டத்தை செயல்படுத்தி இடுக்கி அணைக்கு நீரைக் கொண்டு செல்ல கேரளாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் செயல்படுகிறது. இதன் மூலம் அணையை தனது பொறுப்பில் வைத்து கொண்டு தமிழகத்தின் 5 தென்மாவட்டங்களையும் பாலைவனமாக்கத் துடிக்கின்றது.

இவ்வளவுக்கு பின்னரும் இரு மாநில அரசுகளும் இணக்கமாக பேசித் தீர்க்கவேண்டும் என அக்கட்சிகளின் மையத் தலைமை உபதேசம் செய்கிறது. தமிழகத்தின் நியாய உரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து, தேசியக் கட்சிகளின் தமிழ் மாநில தலைமை எந்த போராட்டத்தையும் நடத்தியதில்லை. அக்கட்சிகளின் கேரள மாநில தலைமையின் அடாவடித்தனத்தைக் கண்டித்து, அகில இந்திய தலைமையிடம் வாதிட்டதும் இல்லை. இப்பித்தலாட்டப் பேர்வழிகளின் துரோகத்தை அம்பலப்படுத்தி இவர்களை தமிழகத்தை விட்டு விரட்டியடிக்காமல் பெரியாறு நீரில் தமிழகத்தின் நியாய உரிமைகளை நாம் பெறமுடியாது.

நமது பெரியாறு உரிமையைப் பெற வழி!

நமது நியாய உரிமைகளை மறுக்கின்ற கேரள மாநிலத்திற்கு எதிரான பொருளாதார முற்றுகைதான் உடனடி பணி.

பரம்பிக்குளம் - ஆழியாறு - மண்ணாறு போன்ற ஆறுகள் வழியே கேரளத்திற்கு செல்லும் தண்ணீரை மறுப்பது, சபரிமலை மற்றும் கேரளத்திற்குச் செல்லும் சாலை, இரயில் போக்குவரத்தை மறிப்பது போன்ற நடவடிக்கைகளை தமிழக மக்கள் மேற்கொள்ளவேண்டும்.

கேரளத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீர் எவ்வளௌ முக்கியமோ, அதைப்போல தமிழகத்திலிருந்து கேரளம் அடையும் பொருளாதார உதவியும் முக்கியம் என்பதை அம்மாநில மக்களுக்கு உணர்த்தவேண்டும். இது இனவெறி ஊட்டும் செயல் அல்ல. மாறாக, தமிழகத்திற்கு நியாய உரிமையை மறுக்கும் இனவெறி அடாவடித்தனத்திற்கு இப்படித்தான் பாடம் புகட்டமுடியும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஒரு மாநில அரசு மறுக்கும் பொழுது மைய அரசு அம்மாநில அரசின் மீது அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து தீர்ப்பை அமுலபடுத்தவேண்டும். இதை மைய அரசு செய்யாத போது, மைய அரசின் அனைத்து அதிகாரங்களையும் ஏற்க மறுப்பதற்கு தமிழகத்திற்கு எல்லாவித நியாயமும் உரிமையும் உண்டு. ஆகவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்த வக்கற்ற மத்திய அரசின் எந்தவொரு அதிகாரத்தையும் நாம் ஏற்கக்கூடாது. அனைத்து பகுதிகளிலும் மத்திய அரசின் அலுவலகங்களையும், நீதிமன்றங்களை இழுத்து மூடவும் மத்திய அரசுக்கான் வரிகளைச் செலுத்த மறுப்பதன் மூலமாகத்தான் நம்து பெரியாறு அணையைப் பாதுகாக்கவும் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும் முடியும்.

முல்லை பெரியாறு அணையைப் பாதுகாப்போம்!
தமிழக உரிமையை நிலைநாட்டுவோம்!

* பழைய அணையை இடித்துவிட்டு
புதிய அணையைக் கட்டத்துடிக்கும்
கேரள அரசின் சதியை முறியடிப்போம்!

* கேரள அரசின் அடாவடித்தனத்திற்கு
துணைநிற்கும் மத்திய அரசை எதிர்த்துப்
போராடுவோம்!

* இரட்டைவேடம் போடும்
தேசியக்கட்சிகளை தோலுரிப்போம்!

*தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட
ஓரணியில் திரள்வோம்!

தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம்


இவண் :

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

December 28, 2011

புயல் ஒன்று பூக்கோலமிட்டது!


இரவு செய்திகளில்
'தானே'
காற்று பலமாய் வீசி
வேரோடு மரங்களை சாய்க்கும்!
அறுவை இயந்திரங்கள்
தயாராயிருக்கின்றன!
மரங்களின் கீழ் ஒதுங்காதீர்கள்!!
என எச்சரித்தார்கள்.

'தானே'
விடிய விடிய மழை பெய்து
பாதைகளை தடை செய்யும்!
நீரை உறிஞ்ச‌
ஜெனரேட்டர்கள் தயாராய் இருக்கின்றன!
என நம்பிக்கை ஊட்டினார்கள்.

கண்ணில் கவலைகளுடன்
உறங்கிப்போனேன்!

விடிகாலையில் பார்த்தால்
'தானே'
அழகாய் வாசல் தெளித்து
வாசல் மரத்தினை மெல்ல அசைத்து
பூக்களால் கோலமிட்டிருக்கிறது!

நன்றி 'தானே'!

December 27, 2011

வேண்டாம், அணு மின்சாரம்!


கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட மக்கள் நடத்திவரும் போராட்டத்தைநாம் செய்திகளில் பார்த்துவருகிறோம். இந்த போராட்டம் சில மாத காலங்களாக நடந்துவருகிறது. இவ்வளவு மக்கள் திரண்டு வந்து இவ்வளவு நாட்களாக ஒரு விஷயத்திற்காக போராடுவதன் அவசியம் என்ன?

அணுமின் நிலையத்தில் அப்படி என்ன தான் நடந்து வருகிறது? மின்சார உற்பத்தி தான்.

பொதுவாக சைக்கிளில் பொருத்தப்பட்டிருக்கும் டைனமோ போன்ற ஒரு பெரிய ஜெனரேட்டரை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. சைக்கிளில் நாம் பெடலை அழுத்தி, சக்கரத்தை சுற்றவைத்து, அதன் மூலம் டைனமோவை சுற்ற வைத்து மின்சாரத்தை பெறுகிறோம். மின் நிலையத்தில் இந்த வேலையை ஒரு அணையிலிருந்து பாய்ந்து வரும் தண்ணீரை கொண்டோ, நீராவியை கொண்டோ செய்கிறார்கள். நெய்வேலி மின் நிலையத்தில் நிலக்கரியை எரித்து நீரை ஆவியாக்கி அதன் மூலம் ஜெனரேட்டை இயக்கி மின்சாரம் தயாரிக்கிறார்கள். அணுமின்நிலையத்திலோ அணுவை பிளக்கும் போது உற்பத்தியாகும் வெப்பத்தைக் கொண்டு நீரை ஆவியாக்கி மின்சாரம் தயாரிக்கிறார்கள்.

அணுமின் நிலையத்தினால் என்ன நன்மைகள்?

அணுவை பிளக்கும் போது உண்டாகும் வெப்பமானது மிக மிக அதிகம். ஆகையால், சிறு அளவில் எரிபொருளைக்கொண்டு அதிக மின்சாரத்தை தயாரிக்கலாம். மேலும், டீசல், நிலக்கரி போன்ற எந்த பொருளும் எரிக்கப்படுவதில்லை. அணுமின் நிலையங்கள் மூலம் கார்பன் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் காற்றில் கலப்பதில்லை.

சரி, பிறகு ஏன் மக்கள் இதை எதிர்க்கிறார்கள்?

கார்பன் டை ஆக்ஸைடை காற்றில் கலக்காவிட்டாலும், அணுமின் நிலையத்தின் சுற்றுப்புறத்தில் அணுக்கதிர் வீச்சு இருக்க வாய்ப்பிருக்கிறது. இதைப்பற்றியெல்லாம் பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை தான். ஆனால், மார்ச் மாதத்தில் ஜப்பானை தாக்கிய சுனாமி பலருடைய கண்களை திறந்துவிட்டது. சுனாமி அலை ஜப்பானின் புகோஷிமா நகரத்தின் கரையோரத்தில் இருக்கும் அணுமின் நிலையத்தை தாக்கி செயலிழக்க செய்தது. விபத்து நேரங்களில் அணுவை பிளக்கும் இயந்திரம் (நியுக்ளியர் ரியாக்டர்) ஆட்டோ மேடிக்காக நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால், உள்ளிருக்கும் எரிபொருளின் வெப்பத்தை குறைக்க தண்ணீரை உள்ளே செலுத்தும் மோட்டாரும் பழுதடைந்துவிட்டதால், எரிபொருள் உருகி, அபாயகரமான கதிர்வீச்சு சுற்றுப்புறத்தில் கலக்க ஆரம்பித்துவிட்டது. சுற்றுவட்டாரத்தில் இருந்த சுமார் ஒரு லட்சம் வெளியேற்றப்பட்டார்கள். மக்கள் இனி நீண்ட காலத்திற்கு யாரும் அங்கே வசிக்கமுடியாது. அந்தக் கதிர்வீச்சினால், மக்களுக்கு ஏற்பட்டு உள்ள பாதிப்பு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அணுக்கதிர் தாக்கினால் பலவிதமான புற்று நோய்கள் மற்றும் தோல் வியாதிகள் வரும். இரண்டாம் உலகப்போரில் ஜப்பானில் அமெரிக்காவால் போடப்பட்ட அணுகுண்டு லட்சகணக்கானவர்களை உடனடியாக கொன்று குவித்தது. அன்றோடு முடிந்துவிடவில்லை. கதிர்வீச்சினால் பல தலைமுறைகள் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அணுமின் நிலையத்தில் விபத்து நேர்ந்தால் நம் நிலைமை என்ன ஆகும் என்று மக்கள் கவலைப்படுவது சரியே. போபாலில் 1984ல் நடந்த விபத்தில் கசிந்த விஷவாயு பலருடைய உயிரை குடித்துள்ளது. இவ்வளவு காலங்களுக்குப் பின்னும் அந்த பாக்டரியின் சிதைந்த பகுதிகள் அப்புறப்படுத்தப்படவில்லை. அணுமின் நிலைய விபத்து இதைவிட பல மடங்கு நாசத்தை ஏற்படுத்தும்.

இதெல்லாம் அரசுக்கு தெரியாதா? இருந்தும் ஏன் அணுமின் நிலையத்தை கட்டிக்கொண்டிருக்கிறார்கள்? என நீங்கள் கேட்கலாம். பெருகிவரும் மக்கள் தொகைக்கு தேவையான மின் உற்பத்தி செய்ய அணுமின் நிலையங்களே சரியான வழி என்று அரசு தரப்பில் வாதாடப்பட்டு வருகிறது. உலக அளவிலான மின்சார உபயோகத்தில் வெறும் 13 சதவிகிதமே அணுமின்சாரம். அத்துடன் அணுமின் நிலையத்தை கட்டி முடித்து அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி ஆவதற்ற்கு குறைந்த பட்சம் 10 ஆண்டுகளாவது ஆகும். அதற்குள் பல பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டியிருக்கும். இருப்பினும் பல நாட்டின் அரசுகள் அணுமின் நிலையங்களை ஏன் ஆதரிக்கின்றன?

அணு ஆயுதம் செய்வதற்கு தான்!

ஆம். அணுமின் நிலையத்தில் உபயோகப்படும் யுரேனியம் வேதியல் மாற்றத்திற்கு பின் ப்ளுடோனியமாக மாறும். ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தை செய்தும் ஒரு அணுமின் நிலையம் வருடத்திற்கு 150 - 200 கிலோ ப்ளுடோனியம் தயாரித்துவிடும். இதைக் கொண்டு எளிதாக ஜப்பானின் நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டு போல் 25 தயாரித்துவிடலாம். ஒரு அணுமின் நிலையத்தின் ஒரு வருட தயாரிப்பே இவ்வளவு என்றால், உலகில் 439 அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதிலிருந்து கிடைக்கும் ப்ளுடோனியத்தை கொண்டு எவ்வளவு குண்டுகளை தயாரிக்கலாம். நினைக்கவே பயமாக இருக்கிறது.

பிறகென்ன, பல அரசுகளின் முழு ஆதரவும், அணுமின் நிலையங்களுக்கு கிடைக்காமலா இருக்கும்?

அணு ஆயுதத்தை நாம் எதிர்ப்போமேயானால், அணுமின் நிலையங்களையும் எதிர்த்தே ஆகவேண்டிய தேவையிருக்கிறது. ஆகையால், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் போராட்டத்திற்கு நம்மால் முடிந்த ஆதரவை தெரிவிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

****

கட்டுரையாளர் : பாலாஜி

நவம்பர் 2011 தோழமை இதழிலிருந்து....

December 21, 2011

அணு மின்சாரத்தால் பலன் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தான்!


நேற்று தமிழகம் தழுவிய அளவில் குறுந்தொழில், சிறுதொழில், குடிசைத்தொழில், பல்வேறு தொழிற்பேட்டைகள் கதவடைப்பு, ஆர்ப்பாட்டம் செய்தார்கள். மின்சாரத் தடையால், பெரிய பாதிப்பு வருவதால், கூடங்குளம் அணு உலையை துவங்க சொல்லி வலியுறுத்தினார்கள்.

பத்திரிக்கைக்கான செய்தியில், மத்திய அரசு பாதுகாப்பானது என சொல்லிவிட்டதால், உடனே உற்பத்தி துவங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்கள்.

தங்களுக்கு மின்சாரம் தேவையென்றால், தமிழக அரசிடமும், மத்திய அரசிடமும் மின்சாரம் கொடு என போராடலாம். அப்படி கோர உரிமை இருக்கிறது.

அல்லது

மின்சாரத்திற்கு எந்தவித திட்டமும் இல்லாமல், நீ வா! நீ வா! என பன்னாட்டு நிறுவனங்களை அழைத்த பொழுது, எதிர்த்திருக்கவேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு, கோவையில் இதே போல் சிறுதொழிற்சாலைகளுக்கான சங்கங்கள் போராடிய பொழுது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம், சலுகை விலையில் மின்சாரம் தருவது குறித்து வெள்ளை அறிக்கை கொடு என்றார்கள். அப்படியே இப்போதும் கேட்கலாம்.

அப்படி கேட்பதில் இவர்களுக்கு ஒரு தயக்கம் இருக்கிறது. காரணம் இங்கு நடக்கும் உற்பத்தி எல்லாம் ஏகாதிபத்திய சேவைக்கான உற்பத்தியாய் இருக்கும் பொழுது, அவர்கள் தான் இவர்களுக்கு வேலையே தருகிறார்கள். அப்படி இருக்கையில் தங்களுக்கு வாழ்வு தருபவர்களை (!) எப்படி கேள்வி கேட்க முடியும்? அணு மின்சாரம் கிடைத்த பிறகும், நமது முதலமைச்சர்கள் நீ வா! நீ வா! என மீண்டும் அழைப்பார்கள். இவர்கள் அப்பொழுதும் வேடிக்கைத்தான் பார்ப்பார்கள்.

ஆக ஒன்று புரிகிறது. உற்பத்தியில் லாபம் பெறுவது பன்னாட்டு நிறுவனங்கள்.
கூடங்குளம் அணு உலையால் பயன் பெறப்போவதும் பன்னாட்டு நிறுவனங்கள் தான்.

http://news.chennaionline.com/chennai/Small-scale-industries-shut-shops-demanding-commissioning-of-KKNPP/6282710a-a91e-4f89-8f3d-2ab02b260d9a.col

December 6, 2011

சாரு - எக்ஸைல் நாவல் வெளியீட்டுவிழா! - அனுபவம்!


நேற்று உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் பகல்முழுவதும் வீட்டில் புரண்டு கொண்டிருந்தேன். மாலை மண்டை காய்ந்து, எங்காவது போகலாம் என நினைத்து தேடுகையில், எக்சைல் வெளியிட்டு விழா செய்தி கண்ணில்பட்டது.

****

கோட்டு சூட்டெல்லாம் போட்டு, சாருவே நிகழ்ச்சி தொகுத்துக்கொண்டிருந்தார். எப்பொழுதும் அவர் இறுதியில் பேசுவதால், விழாவிற்கு வந்தவர்கள் தப்பித்துவிடுகிறார்களாம். அதனால், இந்த முறை தப்பிக்கவிடக்கூடாது என அவரே தொகுத்துவிடலாம் என முடிவு செய்ததாக சொன்னார். என்ன ஒரு பிரச்சனை! தொகுப்பாளினி அல்லது தொகுப்பாளர் ஏற்பாடு செய்திருந்தால் சாருவை புகழ்ந்திருப்பார்கள். இப்பொழுது, அவரை அவரே புகழ்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம். அதனால் என்ன! அது ஒரு சிரமமே இல்லை என்ற அளவில், சந்தோசமாய் தன்னைத்தானே புகழ்ந்து பேசிக்கொண்டேயிருந்தார். எனக்கு தெரிந்து, தமிழ்நாட்டில் தனனைத் தானே புகழ்ந்து கொள்வதில், முதல் இடத்தில் இருப்பவர் ஜெ. இரண்டாவது நபர் சாரு.

****
'அழகன்' படத்தில் கண்ணாடி போட்ட பையன், வீட்டின் நிலைமையை நொந்துகொண்டு, "நாம வேறு எங்காவது பிறந்திருக்கலாம்டா" என்பான் படம் முழுவதும்! சாருவும் எந்த விசயத்தை பேசினாலும், தமிழ்நாட்டில் பிறந்திருக்கவேண்டிய ஆளே இல்லை! என மனதிற்குள் அழுவது நன்றாக தெரிந்தது!

****

சாருவின் புத்தகம் 250யாம். அங்கேயே 200க்கு விற்பதாக சொன்னார்கள். வாங்குகிற ஐடியா சுத்தமாக இல்லை. சாருவின் மாஸ்டர் பீஸ் என பீத்திக்கொள்ளப்படும் ஜீரோ டிகிரி காசு போட்டு வாங்கினேன். எவ்வளவு சிரமப்பட்டு படித்தும், நகரவே இல்லை. நாமும் சில வருடங்களாக இலக்கியம் படிக்கிறோம். சாருவை நெருங்க முடியவில்லையே (!) என நொந்து, படிப்பதை நிறுத்திவிட்டேன். ஆகையால், எக்ஸைலை இலவசமாகவே தந்தாலும் படிக்கிற ஐடியா எனக்கில்லை.

****

கூட்டத்தில் எக்ஸைல், எக்ஸைல் என பலமுறை சொல்லக்கேட்டு, இடையிடையே செக்ஸ், செக்ஸ் என பலமுறை சொல்லக் கேட்டு, இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரு ரசவாதம் ஏற்பட்டு, நேற்றிரவு கனவில் ஷகீலா, ஷகீலா என எதிரொலித்துக்கொண்டிருந்தது. இதுவரை என் கனவில் ஷகீலா வந்ததே இல்லை. சாருவின் புண்ணியத்தில் ஷகீலா வந்துவிட்டார். சாரு எழுத்தின் ரகசியம் புரிந்தது.

****

நான் போனதே 6.30மணி. அரைமணி நேரம் சாரு சின்சியராக தொகுத்துகொண்டிருக்கும் வேளையில், எனக்கு முன்னாலேயே வந்திருந்து, நிகழ்ச்சியைக் பார்த்துக்கொண்டிருந்த பெரியவர் (சாரு போலவே, மொத்த முடியும் வெள்ளையாய் இருந்தது!) என்னிடம் கேட்காமல், அருகில் இருந்தவரிடம் இவர் தான் "ரைட்டரா!" என்றார். கேட்கப்பட்டவர் ஆச்சரியமாய் பார்த்து, சில நொடிகள் ஸ்தம்பித்து, "ஆமாம்" என்றார்.

****
உண்மையை சொல்லவேண்டுமென்றால், நான் வேறு ஒரு காட்சியை எதிர்பார்த்து போயிருந்தேன். சாரு ஒரு பெண்ணை சாட்டிங்கில் மிக கேவலமாக, பொறுக்கித்தனமாக நடந்த கொண்டது, ஆதாரபூர்வமாக பலரும் அறிந்த செய்தி. அந்த நிகழ்வுக்கு பிறகு, பொது மேடையில் இப்பொழுது தான் வருகிறார். ஆகையால், சில பெண்களோ அல்லது பெண்கள் அமைப்போ அல்லது சில சமூக அக்கறை கொண்ட மக்களோ வந்து, செய்த செயலுக்கு 'தகுந்த மரியாதை செலுத்துவார்கள்" என எதிர்பார்த்து போயிருந்தேன். குறைந்தபட்சம் சில செருப்புகளாவது பரிசாக தரப்படும்! என தமிழ்மக்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். ஏமாற்றிவிட்டார்கள். சாருவே சொல்வது போல, ஆயிரம் பேருக்குள் தான் வாசிக்கிறார்கள். அதைவிட முக்கிய விசயம். மக்கள் எந்த கேவலமான செயலையும், விரைவில் மறந்துவிடுகிறார்கள் என்பது!

சாருவுக்கு தன் புத்தகம் 10 லட்சம் விற்க வேண்டாம், 1 லட்சம் கூட விற்கவில்லையே என தீராக்கவலை. எனக்கு பொறுக்கித்தனத்தை கண்டித்து, மரியாதை தரவில்லையே என்ற கவலை. அவரவர்களுக்கு அவரவர் கவலை. அடுத்த மேடையிலாவது 'தகுந்த மரியாதையை' தருவார்கள் என்ற நம்பிக்கையில், சோகமாய் வீட்டிற்கு நடையை கட்டினேன். நம்பிக்கை தானே வாழ்க்கை!

****

December 1, 2011

மன்மோகனே ஒரு அந்திய முதலீடு தான்! - மதி கார்ட்டூன்!











மக்கள் எவ்வளவு தெரிவித்தாலும், கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்தாலும், தன் எஜமானர்களான ஏகாதிபத்திய அரசுகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும்ளுக்கு விசுவாசமாக கறாராக அமுல்படுத்துவதில், நமது பிரதமர் காரியகிறுக்கனாக இருக்கிறார்.

தினமணியில் இன்றைய மதியின் கார்ட்டூன் அருமை.

November 25, 2011

பதிவர்களின் திரை விமர்சனங்கள்!


எங்கெங்கோ தொலைவில் கிடக்கும் 'கனவு கன்னிகளின்' 'நல்ல' படங்களை சிரமப்பட்டு தேடி, வாசகர்களுக்கு தருவதில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். விமர்சனத்தில் அந்த அக்கறையை கொஞ்சம் காட்டலாம்.

திரைப்படம் பற்றி எப்படி எழுதினாலும், படிப்பதற்கு ஆள்கள் கிடைக்கிறார்கள் என அனுபவத்தில் அறிந்து கொள்கிறார்கள்.

பத்திரிக்கை உலகில் 'கவர் பண்பாடு" உண்டு. பதிவர்கள் காசு வாங்காமலே, வாங்கியது போல எழுதுகிறார்கள்.

விமர்சனம் என்கிறார்கள். போகிற போக்கில் அசிரத்தையாக வேடிக்கைப் பார்த்தவனின் குறிப்புகளாகத்தான் பெரும்பாலும் இருக்கின்றன.

படத்தின் சாரம் எதைப்பற்றி விவாதிக்கிறது! என்ன விசயத்தை பார்வையாளின் மூளையில் பதிக்கிறது என கவலை கொள்ளாமல், படம் கல்லா கட்டுமா! என தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் போல மிகுந்த கவலையுடன் பேசுகிறார்கள்.

மழையில் நனைந்து, வெயிலில் வாடி, பணத்தையும் தொலைத்து, மூன்று மணி நேரம் தங்கள் அருமையான காலத்தையும் துறந்து படம் பார்க்கிறார்கள். ஆனால், பதிவை பத்து நிமிடத்தில் எழுதி, படிப்பவர்களின் தலையில் கட்டிவிடுகிறார்கள்.

யாராவது வாசகர்களின், ரசிகர்களின் மீது அக்கறை கொண்டு, படத்தைப் பற்றி ஆழ்ந்து நான்கு பக்கத்திற்கு எழுதினால், திட்டுகிறார்கள்; எதிர்மறையாக சிந்திக்கிறார்கள் என தங்களை 'நேர்மறையின்' ஆதரவாளர்களாக பறைசாற்றி கொள்கிறார்கள்.

வாசகர்கள் தங்கள் விமர்சனத்திற்காக காத்துக்கொண்டிருப்பார்கள் என பதட்டத்தில், பதிவர்கள் பல மோசமான படங்களில் சிக்கி கொள்கிறார்கள். அவர்களின் மீதான அக்கறை தான் இந்த பதிவு.

November 20, 2011

மன்னிப்பு கேட்கவேண்டும்!


பால், மின்சார கட்டணம், பேருந்து கட்டண உயர்வு குறித்து எழுதும் பொழுது,

"மக்களின் மீது சுமையை ஏற்றலாம். பாறாங்கல்லை வைத்தால், செத்துவிடுவார்கள்" என தினமணி வைத்தியநாதன் எழுதுகிறார்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுகிற உத்தரவு குறித்து, எழுதும் பொழுது,

"திருவள்ளுவர் சிலையை தூக்கிவிட்டு, அம்மாவின் சிலையை அங்கு வைப்பதாய் கார்ட்டூன் படம் போடுகிறது" ஆனந்தவிகடன்.

இராஜூவ் காந்தி வழக்கில், மூவர் தூக்கு குறித்து, நீதிமன்றத்தில் பதில் தாக்கல் "அரசுக்கு ஒன்றும் கருத்தில்லை. நீங்கள் தூக்கை நிறைவேற்றிக் கொள்ளலாம்" என கூறிய பொழுது, தமிழ் அமைப்புகள் எல்லாம் புலம்பி தீர்த்தார்கள்.

அம்மா திருந்திவிட்டார் என தேர்தல் சமயங்களில் மாய்ந்து, மாய்ந்து எழுதி தீர்த்த, மேடைகள் தோறும் பேசி திரிந்த எல்லோரும் "ஜெ. திருந்தவில்லை. இன்னும் மக்கள் விரோத தனம் கூடியிருக்கிறது" என ஒழுங்கு மரியாதையா மக்களிடையே பிரச்சாரம் செய்யவேண்டும் என நாம் அனைவரும் கோரவேண்டும்

November 16, 2011

கருத்தரங்கம் - மாருதி தொழிலாளர்களிடமிருந்து அனுபவம் கற்போம்!


மாருதி கார் தொழிலாளர்களிடம் பணிந்தது நிர்வாகம்!
பாடம் கற்போம்! முதலாளித்துவத்திற்கு சவக்குழி வெட்டுவோம்!

கருத்தரங்கம்

20.11.2011

ஞாயிறு காலை 10.00 மணி

சீனிவாசா திருமண மண்டபம்
கல்லறை பேருந்து நிலையம் அருகில்
பூந்தமல்லி
*************************************

நிகழ்ச்சி நிரல்

தலைமை:

தோழர்.சி.வெற்றிவேல் செழியன்
அமைப்புச் செயலாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு

சிறப்புரை:
மாருதி தொழிலாளர்களின் வெற்றி;
அனுபவம் கற்போம்!

தோழர் பா.விஜயகுமார்
பொருளாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு

வால்ஸ்ட்ரீட் முற்றுகை;
திணறும் முதலாளித்துவத் தலைமை பீடம்!

தோழர் சுப.தங்கராசு
பொதுச் செயலாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு

நன்றிரை:

தோழர் இரா.ஜெயராமன்
இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு
**************************************

தொடர்புக்கு:

தோழர் அ.முகுந்தன், 110,2 ஆம் தளம்
மாநகராட்சி வணிக வளாகம், 63, என்.எஸ்.கே சாலை
கோடம்பாக்கம், சென்னை -24. தொ.பே: 9444834519

அனைவரும் வருக! அனுபவம் பெறுக!

November 15, 2011

இன்றைய நிலவரம்! - கவிதை!


காலுக்குத் தொப்பியும்
தலைக்குச் செருப்பும் அணியுமாறு
இந்த நிமிடம் வரை உத்தரவு
எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.


கண்ணிருக்கும் இடத்தில் கண்ணும்
காதிருக்கும் இடத்தில் காதுமே
இருந்துவிட்டுப் போகட்டுமென்று
மாட்சிமை தங்கிய அரசு
குடிமக்களை இன்றும் அனுமதித்திருக்கிறது,
கருணையுடன்…..

தொடர்ந்தும் வாய் வழியாகவே
உண்பதைமாற்றுவது குறித்து
இன்றைய அமைச்சரவைக்
கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்படும்.

ஒரு மாறுதலுக்காகவும் காற்றை மிச்சப்படுத்தவும்
மூக்கின் ஒரு துவாரத்தை தூர்த்து மூடும் திட்டம்
நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது.

உலகிலேயே முதன் முறையாக
தண்டவாளத்தில் பேருந்து,
தார் ரோட்டில் ரயில்
துறைமுகத்தில் விமானம்,
விமான நிலையத்தில் கப்பல் என்று
அரசு எடுத்துவரும்
ஆக்கப்பூர்வ மாற்றங்களுக்கு ஆதரவளிக்குமாறு
குடிமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.


பிரசவ ஆஸ்பத்திரியை
சுடுகாட்டுக்கு மாற்றியுள்ள அரசு
நாட்டையே சுடுகாடாக மாற்றும்
திட்டம் படிப்படியாக நிறைவேறும்.

கோன் எவ்வாறோ குடிமக்களும்
அவ்வாறேயானபடியால்
அவர்களும்
எதையும் எப்போதும்
ஒரே இடத்தில்
நீடித்திருக்க விடமாட்டார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

****

நன்றி: ஆதவன் தீட்சண்யா

முதல் பதிவு: ஜூனியர் விகடன் 13/11/2011 இதழ்

November 10, 2011

உலகமயமாக்கப் பின்னணியில் பண்பாடும், வாசிப்பும்! - தொ. பரமசிவன்


நன்றி : சித்திரவீதிக்காரன்

முன்குறிப்பு: இரண்டு நாள்களுக்கு முன்பு, நல்லூர்முழக்கம் தளத்தில் இந்த கட்டுரையை படித்தேன். என் நண்பர்கள் சிலருக்கும் அனுப்பி வைத்தேன். மறுகாலனியாதிக்க தாக்குதலில் வாழ்கிறோம். தொ.பரமசிவம் அவர்களின் இந்த உரை பண்பாட்டு தளத்தில் உள்ள பாதிப்புகள் குறித்து அக்கறை கொள்கிறது. எனக்கு பிடித்த ஆளுமைகளில் தொ.ப.வும் ஒருவர். அனைவரும் நிச்சயம் வாசிக்கவேண்டிய பதிவு. படியுங்கள். நன்றி

*****

மதுரை மூன்றாவது புத்தகத் திருவிழாவில் “உலகமயமாக்கப் பின்னணியில் பண்பாடும், வாசிப்பும்” என்ற தலைப்பில் எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகளில் ஒருவரான தொ.பரமசிவன் அய்யா ஆற்றிய நீண்ட உரையை எனது அலைபேசியில் பதிந்து என் நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தேன். உலகமயமாக்கலுக்கு எதிரான அவரது உரையை எல்லோருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். தொ.பரமசிவன் அய்யாவின் உரையை தொகுத்ததில் எழுத்துப்பிழைகள், சொற்பிழைகள் அமைந்தால் என்னையே சேரும். மற்றபடி எல்லாப்புகழும் தொ.பரமசிவன் அய்யாவுக்கே! என்னால் அய்யாவிடம் தமிழ் கற்க முடியவில்லை என்ற ஏக்கத்தை நான் கேட்ட அவரது பல உரைகள் போக்கியது. எனவே, நானும் தொ.ப’வின் மாணவன்தான். தொ.ப’வின் அற்புதமான உரையை அனைவரும் வாசியுங்கள்!

பேசுகிற இடம் மதுரை. பேசப்படுகிற விசயம் புத்தகம். எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் எந்த ஊரில் அதிகமாக புத்தகங்கள் பிறந்தது என்றால் மதுரையில் தான் அதிக புத்தகங்கள் தோன்றியுள்ளன. ‘கலித்தொகை’ என்ற செவ்விலக்கியம் பாண்டியநாட்டு இலக்கியம் என்றே அழைக்கப்படுகிறது. ‘பரிபாடல்’ என்ற செவ்விலக்கியத்துக்கு பெயரே மதுரை இலக்கியம். அப்பேற்பட்ட ஊரிலே நின்று பேசுகிறேன் என்ற உணர்வு எனக்கு தன்னியல்பாகவே உண்டு. இந்த ஊரின் நீரும், நெருப்பும் கூட தமிழ்ச்சுவை அறியும் என்கிறது ஒரு நூல்.

“உலகமயமாக்கலில் பண்பாடும், வாசிப்பும்” என்ற தலைப்பு கொடுத்திருக்கிறார்கள். புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல. அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது. ஒரு செடியில் வேருக்கும் விழுதுக்கும் உள்ள தொடர்பு போன்றது புத்தகங்களுக்கும் வாசிப்பவனுக்கும் உள்ள தொடர்பு.

புத்தகங்களின் மீது சமூகம் நடந்து போகிறது. நடந்து போவது என்றால் எழுதியவனின் மனநிலையை நாம் உணர்ந்து கொள்வது. எனக்கு இங்கு வந்து பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. சில ஊர்களில் சந்தை என்று போட்டிருப்பார்கள். இங்கு புத்தகத் திருவிழா என்று போட்டிருக்கிறார்கள். “திருவிழா என்பது கொண்டாடப்பட வேண்டியது. அதே போல் புத்தகங்களும் கொண்டாடப்பட வேண்டியவை”.

உலகமயமாக்கல் என்ற சொல்லே எனக்குப் புரியவில்லை. உலகை எப்படி உலகமயமாக்குவது? மதுரையை எப்படி மதுரைமயமாக்குவது? மதுரையை வண்ணமயமாக்கவேண்டும், ஒளிமயமாக்கவேண்டும் என்று சொல்லுங்கள். புரிகிறது. ஆனால், உலகமயமாக்கம் என்ற சொல்லே நமக்கு புரியவில்லை. நம் ஆட்சியாளர்கள் நமக்கு அளித்த நன்கொடையிது. இவர்கள் ஏதோ சொல்ல வருகிறார்கள். அதில் ஒரு நுண் அரசியல் இருக்கிறது. நான் கட்சி அரசியலை சொல்லவில்லை.

உலகமயமாக்குவது என்றால் உலகையே சந்தையாக மாற்றுவது. உலகிலே சந்தை மட்டும் இருந்தால் போதுமா? இம்மதுரையிலே சந்தையும் இருக்கும், தமுக்கமும் இருக்கும், மீனாட்சிகோயிலும் இருக்கும், மனநோயாளிகளுக்கான மருத்துவமனையும் இருக்கும். சந்தையில் ஐந்து வயது சிறுவர், சிறுமிகளுக்கு இடம் இருக்க முடியுமா? அல்லது கம்பூன்றி நடக்கும் வயதானவர்களுக்கு இடம் இருக்குமா? வயதானவரை தெருவில் பார்த்தால் ஒதுங்கி நடப்போம். ஆனால் சந்தையில் “சந்தையில இடிக்கிறதெல்லாம் சகஜம்” என்று போய் விடுவார்கள். பாக்கெட்டில் பணமில்லாதவனுக்கு சந்தையில் இடமிருக்குமா? கன்னிப் பெண்களுக்கு அங்கு இடமிருக்குமா?

சந்தை என்பது வாங்குவதற்கான இடமே தவிர அங்கு மனித உறவுகள் மலராது. சிறைச்சாலைகளில் கூட மனித உறவுகள் மலரும். மருத்துவ மனைகளில் கூட மனித உறவுகள் மலரும். நான் ஒரு மாதம் மருத்துவ மனையில் இருந்தேன். பக்கத்து அறையில் இருந்தவர்களெல்லாம் நண்பர்கள் ஆகிவிட்டார்கள். ஆனால் சந்தையில் “அஞ்சால் விற்றால் லாபம் என்றால் அஞ்சால் விற்போம். நஞ்சை விற்றால் லாபம் என்றால் நஞ்சை விற்போம்”. இது சந்தையின் தன்மை.

உலகமயமாக்கலை இடதுசாரிகள் எதிர்க்கிறார்கள். அறிஞர்கள் எதிர்க்கிறார்கள். என்னைப் போன்ற பண்பாட்டு ஆய்வாளர்களும் எதிர்க்கிறோம். ஏனென்றால் இது ஒரு பண்பாட்டு படையெடுப்பு. நமது பண்பாட்டை குலைப்பதற்கான முயற்சி. இதை பண்பாட்டுத் தாக்குதல் என்றும் கூறலாம்.

பண்பாடு என்பது பொருள் உற்பத்தியில் தொடங்குகிறது. ஒரு குழந்தை இலையில் தனக்கான பீப்பியை செய்து கொள்கிறது. தனக்கான வண்டியை செய்து கொள்கிறது. தனக்கான காகிதப்பையை செய்து கொள்கிறது. இப்படி தனக்காக செய்து கொள்கிறபோதுதான் கலாச்சாரம் பிறக்கிறது. பொருள் உற்பத்தியில்தான் உறவுகள் மலரும். பொருள் உற்பத்தி செய்கிற போது மனிதன் கலாசாரம் உடையவன் ஆகிறான். அது வாடுகிற போது கலாச்சாரமும் செத்து போய் விடுகிறது. உலகமயமாக்கம் என்ற பெயரில் இவர்கள் உலகையே சந்தையாக்க முயல்கிறார்கள். சந்தையில் எதைவிற்றால் லாபம் கிடைக்கும் என்பதைத்தான் பார்ப்பார்கள். அங்கு மனிதர்களின் உணர்வுகளுக்கு இடமிருக்காது.

மரபு வழியான அறிவுச்செல்வத்தைத் (இதைத்தான் மார்க்ஸ் ‘’தொகுக்கப்படாத விஞ்ஞானம்’’ என்றார்) திட்டமிட்டுக் கொள்ளையடிப்பது உலகமயமாக்கம்.. நம்முடைய பாரம்பரிய மருத்துவ அறிவுகளை கொள்ளையடிப்பது உலகமயமாக்கம். கால்ல புண்ணு வந்தா மஞ்சளையும் வெங்காயத்தையும் அரைச்சுப் போடுவோம். இனி எதாவது ப்ரெஞ்ச் கம்பெனியோ, கனடா கம்பெனியோ மஞ்சள், வெங்காயத்தையெல்லாம் நான்தான் கண்டுபிடிச்சேன்னு காப்பிரைட் வாங்கி வச்சுகிருவான். அப்புறம் வெங்காயம், மஞ்சளப் பயன்படுத்த நாம அவன்ட்ட அனுமதி கேட்கணும். பணம் கட்டணும். இப்படி மரபுரீதியான அறிவுச் செல்வத்தை திட்டமிட்டே கொள்ளையடிக்கிறார்கள். அறிவு என்பது 19ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து தொழிற்புரட்சியில் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. நமக்கு அறிவு பற்றிய சரியான பார்வை இல்லை.

பி.எஸ்.சி ரசாயனம் படிக்கும் மாணவனைப் பார்த்து ரசாயனம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது எனக் கேட்டேன். அவனுக்கு தெரியவில்லை. சொல்லிக் கொடுத்தால்தானே அவன் சொல்வான். மனிதன் வேட்டையாடியபோது உணவு மீதம் ஆகி டிஹைட்ரேட் ஆகி நாளை பயன்படுத்தலாம் என்ற போதே ரசாயனம் தொடங்கிவிட்டது. அதில் உப்பைச் சேர்க்கும் போது இன்னும் கொஞ்சநாள் பயன்படுத்தலாம் என்ற போது ரசாயணம் வளரத்தொடங்கியது.

மனிதகுல வரலாறு தெரியாத கல்வி முறையில் வளரும் இன்றைய தலைமுறையில் பண்பாடு பற்றி பேசுவதெல்லாம் பைத்தியகாரத்தனம். உலகமயமாக்கம், உலகமயமாக்கம் என்று சொல்லிச்சொல்லியே நம்மை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.

“ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்று கேட்கும் போது மகிழ்ச்சியாகத் தான் இருக்கும். அதை ஒரு தலைவர் சொன்ன போது ஊரே திரண்டது. “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்று சொன்னால் சைவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இது திருமூலரின் திருமந்திரம். “ஒன்றே குலம், ஒருவனே தேவன் – அவன்தான் இராமன்” என்னும் போது தான் பிரச்சனை வெடிக்கிறது.

எல்லா பிரம்மாண்டங்களும் மனித விரோதமானவை. ஜனங்களின் வாழ்வுக்கு பிரமாண்டம் தேவையில்லை. பிரமாண்டங்களுக்கு எதிரான கலாசாரத்தை நாம் உருவாக்க வேண்டும். 60 மாடி, 70 மாடின்னு கட்டடம் கட்ற போது தானே பின்லேடன் வர்றான். உலகின் அறிவுச் செல்வங்களை கொள்ளையடிக்கவே உலகமயமாக்கம் பயன்படுகிறது. ஆப்ரிக்காவில் உள்ள காடுகளிலும், கடற்கரையோரங்களிலும் இருந்த தாதுக்களைக் கண்டுபிடித்து கொள்ளையடிக்கிறாங்களே அது தான் இன்பஃர்மேசன். இது தான் இன்பஃர்மேசன் டெக்னாலஜி. எதற்கும் பயன்படாத தேரிக்காடு. அங்கே கல்லுமுள்ளும் ஓணானும் குடிகொண்டு இருக்கும். அங்கே தோரியம் இருக்குன்னு சொல்றானே அது இன்பஃர்மேசன். அங்கே பெரிய கம்பெனிக்காரன் வர்றானே அது உலகமயமாக்கம்.

எல்லா இடத்திலும் கையவச்சுட்டு இப்ப சமையலுக்குள்ளயே வந்து கையவச்சுட்டாங்க. பீட்ஸான்னு ஒரு இத இப்ப திங்க கொடுக்கிறாங்க. அதுல என்னா இருக்குன்னு நமக்கு தெரியுமா? நம்ம வீட்ல செய்த பண்டத்துல என்னா இருக்குன்னு நமக்கு தெரியும். “உணவெனப்படுவது நிலத்தொடு நீரே”. நம்ம உணவுச் செல்வங்களை இன்னொருத்தன் கொள்ளையடிக்கிறானே அது உலகமயமாக்கம். நிலத்தையும் உணவையும் கூட காக்க முடியாத சமுதாயம் வாழ்வதற்கு லாயக்கில்லாதது. திருமலைநாயக்கர் மகாலும், மீனாட்சியம்மன் கோயிலும் மட்டும் நமது முன்னோர்கள் சேர்த்துவைத்த சொத்து அல்ல. தூய நீரும், காற்றும் நமது சொத்தில்லையா? எதை வேண்டுமானாலும் விற்கலாம் என்பது தான் உலகமயமாக்கம். விற்க முடியாத பொருள் மனிதனிடம் இருக்கிறது.

நாம் இங்கு திருவள்ளுவரையே விற்றுக் கொண்டிருக்கிறோம். திருவள்ளுவர் “எற்றிற்கு உரியர் கயவர்?’’ என்கிறார். திருக்குறளுக்கு உயிர் இருக்கிறது. அதை எழுதியவனுக்கு ஆன்மா இருக்கிறது. அதனால் தான் எழுதியவனுக்குச் சாவு இல்லை என்கிறோம். வடநாட்டில் வியாசர் மகாபாரதத்தைச் சொல்ல அதை விநாயகர் தன் கொம்பை உடைத்து எழுதியதாக மரபு இருக்கிறது. ஆனால், இதைவிடச் சீரிய மரபு தென்னாட்டில் இருக்கிறது. விநாயகருடைய அப்பா சிவனே திருவாசகம் எழுதியதாக கூறப்படுகிறது. திருவாசகம் காணாமல் போய் அனைவரும் தேடுகிறார்கள். காணவில்லை. ஒரு புத்தகத்தை காணாமல் ஆக்குவது தேசத்துரோகம். அதை தொலைத்தவர்களுக்குத்தான் தெரியும். திருவாசகம் இறுதியில் சிதம்பரத்தில் இருந்தது. சிவபெருமான் கையிலே இருந்தது. சிவபெருமானிடம் கேட்டால் இது என் பெர்சனல் காப்பி என்கிறார். என்னவென்றால் அந்தப் புத்தகத்தில் திருவாதவூர் மாணிக்கவாசகன் சொல்ல உடையார் திருச்சிற்றம்பலமுடையார் எழுத்து என்று அதில் இருக்கிறது. இதை ஏன் சிவன் வைத்திருந்தார் எனப் பின்னால் வந்த அறிவியலாளர் தத்துவப் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை சொல்கிறார்: “உலகைப் படைத்து காத்து அழித்து பிறகு மீண்டும் உலகை படைக்கும் முன் உள்ள ஒரு லன்ச் பிரேக்கில் படிக்க ஒரு புத்தகம் வேண்டும் அல்லவா? அதற்குத்தான் போரடிக்காமல் இருக்க சிவன் திருவாசகத்தை வைத்திருந்தார்’’ என கூறுகிறார் தன் மனோன்மணியத்தில். இவ்வாறு கடவுளே ஸ்க்ரைப்பாக இருந்திருக்கிறார் நம் நாட்டில்.

ஒன்றைத் திட்டமிட்டே பழசாக்குவது உலகமயமாக்கம். இந்த வருடம் ஒரு இருசக்கர வாகனம் வாங்கினால் அடுத்த வருடம் ஒரு சின்ன மாற்றத்துடன் புதிதாக ஒன்று வரும். இப்படித் திட்டமிட்டுப் பழசாக்கி அடுத்த பொருளை விற்பதுதான் உலகமயமாக்கம். எல்லாவற்றையும் சந்தைப்படுத்திக்கொண்டிருக்கும்போது நாம் இந்த ஏமாளிகளிடம் பண்பாடு பற்றி பேசுவது எல்லாம் முட்டாள்தனம். பண்பாடு பற்றி பேசுவதே நாம் ஏமாளித்தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காகத்தான்.

உலகமயமாக்கம் எழுத்துலகத்தில் என்ன மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறது எனப் பார்ப்போம். சென்னை புத்தகத் திருவிழாவில் 10 லட்சம் புத்தகம் விற்றிருக்கிறது என சொன்னார்கள். மகிழ்ச்சி. மனிதன் வாசிக்க தொடங்கிவிட்டான். வாசிக்கும் மனிதன்தான் யோசிக்கிறான். சமூகம் மாற்றம் அடையத் தொடங்கியதா எனப்பார்த்தால் மாற்றம் ஏதுமில்லை. ஏனென்றால் பாதிக்குப் பாதி வாஸ்து புத்தகங்கள்தான் விற்றிருக்கிறது. இங்கு இப்பொழுது விற்கும் புத்தகங்களைவிட பல மடங்கு குருபெயர்ச்சி பலன் புத்தகம் வித்திருக்கும். குருவே வருசம் வருசம் இடம் பெயர்றார்ன்னா நீ உன் சிந்தனையில் இடம் பெயரக்கூடாதா?

மாறுதல் ஒன்றே மாறாதது. 15 வருசமா அப்படியே இருக்கீங்கன்னு சொன்னா அது உண்மையில்ல. முடி லேசா நரைச்சுருக்கும். வழுக்கை கூடியிருக்கணும். அப்படியே எதுவும் இருக்க முடியாது. மாற்றங்களை உருவாக்குவது புத்தகங்கள். மார்க்சிம் கார்க்கியுடைய தாய் காவியம் போன்ற புத்தகங்கள் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியவை. அறிந்தும் அறியாமலும் படித்த புத்தகங்கள் தான் நமக்குள் ஒரு மாற்றம் ஏற்பட உதவுகிறது. அதென்ன அறியாமல் படித்த புத்தகம்? கொல்லைப்பக்கம் போட்ட தக்காளி திடீர்ன்னு செடியா முளைப்பது போல. நாம் தெரியாமல் இப்படி வாசித்த புத்தகங்கள் தான் அறியாமல் படித்த புத்தகங்கள்.

மனித மனத்திலும் விழும் விதைகள் முளைக்கத் தவறுவதே இல்லை. நான் எங்க ஊர் மாவட்ட நூலகத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும்போது ஒரு புத்தகம் எடுத்தேன். அது சரித்திரத்தை மாற்றிய “அங்கிள் டாம்” புத்தகம் என்று தெரியாமல் அதன் குழந்தைப் பதிப்பின் தலைப்பைப் பார்த்து எடுத்தேன் – தாமு மாமாவின் கதை. இந்த புத்தகத்தை இப்பொழுது காணவே முடியவில்லை. நாம் அடிமையாகவே இருக்க சம்மதித்துவிட்டோம் என்பதைத்தான் இது காட்டுகிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவரின் வரியைப் படிக்கும் போது அங்கிள் டாம் புத்தகம் ஞாபகம் வரும். மேல்மண் கீழ்மண் ஆவதும், கீழ்மண் மேல்மண் ஆவதும் வரலாறு. புரட்சியை ஒரு புத்தகம் எப்பொழுதும் ஏற்படுத்திக் கொண்டுதானிருக்கிறது.

இப்பொழுது சிலர் தினமும் ஒரு புத்தகம் எழுதுகிறான். என்ன செய்யிறது? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என ஒரே வரியில் அப்போதிருந்த சாதிக்கோட்பாடுகளை உடைத்த வள்ளுவரிடம் இருந்த கலகக்குரலை விடவா இனி எழுத முடியும்? எழுத்துல எதிர்ப்பு இருக்கலாம். கலகக்குரலாய் எழுதலாம். ஆனால், வெறுப்பு இருக்க கூடாது. இப்ப எழுதும் சிலரின் எழுத்த வாசிச்சா வெறுப்புதான் முழுமையாய் வெளிப்படும். கோவம் வரலைன்னா அவன் மனுசனே இல்ல. கடவுள் பற்றி இருக்காரா, இல்லையான்னு எழுதலாம். பேசலாம். எதிர்ப்பை வெளிப்படுத்துவது தவறல்ல. வெறுப்பு என்பது இரு காரணத்தினால் வெளிப்படுவது. ஒன்று இயலாமை; மற்றொன்று பொறாமை. இதற்கு மருந்தே கிடையாது.

எதை வேண்டுமானாலும் எழுதலாம், யாரைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற தைரியத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது? உலகமயமாக்கம் எல்லாவற்றையும் சந்தைப்படுத்த முயல்கிறது. என்னிடம் வந்து ஒரு இளங்கவிஞர் மழை பற்றிய கவிதைத் தொகுப்புக்குத் தலைப்பு கேட்டார். “தீங்கின்றி நாடெல்லாம்” என்று சொன்னேன். மழையைப் பார்த்தால் ஒவ்வொரு சமயமும் ஒரு வித்தியாசம் காட்டும். ஒரிசா வெள்ளத்தை பார்த்தால் புரியும் “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி” என்ற வரி. அதைப்போலத் தண்ணீர் இல்லாம தவிக்கிறப்ப தெரியும் “நீரின்றி அமையாது” என்ற வரி.

வாசிப்பது மூலம் யோசிக்கிறான். யோசிப்பதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்துகிறான். உலகமயமாக்கலில் எல்லாவற்றையும் சந்தைப்படுத்துகிறோம். திருக்குறளை மட்டுமல்ல. திருவள்ளுவரையே சந்தைப்படுத்துகிறோம். இன்று எல்லாவற்றையும் விற்க தொடங்கிவிட்டோம். நுகர்வுக் கலாசாரம் ரொம்பப் பெருகிவிட்டது. முன்பெல்லாம் வீட்டில் ஒரு சோப்பு இருந்தது. இப்ப ஆறு பேர் இருக்கிற வீட்ல ஏழு சோப்பு இருக்குது. வெளிநாட்டுக் கம்பெனி எல்லாம் “ஒனக்கு ஒண்ணுந்தெரியாது நான் குடுக்கிறேன் இத சாப்புடு”ன்னு சொல்றான். அதுவும் நம்ம மதுரைல சொல்லலாம்மாங்க? தினம் ஒரு கண்டுபிடிப்பா கண்டுபுடிக்கிற ஊரு. போண்டாக்குள்ள முட்டைய வைச்சு கண்டுபுடிச்ச ஊரு. கென்டகி சிக்கன்னு ஒரு கம்பெனி நான் கோழிக்கறி தர்றேன். அத சமைன்னு சொல்றான். நம்ம ஊருல நம்ம பொண்ணுகளுக்கு கோழிக்கறி சமைக்கத் தெரியாதா?

மருத்துவ சம்மந்தமான அறிவுச் செல்வங்களை திட்டமிட்டு பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளையடிக்கின்றன. இதற்காகவே ஆராய்ச்சி பண்ண ரொம்ப பேர் இங்கு வந்து இருக்காங்க. இதற்கெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் பணங்கொடுக்கிறார்கள்.

உலகமயமாக்கம், உலகமயமாக்கம் என்ற சொல்லிலேயே நாம் ஏமாந்து போகிறோம். “மெய்ப்பொருள் காண்பது அறிவு” யார் என்ன சொன்னாலும் இந்த நுகர்வு கலாச்சாரத்திலிருந்து நாம் விடுபட வேண்டும். இப்ப கடன் திருவிழா, லோன் மேளா எல்லாம் நடத்துறாங்க. இந்த திருவிழாவிற்கு எப்ப கொடி ஏத்துவாங்க? எப்ப இறக்குவாங்கன்னு தெரியல. எந்த நாடும் உலக வங்கியிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்ததாக வரலாறு இல்லை.

“மாற்ற முடியாதது எதுவோ அது அறம். மாற்றம் வந்தாலும் அதிக மாறுதல் வராதது பண்பாடு”. உலகமயமாக்கல் என்ற ஆரவாரத்திற்கு நாம் ஏமாந்து போகிறோம். நாம் தினமும் பங்கு சந்தை பார்க்கிறோம். எனக்கு என்னவென்றே புரியவில்லை. இப்பதான் தெரிந்தது அது இரண்டு சதவீத மக்களுக்கான செய்தியென்று. நாம் பிரம்மாண்டங்களுக்கு எதிரான கலாசாரத்தை உண்டு பண்ண வேண்டும். நாயகம் ஜனங்களின் நாயகமாக இருந்தால் அது ஊடகங்களின் நாயகமாக இருக்க முடியாது. ஒரு நாள் அறிஞனை முட்டாளாகக் காட்டும்.

பண்பாடு பற்றியெல்லாம் வாசிக்கிறவங்க கொறச்சல். இதப்பத்தி யோசிக்கிறவங்க ரொம்பக் கொறச்சல். பேசுறவங்க கொறச்சல். எழுதுறவங்க ரொம்ப கொறச்சல். எனக்கு ஒரு இங்கிலீஸ் படம் ஞாபகத்துக்கு வருது. ஆண்டவர் கொடுத்த பல கட்டளைகளை மோசஸ் தொலைத்து விட்டு கடைசியாக உள்ளவற்றைத்தான் கடவுள் கொடுத்தார் என சாதிப்பார். அது போல நாம் எதை இழந்தோம் என்பதைக்கூட மறந்து விட்டோம். “இழந்தோம் என்பதைவிட இழக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருக்கிறோம்” என வருத்தப்படுகிறார் ஆழ்வார். இதை பாரதி

“கஞ்சி குடிப்பதற் கிலார் – அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்” என்கிறார்.

நாம் எப்போதும் மேற்கேதான் பார்ப்போம். கிழக்கே சீனா, ஜப்பானை எல்லாம் பார்க்க மாட்டோம். எத்தனை பேருக்கு மோஸி என்ற அறிஞரைத் தெரியும்?

இறுதியாக வாசிப்பு என்பது யோசிப்பை தரும். யோசிப்பது மூலம் சமூக மாற்றம் ஏற்படுத்த வேண்டும். நாம் யோசிப்பதன் மூலம் ஜனங்களின் நிலையை மாற்ற வேண்டும். பாரம்பரியமான அறிவுச் செல்வத்தை நாம் தக்க வைத்துக்கொள்ளப் போராட வேண்டும். எதையும் விற்கலாம், ஒன்றை திட்டமிட்டுப் பழசாக்கி புதியதைச் சந்தைப்படுத்தலாம் என்பது போன்ற பிரம்மாண்டங்களுக்கு எதிராக சிந்திக்கும் கலகக்குரல் நமக்கு வேண்டும். பண்பாடு என்பதைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு வேண்டும். நன்றி’’

தொ.பரமசிவன் அய்யாவின் உரையை வாசித்து மற்றவர்களிடம் இதைக் குறித்து பேசுங்கள், எழுதுங்கள். பிரம்மாண்டங்களுக்கு எதிராக நாம் செயல்பட வேண்டும். மேலும் தொ.பரமசிவன் அய்யாவின் கட்டுரைகளை படிக்கக் கீற்று வலைத்தளத்தை பார்க்கவும். மேலும் இவரது புத்தகங்கள்பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், சமயம், சமயங்களின் அரசியல்வாசியுங்கள். தொ.பரமசிவன் அய்யாவிற்கு நன்றிகள் பல!

November 8, 2011

முத்தத்தில் துவங்கி....


முத்தத்தில் துவங்கி
முத்தத்தில் முடியும்
தாம்பத்ய உறவு
எத்தனை பேருக்கு வாய்க்கிறது?

யாரும் சொல்லாமலேயே
கற்றுக்கொள்கிறார்கள்
அலுத்துத் தூங்குவதற்கான
உடற்பயிற்சியாக!

- கவிஞர் அ. வெண்ணிலா

*ச. தமிழ்ச்செல்வன் தொகுத்த 'ரெக்கைகள் விரியும் காலம்' புத்தகத்திலிருந்து...

November 7, 2011

நவம்பர் 7 - புரட்சிகர நிகழ்ச்சி! - ஓர் அனுபவம்!


காலச்சக்கரத்தை பின்சுழற்றி பார்க்கிறேன்.
ஒரு சிறிய ஹால்.
50,60 தோழர்கள்.
பெரும்பாலும் ஆண் தோழர்கள்.
புரட்சியை நேசிக்கும் தோழர்
முதல் பாட்டாளிவர்க்க அரசின் சாதனைகளை
கண்கள் பிரகாசிக்க சொல்வார்.
முதலாளித்துவ கொடூரங்களின்
உச்சங்களை சொல்வார்.
இறுதியில்,
ஒவ்வொருவரும் உறுதிமிக்க
போல்ஷ்விக்காக
உறுதி ஏற்கவேண்டும்! என்பார்.

*****

இன்றும் பார்க்கிறேன்.
நிறைய இளம் மாணவர்கள்.
சரிக்கு சரியாக இளம்பெண் தோழர்கள்
இளம்தோழர்களின் அம்மாக்கள்,
அப்பாக்கள்,
அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கும்
குழந்தைகள்
எல்லோருடைய வயதையும் கூட்டி
எண்ணிக்கையால் வகுத்துப்பார்த்தால்
வயது இருபதை தாண்டாது!
ஆயிரத்திற்கும் அதிகமான நாற்காலிகள்.
இடம் கிடைக்குமா என்ற பயம் வந்தது.
இன்னும் வந்துகொண்டே இருந்தார்கள்.

****

புரட்சிக்காக உயிரைக் கொடுத்த
தோழர்களுக்கு
உணர்ச்சிமிக்க பாடலால்
வணக்கம் செலுத்தினார்கள்.

****

'நான் உலகம்!
தொழிலாளி - நானே உலகம்'
பாடலுக்கு நடித்து
உழைப்பால் உலகத்தைப் படைத்த
தொழிலாளர்களுக்கு
தன் அசுர பலத்தை உணரவைத்தார்கள்.

****

நாடகத்தில்...
குடித்துவிட்டு உதைத்த
கணவன் மூஞ்சியில்
தாலியை விட்டெறிந்தார்கள்.

****

மாறுவேடத்தில்...
இளம்பிஞ்சு தோழர்கள்
இளம் பெரியாராக
இளம் ஜான்சிராணியாக
இளம் பகத்சிங்காக
புதிய விடுதலை போருக்கு
அறைகூவல் விடுத்தார்கள்.

****

தங்களின் ஒற்றுமையால்; உறுதியால்
புரட்சிகர சங்கத்தை கட்டியமைத்து
முதலாளிகளின் திமிரை குறைத்த
தொழிலாளர்கள் புதிய திமிருடன்
கள அனுபவங்களை பகிர்ந்தார்கள்.

****

அன்று பேசிய பேச்சு விதை!
மக்களுடன்
களத்தில் உறுதியுடன்
போராடியதன் பயன்
நக்சல்பாரி அரசியல்
மக்களை பற்றிக்கொண்டுவிட்டது!
மக்களே நக்சலைட்டுகளாக!
இனி, எதிரிகளால்
பிரித்து பேசமுடியாது!

****

இதோ
போராட்டங்களினால்
கண்டெடுக்கப்பட்ட
இளம் பெரியார்கள்
இளம் அசரத் மகள்கள்
இளம் பகத்சிங்குகள்!


இனி,
மெல்ல, மெல்ல
எங்கும் பரவுவார்கள்.
எட்டப்பர்களுக்கு
காலம் நெருங்கிவிட்டது!


நேற்று
நிம்மதியாய் உறங்கினேன்!
சுதந்திர தேசத்தில்
செங்கொடி காற்றோடு
ஜெயித்த கதை பேசுவதாய்
கனவு வந்தது!
விரைவில்
கனவு நிஜமாகும்!

****

பின்குறிப்பு : நவம். 7 - புரட்சிதினத்தை ஒட்டி, சென்னையில் மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி அமைப்புகள் கொண்டாடின. அந்த நிகழ்வுக்கு போய் வந்த அனுபவத்தை தான் இங்கு பகிர்ந்துள்ளேன். நன்றி.

October 21, 2011

தொழிலாளர்களின் உரிமை - போனஸ்?

முன்குறிப்பு : தீபாவளி நெருங்குகிறது. பல நிறுவனங்களில் முதலாளிகள் அழுதழுது போனஸ் கொடுத்து கொண்டிருப்பார்கள் அல்லது நிறுவனம் நட்டத்தில் இயங்குகிறது என பொய்யை சொல்லி, இல்லை என்பார்கள் அல்லது சதவிகிதத்தை குறைப்பார்கள்.

இந்த பதிவு கடந்த வருடம் எழுதப்பட்டது. இந்த வருடமும் தேவைப்படுவதால், மீள்பதிவு செய்கிறேன்.

*****

எந்த தொலைக்காட்சி சானலை பார்த்தாலும், பண்டிகை கால விளம்பரங்கள் கொல்கின்றன. தீபாவளி வரைக்கும் தொலைக்காட்சி பார்க்காமல் இருந்தால் நல்லது என நினைக்கிறேன்.

பண்டிகைகள் வந்தால்... பணம் உள்ளவர்களுக்கு குஷி. இல்லாதவர்களுக்கு சுமை. அதுவும் தீபாவளி என்றால்... மிகப்பெரிய சுமை தான். தீபாவளி செலவுகளை தாக்குப்பிடிக்க உதவுவது..போனஸ் என்பது மிகப்பெரிய ஆறுதல். இன்றைக்கு எல்லா அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும் போனஸ் பற்றிய பேச்சு தான் பரவலாக இருக்கும்.

பல தொழிலாளர்கள் போனஸ் என்றால் ....முதலாளி இரக்கப்பட்டு பண்டிகை கொண்டாட போனஸ் தருகிறார்கள் என தவறாக நினைத்துக்கொண்டிருப்பார்கள். இப்படி பல தவறான அபிப்ராயங்கள் பலரிடம் உலாவுகின்றன. உண்மை பலருக்கும் தெரிவதில்லை. அதனால் சில தகவல்களை பகிர்வதற்காக இந்த பதிவு. நம் வசதிக்காக... கேள்வி பதில் வடிவத்தில்.

தொழிலாளர்களின் உரிமை : போனஸ்?

ஆம். முதலாளிகள் இரக்கப்பட்டு, பெருந்தன்மையாக தருவதல்ல இந்த போனஸ். சம்பளம் போல நம் உழைப்புக்கு தருவது தான் இந்த போனஸ். போனஸ் சம்பந்தமாக ஒரு வழக்கு 6 மாதத்திற்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்பில்...போனஸ் தொழிலாளர்களின் உரிமை என தீர்ப்பு வழங்கியது.


தொழிற்சாலை நட்டத்தில் இயங்கினால்... நிறுவனம் போனஸ் தர தேவையில்லையா?

நிதி மூலதன சூதாடிகள் பங்கு சந்தையில் ஏகமாக விளையாடி, கொள்ளையடித்ததின் விளைவாக வரலாற்றில் இதுவரை சந்தித்திராத மிகபெரிய நெருக்கடியை முதலாளித்துவ உலகம் சந்தித்து.. இன்னும் மீள முடியாமல் திணறிக்கொண்டிக்கிறது. இந்த நெருக்கடியை தொழிலாளர்கள் தலையில் தான் இறக்கியது முதலாளித்துவம். வேலையில்லை என துரத்தினார்கள். வருடக்கணக்கில் போராடி பெற்ற உரிமைகளை எளிதாக வெட்டினார்கள். இதன் தொடர்ச்சியில் போனஸ் கூட இல்லையென்பார்கள்.

ஒரு நிறுவனம் நட்டத்தில் இயங்கினாலும் போனஸ் தரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டியிருக்கிறது. (லாபத்தில் நிறுவனம் கொழித்தால்... தொழிலாளர்களுக்கு அள்ளியா தரப்போகிறார்கள் முதலாளிகள்?)

ஆதாரம் : இந்த ஆண்டு பி.எஸ்.என்.எல். - அரசு தொலை தொடர்பு நிறுவனம் நட்டத்தில் இயங்குவதால்(!) ஊழியர்களுக்கு போனஸ் தர மறுத்துவிட்டது. இப்பொழுது, உச்சநீதி மன்ற வழிகாட்டலை நிறைவேற்ற சொல்லி, போராடி கொண்டிருக்கிறார்கள் பி.எஸ்.என்.எல். தொழிலாளர்கள்.

ஒரு தொழிலாளி ஒரு வருடம் வேலை செய்தால் தான் போனஸ் பெற தகுதியானவரா?

தொழிலாளர்கள் வருடக்கணக்கில் போராடி சில உரிமைகளை பெற்றால்.. அந்த அரசு விதியை கூட பெரும்பாலான முதலாளிகள் கடைப்பிடிப்பதேயில்லை. சட்டம் ஒன்று சொன்னால்..அவர்களாகவே அவரவர் நிறுவனத்திற்கென்று ஒரு விதியை உருவாக்கி வைத்துக்கொள்வார்கள்.

ஒரு நிறுவனத்தில் ஒரு தொழிலாளி 30 நாட்களுக்கு மேலே வேலை செய்தாலே அவர் போனஸ் பெற தகுதியானவர்.

ஒப்பந்த தொழிலாளி - போனஸ் பெற தகுதியானவரா?

சட்டப்படி நிரந்தர தொழிலாளியும், ஒப்பந்த தொழிலாளியும் சமமானவர் தான். இ.எஸ்.ஐ., வருங்கால வைப்பு நிதி சட்டங்கள் இதை தான் நிரூபிக்கின்றன. ஆனால், கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக... ஒப்பந்த தொழிலாளி என்கிற முறையை உருவாக்கி முதலாளிகள் அடிக்கும் கொள்ளை அநியாயம்.

ஒப்பந்த தொழிலாளியும் நிரந்தர தொழிலாளியைப் போலவே மேலே சொன்னது போல தகுதியானவர் தான்.

என்னளவில் தோன்றிய சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளேன். வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். பதில் சொல்ல விழைகிறேன்.

October 12, 2011

பொறுக்கித் தின்ன போட்டி போடும் மாநகராட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!

உள்ளாட்சித் தேர்தலின் நோக்கம்
அதிகாரத்தை பரவலாக்குவதல்ல!
ஊழலை பரவலாக்குவதே!

விவசாயிக்கு நிலம், விளைபொருளுக்கு
விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம்,
இவையே கிராம மக்களுக்கான
உண்மையான அதிகாரங்கள்!
உள்ளாட்சி வழங்கு அதிகாரம் பிழைப்புவாதிகள்
பொறுக்கித் தின்பதற்கான அதிகாரமே!

விதை, உரம், பூச்சி கொல்லி மருந்துகள்,
உணவு தானியம், காய்கறிகள் விலை நிர்ணயம் செய்வது
டாடா, அம்பானி, பன்னாட்டுக் கம்பெனிகள்!
நெசவு, தீப்பெட்டி, கைவினைத் தொழில்களின்
கழுத்தை நெறிப்பதும் பன்னாட்டு கம்பெனிகள்!
உள்ளூர் பொருளாதாரத்தைப் பாதுகாக்க முடியாத
உதவாக்கரை உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!

விவசாயிகள், விசைத்தறி-கைவினைத் தொழிலாளர்களை
நாடோடிகளாக்கி தற்கொலைக்குத் தள்ளும்
தனியார்மய, தாராளமயக் கொள்கைகளிலிருந்து
மக்களைத் திசைத்திருப்பவும்,
போராட்டத்தை மழுங்கடிக்கவுமே
மகளிர் சுய உதவிக் குழுக்கள்! உள்ளாட்சித் தேர்தல்கள்!

கக்கூசுக்கு கட்டணக் கழிப்பிடம்,
குப்பை வார பிரெஞ்சு கம்பெனி,
ஆரம்ப சுகாதாரத்திற்கு அமெரிக்க மிஷனரி,
பாலம் போட மலேசிய கம்பெனி!
ம... புடுங்கவா மாநகராட்சி!
பொறுக்கித் தின்ன போட்டி போடும்
மாநகராட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!

கூட்டணி போட்ட யோக்கியனெல்லாம்
தனித்தனியா வர்றான்.... எதுக்கும்
சொம்ப எடுத்து உள்ளே வை!

சாதிக்காரன் சொந்தக்காரன்னு ஓட்டுப் போடாதே!
சொந்தச் செலவுல உனக்கு நீயே சூனியம் வைக்காதே!
ஊராட்சி, நகராட்சி - யாராட்சி வந்தாலும்
நாறித்தான் கிடக்குது நம்ம பொழப்பு!

உடம்பு அரிப்பெடுத்தா, "இட்ச்காடு" போடு!!\
உள்ளங்கை அரிப்பெடுத்தா
உள்ளாட்சிக்குப் போட்டி போடு!
அதிகாரத்தை அல்ல, ஊழலை பரவலாக்குவதே
உள்ளாட்சித் தேர்தல்!

விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய
வெளி(நாட்டு கம்பெனி) ஆட்சி!
கக்கூஸ், சைக்கிள் ஸ்டாண்டு, சுடுகாட்டில்
நிர்வாகம் பண்ண உள்ளாட்சி!

தேர்ந்தெடுக்கவும், திருப்பி அழைக்கவும்
உரிமை கொண்ட; சட்டம் இயற்றவும்
நடைமுறைப்படுத்தவும் அதிகாரம் கொண்ட
மக்கள் சர்வாதிகார மன்றங்களை நிறுவப் போராடுவோம்!
பொறுக்கித் தின்ன போட்டி போடும்
மாநகராட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்!

இவண் :

மக்கள் கலை இலக்கிய கழகம் - 95518 69588
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - 94448 34519
புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி - 94451 12675
பெண்கள் விடுதலை முன்னணி

தொடர்புக்கு :

அ.முகுந்தன்,
110, 2வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம்,
63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை - 24.

October 10, 2011

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஜெ!


திருச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக, திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஜெயலலிதா பேசிய 200 வார்த்தைகளில்,

'நான்' 8 முறையும்,
'நானும்' 2 முறையும்
'எனது' 2 முறையும்
'என்னுடைய' 2 முறையும்

தப்பித்தவறி வாய் குழறி ஒரே ஒருமுறை 'நாங்கள்' என்றும் பேசியுள்ளார்.

கூட்டுச்சிந்தனை, கூட்டுத்துவ செயல்பாடு எல்லாம் 'நமது' முதமைச்சருக்கு சுட்டு போட்டாலும், வராது என்பதற்கு இந்த வார்த்தைகள் நல்ல உதாரணம்.

'நான்' என்ற அகந்தை எவ்வளவு தவறானது என மதக்கதைகளிலேயே நிறைய உண்டு. உறவினர்களான இராமகோபாலன், சோ ராமசாமியோ சொன்னால் நல்லது!

நாம் கதைகளை தொகுத்து அனுப்பி வைக்கலாம். என்ன ஒரு பிரச்சனை என்றால், 'நான்'/'என்னை' கொல்ல கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியதாக கதை கட்டிவிடுவார் ஜெ. அதுதான் யோசனையாக இருக்கிறது! :)

September 29, 2011

வாச்சாத்தி தீர்ப்பு - போராட்டமின்றி சுயமரியாதை வாழ்வு இல்லை!


ஒரு கிராமத்திற்குள் புகுந்து, குழந்தைகள், வயதானவர்கள் என பாராமல், அரசின் அடியாட்படைகளான காவல்துறை, வனத்துறை மற்றும் அதிகார வர்க்கங்களான வருவாய்த்துறை அதிகாரிகளும், கிராம நிர்வாக அலுவலர்களும் கொடூரமாக தாக்கி, கிராமத்தையே சூறையாடி இருக்கிறார்கள். பல பெண்களை பாலியல் வன்முறை செய்திருக்கிறார்கள். எப்பேர்பட்ட அநியாயம் இது!

அந்த பழங்குடி மக்களின் விடாப்பிடியான, நெஞ்சுறுதி மிக்க போராட்டம் 19 வருடங்களுக்கு பிறகு, இன்று அனைவரும் குற்றவாளிகள் என தண்டனை வழங்கி தந்திருக்கிறது.

ஒரு கிராமத்திற்கு நேர்ந்த அநியாயத்திற்கே தீர்ப்பு வழங்க 19 வருடங்கள் போராட வேண்டுமென்றால், ஒர் தனிநபருக்கு இந்த கதி ஏற்பட்டால், தண்டனை வழங்க எவ்வளவு காலம் இழுத்தடிப்பார்கள். அதற்கு நல்லகாமனின் போராட்ட கதை வரலாற்று உதாரணம். (கீழே சுட்டி உள்ளது)

போராட்டம் இல்லையெனில், சுயமரியாதையான வாழ்வு இல்லை என மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்துகிறார்கள்!

தொடர்புடைய சுட்டிகள் :

வாச்சாத்தி தீர்ப்பு விவரம் - தினமணி - 30/09/2011

வாச்சாத்தி சம்பவம்

தோல்வி நிலையென நினைத்தால்! - புதிய கலாச்சாரம்

September 28, 2011

தோழர் பகத்சிங் - பிறந்தநாள்


பகத்சிங் பிறந்த நாள் : 28/09/1907

தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல்நாள், சிறையின் இன்னொரு வார்டில் இருந்த புரட்சியாளர்களிடமிருந்து, அவருக்குக் குறிப்பு ஒன்று வந்து சேர்ந்தது. கடைசித் தருணத்தில் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்யும் யோசனை அதில் இருந்தது. இந்தக் குறிப்புக்கு பகத்சிங் பதில் அனுப்பினார். தமது தோழர்களுக்கு எழுதிய கடைசிக் கடிதம் பின்வருமாறு.

தோழர்களே!

உயிருடன் இருக்கும் ஆசை என்னுள்ளிலும் இருப்பது இயல்பானதே. நான் அதனை மூடிமறைக்க விரும்பவில்லை. ஆனால், என் விசயத்தில், உயிருடன் இருப்பது என்பது நிபந்தனைக்கு உட்பட்டது. நான் ஒரு கைதியாகவோ அல்லது கட்டுத்திட்டங்களுக்கு உட்பட்டோ, இருப்பதை விரும்பவில்லை.

என்னுடைய பெயர். இந்தியப் புரட்சிக் கட்சி (இந்துஸ்தானி இன்கலாப் பார்ட்டி)யின் ஒரு சின்னமாகிவிட்டது. புரட்சிக்கட்சியின் இலட்சியங்களும் தியாகங்களும் என்னை மிகவும் உயர்த்தியுள்ளன. நான் உயிருடன் இருந்தால் கூட ஒருக்கால் இந்த உயரத்தை எட்டியிருக்க மாட்டேன்.

இன்று என்னுடைய பலவீனங்கள் மக்களின் முன்னிலையில் இல்லை. தூக்கிலேற்றப் படுவதினின்றும் ஒருக்கால் நான் தப்பித்தால், அந்தப் பலவீனங்கள் வெளிப்படலாம். புரட்சிச் சின்னம் ஒளியிழக்கலாம், ஏன்? அது அறவே அழிந்தும் போகலாம். ஆனால் நான் துணிவுடனும், புன்னகையுடனும் தூக்குமேடை நோக்கிச் சென்றால் இந்தியத் தாய்மார்கள் தம் புதல்வர்கள் பகத்சிங் போல் விளங்கிட வேண்டும் என்று விரும்புவார்கள்; நாட்டின் விடுதலைக்காகத் தியாகம் செய்வோர்களின் எண்ணிக்கை, ஏகாதிபத்தியத்தின் அரக்கத்தனமான சக்தியினாலும் கூட புரட்சியைத் தடுத்து நிறுத்தச்செய்ய முடியாத அளவிற்குப் பெருகிவிடும்.

ஆனாலும் ஒரு விசயம் இன்றும் எனக்கு வேதனை தந்து கொண்டிருக்கிறது. இந்த நாட்டுக்காகவும், மனித குலத்துக்காகவும் என் இதயத்தில் சில ஆசைகளும் அபிலாஷைகளும் இருந்தன; ஆனால் அவற்றில் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. நான் உயிருடன் இருந்திருந்தால், இந்த நோக்கங்களை எட்டும் வாய்ப்பு கிடத்திருக்கும்; என் ஆசைகளை நிறைவு செய்யவும் முடிந்திருக்கும்.

இதைத் தவிர, தூக்குமேடையிலிருந்து தப்புவதற்கான ஆசை என் இதயத்தில் இருந்ததில்லை. ஆகவே என்னை விடவும் பாக்கியசாலி யார்தான் இருக்க முடியும்? இப்பொழுதெல்லாம் நான் என்னைப் பற்றி பெருமையடைகிறேன். இறுதித் தேர்வுக்காக நான் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்; அந்தத் தேர்வு விரைவிலேயே நெருங்கி வந்திட வேண்டுமென்று விரும்புகிறேன்.

உங்கள் தோழன்,
பகத்சிங்.

September 25, 2011

வாச்சாத்தி வழக்கு! - இன்று தீர்ப்பு!

முன்குறிப்பு : தருமபுரி வாச்சாத்தி வழக்கு இன்று தீர்ப்பு வரும் நாள் என அறிவித்திருக்கிறார்கள். 19 வருடங்கள் முடிவடைந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நடந்த அத்துமீறலை பதிவு செய்யவே பல போராட்டங்கள் நடத்தி, தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடிவருகிறார்கள். 269 பேர் மீது வழக்கு தொடர்ந்து, 53 பேர் இயற்கை மரணமே அடைந்துவிட்டார்கள். மீதி பேரும் இறப்பதற்குள் தண்டனை வழங்கினால் நீதிமன்றத்தின் மானம் கொஞ்சமாவது தப்பிக்கும்!

*****

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுக்​காவில் இருக்கும் மலை அடிவாரக் கிராமம் வாச்சாத்தி. இந்தக் கிராமம் தொடர்பான வழக்கு ஒன்று, தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது... நடக்கிறது... நடந்து​கொண்டே இருக்கிறது!

முதலில், அந்த பயங்கர வழக்கைப் பற்றிய ஃப்ளாஷ் பேக்...
வாச்சாத்தி கிராமத்தில் சுமார் 300 வீடுகள். கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதியில், மனித உரிமையை மல்லாக்கப் புரட்டிப்போட்ட மிகப் பெரிய அத்துமீறல் அங்கு நடந்தது. இந்தக் கிராமத்தை ஒட்டியிருக்கும் சித்தேரி மலைகளில் அப்போது சந்தன மரங்கள் ஏராளம். இவற்றை அரூர் சரக வனத் துறை அதிகாரிகள் சிலரின் ஆசியோடு, மரக் கடத்தல் முதலைகள் சிலர் வெட்டிக் கடத்திக்கொண்டு இருந்தனர். அதிகக் கூலி கிடைக்கிறதே என்று கிராமவாசிகளில் சிலரும் மரம் வெட்டும் பணிக்குச் சென்றனர். சில தொல்லைகள் வரத் தொடங்கவே, மிரண்டுபோன மக்கள் மரம் அறுக்கும் வேலைக்குச் செல்ல மறுத்தனர். மேலும், கடத்தல் நடமாட்டம் குறித்த தகவல் அம்பலப்பட... அதிகாரிகள் பொங்கி எழுந்தனர். 'சந்தனம் உட்பட விலை மதிப்பு மிக்க வனச் செல்வங்களை, வாச்சாத்தி மக்கள் பெருமளவு கொள்ளை அடிக்கிறார்கள்...’ என்று பொய்யான தோற்றத்தை உருவாக்கி, ரெய்டு என்ற பெயரில் வனத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை ஆகியவை கிராமத்துக்குள் அன்றைய தினம் புகுந்தன.

அப்போது அதிகாரிகள் சிலர், ஊரில் இருந்த பருவம் அடைந்த, பருவம் அடையாத சிறுமிகள் 18 பேரை ஏரிக்குக் கடத்திச் சென்று... வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு மாபெரும் பாலியல் கொடூரத்தை அரங்கேற்றினர். அதோடு, வாச்சாத்தி மக்கள் 133 பேரை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். இந்த விஷயம், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மூலம் வெளிச்சத்துக்கு வர... தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது.

பல்வேறு சட்டப் போராட்டங்​களுக்குப் பிறகே வழக்குப் பதிவு செய்யப்​பட்டு, பிறகு சி.பி.ஐ. விசார​ணைக்கும் உத்தரவு இடப்பட்டது. 269 குற்றவாளிகளைப் பட்டியல் இட்டு, இந்த வழக்கை தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. நடத்தி வருகிறது. 19 ஆண்டுகளாக இழுபறியாக இருந்த இந்த வழக்கின் விசாரணை, ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்ட நிலை​யில், தீர்ப்புக்கான நாட்கள் எண்ணப்​படுகின்றன.

வன்கொடுமை, அத்தியாவசிய உணவு ஆதாரங்களை அழித்தல், வன்புணர்ச்சி ஆகிய குற்றங்கள் நடந்ததற்கான வலுவான ஆதாரங்களோடு வழக்கை சி.பி.ஐ. நடத்துகிறது.

இந்த நிலையில், குற்றம் சாட்டப்​பட்டவர்​களில் ஏழு அரசு அதிகாரிகள், 'சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலத்தில் பணியாற்றிய தர்மபுரி கலெக்டர் தசரதன், எஸ்.பி-யான ராமானுஜம், ஆர்.டி.ஓ-வான தெய்வ சிகாமணி ஆகிய மூவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும். மீண்டும் ஒரு முறை அனைவரையும் விசாரணை செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையோடு ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அது சில மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது.

உடனே அவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்​துக்குப் போனார்கள். கடந்த வாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி பாஷா, 'சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்த்த ஒரே காரணத்துக்காக, குறிப்பிட்ட அந்த அதிகாரிகளை வழக்கில் சேர்க்கக் கோருவது வினோதம். வழக்கை மேலும் தாமதப்படுத்த இதுபோன்ற குறுக்கு வழிகளைக் கையாள்வது கண்டிப்புக்கு உரியது. இந்தக் குற்றத்துக்காக மனுச் செய்த ஏழு பேரும் சென்னையில் உள்ள குறிப்பிட்ட மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கு, தலா 10,000 அபராதமாகக் கட்டவும்’ என்று 'ஷாக்’ கொடுத்ததோடு வழக்கு விசாரணையை துரிதமாக்கும்படி தர்மபுரி நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.

கிராமத்தைச் சேர்ந்த பரந்தாயியிடம் விசாரித்தபோது, கதறிக் கண்ணீர்விட்டு அழுதார். ''என் மகள் உட்பட 18 கன்னிப் பொண்ணுங்களோட வாழ்க்கையை நாசமாக்கினாங்க. ஊர் சனங்களையும் சொல்லவே வாய் கூசுற அளவுக்கு அசிங்கப்படுத்தி உதைச்சாங்க. நீதிமன்றம் மேல் நம்பிக்கைவெச்சு 19 வருஷமா உறுதியாப் போராடுறோம். இப்போ, மேலும் வாய்தாவை அதிகரிக்க இப்படி ஒரு புது தந்திரம் பண்ணப் பார்த்தாங்க. அதை அந்த நீதிபதியாலயே பொறுக்க முடியலை. இதே மாதிரி அந்த அக்கிரம அதிகாரிகளுக்கு விரைவிலேயே தண்டனை கொடுத்து எங்க மனக் காயத்துக்கு நீதிமன்றம் மருந்து தடவணும்!'' என்றார் கண்ணீரைத் துடைத்தபடி.

பாதிக்கப்பட்ட முருகன், ''எங்களை ஒரு ஜீவராசியாவே அன்னிக்கு அவங்க நினைக்கலை. பொண்ணுங்களை சூறை​யாடினாங்க... வீடுகளை அடிச்சு நொறுக்கினாங்க. கிணத்துல டீசல், ஆயிலை ஊத்துனாங்க. எங்க ஆடுகளையும் அடிச்சுத் தின்னாங்க. அதுகளோட குடலையும் எலும்புகளையும் கிணத்துல கொட்டினாங்க. அப்பப்பா... இப்போ நினைச்சாலும் உடம்பெல்லாம் நடுங்குது சார்!'' என்றார்.

மனித உரிமைக்கான 'குடிமக்கள் இயக்க’த்தின் சேலம் மண்டல பொறுப்​பாளரான செந்தில் ராஜா, ''எத்தனையோ குழுக்களின் விசாரணைகளில், வாச்சாத்​தியில் நடந்த மாபெரும் மனித உரிமை மீறல்களும் கொடுமைகளும் நிரூபணம் ஆகி இருக்கு. கோயில்களைவிட உயர்வானதா மக்கள் கருதுவது நீதிமன்றங்களைத்தான். அங்கேயும் இப்படித் தாமதம் என்றால், மக்களிடம் நம்பிக்கை குறைந்துவிடும். அதனால், விரைவாகத் தீர்ப்பையும் நிவாரணத்தையும் நீதித் துறை வழங்க வேண்டும்!'' என்றார்.

நன்றி : முத்துக்குமார்

September 15, 2011

நாடோ வல்லரசு! மக்கள் பட்டினியில் வாடுகிறார்கள்!

//"அமெரிக்காவில் என்னைப் போன்ற கோடீசுவரர்கள் யாருமே அதிகம் வரி செலுத்துவதில்லை. என் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் 33 சதவீதம் முதல் 41 சதவீதம் வரை வரி செலுத்தும் பொழுது, பல கோடிகளைச் சம்பாதிக்கும் எனக்கு 17 சதவீத வரிதான்" - என அமெரிக்காவின் 'ஜனநாயகத்தை'ப் புட்டு வைக்கிறார், மிகப்பெரிய பங்குச் சந்தை சூதாட்ட வியாபாரியான வாரன் பப்பெட்.

"அமெரிக்க கோடீசுவரர்கள் மீது வரி விதியுங்கள்; இல்லையென்றால், இந்த ஏற்றதாழ்வு அமெரிக்காவில் கலகங்களை உருவாக்கும்" எனக் கோடீசுவரர் பப்பெட் எச்சரிக்கும் பொழுது, ஒபாமாவோ, இழப்பதற்கு ஒன்றுமில்லாத அமெரிக்க மக்களிடம் தியாகம் செய்ய முன்வருமாறு உபதேசிப்பதைக் குரூரமான நகைச்சுவை என்றுதான் கூறமுடியும்.//

- அமெரிக்கக் கடன் நெருக்கடி : மைனரின் சாயம் வெளுத்தது! புதிய ஜனநாயகம் கட்டுரையிலிருந்து...
******

அமெரிக்காவில் வறுமை அதிகரிப்பு

வாஷிங்டன், செப்.14: அமெரிக்காவில் ஆறில் ஒருவர் வறுமையில் வாழ்வதாக சமீபத்தில் வெளியாகி உள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, சாதாரண மக்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை இந்தப் புள்ளிவிவரம் உறுதி செய்கிறது.

"அமெரிக்காவில் வருவாய், வறுமை, மற்றும் சுகாதாரக் காப்பீடு 2010' என்ற தலைப்பில் அமெரிக்க சென்சஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2010-ம் ஆண்டு அமெரிக்காவில் 4.62 கோடி பேர் (15.1%) வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தனர். இதுவே, அதற்கு முந்தைய 2009-ம் ஆண்டில் 4.36 கோடி பேர் (14.3%) வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தனர். கடந்த 4 ஆண்டுகளில் வறுமை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதை இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது. மேலும் வறுமையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, கடந்த 52 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2010-ம் ஆண்டில் சுகாதாரக் காப்பீடு இல்லாத அமெரிக்கர்களின் எண்ணிக்கை 4.9 கோடியாக (16.3%) அதிகரித்துள்ளது. 18 வயதுக்கு குறைந்தவர்களில் 1.6 கோடி (22%) பேரும், 18-லிருந்து 65 வயதுக்குள் உள்ளவர்களில் 2.6 கோடி (13.7%) பேரும் வறுமையில் வாடுகிறார்கள் என்று அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

அமெரிக்க அரசின் வறுமை கணக்கிடும் முறை: 4 பேர் உள்ள குடும்பத்தில் வருவாய் அளவு ஆண்டுக்கு ரூ.10 லட்சமாக (22,314 டாலர்) இருந்தால் அந்தக் குடும்பம் வறுமை கோட்டில் வரும். இதுவே தனிநபரின் வருவாய் ஆண்டுக்கு ரூ.5 லட்சமாக இருந்தால் அவர் வறுமையால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.

தினமணி - 15/09/2011

September 11, 2011

தமிழ்நாட்டில் விவசாயிகள் தற்கொலை இரண்டு மடங்காக அதிகரிப்பு!

சென்னை, செப். 10: தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சிகரமான தகவலை பத்திரிகையாளர் பி. சாய்நாத் தெரிவித்தார்.

சினேகா அமைப்பின் வெள்ளி விழா ஆண்டு நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. உலகத் தற்கொலை தடுப்பு நாள் நிகழ்வாகவும் நடந்த அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சாய்நாத் பேசியதாவது:

தற்கொலை மரணம் என்பது உலகெங்கிலும் அதிகரித்து வருகிறது. படித்தவர்கள் அதிகம் நிறைந்த நார்வே, ஸ்காண்டிநேவியா போன்ற நாடுகளிலும் தற்கொலை சம்பவங்கள் அதிகமாக உள்ளன. எனினும், எல்லா நாடுகளிலும் விளிம்பு நிலையில் வாழும் சமுதாயத்தில்தான் தற்கொலைகள் அதிகம் நிகழ்கின்றன.

இந்தியாவைப் பொருத்தவரை கடந்த பத்தாண்டுகளில் மக்கள் தொகை 18 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தற்கொலை மரணங்களும் 15 சதவீதம் அதிகரித்துள்ளன. குறிப்பாக விவசாயிகள் தற்கொலை என்பது மிகப்பெரும் எண்ணிக்கையில் உள்ளது.

கடந்த 1997-ம் ஆண்டிலிருந்து நம் நாட்டில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 600 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். முதல் 6 ஆண்டுகளில் ஒரு ஆண்டில் விவசாயிகளின் சராசரி தற்கொலை என்பது 16 ஆயிரத்து 267 ஆக இருந்தது. அதுவே, 2004-ல் இருந்து அடுத்த 6 ஆண்டுகளில் 17 ஆயிரத்து 105 ஆக அதிகரித்து விட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாட்டிலேயே விவசாயிகளுக்கு அதிக வசதிகள் செய்து கொடுக்கப்படும் மாநிலம் என்றும், முன்னோடியான விவசாய மாநிலங்களில் ஒன்று என்றும் கூறப்படுகிறது. ஆனால், இங்கேயே 2008-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது விவசாயிகளின் தற்கொலை என்பது இரண்டு மடங்காக அதிகரித்துள்ள அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

2008-ம் ஆண்டு தமிழ்நாட்டில் சுமார் 500 ஆக இருந்த விவசாயிகளின் தற்கொலை மரணம், அடுத்த ஆண்டிலேயே இரண்டு மடங்கு அதிகரித்து 1,260 ஆக உயர்ந்ததாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் விவசாயிகளின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதும், விவசாயத் தொழிலில் ஈடுபட பெரும் பணக்கார நிறுவனங்கள் ஊக்கப்படுத்தப்படுவதும், விவசாயத் துறை விவசாயிகளிடமிருந்து அந்நியமாக்கப்பட்டு, முழுமையாக வர்த்தகத் துறையாக மாற்றும் முயற்சிகளே விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்கக் காரணங்களாக உள்ளன.

விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் விவசாயக் கொள்கைகள் மாற்றம் பெறாத வரை, இதுபோன்ற விவசாயிகளின் தற்கொலை மரணங்களையும் தடுக்க முடியாது. குறிப்பாக வேளாண்மை விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்றார் சாய்நாத்.

தினமணி - 11/09/2011

September 2, 2011

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் விடுதலைக்குப் போராடுவோம்!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு - என்ற பாவேந்தரின் பாடலுக்கேற்ப ஓரணியில் திரள்வோம்!

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் விடுதலைக்குப் போராடுவோம்!

முன்குறிப்பு : மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய, தமிழகமெங்கும் மாணவர்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள், வியாபாரிகள் என பரந்துபட்ட அளவில் மக்களின் போராட்ட அலைகள் ஓங்கியடித்தன! இடைக்கால வெற்றியும் கிடைத்துள்ளன. போராட்ட களத்தில் குறிப்பிட்ட தக்க சதவிகித முழக்கங்கள் அரசியலை தள்ளிவைத்து, வெறும் மனிதாபிமான அடிப்படையில் இருந்தன. அரசியலை தள்ளி வைப்பது மக்களை மழுங்கடிக்கும் செயலாகும். இதன் விளைவு தான் முத்துக்குமார், செங்கொடியின் சாவுகள்! இந்த துண்டறிக்கை சரியான அரசியலை முன்னிறுத்துகிறது. படியுங்கள். உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்!

****

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

குமுறிக்கொண்டிருக்கிறது தமிழகம். தமிழர்கள் உணர்ச்சிப் பிழம்பாய் கொந்தளித்து கொண்டிருக்கிறார்கள். இராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை 21 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் வைத்து வதைத்தது போதாதென்று தூக்கிலிடுவதற்கும் நாள் குறித்துவிட்டது, இந்திய அரசு.

அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழர்க்கெதிராய் போர்க்குற்றங்கள் புரிந்தவர் தான் முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தி. ஆகவே, இராஜீவ் கொலை என்பது அடிப்படையில் ஓர் அரசியல் நடவடிக்கை. இந்திய ஆளும் வர்க்கத்தின் தெற்காசிய பிராந்திய மேலாதிக்க - அம்பானி, டாடா, பிர்லா போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் சுரண்டல், ஆதிக்க - நோக்கத்திற்கு ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை, ஒரு கருவியாக பயன்படுத்த முயன்றது இந்திய அரசு. 'இந்திய இலங்கை ஒப்பந்தம்' என்ற அரசியல் சதித்திட்டத்தை ஈழத்தமிழ் மக்கள் மீது திணித்தது. தமது தன்னுரிமையை மறுக்கும் இந்த ஒப்பந்தத்தைப் புலிகளும் ஈழத்தமிழ் மக்களும் ஏற்க மறுத்தனர். இதையே ஒரு முகாந்திரமாக கொண்டு அமைதிப்படை என்ற பெயரில் இந்திய இராணுவம் ஈழத்தின் மீது ஓர் ஆக்கிரமிப்புப் போரை நடத்தியது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும், புலிகளும் கொல்லப்பட்டனர்; பாலியல் வன்முறை உள்ளிட்ட அனைத்து வெறியாட்டங்களையும் இந்திய இராணுவம் நடத்தியது; இறுதியில் தோல்வியுற்று அவமானப்பட்டு திரும்பியது.

இந்த ஆக்கிரமிப்புப் போரின் எதிர்விளைவுதான் இராஜீவ் கொலை. எனவே அது போர்க்க்குற்றவாளிக்கெதிரானதொரு நடவடிக்கை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் புனிதப்படுத்தப்பட்ட தமது ஆக்கிரமிப்பை ஒரு அரசியல் நடவடிக்கையாகச் சித்தரித்துக்கொள்ளும் இந்திய ஆளும் வர்க்கம், இந்த பதில் நடவடிக்கையை மட்டும் அரசியல் வகைப்படாத கிரிமினல் நடவடிக்கையாகச் சித்தரிப்பதும் அதன் அடிப்படையில் தண்டிப்பதும் மோசடியாகும். இந்த அடிப்படையில் தான் மூவரின் தண்டனையை ரத்து செய்யப்படவேண்டும் என்று கோருகிறோம்.

இராஜீவ் கொலை பயங்கரவாத நடவடிக்கை அல்ல, தடா சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது; தடா சட்டமும் காலாவதியாகிவிட்டது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும், அதற்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட சாட்சியங்களும் வாக்குமூலங்களும் தடா கோர்ட்டில் பெறப்பட்டவைதான். மேலும், குற்றம் சாட்டப்பட்டோருக்காக வாதாடிய வழக்குரைஞர்கள் முன்வைத்த வாதங்களுக்கு விடை கூறாமலேயே கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பை அளித்தது உச்சநீதிமன்றம். தீர்ப்பை மீளாய்வு செய்யக்கோரும் மனுவை பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளாமல் மரண தண்டனையை மீண்டும் உறுதி செய்தது. தாங்களே புனிதம் என்று கூறும் சட்ட நடைமுறைகளைக் கூட உச்சநீதிமன்றம் அலட்சியப்படுத்தியுள்ளது. எனவே, சட்டரீதியாகச் செல்லத்தக்கதல்ல என்ற அடிப்படையிலும் இத்தண்டனை ரத்து செய்யப்பட வேண்டுமெனக்கூறுகிறோம்.

ஈழத்தில் இந்திய அரசு நடத்திய சதிகள், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மோசடித்தன்மை, 'அமைதி'ப்ப்டையின் அட்டூழியங்கள் ஆகியவற்றை மூடிமறைத்து, இராஜீவ்காந்தி மீது அனுதாபத்தையும், இந்திய தேசிய வெறியையும் வைத்து செய்த இப்பொய்ப் பிரச்சாரம் தோற்றுவித்த உணர்ச்சியின் அடிப்படையில் தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பும், மத்திய மாநில அரசுகளின் முடிவுகளும் அமைந்திருக்கின்றன.

இலங்கை இனவெறிப் பாசிச அரசின் போர்க்குற்றங்கள் சர்வதேச அரங்கில் அம்பலப்பட்டு வரும் இன்றைய சூழலில், இராஜபக்சே அரசையும் பங்காளியான இந்திய அரசையும் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து காப்பாற்றுவதற்கும், தமிழுணர்வாளர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளுவதற்கும் இம்மூவரின் கருணை மனு நிராகரிப்பு இந்திய ஆளும் வர்க்கத்துக்கு தேவைப்படுகிறது. இராஜபக்சே நடத்தியது சொந்த நாட்டு மக்கள் மீதான ஆக்கிரமிப்புப் போர். இந்தியாவின் ஈழ ஆக்கிரமிப்பு அன்றுடன் முடியவில்லை. முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் முடித்துப் புதைத்து வைக்கும் வரையில் இந்திய அரசு இலங்கை இராணுவத்துக்குத் துணை நின்றது. இன்னமும் நிற்கிறது. இராஜபக்சேயின் மீதான போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படுவதற்கும் இந்தியாதான் தடையாக நிற்கிறது. எனவே, மூவரின் மரண தண்டனை என்பது முள்ளி வாய்க்கால் படுகொலையின் தொடர்ச்சியே.

50000 ஈழத் தமிழ் உயிர்களைக் காவு கொண்ட பிறகும், இந்திய அரசின் தமிழர் மீதான வெறுப்பு அடங்கவில்லை. கச்சத்தீவு, சேது சமுத்திரம், காவிரி-முல்லைப் பெரியாறு என்று தொடரும் தமிழனின் மொழி, இனம், பண்பாடு, அரசியல் அடிப்படையிலான உரிமைகளைப் பறித்து தமிழனின் அடையாளங்களை அழிக்கும் பார்ப்பன ஆதிக்கவெறியின் வெளிப்பாடே மூவரின் மீதான் மரண தண்டனை.ஈழ, இந்திய தமிழர்கள் மீதான வெறுப்பு, வக்கிரம் அடிப்படையிலான தாக்குதல் நடவடிக்கையே!

* பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு மரண தண்டனை காட்டுமிராண்டித்தனமானது.

* இந்தியா மற்றும் எந்த நாட்டுச் சட்டத்துக்கும் இயற்கையான நீதிக்கும் எதிரானது.

* மனிதத் தன்மைக்கும் மனித நேயத்துக்கும் எதிரானது.

* அரசியல் உள்நோக்கத்துடன் பழிவாங்கும் செயல்.

* பேரறிவாளன், முருகன், சாந்தன் உருவத்தில் தூக்குமேடையில் நின்றுக்கொண்டிருப்பது ஒரு அரசியல் நியாயம். ஒரு ஆக்கிரமிப்புப் போர்க்குற்றவாளியைக் 'கொன்றதிற்கு' தூக்குத்தண்டனையா?

மக்கள் கலை இலக்கியக் கழகம்

விவசாயிகள் விடுதலை முன்னணி

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

பெண்கள் விடுதலை முன்னணி

தொடர்புக்கு: அ. முகுந்தன்,

110, 2 வது மாடி,

மாநகராட்சி வணிக வளாகம்,

63 ஆற்காடு சாலை,

கோடம்பாக்கம்,

சென்னை 24.

பேசி: 9444834519.


August 29, 2011

மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த இடைக்கால வெற்றி!

3 பேரின் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற, உயர்நீதிமன்றம் 8 வாரம் தடை!

ராஜிவ் படுகொலை வழக்கில் 3 பேரின் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற 8 வாரம் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்ததையடுத்து செப்டம்பர் 9-ம் தேதி இவர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது.

இந்த நிலையில் இவர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், 8 வாரத்துக்கு 3 பேரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என உத்தரவிட்டது

******
ஆயுள் தண்டனையாக குறைக்க சட்டசபையில் தீர்மானம்!

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சட்டசபை கூடியதும் இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது என்றார்.

இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் தீர்மானத்தை ஆதரித்து அதை நிறைவேற்றினர்.

இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருப்பு - II (செங்கொடியின் நினைவில்)


என்ன சொல்வது?
என்ன வெளிப்படுத்துவது?
என்ன செய்வது?

உன்னை கண்டிப்பதா?
அதற்கான தகுதி எனக்கு உண்டா?
உனக்காகக் கதறி அழுவதா?
தன்னை நொந்து கொள்வதா?
நம்மை நொந்து கொள்வதா?
ஆவேசம் கொள்வதா?
அடங்கி விடுவதா?

என்ன செய்வது?

சொற்கள்…
சொற்கள் மட்டுமே போதுமா?

மூலக்கொத்தளத்தில் உறங்குபவன்
அன்று எரிய விட்ட தீயின் ரணமே
இன்றளவும்
அவ்வப்பொழுது
நினைவில் எழும்பி
இதயம் கிழித்துக் கடக்கும் பொழுதில்…
நீ…
நீ ஏன் இப்படிச் செய்தாய்…?

மொத்தமாய் மரத்து விட்ட சமூகம்
உன் உடல் தின்ற
நெருப்பினால் உணர்வு பெறும் என்றா?
உணர்வு…
உணர்வு பெறுமா சமூகம்?
உணர்வு பெறுவார்களா மக்கள்?
அது நடக்குமா?
என்றேனும் நடக்குமா?

நான் நம்ப விரும்புகிறேன் செங்கொடி…
நடக்கும் என நம்ப விரும்புகிறேன்.
உனக்காக நம்ப விரும்புகிறேன்…

விசும்பல்கள் மாத்திரமே ஒலித்தாலும்,
வீர வசனங்கள் மாத்திரமே ஒலிக்கும்
என இரண்டாண்டுக்கு முந்தைய நிகழ்வுகள்
மூளையில் அறைந்து சொன்னாலும்,

உனக்காக…
அருமை செங்கொடி…
அன்பு மகளே…
உனக்காக நான் நம்ப விரும்புகிறேன்…
உணர்வு பற்றும்…
உனதுடல் தின்ற தீயின் ஆவேசத்தோடு
நாடு முழுதும் பற்றியெறியும்
என நம்ப விரும்புகிறேன்.
நம்புவேன்

- போராட்டம்

August 27, 2011

அன்னா ஹசாரேவாக இல்லாமல் இருக்க விரும்புகிறேன் - அருந்ததிராய்


அவரது வழிமுறைகள் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் இல்லவே இல்லை..

தொலைக்காட்சியில் எதைப் பார்க்கிறோமோ, அவைகள்தான் உண்மையில் புரட்சிகரமானதென கருதினால், அதுதான் சமீபத்தில் நடந்ததில் மிகவும் தர்மசங்கடமானதாகவும் புத்திசாலிதனமற்றதாகவும் இருந்திருக்கும்.. இப்போது ஜன் லோக்பால் மசோதா பற்றி, நீங்கள் என்ன கேள்வி யாரிடம் கேட்டிருந்தாலும், அந்த கேள்விக்கு கீழ்கண்ட கட்டங்களில் ஏதாவது ஒரு பதிலைத்தான் சரியென அவர்கள் 'டிக்' செய்திருப்பார்கள் (அ) வந்தே மாதரம்! (ஆ) பாரத அன்னைக்கு ஜே! (இ) இந்தியா என்றால் அன்னா, அன்னா என்றால் இந்தியா! (ஈ) இந்தியாவுக்கு ஜே!

முற்றிலும் வெவ்வேறு காரணங்களுக்காக, முற்றிலும் வெவ்வேறு வழிகளில், மாவோயிஸ்டுகளும் ஜன் லோக்பால் மசோதாகாரர்களும் ஒரே பொதுவான அம்சத்தை வலியுறுத்தி வருகின்றனர் என்று நம்மால் கண்டிப்பாகச் சொல்ல முடியும். இருவருமே இந்திய அரசைத் தூக்கி எறிய முயல்கிறார்கள். ஒருவர், ஏழைகளிலும் ஏழைகளான ஆதிவாசிகளினால் உருவாக்கப்பட்ட இராணுவத்தின் துணை கொண்டு, ஆயுதப் போராட்டத்தின் மூலம், கீழிருந்து தூக்கி எறிய முயல்கிறார். மற்றொருவர் மேலிருந்து, நகரம் சார்ந்த ஆனால் நிச்சயமாக நல்ல பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட இராணுவத்தைக் கொண்டு, புத்துணர்வு கொண்ட ஒரு சாதுவின் தலைமையின் கீழ், இரத்தம் சிந்தாத காந்திய ஆட்சிக்கவிழ்ப்பு மூலம், அரசைத் தூக்கி எறியப் பார்க்கின்றனர். (இந்த முறையில் அரசு நிர்வாகமும் தன்னைத் தானே தூக்கி எறிந்து கொள்ள, அனைத்தையும் செய்து உடந்தையாக உள்ளது)

2011ம் வருடம் ஏப்ரல் மாதம் அன்னா ஹசாரே முதலாவது "சாகும் வரை உண்ணாவிரதத்தை" சில நாட்கள் இருந்தார். அப்போது எழுந்த பெரும் ஊழல்கள், இந்திய அரசின் நம்பிக்கைத் தன்மையையே சிதைத்திருந்தது. அதிலிருந்து மக்கள் கவனத்தைத் திசைதிருப்ப, அரசு நமது சிவில் சமூகத்தால் "அன்னா அணி" என்று அழைக்கப்பட்ட இந்த அணியினரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அந்தக் குழுவை ஊழல் ஒழிப்பு சட்ட வரைவு கமிட்டியில் கூட்டு உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டது. சில மாதங்கள் கடந்ததும் அரசு இந்த முயற்சியைக் கைவிட்டு, புதிய வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்வைத்தது. அந்த வரைவு மசோதா பலவித குறைபாடுகளுடன் இருந்ததால், விவாதிப்பதற்கே தகுதியற்றதாக அது இருந்தது.

பிறகு ஆகஸ்டு 16ம் தேதி காலையில் தனது இரண்டாம் "சாகும்வரை போராட்ட"த்தை அன்னா ஹசாரே துவங்கினார். அவர் தனது உண்ணாவிரதத்தைத் துவங்கும் முன்னர் அல்லது அவர் எந்தவித சட்டரீதியான குற்றத்தைச் செய்வதற்கு முன்னரே, கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். விளைவாக ஜன் லோக்பால் மசோதாவை நடைமுறைப்படுத்தும் போராட்டம் என்பது 'போராடும் உரிமைக்கான‌ போராட்டம்', ஜனநாயகத்திற்கான போராட்டம் என மாற்றப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த இரண்டாம் சுதந்திர போராட்டத்தைத் துவங்கிய சில மணி நேரத்திற்குள் அன்னா விடுவிக்கப்பட்டார். ஆனால் புத்திச்சாதுரியத்துடன், அன்னா சிறைச்சாலையை விட்டு வெளியேற மறுத்து விட்டார்; விளைவாக தான் உண்ணாவிரத்தைத் துவங்கிய திகார் சிறையிலேயே கெளரவம்மிக்க விருந்தாளியாகத் தொடர்ந்து இருந்தார். தனக்குப் பொதுவிடத்தில் உண்ணாவிரதம் இருக்கும் உரிமையைத் தரவேண்டுமென கோரிக்கையை விடுத்தவாறு, தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். அந்த மூன்று நாட்களும் மக்கள் கூட்டமும் தொலைக்காட்சி வண்டிகளும் சிறைச்சாலைக்கு வெளியே கூடி நிற்க, 'அன்னா அணி'யின் உறுப்பினர்கள் திகார் என்ற உயர்காவல் சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றைக் கிழித்துக் கொண்டு அங்குமிங்கும் பறந்து சென்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் உள்ளேயிருந்து கொண்டு வந்த வீடியோ செய்திகளை, அனைத்துத் தேசிய மற்றும் அனைத்து தனியார் தொலைக்காட்சி ஊடகங்களில் கொடுத்து வெளியிட்டனர். (இந்த மாதிரியான ஆடம்பரம், வேறு நபருக்கு அங்கு அனுமதிக்கப்பட்டிருக்குமா?)

இதற்கிடையில் தில்லி முனிசிபல் கமிஷனின் 250 ஊழியர்கள், 15 லாரிகள் மற்றும் 6 மண் புரட்டிப் போடும் இயந்திரங்களின் உதவியுடன், சகதியாகக் கிடந்த ராம்லீலா மைதானத்தில் நாள் முழுக்க வேலை பார்த்து, வார இறுதியில் அரங்கேறப் போகும் மிகப்பெரிய 'ஷோ'வுக்கு, அதைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். முடிவே இல்லாமல் காத்திருந்து விட்டு, கிரேனில் தொங்கவிட்ட காமிராக்களையும் உற்சாக கோஷமிட்டுக் கொண்டிருந்த கூட்டத்தையும் அவதானித்து விட்டு, இந்தியாவில் மிகவும் விலைகூடுதலான மருத்தவர்களின் மருத்துவ உபசரிப்புடன், அன்னாவின் மூன்றாவது கட்ட "சாகும் வரை உண்ணாவிரதம்" துவங்கியது. உடனே பல தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், “காஷ்மீரில் இருந்த கன்னியாகுமரி வரை, இந்தியா ஒன்றுதான்” என்று நம்மிடம் சொல்ல‌ ஆரம்பித்து விட்டார்கள்.

அவரது வழிமுறை வேண்டுமானால் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் எதுவும் இல்லை. அன்னாவின் கருத்துக்கு மாறாக, காந்தி அதிகாரத்தை மையப்படுத்துவதற்கு எதிராக நின்றார். அதிகாரக் குவியலை எதிர்த்து, அதை அ-மத்தியத்துவப்படுத்த காந்தி விரும்பினார். லோக்பால் மசோதாவோ காந்தியத்துக்கு ஒவ்வாத - அதிகாரம் மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஒரு கொடுமையான ஊழல் எதிர்ப்புச் சட்டம். இந்த வரைவுச்சட்டத்தின் படி, ஜாக்கிரத்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர், ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கொண்டு, ஒரு அதிகார மையத்தை நிர்வகிப்பார்கள். அம்மையத்திற்குக் காவல்துறையினருக்கு உள்ள அதிகாரம் உண்டு; அவர்கள் பிரதம மந்திரியில் இருந்து, நீதித்துறையைச் சார்ந்தவர்களில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர்களிருந்து, அதிகார மட்டத்திலுள்ள கீழ்மட்ட அரசு அதிகாரிகள் வரை, அனைவரையும் கண்காணிக்கலாம். லோக்பாலுக்கு ஒன்றை ஆய்வு செய்து துப்புத் துலக்கவும், கண்காணிக்கவும், அவர்கள் மேல் வழக்குத் தொடரவும் அதிகாரம் உண்டு. லோக்பாலிடம் சிறைச்சாலை மட்டும்தான் இல்லை. அதைத் தவிர அது ஒரு தனிப்பட்ட நிர்வாக அமைப்பாக, கணக்கில் அடங்காமல் சொத்து வைத்திருப்பவர்களையும், அளவுக்கு அதிகமாக ஊதிப் பெருத்தவர்களையும், ஊழல் பேர்வழிகளையும் எதிர்கொள்ளும் வகையில் செயற்படும். அரசு நிர்வாகம் என்பதே இதற்காகத்தானே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போது அரசு நடுத்தும் சிறு குழுவினரின் ஆட்சி போதாதென்று, மற்றொரு சிறுகுழு ஆட்சியை லோக்பால் மசோதா ஏற்படுத்தித் தருகிறது. இதன் மூலம், இரண்டு சிறு குழு ஆட்சிக்கு வழிவகுப்பதாக இந்த லோக்பால் மசோதா அமைகிறது.

இந்த மசோதா பயன் தருமா, தராதா என்பது நாம் ஊழலை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே உள்ளது. ஊழல் என்பது வெறுமனே சட்ட சம்பந்தப்பட்டப் பிரச்சினையா? ஊழல் என்பது வெறுமனே நிதி மோசடியும் லஞ்ச லாவண்யமும் உள்ள பிரச்சினையா? அல்லது அதிகாரம் என்பது மிகச் சிறுபான்மையினரின் கையில் குவிந்து கிடக்கும் இந்தச் சமத்துவமற்ற சமுதாயத்தில், ஊழல் என்பது சமூக பட்டுவாடாவுக்கான கரன்சி நோட்டா? ஒரு உதாரணத்திற்கு நான் சொல்வதைச் சிந்தித்துப் பாருங்கள்! பெரிய பெரிய ஷாப்பிங் மால் உள்ள ஒரு நகரத்தில், வீதிகளில் கூவி விற்கும் சில்லறை வியாபராம் தடை செய்யப்பட்டுள்ளது என்று எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் இந்தச் சில்லறை வியாபாரி இந்த ஷாப்பிங் மாலின் விலைக்கு ஈடு கொடுத்து வாங்க முடியாத வாடிக்கையாளர்களுக்கு, தனது பொருளை விற்க வேண்டுமானால் கண்டிப்பாகச் சட்டத்தை மீறித்தான் செயற்பட வேண்டும். அதற்காக அங்குள்ள போலிஸிக்கும் முனிசிபாலிடி ஆளுக்கும் அவர் சிறு தொகையைக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்படிச் செய்வது ரொம்ப மோசமான செயலா? எதிர்காலத்தில் இந்தச் சில்லறை வியாபாரி தனது வணிகத்தைச் செய்ய இந்த லோக்பால் பிரதிநிதிகளுக்கும் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டுமா? சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பது அமைப்புரீதியான சமத்துவமின்மைக்குத் தீர்வு காண்பதிலேயே உள்ளது. அப்படிச் செய்யாமல், அதற்குப் பதில், மக்கள் இன்னுமொரு அதிகார மையத்தை எதிர்கொள்ளட்டும் என்று விட்டு விடுவது எப்படி நியாயமாக இருக்கும்?

இதற்கிடையில் அன்னாவின் புரட்சிக்கான கட்டமைப்பும் நடன இயக்கமும், அதற்கான உக்கிரமான தேசியவாதமும் கொடி அசைத்தலும், இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்தும், உலகக்கோப்பை வெற்றி அணிவகுப்பிலிருந்தும், அணுச்சோதனை கொண்டாட்டத்தில் இருந்தும் கடன் வாங்கப்பட்டுள்ளது. அவர்களது உண்ணாவிரதத்தை நீங்கள் ஆதரிக்காவிட்டால், அவர்கள் உங்களை "உண்மையான இந்தியன் இல்லை" என்று அடையாளப்படுத்துவார்கள். அது போலவே இந்த 24 மணிநேர ஊடகங்களும், இந்த நாட்டில் இந்தச் செய்தியை விட்டால், வெளியிடுவதற்கு உருப்படியான வேறு செய்தியே இல்லை என்று முடிவெடுத்துவிட்டன‌.

இந்த உண்ணாவிரதம் இரோம் சர்மிளாவின் பத்து வருட உண்ணாவிரதத்திற்கு எந்த விதத்திலும் அர்த்தம் வழங்கவில்லை. சந்தேகத்தின் பேரிலேயே யாரையும் கொல்லலாம் என மணிப்பூரில் வழங்கப்பட்டிருக்கும் AFSPA (Armed Forces [Special Power] ACT) சட்டத்திற்கு எதிராக பத்து வருடமாக உண்ணாவிரதம் இருந்து (அவருக்கு வலுகட்டாயமாக உணவு புகட்டப்பட்டாலும்) தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறாரே இரோம் சர்மிளா, அவரை இப்போராட்டம் எந்த அர்த்தமும் இல்லாமல் கைவிட்டு விட்டது. அணு ஆலை வரக்கூடாது என்று பத்தாயிரக்கணக்கான கிராமவாசிகள் கூடங்குளத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்களே, அந்த உண்ணாவிரத்திற்கு இந்த அன்னாவின் உண்ணாவிரதம் எந்த அர்த்தத்தையும் வழங்கவில்லை.

அன்னாவின் போராட்டத்தில் மக்கள் என்பவர்கள் யார்? இரோம் சர்மிளாவின் உண்ணாவிரத்தை ஆதரித்த மணிப்பூரிகள் மக்கள் இல்லையா? ஜகத்சிங்பூரிலும், கலிங்காநகரிலும், நியாம்கிரியிலும், பஸ்தாரிலும், செய்தாபூரிலும், சுரங்கக் கொள்ளைக் குண்டர்களுக்கு எதிராகவும், குண்டாந்தடிப் போலிஸ்காரர்களுக்கு எதிராகவும், திரண்ட ஆயிரக்கணக்கானவர்கள் மக்கள் இல்லையா? போபால் வாயுக் கசிவில், முடமானவர்கள், இறந்தவர்கள், மக்கள் இல்லையா? அல்லது நர்மதா பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட அணையால் இடம்பெயர்ந்தவர்கள் மக்கள் இல்லையா? தனது நிலத்தை எடுத்துக் கொள்ளக்கூடாதென எதிர்ப்பு தெரிவித்த நோயிடா அல்லது புனே அல்லது ஹரியானாவைச் சார்ந்த விவசாயிகள் மக்கள் இல்லையா? அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் இவர்கள் இல்லை.

பின்னர் அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் யார்? தான் கோரும் லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்கப்பட்டு, சட்டமாக மாற்றப்படாவிட்டால், உணவருந்தாமலேயே உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று மிரட்டும் அன்னா என்ற 74 வயது மனிதரை, ஊடகத்தில் பார்க்கும் இந்த பார்வையாளர்கள்தான், அன்னாவின் போராட்டத்திற்கான மக்கள் ஆவர். எப்படி பசித்தவர்கள் புசிப்பதற்காக இயேசு கிறிஸ்து மீன்களையும் உணவுத் துண்டங்களையும் பல மடங்குகளாக ஆக்கினாரோ, அது போலவே தொலைக்காட்சி ஊடகங்கள் பல மடங்குப் பார்வையாளர்களைப் பெருக்கி, இந்த மக்களை பன்மடங்காக்கியது. "ஒரு பில்லியன் குரல்கள் ஒலித்து விட்டன” என்று நமக்குச் சொல்லப்பட்டு விட்டது. "இந்தியா என்றால் அன்னாதான்.”

மக்களின் குரலான இந்தப் புதிய சாது உண்மையிலேயே யார்? உடனடி அவசரத் தேவையான மக்கள் விசயங்கள் குறித்து, இவர் எதுவும் போதுமான அளவுக்கு பேசியதாக நாம் கேட்டதே இல்லை. நமது பக்கத்தில் நடந்த விவசாயிகளின் தற்கொலை குறித்தோ அல்லது நக்சலைட்டுக்கு எதிராக நடந்த பச்சை வேட்டை ஆபரேசனைக் குறித்தோ இவர் ஒரு வார்த்தை கூட உதிர்த்தது கிடையாது. சிங்கூர் பற்றியோ, நந்திகிராம் பற்றியோ, லால்கார் பற்றியோ, போஸ்கோ பற்றியோ, விவசாயிகள் போராட்டம் பற்றியோ, அல்லது சிறப்புப் பொருளாதார மண்டலத்திலுள்ள பிரச்சினைக‌ள் பற்றியோ, இவர் எதுவும் பேசியதில்லை. மத்திய இந்தியாவிலுள்ள காடுகளில் இந்திய இராணுவத்தை நிறுத்தி வைக்க திட்டமிட்டிருக்கும் அரசின் திட்டங்கள் குறித்து, அவருக்கு எந்த அபிப்பராயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

மராத்தியராக இல்லாதவர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்து வரும் ராஜ் தாக்கரேயின் அரசியலை ஆதரித்தவர் அன்னா. 2002ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்களை நேரடியாக நிர்வகித்த குஜராத் முதலமைச்சரின் "வளர்ச்சி மாதிரி"யை மனமாரப் புகழ்ந்தவர். (இதைச் சொன்னதும் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பைக் கண்டு அன்னா, தனது வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொண்டாலும், மோடி மீதான தனது உவப்பை என்றுமே வாபஸ் பெற்றதில்லை)

இந்த மாதிரியான கும்மாளத்திற்குப் பிறகும், சில அமைதியான பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்துள்ளார்கள். ஆர்.எஸ்.எஸ்சுடன் அன்னாவுக்குள்ள பழைய உறவுகள், தற்போது இப்பத்திரிகையாளர்கள் மூலமாக அம்பலத்துக்கு வந்துள்ளது. அன்னாவின் கிராம குழுமமான ரலேகன் சித்தியில் பயின்ற, முகுல் சர்மாவைப் பற்றி நாம் இப்போது கேள்விப்படுகிறோம். அங்கு கடந்த 25 வருடமாக ஒரு கிராம பஞ்சாயத்து தேர்தலோ அல்லது கூட்டுறவு சொசைட்டி தேர்தலோ கிடையாது என்பது தெரிகிறது. ஹரிஜன் குறித்து அன்னாவின் கருத்தை அவரது வார்த்தைகள் மூலமாகவே வந்தடையலாம்: “மகாத்மா காந்தியின் பார்வையையே ஒவ்வொரு கிராமமும் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு 'சமார்', ஒரு 'சுனார்', ஒரு 'கும்ஹர்' இருக்க வேண்டும். அவர்கள் தங்களது பாத்திரம் அறிந்து, தங்களது வேலைகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான், ஒரு கிராமம் சுயசார்புள்ளதாக இருக்கும். இதைத்தான் நாங்கள் ரலேகன் சித்தியில் நடைமுறைப்படுத்தி வருகிறோம்.” இப்படிப் பேசும் அன்னாவின் அணியில் இருக்கும் உறுப்பினர்கள், "சமத்துவத்திற்கான இளைஞர்கள்" என்ற இடஒதுக்கீட்டுக்கு எதிரான அமைப்பில் அங்கம் வகித்தவர்கள் என்றால், அதில் ஆச்சரியப்பட என்ன உள்ளது?

கோகோ கோலாவில் இருந்தும், லேமென் பிரதர்ஸில் (Lehman Brothers) இருந்தும் தாரளமாய் நிதி வாங்கிக் கொண்ட அரசு சாரா நிறுவனங்களை நடத்துபவர்கள்தான், அன்னாவின் கிளர்ச்சிப் பிரச்சாரத்தை முன்னின்று நடத்துபவர்கள். அன்னா அணியில் முக்கியப் பிரமுகர்களான அரவிந்த கெஜிர்வாலும் மணிஜ் சிசோடியாவும் நடத்தும் கபீர் நிறுவனம், போர்ட் பெளன்டேசனிடம் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பு, 4 லட்சம் டாலர்களைப் பெற்றுள்ளது. "ஊழலுக்கு எதிரான இந்தியா" பிரச்சாரத்திற்கு நன்கொடை அளித்தவர்களில், அலுமினியம் ஆலைகளுக்குச் சொந்தமான நிறுவனங்க‌ளும் பெளன்டேசன்களும், பல துறைமுகங்களைக் கட்டிய நிறுவனங்க‌ளும், பல சிறப்புப் பொருளாதார பகுதிகளைக் கட்டிய நிறுவனங்க‌ளும், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புடைய பல கோடிக்கணக்கிலான நிதி சாம்ராஜ்யத்தை நடத்துபவர்க‌ளும், ரியல் எஸ்டேட் நிறுவனங்க‌ளும் அடக்கம். அவர்களுக்கு நன்கொடை கொடுத்தவர்களில் பலர் ஊழலில் ஈடுபட்டதற்காக கண்காணிப்பில் இருப்பவர்களாகவும் மற்றும் பலவித கிரிமினல் செயற்களில் ஈடுபட்டவர்களாகவும் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஏன் அன்னாவுடன் இவ்வளவு உற்சாகத்துடன் பங்கெடுக்கிறார்கள்?

எப்போது ஜன் லோக்பால் மசோதாவிற்கான பிரச்சாரம் உச்சகட்டமடைகிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! 2G ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பெரும் ஊழல்களும் பெரும் மோசடிகளும் விக்கிலீக்ஸ் மற்றும் வெவ்வேறு மூலங்களின் வழியாக அம்பலமானபோது, பல முக்கியமான நிறுவனங்க‌ளும் மூத்த பத்திரிகையாளர்களும், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவைச் சார்ந்த அரசியல்வாதிகளும், நேச கட்சிகளின் மந்திரிகளும், ஒவ்வொருவருடன் அனுசரித்து பல நூற்றுக்கணக்கான ஆயிரங்கோடி ரூபாய் பணத்தைப் பொது கருவூலத்தில் இருந்து கரந்து கொண்டு சென்றனர் என்பது தெரிந்தது. இத்தனை ஆண்டுகளில் முதன் முறையாக அரசியல் புரோக்கர்கள் பெரும் அவமானப்பட்டார்கள். இந்தியாவிலுள்ள பெரும் கார்பரேட் தலைவர்கள் பலர், சிறைச்சாலையில் வாசம் செய்ய வேண்டிய அளவுக்குச் சிக்கிக் கொண்டார்கள். இதுதானே மக்களின் ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு மிகவும் அவசியமான நேரமாகும், இல்லையா?

அரசு தனது வழக்கமான கடமைகளைக் கை கழுவி, கார்ப்பரேசன்களும் அரசு சாரா அமைப்புகளும் அரசின் கடமைகளைத் (நீர் விநியோகம், மின்சார விநியோகம், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சுரங்கம், சுகாதாரம், கல்வி) தங்களது கரங்களில் எடுத்துக் கொண்டுள்ள காலமிது. கார்ப்பரேட்டிற்குச் சொந்தமான ஊடகங்கள் பொது மக்களது எண்ணங்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள காலகட்டமிது. ஆகவே தற்போது இந்த கார்ப்பரேசன்களும் ஊடகங்களும் அரசுசாரா அமைப்புகளும் இந்த ஏதாவது ஒரு லோக்பால் மசோதாவின் அதிகாரத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்ள முயலும். அதற்குப் பதில், தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள மசோதா, அவர்களை முழுவதுமாய் நிராகரித்து விட்டது.

தற்போது மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் கூச்சல் போடுவதின் மூலமும், கேடுகெட்ட அரசியல்வாதி என்றும், அரசின் ஊழல் என்ற சங்கதியை அழுத்திப் பிரச்சாரமாகக் கொண்டு போவதின் மூலமும், தங்களை ஊழலின் கொடுக்குப் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள அவர்கள் முயல்கிறார்கள். அவர்கள் உருவாக்கிய தர்மாபோதச மேடையான அரசையே கொடூரமாகச் சித்தரித்து, அரசை பொதுவெளியில் இருந்து இன்னும் அகற்ற வேண்டுமென கோருவது, கண்டிப்பாக இரண்டாம் கட்ட சீர்திருத்தத்தை கொண்டு செல்வதற்காகத்தான். இதன் மூலம் இன்னும் தனியார்மயமாக்குதலை ஊக்குவிப்பதற்காகவும், பொது கட்டுமானத்திலும் இந்தியாவின் இயற்கை வளங்களை இன்னும் அதிகமாக அணுகும் வாய்ப்பை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் செய்யும் முயற்சிகளே இவையாகும். இதன் மூலமாக கார்ப்பரேசன் ஊழல்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டு, அதற்கு 'பரிந்துரைக்கும் கட்டணம்' (Lobbying Fee)என்று பெயர் சூட்டப்படும் நாள் வெகுதூரம் இல்லை.

இந்தியாவின் 83 கோடி மக்கள் இன்னும் ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கும் குறைவான வருமானத்துடன்தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை இன்னும் பராரிகளாக்கும் கொள்கைகளை வலுவாக்குவதின் மூலம், நாம் நமது நாட்டை ஒரு சிவில் சண்டைக்குள் முண்டித் தள்ளுகிறோம் என்றுதானே பொருள்?

இந்த அவலமான பிரச்சினை இந்தியாவின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கையாலாகாதத் தன்மை மூலம் ஏற்பட்டுள்ளது. இதில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தாதவர்களான கிரிமினல்களும் கோடீஸ்வரர்களும் பாராளுமன்றவாதிகளாக ஆக்கப்படுகிறார்கள். இவ்வமைப்பில் உள்ள எந்தவொரு ஜனநாயக அமைப்பும், சாதாரண மக்களால் அணுக முடியாததாக உள்ளது. அவர்கள் கொடி ஆட்டுவதைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்! நாம் நமது உள்நாட்டு இறையாண்மையை அதீதபிரபுக்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடத்தப் போகும் ஒரு போருக்குள் இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்போர் ஆப்கானிஸ்தானத்தின் போர்க்கிழார்கள் நடத்தும் சண்டையைப் போல் உக்கிரமாக இருக்கும். அதுதான் நமக்கு விதிக்கப்பட்டதாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.

-அருந்ததி ராய் (21/08/2011, தி இந்து)

நன்றி : மொழிபெயர்ப்பாளர் சொ.பிரபாகரன்