> குருத்து: December 2023

December 11, 2023

வருங்கால வைப்பு நிதி திட்டம் - நிறுவனமும், தொழிலாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!



பி.எப் குறித்து தொழில் உலகம் டிசம்பர் இதழில் வெளிவந்துள்ளது.
இனி தொடர்ந்து எழுதுவேன்!
இதழை அறிமுகப்படுத்தி, தொடர்ந்து எழுதுவதற்கும் உற்சாகப்படுத்தும் GSTPS சொசைட்டியின் தலைவர் திரு. செந்தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நன்றி.

****


வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF)   நிறுவனமும், தொழிலாளர்களும் அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான அம்சங்கள் என்னென்ன?

வருங்கால வைப்பு நிதி திட்டம் ஏன் உருவாக்கப்பட்டது?

தொழிலாளர்கள் தங்கள் வாழ்நாளில்  வேலை செய்யும் பொழுது எதிர்கால நலனுக்காக சேமிக்கவேண்டும்.  அப்பொழுது தான் ஓய்வு பெறும் காலத்தில் சேமிப்பு தொகை மொத்தமாக வரும் பொழுது, அவர்களுடைய அத்தியாவசிய தேவைக்கும், ஓய்வு காலத்தில் ஓய்வூதியமாக ஒரு தொகை கிடைப்பது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.


இந்த திட்டம் எப்பொழுது உருவாக்கப்பட்டது? எவ்வளவு தொழிலாளர்கள் பலன் பெறுகிறார்கள்?


தொழிலாளர்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக 1952லிலேயே உருவாக்கப்பட்ட திட்டம் இது. இந்த திட்டத்தில், ஆகஸ்ட் 2023 நிலவரத்தின் படி, இணைந்துள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை மொத்தம் 7,53,297.  பயன்பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 6,88,82,855.  ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 76,63,766.


வ.வை. நிதி திட்டத்தில் எப்பொழுது இணையவேண்டும்?

 

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை துவங்கிய நாளிலிருந்து என்றைக்கு 20 பேர் வேலை செய்கிறார்களோ, அன்றைய நாளில் இருந்து இந்த திட்டத்தில் நிறுவனம் இணைவது கட்டாயமாகும்.  இதை அரசோ, பி.எப் நிறுவனமோ கண்டுபிடித்து நமக்கு சொல்வதில்லை. நாமே பி.எப் விதிகளைப் புரிந்துகொண்டு இணைதல் வேண்டும்.  இதை நிறுவனம் தெரிந்தும், தெரியாமலும் பதிவு பெறாமல் கடந்து செல்லும் பொழுது,  அடுத்து வரும் சில மாதங்களிலோ, வருடங்களிலோ நிறுவனம் பி.எப்பில் பதிவு செய்யும் பொழுது, கடந்த வந்த காலங்களுக்கும் நிறுவனம் பி.எப் நிதியை தன்னிடம் வேலை செய்த அத்தனை தொழிலாளர்களுக்கும் பி.எப் நிதியை செலுத்தவேண்டிய நெருக்கடிக்குள்ளாகும். பல தொழிலாளர்கள் வேலையை விட்டு போயிருப்பார்கள்.  அந்த தொழிலாளர்களிடம் அப்பொழுது மொத்தமாக பிடித்தம் செய்வதும் முடியாது. ஆகையால், தொழிலாளர்கள் செலுத்தவேண்டிய பணத்தையும் நிறுவனமே செலுத்தவேண்டிய நெருக்கடிக்குள்ளாகும்.  ஆகையால், உரிய காலத்தில் பி.எப் திட்டத்தில் இணைவது நிறுவனத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது.


ஒரு நிறுவனத்தில் 20 தொழிலாளர்களுக்கு குறைவாக தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.  அவர்களும் பி.எப் திட்டத்தில் இணைய முடியுமா?

சம காலங்களில் ஒரு பெரும் நிறுவனங்களில் ஒரு நிறுவனம் வேலை கொடுக்க கேட்கும் பொழுது, “பி.எப், இ.எஸ்.ஐ இருந்தால் வேலை தருவோம். இல்லையெனில் வேலை தர முடியாது” என்பதை தெளிவாக சொல்லிவிடுகின்றன.  ஏனெனில், அப்படி வேலை கொடுத்தால்,  அந்த நிறுவனத்தில் வேலை செய்கிற தொழிலாளர்களுக்கும் பி.எப், இ.எஸ்.ஐ செலுத்தவேண்டிய பொறுப்பு முதன்மை முதலாளிக்கு (Principal Employer)  வந்துவிடுவதால், அந்த பொறுப்பை கவனமாய் ஏற்பதில்லை.


ஆக, தொழில் வாய்ப்புகளை பெருக்கவேண்டுமென்றால், 
ஒரு நிறுவனத்திற்கு பி.எப் திட்டத்தில் பதிவு செய்யவேண்டியது 
அவசியமாகிறது. இதற்காகவே, 20 தொழிலாளர்களுக்கும் குறைவாக இருந்தாலும், 
பி.எப். திட்டத்தில் இணையலாம் என சட்டம் சொல்கிறது.  
அதற்கு பெயர் தன்னார்வத்துடன் விரும்பி இணையும் திட்டமாகும். 
பி.எப் சட்ட பிரிவு 1 (4) இன் கீழ் பதிவு செய்யலாம்.  நிறுவனத்தின் 
முதலாளியும், நிறுவனத்தில் வேலை செய்கிற அனைத்து 
தொழிலாளர்களும் கையெழுத்திட்டு ஓப்புதல் தரும் பட்சத்தில் இணையலாம்.
 
பி.எப் திட்டத்தில் எவ்வளவு நிதி தொழிலாளர் செலுத்தவேண்டும்? 
நிறுவனம் எவ்வளவு செலுத்தவேண்டும்?
 
ஒரு தொழிலாளியின் சம்பளத்தில் அடிப்படை சம்பளம் (Basic Salary), 
பஞ்சப்படி (Dearness Allowance) இரண்டிலும் வேலை செய்த நாட்களுக்கு 
சம்பளம் கணக்கிட்டு,  12% பிடித்தம் செய்யவேண்டும்.  நிறுவனமும் 
அதே அளவிற்கு 12% செலுத்தவேண்டும்.
 
உதாரணம் :  ஒரு தொழிலாளியின் சம்பளம் 15000. 
(இதில் அடிப்படை சம்பளம் எவ்வளவு, பஞ்சப்படி எவ்வளவு என்பதை 
துறைவாரியாக அரசு நியமித்து  சட்டம் (The Minimum Wages Act, 1948) 
இயற்றியுள்ளது. 
 
அதன்படி ஒரு கடைநிலை ஊழியருக்கான அடிப்படை சம்பளம், 
பஞ்சப்படி என்பதை  இப்படிப் பிரித்துக்கொள்ளலாம்.

சம்பளம் ரூ. 15000
வேலை செய்த நாட்கள் 30
மொத்த சம்பளம் ரூ. 15000

இதில் அடிப்படை சம்பளம் + பஞ்சப்படி ரூ. 12500 என கணக்கிட்டால், 
அதில் 12%  ரூ. 1500 என பிடித்தம் செய்யவேண்டும்.
 
நிறுவனமும் அதே அளவு 12% கணக்கிட்டு ரூ. 1500 யும் சேர்த்து, 
தொழிலாளியின் கணக்கில் ரூ. 3000 செலுத்தவேண்டும்.

இன்னும் வளரும்!
 
 
 
 

 

 

 

 

Garudan (2023) மலையாளம்


ஒரு கல்லூரியில் பண்பாடு நிகழ்வு போட்டிகள் நடைபெறுகின்றன. நிறைய மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள். அதில் ஒரு பெண் தன் வீட்டுக்கு போகும் வழியில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள்.


எதைச்சையாக அந்த இடத்திற்கு செல்லும் நபர்களால் அந்த பெண் காப்பாற்றப்பட்டாலும், கோமாவிற்கு போய்விடுகிறாள்.

வழக்கு போடப்பட்டு, நாயகனான போலீசு அதிகாரி விசாரணையை துவங்குகிறார். உடனடியாக யாரையும் கைது செய்யமுடியவில்லை. கைது செய்ய சொல்லி போராட்டங்கள் நடக்கின்றன. கொஞ்சம் சுற்றி வளைத்து ஆதாரங்களைத் திரட்டி ஒரு பேராசிரியரை கைது செய்து குற்றத்தை நிரூபித்து ஏழு ஆண்டுகள் தண்டனையையும் பெற்றுத் தருகிறார்கள்.

நிற்க. இதெல்லாம் எழுத்துப் போடுவதற்கு முந்தைய கதை. பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து அந்த பேராசிரியர் வெளியே வருகிறார். மீண்டும் வழக்கை விசாரிக்க அனுமதி கேட்கிறார். ஆச்சர்யப்படுகிறார்கள். அவரே சிறையில் இருந்த காலத்தில் வழக்கறிஞராக தேர்ச்சி பெற்று இருக்கிறார். அவரே தனக்காக வாதாடவும் செய்கிறார். ஒவ்வொரு சாட்சியத்தையும் உடைக்க துவங்குகிறார். தான் குற்றமற்றவர் என்பதை நிருபித்தாரா? அதற்கு பிறகு என்ன சிக்கல்கள் எழுந்தது என்பதை திரில்லாக சொல்லியிருக்கிறார்கள்.
****

பொதுவாக ஒரு குற்றத்திற்கு தண்டனை கிடைப்பது எல்லாம் இரண்டாம் பட்சம் தான். அந்த வழக்குக்கு வாய்தா, வாய்தா என அலைவதெல்லாம் தான் அதிகப்பட்ச தண்டனையாக இருக்கும். இதை அரசும் நீதிமன்றங்களும் தெரிந்தே தான் செய்கிறார்கள்.

ஒரு சொந்தத்தின் வீட்டு விசேசத்தில், தண்ணியைப் போட்டு தகராறு செய்து, ஒருவரை இன்னொருவர் குத்திவிட்டார். சொந்தக்காரர்களே என அக்கறைப்பட்டு உள்ளே புகுந்து விலக்கிவிட்டவர் எங்க அப்பா. அவரையும் கலாட்டா செய்த கோஷ்டி வழக்கில் சேர்த்து, பல வருடங்கள் வாய்தா, வாய்தா என அலையவிட்டார்கள். ஒவ்வொருமுறை வாய்தாவிற்கு போகும் பொழுது, மில்லில் விடுமுறை எடுக்க முடியாத சிக்கல். எடுத்தால், சம்பளம் பறிபோகும். எங்க அம்மா திட்டிக்கொண்டே இருப்பார். ஒரு வழியாய் வழக்கு முடிவுக்கு வரும் பொழுது, ”குத்திட்டு செத்தே போங்கடா! நான் விலக்கிவிட மாட்டேன்டா!” என அப்பா முடிவெடுக்கும் நிலைக்கு நீதிமன்றம் தள்ளிவிட்டது எனலாம்.

ஆனால், திரைப்படத்தில் எல்லாம் விரைவாக நடக்கும். பாலியல் பலாத்காரம், கோமா, மக்கள் போராட்டம் என்பதால், வழக்கை விரைவாக நடக்கும் என நாம் ஆறுதல் சொல்லிக்கொள்ளலாம்.

கதை கொஞ்சம் திரிஷ்யம் சாயல் தான். கதையில் கொஞ்சம் மெனக்கெட்டு வேலை செய்து, எடுத்திருக்கிறார்கள். ஆகையால் சுவாரசியமாய் இருக்கிறது.

படத்தில் கருடனுக்கு விளக்கம் சொல்லும் பொழுது தான் கொஞ்சம் ஜெர்க்கானது. நேர்மையான போலீசு அதிகாரியாக சுரேஷ் கோபி. நேர்மையாக இருப்பதினாலேயே வரும் சிக்கல்களை நன்றாக நடித்திருக்கிறார். (ஒரு சின்ன சதவிதம் பேர் அப்படி இருப்பது உண்மையிலேயே துறையில் இருப்பது, சிக்கிக்கொள்வது போல தான்!) அலட்டிக்கொள்ளாத பேராசிரியராக பிஜூ மேனனும் அருமையாக செய்திருக்கிறார். மற்றவர்களும் துணை நின்றிருக்கிறார்கள்.

படம் நவம்பரில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, இப்பொழுது பிரைமில் இருக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்.

பார்க்கிங் – தமிழ் (2023)


கணிப்பொறியாளரான நாயகன் கர்ப்பிணியாக இருக்கும் தன் துணைவியாருடன் சென்னையில் அந்த வீட்டின் மாடி வீட்டுக்கு புதிதாக குடிவருகிறார். கீழே ஒரு அரசு அதிகாரியாக இருப்பவர் தனது துணைவியார், கல்லூரி செல்லும் மகளுடன் வாழ்ந்து வருகிறார்.


பரஸ்பரம் அறிமுகமாகி உறவு நன்றாக நகரும் பொழுது, நாயகன் தன் தேவைக்கு ஒரு கார் வாங்குகிறார். கீழே காரை நிறுத்தும் பொழுது அரசு அதிகாரி பைக்கை நிறுத்துவதிலும் எடுப்பதிலும் சிரமப்படுகிறார். இதில் எழும் சின்ன வாய்த்தகராறு, இருவருக்கும் எழும் ஈகோ சிக்கலினால் வெடிக்க துவங்குகிறது.

பிறகு நடக்கும் களேபரங்கள் தான் கதை.
***

ஒரு உறவை ”தூரத்து சொந்தம்” என்பது போல பக்கத்து வீட்டு உறவுகளை “நெருங்கிய தூரம்” எனலாம் என்கிறார் மருத்துவர் ருத்ரன் உடல்நிலை சரியில்லை, அவசர உதவிக்கு எல்லாம் உறவுக்காரன், நண்பன் எல்லாம் வருவதற்கு தாமதமாகும். அக்கம் பக்கத்து வீட்டுக்காரன் தான் அவசரத்துக்கு உதவுவான். இந்த புரிதல் எப்பொழுதும் இருக்கவேண்டும். அதன் உறவின் எல்லைகளை சரியாக புரிந்து வைத்து கையாளவேண்டும்.

இல்லையெனில் இந்தப் படத்தில் வருவது போல சிக்கல்கள் தினசரி வரத்தான் செய்யும். மன உளைச்சல்களுக்குள்ளும் சிக்கிக்கொள்வோம். செய்தித்தாள்களில் பார்க்கும் பொழுது அக்கம் பக்கத்து உறவுகளின் வாய்த்தகராறு, அடிதடி சண்டைகள் வழக்குகள் வரை செல்வதைப் பார்க்கிறோம். அதிகப்பட்சம் கொலை வரைக்கும் கூட போகின்றன.

இப்படியான கதைகளை ஒன்றிணைத்து தான் இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் கதை எழுதி, தொய்வில்லாத திரைக்கதையாக்கி இயக்கியும் இருக்கிறார். ஆனால் இறுதி காட்சிகளில் “டேய் ரெம்ப ஓவராத்தான் போறீங்க!” என சொல்ல வைத்துவிட்டார்கள். எதார்த்தத்தில் அப்படியே நடந்தாலும், படத்திலும் அப்படியே வைக்கவேண்டியதில்லை.

எம்.எஸ். பாஸ்கர் கலக்கியிருக்கிறார். ஹரிஷ் கல்யாண் அவருக்கு ஈடு கொடுத்திருக்கிறார் எனலாம். மற்றபடி, இந்துஜா, ரமா, இளவரசு என எல்லோருமே நன்றாக செய்திருக்கிறார்கள்.

திரையங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பாருங்கள்.