வீட்டில் அம்மா தேநீர் வாங்க கடைக்கு அனுப்புவார். அங்கு கிடக்கும் தினத்தந்தியில் படக்கதையான சிந்துபாத்தை எட்டு வயதில் படிக்க துவங்கினேன். பிறகு பள்ளி விட்டு வீட்டுக்கு போகும் வழியில் அம்புலி மாமா, பாலமித்ரா, படக்கதைகள் என 25 பைசா கொடுத்து.. இருட்டும் வரை படித்துவிட்டு வீடு திரும்புவேன்.
ஒரு முடிவெட்டும்
கடையில் எதைச்சையாய் இராஜேஷ்குமார் அறிமுகமாக,
ப.கோ. பிரபாகர், சுபா என துவங்கி… சுஜாதா, பாலகுமாரன், ஜானகிராமன் என நகர்ந்துகொண்டிருக்கும்
பொழுது, இடது சாரி தோழர்கள் அறிமுகமானார்கள்.
ஜெயகாந்தன், கார்க்கி,
டால்ஸ்டாய் என வாசிப்பு உலகம் விரிந்து பரந்தது.
இன்றைக்கும் என்னைப் பாதுகாப்பது, அறிவூட்டுவது எல்லாம் தேர்வு செய்து படிக்கும்
புத்தகங்கள் தான்.
சமீபத்தில் சிறார்
இலக்கியம் குறித்து எழுத்தாளர் விழியன் விரிவாக பேசிய உரையை கேட்டேன்.
காணொளி உலகமாக
உலகம் மாறிவிட்ட பிறகு, குழந்தைகள் பள்ளிப் புத்தகங்களை மட்டுமே படிக்கவேண்டும் என்ற
நிலை மாறிய பிறகு, ஓய்வு என இல்லாமல் நகரும் குழந்தைகள்.
சிறார் இலக்கியத்தின்
வரலாறு, எப்பொழுது அதன் பொற்காலம், இப்பொழுது எப்படி இருக்கிறது? எத்தனைப் புத்தகங்கள்
வெளிவந்தது. இப்பொழுது கணிசமாக குறைந்து போயிருக்கிறது. என்ன செய்யவேண்டும்? எழுதுவதில்
எது உள்ளடக்கமாக இருக்கவேண்டும்? என அவர் பேசிய ஒரு மணி நேர உரை முக்கியமானது.
புத்தகங்கள் ஒருபக்கம்
குறைந்திருக்கிறது. வாசிப்பது குறைந்திருக்கிறது என்றால்… ஆண்டுக்கு சில நூறு படங்கள் வெளிவரும் நம் நாட்டில்,
சிறார்களுக்கான திரைப்படங்களும் மிகவும் குறைவு. அதுவும் நல்ல திரைப்படங்களை விரல்
விட்டு எண்ணிவிடலாம். பெரியவர்களுக்கான படத்தைத் தான் குழந்தைகளும் தொடர்ந்து பார்த்துவருகிறார்கள்
என்பது பெரிய துயரம்.
இந்த நிலைமை மாற
நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் அந்த உரையில் சொல்லியிருக்கிறார் என்பது முக்கியமானது.
அவசியம் கேளுங்கள். அந்த உரையின் சுட்டியை கீழே பகிர்ந்திருக்கிறேன்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment