> குருத்து: கானிகோசென் - அதிகம் விற்கும் மார்க்சிய நாவல்! விரும்பும் படம்!

November 25, 2009

கானிகோசென் - அதிகம் விற்கும் மார்க்சிய நாவல்! விரும்பும் படம்!


அமெரிக்காவிற்கு அடுத்து மிகப்பெரிய பொருளாதார நாடு ஜப்பான். 1995ல் குமிழி பொருளாதாரம் ஜப்பானில் வெடித்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பங்கு சந்தை குறியீட்டு எண்கள் சட சடவென சரியத் துவங்கின. (20000 புள்ளிகளுக்கும் மேலாக). சிறிசும், பெரிசுமாய் பல வங்கிகள் ஆயிரக்கணக்கில் திவாலாகின. நிறுவனங்கள் மஞ்சள் கடுதாசியை வரிசையில் நின்று கொடுத்தன.

பொருளாதார சரிவிலிருந்து மீட்க... ஜப்பான அரசு வங்கி விகிதத்தை குறைத்துப் பார்த்தது. ஆயிரக்கணக்கான கோடிகளில் மக்களின் வரிப்பணத்தை அரசு பங்குச் சந்தையில இறக்கி பார்த்தது. அமெரிக்க அரசைப் போல திவாலான முதலாளிகளை காப்பாற்ற அள்ளிக்கொடுத்தது. நிலைமையிலிருந்து மீள்வதற்குள் உலக பொருளாதார மந்தத்தில் ஜப்பான் மாட்டிக்கொண்டது.

இதுநாள்வரை ஜப்பானில் இருந்து தொழிலாளர்களை சுரண்டி கொண்டிருந்த பன்னாட்டு நிறுவனங்கள், நெருக்கடியில் மாட்டியுள்ள ஜப்பானை கண்டுகொள்ளாமல், அடுத்து மலிவுவிலை உழைப்புச் சந்தையான சீனாவிற்கு மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜப்பானில் நிரந்தர தொழிலாளர்களை லட்சகணக்கில் வீட்டிற்கு அனுப்புகிறார்கள். ஒப்பந்த தொழிலாளர்களை அதிகமாக்கி கொண்டே போகிறார்கள். (650 லட்சம் தொழிலாளர்களில் 200 லட்சம் ஒப்பந்த தொழிலாளர்கள்) . ஜப்பானிய தொழிலாளர்கள் இன்றைக்கு வேலைக்காக சீனாவுக்கு போகிறார்கள். மன அழுத்தம், நோய்க்கு வைத்தியம் பார்க்க முடியாத வசதியின்மை, கடன் தொல்லை போன்ற காரணங்களால்... ஆண்டுக்கு 33500 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.(தினமலர் - ஆக. 2008) சராசரியாக தினம் 100 பேர். தற்கொலையில் உலகத்தில் முதலிடம். வயதானவர்கள் அதிகம் வசிக்கும் நாடும் ஜப்பான் தான்.

ஜப்பானில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகள், நிதிமூலதன கும்பலகள்
மக்களின் சேமிப்புகளை கைப்பற்றி, பங்குச்சந்தையில் கொட்டு, எங்களுக்கு கொடு என ஜப்பான் அரசை மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். உலகில் அதிகம் சேமிப்பவர்கள் ஜப்பானியர்கள் தான்.

ஜப்பான் மக்கள் முதலாளித்துவத்தை நம்பினார்கள். தொழிற்சங்கங்களில் இணைவது சொற்பமானார்கள் தான். முதலாளிகளோ பலமுறை கழுத்தறுப்பு செய்தார்கள். கம்பி நீட்டினார்கள். இன்றைக்கு, அரசிடம் காப்பாற்ற சொல்லி, கையேந்தி நிற்கிறார்கள்.

இனி முதலாளித்துவத்தை நம்பி பயனில்லை என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். இன்றைக்கு ஜப்பானில் அதிகம் விற்கும் நாவல் 'கானிகோசென்" என்ற நாவல். 6 லட்சம் பிரதிகளூக்கும் மேல் விற்பனையாகியிருக்கிறது. 1929ல் வெளிவந்தது. இதை எழுதியவர் டகீஜீ கோயாஷி என்னும் கம்யூனிஸ்ட். தனது 29வயதிலேயே காவல்துறையின் சித்தரவதையால் கொல்லப்பட்டவர்.

நாவல், ஒரு கொடூரமான கப்பல் தலைவனின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து வேலை நிறுத்தம் செய்ய விழைவதைப் பற்றியது. முதலாளித்துவத்தையும், அதன் பெருமுதலாளிகளையும் வெல்ல அவர்கள் சபதமேற்பதே அந்நாவலின் முடிவு

இந்நாவலை 1953லும், 2007 லிலும் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த பூஷன் திரைவிழாவில் திரையிட்டிருக்கிறார்கள்.

மேலை நாடுகளில் மார்க்ஸின் "மூலதனத்தை" புரட்டுகிறார்கள். ஜப்பானில், கம்யூனிசத்தைப் பற்றி சிந்திக்கிறார்கள். மார்க்ஸிற்கு மறைவில்லை.


தொடர்புடைய சுட்டிகள் :


அதிக அளவில் விற்பனையாகும் புத்தகங்கள் வரிசையில் மார்க்சிய நாவல் - இனியொரு

கானிகாசென் - விக்கிபீடியா

கானிகாசென் - திரைப்பட விமர்சனம்

தொழிலாளர்கள் பற்றிய இலக்கியங்கள்

1 பின்னூட்டங்கள்:

குருத்து said...

சோதனை