> குருத்து: உலகம்
Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

July 4, 2024

இந்த உலகம் எப்போது மாறும்? - சாம்ஸ்கி


ஒரு நல்ல காபி அருந்தினால், ஒரு நல்ல புத்தகம் வாங்கினால், ஒரு நல்ல சட்டை அணிந்தால், பூங்காவில் சற்று நேரம் நிம்மதியாக நடந்தால், உட்கார்ந்து ஒரு நாலு வரி எழுதினால் மனம் உடனே சோர்ந்துவிடுகிறது. நான் என்ன தவறு செய்தேன்? எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? இந்த உலகம் ஏன் இப்படி இருக்கிறது? நான் என்ன செய்தால் நிலைமை மாறும்?


ஒன்றுமே புரியவில்லையே சாம்ஸ்கி! இவை எல்லாம் நல்ல விஷயங்கள்தானே? இவற்றை எல்லாம் செய்தால் மனம் மகிழ்ச்சிதானே அடைய வேண்டும்? உங்களுக்கு மட்டும் ஏன் சோர்வு ஏற்படுகிறது? சம்பந்தம் இல்லாமல் ஏன் என்னென்னவோ யோசிக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். எனக்கு என்னவோ எல்லாவற்றுக்கும் சம்பந்தம் இருப்பதாகவே தோன்றுகிறது.


அமெரிக்கா எனும் செழிப்பான நாட்டில் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என் வீதி பளபளப்பானது. ஒரு நாளைக்கு நான்கு முறை துடைத்துத் தேய்த்துச் சுத்தப்படுத்துவார்கள். மைதானம்போல் கடைகள் விரிந்திருக்கும். அங்கே இல்லாததே இல்லை. என் வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளிக்கூடத்தைப் பார்த்தால் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல் இருக்கும். அவ்வளவு ஒழுங்கு! ஒரு வீட்டில் ஐந்து பேர் இருந்தால் குறைந்தது ஐந்து கார்களாவது அவர்களிடம் இருக்கும்.


குழாயைத் திருப்பினால் சுத்தமான தண்ணீர் பெருகும். நல்ல பழங்கள், நல்ல காய்கறிகள், நல்ல பால், நல்ல உணவு வகைகள் என்று விரும்பும் அனைத்தும் கிடைக்கும். எங்கள் பூங்காக்கள் அழகானவை. எங்கள் வீடுகள் நேர்த்தியானவை. எங்கள் தோட்டங்கள் அற்புதமானவை. எங்கள் குழந்தைகள் விரும்பும் அனைத்தையும் நாங்கள் வாங்கிக் கொட்டுகிறோம். அவர்களுக்குத் தேவைப்படும் எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறோம். எவ்வளவு விலை உயர்ந்த விளையாட்டுப் பொருள் கேட்டாலும் இதோ என்று வாங்கி வந்து கொடுத்துவிடுவோம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எங்களுக்கு ஒரு விஷயம் பிடித்திருக்கிறது என்றால் தயங்காமல் வாங்கிவிடுவோம். அதன் விலை என்ன, இது எவ்வளவு என்றெல்லாம் யோசிக்கவே மாட்டோம்.


வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் உல்லாசமாகவும் உற்சாகமாகவும் வாழ வேண்டும். எப்போதும் இன்பமாகவும் சுகமாகவும் இருக்க வேண்டும். இதுதான் இங்குள்ள ஒவ்வொருவரின் கனவு. அந்தக் கனவைத் தேடித்தான் இங்கே ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.


அந்தக் கனவுதான் என்னைச் சோர்வில் தள்ளுகிறது. அந்தக் கனவுதான் என்னை உறங்கவிடாமல் செய்கிறது. நம் வானில் எவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கின்றவோ அதைக் காட்டிலும் அதிகமான மக்கள் இருளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். கறுப்புப் காபி அருந்தலாமா அல்லது பழச்சாறா என்று இங்கே நாம் அமர்ந்து விவாதித்துக்கொண்டிருக்கிறோம். கையில் இருப்பதை இப்போதே சாப்பிட்டுத் தீர்த்துவிட்டால் அடுத்த வேளைக்கு என்ன செய்வது என்று உலகம் முழுக்க ஒரு பெரும் கூட்டம் கவலையோடு இருக்கிறது. நான்கு பேர் உணவை ஒருவரே சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒரு தட்டின் முன்னால் ஒரு முழுக் குடும்பமும் உட்கார்ந்து கொண்டிருக்கிறது.


அழகிய பூ வேலைப்பாடுகள் கொண்ட ஒரு பெரிய பீங்கான் கோப்பை என் மேஜையில் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. அதில் நிறைந்திருக்கும் காபியின் நறுமணம் அறை முழுக்கப் பரவி இருக்கிறது. நான் வாழும் இதே உலகில் குழந்தைகள் நாள் முழுக்கக் குப்பைக்கூளங்களைக் கிளறி, பை பையாக பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சம்பாதிக்கும் காசைவிட நான் சில நிமிடங்களில் அருந்தி முடிக்கப்போகும் காபியின் விலை பல மடங்கு அதிகம். என் வீட்டு நூலகத்தில் இருக்கும் ஒரு புத்தகத்தின் விலையில் பத்துக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க முடியும்.


இந்த நொடி பல நாடுகளில் போர் நடந்துகொண்டிருக்கிறது. பல வீடுகள் சிதறி விழுந்துகொண்டிருக்கின்றன. நானோ அமைதியான ஒரு நாட்டில் அமர்ந்து எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறேன். போர் எப்படி அவர்களைப் பாதிக்கிறதோ அதேபோல் அமைதி என்னைப் பாதிக்கிறது. என் மேஜையில் உள்ள காபியும் பழங்களும் பாலும் இறைச்சியும் என்னை நோக்கி ஆயிரம் கேள்விகளை வீசுகின்றன. காற்றோட்டமான என் வீட்டைக் கண்டு, அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் என் ஆடைகளைக் கண்டு, தூசு படாத என் புத்தகங்களைக் கண்டு, சுத்தமான என் பூங்காவைக் கண்டு, பளபளப்பான வீதிகளைக் கண்டு, விலை உயர்ந்த கார்களைக் கண்டு நான் தலைகுனிந்து நிற்கிறேன்.


உலகின் பெரும்பகுதி உடைந்துபோய் இருக்கும்போது எனக்கு அருகில் இருக்கும் சுத்தத்தை எப்படி என்னால் கொண்டாட முடியும்? என் காபியின் நறுமணத்தை எப்படி என்னால் ரசிக்க முடியும்? என் அமைதியான, அழகான, வசதியான வாழ்வை எப்படி என்னால் சகித்துக்கொள்ள முடியும்? என் உலகின் கால்களில் கனமான சங்கிலிகள் சிக்கி இருக்கும்போது நான் மட்டும் எப்படிச் சுதந்திரமாக நடைபோட முடியும்? என் உலகம் துன்பத்தில் இருந்து மீளும்வரை எனக்கு இன்பம் இல்லை. நிம்மதி இல்லை. நிறைவு இல்லை.


என்னிடம் இருக்கும் ஒரே வளம் சிந்தனை. அதை நான் என் உலகுக்கு வழங்குகிறேன். அது மட்டுமே முடியும் என்னால். எனவே, அதைச் செய்கிறேன். எனது உலகம் தன் கவலைகளைக் கைவிடும்போது நானும் என் கவலைகளில் இருந்து வெளியே வருவேன். அப்போது என் காபியை ரசித்துப்  பருகுவேன்.


- மருதன்


(தேன்மிட்டாய், மாயாபஜார், இந்து தமிழ் திசை)

November 25, 2022

கொசு தொல்லை தாங்க முடியலை!



உலக அளவில் கொசுவால் ஆண்டுக்குப் பத்து லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். கொசுக்கடியால் பரவும் மலேரியா, டெங்கு போன்றவை நம்மை மட்டுமல்ல உலக நாடுகளையே பயமுறுத்திவருகின்றன.


****


வீட்டில் ஒரு வேலையை நிம்மதியாக செய்யமுடியவில்லை. ஆழ்ந்து… மன்னிக்கவும் நிம்மதியா தூங்கவே முடியவில்லை. ஒழுங்காக தூங்காததால் அலுவலகம் போனால் நாள் முழுவதும் சோர்வாக இருக்கிறது. கடிக்கும் கொசுக்களை ஷாக் அடிக்க வைத்து பழிவாங்குவோம் என கொசு பேட் வாங்கினோம். கொசு கடிக்கிறது. ஆனால் கொசுவை அடிக்க முடியவில்லை. கண்ணில்படாத அளவிற்கு மிகச் சிறியதாக இருக்கிறது. ஓடோமஸ் தடவினால், ஒரு அரை மணி நேரம் தான் தாங்குகிறது. லிக்யூட் வாங்கி மாட்டலாம் என்றால், நமக்கு அலர்ஜி பிரச்சனை இருக்கிறது.

எங்கள் பகுதி பரவாயில்லை. வேலை நிமித்தமாக வேறு வேறு பகுதிகளுக்கு போனால், அங்கெல்லாம் கொசுக்கள் பெரிது பெரிதாக வளர்ந்திருக்கின்றன. ஒரு கொசு கடித்தால், சில நிமிடங்களுக்காவது சுளீரென வலிக்கிறது. பகுதியில் இருக்கும் பூங்காவிற்கு படிக்க போனால், கொசுப் படையே வந்து கடிக்கிறது. பத்து நிமிடத்திற்கு மேல் வேறு வழியே இல்லாமல் ஓடியே வந்துவிட்டேன். வயதானவர்கள் என்ன செய்வார்கள். குழந்தைகள் என்ன ஆவார்கள். டெங்குக்கு மருந்து இல்லை எனவும் சொல்லி பதறவைக்கிறார்கள்.

இதோ தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை முடிந்ததும், வடகிழக்கு பருவ மழை என்பது கனமழையாக தொடர்ச்சியாக பெய்துவருகிறது. டெங்கு காய்ச்சல் பரவுவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

கொசுக்களில் 3 முக்கியமான வகைகள் உள்ளன. மலேரியா நோய் பரப்பும் ‘அனோபிலிஸ் ஸ்டீபன்சி’ இந்தக் கொசு நன்னீரில் இனப்பெருக்கம் செய்கிறது. அதிகாலையிலும், மாலை நேரத்திலும் மனிதர்களைக் கடித்து ‘பிளைஸ்மோடியம்’என்ற நோய்க் கிருமியைப் பரப்பி, நோய் உண்டாக்குகிறது. மலேரியா நோய் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் மற்றும் ரத்தசோகை ஏற்படுகிறது.

இரண்டாவது ‘ஏடிஸ் இஜிப்டி’ கொசு. இது தேங்கியுள்ள தண்ணீரில் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த கொசு கடிப்பதால், வைரஸ் நோய்க் கிருமிகள் மனித உடலுக்குள் பரவி, டெங்கு, சிக்குன் குன்யா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

மூன்றாவது ‘கியூளக்ஸ் குன்கிபேசியேட்டஸ்’ கொசு. இது சாக்கடைக் கழிவுநீரில் இனப்பெருக்கம் செய்கிறது. இவை நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழைந்து கடிக்கத் தொடங்குகின்றன. அப்போது நுண்ணிய நாடாப்புழுவை வெளியிடுகின்றன. அவை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவி, யானைக்கால் நோயை உருவாக்குகிறது. பகலில் இந்த நாடாப்புழுக்கள் மனிதர்களின் முதுகெலும்பில் ஒளிந்துகொண்டு, இரவில் மனிதர்களின் ரத்த ஓட்டத்தில் கலப்பதால் நோய் உண்டாகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்கள் வீங்கி, மரக்கட்டைபோல காணப்படும்.

கடந்த 2020-ல் தமிழகத்தில் 2,410 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 2021-ம் ஆண்டில் 6,039 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நடப்பாண்டில் இந்த வருடம் ஆகஸ்டு வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

பகுதியில் சுகாதார ஊழியர் தொடர்ச்சியாக கொசுவை கட்டுப்படுத்துவதற்காக பினாயில் போல ஒரு மருந்தை வாரத்திற்கு ஒருமுறை வந்து, கிணற்றில், நீர்த் தொட்டியில் ஊற்ற தருவார். போன மாதம் அவரிடம் ”நீங்கள் கொடுப்பதை நானும் தொடர்ந்து ஊற்றிக்கொண்டே இருக்கிறேன். கொசு அதிகமாகி கொண்டே போகிறதே! மருந்து ரிவர்சில் வேலை செய்கிறதோ” என கிண்டலாகத்தான் கேட்டேன். ”சென்னை மாநகராட்சி தளத்தில் புகார் செய்யலாம் என நினைக்கிறேன்” என சொன்னதும், சுதாரித்து, ”அந்த புகார் எங்க சுகாதார அதிகாரிக்கு தான் வரும். அவரிடமே பேசுங்களேன்” என மொபைல் எண் தந்தார். உருப்படியான பதில் எதுவும் சொல்லப்போவதில்லை என அழைக்கவேயில்லை.

வழக்கம் போல இந்த வாரமும் வீட்டுக்கு வந்த பொழுது, ”கொசு அதிகமாகி கொண்டே போகிறதே மாநகராட்சி சார்பில் என்ன செய்கிறீர்கள்?” என கேட்டேன். “வெளிப்படையாக சொல்கிறேன் சார். இந்த மருந்தெல்லாம் சும்மா சார். ஏகப்பட்ட கமிசன். இந்த மருந்துக்கு எல்லாம் கொசு கட்டுப்படாதுன்னு எங்களுக்கே தெரியும். மக்களிடம் எதையாவது கொடுத்தால் தானே, பேச முடியும். ஒவ்வொரு வீடாக ஏறி தண்ணீர் தேங்குகிற மாதிரி எதையாவது வைத்திருக்கிறார்களா என சோதித்துத்தான் வருகிறேன்.” என்றார். இப்படி சொல்கிறவர் எங்க வீட்டிற்கு மாடியில் வந்து சோதித்ததே இல்லை. யார் வீட்டிலும் ஏறி நான் பார்த்ததும் இல்லை.

சென்னை மாநகராட்சி சாலைகளில் தண்ணீர் தேங்குவதை எல்லாம் இப்போதைக்கு கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமில்லை என புரிந்துகொண்டு எல்லோருக்கும் கொசுவலை கொடுப்பது என முடிவு செய்து, துவக்கமாக நீர்நிலைகளை ஒட்டி வாழும் மக்களுக்கு விலையில்லாமல் கொசுவலைகள் தந்துகொண்டிருக்கிறார்கள். பிறகு மற்ற பகுதிகளுக்கும் தரப்போவதாக சொல்கிறார்கள்.

இது தமிழகம் தழுவிய பிரச்சனை மட்டுமில்லை! இந்திய அளவிலும் இருக்கிறது. சமீபத்தில் திகார் ஜெயிலில் உள்ள ஒரு கைதி ”கைதிகள் அனைவருக்கும் கொசுவலை தரவேண்டும்” என உச்சநீதிமன்றம் வரைக்கும் போய் கேட்டால், ”அதெல்லாம் கொடுக்க முடியாது” என்று சொல்லிவிட்டார்கள். நம் சிறைகளில் காசு கொடுத்தால் ”சகலமும்” கிடைக்கும். ஊர் அறிந்த விசயம் தான். காசு இல்லாதவர்கள் கொசுக்கடியில் சிக்கி, டெங்கு வந்து சாகவேண்டியது தான்.

உலக அளவில் கொசுவால் ஆண்டுக்குப் பத்து லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். கொசுக்கடியால் பரவும் மலேரியா, டெங்கு போன்றவை நம்மை மட்டுமல்ல உலக நாடுகளையே பயமுறுத்திவருகின்றன. மக்கள் கொசுவிடமிருந்து தற்காலிகமாக தப்பிக்க பேட், ஓடோமஸ், ஆல் அவுட் போன்ற கெமிக்கல்களை பயன்படுத்துகிறார்கள். கொசுவை ஆக்கப்பூர்வமாக கட்டுப்படுத்துவதற்கு முதலாளித்துவ உலகம் முயல்கிறதோ இல்லையோ, கொசுவை வைத்து பல்லாயிரம் கோடி கல்லாக் கட்டுவதில் கவனம் செலுத்துகிறது. இந்த கொசுவர்த்தி புகை, ஆயில் கெமிக்கல்கள் பயன்படுத்துவதால், 75 சிகரெட் புகைத்தால் எவ்வளவு கேடு வருமோ அவ்வளவு கேடுகளை மனிதனுக்கு உண்டாக்குகின்றன என்கிறார் பத்மஸ்ரீ விருது பெற்ற விவசாயி வேங்கடபதி.

அவரே தற்காலிக தீர்வாக, ”கொசுக்களைக் கட்டுப்படுத்த ரசயானங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக தாவர பூச்சிக்கொல்லி போன்றவற்றைப் பயன்படுத்துவது சிறந்தது என்கிறார்கள். தாவரப்பூச்சி கொல்லி என்றாலே, நமக்கு நினைவுக்கு வருவது இந்திய பாரம்பரியம் கொண்ட வேப்பமரம். மருத்துவக் குணம் கொண்டதாகவும், இயற்கை பூச்சிக்கொல்லியாகவும் உதவுகிறது. வேப்பமரத்தின் இலை, காய்கள், பழங்கள், கொட்டை, பட்டை, வேர் போன்ற அனைத்தும் பூச்சிக்கொல்லியாக விளங்குகின்றன. வேப்ப எண்ணெயிலும் கொசுவை ஒழிக்கும் தன்மை உள்ளது. வேப்ப எண்ணெயை தண்ணீரில் தெளிக்கும்போது, இதனுடைய மூலக்கூறுகள் கொசுக்களை ஊடுருவி, தாக்கி அழிக்கிறது. தும்பை, துளசி போன்ற மூலிகைச் செடிகளும் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டவை. நெல்லிச்சாறு, முருங்கைச்சாறு போன்றவற்றையும் தண்ணீரில் தெளிக்கும்போது, கொசுப்புழுக்கள் அழிக்கப்படுவது மட்டுமின்றி, தண்ணீரில் உள்ள வைரஸ், பாக்டீரியா, பூஞ்சாணம் போன்ற நுண்கிருமிகளும் அழிந்து, தண்ணீரும் தூய்மையாகிறது. கொசுக்களை வேப்ப இலை, தும்பை துளசி, பேய் முரட்டி போன்ற இலைகளைக் கொளுத்தி, புகை எழுப்பி, விரட்டலாம். ஒரு சொட்டு வேப்ப எண்ணெய் மற்றும் பத்து சொட்டு தேங்காய் எண்ணெயியை உடம்பில் தேய்த்து, கொசுக்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். வேப்பங்கொட்டைச்சாறு தெளித்தும், கொசுக்களின் வாழ்க்கை சுழற்சியை அழிக்கலாம்.” என ஆலோசனை சொல்கிறார்.

கொசுக்களை கட்டுப்படுத்துவதற்கான விஞ்ஞான ஆய்வுகள் ஒருபுறம் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அதில் ஆண் கொசுக்களைப் பிடித்து மலட்டுத் தன்மையை உருவாக்கி மீண்டும் வெளியே உலவ விடுவதன் மூலம் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம் என்கிறார்கள். இப்படி செய்வதன் மூலம் பின்விளைவுகள் என்ன ஆகும் என்பதையும் சூழலியலாளர்கள் கவலை கொள்கிறார்கள். இப்படிப்பட்ட சோதனை முயற்சிகளையும் ஆப்பிரிக்காவின் பின் தங்கிய நாடுகளில் செய்ய முயல்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்துகொண்டும் இருக்கின்றன.

கொசு பிரச்சனை குறித்து சூழலியலாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்… “சமீபகாலங்களில் கொசுக்கள் அபரிமிதமாக பெருகியிருப்பதற்கு சூழலியலாளர்கள் பல காரணங்களை முன்வைக்கின்றனர். நீர்நிலைகளில் கலக்கும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் கொசுக்களையும் அவற்றின் லார்வாக்களையும் உண்டுவாழும் நீர்நிலவாழ் உயிரினங்களை அழித்தது கொசுக்களின் பெருக்கத்துக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமன்று புவி வெப்பமாதலும் கொசுக்களின் பெருக்கத்துக்கு சாதகமானதாக ஆய்வாளர்களால் முன்வைக்கப் படுகிறது. கொசுக்களை கட்டுப்படுத்தவோ அல்லது முழுவதுமாக ஒழிக்கவோ உலகெங்கும் பலவிதமான ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால் இதுவரை எங்கும் முழுமையான சூழலுக்கும் மனிதர்களுக்கும் பாதுகாப்பான வெற்றிகரமான முறைகள் என எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரத்தில் கொசுக்களையோ அல்லது பூச்சிகளையோ ஒழிப்பது என்பது சாத்தியமற்றது என்று சூழலியலாளர்கள் கருதுகின்றனர். உதாரணமாக என்னதான் வயலில் பூச்சிகளை ஒழிக்க தினமும் புதுப்புதுவிதமான பூச்சிக் கொல்லிகளை உருவாக்கினாலும் நம்மால் இதுவரை எந்தப் பூச்சியினங்களையும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை என்பதோடு அவை நாளுக்குநாள் வீரியமடைந்து வருகின்றன. அதுமட்டுமின்றி அந்த பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளைவிட பெரிய அபாயமாக மாறியிருக்கின்றன. கொசுக்களை கட்டுப்படுத்துவது அவசியமே எனினும் அவற்றை அழிப்பதுபோன்ற முயற்சிகள் பல்லுயிரின சமநிலையை வெகுவாக பாதிக்கும். கொசுக்களை முக்கிய உணவாகக் கொள்ளும் பூச்சிகள் அவற்றை உண்ணும் பறவைகள் விலங்குகள் ஆகியவற்றின் நலம் நமது சூழலைக்காக்க மிகவும் அவசியம்.” என்கிறார்கள்.

ஆக ஒன்று புரிகிறது. ஒன்றை தொட்டு, ஒன்றை தொட்டுத் தான் சமூகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாக புரிகிறது. மொத்த உலகமும் சுற்றுச் சூழலை சமூக அக்கறையோடு இயங்கினால் தான், கொசுவை கூட கட்டுப்படுத்த முடியும் என புரிகிறது. உலகம் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் ஆட்சி செய்வது முதலாளித்துவ சர்வாதிகாரம் தான். முதலாளித்துவம் தான் எதிர்கால கண்ணோட்டம் இல்லாமல், அறிவியல்பூர்வமான அணுகுமுறை இல்லாமல் இயற்கை சூழலை கடுமையாக சிதைக்கிறது. ஆக கொசுவை கட்டுப்படுத்தி உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் நிம்மதியாக வாழவேண்டுமென்றால் கூட, காலாவதியாகிப் போன முதலாளித்துவத்தை சவக்குழிக்குள் அனுப்பினால் தான் சாத்தியம் என்கிற முடிவுக்கு தான் வரமுடிகிறது.



July 10, 2022

இலங்கையின் இன்றைய நிலைமைக்கு காரணமும் தீர்வும்!


1. தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பறித்து, ஆயுதப் போராட்டத்தில் தள்ளியது. அதற்கான எதிர்விளைவாய், சில பத்தாண்டுகள் உள்நாட்டில் போர் நீடித்தது!


2. போரைத் தூண்டிவிடுவதும், அதற்கு ஆயுதம் சப்ளை செய்வதும், ஏகாதிப்பத்தியங்கள் தான். இலங்கைக்கு நிறைய ஆயுதங்களும், அரசியல் ஆதரவும் தந்தார்கள்.

3. விடுதலைப் புலிகளையும், இறுதிப் போரில் மக்களையும் கொன்று குவித்து, "தற்காலிகமாக" வென்றார்கள். ஆனால் ஏகாதிப்பத்தியங்களின் கடன் வலையில் சிக்கிக்கொண்டார்கள். அதில் ஒரு பகுதி தான் சீனாவிற்கு துறைமுகத்தை எழுதிக்கொடுத்தார்கள்.

4. உள்நாட்டுப் போர் ஏகாதிப்பத்தியங்களால், முடித்து வைக்கப்பட்ட பொழுதும், அதற்கு பிறகாவது உற்பத்தியை அதிகப்படுத்த, பொருளாதார நிலையை சரி செய்ய மெனக்கெடவில்லை. போரில் "வென்று"விட்டோம் என்ற திமிரிலேயே சுற்றினார்கள்.

5. மேலே உள்ள காரணங்கள் தான் பிரதானமானவை. ஊடகங்கள் சில விசயங்களை பேசுகிறார்கள். அதெல்லாம் இரண்டாம் நிலையில் உள்ளவை.

6. இலங்கைக்கு சுற்றுலா வருமானம் முக்கியமானது. கொரானா உலக மக்களை முடக்கிவைத்தது. ஆகையால், இலங்கையின் சுற்றுலா வருமானம் குறைந்தது.

7. கொரானா காலத்தில் உலகம் முழுவதுமே உற்பத்தி சிக்கலானதால், இலங்கையில் உள்ள மக்கள் பல்வேறு வெளிநாடுகளில் வேலை செய்து பணம் அனுப்புவது சிக்கலானாது.

8. தேர்தல் வாக்குறுதியாக தேசிய வரியை 15% லிருந்து சரிபாதியாக குறைத்தார்கள். அதனால் தேசிய வருமானமும் பாதியாக குறைந்தது. இது ஒரு கணிசமான நெருக்கடி தந்தது.

(உடனே இந்தியாவில் உள்ள அதிகார வர்க்கம், நமது நாட்டிலும் மாநிலங்களின் தேர்தலின் பொழுது, நிறைய இலவசங்களை அறிவிக்கிறார்கள். இலங்கை நிலைமை இங்கும் வந்துவிடும் என ஆலோசனை செய்தார்கள். மக்களுக்கு தரும் மான்யங்களை விட, கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித்தருவதை நிறுத்துங்கள் என ஒருபோதும் ஆலோசனை தரமாட்டார்கள்

9. ஒரு நாட்டில் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருப்பது ஆரோக்கியமான நிலைமை இல்லை. அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாக குறையும். இலங்கையின் மேல்த்தட்டு வர்க்கத்தின் நுகர்வு அதிகம் இருந்தது. ஆகையால், தான் இறக்குவதி மிகவும் அதிகமானது என்கிறார்கள்.

10. நிரவாக குளறுபடி. தேர்தலில் ஜெயித்த பிரதிநிதிகள் 250 பேர் என்றால், துறைவாரியான அமைச்சர்களின் எண்ணிக்கை சரிபாதிக்கு மேல் இருந்திருக்கிறார்கள். தன்னுடன் ஒத்துழைக்க அவ்வளவு பேரை தாஜா செய்ய வேண்டியிருந்தது முக்கியமான நிலைமை.

11. ஒவ்வொரு துறையிலும் ராணுவத்தின் ஆட்கள் மேலே உட்கார்ந்து கொண்டு நிர்வாகம் செய்திருக்கிறார்கள். இதுவும் குளறுபடிகளுக்கு காரணம் என்கிறார்கள்.

இதெல்லாம் இலங்கை நிலைமையை தொடர்ந்து கவனித்ததின் வாயிலாக, பல பத்திரிக்கைகளில் படித்து நான் அறிந்தவை.

இதெல்லாம் நிலைமை சிக்கலானதற்கு காரணம். நிலைமையை சரி செய்ய, என்னுடைய கருத்து, பெரும்பாலான மக்களின் பிரதிநிதியாக‌ ஒரு சரியான கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கி, தலைமை தாங்கினால், நிலைமை சரியாகும். அங்கு சிலர் இருந்தாலும், இப்பொழுது மக்கள் மத்தியில் அப்படி ஒரு சரியான கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கு பெறாததால், தலைமை தாங்குவது உடனடி சாத்தியம் இல்லை.

மீண்டும் ஏகாதிப்பத்தியங்களுக்கு ஆதரவான, அங்குள்ள கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான முதலாளித்துவ ஆட்கள் ஆட்சிக்கு வருவார்கள் என்பது தான் கசப்பான நிலைமையாக இருக்கிறது.

நீங்கள் இலங்கை நிலைமைக்கு காரணமாகவும், தீர்வாகவும் என்ன சொல்கிறீர்கள்?

April 25, 2022

ஜூலியஸ் அசாஞ்சேவை கொலைகார அமெரிக்காவிடம் ஒப்படைக்காதே!


ஆப்கானிலும், ஈரானிலும் மக்களை கொன்று குவித்த அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை ஜூலியஸ் அசாஞ்சே உலகுக்கு அம்பலப்படுத்தினார். கொலைவெறியோடு அவரை விடாமல் துரத்தியது.

2019ல் ஈக்வடார் தூதரகத்தில் இருந்து அவரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றது லண்டன் போலீசு.

சிறையில் கடுமையாக சித்திரவதை செய்தார்கள். ஆறுமாதம் கழித்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பொழுது, அவரை சுற்றி என்ன நடக்கிறது என்பதையே புரிந்துகொள்ள முடியவில்லை.

ஐநாவின் சிறப்பு பிரதிநிதி நேரில் ஆய்வு செய்து, சித்திரவதை செய்ததை உறுதிப்படுத்தினார்.

உரிய சிகிச்சை தரவில்லை என்றால் சிறையிலேயே செத்துவிடுவார் என 60 மருத்துவர்கள் கூட்டு அறிக்கையாக வெளியிட்டார்கள்.

இப்பொழுது அமெரிக்காவிடம் அவரை ஒப்படைப்பதற்கான வேலைகளை வேகமாக செய்துவருகிறார்கள்.

லண்டன் நீதிமன்றம் "அமெரிக்காவிடம் ஒப்படைக்கலாம். இறுதி முடிவை உள்துறை செயலர் முடிவெடுப்பார்" என அறிவித்துவிட்டது.

உலக ரவுடி அமெரிக்காவின் கொடூர முகத்தை நன்றாக உணர்ந்தும் கூட மக்கள் மீதான மாறாத அன்பால் தான் அம்பலப்படுத்தினார்.

அமெரிக்காவிடம் ஒப்படைத்தால், 175 ஆண்டுகள் வரை தண்டனை கொடுத்து சிறையிலேயே கொன்றுவிடுவார்கள்.

இப்பொழுது மக்களும் ஜனநாயக சக்திகளும் அவருக்காக ஒரே குரலில் ஒலிக்கவேண்டும்.

"கொலைகார அமெரிக்காவிடம் ஒப்படைக்காதே!
ஜூலியஸ் அசாஞ்சேவை விடுதலை செய்!"

September 2, 2014

கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்



நிறைய புள்ளி விவரங்களுடனும், 35 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை ஒருமணி நேரத்தில் படித்து முடித்துவிட்டேன். குழந்தைகளிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக, அவர்களும் படிப்பதற்காக உருவாக்கிய புத்தகம் என்பதை பிறகு அறிந்துகொண்டேன்.

அடுத்த உலகப்போர் நீருக்காகத்தான் என கணித்திருக்கிறார்கள் சில அறிஞர்கள் என துவங்குகிறது புத்தகம். அந்த நீர் அரசியலைப் பற்றி விரிவாக விவாதிக்கிறது இந்த சின்னப் புத்தகம்.

புத்தகத்திலிருந்து சில பகுதிகள்…

சவுதி அரேபியா கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு பெற்று ஏற்றுமதியும் செய்துகொண்டிருந்தது.  ஆனால், தற்பொழுது கோதுமையை இறக்குமதி செய்கிறது. ஏன்?

சீனர்களுக்கு பிடித்த உணவு பன்றிக் கறி. ஆனால், இப்பொழுது பன்றிக்கறி உற்பத்தியை கட்டுப்படுத்தி வருகிறது. ஏன்?

சிக்கன நீர்ப்பாசனத்துக்கு பெயர் பெற்ற இஸ்ரேல் ஆரஞ்சு பழங்களை மட்டும் ஏற்றுமதி செய்வதில்லை. காரணம்?

எல்லாவற்றிக்கும் மறைநீர் தான் காரணம்.

மறை நீர் என்றால்?

கோதுமை விளைவிக்க நீர் தேவை. விளைந்தவுடன் அந்த நீர் காணப்படுவதில்லை.  காணாமல் போன நீர் அந்த கோதுமை மணிகளுக்குள் உட்பொதிந்துள்ளது அல்லது மறைந்துள்ளது என்பது உண்மை தானே! அதுதான் மறைநீர்.

தண்ணீர் அதிகமாக தேவைப்படும் வேளாண் பொருட்கள் மற்ற பொருட்களையும் வளர்ந்த நாடுகள் எல்லாம் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்கின்றன என்கிறார்.

திருப்பூர் பின்னலாடை உற்பத்தியும், தமிழகத்தில் திண்டுக்கல், வாணியம்பாடி பகுதிகளில் செய்யப்படும் தோல் பதனிடும் தொழிலும், கார் உற்பத்தியும் நமக்கு கிடைத்தது மறைநீர் தான் காரணம்!

1.1டன் எடையுள்ள கார் தயாராக 4 லட்சம் லிட்டர் நீர் தேவை!
ஒரு பின்னலாடை தயாரிக்க 2700 லிட்டர் தேவை!
*****

இந்த உலகத்தின்  97% கடல் நீர்.
மீதமுள்ள 3% நீரில் 68.7% பனிக்கட்டியாக!
30.1% நிலத்தடியில் கடின நீராக பயன்படுத்தமுடியாத படி!
0.3% நீர் தான் மேற்பரப்பு நீராக இருக்கிறது!

அந்த 0.3% நீரில் 87% ஏரியில்!
11% குளங்களில்!
2% தான் ஆற்று நீர்.
இந்த 2% தான் உலகத்தில் உள்ள எல்லா உயிரினங்களும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
****

தமிழ்நாட்டின் நீர் வளம் ரெம்ப மோசம்.  இந்தியாவில் பாலைவனம் உள்ள மாநிலமான இராஜஸ்தானுக்கு அடுத்து மழை குறைவாக பெய்யும் மாநிலம் தமிழ்நாடு.  தமிழ்நாட்டில் உள்ள குடிநீரில் 72% குடிக்க லாயக்கற்றது என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
****
  
“ஆசிய மக்களின் மறைநீர் நாளென்றுக்கு 1400 லிட்டர்.
அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் மறைநீர் 4000 லிட்டர்”
-Daniel Zimmer, 2003
“மறைநீர் வணிகம் மற்றும் புவிஅரசியல்” என்ற தலைப்பின்கீழ் உலக நீர் மன்றத்தின் இயக்குநர் தான் டேனியல் சிம்மர்.

இப்படி பல அதிர்ச்சியான செய்திகளோடு நகரும் புத்தகம், தீர்வாக பசுமை பொருளாதாரத்தை முன்வைக்கிறார்.

பசுமை பொருளாதாரத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் கூட சமூக மாற்றம் இல்லாமல் சாத்தியமில்லை என்பது யதார்த்தம்.

வெளியீடு : ஒசூர் அன்புக்கரங்கள் அறக்கட்டளை
எனக்கு ஒரு தோழர் படிக்க தந்தார். புத்தகத்தின் விலையை புத்தகத்த்தில் எங்கும் குறிப்பிடவில்லை. இணையத்தில் தேடும் பொழுது, உடுமலை.காம் ரூ.15 என விலை நிர்ணயம் செய்துள்ளது!

April 22, 2013

இன்று லெனின் பிறந்தநாள்!



நன்றி
விளாதிமிர் இல்யீச் உல்யானோவ்!
உனது பிறப்புக்கும்;
உனது போதனைகளுக்கும்;
உனது வழிகாட்டுதலுக்கும்;
உனது இல்யீச் விளக்குக்கும்!

உனது விரல் நீட்டிய திசையில்
கணக்கிலடங்கா இல்யீச் விளக்குகள்
உதித்துக்கொண்டேயிருக்கும்;
ஒளிர்ந்துகொண்டேயிருக்கும்.
எமை நம்பு
எமதருமை இல்யீச்…!

- புதிய பாமரன்

April 18, 2013

கிழக்கு தைமூர் - ஒரு தேசத்தின் மரணம்!

இயக்கம் : ஜான் பில்ஜெர்

போர்ச்சுக்கல்லின் காலனி ஆதிக்கத்தில் இருந்தும், இந்தோனோசியாவின் இராணுவ ஆதிக்கத்தில் இருந்தும் விடுபட்டு, இன்று சுதந்திர நாடாக இருக்கும் கிழக்கு தைமூரின் ரத்தக் கறை படிந்த வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டி பார்க்கும் ஆவணப்படம்.

ஆறு லட்சம் மக்கள் தொகை கொண்ட கிழக்கு தைமூரை பிரிட்டன் மற்றும் அமெரிக்க உதவியோடு 'கம்யூனிஸ்டுகள்' என்று முத்திரைக் குத்தி  எப்படி இந்தோனோசியா வேட்டையாடியது என்பதை புகைப்படங்கள்,  வீடியோக்கள் மூலம் விளக்கிப் பதறவைக்கிறார்கள். 

1970 முதல் 1997 வரை பிரிட்டனின் ஆயுதங்கள் மூலம் இந்தோனோசியா ராணுவம் இரண்டு லட்சம் மக்களை கொன்றதும், அது தொரபாக உலக நாடுகள் சாதித்த மெளனமும் தைமூரியர்க்ள் ஆயுதப் பாதைக்கு திரும்பியதும் மனம் கனக்கும் ரண வரலாறு.

பத்திரிக்கைச் செய்திகள், அரசு ஆவணங்கள், புகைப்பட வீடியோ தொகுப்பு, மக்களின் வாழ்க்கை முறை, கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்கள், போராளிகளின் பேட்டிகள் என ஓர் அடிமைப்பட்ட தேசத்தின் வரலாற்றைக் கடின உழைப்போடு தொகுத்திருக்கிறார் போர்முனை செய்தியாளார் ஜான் பில்ஜெர்.  அவசியம் காண வேண்டிய அபூர்வமான வரலாற்றுப் பதிவு!

நன்றி : ஆனந்தவிகடன்

வெளியீடு : விடியல் பதிப்பகம்

விலை ரூ. 100

நேரம் : 77 நிமிடங்கள்

பின்குறிப்பு : தமிழ் மொழிபெயர்ப்பு வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சில இடங்களில் மக்களின் பேச்சை அவர்களின் குரல் போல பேசுவதாக கம்மி குரலில் பேசுவதை தவிர்த்திருக்கலாம். 1994ல் வெளிவந்த படம். தமிழுக்கு கொண்டுவர இத்தனை ஆண்டுகள் நமக்கு தேவைப்பட்டிருக்கிறது.  இது மாதிரியான பல படங்கள் தமிழ்ச் சூழலில் மொழிப்பெயர்க்கப்படவேண்டும்.

வரலாறு நெடுக உலகம் முழுவதும் ஈழ இனப்படுகொலை போல நடந்துகொண்டே தான் இருந்திருக்கின்றன என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது!

March 19, 2013

Judgement at Nuramberg - Film (1961)

//போர்க்குற்றவாளிகளை சுதந்திரமான, நடுநிலையான விசாரணை மூலம் தண்டிக்க இரண்டாம் உலகப் போருக்கான நூரம்பர்க் போர்க்குற்ற விசாரணை போல் சுதந்திரமாக நடத்தினால்தான் தண்டிக்க முடியும் - புரட்சிகர மாணவ இளைஞர் முன்னணி//

இந்த கோரிக்கை இப்பொழுது பரவலாக பேசப்படுகிறது. இந்த விசாரணை குறித்த படமொன்று 1961ல் வெளிவந்தது.  2009ல் இந்த படத்தைப் பற்றிய் ஒரு அறிமுக குறிப்பாக எழுதியிருந்தேன். தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடந்துகொண்டிருக்கிற வேளையில் இந்த படத்தை மீள்பதிவு செய்கிறேன்.

*****

ஜெர்மனி, இட்லர், நாஜிப்படை, வதைமுகாம், படுகொலைகள்.... பற்றிய பட வரிசையில் பார்க்க வேண்டிய படம் – நூரம்பர்க்கில் தீர்ப்பு.

இரண்டாம் உலகப்போர் முடிந்து, ஜெர்மனி வீழ்ச்சியடைகிறது. நாஜிக்களின் கணக்குப்படியே படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சம் மக்கள். நினைத்துப் பார்க்கவே உடல் நடுங்கும் இந்த படுகொலைகளை நாஜிக்களின் சட்டப்படி தண்டனை தர‌ தீர்ப்பு வழங்கிய ஒரு தலைமை நீதிபதி, மற்றும் 3 நீதிபதிகள் மீதான வழக்கு விசாரணை தான் படத்தின் களம்.

படத்தின் முதல் காட்சி. ஒரு பெரிய பாரம்பரிய கட்டடம். அதில் நாஜிக்களின் சின்னமான ஸ்வஸ்திக் தூண் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. அதை குண்டு வைத்து தகர்க்கப்படுகிறது.

இந்த குற்ற விசாரணை துவங்குகிறது. குற்றங்களை நிரூபிக்க அரசு தரப்பு அந்த நான்கு நீதிபதிகளும் வழங்கிய தீர்ப்புகளை கத்தை கத்தையாக சமர்ப்பிக்கிறது. நீதிபதிகளுக்கு ஆதரவாக வாதாடுகிறவர் அவர்கள் நாஜிக்களின் சட்டப்படி தான் இயங்கினார்கள். அவர்கள் மேல் எப்படி குற்றம் சொல்லமுடியும் என வாதாடுகிறார்.


நாஜிக்களின் ஆட்சியின் பொழுது, நடந்த குற்ற வழக்குகளில் குறிப்பாக இரண்டு வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஒரு வழக்கு – கம்யூனிஸ்டு ஒருவரின் மகன் என்ற காரணத்திற்காக கைது செய்யப்பட்டு அவரை மலடாக்குகிறார்கள். (Sterilized). நீதிமன்றத்திற்கு வந்து தனக்கு இழைத்த குற்றத்தை விளக்குகிறார்.

மற்றொரு வழக்கு – ஆர்ய இனத்தை சேர்ந்த ஒரு 16 வயது பெண், யூத பிரிவைச் சேர்ந்த ஒரு வயதான பெரியவர் அந்த பெண்னுடன் பழகினார் என்பதற்காக, குற்றம் என சொல்லப்பட்டு, 1942ல் அவரை கொன்றுவிடுகிறார்கள். அந்த பெண் மீண்டும் வந்து விளக்குகிறார்.

1948ல் வழக்கு விசாரணை துவங்கி 8 மாதங்களாக நடைபெற்று 1949ல் முடிவடைகிறது. இறுதியில்... நான்கு நீதிபதிகளுக்கும் ஆயுள் தண்டனை கிடைக்கிறது.

படம் 1961ல் வெளிவந்திருக்கிறது. 1949 - 1961 என 12 ஆண்டுகளுக்குள்ளேயே ஆயுள் தண்டனை பெற்ற நாலு நீதிபதிகளில் ஒருவர் இறந்து விடுகிறார். மீதி 3 பேர் விடுதலை ஆகிவிட்டார்களாம்.

படத்தில் எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வழக்கு விசாரணை படத்தை
இவ்வளவு விறுவிறுப்பாக எடுக்க முடியுமா என்பது ஆச்சர்யம் தான். ஆங்கில படங்களில், இதுவரை வந்த வழக்கு விசாரணை படங்களில் சிறந்த படங்களில் ஒன்று எனவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்திற்கு

சிறந்த படம் - (Best Picture)
சிறந்த நடிகர் (Best Actor) ,
சிறந்த நடிகர் (Best Leading Role)
சிறந்த துணை நடிகர் (Best actor supporting Role)
சிறந்த துணை நடிகை (Best actress supporting role, )
சிறந்த ஒளிப்பதிவு (Best Cinematography)
சிறந்த கலை இயக்கம் (Best Art Direction)
சிறநத உடையமைப்பு (Best Costume design)
சிறந்த படத்தொகுப்பு (Best Film Editing)
சிறந்த கருப்பு வெள்ளை படம் (Best Black & White movie)
சிறந்த திரைக்கதை(Best writing, Screenplay)
சிறந்த இயக்கம் (Best Director) – என

படம் 11 வகைகளில் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றது.
186 நிமிடங்கள் – படம் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக ஓடினாலும், கொஞ்சம்
கூட அலுப்பு தட்டாமல் நகர்கிறது. கதை களம் அப்படி! கண்டிப்பாக பாருங்கள்.




பின்குறிப்பு : படத்தில் நான்கு நீதிபதிகளுக்கு ஆதரவாக வாதாடும் பொழுது... இந்த படுகொலைகளுக்கு இந்த நீதிபதிகள் குற்றவாளிகள் என்றால்.. இட்லரை புகழ்ந்துரைத்தாரே சர்ச்சில் அவரும் குற்றவாளி தான். ஜெர்மனியின் நடவடிக்கைகளில் அமெரிக்க முதலாளிகள் பெரும் லாபத்தை சம்பாதித்தார்களே... அவர்களும் குற்றவாளிகள் தான். இந்த படுகொலைகளை உலகம் பார்த்துகொண்டிருந்ததே உலகமே குற்றவாளி தான் என வாதாடுவார்.

உண்மை தான். இதோ நம் அருகேயே ஈழமண்ணில் மக்களை இலங்கை ராணுவம் ஆயிரக்கணக்கில் கொன்றழிக்கிறது. மக்களை முகாம்களில் வதைக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரசியா என பல நாடுகள் ஆயுதங்கள் தந்து உதவுகின்றன. ஏகாதிபத்தியங்களும் மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவுகின்றன. தடுக்க முடிந்ததா நம்மால்? ஈழ படுகொலைகளை தடுக்க ஒரு துரும்பை கூட எடுத்துப் போடாத நாமும் கூட ஒருவகையில் குற்றவாளிகள் தான்.

February 2, 2013

மூன்று பெண்களின் பேருந்து பயணம்!

ஃபஸியா பஸ்ஸில் போய்க்கொண்டு இருந்தாள். பஸ்ஸில் அதிகமான பயணிகள் இருந்ததால் நெரிசல் மிகுந்திருந்தது. பின்னால் ஓர் ஆண் அவளை நெருக்கிக் கொண்டிருந்தான். ஃபஸியா மிகுந்த எரிச்சலில் இருந்தாள். அவள் வேலை பார்க்கும் ஃபாக்டரியில் சம்பளப் பணத்தைக் குறைவாகக் கொடுத்திருந்தார்கள்.

கவுண்டரில் பணம் பெற்றுக் கொண்டபோது- சம்பளப் பணத்தை எண்ணிப் பார்த்தாள். காரணம் கேட்டபோது, அவள் பல நாட்கள் வேலைக்குத் தாமதமாக வந்ததால் அதற்கான அபராதக் கட்டணத்தைக் கழித்துக் கொண்டு, மீதிப் பணத்தைக் கொடுத்திருப்பதாகச் சொன்னார்கள்.  வீட்டுக்குச் செலவுகள் பல இருந்தன. இவ்வளவு குறைவான சம்பளப் பணத்தை வைத்துக் கொண்டு எப்படி சரிக்கட்டப் போகிறோம் என்ற மன உளைச்சலில் அவள் இருந்தாள். பின்னால் இருந்த ஆண் அவளை சீண்டிக் கொண்டிருந்தான். பஸ்ஸில் இருக்கும் நெரிசலைப் பயன்படுத்திக் கொண்டு அவன் இப்படிக் கேவலமாக நடந்துகொள்வது, அவள் கண்களில் நீர் சுரக்கச் செய்தது.

பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவன் பல்லை இளித்தான். இந்த அரக்கனை எப்படி சமாளிப்பது என்று குமுறினாள்...

சீபாவும் ஃபஸியாவும் நெருங்கிய தோழிகள். ஃபஸியா தன் மனக் குறைகளை எல்லாம் கொட்டித் தீர்க்க சீபாவின் வீட்டுக்குச் சென்றாள்.
"என்னம்மா உன் முகம் வாடி இருக்கிறதே!'' என்று கேட்டாள் சீபா.
"நான் போகும் பஸ்ஸில் அடிக்கடி ஓர் ஆண் எனக்குத் தொல்லை கொடுக்கிறான். நான் ஒன்றும் செய்ய இயலாதவளாக இருக்கிறேன்...'' என்று சொல்லிவிட்டு ஃபஸியா விம்மினாள்.
"இதைப் போன்ற அசுரர்களை சும்மா விடக்கூடாது. தகுந்த பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். நீ ஒரு உலோகத் தகடு வைத்துக் கொள். அவன் மீண்டும் தொல்லை கொடுத்தால் அவன் பேண்ட்டின் நடுப் பகுதியில் கீறிவிடு!''
"அப்படித்தான் செய்ய வேண்டும்...'' என்று ஃபஸியா ஆமோதித்தாள்.

அன்றும் பஸ்ஸில் நெரிசல் அதிகமாக இருந்தது. வழக்கம் போல் ஃபஸியாவின் பின்புறம் நெருக்கமாக நின்று கொண்டு அவன் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று அவன் "ஆ'வென்று அலறினான். பஸ்ஸில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். பஸ் சீக்கிரமே ஒரு நிறுத்தத்தில் நின்றது. ஃபஸியா வேக வேகமாக பஸ்ஸை விட்டு வெளியேறினாள்.

ஃபஸியாவுக்குத் தொல்லை கொடுத்த ஆசாமி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தான். இன்ஸ்பெக்டர் ஒருவர் அவனிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்.
"ஒரு பெண்தான் என்னை பேண்ட்டின் நடுப்பகுதியில் கீறிவிட்டு ஓடினாள்...''
"நீ என்ன தவறு செய்தாய்?''
"நான் ஒரு தவறும் செய்யவில்லை!'' என்று புளுகினான்.

சீபாவின் வீட்டுக்குச் சென்றாள் ஃபஸியா.
"நீ சொன்ன மாதிரியே அவனை உலோகத் தகட்டால் கீறிவிட்டேன்...''
"அந்த அசுரன் வலியால் கதறி இருப்பானே...! ''
"ஆமாம்'' என்றாள் ஃபஸியா.
நெல்லி - என்று ஒரு தோழி அறைக்குள் நுழைந்தாள்.
"ஃபஸியா! இவள் என் என் புதிய தோழி! என்று சீபா தன் புதிய தோழி நெல்லியை அறிமுகம் செய்துவைத்தாள்.''

சீபாவின் ஆலோசனைப்படி இன்னும் இரண்டு பெண்கள் இதேபோன்ற தண்டனையை அளித்தார்கள்.
பஸ்ஸில் தங்களிடம் வம்பு செய்த ஆண்களை உலோகத் தகட்டால், பேண்டின் மையப் பகுதியில் கீறிவிட்டார்கள்.
படக்கூடாத இடத்தில் கீறல் பட்டதால், தாங்கமுடியாத வலியில் துடித்த அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.
அவர்களிடமும் போலீஸ் புலன்விசாரணை செய்தது. பஸ்ஸில் பெண்களிடம் வம்பு செய்ததாக அவர்கள் ஒத்துக் கொள்ளவே இல்லை. தாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் அப்பாவி நபர்களான தம்மை சில அராஜகப் பெண்கள் கீறி காயப்படுத்திவிட்டார்கள் என்றும் புலம்பினார்கள்.

நெல்லி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தாள். பஸ்ஸின் நெரிசலைப் பயன்படுத்திக் கொண்டு ஒருவன் அவளிடம் தகாத முறையில் நடந்து கொண்டான். உலோகத் தகட்டால் கீறினாள். "ஆ..' என்ற அலறல்.

சீபா-ஃபஸியா-நெல்லி மூவரும் சீபாவின் வீட்டில் ஒன்று கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். "முப்பத்தி இரண்டாம் இலக்கமிட்ட பஸ்ஸில் நான் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு ராஸ்கல் என்னிடம் வம்பு செய்தான். கீறிவிட்டேன்!'' என்றாள் நெல்லி. மூவரும் சிரித்தார்கள்.

தகவல் வந்ததும் ஃபஸியா பதறிவிட்டாள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் கணவனைப் பார்க்கப் பறந்தோடினாள். "முப்பத்தி இரண்டாம் இலக்கமிட்ட பஸ்ஸில் நான் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு ராட்சசி என்னை உலோகத் தகட்டால் கீறிவிட்டாள்!'' என்றான் ஃபஸியாவின் கணவன். தன் கணவனும் பெண்களிடம் வம்பு செய்யும் ஓர் அராஜகவாதிதான் என்ற கசப்பான உண்மை, உறைக்கத் தொடங்கியதும் ஃபஸியா பொங்கிப் பொங்கி அழுதாள்.
 
நெல்லி, பொதுச் சதுக்கத்தில் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தாள். வேகமாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது. கார் ஓட்டி, நெல்லியின் பின்னழகைப் பார்த்ததும் காரின் வேகத்தை மட்டுப்படுத்தினான்.  மெல்லக் காரை ஓட்டிக் கொண்டு வந்தவன்- நெல்லியை நெருங்கியதும்- காரில் இருந்து கையை நீட்டி அவள் மார்புப் பகுதியைத் தொட்டான்.
நெல்லி திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்... அவன் இளித்தான்...  நெல்லி எரிமலையாகப் பொங்கினாள். அவள் கத்திக் கூச்சல் போடத் தொடங்கியதும் காரை வேகப்படுத்த முயற்சித்தான்.  நெல்லி காரின் முன் பாகத்தின் மேல் படுத்துக் கொண்டாள். இதற்குள் கூட்டம் கூடிவிட்டது. குற்றவாளி தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொண்டான்.

"இவன் மேல் கேஸ் போட்டால் உன் குடும்ப மானம் பறிபோகும். உன் பெயர் சந்திக்கு வந்துவிடும்!'' - என்று புகாரைப் பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் எச்சரித்தார்.
ஆனால் - எதற்கும் அஞ்சாமல் நெல்லி தான் பால்ரீதியாக தாக்கப்பட்டதற்கு நியாயம் வேண்டி நீதிமன்றத்தில் தனது வழக்கை எகிப்து நாட்டிலேயே முதன் முதலாக பதிவு செய்து வெற்றி கண்டாள். சட்டம் என்று ஒன்று இருந்தாலாவது - பலர் அஞ்சக் கூடும் இல்லையா?

படத்தின் பெயர்:678
வெளியான ஆண்டு: 2010;
இயக்குநர்: முகம்மது தியாப்.

நன்றி : தினமணி கதிர்

November 6, 2012

இன்று புரட்சி நாள்னு சொல்லு!

ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் பெண்ணுடன் பள்ளி செல்லும் வழியில்..

"புது டிரஸ் போட்டா பிறந்தநாள்னு நினைப்பாங்கப்பா!"

"பிறந்தநாள் கிடையாது!  புரட்சி நாள்னு சொல்லு! எல்லோரும் ஸ்வீட் சாப்பிட்டு, கொண்டாட வேண்டிய நாளுன்னு உன் பிரண்ட்ஸ்கிட்ட‌ சொல்லு!"

போகிற வழியில் ஸ்வீட் கடையை பார்த்ததும், லட்டு சாப்பிடுகிற 'பீம்' நினைவுக்கு வந்து...

"எல்லோருக்கும் லட்டு கொடுக்கலாமா!"

"நிறைய செலவாகும் பாப்பா! அவ்வளவு வசதி கிடையாது. எல்லோருக்கும் சாக்லெட் கொடுக்கலாம்!"

சாக்லெட் வாங்கி, பள்ளி ஆசிரியரிடம் ரசிய புரட்சி தினத்தை சுருக்கமாய் விளக்கி, சக மாணவர்களுக்கு தரச்சொல்லி பேசும் பொழுது, சமீப காலங்களில் குழந்தைகளுக்கு சாக்லெட் தரக்கூடாது என பள்ளி விதிமுறை இருக்கிறது. ஏதாவது சாப்பிட்டு விட்டு தொந்தரவு ஆனால், சிக்கலாகிவிடும் என்பதால் இந்த விதிமுறை என்றார்.  பரவாயில்லை என வாழ்த்துக்களை மட்டும் பகிர்ந்துவிட்டு விடைபெற்றேன்.

December 27, 2011

வேண்டாம், அணு மின்சாரம்!


கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட மக்கள் நடத்திவரும் போராட்டத்தைநாம் செய்திகளில் பார்த்துவருகிறோம். இந்த போராட்டம் சில மாத காலங்களாக நடந்துவருகிறது. இவ்வளவு மக்கள் திரண்டு வந்து இவ்வளவு நாட்களாக ஒரு விஷயத்திற்காக போராடுவதன் அவசியம் என்ன?

அணுமின் நிலையத்தில் அப்படி என்ன தான் நடந்து வருகிறது? மின்சார உற்பத்தி தான்.

பொதுவாக சைக்கிளில் பொருத்தப்பட்டிருக்கும் டைனமோ போன்ற ஒரு பெரிய ஜெனரேட்டரை கொண்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. சைக்கிளில் நாம் பெடலை அழுத்தி, சக்கரத்தை சுற்றவைத்து, அதன் மூலம் டைனமோவை சுற்ற வைத்து மின்சாரத்தை பெறுகிறோம். மின் நிலையத்தில் இந்த வேலையை ஒரு அணையிலிருந்து பாய்ந்து வரும் தண்ணீரை கொண்டோ, நீராவியை கொண்டோ செய்கிறார்கள். நெய்வேலி மின் நிலையத்தில் நிலக்கரியை எரித்து நீரை ஆவியாக்கி அதன் மூலம் ஜெனரேட்டை இயக்கி மின்சாரம் தயாரிக்கிறார்கள். அணுமின்நிலையத்திலோ அணுவை பிளக்கும் போது உற்பத்தியாகும் வெப்பத்தைக் கொண்டு நீரை ஆவியாக்கி மின்சாரம் தயாரிக்கிறார்கள்.

அணுமின் நிலையத்தினால் என்ன நன்மைகள்?

அணுவை பிளக்கும் போது உண்டாகும் வெப்பமானது மிக மிக அதிகம். ஆகையால், சிறு அளவில் எரிபொருளைக்கொண்டு அதிக மின்சாரத்தை தயாரிக்கலாம். மேலும், டீசல், நிலக்கரி போன்ற எந்த பொருளும் எரிக்கப்படுவதில்லை. அணுமின் நிலையங்கள் மூலம் கார்பன் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் காற்றில் கலப்பதில்லை.

சரி, பிறகு ஏன் மக்கள் இதை எதிர்க்கிறார்கள்?

கார்பன் டை ஆக்ஸைடை காற்றில் கலக்காவிட்டாலும், அணுமின் நிலையத்தின் சுற்றுப்புறத்தில் அணுக்கதிர் வீச்சு இருக்க வாய்ப்பிருக்கிறது. இதைப்பற்றியெல்லாம் பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை தான். ஆனால், மார்ச் மாதத்தில் ஜப்பானை தாக்கிய சுனாமி பலருடைய கண்களை திறந்துவிட்டது. சுனாமி அலை ஜப்பானின் புகோஷிமா நகரத்தின் கரையோரத்தில் இருக்கும் அணுமின் நிலையத்தை தாக்கி செயலிழக்க செய்தது. விபத்து நேரங்களில் அணுவை பிளக்கும் இயந்திரம் (நியுக்ளியர் ரியாக்டர்) ஆட்டோ மேடிக்காக நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால், உள்ளிருக்கும் எரிபொருளின் வெப்பத்தை குறைக்க தண்ணீரை உள்ளே செலுத்தும் மோட்டாரும் பழுதடைந்துவிட்டதால், எரிபொருள் உருகி, அபாயகரமான கதிர்வீச்சு சுற்றுப்புறத்தில் கலக்க ஆரம்பித்துவிட்டது. சுற்றுவட்டாரத்தில் இருந்த சுமார் ஒரு லட்சம் வெளியேற்றப்பட்டார்கள். மக்கள் இனி நீண்ட காலத்திற்கு யாரும் அங்கே வசிக்கமுடியாது. அந்தக் கதிர்வீச்சினால், மக்களுக்கு ஏற்பட்டு உள்ள பாதிப்பு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அணுக்கதிர் தாக்கினால் பலவிதமான புற்று நோய்கள் மற்றும் தோல் வியாதிகள் வரும். இரண்டாம் உலகப்போரில் ஜப்பானில் அமெரிக்காவால் போடப்பட்ட அணுகுண்டு லட்சகணக்கானவர்களை உடனடியாக கொன்று குவித்தது. அன்றோடு முடிந்துவிடவில்லை. கதிர்வீச்சினால் பல தலைமுறைகள் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அணுமின் நிலையத்தில் விபத்து நேர்ந்தால் நம் நிலைமை என்ன ஆகும் என்று மக்கள் கவலைப்படுவது சரியே. போபாலில் 1984ல் நடந்த விபத்தில் கசிந்த விஷவாயு பலருடைய உயிரை குடித்துள்ளது. இவ்வளவு காலங்களுக்குப் பின்னும் அந்த பாக்டரியின் சிதைந்த பகுதிகள் அப்புறப்படுத்தப்படவில்லை. அணுமின் நிலைய விபத்து இதைவிட பல மடங்கு நாசத்தை ஏற்படுத்தும்.

இதெல்லாம் அரசுக்கு தெரியாதா? இருந்தும் ஏன் அணுமின் நிலையத்தை கட்டிக்கொண்டிருக்கிறார்கள்? என நீங்கள் கேட்கலாம். பெருகிவரும் மக்கள் தொகைக்கு தேவையான மின் உற்பத்தி செய்ய அணுமின் நிலையங்களே சரியான வழி என்று அரசு தரப்பில் வாதாடப்பட்டு வருகிறது. உலக அளவிலான மின்சார உபயோகத்தில் வெறும் 13 சதவிகிதமே அணுமின்சாரம். அத்துடன் அணுமின் நிலையத்தை கட்டி முடித்து அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி ஆவதற்ற்கு குறைந்த பட்சம் 10 ஆண்டுகளாவது ஆகும். அதற்குள் பல பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டியிருக்கும். இருப்பினும் பல நாட்டின் அரசுகள் அணுமின் நிலையங்களை ஏன் ஆதரிக்கின்றன?

அணு ஆயுதம் செய்வதற்கு தான்!

ஆம். அணுமின் நிலையத்தில் உபயோகப்படும் யுரேனியம் வேதியல் மாற்றத்திற்கு பின் ப்ளுடோனியமாக மாறும். ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தை செய்தும் ஒரு அணுமின் நிலையம் வருடத்திற்கு 150 - 200 கிலோ ப்ளுடோனியம் தயாரித்துவிடும். இதைக் கொண்டு எளிதாக ஜப்பானின் நாகசாகியில் போடப்பட்ட அணுகுண்டு போல் 25 தயாரித்துவிடலாம். ஒரு அணுமின் நிலையத்தின் ஒரு வருட தயாரிப்பே இவ்வளவு என்றால், உலகில் 439 அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதிலிருந்து கிடைக்கும் ப்ளுடோனியத்தை கொண்டு எவ்வளவு குண்டுகளை தயாரிக்கலாம். நினைக்கவே பயமாக இருக்கிறது.

பிறகென்ன, பல அரசுகளின் முழு ஆதரவும், அணுமின் நிலையங்களுக்கு கிடைக்காமலா இருக்கும்?

அணு ஆயுதத்தை நாம் எதிர்ப்போமேயானால், அணுமின் நிலையங்களையும் எதிர்த்தே ஆகவேண்டிய தேவையிருக்கிறது. ஆகையால், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் போராட்டத்திற்கு நம்மால் முடிந்த ஆதரவை தெரிவிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

****

கட்டுரையாளர் : பாலாஜி

நவம்பர் 2011 தோழமை இதழிலிருந்து....

March 16, 2011

அழிவின் விளிம்பில் மொழிகள்!

உலகில் தொன்மையான மொழிகளான கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சம்ஸ்கிருத மொழிகள் காலத்துக்கும், பல வரலாற்றுப் போக்குகளுக்கும் ஈடுகொடுக்க இயலாமல் போய்விட்டன. கன்னித்தமிழ் மட்டும் எவ்விதப் பாதிப்புக்கும் உள்படாமல் தழைத்து நிற்கிறது என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம்.

மானுடத்தை மற்ற ஜீவராசிகளிடம் இருந்து வேறுபடுத்துவதே, சிரிப்பாலும், பேச்சாலும்தான் என்பார்கள். மனிதன் குகைகளில் வாழ்ந்தபோது, வெறும் சப்தங்கள் மூலம் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. காலப்போக்கில், சப்தங்கள் மொழியாக வளர்ச்சியடைந்தன. மொழி என்பது கலாசாரத்தை வெளிப்படுத்துகிற முக்கிய அடையாளமாகக் கருதப்படுவதால்தான் மொழியின் தனித்தன்மையைப் பாதுகாக்கப் போராட்டங்கள் நடைபெறுவதை நாம் காண்கிறோம்.

அழிந்துவிடும் மொழிகள் பற்றி 2009-ல் யுனெஸ்கோ வெளியிட்டுள்ள வரைபடத்தில் சுமார் 2,473 மொழிகள் அழிவின் எல்லையில் உள்ளன என்றும், 1950-க்குப் பின் இந்தியாவில் ஐந்து மொழிகள் அழிந்துவிட்டன என்றும் கூறியுள்ளது. மேலும், 42 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன. உலகளாவிய அளவில், 63 மொழிகள் நிச்சயம் மறைந்துவிடும். 82 மொழிகள் அழியும் நிலையில் உள்ளன என்று பட்டியலிட்டுள்ளது. 1894-லிருந்து 1928-வரை இந்தியாவில் பழக்கத்திலிருந்த மொழிகள் குறித்து ஜி.ஏ.க்ரியர்சன் ஆய்வு செய்து முழுமையான விவரங்களை வழங்கியிருக்கிறார்.

மக்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை, பாரம்பரியத்தை மறக்கும்போது கலாசாரமும் மறையத் தொடங்குகிறது. அப்போது அதற்கு அடிப்படை என்று கருதப்படும் மொழி மட்டும் எப்படி நீடித்து நிலைக்கும்? துருக்கியின் வடமேற்குப் பகுதிகளில் பேசப்பட்ட மொழி உபிக். இந்த மொழியைப் பேசத் தெரிந்த நபர் டெப்விக் எசன்ச் என்பர். துருக்கியிலுள்ள மொழியியலாளர்கள் அவரைக்காண அவரது கிராமத்துக்குச் சென்றனர். எசன்ச்சின் மூன்று மகன்களில் ஒருவருக்குக்கூட உபிக் மொழி தெரியாது. மாறாக, அவர்கள் துருக்கி மொழியில் பேசுவதையே விரும்புகின்றனர்.

1992-ம் ஆண்டு எசன்ச் இறந்து போனார். அவரது கல்லறையில், ""இது டெப்விக் எசன்ச்சின் கல்லறை. உபிக் என்ற மொழியைப் பேசிய கடைசி மனிதர் இவர்தான்'' என்று எழுதப்பட்டுள்ளது. அவர் மறைந்தவுடன் உபிக் மொழியும் மறைந்துவிட்டது.

"மறையும் மொழிகள்' என்ற பிரிட்டனைச் சார்ந்த ஒரு கலாசார அமைப்பு, அதிகமான ஆய்வுகளைச் செய்துள்ளது. இதில் பணியாற்றும் மொழியியலாளர் ப்ரூஸ் கானல் என்பவர், 1994-95-ல் மாம்பிலா என்ற பகுதியில் களஆய்வு மேற்கொண்டார். அப்போது நிறைய மொழிகள் மறையும் அபாயத்தில் இருந்ததைக் கண்டார். கசாபே என்ற மொழி போகோன் என்ற ஒரே ஒருவர் மட்டுமே பேசக் கூடியதாக இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார். அவரது சகோதரிக்கு கசாபே மொழி புரியும். ஆனால், பேசத் தெரியாது. அவரது குழந்தைகள், பேரக் குழந்தைகள் யாருக்குமே கசாபே மொழி தெரியாது. போகோன் மறைந்தவுடன் கசாபே மொழியும் மறைந்துவிடும்.

உலகில் கிட்டத்தட்ட 7,000 மொழிகள் வழக்கத்தில் உள்ளதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். சில பகுதிகளில் அதிகமான மொழிகள் வழக்கில் உள்ளன. ஆனால், பல எழுத்து வடிவத்தில் இல்லை. உலகில் பயன்படும் அனைத்து மொழிகளும் இன்னும் கண்டுபிடிக்கப்பட்டு பட்டியலிடப்படவில்லை.

சில பூர்வகுடிகள் வித்தியாசமாக ஒரு மொழியைப் பேசும் வழக்கம் கொண்டுள்ளனர். உதாரணமாக, 1998-ம் ஆண்டு ஜகார்த்தாவுக்குக் கிழக்கே மாம்பரமோ நதிக்கருகே வஹீததே, ஆகேததே என்ற குழுக்கள் வசித்தனர். மொத்தமே இவை இரண்டையும் சேர்த்தே 50 குடும்பங்கள்தானிருக்கும். இவர்கள் பேச்சு வித்தியாசமாக இருந்ததால், அவர்கள் பேசியது புதிய மொழிகள் என்றே கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டதென டேவிட் கிறிஸ்டல் என்ற மொழி ஆய்வாளர் தெரிவிக்கிறார்.

உலகில் வழக்கத்தில் உள்ள மொழிகளில் 90 சதவீதம் வரை இந்த நூற்றாண்டில் இல்லாமல் போய்விடும் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது. 11 நாள்களுக்கு ஒரு மொழி புழக்கத்திலிருந்து அழிந்துவிடுகிறது. பிப்ரவரி 21-ம் நாள் பன்னாட்டுத் தாய்மொழி தினமாக அறிவிக்கப்பட்டாலும், மொழிகளைப் பேணிக் காக்கவேண்டிய சிந்தனை உலக அளவில் இல்லாமல் போய்விட்டது.

உலகில் சராசரியாக 5,000 பேர்வரை ஒரு மொழியைப் பேசுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 4,000 மொழிகளைப் பேசுபவர்கள் ஆதிவாசிகள் எனக் கணக்கிடப்படுகிறது. 83-84 சதம் மொழிகள் ஒரே ஒருநாட்டில் மட்டுமே பேசப்படுபவையாக உள்ளன.

சில மொழிகள் மிகச் சிலரால் மட்டுமே பேசப்படுகின்றன. பப்புவா நியூகினியாவில் உள்ள குருமுலும் என்ற இனத்தில் 10 பேர் மட்டுமே ஒரு மொழியைப் பேசுகின்றனர். மொழிகளின் பட்டியலில் முதல் 10 இடங்களிலுள்ள மொழிகள் மொத்த உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 50 சதம் மக்கள் பேசும் மொழிகளாக உள்ளன.

சில மொழிகளின் எண்ணிக்கை வருமாறு: அமெரிக்கா 1,013 மொழிகள் (15சதம்), ஆப்பிரிக்கா 2,058 மொழிகள் (30 சதம்), ஐரோப்பா 230 மொழிகள் (3 சதம்), ஆஸ்திரேலியா 250 மொழிகள் (1 சதம்), ஆ சியா 2,197 மொழிகள் (32 சதம்), பசிபிக் 1,311 மொழிகள் (19 சதம்). பப்வா நியூகினியா 850 மொழிகள். இந்தோனேஷியா 670 மொழிகள். நைஜீரியா 400 மொழிகள். இந்தியா 380 மொழிகள். கேமரூன் 270 மொழிகள். மெக்சிகோ 240 மொழிகள். பிரேசில் 210 மொழிகள். ûஸர் 210 மொழிகள்.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மொழியியலாளர் டோவ் ஸ்கட்நாப் கங்காஸ் என்பவர் மொழி ஆய்வுகள் பல நடத்தப்பட்டபோதிலும், புள்ளிவிவரங்கள் துல்லியமானதாக இல்லையென்றே கருதுகிறார். மொழிகளுக்கும், சீதோஷ்ண நிலைக்கும் தொடர்பு உண்டு என்கிறார் நிதின் சேத்தி என்கிற ஆய்வாளர். மொழி உலகம் என்ற வரைபடம் மூலம் வெப்பம் மிகுதியாக உள்ள நாடுகளில் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன என்கின்றனர். மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரை மற்றும் இந்தியாவிலிருந்து தொடங்கி, தென் கிழக்காசிய பகுதிகளிலுள்ள இந்தோனேஷியத் தீவுகள் பசிபிக் வரையுள்ள பகுதிகளிலுள்ள இந்தியா உள்ளிட்ட 17 மிகப்பெரிய நாடுகளில் உள்ள மொழிகளில் 60 சதவீதம் பேசப்படுகின்றன.

அமெரிக்கா மற்றும் கனடாவில் பழங்குடி மக்களால் பேசப்படும் சுமார் 80 சதவீத மொழிகள் அவர்களுடைய குழந்தைகளுக்குச் சொல்லித் தரப்படுவதில்லை. இதனால் கனடாவில் 60 மொழிகள் பேசப்பட்டு இன்றைக்கு 4 மொழிகளே நிலைத்து நிற்கின்றன. ஆஸ்திரேலியாவில் அங்குள்ள பழங்குடிகள் பேசிய 250 மொழிகள் மறைந்தே விட்டன என்று மொழியியல் அறிஞர் நெட்டல் கூறுகிறார்.

இப்போது ஆஸ்திரேலியாவில் 250 மொழிகளில் இரண்டு மொழிகள் மட்டுமே பேசப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் 54 மொழிகள் படிப்படியாக அழிந்துவிட்டன. 116 மொழிகள் மறையும் சூழலில் உள்ளன என்று மொழியியல் அறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பூர்வகுடி இன மக்கள் பேசுகிற மொழிகள்தான் படிப்படியாக அழிந்து வருகின்றன என்றும், நகர்ப்புற வளர்ச்சி, உலகமயமாக்கல் போன்றவை மொழிகளின் அழிவுக்குக் காரணங்கள் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

மொழிகள் அழிவது குறித்து தடுக்கக்கூடிய முயற்சிகள் எவை எவை என்று மைசூரில் உள்ள இந்திய மொழியியல் கழகம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. மொழிகளைப் பாதுகாப்பதன் மூலமாக ஓர் இனத்தின் கலாசாரம், பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் போன்றவற்றைப் பாதுகாக்க முடியும்.

65 ஆயிரம் ஆண்டுகளாக அந்தமான் நிக்கோபர் தீவில் பேசப்பட்ட போ என்ற மொழி அழிந்துவிட்டது. அந்தமான் மொழிகளில் சிறப்பு வாய்ந்த போ மொழி பேசிய 80 வயதான பெண் இறந்தவுடன் அந்த மொழி முடிவுக்கு வந்துவிட்டது. 2004-ல் ஏற்பட்ட சுனாமி கோரத்தின்போதுகூட துக்கத்தில் பாடப்பட்ட போ மொழி பாடல் விடியோவில் பதிவு செய்யப்பட்டது.

இதுதான் உலகிலேயே பழமையான மொழி என ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மொழியியல் ஆய்வாளர் அன்விதா அபி கூறுகிறார். அந்தமானில் மறைந்த போ மொழியில் அரிய மருத்துவச் செய்திகள் இருந்தன. செடி, கொடிகளிலிருந்து மருந்து தயாரிக்கக்கூடிய நடவடிக்கைகள் அந்த மொழியில் இருந்தன. ஆனால், அந்த மொழியின் மறைவால் நமக்கு மருத்துவத் தகவல்கள் கிடைக்காமலேயே போய்விட்டன.

குரா என்ற அந்தமான் மொழியும் புழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது. அங்கு ஜிரா என்ற மொழியை 50 பேர் மட்டுமே இப்பொழுது பேசி வருகின்றனர். 150 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தத் தீவில் 10 மொழிகள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் பெரும்பாலான மொழிகள் இப்பொழுது பேச்சு வழக்கில் இல்லை.

கேரளத்தின் கொச்சியைச் சேர்ந்த வில்லியம் ரொசாரியோ கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ல் மரணமடைந்தவுடன் அப்பகுதியில் பேசப்பட்ட மலையாள போர்ச்சுகீஸ் கிரியோல் என்ற மொழி மறைந்தது. 400 ஆண்டுகளாக கேரள கத்தோலிக்கர்களின் அடையாளமாக இந்த மொழி திகழ்ந்தது.

ரெமோ என்ற ஒரிய மொழி போண்டா என்ற ஆதிவாசிகளால் பேசப்பட்டு, இந்த ஆதிவாசிகள் மக்கள்தொகை குறைந்து இம்மொழியும் அழிந்துவிடும்.

20 லட்சம் மக்கள் பேசும் கோந்தி மொழி சத்தீஸ்கர் மாநிலத்தில் எந்தப் பள்ளியிலும் பாட நூலாகவே இருக்கவில்லை. அதன்பின் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தால் அந்த கோந்தி மொழியில் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு ஆரம்பப் பள்ளிகளில் பாடங்களாகக் கற்பிக்கப்படுகின்றன.

தென்னிந்தியப் பகுதிகள் டெக்கான் என்று அழைக்கப்பட்ட காலத்தில் அங்கு மராட்டி, கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகள் பேசப்பட்டன. வட இந்தியப் படையெடுப்புக்குப் பின் அவர்களது மொழியான அவதியும் இங்கு பேசப்பட்டது. இவையாவும் ஒன்றுசேர்ந்து தக்கனி மொழி உருவாயிற்று.

பாமினி மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் தக்கனி மொழிதான் ஒருகாலத்தில் பேசப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

உலகமயமாதலின் காரணமாக மூன்றில் ஒரு பங்கு மொழிகள் மறைந்துள்ளன என்று அழுத்தமாகக் கூறும் கிறிஸ்டல், தொழில் நுணுக்கத்தின் ஊடுருவலால், உலகின் மூலை முடுக்குகளில்கூட பேசும் மொழிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்கிறார். ஒரு குறிப்பிட்ட மொழி ஆதிக்கம் செலுத்துவதைக் காண முடிகிறது.

எடுத்துக்காட்டாக, கனடாவில் ஆங்கில மொழியும், தென் அமெரிக்காவில் ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ் மொழிகளும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழக மொழியியல் துறைப் பேராசிரியர் அன்விதா அப்பி, இந்தியாவில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் கடந்த பதினைந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்று குறிப்பிடுகிறார். குறிப்பிட்ட ஒரு மொழியின் ஆதிக்கம் காரணமாக காலங்காலமாகப் பேசப்பட்டு வந்த மொழிகள் மறைவதைப் பற்றி டோவ் கூறுகையில், மொழிகளின் மரணம் என்பதை என்னால் ஏற்க இயலவில்லை. மாறாக, படுகொலை என்ற சொல்லைப் பயன்படுத்த நான் விரும்புகிறேன்.

மொழி உரிமை என்பது மனித உரிமையாகும் என்கிறார் டோவ். இந்தியாவையே எடுத்துக் கொண்டால் 300-க்கும் மேற்பட்ட மொழிகள் இருந்தபோதிலும், 16 மொழிகள் மாநில மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அனைத்து மொழிகளும் முக்கியமானவை என்பதை அங்கீகாரம் செய்வதே மொழிப் பாதுகாப்பின் முதல் படியாகும்.

இந்திய அரசியல் சாசனத்தில் 8-வது பட்டியலில் சொல்லப்பட்டுள்ள 22 மொழிகள் சேர்க்கப்பட வேண்டுமென்று வைக்கப்பட்ட கோரிக்கை மீது, அரசுத் தரப்பில், ஒரு மொழியை குறைந்தபட்சம் 10,000 பேர்களாவது பேசினால்தான் மொழி என்ற வரையறைக்கு உள்படும். அரசியல் சாசனத்தில் பட்டியலிடப்படாத 100 மொழிகளை மூன்று விழுக்காடு இந்திய மக்களே பேசுகின்றனர்.

குஜராத்தில் அழிவின் விளிம்பில் உள்ள பிலி என்ற மொழியைப் பாதுகாக்கும் காஞ்சிபடேல் கூறுவது என்னவென்றால், "ஒரு மொழியைப் பாதுகாக்க வேண்டுமென்றால் அந்த மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும். அதன் இலக்கியங்கள் வெளியிடப்பட வேண்டும். அப்படிச் செய்தால்தான் ஒரு மொழியைப் பாதுகாக்க முடியும்' என்கிறார்.

இம்மாதிரி மொழிகளைப் பாதுகாக்க பாஷா என்ற அமைப்பை ஏற்படுத்தி கணேஷ் டெவ்லி என்பவர் நடத்தி வருகிறார். இமாலயப் பகுதியில் ஹிம்லோக் அமைப்பு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் மண்டர், ஹோ, அகர், க்ரியா, குருக்ஸ் போன்ற மொழிகளைப் பாதுகாக்க ஜார்கண்டி பாஷா சாகித்திய சனஸ்க்ருதி அகரா என்ற அமைப்பு பாடுபட்டு வருகிறது.

ஜோகர் நிகம் கபர் என்ற மாத இதழ் மூலமாக மொழிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரசன்னஸ்ரீ குர்ரு இன மக்களின் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்துள்ளார். ஆந்திரம் மற்றும் ஒரிசாவில் கொண்டா டொரா மொழி பேசப்பட்டு வந்தது. ஆனால், பழங்குடி மக்கள் தற்சமயம் ஒரிய மொழியைப் பேச ஆரம்பித்துவிட்டதால், இந்த மொழியைக் காக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேற்கு வங்கத்தில் சந்தால் மக்களின் மொழியான ஒல்சிக்கி பேச ஊக்குவிக்கப்படுகிறது. லிவிங் டங்க்ஸ், சர்வைவல் இன்டர்நேஷனல், சொரோ சொரோ போன்ற அமைப்புகள் அழிந்து வரும் இந்திய மொழிகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அழியும் மொழிகள் பட்டியலில், தமிழ் இடம் பெறவில்லை. தமிழின் உயிர்த்தன்மை அந்த நிலைக்குச் செல்கிற வாய்ப்பில்லை என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

அந்நிய கலாசாரம் பற்றிக் கூறும்போது, ""எனது வீடு சுவர்களால் அடைத்து இருப்பதை நான் விரும்பவில்லை. எனது வீட்டின் ஜன்னல்கள் திறந்தே இருக்க வேண்டும். உலகின் அனைத்துப் பகுதி கலாசாரமும் எந்தத் தடையுமின்றி வீட்டுக்குள் வருவதை விரும்புகிறேன். ஆனால், அந்த அலை என்னை அடித்துச் சென்றுவிடவும் விடமாட்டேன்'' என்று அண்ணல் காந்தி கூறினார்.

இன்றைய உலகமயமாக்கல் முறையில் பன்னாட்டு உறவால் சிலருக்குத் தாய்மொழி மீது உள்ள பற்று குறைந்து வருகிறது. இது ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிடும். தான் பிறந்த மண், தாய் தந்தை, தாய் மொழி, தனது கலாசாரத்தைப் பாதுகாக்க ஒவ்வொருவரும் உறுதி எடுக்க வேண்டும். தாய்மொழி என்பதில் ஒவ்வொருவரின் தன்மானமும், பெருமையும் அடங்கியுள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

- கே.எஸ். இராதாகிருஷ்ணன் - தினமணி - 17/03/2011

January 29, 2010

ஊக வணிகத்தின் உல்லாசபுரி சுடுகாடானது - இறுதி பாகம்!


பாகம் 1
பாகம் 2
பாகம் 3

தனியார்மயத்தின் கீழ் நீடித்த, நிலையான வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை துபாய் நெருக்கடி மீண்டும் நிரூபித்திருக்கிறது.

ஆனால், கடந்த ஓராண்டாகவே நெருக்கடிகள் முற்றி வந்தன. குடியிருப்புகளின் வாடகைகள் பாதியளவுக்குக் குறைந்த போதிலும், பெரும்பாலும் அவை காலியாகவே கிடந்தன. துபாய் மட்டுமின்றி, மத்திய கிழக்கு நாடுகளது மன்னர்கள்-அமீர்களது பொருளாதார நிலை பற்றி எந்த விவரமும் உலகுக்குத் தெரிவிக்கப் படுவதில்லை. இதனால் நெருக்கடியின் பரிமாணத்தை எவராலும் மதிப்பிட முடியவுமில்லை.

இந்தக் கூட்டமைப்பில் இன்று அபுதாபி மட்டுமே எண்ணெய் வளமும் பொருளாதார பலமும் கொண்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சியால் துபாய் திவாலாகி விழும் வரை உதவ மறுத்த அபுதாபி, இப்போது கடனளிக்க முன்வந்துள்ளது. துபாயைப் போல மேற்கத்திய கலாச்சாரத்தைக் கொண்டிராமல், இஸ்லாமிய அடிப்படைவாதக் கோட்பாடுகளைப் பின்பற்றி வரும் அபுதாபி, துபாய் பிராந்தியத்தை தனது இரும்புப் பிடி ஆட்சியின்கீழ் கொண்டுவந்து மேலாதிக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

1997-இல் தென்கிழக்காசிய நாடுகள் திவால், 2001-இல் அர்ஜெண்டினா திவால், கடந்த ஆண்டில் அமெரிக்கா திவால் என்று உலக முதலாளித்துவம் அடுத்தடுத்து குப்புற விழுந்து கிடக்கிறது. இது தொடக்கம்தான். ஆனால், இந்நெருக்கடிக்கான முடிவு எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை.

லெமென் பிரதர்ஸ் என்ற நிதி நிறுவனம் திவாலாகிச் சரிந்தபோது, அது துபாயைப் பாதிக்கவில்லை என்று கூறி, உலக முதலாளித்துவ நெருக்கடி என்பது வேறு, துபாய் வேறு என்று நம்பச் சொன்னார்கள். ஆனால், துபாய் நெருக்கடி கசியத் தொடங்கியதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிதிச் சந்தைகள் ஆட்டங்காணுகின்றன. ஐரோப்பிய வங்கிளும் குறிப்பாக, பிரிட்டனைச் சேர்ந்த ஹெச்.எஸ்.பி.சி. ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு, பர்க்லேஸ், ஏ.பி.என்.அம்ரோ முதலான வங்கிகள் பல்லாயிரம் கோடிகளுக்கு மேல் பெருத்த இழப்பைச் சந்தித்துள்ளன. இந்தியாவின் பாங்க் ஆஃப் பரோடா 5,000 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது. இது தவிர, பல இந்தியக் கட்டுமான நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்துள்ளன. பிரிட்டனும் ஜெர்மனியும் கடன் பத்திரங்களைப் பெருமளவில் வாங்கியுள்ளதால், அவற்றின் நிதியமைப்புமுறையே கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. வீட்டு விலைகள் உயரும் என எதிர்பார்த்துக் கடனை வாரியிறைத்துவிட்டு, இப்போது என்ன செய்வது என்று புரியாமல் அவை தவிக்கின்றன.

அரசாங்கத்தின் தலையீடோ, கட்டுப்பாடோ இல்லாமல் தாராளமயம் சுதந்திரமாகச் செயல்பட்டால், முதலாளித்துவம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி, பொருளாதாரம் பூத்துக் குலுங்கும் என்று ஏகாதிபத்தியவாதிகள் உபதேசித்து, அதைத் தீவிரமாகச் செயல்படுத்தினர். ஆனால், கட்டுப்பாடற்ற நிதியாதிக்கக் கும்பல்களின் சூறையாடல், துபாயின் பொருளாதாரத்தையே மீளமுடியாத பாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது. துபாய் மட்டுமின்றி இதர நாடுகளிலும் கட்டுமானத் துறையும் வீட்டுமனைத் தொழிலும் நொறுங்கிச் சரியும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. அதி விரைவில் கிரீசும் அயர்லாந்தும் சரிவது நிச்சயமாகிவிட்டது. அனைத்துலக முதலாளித்துவம் மீள முடியாத நெருக்கடியில் சிக்கி மரணப்படுக்கையில் முனகுகிறது.

கோடீஸ்வர நாடான துபாயே ஆடிக்காற்றில் அம்மியாகப் பறக்கும்போது, ஏழை நாடுகளின் கதி இனி என்னவாகும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. திவாலாகும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து முட்டுக் கொடுத்து முதலாளித்துவத்தை தூக்கி நிறுத்துவது என்ற கொள்கையைத்தான் அமெரிக்கா முதல் துபாய் வரை எல்லா அரசுகளும் பின்பற்றுகின்றன. நிதியாதிக்கக் கும்பல்களின் சூறையாடலை எவ்விதக் கட்டுப்பாடுமின்றி ஆதரிக்கும் இக்கேடுகெட்ட முதலாளித்துவக் கொள்கையால், எந்த நாடும் இனி மீளவே முடியாது என்பதைத்தான் துபாய் அனுபவமாக உணர்த்துகிறது.

- நன்றி - புதிய ஜனநாயகம், ஜனவரி, 2010