நாற்பது வயதுக்குப் பிறகு மனதில் ஒரு நிதானம் பிறக்கிறது. பல விஷயங்கள் தெளிவாகப் புரிகின்றன. நாம் யார்? நமக்கு என்னென்ன வரும் என்னென்ன வராது? என்பதெல்லாம் கொஞ்சம் புரிகிறது. இதைச் செய்ய வேண்டும். இதைச் செய்யக் கூடாது என்று தெரிகிறது.
ஆனால், மனம் அதற்குள் ஒரு நாற்பது வருடப் பழக்கத்தில் ஊறிப் போயிருக்கும். அதற்கு கடிவாளம் போட்டு இழுத்து வருவது அத்தனை எளிதல்ல.
அதிலும் இந்த மனித மூளை போல் கிருத்துருவம் பிடித்த ஒரு வஸ்து இந்த பிரபஞ்சத்திலேயே இல்லை. அது நம் உடலை எப்படி ஏமாற்றும். மனதை எப்படி ஏமாற்றும். தன்னையே எப்படி ஏமாற்றும் என்பதற்கு எல்லாம் பலநூறு கதைகள் இருக்கின்றன.
சில உளவியல் ஆலோசகர்கள் மூளையை சவுக்கால் சொடுக்கி வேலை வாங்க வேண்டும். இல்லாவிடில் அது நம்மை ஏய்த்துவிட்டு, உல்லாசமாக தனக்கான சஞ்சாரத்தில் ஏகாந்தம் காணும் என்கிறார்கள்.
ஆனால், அது அத்தனை எளிதல்ல. எல்லா மனிதர்களுக்குமே கடினமாக உழைக்க வேண்டும். நேரத்தை வீணாக்கக் கூடாது என்றெல்லாம் ஆசை இருக்கும். உண்மையில் அதனை எல்லோராலும் செய்ய இயல்வதில்லை.
இதன் பிரதான காரணம் பழக்கம் உருவாக்கும் மனத்தடை. இந்த மனத்தடைக்கு உடல் ஒரு பிரதான காரணம். நாற்பது வருடமாக உடலை நாம் ஒரு வழக்கத்தைச் செய்யப் பழக்கப்படுத்தியிருப்போம். உடல் அதற்கு வாகாகப் பழகியிருக்கும்.
திடீரென புதிய வழக்கத்துக்குள் தள்ளும்போது அது ஏற்றுக்கொள்ள இயலாமல் தடுமாறும். இன்னொன்று மனம் அல்லது மூளை உருவாக்கும் மனத்தடை.
மேற்சொன்ன வழக்கத்துகு மாறான புதிய வழக்கத்துக்குள் நுழைவதில் இருக்கும் சிக்கலின் காரணத்தால்தான் மூளையும் இதற்கு தடை சொல்கிறது. ஆனால், மூளை வெறுமனே அதைச் செய்வதில்லை. நன்றாக யோசித்தே அதைச் செய்கிறது.
இதைப் புரிய மூளையின் திருட்டுத்தனம் எத்தகையது என்பதைப் புரிய வேண்டும். நாம் சுவாசிக்கும் காற்றில் உடலில் சேகரமாகும் ஆக்சிஜனில் அறுபது சதவீதத்தை மூளை எடுத்துக்கொள்ளும்.
எஞ்சியதைத்தான் அது உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் பிரித்துக்கொடுக்கும். அவையும் அமைதியாக வாங்கிக்கொண்டு வேலை செய்யும்.
இப்படி தன்னிடம் சேகரமாகியிருக்கும் அறுபது சதவீத ஆற்றலை அல்லது ஆக்சிஜனை என்ன செய்ய வேண்டும் என்ற ஏகபோகம் மூளையுடையதுதான். அது விரும்பினால் அந்த அறுபது சதவீதத்தை அப்படி ஓரமா உட்காரு என்று சொல்லிவிட்டு, அதன் மீது ஜம்பமாகப் படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கும்.
இல்லாவிடில், போய் வேலை செய்வோம் என்று உருப்படியாய் ஒரு வேலையைச் செய்யும். எதையாவது யோசிக்கும். தீவிரமாக சிந்திக்கும். மனம் போன போக்கில் சிந்திக்கும். புதியவற்றை யோசிக்கும். பழையவற்றுக்கு ஏங்கும். இப்படி எதையாவது அது இஷ்டம் போல் செய்து அதனை செலவழிக்கும்.
இப்போது நீங்கள் திடீரென நாற்பது வயதுக்குப் பிறகு கடுமையாக உழைக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறீர்கள். உதாரணமாக ஓர் ஒழுங்கீனமான எழுத்தாளர்.
இனி கெட்ட சகவாசங்களை எல்லாம் விட்டுவிட்டு உருப்படியாய் உட்கார்ந்து எழுத வேண்டும் என நினைக்கிறார். அதற்கு உடல் ஒத்துழைக்க வேண்டும். தொடர்ந்து நான்கு மணி நேரம் அசைவின்றி ஓரிடத்தில் உட்கார உடலும் மனமும் பழக வேண்டும். ஒரே விஷயத்தை தொடர்ந்து யோசிக்க மூளை பழக வேண்டும்.
இப்போது மூளை யோசிக்கும். நாம் இனி உடலை சீராக இரு என்று சொன்னால், அவை நம்மிடம் அதைச் செய்ய கூடுதலாக ஆக்சிஜன் செலவாகும். அதைக் கொடு என்று கேட்கும். நுரையீரலோ வழக்கமாய் கொடுப்பதைத்தான் கொடுக்கும். அது நமக்கே போதாது.
எதற்கு வம்பு. பேசாமல் இப்படியே இரு என்று மனதைத் தூண்டு. அது அமைதியாக அதன் போக்கில் இருக்கும். தொல்லையில்லாமல் நாம் இருக்கலாம் என மூளை நினைக்கும்.
நிஜமாக மூளை இப்படி நினைக்குமா என்று கேட்பீர்களானால், ஆமாம் நிஜமாகவே அப்படித்தான் நினைக்கும். அது அத்தனை திருட்டுத்தனமானது.
மருத்துவர்கள் ஒரு சுவாரஸ்யமான விஷயம் சொல்கிறார்கள். அரிப்பு ஏற்படும்போது நாம் சொரிகிறோம் அல்லவா? அந்த சொரிதல் என்ற செயல்பாட்டுக்கும் அரிப்பு என்ற நிகழ்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிறகு ஏன் சொரிந்ததும் அரிப்பு நிற்கிறது. நிஜத்தில் அரிப்பு நிற்பதில்லை.
அது அரிக்கிறது என்ற செய்திதான் மூளைக்குக் கடத்தப்படுவது நிற்கிறது. அதாவது, நம் உடலில் ஏதேனும் பூஞ்சையோ, வேதிப்பொருளோ படும்போது அவ்விடம் அரிக்கிறது. உடனே அச்செய்தியை நரம்புகள் மூளைக்குக் கடத்தும். நிஜத்தில் மூளைக்கு அரித்தால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாது. அதை சொரிந்துவிடு என்று சொல்லிவிடும். சொரியும் போது சொரிகிறோம் என்ற செய்தி மட்டுமே அந்த நரம்பின் வழியாக மூளைக்குச் செல்லும். அரிக்கிறது என்ற செய்தி மூளைக்கு செல்லாமல் என்கேஜ்டாக நின்றுவிடும்.
நீங்கள் ஒருவரோடு போனில் பேசும்போது வேறு ஒருவர் அதே லைனில் நுழைய முடியாது இல்லையா? அதே டெக்னிக்தான். மூளை இப்படி தனக்கு பதில் தெரியாத, தனக்குப் பிடிக்காத, தான் மாற விரும்பதா விஷயத்தை தவிர்க்க தன்னையே ஏமாற்றிக்கொள்ளும். என் காதில் அதனைக் கொண்டு வராதே என்று சொல்லி காதைப் பொத்திக்கொள்ளும்.
உண்மையில் இது ஒரு சர்வைவல் டெக்னிக். இந்த உத்தி வழியாகவே மூளை ஆபத்தான மற்றும் சிக்கலான தருணங்களில் தன்னையும் உடலையும் காத்துக்கொள்கிறது.
அதனால், புதிய விஷயத்தை உங்கள் உடம்புக்குப் பழக்கப்படுத்துவது அத்தனை எளிதல்ல. அதற்கு மூளையை சொடுக்குப் போட்டு சாட்டையில் விளாசி கடுமையாக வேலை வாங்க வேண்டும். இல்லாவிடில் ஏய்த்துவிடும்.
நம் மூளையில் இரண்டு பகுதி உள்ளது. ஒன்று ஏமாற்றும் வேலைக்காரன். இன்னொன்று கண்டிப்பான எஜமானன். எஜமானன் தீவிரமாகக் கண்காணித்தால் வேலைக்காரன் அமைதியாக வேலை செய்வான். எஜமானன் கண்கானிப்பதை நிறுத்திவிட்டால், வேலைக்காரன் தூக்கிப் போட்டுவிட்டு போய்விடுவான்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment