> குருத்து

June 1, 2019

Non Stop (2014)

நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஒரு போயிங் விமானம் அமெரிக்காவிலிருந்து லண்டனை நோக்கி பயணிக்கிறது.

நாயகன் சிவில் உடையில் பயணம் செய்யும் விமான பாதுகாப்பு அதிகாரி.

விமானம் மேலேறியதும் அவருடைய செல்பேசிக்கு ”150 மில்லியன் டாலர் வேண்டும் இல்லையெனில் ஒவ்வொரு இருபது நிமிடத்திற்கும் ஒரு பயணி சாகடிக்கப்படுவார்” ஒரு குறுஞ்செய்தி வருகிறது.

சொன்னது போலவே தலைமை விமானி உட்பட இரண்டு பேர் மர்மமான முறையில் அடுத்தடுத்து இறக்கிறார்கள்.

பயணிகளின் உயிர் முக்கியம் என பணம் தர ஒப்புக்கொள்கிறார்கள்.

கடத்தல்காரர்கள் தருகிற வங்கி கணக்கோ நாயகனின் பெயரில் இருக்கிறது. இப்பொழுது

மொத்த சந்தேகமும் நாயகனின் மீது விழுகிறது. அவருடைய குழந்தை நோயினால் இறந்துபோகிறது. தொடர்ந்து குடிக்கிறார். மனைவியும் விலகி செல்கிறார். அவருக்கு நிறைய பொருளாதார தேவையும் இருக்கிறது என அவருடைய வாழ்க்கை (Track Record) மோசமாக இருக்கிறது.

இதனால் பயணிகளிடையே ஒளிந்து இருக்கும் கடத்தல்காரர்களை கண்டுபிடிக்க விமான நிறுவனமும், பணியாளர்களும் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். பயணிகளிடம் நிலவரத்தை சொல்லாவிட்டாலும் கலவரமாகிறார்கள். சொன்னால் இன்னும் கலவரமாகிறார்கள். நாயகன் நம்பும் சிலரும் சந்தேக வளையத்திற்குள் வருவது இன்னும் நிலைமை சிக்கலாகிறது.

இதற்கிடையில் அரை மணி நேரத்தில் வெடிக்கப்போகிற வெடிகுண்டையும் கண்டுபிடிக்கிறார். இதெல்லாம் துவக்க கதை தான்!

கடத்தல்காரர்களிடமிருந்து பயணிகளை காப்பாற்றினாரா என்பது முழுநீளக்கதை!

****
வழக்கமான கடத்தல் கதையாக இல்லாமல், நிறைய முடிச்சுகளுடன் ஆரம்பம் முதல் இறுதிவரை விமானத்தித்திலேயே பரபரவென செல்கிறது படம்.

அமெரிக்காவின் இரண்டு கோபுர தாக்குதலின் எதிரொலி தான் இந்த விமான தாக்குதலும்! யார் எப்படி போனால் என்ன? நம் வாழ்க்கையில் எதுவும் நடக்காது என்று தான் பலரும் சொந்த வாழ்க்கையில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். அப்படி வாழமுடியாது. சமூகத்தில் நடக்கும் பல விசயங்களும் எல்லோரையும் தாக்கிக்கொண்டுத்தான் இருக்கும் என்பதற்க்கு இந்த படமும் உதாரணமாக கொள்ளலாம்.

படத்தின் நாயகன் Liam Neeson கெவின் காஸ்ட்னரை நினைவுப்படுத்துகிறார். எல்லோரும் நன்றாக செய்திருக்கிறார்கள்.

பார்க்கவேண்டிய படம். பாருங்கள். தமிழிலும் கிடைக்கிறது.

உரையாடல்

தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்கள் விற்கும் ஒரு சிறிய கடை நடத்துகிறார் அவர். மாதம் ஒருமுறை/இருமுறை அவருடைய கடைக்கு வேலை நிமித்தமாக செல்வேன்.

சர்வதேச அளவில் பல விசயங்களை பேசக்கூடியவர். அடிப்படையில் வலதுசாரி சிந்தனை உடையவர். அவர் பேசும் பல கருத்துகளுக்கு எதிர் கருத்துக் கொண்டவன் நான்.

வேலை செய்யப் போகிற இடத்தில் அரசியல் பேசி சண்டையிடக் கூடாது என சீனியர் என்னிடம் வலியுறுத்திக் கொண்டே இருப்பார். கஸ்டமர் கைவிட்டு போய்விடுவார் என்கிற பயம். 🙂

"மரம் அமைதியை விரும்பினாலும் காற்று விடுவதில்லை"

நான்கு மாதங்களுக்கு முன்பு இருவரும் விவாதித்து காரசாரமாக போய்விட்டது. இனி விவாதிக்கவே கூடாது என்று இருவரும் தனித்தனியாக முடிவு செய்யும்படி ஆகிவிட்டது.

நேற்றும் போயிருந்தேன். தேர்தல் காலம். எப்படி பேசாமல் இருப்பது?ஆரம்பித்தார். என் வேலையை செய்து கொண்டே, எதிர்த்துப் பேசாமல் அவர் சொல்லிய சில விஷயங்களைப் பற்றி மட்டும் சில கேள்விகள் மட்டும் எழுப்பிக் கொண்டே இருக்கவேண்டும் என்ற முடிவில் இருந்தேன். சில உதாரணங்கள்.

"அதிமுக, திமுகவை எப்படி பார்க்கிறீர்கள்? - அவர்.

"ரெண்டையும் ஒண்ணா பார்க்க முடியாது. திமுகவை விட அதிமுக ரொம்ப மோசமானது சார்!" - நான்.

"பாமக சாதி கட்சி என பேசுகிறார்கள். அதே மாதிரி தானே விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சாதி கட்சி தானே சார்!" - அவர்.

ஆதிக்க சாதியும், ஒடுக்கப்படுகிற சாதியும் வைத்திருக்க அமைப்பையும் சமமா பாக்க முடியுமா சார்?" - நான்.

கருணாநிதிக்கு மூணு பொண்டாட்டி. கண்ணதாசனுடைய வனவாசம், உலகத்திலேயே பெரிய பணக்காரங்க கருணாநிதி சன் டிவி குடும்பம், வாரிசு அரசியல் என பல விஷயங்களை தொட்டுக்கொண்டு பேசிக் கொண்டே இருந்தார். கீறல் மட்டும் போட்டுக்கொண்டே வந்தேன்.

"தலித்துகளைப் பற்றி பெரியார் இழிவாக பேசி இருக்கார்" - அவர்.

"அப்படி நான் படிச்சது இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை. அப்படி இருந்தா காமிங்க!" - நான்

அவரிடத்தில் அமைதி.

இறுதியில்... சாதி வாரி வாக்கு வங்கி, கட்சிக்கு உள்ள வாக்கு வங்கி என எல்லாவற்றையும் கணக்கிட்டு...

"இந்த தேர்தல்ல 40 க்கு 20 அதிமுக அணியும், 20 திமுக அணியும் வாங்குவாங்க! என்னோட தனிப்பட்ட விருப்பம் அதிமுக கூட்டணியே 40 வாங்கனும்" - அவர்

"ஒரு தேர்தலில் அதிமுக பெரும்பான்மையா ஜெயிக்கும். அடுத்த தேர்தலில் திமுக பெரும்பான்மையா ஜெயிக்கும். அதிமுக - மோடி எதிர்ப்பு தமிழகத்தில் அலை அதிகமா இருப்பதால திமுக கூட்டணி பெரும்பான்மையா ஜெயிக்கும். என் விருப்பம் மோடி - அதிமுக ஒரு சீட் கூட ஜெயிக்ககூடாது!"

குறிப்பு : இன்னமும் அவரிடம் உரையாட முடிவதற்கு காரணம் அவர் இன்னும் முழுசா சங்கீயா மாறல!

எனக்கும் அவருக்கும் இருக்கிற ஒரே ஒற்றுமை. இருவரும் பொருளாதார ரீதியா நிறைய சிரமத்தில் இருக்கோம்! 🙂

Se7en (1995)

பெருந்தீனிக்காரன் ஒருவன் கொலை செய்யப்படுகிறான். அதை ஆராயும் டிடெக்டிவ் இன்னும் ஒரு வாரத்தில் ஓய்வு பெறப்போகிறோம். இதில் தலையிட வேண்டாம் என நினைக்கிறார்.

அவருடைய மேலதிகாரியோ அவரை கேஸை எடுத்துக்க சொல்லி நெருக்குகிறார். புதிதாக வந்த இளைய டிடெக்டிவ் அலட்டிக்கொள்கிறார்.
அடுத்தும் கொலை நடக்கிறது. மூத்த டிடெக்டிவ் கொலைகளுக்கான தடயங்களை ஆய்வு செய்கிறார்.

கிரேக்கத்தில் இருந்த இவாக்ரியஸ் என்பவர் எட்டு பாவங்களை வகுத்தார். அவை gluttony, lust, avarice, sadness, anger, acedia, vainglory, and pride. இந்த பாவங்களின் அளவை பின் போப் க்ரிகோரி என்பவர் ஏழாக குறைத்தார். மேலே இந்த பட்டியலில் இருந்து vainglory என்பதையும் pride-னுள் அடக்கி ஏழாக்கினார். அந்த ஏழு பாவங்களாவன.

gluttony - இதை பெருந்தீனிக்காரன் என சொல்லலாம். அஃதாவது தேவையுள்ளவர்களுக்கு அளிக்காமல் தனக்கே என்று தின்பவன்.

lust - பணம், சாப்பாடு, புகழ், அதிகாரம் மற்றும் குறிப்பாக காமம் ஆகியவற்றின் ஒரு வார்த்தை. பெருவாரியாக தவிர்க்க முடியாத காம இச்சைகளுக்கே இதை சொல்வார்கள்.

avarice(greed) - இதுவும் இச்சை சார்ந்தது தான். அடுத்தவர்களின் பொருட்கள் மேல் கொள்ளும் இச்சை.

(acedia, sadness) sloth - ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வேலைகள் பிறவிப்பயனாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வேலைகளை செய்யாமல் சோம்பேறியாய் இருத்தல்.

wrath - வெறுப்பாலும் கோபத்தாலும் பொங்கி எழும் வெறி.

envy - இதையும் அடக்கவியலாத இச்சை என்கிறார்கள். பிறரின் கௌரவம் மேல் கொள்ளும் பொறாமை.

pride - இதை ஏழு பாவங்களிலேயே முக்கியமாக கருதியிருக்கின்றனர். பிறரின் நன்முயற்சிகளை பொருட்படுத்தாமல் தன்னையே பிறரை காட்டிலும் மேலோங்கியவன் என்று எண்ணிக் கொள்ளுதல்.

இதன் அடிப்படையில் கொலைகள் தொடரும் என அவருக்கு புரிகிறது.
எதிர்பாரா சமயத்தில் கொலைகாரனே சரணடைகின்றான்.

மீதி கொலைகளையாவது தடுத்து நிறுத்தினார்களா என்பது முழு நீளக்கதை!

****
இந்து மதத்தில் அந்நியன் அம்பி போல, கிறித்துவ அம்பி தான் கொலைகளை செய்கிறார். சமூகத்தை திருத்துகிறேன் என்று தான் விளக்கம் தருகிறார். மதம் இருக்கும் வரையில் இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளும் தொடரும்.

இந்த கதையை சொன்ன விதத்தில் சுவாரசியப்படுத்தியிருக்கிறார்கள்.

இளைய டிடெக்டிவ் வேகமாக இருக்கிறார். மூத்தவரோ விவேகத்துடன் இருக்கிறார். இருவருக்குமான அணுகுமுறை நன்றாகவே வெளிப்படுகிறது.

"ஆபத்து என்றால் " காப்பாற்றுங்கள்" என்று கத்தினால், அக்கம் பக்கத்தில் இருந்து ஒருத்தனும் வரமாட்டான். "நெருப்பு"ன்னு கத்துங்க! நம்மை வீட்டையும் பத்திக்குமேன்னு! உடனே ஓடிவருவான்!"

- இப்படி ஓரிடத்தில் பேசிக்கொள்கிறார்கள். தனி உடைமை சமூகத்தின் சாம்பிள் இது!

ஒரு சுவாரசியமான திரில்லர். பார்க்க கூடிய படம். பாருங்கள். தமிழில் கிடைக்கிறது.
நன்றி : ஏழு பாவங்கள் பற்றி குறிப்புகள் தந்து உதவியவர் பதிவர் கிருஷ்ணமூர்த்தி