> குருத்து

June 19, 2019

அத்தை, பெரியப்பா வீடு!

ஊரை பிரிந்து வந்து பதினைந்து ஆண்டுகளாகிவிட்டன.

சென்னையிலிருந்து ஊரே தீபாவளிக்கு கிளம்பி போகும் பொழுது, நாங்களும் மூன்று நாட்கள் ஊர்ப்பக்கம் குடும்பத்தோடு போய், இருந்து வருகிறோம். மூன்று நாளும் வேகமாக போய்விடும்.

மற்றபடி, நெருங்கிய சொந்தங்கள் திருமணத்தின் பொழுதோ, இறப்பின் பொழுதோ தான் ஊர்ப்பக்கம் நான் மட்டும் போய் வருகிறேன்.

பொண்ணுக்கு நம்ம மண்ணு வாசம், சொந்தங்கள், பண்பாடு ஒட்டனுமே! அதற்காக கோடை விடுமுறையில் ஊருக்கு அனுப்பிவைக்கிறோம்.

அக்காவும், அண்ணனும் ஊரில் இருப்பதால், பதினைந்து நாட்களோ, இருபது நாட்களோ ஊருக்கு அனுப்பி வைப்பது வழக்கம். அவர்களுக்கும் மகிழ்ச்சி.

30 வருடங்களாக ஊரில் வாழ்ந்தாலும் என்னிடம் ஊரின் பேச்சு வழக்கு பெரிதாக ஒட்டிக்கொண்டதில்லை. பதினைந்து நாள் இருந்துவிட்டு வரும் என் மகளிடம் நன்றாகவே ஒட்டிக்கொள்ளும்!

சிறுவயதில் கோடை விடுமுறைக்கு வெளியூர் சென்றதேயில்லை. எல்லா சொந்தங்களும் உள்ளூரிலேயே இருந்ததும் ஒரு காரணம்.

The Pursuit of happyness (2006)

கதை. 1981ல் நிகழ்கிறது. நாயகன் மருத்துவமனைகளில் அலைந்து திரிந்து ஸ்கேனர் விற்று பிழைக்கிறான். மனைவியும் வேலைக்கு செல்கிறார். ஐந்து வயது பையனுடன், வீட்டு வாடகை கூட கொடுக்கமுடியாமல் தடுமாறுகிறார்கள்.

நன்றாக வாழ்வோம் என்ற நம்பிக்கை இல்லாமல் போக மனைவி பிரிகிறார்.

தொழிலை மாற்றலாம் என்றால்.. ஆறு மாதம் பயிற்சி. சம்பளம் இல்லை. 20 பேர் கொண்ட குழுவில், முதலிடத்தில் வந்தால்... நிரந்தர வேலை என்கிறார்கள்.

வீடு இல்லை. வருமானம் இல்லை. ஐந்து வயது மகனுடன் பல்வேறு சோதனைகளை எதிர்கொள்கிறான். எல்லாவற்றையும் மீறி ஜெயித்தானா என்பது முழு நீளக்கதை!

****
அமெரிக்கன் பியூட்டி என படம். அமெரிக்க குடும்பங்களின் அகம் எப்படி சிக்கலாக இருக்கிறது என அருமையாக பேசிய படம்.

உண்மை சம்பவங்களின் அடிப்படையான இந்த படமும் முக்கியமான படம் தான். உலக நாடுகள் முழுக்க தலையிட்டு ரவுடித்தனம் செய்து கொண்டிருக்கும் அமெரிக்காவில் ஒரு சராசரி மனிதனின் வாழ்வு எத்தகைய அழுத்தங்களுடனும், பதட்டங்களுடனும் நகர்கிறது என சொல்கிறது படம்.

அடிதடி நாயகனான ஸ்மித்தும், அவருடைய பையனும் பாத்திரங்களில் அத்தனை இயல்பாக நம்மை கொள்ளை கொள்கிறார்கள்.

எத்தனை துயரம் வந்தாலும், அய்யோ என நாயகன் நம்பிக்கை இழக்கவில்லை என்பது முக்கியமானது.

1980 காலத்தை விட 2008ல் நிகழ்ந்த முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி பல மடங்கு ஆழமானது. உலக புகழ்பெற்ற அமெரிக்க வங்கிகள் திவாலாகின. தனியார் வங்கிகளை அமெரிக்க அரசு மக்கள் பணத்தை வாரிக்கொடுத்து காப்பாற்றினார்கள். மக்களை?

மக்கள் கோடிகளில் வேலை இழந்தார்கள். வீடிழந்தார்கள். தெருவில் கூடாரம் அமைத்து வாழ்ந்தார்கள். தங்களது செல்ல பிராணிகளை வளர்க்க வழியில்லாமல் தூரமாய் விட்டுவந்தார்கள். ரத்தம் விற்றார்கள். விந்தணுவை கூட விற்றார்கள். வேறு நாடுகளில் சொந்தங்கள் இருந்தால், ஒன்வே டிக்கெட் தருகிறோம். கிளம்புங்கள் என்றது அரசு. நாங்கள் 99% என மக்கள் தொடர்ந்து போராடினார்கள்.

அந்த சமயத்தில் நிகழ்ந்த கதைகள் ஆயிரமுண்டு. அதையெல்லாம் எடுக்கலாம்.
ஹாலிவுட் திரையுலகம் உலக பிரச்சனைகளையெல்லாம் ஏற்கனவே தீர்த்துவிட்டதால், இப்பொழுது வேற்று கிரகவாசிகளின் பிரச்சனைகளை தீர்க்க கிளம்பிவிட்டார்கள். உள்ளூர் பிரச்சனைகளை அமெரிக்க மக்கள் தான் தீர்க்கமுடியும்.

இந்த படம் தமிழிலும் கிடைக்கிறது. குடும்பத்தோடு பார்க்கலாம். பாருங்கள்

June 1, 2019

Dial M for Murder (1954)

"ஒரு பர்ஃபெக்ட் கொலையை யாராலும் திட்டமிட முடியாது"

- ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் புகழ்பெற்ற திரில்லர்!

கதை. எளிய கதைதான். கணவன் மனைவி உறவில் வேறு ஒரு எழுத்தாளர் வருகிறார். கணவர் ஒரு வருடமாக திட்டமிட்டு தன் மனைவியை கொலை செய்ய பார்த்து பார்த்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து, கொலை செய்ய ஒரு ஆளையும் ஏற்பாடு செய்கிறார்.

திட்டமிட்ட நாளில், நேரத்தில் கொலை நடக்கிறது. ஆனால் அதில் ஒரு டுவிஸ்ட். இருப்பினும் கணவர் கொஞ்சமும் சளையாமல் அதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறான். கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டரா என்பது முழு நீள கதை.

****

ஒன்னே முக்கால் மணி நேரம் போனதே தெரியவில்லை. அருமையான திரில்லர்.

கொலை செய்ய சொல்லி, கன்வின்ஸ் செய்யும் இடம் அருமை.

நாடகத்திற்காக எழுதப்பட்ட கதை என்பதால் அதிகபட்சம் மூன்று இடங்களில் மட்டுமே காட்சிகள் நடைபெறுகின்றன. அதிலும் வீட்டின் வரவேற்பறையில் தான் பெரும்பான்மை காட்சிகள் நடக்கிறது. முக்கிய கதாபாத்திரங்கள் நான்கு தான். கதையை வலுவாக நம்பிக்கைக் எடுத்ததால் திரைக்காக எந்த மாற்றமும் செய்யவில்லை.

இந்த படத்திற்காக சில விமர்சனங்களை படித்த பொழுது பலரும் 'கள்ளக்காதலன்' என எழுதியிருந்தார்கள். மனைவி திருமண ஒப்பந்தத்தை மீறி விட்டாளே என்ற கோபத்தை விட மனைவி தன்னை விவாகரத்து செய்து விட்டால் தெருவுக்கு வந்து விடுவோம் என்கிற பதட்டம் தான் கணவனுக்கு அதிகம். அதை அவனே ஓரிடத்தில் சொல்வான்.

சத்யராஜை வைத்து சாவி என்ற பெயரில் தமிழில் எடுத்திருந்தார்கள். அந்த படம் எடுபடவில்லை என்றே நினைக்கிறேன்.

பார்க்க வேண்டிய படம் பாருங்கள். தமிழிலும் கிடைக்கிறது.