> குருத்து: Judgement at Nuramberg - Film (1961)

March 19, 2013

Judgement at Nuramberg - Film (1961)

//போர்க்குற்றவாளிகளை சுதந்திரமான, நடுநிலையான விசாரணை மூலம் தண்டிக்க இரண்டாம் உலகப் போருக்கான நூரம்பர்க் போர்க்குற்ற விசாரணை போல் சுதந்திரமாக நடத்தினால்தான் தண்டிக்க முடியும் - புரட்சிகர மாணவ இளைஞர் முன்னணி//

இந்த கோரிக்கை இப்பொழுது பரவலாக பேசப்படுகிறது. இந்த விசாரணை குறித்த படமொன்று 1961ல் வெளிவந்தது.  2009ல் இந்த படத்தைப் பற்றிய் ஒரு அறிமுக குறிப்பாக எழுதியிருந்தேன். தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடந்துகொண்டிருக்கிற வேளையில் இந்த படத்தை மீள்பதிவு செய்கிறேன்.

*****

ஜெர்மனி, இட்லர், நாஜிப்படை, வதைமுகாம், படுகொலைகள்.... பற்றிய பட வரிசையில் பார்க்க வேண்டிய படம் – நூரம்பர்க்கில் தீர்ப்பு.

இரண்டாம் உலகப்போர் முடிந்து, ஜெர்மனி வீழ்ச்சியடைகிறது. நாஜிக்களின் கணக்குப்படியே படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சம் மக்கள். நினைத்துப் பார்க்கவே உடல் நடுங்கும் இந்த படுகொலைகளை நாஜிக்களின் சட்டப்படி தண்டனை தர‌ தீர்ப்பு வழங்கிய ஒரு தலைமை நீதிபதி, மற்றும் 3 நீதிபதிகள் மீதான வழக்கு விசாரணை தான் படத்தின் களம்.

படத்தின் முதல் காட்சி. ஒரு பெரிய பாரம்பரிய கட்டடம். அதில் நாஜிக்களின் சின்னமான ஸ்வஸ்திக் தூண் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. அதை குண்டு வைத்து தகர்க்கப்படுகிறது.

இந்த குற்ற விசாரணை துவங்குகிறது. குற்றங்களை நிரூபிக்க அரசு தரப்பு அந்த நான்கு நீதிபதிகளும் வழங்கிய தீர்ப்புகளை கத்தை கத்தையாக சமர்ப்பிக்கிறது. நீதிபதிகளுக்கு ஆதரவாக வாதாடுகிறவர் அவர்கள் நாஜிக்களின் சட்டப்படி தான் இயங்கினார்கள். அவர்கள் மேல் எப்படி குற்றம் சொல்லமுடியும் என வாதாடுகிறார்.


நாஜிக்களின் ஆட்சியின் பொழுது, நடந்த குற்ற வழக்குகளில் குறிப்பாக இரண்டு வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஒரு வழக்கு – கம்யூனிஸ்டு ஒருவரின் மகன் என்ற காரணத்திற்காக கைது செய்யப்பட்டு அவரை மலடாக்குகிறார்கள். (Sterilized). நீதிமன்றத்திற்கு வந்து தனக்கு இழைத்த குற்றத்தை விளக்குகிறார்.

மற்றொரு வழக்கு – ஆர்ய இனத்தை சேர்ந்த ஒரு 16 வயது பெண், யூத பிரிவைச் சேர்ந்த ஒரு வயதான பெரியவர் அந்த பெண்னுடன் பழகினார் என்பதற்காக, குற்றம் என சொல்லப்பட்டு, 1942ல் அவரை கொன்றுவிடுகிறார்கள். அந்த பெண் மீண்டும் வந்து விளக்குகிறார்.

1948ல் வழக்கு விசாரணை துவங்கி 8 மாதங்களாக நடைபெற்று 1949ல் முடிவடைகிறது. இறுதியில்... நான்கு நீதிபதிகளுக்கும் ஆயுள் தண்டனை கிடைக்கிறது.

படம் 1961ல் வெளிவந்திருக்கிறது. 1949 - 1961 என 12 ஆண்டுகளுக்குள்ளேயே ஆயுள் தண்டனை பெற்ற நாலு நீதிபதிகளில் ஒருவர் இறந்து விடுகிறார். மீதி 3 பேர் விடுதலை ஆகிவிட்டார்களாம்.

படத்தில் எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வழக்கு விசாரணை படத்தை
இவ்வளவு விறுவிறுப்பாக எடுக்க முடியுமா என்பது ஆச்சர்யம் தான். ஆங்கில படங்களில், இதுவரை வந்த வழக்கு விசாரணை படங்களில் சிறந்த படங்களில் ஒன்று எனவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்திற்கு

சிறந்த படம் - (Best Picture)
சிறந்த நடிகர் (Best Actor) ,
சிறந்த நடிகர் (Best Leading Role)
சிறந்த துணை நடிகர் (Best actor supporting Role)
சிறந்த துணை நடிகை (Best actress supporting role, )
சிறந்த ஒளிப்பதிவு (Best Cinematography)
சிறந்த கலை இயக்கம் (Best Art Direction)
சிறநத உடையமைப்பு (Best Costume design)
சிறந்த படத்தொகுப்பு (Best Film Editing)
சிறந்த கருப்பு வெள்ளை படம் (Best Black & White movie)
சிறந்த திரைக்கதை(Best writing, Screenplay)
சிறந்த இயக்கம் (Best Director) – என

படம் 11 வகைகளில் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை என இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றது.
186 நிமிடங்கள் – படம் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக ஓடினாலும், கொஞ்சம்
கூட அலுப்பு தட்டாமல் நகர்கிறது. கதை களம் அப்படி! கண்டிப்பாக பாருங்கள்.




பின்குறிப்பு : படத்தில் நான்கு நீதிபதிகளுக்கு ஆதரவாக வாதாடும் பொழுது... இந்த படுகொலைகளுக்கு இந்த நீதிபதிகள் குற்றவாளிகள் என்றால்.. இட்லரை புகழ்ந்துரைத்தாரே சர்ச்சில் அவரும் குற்றவாளி தான். ஜெர்மனியின் நடவடிக்கைகளில் அமெரிக்க முதலாளிகள் பெரும் லாபத்தை சம்பாதித்தார்களே... அவர்களும் குற்றவாளிகள் தான். இந்த படுகொலைகளை உலகம் பார்த்துகொண்டிருந்ததே உலகமே குற்றவாளி தான் என வாதாடுவார்.

உண்மை தான். இதோ நம் அருகேயே ஈழமண்ணில் மக்களை இலங்கை ராணுவம் ஆயிரக்கணக்கில் கொன்றழிக்கிறது. மக்களை முகாம்களில் வதைக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரசியா என பல நாடுகள் ஆயுதங்கள் தந்து உதவுகின்றன. ஏகாதிபத்தியங்களும் மறைமுகமாகவும், நேரடியாகவும் உதவுகின்றன. தடுக்க முடிந்ததா நம்மால்? ஈழ படுகொலைகளை தடுக்க ஒரு துரும்பை கூட எடுத்துப் போடாத நாமும் கூட ஒருவகையில் குற்றவாளிகள் தான்.

2 பின்னூட்டங்கள்:

Vijay said...

இவ்ளோ அவார்டு எல்லாம் வங்கவில்லை.

ரெண்டு ஆஸ்கர் அவார்டு வாங்கி இருக்கு.

சரியா பதிவு பண்ணுங்க பாஸ்.

குருத்து said...

விஜய்,

இப்பொழுது தான் இந்த படம் குறித்து தேடிப் படித்துக்கொண்டிருந்தேன். இரண்டு விருதுகளை தான் வென்றிருக்கிறது. மற்றவையெல்லாம் பரிந்துரைகள் என பார்த்த பொழுது, பதறி போய்விட்டேன். திருத்துவதற்கு தளத்திற்கு வந்தால், உங்களுடைய பின்னூட்டத்தைப் பார்த்தேன். தகவலுக்கு நன்றி பாஸ்.

அப்பவெல்லாம் கொஞ்சம் இங்கிலீஸ்ல வீக். அதனால் கூட இருக்கலாம். :)