> குருத்து: தமிழகம்
Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts

October 28, 2022

பெயரில் என்ன இருக்கிறது?



பெரியார் இதை உடைப்பதற்கு முயற்சி செய்தார். குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லும் பொழுது “கும்பிடறேன் சாமி” என பெயர் வைத்தார். சுருக்கினாலும், ”கும்பிடறேன்” என அழைக்கவேண்டும். அல்லது ”சாமி” என அழைக்கவேண்டும்.

***

வழக்கமாக வேலைக்காக செல்லும் ஒரு அலுவலகத்தில் ஒரு புதிய பெண் ஊழியர் புதிதாக சேர்ந்திருந்தார். அறிமுகத்திற்காக பெயரை கேட்ட பொழுது, “குயிலி” என்றார். ஆனால், அதில் ஒரு சின்ன திருத்தம் இருந்தது. “குயிலியா?” என்றேன். “குயினி” என திருத்தினார். வித்தியாசமான பெயர், புரியாத பெயர் என்றால் பெயர் காரணம் கேட்பது வழக்கம். நினைவில் வைத்துக்கொள்ளவும் பயன்படும். மருத்துவம் பார்த்த மருத்துவரின் பெயர் ராசாத்தியாம். அவருடைய பெயர் வைக்கவேண்டும். அதை “நவீனப்படுத்தி” குயினி என வைத்துவிட்டார்களாம்.

சமீபத்தில் ஒரு பள்ளிக்கு போயிருந்தேன். எல்.கே.ஜி வகுப்பு அது. அங்கிருந்த கரும்பலகையில் இருபது பெயர்களை வரிசையாக எழுதிப்போட்டிருந்தார்கள். அக்‌ஷயா, சாதனா, சந்தோசிகா, தீப்ஷிகா, வருண்காந்த், பிரார்த்தனா, வித்யா, முக்தாஸ்ரீ என நீண்டு போய்க்கொண்டு இருந்தது. எந்த பெயரும் தமிழில் இல்லை. ஆச்சர்யமாக இருந்தது.

சில வீடுகளில் சிலருக்கு இரண்டு பெயர் இருக்கும். சான்றிதழில் ஒரு பெயர். அழைப்பது ஒரு பெயராக இருக்கும். பக்கத்து வீட்டு நண்பனை ”கண்ணா” என அழைப்போம். சான்றிதழில் ”முத்துக்கிருஷ்ணன்” என இருக்கும். அவனின் தங்கையை ”பாலா” என அழைப்போம். சான்றிதழில் ”நல்லதாய்” என இருக்கும்.

பெயர் வைப்பது என்பது தன் குடும்பத்தின் மூத்தவர்களின் பெயரை, தனது குலசாமிகளின் பெயரை, கடவுளர்களின் பெயரை வைத்த தமிழ் மக்களுக்கு என்ன ஆயிற்று? எப்பொழுதிலிருந்து இப்படிப்பட்ட ”நவீனத்திற்கு” மாறினார்கள் என தெரியவில்லை. குழந்தை பிறந்ததும், நேரத்தை, நாளைக் குறித்துக்கொண்டு, ஜாதகக்காரர்களிடம் போய் என்ன எழுத்தில் பெயர் வைப்பது என ”பொறுப்பாய்” கேட்கிறார்கள். எல்லா ஜோசியக்காரர்களும் சமஸ்கிருதமயமாதலுக்கு ஆதரவானவர்களாக எப்பொழுது மாறிப்போனார்கள் என தெரியவில்லை. அவர்கள் சொல்கிற முதல் எழுத்தே சிக்கலானதாக இருக்கிறது. அதன் வழி பெயர் வைப்பவர்களும் மேலே உள்ள பெயர்கள் போல வைக்கமுடியும்.

மலையாளத்தில் தொலைக்காட்சியில் ஒருவர் பிரபலம். உலகில் எங்கோ இருக்கும் ஒரு பிரபலத்தை நீங்கள் மனதில் நினைத்துக்கொள்ளவேண்டும். அவர் 25 கேள்விகள் கேட்பார். அதற்கு நீங்கள் ஆம், இல்லை என சொன்னால் போதும். 25 கேள்விகள் முடிவதற்குள் அவர் நீங்கள் யாரை நினைத்தீர்கள் என்பதை பெரும்பாலும் சரியாக சொல்லிவிடுவார். அப்படித்தான் பெயரும். பலரின் இயற்பெயரை சொன்னால், மூன்றே கேள்விகளில் அவர் எந்த மண்ணைச் சார்ந்தவர் என அடையாளப்படுத்திவிடலாம்.

சிவகார்த்திகேயன் நடித்த படம் ”எதிர்நீச்சல்”. படத்தில் நாயகனுக்கு பெயர் குஞ்சிதபாதம். (குஞ்சிதபாதம் என்பது பல வகை வேர்களால் உருவாக்கப்பட்டு, நடராஜருக்கு அணிவிக்கப்படுவது. இந்த குஞ்சிதபாதத்தை தரிசித்தால் நோய் அகலுவதுடன், மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை) அந்த பெயர் சொல்லப்படும் பொழுதெல்லாம் சுருங்குவான். சொல்ல தயங்குவான். பிறகு ஒரு சமயத்தில் பெயரையே மாற்றிக்கொள்வான். தனக்கென ஒரு அடையாளம் வேண்டுமென்பதற்காக பெருமுயற்சி செய்து, வெற்றி அடையும் பொழுது, எல்லா ஊடககாரர்களும் மைக்கை முன்னால் நீட்டும் பொழுது… தன்னுடைய இயற்பெயரையே சொல்லுவான். அதற்கு காரணம் சொல்லும் பொழுது ”பெயர் என்பது மற்றவர்கள் அழைப்பதற்கு மட்டுமல்ல! அது ஒரு தலைமுறையின் அடையாளம்” என்பான்.

எப்படி பெயர் வைக்கவேண்டும் என மனுதர்மம் சொல்கிறது என்றால்… பிராமண சாதியில் பெயர் மங்களகரமான பெயராக, சத்திரியர் என்றால் வீரம் கொப்பளிக்கிற மாதிரி, வைசியர் என்றால் செல்வம் கொழிப்பதாக, சூத்திரர் என்றால் அடிமைத்தனம் கொண்ட பெயராக இருக்கவேண்டுமாம். பஞ்சமர்களுக்கு முழுப்பெயரும் தாங்குகிற உரிமை கிடையாது என்கிறது.

இதெல்லாம் அந்த காலம். இப்பொழுது அப்படி இருக்கிறதா? எனக் கேட்டால்… குப்புசாமி என்றால், இப்பொழுதும் குப்பு என அழைக்கிறார்கள். இசக்கியம்மாள் என பெயர் வைத்தால்… இசக்கி என்று தான் அழைக்கிறார்கள். அது இயல்பாக வருவதில்லை. இப்படி அழைக்கும் வழக்கம் வருணாசிரமத்திலிருந்து வருகிறது. ஒடுக்கப்பட்டவரை பாதிப் பெயர் சொல்லித்தான் அழைக்கவேண்டும் என்கிறது மனு தர்மம்.

பெரியார் இதை உடைப்பதற்கு முயற்சி செய்தார். குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லும் பொழுது “கும்பிடறேன் சாமி” என பெயர் வைத்தார். சுருக்கினாலும், ”கும்பிடறேன்” என அழைக்கவேண்டும். அல்லது ”சாமி” என அழைக்கவேண்டும். ஆதிக்கசாதிக்காரர்கள் மரியாதை குடுத்து பழகட்டும் என்றார். ஆனால் ஆதிக்கச்சாதி புத்தி குரூரமானது. “கும்பிடறேன் சாமி”யை சுருக்கி ”கும்பிடு” என அழைத்தது.

ஒடுக்கப்பட்டவர்களுக்கு செத்த பிறகு சொர்க்கம் என போதிக்கும் இந்து மதம், வாழும் பொழுதே இந்த மண்ணில் அவர்களுக்கான “சொர்க்கத்தை” படைக்க பார்க்கிறார்கள் ஆட்சியில் அமர்ந்திருக்கும் காவி பாசிஸ்டுகள். காவி இருளை சாத்தியமான எல்லா வழிகளிலும் பரப்ப முயல்கிறார்கள். காவி இருள் மொத்தமாக சமூகத்தின் மீது கவிழ்ந்துவிட்டால், அதில் இருந்து மீள்வது பெரிய போராட்டமாகிவிடும்.

ஆக பெயரில் என்ன இருக்கிறது? நம்மைச் சுற்றி உள்ள அனைத்திலும் அரசியல் இருக்கிறது. பெயரிலும் அரசியல் இருக்கிறது. பெயரில் நமது பண்பாடு இருக்கிறது. நமது அடையாளம் இருக்கிறது. மொழியியலில் மக்களால் பேசப்படாத மொழியை ”செத்த மொழி” என்பார்கள், அப்படி செத்துப்போன மொழியான சமஸ்கிருத மொழிக்கு செம்மொழிக்கு சொந்தக்காரர்களான நாம் ஏன் உயிர்கொடுப்பானேன்.

ஆகையால் சமஸ்கிருத, வடமொழிப் பெயர்களை கவனமாக தவிர்ப்போம். அழகு தமிழில் நல்ல பெயர்களை நம் குழந்தைகளுக்கு சூட்டுவோம். அழைப்பதில் கூட முழுப்பெயரை சொல்லி அழைப்போம். பட்டப்பெயர் வேண்டாம். பெயர் வைப்பதிலும், அழைப்பதிலும் புதிய பண்பாட்டை கடைப்பிடிப்போம்.

பின்குறிப்பு : சில தகவல்கள் தந்து உதவிய அகத்தியலிங்கம் அய்யா அவர்களுக்கு நன்றி.

October 22, 2022

பாரசிட்டமாலும் பட்ஜெட்டும்!


பாரசிட்டமாலை ஹோமியோபதி மருத்துவர்கள் வெறுப்பார்கள். காரணம். அது மருந்தே இல்லை. செயற்கையாக உடலில் வியர்வை சுரப்பிகளை உருவாக்குகிறது என்பார்கள். ஜூரம் ஒருவருக்கு வருகிறது என்றால், அது பல காரணங்களால் வரலாம். அதன் ஜூரத்தின் தன்மை பொறுத்து எதனால் வருகிறது என்பதை கண்டறிந்து மருந்தை ஹோமியோபதிகாரர்கள் மருந்தை தருவார்கள். பாரசிட்டமால் என்ற கல்லைத் தூக்கி போட்டு ஜூரத்தை காணாமல் போக செய்தால் கோபம் வரத்தானே செய்யும்.


ஆனால் இந்த மாநிலத்தின் முதல் அமைச்சருக்கே ஜூரம் என்றால், எதனால் வருகிறது என டெஸ்ட்டுகள் மூலம் சோதித்து அறியாமல், தொலைபேசியிலேயே பாரசிட்டமால் கொடுங்க! என டாக்டர் சொன்னார் என்றால், பாரசிட்டமால் மீது ஒரு மரியாதை வருகிறது. 🙂

ஜெ. மரணம் குறித்த ஆறுமுகசாமி அறிக்கையை நிறைய விவாதிக்கிறார்கள். இந்த விசாரணை தொட்டு தொட்டு தமிழ்நாட்டை கொள்ளையடித்து ஒளித்து வைத்திருக்கும் பணத்தை, சொத்தை எல்லாம் கைப்பற்றினால் ஐந்து வருடத்திற்கு தமிழ்நாட்டில் வரியே இல்லாமல் பட்ஜெட் போடலாம். இவர்கள் செய்யமாட்டார்கள். சோகம்.

September 24, 2022

ஸ்விக்கி ஊழியர்களின் நியாயமான போராட்டம் வெல்லட்டும்!



லட்சக்கணக்கில் வேலை செய்யும் இந்த தொழிலாளர்கள் கிக் பொருளாதாரத்தில் இந்த நிலைக்கு தள்ளப்பட்டவர்கள். இவ்வளவு பேருடைய வாழ்க்கையையும் தொழிலாளர் நலச்சட்டங்கள் வழியாக பாதுகாக்க வேண்டிய ஒன்றிய அரசு வேடிக்கைப் பார்க்கிறது.

****

கடந்த திங்கள்கிழமை துவங்கி தலைநகர் சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் தங்களது ஊதியம் கடுமையாக குறைக்கப்படுவதை எதிர்த்து போராடிவருகின்றனர். இந்த ஊதிய குறைப்பை மற்ற மாவட்டங்களுக்கும் ஸ்விக்கி அடுத்தடுத்து அமுல்படுத்தும் என்பதால், மற்ற மாவட்டங்களிலும் உள்ள ஸ்விக்கி ஊழியர்கள் போராட துவங்கியுள்ளனர்.

பைக், செல்போன், ஸ்விக்கி ஆப்பில் வரும் இங்கிலீசை வாசிக்க தெரியும் அளவிற்கு படிப்பு இருந்தால் வேலைக்கு ஆட்களை எடுத்துக்கொள்கிறார்கள். தொழிலாளர்களுக்கென எந்தவித அலுவலகமும் இல்லை. தெருவோரம் உள்ள மரத்தடிகளில் காத்திருக்கிறார்கள். வாடிக்கையாளரிடமிருந்து ஆர்டர் வந்ததும், வில்லிருந்து கிளம்பும் அம்பு போல கிளம்புகிறார்கள். ஆர்டர் அனுப்பியதும் 30 நிமிடங்களுக்குள் விநியோகிக்கவேண்டும் என்பது விதியாக இருக்கிறது. இதில் சூடாக (Hot), குளிர்ச்சியாக (Cool), காரமாக (Spicy), கூடுதலாக சட்னி, சாம்பார் வேண்டும் என வாடிக்கையாளர்களின் கூடுதல் கட்டளைகளும் உண்டு.

உணவகத்தில் எத்தனை கூட்டம் இருந்தாலும், அங்கு வேகப்படுத்தி வாங்கிக்கொண்டு போய், வாடிக்கையாளர் இடத்தை வேகமாக அடைந்து விநியோகிக்கிறார்கள். இதில் உணவகங்களில் தாமதம், சில்லறை தட்டுப்பாடு, சாப்பாடு பொருளை ஒவ்வொன்றாக பொறுமையாக சோதிப்பது, மனிதர்களை கையாள்வது போல இல்லாமல் ஒரு எந்திரத்தை கையாள்வது போல நடத்துவது என பல பிரச்சனைகளை தினந்தோறும் எதிர்கொள்கிறார்கள். தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது பெரிய பிரச்சனை. இப்படி எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொண்டு தான் வேலைகளை செய்துவருகிறார்கள்.

இந்த நிலையில் தான் ஸ்விக்கி தன் ஊழியர்களுக்கு தரும் ஊதியத்தை ஏதோவொரு காரணம் சொல்லி குறைத்துக்கொண்டே செல்கிறது. இப்பொழுது நடக்கும் போராட்டம் ஏன் என்பதை ஊழியர்களே விளக்குகிறார்கள்.
ஊதியம் கணக்கிடும் முறை என்பது….

1. ஆர்டர் கட்டணம். (ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை ஆர்டர்கள் எடுக்கிறார்களோ, அதற்கு தகுந்த கட்டணம் தருகிறார்கள்.

2. பெட்ரோல் அலவன்ஸ் (ஒரு ஆர்டர் என்பது 3 லிருந்து 4 கிமீ தூரம். கூடுதலாக 6,7 கி.மீ என போகும் பொழுது கொடுக்கப்படும் தொகை)

3. ஊக்கத்தொகை (Incentives) (ஒவ்வொரு நாளும் ஒரு இலக்கு வைக்கிறார்கள். அதை அடைந்தால் தொகை, வாரத்திற்கு இவ்வளவு என இலக்கு அதை அடைந்தால், ஒரு தொகை என தரப்படுவது.)

4. சர்சார்ஜ் தொகை (மழைக்காலங்களில், உணவகத்தில் மிக பிசியான சமயங்களில் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக வாங்குவதில் இருந்து தருவது)
காத்திருப்பு கட்டணம் (Waiting Charges) (உணவகத்தில் காத்திருக்கும் நேரத்திற்காக தரும் தொகை)

மாதாந்திர சம்பளம் என எந்த ஊழியருக்கும் தரப்படுவதில்லை. இந்த ஐந்து வகைகளில் தான் கணக்கிட்டு சம்பளமாய் தருகிறார்கள்.

இப்பொழுது ஸ்விக்கி செய்திருக்கிற மாற்றம் என்னவென்றால்…

ஒரு தொழிலாளி மூன்று சிப்டுகளில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். இப்பொழுது அதை ஐந்து அடுக்குகளாக மாற்றிவிட்டார்கள்.

ஒரு தொழிலாளி 11 மணிக்கு ஸ்விக்கி ஆப்பை உள்ளே நுழைந்தால் (Log in) இரவு 11 மணி வரை, 12 மணி நேரம் வேலை செய்தால், அவர்கள் ஒரு நாளைக்கான இலக்கை அடைந்துவிட முடியும். ஆனால், கட்டணத்தை குறைத்ததன் மூலம் காலை 6 மணிக்கு உள்ளே நுழைந்தால், இரவு 11 மணி வரை வேலை செய்தால் தான் பழைய ஊதியத்தை அடைய முடிகிற அளவிற்கு கொண்டுவந்துவிட்டார்கள். இடையே மதியம் 3 மணிக்கு மேல் ஆர்டர் குறையும் பொழுது, வீட்டிற்கு போய் ஓய்வு எடுக்கமுடியும். இப்பொழுது அப்படி போகமுடியாத படிக்கு செய்கிறார்கள் என புகார் கூறுகிறார்கள்.

முன்பு ஒரு நாளைக்கு ஒரு தொழிலாளிக்கு 25 டெலிவரி தருவார்கள். இப்பொழுது அதை 10 ஆர்டர்களாக குறைத்துவிட்டார்கள். வருகிற ஆர்டர்களை தங்களோடு ஒப்பந்தம் போட்டு இருக்கிற ரேபிடோ (Rapido) போன்ற மற்ற நிறுவனங்களுக்கு தருகிறார்கள். நாங்கள் ஆர்டருக்காக காத்திருக்கும் பொழுது, இப்படி குறைப்பது நியாயமில்லை. என்கிறார்கள்.

முன்பு ஒரு ஆர்டருக்காக ஒரு உணவகத்துக்கு செல்லும் தூரம், அங்கிருந்து வாடிக்கையாளரை அடையும் தூரம் இரண்டையும் கணக்கிட்டு பணம் கொடுத்திருக்கிறார்கள். இப்பொழுது உணவகத்திற்கு செல்லும் தூரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டோம் என தெரிவிக்கிறார்கள்.

முன்பு வாரம் முழுவதும் வேலை செய்து இலக்கை அடைந்தால், ஊக்கத்தொகையாக ரூ. 1200 தருவார்கள். இப்பொழுது அந்த ஊக்கத்தொகை இல்லை என சொல்கிறார்கள்.

இது தவிர ஒரு ஆர்டரை உணவகத்தில் இருந்து வாடிக்கையாளருக்கு தரும் பொழுது, அந்த வாடிக்கையாளர் அந்த தொழிலாளி செய்த சேவையை மதிப்பிட்டு மதிப்பெண்கள் (Stars) தருகிறார்கள். சில வாடிக்கையாளர்கள் அதை குறைத்து தரும் பொழுது அவர்களுக்கு வாரந்திர ஊக்கத்தொகையை கடுமையாக வெட்டுகிறார்கள். வாடிக்கையாளர்கள் தரும் மதிப்பெண்களை ஸ்விக்கி நிறுவனம் மட்டுமே பார்க்கமுடியும். தொழிலாளியால் காணமுடியாது. இதை வைத்துக்கொண்டு ஸ்விக்கி தங்களது தரும் தொகையை பெரிய அளவில் வெட்டுகிறார்கள் என்கிறார்கள்.

வாடிக்கையாளர்களுக்கு அரை மணி நேரத்தில் உணவை சென்று சேர்க்கவேண்டும் என ஸ்விக்கி ஊழியர்கள் சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாய் செல்லும் பொழுது, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அதற்கு எல்லாம் ஸ்விக்கி பொறுப்பு ஏற்பதில்லை. ஒரு தொழிலாளருக்குரிய அடிப்படையாக தரவேண்டிய இ.எஸ்.ஐ, பி.எப் இரண்டையும் தருவதில்லை.

லட்சக்கணக்கில் வேலை செய்யும் இந்த தொழிலாளர்கள் கிக் பொருளாதாரத்தில் இந்த நிலைக்கு தள்ளப்பட்டவர்கள். இவ்வளவு பேருடைய வாழ்க்கையையும் தொழிலாளர் நலச்சட்டங்கள் வழியாக பாதுகாக்க வேண்டிய ஒன்றிய அரசு வேடிக்கைப் பார்க்கிறது. மாநில அரசும் வேடிக்கை பார்க்க கூடாது. விரைந்து அந்த தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

அவர்களுடைய கடுமையான உழைப்புக்கும், பெறும் குறைவான ஊதியத்திற்கும் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு இருந்தாலும், ஸ்விக்கி நிறுவனத்திடம் பழைய ஊதிய முறையை அமுல்படுத்து! என என்று தான் கேட்கிறார்கள். அவர்களுடைய நியாயமான கோரிக்கையை மதிக்காமல், ஸ்விக்கி நிறுவனம் ”வேலை செய்தால் செய்! இல்லையெனில் கிளம்பு!” என்கிற ரீதியில் பேசுவதாய் தகவல்கள் வருகிறது.. இது கண்டிக்கத்தக்கது. ஸ்விக்கி ஊழியர்களின் சேவையை பெறும் பொது சமூகமும் ஸ்விக்கியின் இந்த அராஜகப்போக்கை கண்டிக்கவேண்டும். இல்லையெனில், ஸ்விக்கி உண்டாக்கும் ஊதிய நெருக்கடி என்பது தொழிலாளர்களுக்கும், சேவையை பெறும் மக்களுக்குமான உறவை சிக்கலாக்கும்.

இப்பொழுது மட்டுமில்லாமல், ஸ்விக்கி ஊழியர்கள் கடந்த காலத்திலும் ஊதியம் குறித்து போராடியிருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது ஒரு முன்னேற்றம். தாங்கள் ஒரு சங்கமாக இருக்கிறோம். முன்பு போல எங்களை ஏமாற்ற முடியாது. இந்தமுறை நாங்கள் எங்கள் உரிமைகளை பெற்றேத் தீருவோம் என உறுதியாய் சொல்கிறார்கள்.

தலைநகர் சென்னையில் மட்டும் 9 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். இவர்கள் தான் கொரானாவால் ஊரடங்கு அமுலில் இருந்த பொழுது, மக்களுக்கு பசித்த பொழுது துணிந்து வந்து சேவை செய்தார்கள். அவர்கள் முன்பும் மக்களுக்காக தெருக்களில் தான் நின்றார்கள். இப்பொழுது போராடும் பொழுதும் தெருவில் இறங்கி தான் போராடுகிறார்கள். சிவில் சமூகம் தான் அவர்களின் நியாயமான கோரிக்கையை ஆதரிக்கவேண்டும். குரல் கொடுக்கவேண்டும்.

February 2, 2022

ஒரு ”கொலை”யும் தொடரும் புலன்விசாரணையும்!


கடந்த ஜனவரி 29 அன்று மதுரையில் மகனை கொன்றதாய், வயதான தாய், தந்தையை கைது செய்திருக்கிறார்கள். பல ஊடகங்களில் அன்று மற்றும் அடுத்த நாள் முழுவதும் ஏதோ வீடு புகுந்து கொள்ளையடித்த திருடனை சிசிடிவி உதவியுடன் கையும் களவுமாய் பிடித்த கதையை சொல்வது போல பரபரப்பாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.


கூலி தொழில் செய்து வரும் 72 வயதான முருகேசன், 60 வயதை தொடும் கிருஷ்ணவேணி அம்மாவின் மகன் மணிமாறனுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். தொடர்ந்து குடிக்கும் பிரச்சனையால், வேலைக்கு செல்லாமல் இருந்ததால், மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு தாய், தந்தையுடன் இருந்து வந்துள்ளார். இத்தனை வயதாகியும், கூலி வேலை செய்யும் வயதான தந்தை பெத்த கடமைக்கு சோறு தான் போடமுடியும். தினமும் குடிக்குமா காசு கொடுக்க முடியும்?

தந்தையின் வாக்குமூலப்படி, அன்றைக்கும் குடிக்க காசு கேட்டு, அம்மாவிடம் தகராறு செய்துள்ளான். மோசமாக திட்டி, தாக்கியும் உள்ளான். கோபத்தில் கட்டையை எடுத்து அப்பா தாக்கியதில் சம்பவ இடத்திலேயே செத்தும் போய்விட்டான். தங்கள் மகனை தானே கொன்றதாய் ஊரார் தூற்றுவார்களே என அவமானத்துக்கு அஞ்சி, பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி, தாங்கள் வைத்திருந்த சைக்கிளில் இரவோடு இரவாக கொண்டு சென்று வைகை ஆற்றில் எரித்து இருக்கிறார்கள்.

ஆக, மகன் எப்பேர்ப்பட்ட குடிகாரனாய் இருந்தாலும், அவன் கொடுக்கும் டார்ச்சரை பெற்றோர்கள் தாங்கிக்கொண்டிருக்கவேண்டும். அப்படி பொறுத்துக்கொள்ளாமல், கட்டையை எடுத்து தாக்கியதால், அவர்கள் ஈவிரக்கமற்ற பெற்றோர்கள். மேலும் அப்படியே போய் போலீசிடம் சரணடைந்து, தங்களுக்கு இந்த அரசு கொடுக்கும் தண்டனையை சந்தேசமாய் பெற்றுக்கொண்டிருக்கவேண்டும்.

அதற்கு பதிலாக அவர்களே சுடுகாட்டில் போய் எரிப்பது போல, வைகையாற்றில் எரித்தது மாபெரும் குற்றம். அதற்கான தண்டனையை அவர்கள் சிறையில் சில ஆண்டுகள் அடைபடவேண்டும். இப்படி இந்த வழக்கை எளிதாக முடித்துவிடலாமா?

குடியால் சமூகத்தில் எழும் பல பிரச்சனைகளை தினமும் செய்தித்தாள்களில் பார்த்து வருகிறோம். கொஞ்சம் அதிகமாக தெரிகிறதா? ஒரு நாள்விட்டு ஒருநாள் பார்த்துவருகிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். குடியால் என்னென்ன பிரச்சனைகள் என்று தேடிப்பார்த்தால்… மதுவால் சமூகத்தில் 40% சாலை விபத்துக்கள், 35% தற்கொலைகள், 80% பாலியல் வன்புணர்ச்சிகள் அதிகரித்துள்ளதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவிக்கிறது. ஆக குடி என்பது தனிநபரை மட்டுமல்ல! சமூகத்தை கடுமையாக பாதிக்ககூடிய பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

நாம் குடிகாரர்களையும், குடி நோயாளிகளையும் பிரித்து புரிந்து வைத்திருக்கிறோமா? என்றால் இல்லை. தன்னைச் சுற்றி நிகழும் எந்த ஒன்றிற்கும், எவ்வித முடிவும் எடுக்க முடியாமல், யாரையும் நம்ப முடியாமல், தான் பொறுப்பேற்றுக் கொண்ட பணியை செய்ய முடியாமல், தான் குடிக்கின்ற மதுவின் அளவை கட்டுப்படுத்த முடியாமல், தன்னால் யாருக்கெல்லாம் பிரச்சனை என்பதை உணர முடியாமல், சதா மதுவைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டு, அதனை எப்படியெல்லாம் பெற முடியுமோ அந்தந்த வழிகளைக் கண்டறிந்து, தன் சுயநலத்தை மட்டுமே முன்னிறுத்தி, குற்ற உணர்வுடனும், பய உணர்வுடனும், சமூக நன்மதிப்புகளை இழந்து, உடனே சாக முடியாமல், வாழ்ந்து செத்துக் கொண்டிருப்பவர் தான் குடிநோயாளி என்கிறது மருத்துவ உலகம்.

குடிநோயின் சார்பு நோயாளிகள் யார்? மதுவுக்கு அடிமையானவர் மட்டும் தான் குடி நோயாளியா என்றால் இல்லை. அவரோடு அன்றாடம் போராடி, அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மனைவி, குழந்தைகள், பெற்றோர், உறவினர், நண்பர், என நீளும்பட்டியலில் உள்ள அனைவருமே குடிநோயின் சார்பு நோயாளிகள் என்றும் வகைப்படுத்துகிறார்கள்.

மக்கள் தங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்றால், மருத்துவர்களை பார்க்கிறார்கள். மருந்து எடுத்து சரியாகிவிடுகிறார்கள். ஆனால், வீட்டில் ஒரு ஆள் குடிக்கிறார் என்றால், அவர் குடிகாரரா? குடி நோயாளியா என தெரியாமல் தான் அவர்களுடைய குடும்பத்தினர்கள் இருக்கிறார்கள். அவர்களும் அதில் வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொண்டு, எப்பொழுதுமே மன உளைச்சலில் தான் உழல்கிறார்கள்.

மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யவேண்டிய அரசோ, அதற்கு நேர் எதிராக தெருவுக்கு ஒரு சாராயக் கடையைத் திறந்து கல்லா கட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 5198 அரசின் சாராயக்கடைகள் இயங்கி வருகின்றன. ஒரு நாளைக்கு 70 கோடி லாபமும், பண்டிகை நாட்களில் 100 முதல் 300கோடிக்கும் மேலாக லாபம் ஈட்டுகிறார்கள். 2018-19 ஆண்டில் ரூ. 31158 கோடியும், கொரானா ஊரடங்கு சில மாதங்கள் இருந்த நிலையிலும் கூட 2020-21ல் ரூ. 33811 கோடிகளில் லாபம் ஈட்டியிருக்கிறது.

இந்த நிலை மாறுமா? குடிநோய்க்கான சிசிச்சை என்பது வெறும் தனிநபராக (ஒற்றை உயிரியல் Biological Frame Work எனப்) பார்த்து நோயாளிகளை மீட்க முடியாது என்பது நடைமுறை. உள – சமூகவியல் – அரசியல் – பொருளாதார காரணிகளை உள்ளடக்கிய சிகிச்சை முறையை கையாளாவிட்டால், குடிநோயாளிகள் மீண்டும் மீண்டும் குடிக்கச் செல்வதைத் தடுக்க முடியாது” என்கிறார் அரசு மனநல மருத்துவரான இராமனுஜம். தனிநபர்களாக இந்த பிரச்சனையை தீர்க்க முடியாது என்றாகிவிட்டது அல்லவா?

மக்கள் மத்தியில் சாராயக் கடைகளுக்கு எதிராக இருந்த குமுறல்களை எல்லாம் ஒன்றாய் இணைத்து சாராயக்கடைகளை உடைக்கும் போராட்டத்தை மக்கள் அதிகாரம் அமைப்பு மக்கள் மத்தியில் தொடர் பிரச்சார இயக்கத்தை, டாஸ்மாக் கடையை இழுத்து மூடும் போராட்டத்தை தொடங்கி வைத்தது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் போராட்டமாய் எழுந்தது. விளைவு அந்த ஆண்டில் நடந்த தேர்தல் வாக்குறுதியாக அதிமுகவை தவிர அனைத்து கட்சிகளும் வாக்குறுதியாக பூரண மதுவிலக்கை அறிவித்தார்கள். முதலில் கடைகளை அடைக்க முடியாது என திமிராக அறிவித்த ஜெ, எங்கே தோற்று போய்விடுவோம் என பயந்து, கொஞ்சம் கொஞ்சமாக கடைகளை குறைப்போம் என அறிவித்தார். ஜெயித்த பிறகு சொல்லித்தொலைத்துவிட்டோமே என்பதற்காக கடைகளின் எண்ணிக்கையை பெயரளவிற்கு குறைத்தார்.

அதற்கு பிறகு மக்களுடைய போராட்டங்கள் இல்லை என்று ஆன பிறகு, 2021 தேர்தலில் டாஸ்மாக் பேசுபொருளாக இல்லை. ஆகையால், அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை.

ஆக, மக்கள் தனித்தனியாக இந்த பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறார்கள். மீண்டும் மக்களை ஒருங்கிணைத்து போராட வேண்டியது மக்கள் மத்தியில் வேலை செய்கிற ஜனநாயக சக்திகளின், முற்போக்கு, புரட்சிகர அமைப்புகளின் கடைமையாக இருக்கிறது.

July 5, 2020

கரோனா : போலீசின் வாகனப் பறிப்பும், விடுவிப்பும்!

இரண்டு நாட்கள் எங்கேயும் வெளியே போகவில்லை. குப்பை கொட்டனும், இன்னும் சில அத்தியாவசிய‌ மளிகை, காய்கறி பொருட்கள் வாங்கவேண்டும். நம்ம ஏரியாவுக்குள்ளேயே சுத்தப்போறோம் என வண்டியை எடுத்தேன். தெருவைக் கடந்ததுமே ஒரு கான்ஸ்டபிள் நின்றுகொண்டிருந்தார். நானும், இன்னொரு நபரும் இணையாக செல்ல, அவரை கைக்காட்டினார். நான் போலீசை கடக்க முயன்றேன். பிறகு எனக்கும் குத்துமதிப்பாக கைகாட்டினார். நான் அவரை கொஞ்சம் கடந்துவிட்டேன். "என்ன மீறி போறீங்க?" என அதட்டினார். "அவருக்கு தானே சார் கை காட்டினீங்க! திடீர்னு எனக்கு கைகாட்டினா எப்படி சார்?" என்றேன். பிறகு ஏதும் சொல்லவில்லை.

எனக்கு முன்பாக ஏழு பேர் காத்திருந்தார்கள். ஒருவர் காரில் வந்தார். அவரை விசாரித்தால், தன் குழந்தைக்கு பால் வாங்க வந்ததாக தெரிவித்தார். அவருடைய காரில் பின்சீட்டில் குழந்தைகளுக்கான‌ விளையாட்டு சாமான்கள் இருந்தன. "பால் வாங்க காரில் யாராவது வருவார்களா?" என்றார். "சார் கடை ஏதும் இல்லை. இரண்டு கிலோமீட்டரா வரிசையா தேடிட்டு வர்றேன்" என்றார். திரும்ப போலீசே "காலையிலேயே வாங்கி வைச்சிருக்கனும்." என்றார். "நான் இந்த ஏரியாவிற்கு புதுசு சார்" என்றார். காரில் வந்தவரால் இருப்பு கொள்ளவில்லை. அவருடைய குழந்தை நினைப்பில் பதட்டமாகவே இருந்தார். என் வண்டியில் குப்பை இருந்தது. எப்படி கொட்டுவது? என யோசித்துக்கொண்டிருந்தேன். அருகில் நின்றிருந்த இளைஞர் கையில் ஒரு ரவை பாக்கெட் வைத்திருந்தார். காலை டிபன் போச்சு!

ஒரு ஐம்பது வயதுகாரர் வந்தார். நிறுத்தினார்கள். அவர் ஏதோ சொல்லிப் பார்த்தார். நிற்க சொன்னார்கள். அவர் யார் யாருக்கோ போன் செய்து, போலீசுகாரரிடம் கொடுத்தார். வாங்கி பேசிவிட்டு, அவரை அனுப்பினார். இன்னொருவரும் அதே போலவே யாரிடம் சீரியசாக போய்க்கொண்டிருந்தார். ஒரு அதிமுக கட்சி கொடியோடு ஒரு வண்டி போனது. போலீசுகாரர் நிறுத்தவேயில்லை. என்னிடம் செல்போன் இல்லை. இருந்தால், யாருக்கு பேசியிருக்கலாம் யோசித்தால், அதிகார வர்க்கம், தேர்தல் அரசியல் கட்சியாளர்கள் யாரோடும் நமக்கு உறவும் இல்லை. நமக்கு 'செல்வாக்கு' இல்லை என்பது பளிச்சென புரிந்தது. அப்படியே பேசினால் கூட, "நீ ஏன்ப்பா வண்டியெல்லாம் எடுத்துட்டு போற!" என அட்வைஸ் வேறு செய்வார்கள்.

பத்து வண்டிகள் வரை சேர்ந்துவிட்டது. ஆனால், ஐந்து பேரிடம் மட்டும் செல்போனை வாங்கிக்கொண்டனர். மிச்ச ஐந்து பேரும் உடன் வரவில்லை. என்ன கணக்கு? புரியவில்லை. ஒரு இளைஞர் வந்தார். என்னிடம் செல்போன் இல்லாததால், இடையிலேயே போய்விடக்கூடாது என்பதற்காக என் பைக்கிலேயே அந்த இளைஞர் வந்தார். குறுக்குப்புத்தி. நன்றாக சிந்திக்கிறது. ஆள் ரெம்ப குட்டையாக இருந்தார். போலீசு இல்லை. "நீங்க யார்? வாலண்டியரா?" என்றேன். "நான் ஸ்டேசன் ஸ்டாப்" என்றார். அரசாங்கம் இப்படி வேலைக்கு ஆள் நியமிக்கிறதா என்ன? மாதாமாதம் ஸ்டேசனுக்கு வரும் லஞ்ச பணத்தில் சம்பளம் கொடுப்பார்களோ? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

பகுதியில் இருந்த‌ வேலம்மாள் பள்ளியின் பார்க்கிங் பகுதியை போலீசு இப்படி பிடிக்கப்பட்ட வண்டியை நிறுத்த பயன்படுத்துகிறார்கள். ஏற்கனவே 200 பைக்குகள் மேல் நிறுத்தியிருந்தார்கள். 10 கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. எங்களுக்கு முன்பே சில பேர் வண்டி, தன் விவரம் கொடுக்க காத்திருந்தார்கள்.

அங்கு ஒரு பெண் ஆய்வாளர், இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒருவர் மப்டியில் இருந்தார்கள். இருவர் வண்டி விவரங்களை பதிவேடுகளில் பதிவதில் மும்முரமாக இருந்தார்கள். சுற்றி நின்றவர்களில் சிலர் போனில் சீரியசாக பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் அந்த ஆய்வாளரிடம் போனை கொடுத்தார். பேசியவர் சென்னையில் ஒரு பகுதியில் போலீசு அதிகாரியாக இருக்கிறார் என்பது புரிந்தது. இருவரும் பேசிக்கொண்டார்கள். அந்த அம்மா போனில் பேசியவரிடம் "இப்படி பிடிச்சுட்டு வந்தவங்கள எல்லாம் விட்டுட்டா, யார் வண்டியைத் தான் பிடிச்சு கேஸ் போடுறது!" என அலுத்துக்கொண்டார்.

சில நிமிடங்களில், இன்னொருவர் தன்னிடமிருந்த பாஸை காட்டினார். அந்த ஆய்வாளர் "இது பழசாச்சே!" என்றார் கோபமாய். உடனே, அவர் செல்போனில், புதிதான பாஸை காட்டினார். "இதை புடிக்கும் பொழுதே காட்ட வேண்டியது தானே!" என்றார் கோபமாய்! "நான் காட்டினேன். அவர் வாங்கிப் பார்க்காமலேயே கூட்டி வந்துவிட்டார்" என்றார்.

இப்படி வரிசையாய் போன் கொடுப்பதை தவிர்க்க, "யாரும் போன் பேசக்கூடாது" என சத்தமாய் சொன்னார். இன்னொருவர் இப்பொழுதும் பேசிக்கொண்டிருந்தார். உடனே அவரை மிரட்டினார். "ஹாஸ்பிட்டலிருந்து போன் மேடம். ஹவுஸ்கீப்பிங்‍‍லிருந்து கூப்பிடறாங்க!" என்றார்.

இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த ஒருவர் "(அதிகாரத்தில் இருப்பவர்கள்) தெரிஞ்சவங்க பேசினா உடனே விடுறீங்க. என்னையும் விடுங்க." என்றார். தானும் ஒரு முக்கிய அலுவலகத்தில் வேலை செய்வதாக இந்தி ஸ்லாங்கில் சொன்னார். இப்படி எல்லாம் பேசினால், போலீசுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். கேள்வி கேட்பது அவர்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்காது! அவரை உடனே வெளியே போகச் சொல்லி மிரட்டினார்கள். "எனக்கும் ஆட்கள தெரியும். நான் பார்த்துக்கிறேன்" என கோபமாய் சொல்லிக்கொண்டே கிளம்பினார்.

இப்பொழுது இன்னொருவர் வந்து போனை நீட்டினார். போனில் பேசியவர் பெரிய அதிகாரி போல! அந்த ஆய்வாளர் "நீங்க தான் உத்தரவு போடுறீங்க! நீங்களே விடவும் சொல்றீங்க! இங்க நிலைமை சரியில்லை சார். சொன்னா புரிஞ்சுக்குங்க!" என்றார்.

போனை வைத்ததும், உடனே ஒரு சவுண்ட் விட்டார். "இங்க வண்டிக்கு விவரம் கொடுத்தவங்கள தவிர, மற்றவங்க வெளியே போங்க! காத்திருக்கிறவங்க அவங்க செல்போனை எல்லாம் இங்க கொண்டு வந்து வைங்க" என்றார். யாரும் இப்படி பேசுவதை வீடியோ எடுத்துவிடக்கூடாது என்ற கவனம் இருக்கும் போல!

போலீசுகாரர்களுக்கு கொரானா பற்றிய பயம் இருந்தது. ஆனால், வரிசையை ஒழுங்குப்படுத்தவும் இல்லை. ஆனால், அதிகாரத்தோடு மரியாதை இல்லாமலும், கோபமாக திட்டிக்கொண்டும், கத்திக்கொண்டும் இருந்தார்கள்.

நான் ஒரு ஓரமாக போய் உட்கார்ந்துகொண்டேன். நடந்தவைகளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு முன்பாக வந்தவர்களுடைய விவரத்தை கேட்க ஆரம்பித்தார்கள். "நான் முன்னாடியே வந்துவிட்டேன். பின்னாடி வந்தவங்கள பதியறீங்க!" என குரல் கொடுத்தேன். உடனே என்னை அழைத்தார்கள். பெயர், செல்போன், முகவரி, வண்டி விவரம் கேட்டார்கள். அந்த பதிவேட்டில், என்னுடைய துணைவியார் பெயரையும், என் குழந்தை பெயரையும் கேட்டார்கள். "ஏங்க நான் மட்டும் தானே வந்தேன். குடும்பத்தோடு வந்ததா எழுதுறீங்களா?" என்றேன் சீரியசாய். எழுதிக்கொண்டிருந்த‌ அந்த பெண் கான்ஸ்டபிள் சிரித்துவிட்டார். ஆனால், பதில் சொல்லவில்லை. என்னுடைய அங்க அடையாளங்கள், போட்டிருந்த ஆடைகள் விவரம் என எல்லாவற்றையும் பதிந்துகொண்டார்கள். வண்டியை பெற்றுக்கொண்டதற்கு எந்தவித ரசீதும் தரவில்லை. கேட்டதற்கு "உங்க வண்டியெல்லாம் பத்திரமா இருக்கும். நாங்க கூப்பிடுவோம்!" என்றார்கள். கிளம்பினேன்.

கரோனாவை கட்டுப்படுத்தவேண்டும் என்ற உணர்வை விட, போலீசுகாரர்களுக்கு, தினமும் இத்தனை வண்டியை பிடித்தோம் என்ற கணக்கு காட்டவேண்டும் என்ற சடங்குத்தனமான வேலை பாணி தான் இருந்தது. அங்கு நின்றிருந்த வண்டிகள் எல்லாம் எந்தவித அதிகார தொடர்பு இல்லாதவர்களுடைய வண்டிகளை பிடுங்கி வைத்துக்கொள்கிறார்கள். மற்றவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். உலகம் எப்பொழுதும் இரண்டாக தான் இயங்கிகொண்டு இருக்கிறது.

April 28, 2020

"சார் ஸ்கூல்ல பாம் வைச்சுட்டாங்க!"

அவசர போலீஸ் 100 கட்டுப்பாட்டு அறை!

"சார் ஸ்கூல்ல பாம் வைச்சுட்டாங்க!"

"ஸ்கூல்ல பாம் வெச்சுட்டுங்களாம்!" என போனில் கேட்டு பதறும் புதிய நபரை...

மூத்த அதிகாரி

"பதறாதீங்க! அவங்க ஸ்கூல் என்னன்னு கேளுங்க!"

ஸ்கூல் பெயரை சொன்னதும்...

'பெயர் குமாரான்னு கேளுங்க"

கேட்டதும்... "நம்மளை யாருன்னு கண்டுபிடிச்சிட்டாங்கடா" என ஒரு மாணவன் போனை விட்டுவிட்டு ஓடிவிடுவான்.

அந்த மூத்த அதிகாரி கூலாக சொல்வார்.

"அந்த பையன் நம்ம ரெகுலர் காலர் (Caller) தான்! எக்ஸாம் நடக்கும் சமயங்களில் இந்த மாதிரி அடிக்கடி பசங்க போன் பண்ணுவாங்க. பதறாதீங்க" என்பார்.
 
#அதர்வா நடித்த 100 படத்திலிருந்து...

பசங்களுக்கு பள்ளி மீதும் தேர்வு மீதும் எவ்வளவு வெறுப்பு இருந்தால்... இப்படி போன் செய்வார்கள்?

இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை பாளையங்கோட்டையில் யூனிபார்மோடு வெளியில் சுற்றி இரண்டு குழுவாக பிரிந்து சண்டை போட்டுக்கொண்ட 40க்கும் மேற்பட்ட மாணவர்களை பிடித்து, ஒரு இன்ஸ்பெக்டர் பெற்றோர்களை வரவழைத்து, பசங்களை 1330 குறளை எழுதி தரச்சொல்லி, பிறகு எச்சரித்து அனுப்பியிருக்கிறார்.

மாணவர்களின் நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறத

April 23, 2020

'அழகிய' சுவர்கள்!




சென்னை மெட்ரோ நிலைய தூண்களில் சுவரொட்டி ஒட்டி 'அழகை' கெடுக்கிறார்களாம். ஒட்டக்கூடாது என 2017ல் சட்டம் போட்டும் மதிக்கவில்லையாம். ஆகையால் மதிக்காத 10 பேர் மீது போலீசில் புகார் கொடுத்துவிட்டார்கள். 'அழகை' பாதுகாக்க ஒரு படை உருவாக்கிவிட்டார்கள். இரவு 12 மணியிலிருந்து விடிகாலை 4 மணி வரை தூண் தூணாக சுற்றிவருவார்களாம். இன்றைய தினசரிகளில் அறிவித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே சென்னை மாநகராட்சி எழில்மிகு சென்னையை உருவாக்க சபதம் பூண்டு, பல ஆண்டுகளாகிவிட்டன. மேலே சொன்னது போல தடைச் சட்டமும் போட்டுவிட்டார்கள்.

முக்கிய வீதிகளில் உள்ள பல சுவர்களில் தமிழ் மன்னர்களின் 'கொடை வள்ளல்' மற்றும் இன்னபிற சிறப்புகள், தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் ஓவியங்களை வரைந்து வைத்திருக்கிறார்கள்.

சென்னையை 'அழகுப்படுத்துதல்' பற்றியே நாம் தனியாக பேச வேண்டும். இப்பொழுது நான் சொல்ல வருவது வேறு.



சுவர்களை வெறும் சுவர்களாக பார்த்தவர்களா நீங்கள்? எனக்கு அப்படி இல்லை. இந்த சமூகம் ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வுகளுடன் இருக்கின்றன? ஏன் இத்தனை கோளாறுகள்? இதை சரி செய்ய முடியாதா? சரி செய்வது என்றால் எப்படி என்று தேடுதலோடு திரிந்து கொண்டிருந்தேன். தேடுதலோடு திரிந்த என்னை, பாதைக்காட்டி அழைத்துச் சென்றது சுவர்கள் தான்.
நான் வாழ்ந்த பகுதியில், பட்டிமன்றமா? வழக்காடு மன்றமா? கலை நிகழ்ச்சியா அல்லது பொதுக்கூட்டமா? எல்லாவற்றையும் எனக்கு தெரிவித்தவை சுவர்கள் தான். தினம் ஒரு நிகழ்ச்சி. இன்றைக்கு ஒரு சரியான அமைப்பை வந்தடைய உதவியவை இந்த 'அசுத்தமான' சுவர்கள் தான்.
சுவர்களை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள்?

வாக்கு அரசியல் கட்சிகள். கொள்கை இல்லாது போனதால், தன் தலைவர்களின், தளபதிகளின் மூஞ்சிகளை வரைந்து வைக்கிறார்கள். இன்னும், விளம்பர சுவரொட்டிகள் மற்றும் மாற்று அரசியலை மக்களிடையே கொண்டு செல்லும் ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர அமைப்புகள்.
இப்படி சுவர்களை தடை செய்வதின் மூலம், யாருக்கு உண்மையிலேயே இழப்பு? வாக்கு அரசியல் கட்சிகள் இப்பொழுது தனித்தனியாகவே தொலைக்காட்சி அலைவரிசையை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். அவ்வளவு வசதியில்லை என்றாலும், பத்திரிக்கைகளை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். தன் சரக்குகளை விற்பனை செய்யும் முதலாளிகள் வேறு ஊடகங்களுக்கு எளிதாக நகர்ந்துவிடுவார்கள். பணம் கொஞ்சம் கூடுதலாக செலவழியும். அவ்வளவு தான்.
 
உண்மையில் பாதிப்பு என்பது ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர சக்திகளுக்கு தான்! தனது நிகழ்ச்சி நிரலை பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால், தேசிய நீரோட்டத்தில் கலந்து அவர்களோடு அந்த ஜனநாயக சகதியில் படுத்து உருண்டால் தான், சின்ன செய்திகளை கூட வெளியிடுவார்கள். இல்லையென்றால், இருட்டடிப்பு தான்.

இதனால் தான், அரசு, தன்னைப் பார்த்து கேள்வி எழுப்புகிற, குடைச்சலை தருகிற சுவர்களை, 'அழகிய' ஓவியங்கள் மூலம் தடை செய்கிறது. மக்களை 'அழகு' என்ற சொல்லால் ஏற்க வைக்கிறது.

எதார்த்தத்தில் அரசுக்கு எதிராக எந்த சுவரொட்டியும் பிரிண்ட் பண்ணக்கூடாது என அதன் உரிமையாளர்களை ஏற்கனவே கடுமையாக மிரட்டி வைத்திருக்கிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளில் ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர அமைப்புகள் சமூக வலைத்தளங்களை சுவர்களாக பயன்படுத்துகிறார்கள்.
அரசுக்கு அதுவும் மண்டையை குடைகிறது. அதனால் சமூக வலைத்தளங்களை மிரட்டுகிறது. கட்டுப்பாடுகள் விதிக்கிறது. தூத்துக்குடியில், காஷ்மீரில் இணயத்தையே சில நாட்கள் தடை செய்கிறது.
சமூக வலைத்தளத்தில் பயனாளர்களின் ஆதாரை இணைக்க சொல்லி, இப்பொழுது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. அநேகமாக இப்பொழுது உள்ள நெருக்கடியான காலத்தில் அரசு வெற்றிபெற்றுவிடும்.

சீப்பை எடுத்து ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்று போகும் என நினைக்கிறார்கள்.

முகநூலில்....19/10/2019

June 19, 2019

சிசிடிவி - சில குறிப்புகள்

சாலைகளில்
அலுவலகங்களில்
பள்ளிகளில்
சூப்பர் மார்க்கெட்டுகளில்
தேநீர் கடைகளில்
எங்கும் கேமராக்கள்
குறுகுறுவென பார்க்கின்றன.

நாம் மறந்து போனாலும்
"சிசிடிவியால்
கண்காணிக்கப்படுகிறீர்கள்"
ஒட்டப்பட்ட வாசகங்கள்
தொல்லை செய்கின்றன.

மாநகரங்களில்
ஐம்பது மீட்டருக்கு
ஒரு சிசிடிவி லட்சியம் என்கிறார் காவல்துறை உயரதிகாரி.
தினந்தோறும்
புதுப்புது இடங்களில்
முளைத்துக்கொண்டே இருக்கின்றன.

சிசிடிவி அற்ற உலகம்
பாதுகாப்பற்றது என்ற போதனையை நம்பி
தனது சேமிப்பு பணம் மொத்தத்தையும்
புன்சிரிப்புடன்
ஒப்படைக்கிறாள்
ஒரு சிறுமி.

தீபாவளிக்குள்
திரையரங்குகளில்
சிசிடிவி பொருத்தப்படவேண்டும்.
இல்லையெனில்
புதுப்படம் கிடையாது
என அறிவிக்கிறார்
தயாரிப்பாளர் சங்க தலைவர்.

வழக்குக்கு சம்பந்தமில்லாத
அப்பாவியை
லாக்கப்பில் அடித்தே கொன்றுவிடுகிறது போலீசு.
மக்கள் கொதிப்படைந்ததும்
இரண்டே நாளில்
எல்லா லாக்கப்பிலும்
சிசிடிவி பொருத்தப்படவேண்டும் என்கிறார்
கேரள போலீசு உயரதிகாரி.

வழக்கை விசாரிக்க
துவங்கும் பொழுதே
சிசிடிவி ஏன் பொருத்தவில்லை? என 
கோபித்துக்கொள்கிறார் நீதிபதி.

ராம்குமார் சிறையில்
பத்தடி உயர
மின்கம்பி வயரை
கடித்து 'தற்கொலை'
செய்த பொழுது
மூன்றாவது கண்
குருடாகியிருந்தது.

ஸ்டெர்லைட் போராட்டத்தின் பொழுது
கவனமாய் தீ வைத்த
சமூக விரோத சக்திகள்
துவக்கத்திலேயே
மூன்றாவது கண்ணை
நோண்டிவிட்டனர்.

சமூக செயற்பாட்டாளர்
முகிலன்
ரயில் நிலையத்தில்
காணாமல் போன பொழுது
மூன்றாவது கண்
வேலை செய்யவில்லை என பொறுப்புடன் சொன்னார்கள்.

பாதுகாப்பு குறைபாடால்
இறந்தார் தொழிலாளி.
சிசிடிவி காட்சிகளை
கவனமாக அழித்துவிடுங்கள்
என பதட்டத்துடன்
போன் செய்கிறார்
முதலாளி.

சிசிடிவி வழியே
நமது மாநகரங்களை
அமெரிக்காவிலிருந்து கூட
ஹேக்கர்கள் மூலம்
கண்காணிக்க முடியும் என்கிறார்கள்.

திருடனை காட்டி
எங்கும்
எப்பொழுதும்
எல்லோரும்
திருடர்களைப்போல கண்காணிக்கப்படுகிறோம்.
ஏதோ
தப்பாகபடவில்லை?

August 2, 2018

காளான் தோசை!

உணவகத்தில் நுழையும் பொழுதே கவனித்தேன். ஏழு, எட்டு வகையான தோசைகளை வாசலிலேயே வெள்ளை போர்டில் எழுதி வைத்திருந்தார்கள். அதில் முதல் தோசை காளான் தோசை.

உள்ளே போய் பல யோசனைக்கு பிறகு,  காளான் தோசை என்றேன். போய் வந்து "காளான் தோசை இல்லை" என்றார் பரிமாறுகிறவர். முதல் தோசையாக எழுதி வைத்துவிட்டு, இல்லை என்கிறார்கள். சரி. வேறு என்ன தோசைகள்?

"மசால் தோசை, மஸ்ரூம் தோசை, பொடி தோசை" என்றார். நான் "மஸ்ரூம் தோசை" என்றேன். எதிரே சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர் என்னைப் பார்த்து புன்முறுவல் செய்தார்.

இரண்டு நிமிடங்களில் மஸ்ரூம் தோசை தந்தார். இப்பொழுது அவர் முகத்தைப் கவனித்தேன். வடகிழக்கு மாநிலத்தைச் சார்ந்தவர். மாஸ்டரையும் பார்த்தேன். அவரும் வ.கி. மாநிலம் சார்ந்தவர் தான்!
காளான் தோசையை இனி மஸ்ரூம் தோசை என பழகிகொள்ளவேண்டியது தான்!

- தமிழ்_தெரியாத_பரிதாபங்கள்

July 20, 2015

ஆட்சியில் பங்கும் காங்கிரசு தொண்டனும்!

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இயக்கப்பணி தொடர்பாக வீடு வீடாக, ரயில்களில், பேருந்துகளில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்திருக்கிறேன். மக்களில் நேற்று துவங்கிய கட்சிக்கு கூட தொண்டர்களை சந்தித்திருக்கிறேன். ஆனா பாருங்க இந்த காங்கிரசு தொண்டரை மட்டும் பார்த்ததேயில்லை. சக தோழர்களிடமும் அவ்வப்பொழுது கேட்பதுண்டு. அவர்களும் பார்த்ததேயில்லை என்பார்கள்!

என் வாழ்வில் இரண்டு காங்கிரசுகாரர்கள் கடந்து போயிருக்கிறார்கள். ஒருவர் என் அப்பா. பஞ்சாலை தொழிலாளியான அவர், தன் வாழ்வில் இறுதி ஆண்டுகளில் குடியில் காலம் கழித்தார். அதனால், அவ்வப்பொழுது வேலைக்கு போகமாட்டார். அங்கிருந்த காங்கிரசின் தொழிற்சங்கமான ஐஎன்டியூசி தான் அவ்வப்பொழுது வேலை போகாமல் காப்பாற்றியது. அதற்கு நன்றி பாராட்டும் விதமாக, வீட்டில் ஒரு இந்திரா படத்தை மாட்டி வைத்திருந்தார். மற்றபடி, காங்கிரசின் நடவடிக்கைகளை எப்பொழுதும், எவ்வளவு விமர்சனம் செய்தாலும், எதிர்த்து பேசமாட்டார். மெளனமாக இருப்பார்.

இன்னொரு காங்கிரசுகாரர். 1991ல் அப்பொழுதெல்லாம் ரெம்ப சின்ன பையன் நான். வீட்டு திண்ணையில் என் அப்பாவுடன் தூங்கிகொண்டிருந்தேன். திடீரென பெருங்குரலெடுத்து அழும் சத்தம் கேட்டு எழுந்தேன். பக்கத்து வீட்டில் குடியிருந்த 55 வயது பெரியவர் துக்கம் தாளாமல் விடிய விடிய அழுதார். என்னவென்று கேட்ட பொழுது ராஜீவ் கொல்லப்பட்ட விசயத்தை சொன்னார்கள்.

என் வாழ்வில் நான் சந்தித்த இந்த இரண்டு காங்கிரசுகாரர்களும் செத்துப்போய் 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. நிலைமை இப்படி இருக்கும் பொழுது, E.V.K.S இளங்கோவன் எந்த தைரியத்தில் ஆட்சியில் பங்கு கேட்கிறார்? சிரிப்பு சிரிப்பாக தான் வருகிறது! இவரே பங்கு கேட்கும் பொழுது, டாக்டர் அன்புமணிக்கு முதலமைச்சர் ஆசை வருவது எல்லாம் இயல்புதான் போல!
சாத்தியமில்லை தான். இருந்தாலும் சொல்லி வைக்கிறேன். உங்களில் யாராவது காங்கிரசு தொண்டரை பார்த்தால், என்னிடம் தெரிவியுங்கள். வாழ்வில் ஒருமுறையாவது நான் பார்த்துவிடவேண்டும் என ஆவலோடு இருக்கிறேன்.

July 2, 2014

நீதிபதிகள் இனி தமிழில் தீர்ப்பு எழுதவேண்டும்!



முன்குறிப்பு : தமிழில் தீர்ப்பு எழுதும் சட்டத்தை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் செல்வாக்கில் 1994ல் ஒரு தீர்மானத்தைப் போட்டு தமிழில் தீர்ப்பு எழுதுவதை தடுத்து நிறுத்தியிருந்தார்கள்.

தமிழ் உணர்வு கொண்ட வழக்குரைஞர்கள் நீதிமன்ற வளாகங்களில் பல வகைகளில் தொடர்ந்து போராடி நெருக்கடி தந்து, நீதிபதிகளும், நீதிமன்றமும் இனிமேலும் இழுத்தடிக்கமுடியாது என்ற நிலையில் இப்பொழுது இந்த தீர்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.

இந்த தொடர் போராட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தனது பங்களிப்பை செய்திருக்கிறது! போராடிய அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொள்வோம்.

தொடர்ந்து போராடுவோம்!

******

கீழ் நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு: தமிழை கற்கவும் நீதிபதிகளுக்கு உத்தரவு- உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி


கீழ் நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்புகள் எழுதலாம் என்ற உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

பிற மொழியை தாய்மொழியாகக் கொண்ட நீதிபதிகள் தமிழைக் கற்று தமிழில் தீர்ப்புகள் எழுத வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்புகளை எழுதலாம் என உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் 1994-ம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை வழக்கறிஞர் சோலை சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்த மனு 2013 பிப். 22-ம் தேதி தள்ளுபடியானது. இந்த உத்தரவை மறு சீராய்வு செய்யக் கோரி மூத்த வழக்கறிஞர் ரத்தினம், மனு செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு:

1950-ம் ஆண்டின் அரசியல் சாசனத்தில் மத்திய ஆட்சி மொழிகள், மாநில ஆட்சி மொழிகள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதன் 345-வது பிரிவில் அந்தந்த மாநிலங்களில் மாநில மொழிகளை ஆட்சி மொழியாக பின்பற்ற சட்டம் கொண்டுவரலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழகத் தில் 1956-ல் ஆட்சி மொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976-ல் அந்தச் சட்டத்தில் கீழ் நீதிமன்றங்களில் சாட்சி விசாரணை தமிழில் நடைபெற வேண்டும், தீர்ப்புகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் ரெங்கா தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது.

பின்னர், தமிழை தாய்மொழியாகக் கொள்ளாத கீழ் நீதிமன்ற நீதிபதிகள், தமிழில் தீர்ப்பு எழுத வேண்டும் என்ற உத்தரவில் தங்களுக்கு விதிவிலக்கு வழங்கக் கோரினர். இதையடுத்து ஆங்கிலத்திலும் தீர்ப்புகள் எழுதலாம் என உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவு ஆட்சி மொழிச் சட்டத்துக்கும், தமிழில்தான் தீர்ப்புகள், சாட்சிகள் விசாரணை நடைபெற வேண்டும் என்ற பிரிவுக்கும் எதிரானது. தமிழ் தெரியாதவர்கள் குறிப்பிட்ட நாள்களுக்குள் தமிழைக் கற்று தமிழில் தீர்ப்புகள் எழுத வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்ற உத்தரவு நிரந்தரமானதாக இருப்பதால் தமிழைக் கற்க வாய்ப்பு எழவில்லை.

எனவே, கீழ் நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்புகள் எழுதலாம் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தமிழை தாய் மொழியாக கொள்ளாத அரசு ஊழியர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ் தேர்வில் வெற்றிப்பெற வேண்டும் என விதியுள்ளது. அந்த விதி நீதிபதிகளுக்கும் பொருந்தும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

செய்தி : தி தமிழ் இந்து - 01/07/2014

December 15, 2013

தில்லை கோயிலை தீட்சிதர்களுக்கு தாரை வார்க்காதே!


October 24, 2013

மோடியை அம்பலப்படுத்தும் அரங்க கூட்டம்! அனைவரும் வருக!

சென்னையில் மழைக் காலம் தொடங்கி விட்ட நிலையில், திறந்த வெளியில் பொதுக்கூட்டம் நடத்த முடியாத சூழலில், எம்.ஜி.ஆர் நகரில் நடைபெறவிருந்த பொதுக் கூட்டம் அரங்க கூட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது. இடம் மாற்றம் குறித்த விவரம் கீழே,
இந்து மதவெறி பாசிஸ்டு 
இந்தியாவின் ராஜபக்சே

மோடியின் முகமூடியைக் கிழித்தெறியும்

அரங்க கூட்டம் 26.10.2013 சனிக்கிழமை  மாலை 6 மணிக்கு

புரசைவாக்கம் தர்ம பிரகாஷ் மண்டபத்தில்

(ஓட்டல் தாச பிரகாஷ், பூந்தமல்லி சாலை, புரசைவாக்கம் எதிரில், சங்கம் தியேட்டர் அருகில்)
நடைபெறும்.

        “மோடி : வளர்ச்சி என்ற முகமூடி”

என்ற திருச்சி பொதுக் கூட்டத்தில் தோழர் மருதையன் பேசிய உரை அடங்கிய
நூல் வெளியிடப்டும்.
இடம் மாற்றத்தை நண்பர்கள் மத்தியில் பரவலாக பகிரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
உரையாற்றுவோர் :

தோழர் மருதையன், பொதுச் செயலர், ம.க.இ.க

வழக்குரைஞர் பாலன், பெங்களூரு உயர்நீதி மன்றம்

புரட்சிகர கலை நிகழ்ச்சி
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு
மோடி போஸ்டர்
இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி