> குருத்து: போராட்டம்
Showing posts with label போராட்டம். Show all posts
Showing posts with label போராட்டம். Show all posts

September 26, 2021

கடைகளில் குவிந்து இருக்கும் நாற்காலிகள்! நின்று கொண்டே இருக்கும் தொழிலாளர்கள்!



நேற்று வீட்டுக்கு போகும் வழியில், பாடியில் இருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் கண்ணில்பட்டது.  பகுதியில் கொசு தொல்லை அதிகமாகிவிட்டது.  டெங்கு பரவி வரும் வேளையில், பாதுகாப்புக்கு கொசுவலை வாங்கலாம் என உள்ளே நுழைந்தோம்.

 

போன உடனே  ஒரு விசயத்தை ஆவலாய் தேடினேன்.  அங்கு வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு உட்கார்வதற்கு நாற்காலிகள் போடப்பட்டிருக்கும் என!  ஆனால் நாற்காலிகளை காணோம்.  எல்லோரும் நின்று கொண்டுதான் இருக்கிறார்கள்.  இருப்பினும் உறுதிப்படுத்துவதற்கு அங்கு வேலை செய்த இரண்டு இளம் பெண்தொழிலாளர்களிடம்  கேட்டேன்.  சமீபத்தில் தமிழக அரசு ஜவுளிக் கடைகளில் உட்கார்வதற்கு நாற்காலி தரவேண்டும் என சட்ட மசோதா நிறைவேற்றியதே!  உங்களுக்கு நாற்காலி தரவில்லையா? என்றேன்.  ”இல்லை” என மவுனமாய் தலையாட்டினார்கள்.

 

ஜவுளி கடைகளில் தொழிலாளர்களுக்கு நாற்காலி தருவதில்லை.  அதனால் அவர்கள் பலவித நோய்களுக்கு உள்ளாகிறார்கள். ஆகையால், அனைத்து தொழிலாளர்களுக்கும் உட்கார்வதற்கு நாற்காலி தரப்படவேண்டும் என  கடந்த செப். 9ந் தேதி சட்ட சபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் இருபது நாட்களுக்கு மேலாகியும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் தலைநகர் சென்னையில் இயங்கும் சரவண ஸ்டோர்ஸ் கடைகளில் இன்னும் அந்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை.  அந்த கடைக்கு தினசரி பல ஆயிரம் மக்கள், அதிகாரிகள் என எல்லோரும் தான் அந்த கடைகளுக்கு கூட்டம் கூட்டமாக போய்வருகிறார்கள்.  இதெல்லாம் அரசுக்கு தெரியாதா?  

 

தொழிலாளிகளுக்கு அடிப்படையான வசதிகள் செய்து தரவேண்டும் என்ற அடிப்படை விதிகளை ஒரு முதலாளி கடைப்பிடிக்க மாட்டார்.  அரசும் கண்டு கொள்ளாது.  ஒன்று மட்டும் புரிகிறது. எத்தனை சட்டங்கள் போட்டாலும், அதை முதலாளிகள் கண்டுகொள்ளமாட்டார்கள். தான் போட்ட சட்டத்தை சின்சியராக நடைமுறைப்படுத்த அரசு அமுல்படுத்தாது. அப்படியானால் இதற்கு தீர்வு.  தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக போராடினால் தான் உட்கார்வதற்கு நாற்காலிகள் போடப்படும் என்பது இதில் கிடைக்கும் அடிப்படை பாடம்.

 

வரலாறு நெடுக போராடியதால் தான் தொழிலாளர்களுக்கு பல உரிமைகள் கிடைத்தன.  போராடாமல் விட்டதால் தான் பெற்ற உரிமைகளையும் பாதுகாக்க முடியாமல், ஒவ்வொன்றாக தொலைத்து வருகிறோம்.  சங்கம் வைக்க கூடாது என பதறும் முதலாளிகள், கலைக்க பாடுபடும் முதலாளிகள் அனைவருமே ஒற்றுமையாய் ஒரு சங்கம் வைத்து தான் இயங்குகிறார்கள். அரசிடம் கோரிக்கை வைக்கிறார்கள். தங்களுக்கான உரிமைகளை பெறுகிறார்கள். முதலாளித்துவ பண்பாடு என்பது ஒவ்வொரு மனிதனையும் தனித்தனியாக ஆக்கி, ஒன்றுசேர விடாமல் செய்வதில் வெற்றி பெற்று வருகிறது.  அதனால் தங்கள் லாபத்தை இன்னும் பெரிதாக பெருக்கி கொள்கிறார்கள். தொழிலாளர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதில் தான் அவர்களுக்கான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கிறது.

 

அதோ அதே சரவண ஸ்டோர்சில் நாற்காலிகள் மொத்தம் மொத்தமாய் நாற்காலிகளை குவிந்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். தூரம் அதிகமில்லை. அதை எடுத்துப் போட்டு உட்கார்வதற்கு ஒன்றிணைந்து போராடுவதை தவிர வேறு குறுக்கு வழிகள் இல்லை.

 

வெளியே வந்து அண்ணாந்து பார்த்தேன். ”The Legend” என பெரிதாய் போட்டிருந்தார்கள். நான் பார்ப்பதை பார்த்துவிட்டு, “The Legend” ன்னா என்னப்பா? என என் பொண்ணு கேட்டார்.  தொழிலாளர்களுக்கு உட்காருவதற்கு சீட் கூட தராத ஆள் தான் “The Legend” என்றேன்.

 

April 28, 2020

'அவர்களின்' கண்களில் பயம் தெரிகிறது


'அவர்களே' எதிர்பார்க்காத
இரண்டாவது வெற்றியை கண்டு ஆச்சர்யமடைந்தார்கள்.


படை, ஆயுதம், நீதி என
அனைத்தையும் பயன்படுத்தினார்கள்.
 

தன் நீண்ட வருட கனவுகளை
ஒவ்வொன்றாக நிறைவேற்றி வந்தார்கள்.


எதிர்ப்பவர்களை
வசை மொழிந்தார்கள்.

பக்கத்து நாட்டுக்கு
போய்விடு என்றார்கள்.

சிறையில் அடைத்தார்கள்.
கொல்லவும் செய்தார்கள்.

'வெற்றிகள்' தந்த மமதையில்
கோடிக்கணக்கான மக்களை
தன் சொந்த மண்ணிலேயே
அகதிகளாக்க துணிந்தார்கள்.

மாணவர்களின் கூட்டில்
கல் எறிந்தார்கள்.
வங்கிகளில் கால்வலிக்க நின்றவர்கள்
தொழில் முடக்கப்பட்டவர்கள்
ஆலைகளில் இருந்து
துரத்தப்பட்டவர்கள்
உரிமைகள் கேட்டதற்காக
நசுக்கப்பட்டவர்கள் என எல்லோரும்
தெருக்களில் அலைஅலையாய்
வந்துகொண்டே இருக்கிறார்கள்.

ஒருமித்த குரலில் முழங்குகிறார்கள்.
துப்பாக்கிகள் சுட்டாலும்
வந்துகொண்டே இருக்கிறார்கள்.
'அவர்களின்'
படைகள் பின்வாங்குகின்றன.

குரலில் நடுக்கம் தெரிகிறது.
கண்களில் பயம் தெரிகிறது.
நாம் மேலும் மேலும்
முன்னேறுவோம்.
சமூகத்தின் அத்தனை
அழுக்குகளையும்
துடைத்தெறிவோம்.

#NoCAA
#NoNRC
#IndiaagainstCAA

- முகநூலில்... 21/12/2019

May 2, 2018

"நாட்டில இவ்வளவு செய்ய வேண்டியிருக்காப்பா?"

மே தின பேரணிக்கு போய் திரும்பும் வழியில் ஆறாம் வகுப்பு படிக்கும் என் பெண்ணிடம் பேசிக்கொண்டே வந்தேன்.

நாம் போராடி நாம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து... நீ முக்கிய பொறுப்புக்கு வந்தால்.. முதலில் என்ன செய்வாய்?

"பிச்சைகாரர்களுக்கு எல்லாம் வேலை கொடுப்பேன்!"

இதை தொடரலாமே என கேட்க துவங்கினேன்.

#மாணவர்களுக்கு?"

"எல்லோருக்கும் இலவச கல்வி கொடுப்பேன்"

"படிக்காத பசங்கள பார்த்திருக்கிறாயா?"

"இங்க பார்த்ததில்லை. கிராமத்தில் படிக்காம இருப்பாங்கல்ல! எல்லோரும் படிக்கனும்ல!"

#பெண்களுக்கு?"

"எல்லா இடத்திலும் சுத்தமான கழிவறைகள் கட்டுவேன்"

#விவசாயிகளுக்கு?"

"எங்கு எங்கு எவ்வளவு விளைவிக்க வேண்டுமென திட்டத்தை கொடுப்பேன்"

#குழந்தைகளுக்கு?"

"எல்லா குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கொடுப்பேன்" 


(பா. ஜனதா ஆட்சியை நன்றாக புரிந்திருக்கிறாள்!)

#இளைஞர்களுக்கு?"

"எல்லோருக்கும் வேலை கொடுப்பேன்"

#மீனவர்களுக்கு?"

"மீனவர்களுக்கு உரிய நேரத்தில் வானிலை தகவல் தருவேன்"

(ஒக்கி புயல் பாதிப்பு!)

திடீரென கொஞ்சம் நிறுத்தி....

"நாட்டில இவ்வளவு செய்ய வேண்டியிருக்காப்பா?"

- என்றாள் ஆச்சர்யமாய்!

பிறகு நான் கேட்பதை நிறுத்திவிட்டேன்.

"எல்லோருக்கும் இலவசமா மருத்துவம் கொடுக்கனும்!"

"வீடு இல்லாதவங்களுக்கு வீடு கட்டித்தரனும்!"

இன்னும் சொல்லிக்கொண்டே வந்தாள்!

அது முடிகிற பட்டியலா அது?

#நீ சீக்கிரம் வளர்ந்து களத்துக்கு வா தாயி!

March 20, 2017

ஆதார் மசோதா : பண மசோதா என்பது என்ன?

"ஆதார் மசோதாவை பண மசோதாவாக மக்களவைத் தலைவர் அனுமதித்தது நடைமுறையில் ஏற்பட்ட தவறு மட்டுமல்ல, அரசியல் சட்டத்தின் 110-வது ஷரத்தையே மீறும் செயல். அரசின் எதேச்சாதிகாரப் போக்கை வெளிக்கொணரும் விதத்தில்தான் ஆதார் மசோதா இருக்கிறது. இந்தத் தவறான முன்னுதாரணம் தொடர்ந்தால், எதிர்காலத்தில் இதையே உதாரணமாகக் கொண்டு, பல சட்ட மீறல்களையும் இனிவரும் காலத்தில் அரசுகள் செய்ய முடியும்."

பண மசோதா என்பது என்ன?

- சுரீத் பார்த்தசாரதி,
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்,

ஒரு முக்கியமான வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷால் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ‘ஆதார் சட்டம் - 2016 செல்லத்தக்கதா?’ என்று பரிசீலிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார் அவர். மத்திய அரசு வழங்கும் பணப் பயன், மானியம் மற்றும் சில வகை சேவைகள் யாரை இலக்காகக் கொண்டிருக்கின்றனவோ, அவர்களுக்கு மட்டும் கிடைப்பதற்காக அவரவர் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வகை செய்வது இச்சட்டம். இந்த மசோதாவை ‘பண மசோதா’ என்று வகைப்படுத்தி, மக்களவையில் சாதாரண பெரும்பான்மை வலு ஆதரவில் நிறைவேற்றி சட்டமாக்கிவிட்டது பாஜக அரசு. ஆக, மாநிலங்களவையில் எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு பயனற்றதாகிவிட்டது.

இந்தச் சட்டம் மக்களுடைய உரிமைகளை ஆபத்தில் சிக்கவைப்பதுடன், வெளிப்படையாகவும், நீண்ட கால நோக்கிலும் தீங்கு விளைவிக்கும் வகையில் இருக்கிறது. மேலும், அரசியல் சட்டம் வகுத்துள்ள நியதிகளுக்கும் முரணாக இருப்பதை உற்று நோக்கினால் புலப்படும்.

ஜனநாயகத்துக்கு முரணானது

அரசு அளிக்கும் மானியங்களையும் பணப் பயன்களையும், நியாயமாகவும் சமமாகவும் அனைவருக்கும் விநியோகிக்கும் வகையில் மக்களுக்குத் தனிப்பட்ட அடையாள எண் வழங்க வேண்டும் என்றுதான் ஆதார் திட்டம் கொண்டுவரப்பட்டது. முன்கூட்டியே சட்டபூர்வ ஏற்பாடு இல்லாமல், ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது ஜனநாயக முறையிலான நிர்வாகத்துக்கு முற்றிலும் முரணானது என்பதில் சந்தேகம் இல்லை. இதற்காக ஜெய்ராம் ரமேஷ் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி பொறுப்பேற்க வேண்டும். ஆனால், அந்தத் தவறை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டது பாஜக.
அதாவது, காங்கிரஸ் 2010-ல் இதை வரைவு மசோதாவாக மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தும்போது, சாதாரண மசோதாவாகத்தான் அறிமுகப்படுத்தியது. அது அதிகாரபூர்வச் சட்டமாக மாற வேண்டுமானால், மக்களவை - மாநிலங்களவை இரண்டுமே அதற்கு ஒப்புதல் தந்தாக வேண்டும் என்ற நிலை அப்போது இருந்தது. ஆனால், அந்தச் சட்ட வரைவில் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய அம்சங்கள் சில இருந்தன. எனவே, அதை ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு, அரசின் கருத்துடன் வேறுபடும் வகையில் விரிவான அறிக்கை தந்தது. “ஆதார் எண் தொடர்பான தரவுகளை வேறு எவர் கைக்கும் சிக்காமல் பாதுகாக்க வேண்டும், தனி மனிதர்கள் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைத்திருக்கப்பட வேண்டும்” என்று அந்த அறிக்கை வலியுறுத்தியது.

தந்திர மசோதா

சட்டம் இயற்றப்படாமலேயே அதை அமலாக்கத் தொடங்கியதால் பலரும் பொது நலன் வழக்குகளைத் தொடுத்தனர். சில குறிப்பிட்ட அரசுத் திட்டங்களுக்கு மட்டும் அதை அனுமதித்த நீதிமன்றம், அடுக்கடுக்காகப் பல தடை ஆணைகளை இடைக்கால உத்தரவுகளாகப் பிறப்பித்தது. இதனிடையே புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக அரசு, 2016 மார்ச்சில் முந்தைய காங்கிரஸ் அரசு தாக்கல்செய்த மசோதாவைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, புதிய வரைவு வாசகம் கொண்ட மசோதாவை ‘ஆதார் மசோதா-2016’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா, தந்திரமான வகையில் பண மசோதா என்று வகைப்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்திய அரசியல் சட்டப்படி பண மசோதாக்களுக்கு மக்களவை ஒப்புதல் தந்தால் போதும். ஆக, மாநிலங்கள வையில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோது, மக்களவையில் தன்னுடைய பெரும்பான்மையை வைத்து, மசோதாவை நிறைவேற்றிக்கொண்டது பாஜக.

ஷரத்து சொல்வதென்ன?

பண மசோதா எது என்று அரசியல் சட்டத்தின் ஷரத்து 110 விவரிக்கிறது. நிதி நிர்வாகம் தொடர்பான ஏழு அம்சங்களை மொத்தமாகக் கொண்டது அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டதுதான் பண மசோதா என்று அது கூறுகிறது. வரி விதிப்பது, குறைப்பது, கூட்டுவது, ரத்துசெய்வது உள்ளிட்ட ஒழுங்காற்றுச் செயல்கள், மத்திய அரசு கடன் வாங்குவதை ஒழுங்காற்றுவது, இந்தியத் தொகுப்பு நிதியத்திலிருந்து பணத்தைத் திரும்ப எடுப்பது அல்லது நிதியத்தில் சேர்ப்பது போன்றவை இந்த ஏழு அம்சங்களில் அடங்கும். வரைவு மசோதா மேலே குறிப்பிட்ட அம்சம் எதையும் கொண்டிருக்காவிட்டாலோ, திட்டமிடாமல் வேறு ஏதேனும் ஒன்றுடன் இணைந்து வந்தாலோ அது பண மசோதாவாகிவிடாது என்கிறது ஷரத்து. ஒரு மசோதா பண மசோதாவா, இல்லையா என்ற சர்ச்சை ஏற்பட்டால், சபாநாயகரின் முடிவே இறுதியானது என்றும் கூறுகிறது.

குறையுள்ள எதிர்வாதம்

ஜெய்ராம் ரமேஷின் ஆட்சேபத்துக்கு அரசின் பதில், எதிர்பார்த்தபடியே இரு அம்சங்களைக் கொண்டிருக்கிறது. “பண மசோதாதான் என்று சபாநாயகர் ஒப்புதல் வழங்கிய பிறகு, அதை எந்த நீதிமன்றமும் பரிசீலிக்க முடியாது. அரசியல் சட்டத்தின் தேவைக்கேற்ப எல்லா விதத்திலும் ஆதார் மசோதா - பண மசோதாதான்” என்று இப்போது அரசுத் தரப்பு கூறுகிறது. வெகு கவனமாக ஆராய்ந்தால், இந்த இரு அம்சங்களிலும் அரசு சொல்வது தவறு என்பது புரியும்.

அரசியல் சட்டத்தின் 110-வது ஷரத்து சபாநாயகருக்குக் கட்டுப்பாடற்ற விருப்ப அதிகாரத்தைத் தந்துவிடவில்லை. பண மசோதாவுக்குரிய அம்சங்கள் என்று 110-வது ஷரத்து கூறுவதில் உள்ள அம்சங்கள் ஏதும் இல்லாவிட்டால், அதைச் சாதாரண மசோதாவாகத்தான் கருத வேண்டும் என்று அரசியல் சட்டம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. அப்படி இல்லாத ஒன்றைப் பண மசோதாவாகக் கருதுவது அரசியல் சட்டப்படி பெரும் தவறாகும்.
2007-ல் நடந்த ‘ராஜா ராம் பால் - எதிர் - சபாநாயகர்’ வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பு என்ன சொல்கிறது என்றால், ‘நாடாளுமன்றம் ஒரு விஷயத்தில் எப்படி முடிவெடுத்திருந்தாலும் அதை நீதிமன்றங்கள் ஆராயவும் பரிசீலிக்கவும் தடையில்லை’ என்கிறது. சபாநாயகர் சட்டத்துக்குப் புறம்பாக வேண்டும் என்றே வகைப்படுத்தி னாலோ, அரசியல் சட்டம் எதிர்பார்க்கும் அடிப்படைக் கூறுகளைப் புறந்தள்ளினாலோ, தான்தோன்றித்தனமாக முடிவெடுத்தாலோ, நேர்மையற்ற உள்நோக்கத்துடன் ஒரு முடிவுக்கு வந்தாலோ, அவருடைய முடிவே இறுதியானது என்று இருந்துவிடாமல் பரிசீலிப்பதற்கு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்கிறது தீர்ப்பு.

ஆதார் சட்ட அம்சங்கள்

ஆதார் சட்டத்தைச் சாதாரணமாக வாசித்தாலே அதன் கூறுகள் அரசியல் சட்டத்தின் 110-வது ஷரத்து கூறுவனவற்றையும் தாண்டிச் செல்வது புலனாகும். அரசின் பொது நிதியிலிருந்து பணம் எடுக்க அல்லது பணத்தைச் சேர்க்க அந்த ஷரத்து வகை செய்கிறது. ஆதார் சட்டத்தில், குடிமக்களிடம் திரட்டப்படும் அனைத்துத் தரவுகளையும், கண்விழி அடையாளம் - ரேகை அடையாளம் உள்ளிட்ட தனிப்பட்ட அங்க அடையாளங்களையும் பொதுவாகச் சேர்த்து வைக்க வழி செய்கிறது. ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய தேவைப்படும் பணத்தை அனுமதிப்பதுதான் பண மசோதா.
ஆதார் மசோதாவில் இப்படிப்பட்ட அம்சம் ஏதுமில்லை. எனவே, இதைப் பண மசோதாவாக மக்களவைத் தலைவர் அனுமதித்தது நடைமுறையில் ஏற்பட்ட தவறு மட்டுமல்ல, அரசியல் சட்டத்தின் 110-வது ஷரத்தையே மீறும் செயல். அரசின் எதேச்சாதிகாரப் போக்கை வெளிக்கொணரும் விதத்தில்தான் ஆதார் மசோதா இருக்கிறது. இந்தத் தவறான முன்னுதாரணம் தொடர்ந்தால், எதிர்காலத்தில் இதையே உதாரணமாகக் கொண்டு, பல சட்ட மீறல்களையும் இனிவரும் காலத்தில் அரசுகள் செய்ய முடியும். எனவே, அரசின் இந்த முடிவில், சபாநாயகரின் இந்த முடிவில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும். நீதியை நிலைநாட்ட வேண்டும்!

- சுரீத் பார்த்தசாரதி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்,

சுருக்கமாகத் தமிழில்: சாரி

இந்து நாளிதழ்

January 28, 2016

காந்தி தப்பித்துவிட்டார்!

இன்றைய தமிழ் இந்து நாளிதழில் கட்டுரையாளர் சமஸ் சாதிய விசயத்தில் காநதியின் நடத்தை குறித்து நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார்.  இதற்கு சரியான எதிர்வினைகளை இடதுசாரி தரப்பிலிருந்து யாராவது அழுத்தமாக எழுதுவார்கள் என எதிர்பார்க்கிறேன்!

இந்த கட்டுரையைப் படித்து தோழர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது ”காந்தி” சம்பந்தமாக சமீபத்திய ஒரு காவல் நிலையம்  தொடர்பான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்!
டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்கள் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. இடையில்  காந்தியவாதி சசிபெருமாள் மரணத்திற்கு பிறகு, பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் கடையை நொறுக்கியதும், தமிழ்நாடு தழுவிய அளவில் கடைகளை தன்னெழுச்சியாகவும், அமைப்பு ரீதியாகவும் பலரும் கடையை அடித்து நொறுக்கினார்கள்.  அதில் மக்கள் அதிகாரம் தோழர்கள் முன்னணியில் நின்றார்கள் என்பது அனைவரும் அறிந்த விசயம். வருகிற பிப்ரவரியில் 14 தேதியில் கூட டாஸ்மாக்கை எதிர்த்து திருச்சியில் சிறப்பு மாநாடு வேலைகளில் பரபரவென இருக்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியில், தென் தமிழகத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஒரு பகுதியில் மக்கள் மத்தியில் தொடர்ந்து டாஸ்மாக் எதிர்ப்பு பிரச்சாரம், கடையில் சாணியடிப்பது, கடையை நொறுக்குவது என போய்க்கொண்டிருந்த பொழுது, போலீசு இரண்டு தோழர்களை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளது.  தொடர்ந்து குடைச்சல் தருகிறார்களே என்ற கடுப்பில், ”நம்ம நீதியரசர்கள்” பாணியில் காந்தியின் அகிம்சை குறித்து தங்களுக்கு தெரிந்த அரைகுறை விசயங்களுடன் தோழருக்கு ”போதித்திருக்கிறார்கள்”. அதிகபட்சமாக போய், காந்தி குறித்து இரண்டு பக்க அளவில் எழுதி தர கேட்டிருக்கிறார்கள். (மனசில ஆழப்பதியனுமாம்!)   ”காந்தி பற்றி எழுதி கேட்பதற்கெல்லாம் உங்களுக்கு உரிமையில்லை. இருப்பினும் நீங்கள் ”மிகவும் விருப்பப்பட்டு” கேட்பதால் எழுதி தருகிறோம்.  அதற்கு பிறகு மனம் புண்பட்டுவிட்டது என சொல்லக்கூடாது!” என பதிலளித்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் வழக்குரைஞர் வந்துவிட, பேச்சு வேறு திசையில் திரும்பிவிட்டது. தோழர்களிடமிருந்து ”காந்தி தப்பிவிட்டார்”. :)

March 2, 2015

டாஸ்மாக் ஒழிய அழிவிடைதாங்கி மக்கள் வழியை பின்பற்றுவோம்!




தமிழகத்தில் எல்லா ஆறுகளும் வற்றிக்கொண்டு இருக்க டாஸ்மாக் ஆறு மட்டும் வற்றாத ஜீவநதியை போல ஓடிக்கொண்டே இருக்கிறது!  பெரியவர் முதல் மாணவர் வரை போதையில் மிதக்கிறார்கள்.  சாலையில், சாக்கடையில் புரள்கிறார்கள்.  மெல்ல மெல்ல தனது ஆளுமையை இழக்கிறார்கள். நோயில் சிக்கி உயிர் துறக்கிறார்கள். குடும்பங்கள் சீரழிகின்றன. யார் குடி கெட்டால் என்ன? எனக்கு லாபம் வந்தால் போதும் என ஒரு கேடு கெட்ட முதலாளியை போல அரசு சிந்திக்கிறது.  ஒவ்வொர் ஆண்டும் கூச்சமே இல்லாமல் ஆயிரக்கணக்கான கோடிகளில் லாபம் என பெருமை பேசுகிறது.


கடந்த 20 ஆண்டுகளாக தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் ஏகாதிபத்தியங்களின் நெருக்கடி, ஆளும் கட்சிகளின் அடிவருடித்தனம் காரணமாக வெறித்தனமாக அமுல்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். விளைவாக, விவசாய நாடான இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்குள் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இப்படி  வாழ்விழந்த மக்கள் நாடு முழுவதும் தன்னெழுச்சியாக போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.  ஒருபுறம் போராடுகிற மக்களை ஒடுக்க அரசு காவல்துறையை நவீனப்படுத்தியும், பலப்படுத்தியும் வருகிறது. சீனாவில் பிரித்தானிய அரசு அபினியை இறக்குமதி செய்து போதையில் தள்ளியதைபோல மறுபுறம் மக்களை போதையில் தள்ளுகிறார்கள்.
 
அதிமுக, திமுக தவிர பெரும்பான்மையான கட்சிகள் மதுவிலக்கை ஆதரிக்கிறார்கள்.  சிலர் காலில் விழுகிறார்கள். உண்ணாவிரதமிருக்கின்றனர். வைகோ மாரத்தான் போட்டி நடத்துகிறார். லட்சகணக்கில் அணிகளை வைத்திருப்பதாக சொல்லிக்கொள்கிற  கட்சிகள்கூட அடையாள போராட்டங்களை நடத்துகிறார்கள். இந்த கட்சிகளில் உள்ளவர்கள் தான் டாஸ்மாக் பார்களை நடத்தி கல்லாவும் கட்டுகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அழிவிடைத்தாங்கி கிராமத்தில் பள்ளிக்கருகே டாஸ்மாக் கடை திறந்தார்கள். அன்று தொடங்கி பெண்பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அழிவிடைத்தாங்கி மட்டுமல்ல, சுற்றியிருந்த ஆறு கிராமங்களும் மோசமாக பாதிக்கப்பட்டன.  கடந்த இரண்டு ஆண்டுகளில், கடையை அகற்ற எல்லாவித அறப்போராட்டங்களையும் செய்தார்கள். மூன்றுமுறை முற்றுகையிட்டார்கள்.  அரசு கஜானவை நிரப்ப என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற சாணக்கியவழி வந்தவர்கள்தானே ஆள்கிறார்கள்.  அசைந்துகொடுக்கவில்லை.

எல்லா வழிகளும் அடைபட்ட நிலையில், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சார்ந்த தோழர்கள் ஏழு கிராமத்திலும் பிரச்சாரம் செய்தார்கள். மீண்டும் முற்றுகையிட மக்களோடு பேசி நாளும் குறித்தார்கள்.  ஏழு கிராமங்களிலிருந்தும் குடும்பம் குடும்பமாய் பேரணியாய் திரண்டு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. வழக்கம் போல கத்தி கலைந்துவிடுவார்கள்  என காவல்துறை வேடிக்கைப் பார்த்தனர்.  தோழர்கள் மக்களைப் பார்த்துஇப்போது என்ன செய்வது? வழக்கம் போல கலைந்து செல்வதா? டாஸ்மாக் கடையை அழிக்கப்போகிறோமா?” என்றனர். பேசிக்கொண்டு இருக்கும் போதே ஒருவர் கடைக்குள்ளே போய் ஒரு கேசை தூக்கிப் போட்டு உடைக்க, அடுத்த நொடியில், மொத்த மக்களும் சாராயக்கடைக்குள் புகுந்து உடைக்க ஆரம்பிக்க, சிறுவர்களோ கால்களில் பாட்டில்கள் குத்தி ரத்தம் வந்தாலும் கடைக்குள் புகுந்து துவம்சம் செய்தனர்.

தோழர்களை மட்டும் கைது செய்ய முயன்ற போலீசை, மொத்த மக்களும் ”எங்களையும் கைது செய்! அல்லது அவர்களை விடுதலை செய்” என சொல்ல,  பணிந்த காவல்துறை தோழர்களை விடுதலை செய்தது.

மக்கள் கலைந்து சென்ற நேரம் பார்த்து, காவல்துறை தோழர்களையும், ஆதரவாய் பேசிய ஒரு அம்மாவையும் கைது செய்து, 14 கி.மீ தூரமுள்ள வேறு ஒரு காவல்நிலையம் கொண்டு சென்று 11 பிரிவுகளில் பொய் வழக்கு போட்டு, சிறையிலடைத்தனர்.

மக்கள் ஆதரவோடு தோழர்கள் விரைவில் வெளியே வந்துவிடுவார்கள். ”அழிவிடைதாங்கி மக்களைப்போல, நாங்களும் தயாராக இருக்கிறோம். எங்கள் பகுதிக்கு வாருங்கள் என தொலைபேசியில் மக்கள் பு.மா.இ.முவை உரிமையுடன் அழைக்கிறார்கள். சீனமக்கள் அபினி யுத்தத்தில் வெற்றி பெற்றதுபோல, நாமும் வெற்றி பெறுவோம்!

July 30, 2014

சமஸ்கிருத வாரம் - இந்துத்துவாவின் திணிப்பு!


July 26, 2014

மாறும் மனிதர்கள்!

பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்க்கையை பேசிய தொ.மு.சி. ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் துயர வாழ்க்கையைப் பேசிய டேனியலின் ’எரியும் பனிக்காடு’, உப்பளக வாழ்க்கைத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பகிர்ந்த ஸ்ரீதர கணேசனின் ‘உப்பு வயல்’,  திரையரங்கில் வேலை செய்யும் உதிரி பாட்டாளிகளான இளைஞர்களின் வாழ்க்கையைப் பகிர்ந்த பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’ என தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பேசிய தமிழ் நாவல்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதன் தொடர்ச்சியில் தோல் தொழிலாளர்களின் வாழ்க்கையை, இலக்கிய வரலாற்றில் ,முதன்முதலாகவும், அழுத்தமாகவும் பேசும் நாவல் செல்வராஜின் ’தோல் நாவல்’!
பர்ஸ், செருப்பு என தோலால் செய்த பொருட்கள் நம் எல்லோருக்கும் பிடித்தமானவை. காரணம் அவைகள் மிருதுவானவை. ஆனால், தோல் தொழிற்சாலையும், அதில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் மிக மிக கடினமானவை! துயரமானவை!

நாவல் சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் (1940 -1950) திண்டுக்கல்லை களமாக கொண்டு பயணிக்கிறது! தோல் தொழிற்சாலையில் தோல்களின் குடலைப் புரட்டும் நாற்றம்; சுண்ணாம்பு குழிக்குள் தோல்களை முக்கி நனைத்தெடுக்கும் பலமணி நேர வேலை; குறைவான கூலி! தொழிலாளர்கள் குறிப்பாக அருந்ததியர்களும், பறையர்களும் என தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதால், ஆண் தொழிலாளர்களுக்கு அடியும் உதையும், பெண் தொழிலாளர்களுக்கு  கூடுதலாக பாலியல் தொல்லைகளும், வன்முறைகளும் என நோய்களும், சாவுகளும், ஒடுக்குமுறைகளும் மிக மலிந்த வேலை! தொழிலாளர்களைப் பாதுகாக்க தொழிற்சங்கம் உருவாகிறது! முதலாளிகள் இன்னும் மோசமான ஒடுக்குமுறையை தொழிலாளர்கள் மீது ஏவுகிறார்கள்.

நடக்கும் வர்க்கப் போராட்டத்தில் தொழிலாளர்களுடன் இணைந்து போராடுகிற ஒவ்வொருவரும் வேறொரு வார்ப்பிற்கு ஆச்சர்யத்தக்க கையில் உருமாறுகிறார்கள். கந்துவட்டிக்காரனால் நடுத்தெருவில் அம்மணமாக்கப்படுகிற வீராயி, பின்னாளில் தொழிலாளிகளின் அணிக்கு தலைமை தாங்குகிறவராக மாறுகிறார். தொழிற்சங்க தலைவரை கொலை செய்ய அனுப்பப்படுகிற முதலாளியின் அடியாள் சந்தனத்தேவன் தொழிலாளர்களைப் பாதுகாக்கிற காவலராகிவிடுகிறார். பார்த்த பெண்களையெல்லாம் சூறையாடுகிற மேற்பார்வையாளன் முஸ்தபாவை அடித்து துவைக்கும் தொழிலாளி மாடத்தி!. தவறாக நடக்க முயன்ற முஸ்தாபாவை கொலை செய்துவிடுகிற தொழிலாளி சிட்டம்மா யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து நகர்ந்துவிடுகிறார். இந்த கொலையை தொழிற்சங்கவாதிகளை பழிவாங்க காவல்துறை முயலும் பொழுது, அவர்களை காப்பாற்றுவதற்காக தான் செய்த கொலையை ஒப்புக்கொள்கிற சிட்டம்மா!

மறுகாலனியாதிக்க சூழலில், மூலதனம் முன்பை விட மூர்க்கத்தனமாக தனது சுரண்டலை செய்துவருகிறது. தொழிலாளர்கள் சமரசமற்று போராடுகிற புரட்சிகர தொழிற்சங்கங்களில் இணைந்து போராடவேண்டிய நேரமிது! இந்த நாவல் வர்க்கப்போராட்டத்தின் பலன்களை நேர்மறையில் கற்றுத்தருகிறது! நம்பிக்கையை தருகிறது. நாவலில் நீதிமன்றம், நீதிபதிகள் குறித்து ஒரு நம்பிக்கையை ஆசிரியர் தருகிறார். கடந்த இருபது வருடங்களில் தொழிலாளர் விரோத, சமூக விரோத தீர்ப்புகளைத் தந்து நீதிமன்றங்கள் அந்த நம்பிக்கையை களைந்திருக்கிறார்கள்!

நாவலின் வடிவத்தை பொருத்தவரையில், பொதுவுடைமை இலக்கியவாதிகளின் பிரச்சார நெடிப்பற்றிய பிற இஸத்துக்காரர்கள் ‘கவலையை’ ஆசிரியர் தனது எழுத்தாற்றலால் போக்கியிருக்கிறார். நாவல் தொடங்கும் பொழுதே எத்தனை கதாபாத்திரங்கள், என்ன பாத்திரம் என வகைப்படுத்தி தந்திருக்கிறார். இவ்வளவு பெரிய நாவலில் ஓரிடத்தில் கூட புரிந்துகொள்வதில் எந்த சிக்கலும் இல்லை! நாவல் 2012ல் சாகித்திய அகாடமி விருதை வென்றிருக்கிறது! 

ஆசிரியருக்கு நமது வாழ்த்துக்கள்!

695 பக்கங்கள் 

விலை ரூ. 400 

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,

July 25, 2014

வழ. சங்கரசுப்புவை இழிவுப்படுத்திய‌ நீதிபதி கர்ணனே மன்னிப்பு கேள்!




                                               (வழக்குரைஞர் சங்கரசுப்பு)
 
"மக்கள் வழக்குரைஞரும், மூத்த வழக்குரைஞருமான சங்கரசுப்புவை இழிவுப்படுத்திய நீதிபதி கர்ணனே பகிரங்க மன்னிப்பு கேள்!"

இன்று மதியம் 1.30 மணியளவில் நீதிமன்ற ஆவின் கேட் அருகே மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது!

நேற்று காலையில் மூத்த வழக்குரைஞரும், மக்கள் வழக்குரைஞருமான சங்கரசுப்பு நீதிபதி கர்ணன் முன்பு ஒரு வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் பொழுது, "என்னைப் பற்றி விமர்சனம் செய்து போஸ்டர் ஒட்டுறீங்களோ! இன்றிரவிற்குள் உன்னை புழல் சிறையில் தள்ளி, களி திங்க வைக்கிறேன்" என ஒருமையில் பேசியும், மிரட்டியும் இருக்கிறார்.

இப்படி அடாவடியாக மிரட்டுவதற்கு அடிப்படை என்ன?

வைகுண்டராஜனின் தாதுமணல் கொள்ளை ராஜ்யத்தை கடலோர மக்களின் தொடர்போராட்டங்களால் கடந்த சில மாதங்களாக தமிழக அரசும், மத்திய அரசும்  முடக்கிவைத்திருக்கிறது!


தாதுமணல் கொள்ளையை துவக்கத்திலிருந்து, கடலோர மக்களுடன் உடன் நின்று, தமிழகம் தழுவிய அளவில் மக்கள் மத்தியில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ‍ ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களும் என தொடர் போராட்டங்களை நடத்திவருகிறது. அதேவேளையில் நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடிவரும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வைகுண்டராஜன் தரப்புக்கு தலைவலியாக இருந்துவந்திருக்கிறது!


தனது கொள்ளையை தொடர இப்பொழுது வைகுண்டராஜனை நீதிபதி கர்ணனை தஞ்சம் அடைந்திருக்கிறார். அவரோ வைகுண்டராஜன் வைத்த வழக்குரைஞரை விட விசுவாசமாய் தொடர்ந்து பேசிவருகிறார். பாதிக்கப்பட்ட மக்களின் வலியையும், வேதனையும் அறியாதவராய் அலட்சியமாய் பேசிவருகிறார்.  வழக்கை ஒத்திவைக்கிறேன் என தெரிவித்துவிட்டு, ரகசியமான முறையில் வைகுண்டராஜனுக்கு ஆதரவாய் தீர்ப்பளித்துவிட்டார்.

இதைக் கண்டித்து நீதிமன்ற வளாகங்களில் மனித உரிமை பாதுகாப்பு மையம்

"இது நீதிமன்றமா?
நீதிபதி கர்ணனின் காட்டுத் தர்பாரா? 


பொதுமக்களே, வழக்குரைஞர்களே!

தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனுக்கு
நீதியை வளைக்கிறார் கர்ணன். 
இதை எதிர்த்து வழக்காடினால் எகிறி குதிக்கிறார்.

எகிறுவதும் குதிப்பதும் எதற்கு தெரியுமா? 
வைகுண்டராஜன் முக்கி முக்கி எடுத்த
தாதுமணலை சிந்தாமல் சிதறாமல்
நாடு கடத்துவதற்கு அனுமதி வழங்கவே!
இப்பொழுது புரிகிறதா? 
எலி ஏன் அம்மணமாய் ஓடியதென்று!
 

கடலோர மக்களின்
உயிரை மயிராய் மதிக்கும்
தேசத்தின் வளத்தை சூறையாடும்
கொள்ளையன்  வைகுண்டராஜனுக்கு
துணை போகும் கர்ணனைப் போன்ற
தேசத்துரோக, மக்கள் விரோத நீதிபதியின்
நாட்டாமையை முறியடிப்போம்"

என சுவரொட்டி ஒட்டி அம்பலபடுத்தியதும் தான் நீதிபதி கர்ணனின் கோபத்துக்கு காரணம்!

வழக்கை நடத்தியதும், சுவரொட்டி ஒட்டியதும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம். அவர்களை தொட்டால், இன்னும் நாலைந்து சுவரொட்டிகள் நமக்கு எதிராக விழும் என அறிந்து, மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்புவை இழிவாகவும், மிரட்டியும் பேசியுள்ளார்.

தன்மானமுள்ள வழக்குரைஞர்கள் நீதிபதி கர்ணனின் பேச்சை கண்டிக்கவேண்டும்! இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும்!

போராட்டம் வெற்றியடைய நம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்! 

  

July 17, 2014

வேட்டி - கனவான்களே! தனியார் பள்ளிகளை கண்டிக்க தயங்குவது ஏன்?


July 2, 2014

நீதிபதிகள் இனி தமிழில் தீர்ப்பு எழுதவேண்டும்!



முன்குறிப்பு : தமிழில் தீர்ப்பு எழுதும் சட்டத்தை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் செல்வாக்கில் 1994ல் ஒரு தீர்மானத்தைப் போட்டு தமிழில் தீர்ப்பு எழுதுவதை தடுத்து நிறுத்தியிருந்தார்கள்.

தமிழ் உணர்வு கொண்ட வழக்குரைஞர்கள் நீதிமன்ற வளாகங்களில் பல வகைகளில் தொடர்ந்து போராடி நெருக்கடி தந்து, நீதிபதிகளும், நீதிமன்றமும் இனிமேலும் இழுத்தடிக்கமுடியாது என்ற நிலையில் இப்பொழுது இந்த தீர்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.

இந்த தொடர் போராட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தனது பங்களிப்பை செய்திருக்கிறது! போராடிய அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொள்வோம்.

தொடர்ந்து போராடுவோம்!

******

கீழ் நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு: தமிழை கற்கவும் நீதிபதிகளுக்கு உத்தரவு- உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி


கீழ் நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்புகள் எழுதலாம் என்ற உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

பிற மொழியை தாய்மொழியாகக் கொண்ட நீதிபதிகள் தமிழைக் கற்று தமிழில் தீர்ப்புகள் எழுத வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்புகளை எழுதலாம் என உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் 1994-ம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை வழக்கறிஞர் சோலை சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்த மனு 2013 பிப். 22-ம் தேதி தள்ளுபடியானது. இந்த உத்தரவை மறு சீராய்வு செய்யக் கோரி மூத்த வழக்கறிஞர் ரத்தினம், மனு செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு:

1950-ம் ஆண்டின் அரசியல் சாசனத்தில் மத்திய ஆட்சி மொழிகள், மாநில ஆட்சி மொழிகள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதன் 345-வது பிரிவில் அந்தந்த மாநிலங்களில் மாநில மொழிகளை ஆட்சி மொழியாக பின்பற்ற சட்டம் கொண்டுவரலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழகத் தில் 1956-ல் ஆட்சி மொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1976-ல் அந்தச் சட்டத்தில் கீழ் நீதிமன்றங்களில் சாட்சி விசாரணை தமிழில் நடைபெற வேண்டும், தீர்ப்புகள் தமிழில் எழுதப்பட வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் ரெங்கா தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது.

பின்னர், தமிழை தாய்மொழியாகக் கொள்ளாத கீழ் நீதிமன்ற நீதிபதிகள், தமிழில் தீர்ப்பு எழுத வேண்டும் என்ற உத்தரவில் தங்களுக்கு விதிவிலக்கு வழங்கக் கோரினர். இதையடுத்து ஆங்கிலத்திலும் தீர்ப்புகள் எழுதலாம் என உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவு ஆட்சி மொழிச் சட்டத்துக்கும், தமிழில்தான் தீர்ப்புகள், சாட்சிகள் விசாரணை நடைபெற வேண்டும் என்ற பிரிவுக்கும் எதிரானது. தமிழ் தெரியாதவர்கள் குறிப்பிட்ட நாள்களுக்குள் தமிழைக் கற்று தமிழில் தீர்ப்புகள் எழுத வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என்ற உத்தரவு நிரந்தரமானதாக இருப்பதால் தமிழைக் கற்க வாய்ப்பு எழவில்லை.

எனவே, கீழ் நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலும் தீர்ப்புகள் எழுதலாம் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தமிழை தாய் மொழியாக கொள்ளாத அரசு ஊழியர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ் தேர்வில் வெற்றிப்பெற வேண்டும் என விதியுள்ளது. அந்த விதி நீதிபதிகளுக்கும் பொருந்தும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

செய்தி : தி தமிழ் இந்து - 01/07/2014