> குருத்து

December 11, 2023

Garudan (2023) மலையாளம்


ஒரு கல்லூரியில் பண்பாடு நிகழ்வு போட்டிகள் நடைபெறுகின்றன. நிறைய மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள். அதில் ஒரு பெண் தன் வீட்டுக்கு போகும் வழியில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள்.


எதைச்சையாக அந்த இடத்திற்கு செல்லும் நபர்களால் அந்த பெண் காப்பாற்றப்பட்டாலும், கோமாவிற்கு போய்விடுகிறாள்.

வழக்கு போடப்பட்டு, நாயகனான போலீசு அதிகாரி விசாரணையை துவங்குகிறார். உடனடியாக யாரையும் கைது செய்யமுடியவில்லை. கைது செய்ய சொல்லி போராட்டங்கள் நடக்கின்றன. கொஞ்சம் சுற்றி வளைத்து ஆதாரங்களைத் திரட்டி ஒரு பேராசிரியரை கைது செய்து குற்றத்தை நிரூபித்து ஏழு ஆண்டுகள் தண்டனையையும் பெற்றுத் தருகிறார்கள்.

நிற்க. இதெல்லாம் எழுத்துப் போடுவதற்கு முந்தைய கதை. பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து அந்த பேராசிரியர் வெளியே வருகிறார். மீண்டும் வழக்கை விசாரிக்க அனுமதி கேட்கிறார். ஆச்சர்யப்படுகிறார்கள். அவரே சிறையில் இருந்த காலத்தில் வழக்கறிஞராக தேர்ச்சி பெற்று இருக்கிறார். அவரே தனக்காக வாதாடவும் செய்கிறார். ஒவ்வொரு சாட்சியத்தையும் உடைக்க துவங்குகிறார். தான் குற்றமற்றவர் என்பதை நிருபித்தாரா? அதற்கு பிறகு என்ன சிக்கல்கள் எழுந்தது என்பதை திரில்லாக சொல்லியிருக்கிறார்கள்.
****

பொதுவாக ஒரு குற்றத்திற்கு தண்டனை கிடைப்பது எல்லாம் இரண்டாம் பட்சம் தான். அந்த வழக்குக்கு வாய்தா, வாய்தா என அலைவதெல்லாம் தான் அதிகப்பட்ச தண்டனையாக இருக்கும். இதை அரசும் நீதிமன்றங்களும் தெரிந்தே தான் செய்கிறார்கள்.

ஒரு சொந்தத்தின் வீட்டு விசேசத்தில், தண்ணியைப் போட்டு தகராறு செய்து, ஒருவரை இன்னொருவர் குத்திவிட்டார். சொந்தக்காரர்களே என அக்கறைப்பட்டு உள்ளே புகுந்து விலக்கிவிட்டவர் எங்க அப்பா. அவரையும் கலாட்டா செய்த கோஷ்டி வழக்கில் சேர்த்து, பல வருடங்கள் வாய்தா, வாய்தா என அலையவிட்டார்கள். ஒவ்வொருமுறை வாய்தாவிற்கு போகும் பொழுது, மில்லில் விடுமுறை எடுக்க முடியாத சிக்கல். எடுத்தால், சம்பளம் பறிபோகும். எங்க அம்மா திட்டிக்கொண்டே இருப்பார். ஒரு வழியாய் வழக்கு முடிவுக்கு வரும் பொழுது, ”குத்திட்டு செத்தே போங்கடா! நான் விலக்கிவிட மாட்டேன்டா!” என அப்பா முடிவெடுக்கும் நிலைக்கு நீதிமன்றம் தள்ளிவிட்டது எனலாம்.

ஆனால், திரைப்படத்தில் எல்லாம் விரைவாக நடக்கும். பாலியல் பலாத்காரம், கோமா, மக்கள் போராட்டம் என்பதால், வழக்கை விரைவாக நடக்கும் என நாம் ஆறுதல் சொல்லிக்கொள்ளலாம்.

கதை கொஞ்சம் திரிஷ்யம் சாயல் தான். கதையில் கொஞ்சம் மெனக்கெட்டு வேலை செய்து, எடுத்திருக்கிறார்கள். ஆகையால் சுவாரசியமாய் இருக்கிறது.

படத்தில் கருடனுக்கு விளக்கம் சொல்லும் பொழுது தான் கொஞ்சம் ஜெர்க்கானது. நேர்மையான போலீசு அதிகாரியாக சுரேஷ் கோபி. நேர்மையாக இருப்பதினாலேயே வரும் சிக்கல்களை நன்றாக நடித்திருக்கிறார். (ஒரு சின்ன சதவிதம் பேர் அப்படி இருப்பது உண்மையிலேயே துறையில் இருப்பது, சிக்கிக்கொள்வது போல தான்!) அலட்டிக்கொள்ளாத பேராசிரியராக பிஜூ மேனனும் அருமையாக செய்திருக்கிறார். மற்றவர்களும் துணை நின்றிருக்கிறார்கள்.

படம் நவம்பரில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, இப்பொழுது பிரைமில் இருக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்.

பார்க்கிங் – தமிழ் (2023)


கணிப்பொறியாளரான நாயகன் கர்ப்பிணியாக இருக்கும் தன் துணைவியாருடன் சென்னையில் அந்த வீட்டின் மாடி வீட்டுக்கு புதிதாக குடிவருகிறார். கீழே ஒரு அரசு அதிகாரியாக இருப்பவர் தனது துணைவியார், கல்லூரி செல்லும் மகளுடன் வாழ்ந்து வருகிறார்.


பரஸ்பரம் அறிமுகமாகி உறவு நன்றாக நகரும் பொழுது, நாயகன் தன் தேவைக்கு ஒரு கார் வாங்குகிறார். கீழே காரை நிறுத்தும் பொழுது அரசு அதிகாரி பைக்கை நிறுத்துவதிலும் எடுப்பதிலும் சிரமப்படுகிறார். இதில் எழும் சின்ன வாய்த்தகராறு, இருவருக்கும் எழும் ஈகோ சிக்கலினால் வெடிக்க துவங்குகிறது.

பிறகு நடக்கும் களேபரங்கள் தான் கதை.
***

ஒரு உறவை ”தூரத்து சொந்தம்” என்பது போல பக்கத்து வீட்டு உறவுகளை “நெருங்கிய தூரம்” எனலாம் என்கிறார் மருத்துவர் ருத்ரன் உடல்நிலை சரியில்லை, அவசர உதவிக்கு எல்லாம் உறவுக்காரன், நண்பன் எல்லாம் வருவதற்கு தாமதமாகும். அக்கம் பக்கத்து வீட்டுக்காரன் தான் அவசரத்துக்கு உதவுவான். இந்த புரிதல் எப்பொழுதும் இருக்கவேண்டும். அதன் உறவின் எல்லைகளை சரியாக புரிந்து வைத்து கையாளவேண்டும்.

இல்லையெனில் இந்தப் படத்தில் வருவது போல சிக்கல்கள் தினசரி வரத்தான் செய்யும். மன உளைச்சல்களுக்குள்ளும் சிக்கிக்கொள்வோம். செய்தித்தாள்களில் பார்க்கும் பொழுது அக்கம் பக்கத்து உறவுகளின் வாய்த்தகராறு, அடிதடி சண்டைகள் வழக்குகள் வரை செல்வதைப் பார்க்கிறோம். அதிகப்பட்சம் கொலை வரைக்கும் கூட போகின்றன.

இப்படியான கதைகளை ஒன்றிணைத்து தான் இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் கதை எழுதி, தொய்வில்லாத திரைக்கதையாக்கி இயக்கியும் இருக்கிறார். ஆனால் இறுதி காட்சிகளில் “டேய் ரெம்ப ஓவராத்தான் போறீங்க!” என சொல்ல வைத்துவிட்டார்கள். எதார்த்தத்தில் அப்படியே நடந்தாலும், படத்திலும் அப்படியே வைக்கவேண்டியதில்லை.

எம்.எஸ். பாஸ்கர் கலக்கியிருக்கிறார். ஹரிஷ் கல்யாண் அவருக்கு ஈடு கொடுத்திருக்கிறார் எனலாம். மற்றபடி, இந்துஜா, ரமா, இளவரசு என எல்லோருமே நன்றாக செய்திருக்கிறார்கள்.

திரையங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பாருங்கள்.

November 30, 2023

Under the Shadow (2016) பெர்சியன் மொழி உளவியல் திகில் படம்




1980 களில் ஈரானில் நடக்கிறது கதை. நாயகி, தன் கணவன், ஏழு வயது மகளுடன் ஈரான் தலைநகரில் வசிக்கிறார். நாயகி மருத்துவ கல்லூரி மாணவியாக 80களில் அரசுக்கு எதிராக நடந்த இடதுசாரி போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக, கல்லூரி படிப்பை தொடர முடியாது என முதல்வர் உறுதியாக மறுத்துவிடுகிறார்.


இப்பொழுது ஈராக்கிற்கும், ஈரானிற்கும் சண்டைகள் நடந்துகொண்டிருக்கிறது. மருத்துவராக இருக்கும் கணவனுக்கு இராணுவத்தில் வேலை செய்தே ஆகவேண்டும் என உத்தரவிடுகிறது. அவனின் ”அம்மா வாழும் பகுதியில் போர் இல்லை. ஆகையால் அம்மாவோடு போய் இரு!” என சொன்னால், அவளுக்கு அதில் உடன்பாடில்லை. பிடிவாதமாக அங்கேயே இருக்கிறாள்.

போர் தீவிரமாகிறது. அவள் வாழும் பகுதி கடுமையாக பாதிக்கப்படுகிறது. அலாரம் சத்தம் வந்தால், கீழே ஒரு நிலவறையில் போய் ஒளிந்துகொள்கிறார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் மக்கள் அங்கிருந்து மெல்ல மெல்ல வேறு இடங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். இறுதியில் மிஞ்சுவது நாயகியும், அவளின் குட்டிப்பெண் மட்டும்!

இதற்கிடையில் அங்கு அமானுஷ்யமான விசயங்கள் நடக்க துவங்குகின்றன. முதலில் குட்டிப்பெண்ணுக்கு தெரிகிறது. பிறகு அவள் கண்களுக்கும் தெரிய வருகிறது. பிறகு என்ன ஆனது என்பதை கொஞ்சம் பயமுறுத்தி சொல்லியிருக்கிறார்கள்.
****

ஒருமுறை அமானுஷ்ய விசயங்கள் இவளுக்கும் தெரிய வர, குழந்தையை தூக்கிக்கொண்டு, போட்டிருந்த ஆடையோடு தெருவில் ஓடிக்கொண்டிருப்ப்பாள். அங்கு வரும் போலீசு, அவளை அழைத்துக்கொண்டு போலீசு ஸ்டேசன் கொண்டு போய்விடும். என்ன பிரச்சனை என்று கூட கேட்காமல், நீ ஏன் உடலை மறைக்கும் துணி அணிந்துவரவில்லை. இப்படி அணியாததால் தான், எல்லா தப்புகளும் நடக்கின்றன என முதலில் அந்த ஆடையை கொண்டு வந்து கையில் தந்து அணிய சொல்வார்கள். பிறகு ஒரு பெரியவர் வந்து மத போதனையை செய்வார். பிறகு பெரிய மனது வைத்து, வழக்கு போடாமல், “எச்சரித்து” மட்டும் அனுப்பிவிடுவார்.

போர் என்பது கொடுமையானது. எல்லா நல்ல விசயங்களையும் துடைத்தெறிந்துவிடும். வாழ்வதற்கு அடிப்படை விசயங்கள் கூட கிடைக்காத துயரம், பயம் என எல்லா மோசமானவற்றையும் கொண்டு வந்துவிடும். ஆகையால், அமானுஷ்ய அம்சங்கள் படத்தில் வந்தால் கூட, உண்மையில் பேய் தான் போர் என்பேன். போர் சூழல் மறைந்துவிட்டால், பேயும் கூட காணாமல் போய்விடும்.

நாயகியும், அந்த பெண்ணும் தான் பிரதான பாத்திரங்கள். இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நெட் பிளிக்சில் இருப்பதாக இணையம் சொல்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் பாருங்கள்.