> குருத்து

February 18, 2021

இருதுருவம் (2019) பார்க்க கூடிய திரில்லர்


முதல் வலைத்தொடர் (Web series)

9 அத்தியாயங்கள் (Episodes)

கதை. நாயகன் ஒரு போலீஸ் ஆய்வாளர். தனது குட்டிப்பெண்ணுடன் வாழ்ந்துவருகிறார். அவருடைய துணைவியார் திடீரென ஆறு மாதத்திற்கு முன்பு காணாமல் போய்விடுகிறார். போலீஸ் இந்த வழக்கை விரைவுப்படுத்தாமல், கிடப்பில் போட்டுவிட்டதால், கடுப்பில் சில மாதங்களாக விடுப்பு எடுத்துக்கொண்டு ஸ்டிரைக் செய்கிறார்.

இதற்கிடையில், ஒரு பெண்ணை சேரில் கட்டிபோட்டு வாயை கிழித்து கொடூரமாக கொலை செய்யப்படுகிறாள். “உன்னால மட்டும் தான் இந்த கொலையாளியை கண்டுபிடிக்க முடியும். வேலைக்கு வாங்க!” என மிகையாக ஏதும் சொல்லாமல், ”துறையில் ஆள் பற்றாக்குறையாக இருக்கிறது. உன் துணைவியார் காணாமல் போன வழக்கை விரைவுப்படுத்த பேசுகிறேன். இந்த கொலை வழக்கை விசாரி” என பேசுகிறார் உயரதிகாரி. “பொண்டாட்டியை இவனே கொன்னுட்டு சீனை போடுறான்” என சக போலீசுகாரர்களே அவனுக்கு பின்னால் சிலர் பேசுகிறார்கள்.

ஏற்றுக்கொண்டு துப்புத்துலக்க ஆரம்பிக்கிறான். கொலை செய்த இடத்தில் ஒரு கைப்பட எழுதி வைத்த திருக்குறள் ஒன்று கிடைக்கிறது. இதை விசாரித்துக்கொண்டு இருக்கும் பொழுதே, இதே போல இன்னொரு கொலையும், திருக்குறளும் கிடைக்கிறது. இந்த முறை கண்களை மோசமாக சிதைத்து இருக்கிறான்.

நாயகன் மெல்ல மெல்ல முன்னேறுகிறான். அடுத்தடுத்து கொலைகள் என்பதால் மேலிருந்து வரும் அழுத்தத்தால், வழக்கை அவனிடமிருந்து வேறு ஒருவருக்கு கைமாற்ற உத்தரவிடுகிறார்கள்.

இறுதியில் கொலையாளியை பிடித்தார்களா என்பதை சீரிஸ் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

******

நாயகனாக நந்தா. பொண்டாட்டி காணாமல் போனதால், தொடர் முழுவதுமே இறுக்கமான முகத்துடனே வருகிறார். நாயகனின் நினைவலைகளில் அவ்வப்பொழுது பிக்பாஸ் அபிராமி தலை காட்டுகிறார். அவருக்கு உதவியாக இருக்கும் துணை ஆய்வாளர் கலகலப்புக்கும், வழக்கை விசாரிக்கவும் உதவுகிறார்.

தொடர் கொலைகள். விசாரணை என்பது வழக்கமானது தான் என்றாலும், விசாரணையை எதார்த்தமாகவும், தொடர் கொலையாளியை கொஞ்சம் புத்திசாலியாகவும் காட்டியிருப்பதால், எலியும், பூனையும் விளையாட்டு கொஞ்சம் சுவாரசியமாக இருக்கிறது.

திருக்குறள் ஒரு ஆளை செம்மைப்படுத்தும். ஆனால், கொலையாளி திருக்குறளை பயன்படுத்துகிறான். முரண் தான்.

அதே போல வெப் சீரிஸ் என்பதால், சென்சார் இல்லாமல் இருக்கிறது. சென்சார் தேவை. ஆனால், ஆட்சியாளர்கள் அரசியல் காரணங்களுக்காக சென்சாரை விரைவில் கொண்டு வர இருக்கிறார்கள். அப்படி கொண்டுவந்தால், ஆளும் ஆட்சியாளர்களின் கொள்கைகளை விமர்சிக்கும் சீரிஸ்கள் இனி வருமா என்பது சந்தேகம் தான். பார்க்கலாம்.

ஒவ்வொரு அத்தியாயமும் 30 நிமிடங்களுக்குள் இருக்கிறது. இரண்டாவது தொடருக்கான ஏற்பாடுகளையும் இறுதியில் வைத்திருக்கிறார்கள். இந்த தொடர் வெற்றி பெற்றிருப்பதால், இரண்டாவது தொடர் வருவதற்கு நிறையை வாய்ப்பிருக்கிறது. பார்க்க கூடிய தொடர். பாருங்கள். SonyLivல் இருக்கிறது. பாருங்கள்.

Kothanodi (The River of Fables) - (2015) Assamese






கதை. நான்கு நாட்டுப்புற கதைகள்.

வெளியூர் சென்று வியாபாரம் செய்யும் வியாபாரி தனது இளம் வயது பெண்ணை அவள் சித்தியின் பாதுகாப்பில் விட்டுவிட்டு கிளம்புகிறார். தன்னை இராணி போல வைத்துக்கொள்வான் என நம்பி வாய்க்கப்பட்டவள் இப்பொழுது தன் பிள்ளைக்கு காவலுக்கு இருக்க வைத்துவிட்டானே என்ற வெறுப்பில், அந்த பெண்ணை கொடுமைப்படுத்த துவங்குகிறாள். இறுதியில் என்ன ஆனது?

வசதிப் படைத்த நிலச்சுவான்தாரர்க்கு இரண்டாவது மனைவி அவள். மலைபாம்பை திருமணம் செய்து வைத்தால், அதிர்ஷ்டம் கொட்டும் என நம்பிக்கையில், தன் மகளுக்கு மலைபாம்புடன் திருமணம் செய்து வைத்து, ’முதலிரவு’ அறைக்குள் கூண்டில் இருந்த அந்த பெரிய மலைபாம்பை திறந்துவிட்டு, அந்த சின்ன பொண்ணையும் அனுப்பிவைக்கிறாள். இறுதியில் என்ன ஆனது?

நெசவு தொழிலாளி அவள். அவளுக்கு குழந்தை இல்லை என வீட்டை விட்டு வெளியே போ! என கணவன் சொல்கிறான். தனியே ஒரு வீடெடுத்து நெசவு செய்து தன்மானத்துடன் பிழைத்து வருகிறாள். அங்கு எங்கு சென்றாலும், அவள் பின்னாலேயே ஒரு காய் (Outenga – Elephant Apple) உருண்டு வந்துகொண்டே இருக்கிறது. எல்லோருமே அதை ஆச்சரியமாய் பார்க்கிறாரகள். அதன் பின் உள்ள மர்மம் என்ன?

மீன் பிடித்து வியாபாரம் செய்யும் அந்த தம்பதிக்கு அடுத்தடுத்து மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. ஒவ்வொரு குழந்தை பிறக்கும் பொழுதும் “உயிரோடு புதைத்துவிடு!” என அவனுடைய மாமா சொல்கிறார். அவனும் தன் மனைவியை ஏற்கவைத்து, புதைத்துவிடுகிறான். நாலாவது குழந்தை பிறக்கும் பொழுது, தன் குழந்தையை தர உறுதியாய் மறுத்துவிடுகிறாள். அதன் பின் என்ன ஆனது?

***

ஒரு வலைப்பூக்காரர் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பார். கற்பனை வறட்சியில் பேய் படம் எடுத்து மக்களைக் கடுப்பேத்தறதை காட்டிலும், நாட்டுப்புற அமானுஷ்ய கதைகளை எடுத்தால், மண்ணின் மணத்தோடு இருக்கும். நன்றாக கல்லாவும் கட்டும். ஜப்பானில் இப்படி படம் எடுத்து நிறைய வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பார். இந்தப் படம் அவருடைய கருத்தை உறுதி செய்கிறது.

இந்தப் படம் பொதுநிதியில் (Crowd Funding) படம் எடுத்தது கூடுதல் சிறப்பு. படம் வெற்றியும் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.

படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். நமக்கு தெரிஞ்ச முகம் சீமா பிஸ்வாஸ் இருக்கிறார். அந்த வியாபாரி முகம் பரிச்சயமான முகமாக இருக்கிறது. படத்திற்கு மாநில விருது, தேசிய விருது என இன்னும் சில விருதுகளை வென்றிருக்கிறது.

பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

February 2, 2021

திருடன் மணியன் பிள்ளை (2013)


மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புத்தக சந்தையில் சுத்தி சுத்தி புத்தகங்களை வாங்கி, கால் கடுக்கும் வேளையில் காலச்சுவடு அரங்கில் இந்த புத்தகத்தை பார்த்தேன். கையில் உள்ள பணம் குறைவாக இருந்ததால், பிறகு வாங்கிக்கொள்ளலாம் என கடந்துவந்துவிட்டேன். 

ஆனால், அவ்வப்பொழுது முகநூலில் கண்ணில்பட்டுக்கொண்டும் இருந்தது. மற்ற துறை சார்ந்த மக்களின் அனுபவங்களை நாம் படித்திருக்கிறோம். சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு திருடனுடைய அனுபவங்கள் என்பது நாம் அறிந்திராத வாழ்க்கை. ஆகையால் இந்த புத்தகம் படிக்கவேண்டும் என்ற உந்துதல் இருந்தது.


ஊரடங்கு காலத்தில் இந்தப் புத்தகத்தை படிக்க துவங்கினேன். படிக்க, படிக்க இவ்வளவு காலம் படிக்காமல் இருந்ததற்காக மிகவும் வருத்தப்பட்டேன். அருமையான புத்தகம். ஒரு திருடனுடைய அனுபவம் என்பதாக இல்லாமல், மணியனே ஓரிடத்தில் சொல்வது போல “இது ஊரின் கதை”யாக இருக்கிறது.

மணியனின் முதல் திருட்டு, சொந்தங்களின் துரோகம், பல்வேறு திருட்டு அனுபவங்கள், சிறை வாழ்க்கையில் உள்ள துயரங்கள், போலீஸின் அணுகுமுறை, அராஜகம், மக்களின் மனநிலை, சக திருடர்களின் அணுகுமுறை, வாழ்க்கை என இன்னும் பல அம்சங்கள் நீண்டு கொண்டே செல்கிறது. புத்தககங்களில் சில முக்கிய இடங்களை குறித்துக்கொள்ளும் வழக்கம் உண்டு. இந்த புத்தகத்தில் அப்படி குறித்துக்கொண்டவை மிக அதிகம். சில பதிவுகளை அவ்வப்பொழுது எனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளேன்.

எப்பொழுதும் ஒரு புத்தகத்தை அறிமுகப்படுத்தி எழுதுவதில் தயக்கம் இருந்ததில்லை. இந்த புத்தகத்தை போன வாரமே படித்து முடித்துவிட்டேன். இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தால், மிக நீண்டு சென்றுவிடும் அல்லது பாதியிலேயே நிறுத்திவிடுவோம் என்ற பயத்திலேயே எழுதாமல் இழுத்துக்கொண்டே வந்தேன். ஏனென்றால் புத்தகத்தில் மணியன் பேசியவை நிறைய. ஆகையால், புத்தகத்தின் அளவைப் பார்த்து யாரும் தயங்கவேண்டாம்.

மணியனின் அனுபவங்களை, உள்வாங்கிக்கொண்டு எழுத்தில் அருமையாக கொண்டுவந்துள்ளார் மலையாள மனோராமாவில் பணிபுரியும் ஜி.ஆர். இந்துகோபன். மலையாள மனோராமா இதழில் “தஸ்கரன் மணியன் பிள்ளயுடெ ஆத்மகத” என்ற தலைப்பில் 88 அத்தியாயங்களில் தொடர்ச்சியாக வெளிவந்து, பலதரப்பட்ட மக்களை போய்சேர்ந்திருக்கிறது.

புத்தகத்தின் தரம் குறையாமல், குளச்சல் மு. யூசுப் மொழிப்பெயர்ப்பு என்ற உணர்வு வராத அளவிற்கு தமிழிற்கு தந்துள்ளார். சில மலையாள வார்த்தைகளால் மட்டும் தான் இது கேரள களம் என்பதையே நாம் உணர்கிறோம்.

புத்தகம் படித்த உடனே எழுத்தாளர்களிடம் பேசவேண்டும் என தோன்றியது இல்லை. என்னுடைய இயல்பும் ஒரு காரணம். ஆனால், மணியனிடம் பேசவேண்டும் என நினைத்தேன். நாகர்கோவிலில் உள்ள காலச்சுவடு அலுவலகத்தை தொடர்புகொண்டதில், அவர்கள் மணியனிடம் தொடர்பு கொள்ள முயற்சி செய்து முடியவில்லை. ”வழக்குகளில் சிக்குண்டு மணியன் இப்பொழுது சிறையில் இருக்கிறார். ஆகையால் தொடர்பு கொள்ள வாய்ப்பில்லை” என சொன்னதும் மிகவும் வருத்தமாக இருந்தது.

1950யில் பிறந்த மணியன், 1995 –யிலேயே உடலும் தளர்ந்துவிட்டது. உள்ளமும் தளர்ந்துவிட்டது. ஆகையால் திருடுவதை விட்டுவிட்டதாகவும், இப்பொழுது தன் மகனின் பராமரிப்பில் இருப்பதாகவும் எழுதியிருப்பார். ஆனால், இன்னமும் புதிய வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறார். திருந்தி வாழ போலீஸ் விடுவதேயில்லை.

கவிஞர் சாம்ராஜ் மணியனுடைய வாழ்வை திரைப்படம் ஆக்குவதற்கான முயற்சிகளில் இருப்பதாக கேள்விப்பட்டேன். மணியனின் வாழ்வில் காதல், சாகசம், சண்டை, பல திருப்பங்கள், நகைச்சுவை என எல்லா சுவையும் உண்டு. ஒருவேளை படமாக்கப்பட்டு வெளிவந்தால், பரவலாக மக்களிடம் சென்றடைவார். முயற்சி வெற்றியடைய வாழ்த்துவோம்.

தமிழில் வெளியான புத்தகம் சரியாக விற்கவில்லை என மணியனுக்கு வருத்தமுண்டு. அருமையான புத்தகம். ஆகையால், தமிழ் வாசகர்கள் பலரும் வாங்கிப் படிக்கவேண்டும். அவருடைய மனக்குறையை தீர்க்கவேண்டும்.

- முகநூலில்... 26/11/2020