> குருத்து: June 2015

June 22, 2015

யோகாவும் ஆர்.எஸ்.எஸ்.யும்!

மோடி அரசின் கோரிக்கையை ஐ.நா. அங்கீகரித்து ஜூன் 21-ஐ சர்வதேச யோகா தினம் என அறிவித்து இருக்கிறது. யோகாவை கல்லாக் கட்டும், கார்ப்பரேட் சாமியார்கள் எல்லாம் பம்பரம் போல சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள். வாழைப்பழத்திற்குள் மருந்தை வைத்து மாடுகளுக்கு தருவார்கள். அதுபோல இந்துத்துவவாதிகள் யோகாவிற்குள் இந்துத்துவ கருத்துக்களை வைத்து தந்துகொண்டிருக்கிறார்கள். இனியும் தருவார்கள்.

வீட்டிற்கு அருகில் உள்ள பார்க்கில் காலையில் இரண்டே இரண்டு ஆர்.எஸ்.எஸ் ஹெட்கேவரின் வாரிசுகள் ஏதோதோ புரியாத சமஸ்கிருத மந்திரங்களை சொல்லி, தரையில் எதையும் விரிக்காமல் மண் தரையிலேயே உருண்டு புரண்டு உடற்பயிற்சி செய்துகொண்டிருப்பார்கள். இன்று யோகா தினத்தை சாக்காக வைத்து 20 பேரை திரட்டியிருந்தார்கள்.

நான் யோகா எதிர்ப்பாளன் எல்லாம் கிடையாது. கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக யோகா வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 5.30 முதல் 6.30 வரை போய்க்கொண்டிருக்கிறேன். ஆஸ்துமா தொந்தரவு இருந்தபடியால், மூச்சுப்பயிற்சிக்காகவும், உடற்பயிற்சிக்காகவும் துவக்கத்தில் போனேன். 1 வருடத்தில் ஹோமியோபதி மருந்தினாலும், யோகாவின் உதவியினாலும், உணவுக் கட்டுப்பாட்டினாலும் ஆஸ்துமாவிலிருந்து விடுதலை பெற்றேன். இருப்பினும், மரபு வழியாக வந்த நோய் என்பதால், அதன் வேர் இன்னும் உடலில் இருப்பதால், தொடர்ந்து யோகாவை தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

யோகா செய்வதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கமுடியும். ஏதேனும் ஒரு நோயில் சிரமப்பட்டுக்கொண்டிப்பவர்கள் யோகாவை தொடரும் பட்சத்தில் அதை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளமுடியும். யோகா நல்லது என நல்லெண்ணத்தில் வருபவர்கள் வெகு சீக்கிரத்தில் நின்றுவிடுவார்கள். நாலுநாள், 10 நாள், 30 நாள், 6 மாதம் என நின்று போனவர்கள் அதிகம். பகுதியில் நான்கு வருடங்களில் பாதிபேரை யோகாவை வைத்தே பழக்கமாகியுள்ளேன்.

திருமணத்தில் ஐயர் ஓதுவது போல யோகா வாத்தியார்கள் அதன் செய்முறையில் புரியாத சமஸ்கிருத மந்திரங்களை சொல்வார்கள். மாணவர்களும் சொல்வார்கள். ஒருமுறை அர்த்தம் கேட்டபொழுது, இதெல்லாம் சொன்னால் ரெம்ப நல்லது என்றார். அர்த்தம் தெரியவில்லை என புரிந்துகொண்டேன். நான் மந்திரங்களை சொல்வதில்லை. அவர்களும் ஏன் சொல்லவில்லை என கேள்வியும் கேட்பதில்லை. இந்த நான்கு வருடங்களில் 7 வாத்தியார்கள் மாறியிருக்கிறார்கள். ஒரு சிலர் வகுப்பு முடிகிற தருவாயில், இந்துத்துவ கருத்துக்களை நைச்சியமாக பேசுவார்கள். நான் அதில் கேள்வி எழுப்புவதின் மூலம் அவர்களை இடைமறித்திருக்கிறேன். இப்பொழுது உள்ள வாத்தியார் கருத்துக்கள் பேசுவதில்லை. தொல்லையும் இல்லை. தொடருகிறேன்.

நான் யோகா சேரும் பொழுது ரூ. 350 இருந்தது. இப்பொழுது ரூ.600 வாங்குகிறார்கள். விசாரித்த பொழுது, பல இடங்களில் யோகாவை வைத்து நிறைய கல்லாக் கட்டுகிறார்கள் என தெரிய வந்தது. உடல் உழைப்பு செய்கிறவர்கள் வருவதில்லை என சொல்ல தேவையில்லை. உடல் உழைப்பிலிருந்து பிரிந்த நடுத்தர வர்க்கம் தான் பெரும்பாலும் யோகாவை நாடுகிறார்கள்.

நடுத்தரவர்க்கத்தில் பலர் தான் மோடி அப்படி, இப்படி என இல்லாத பில்டப் எல்லாம் கொடுத்தார்கள்.  அதனால் தான் மோடி அரசு யோகாவிற்கு ஒரு அமைச்சரவையை உருவாக்கி சுறு சுறுப்பாக வேலை செய்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் என் செல்பேசிக்கு யோகா நல்லது என நாலைந்து குறுஞ்செய்திகளை அரசு அனுப்பி வைத்திருக்கிறது!

ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு ஆள் பிடிக்க அவர்களுக்கு கோயில், கும்பாபிசேகம், கலவரம் என பலவற்றில் இப்பொழுது யோகாவும் சேர்ந்துள்ளது. யோகா நல்லது என நல்லெண்ணத்தில் வருபவர்களை ஆர்.எஸ். எஸ். சிறிது சிறிதாக தன் இந்துத்துவ வெறிக்கருத்துக்களை திணிக்கும். நாம் தாம் கவனமாய் இருக்கவேண்டும்!