> குருத்து: 2015

November 22, 2015

சிவப்பு பலூன் நண்பன்! – மிகச் சிறந்த படம்!



பாரிஸ். பள்ளி செல்லும் வழியில், ஒரு கம்பத்தில் சிக்கித் தவிக்கிறது ஒரு அழகான சிவப்பு பலூன். காப்பாற்றுகிறான்.

பலூனோடு பேருந்தில் ஏற அனுமதி மறுக்கிறார்கள்.  பலூனை கைவிட மனசே இல்லாமல், ஓடியே பள்ளியை அடைகிறான்.   மழையிலிருந்தும், பனியிலிருந்தும் பாதுகாத்து வீடு வந்துசேர்கிறான்.  அம்மாவும் வீட்டில் அனுமதிக்க மறுத்து, பலூனை வெளியே துரத்தி விடுகிறார்.

அந்த நிமிடத்திலிருந்து பலூனுக்கு ’உயிர்’ வந்துவிடுகிறது.  மறுநாள் பள்ளி கிளம்பும் பொழுது பலூனும் பள்ளித் தோழனை போல சேர்ந்து கிளம்புகிறது.  பேருந்தில் பையன் போகும் பொழுது, ஒரு பறவையை போல பின்தொடர்கிறது.  போகிற வழியில் ஒரு சிறுமி நீலவண்ண பலூனோடு செல்கிறாள்.  சிறிது நேரம் இரண்டு பலூன்களும் விளையாடுகிறது. பிறகு பையனோடு கிளம்புகிறது.

பையனோடு வகுப்பறைக்கும் வந்துவிடுகிறது. மாணவர்கள் குதூகலிக்கிறார்கள்.  நம் பள்ளி முதல்வர்கள் எல்லாம் மிகவும் கண்டிப்பானவர்கள் அல்லவா!  அந்த பையனை தனியாக ஒரு அறையில் பூட்டுகிறார்.  பலூன் கோபம் கொண்டு, முதல்வரை துரத்தி துரத்தி தொந்தரவு செய்கிறது. வேறு வழியில்லாமல் பையனை விடுவிக்கிறார்.

மகிழ்ச்சியுடன் இருவரும் வீடு வரும் வழியில், பகுதியில் வாழும் குறும்பு சிறுவர்கள் சிவப்பு பலூனை சிறைபிடிக்க விடாது துரத்துகிறார்கள்.  இறுதியில் பலூனை பிடித்து, உடைத்தும் விடுகிறார்கள்.  மெல்ல மெல்ல மடியும் பொழுது உற்ற நண்பன் இறப்பது போல மிகவும் வருந்துகிறோம்.

இதைக் கேள்விப்பட்டதும், அவனுக்கு ஆறுதல் சொல்ல பாரிஸில் உள்ள எல்லா பலூன்களும் கூட்டமாக பறந்து வந்து அந்த பையனிடம் சேர்கின்றன. குதூகலமடைகின்றான். அவனை அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வானத்தில் உற்சாகமாய் பறக்கின்றன. 
***
1956ம் ஆண்டு.  பிரெஞ்சு மொழி.  35 நிமிடம்.  ஆஸ்கார் வென்றிருக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பார்க்கவேண்டிய படம். யூ டியூப்பில் கிடைக்கிறது.
படத்தை அறிமுகப்படுத்திய எழுத்தாளர் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.


https://www.youtube.com/watch?v=e2Y1tRBOXfA

September 24, 2015

எவரெஸ்ட்

1996. உலகின் பல பகுதிகளிலிருந்து மூன்று குழுக்கள் உலகின் மிக உயர்ந்த (29029 அடி) பனி படர்ந்த சிகரமான எவரெஸ்டை தொட நேபாளம் வந்து சேருகிறார்கள்.

ஒரு குழுவின் வழிகாட்டியான அமெரிக்கர் ராப்பின் துணைவியார் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள். குழந்தை பிறப்பதற்குள் வந்து சேருவதாக விடைபெறுகிறார்.  ஏற்கனவே ஆறு சிகரங்களில் ஏறி, ஏழாவது சிகரத்தில் ஏறவந்திருக்கும் ஜப்பானிய பெண்மணி, தனக்கு கருமேகங்கள் அடங்கிய வானம் தொடர்ந்து கனவில் வருவதாகவும், எவரெஸ்டை தொடுவதின் மூலம் தனது ஆழ்மன ஆசை நிறைவேறும் என சொல்லும் அமெரிக்கர், தான் எவரெஸ்டை தொடுவதின் மூலம் தனது பிள்ளைகள் அடுத்தடுத்து சாதிப்பார்கள் என சொல்லும் ஒரு தபால்காரர் என பலரும் அந்த குழுவில் இருக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட தூரம் ஹெலிகாப்டரில் போய் சேரும் குழுவினர், பிறகு கட்டம் கட்டமாக மெல்ல மெல்ல மேலே மன உறுதியுடன் முன்னேறுகிறார்கள்.  கடுமையான பனி, வயோதிகத்தாலும் பிற உடல் தொந்தரவுகள், ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு என பல்வேறு பிரச்சனையால் சிலர் பின்வாங்குகிறார்கள். உறுதியோடு தொடர்பவர்கள் திட்டமிட்டபடி மே 10 அன்று எவரெஸ்ட் உச்சியை சிலர் மட்டும் தொடர்கிறார்கள்.  நாமே தொட்ட மாதிரி ஒரு உற்சாகம் நம்மை தொற்றிக்கொள்கிறது.

கீழே இறங்கும் பொழுது காலநிலை தலைகீழாக மாற்றமடைகிறது.  கடுமையான புயல் காற்று, மழை என தாக்குகிறது. அதில் சிலர் இறந்து போகிறார்கள். சிலர் போராடி கீழே வந்தடைகிறார்கள்.  நமக்கு ஏற்படுவது மாதிரி நாம் பதட்டமடைகிறோம்.  படம் முடிவடைகிறது.

உண்மை கதை என்பதால், மற்ற மலை ஏறுகிற மற்ற கற்பனை கதைகள் போல விறுவிறுப்பு குறைவாக இருந்தாலும், இமயத்தின் பிரமாண்டம், குவிந்து கிடக்கிற பனி, மனிதர்களின் மனோதிடம் எல்லாம் நம்மையும் கதைக்குள் நம்மையும் ஒரு ஆளாய் உள்ளே இழுத்துகொள்கிறது.

20000 அடிக்கு மேலே சென்றால், மரணப்பாதை என்றே சொல்கிறார்கள்.  உண்மை தான். ஒருமுறை 6000 அடி உயரமுள்ள கொடைக்கானலுக்கு சென்ற பொழுது ஆக்சிஜன் குறைவால் நான் பட்ட கஷ்டம் சொல்லிமாளாது. ஒரு மருத்துவரை சந்தித்து ஒரு ஊசி போட்டபிறகு தான் நிதானத்துக்கு வந்து சேர்ந்தேன். அந்த பயத்தில் சில வருடங்கள் கொடைக்கானல் பக்கம் எட்டி பார்க்காமலிருந்தேன்.  அந்த உணர்விலிருந்து நான் பார்க்கும் பொழுது ஒவ்வொரு 2000 அடி உயரும் பொழுதும் நமக்கு இரத்த அழுத்தம் கூடுகிறது. திரையரங்கிலும் குளிர் அதிகமாய் இருந்ததால், பனியின் தன்மையை அப்படியே உணரமுடிந்தது.


2010 ஆண்டு வரையிலும் எவரெஸ்ட் உச்சியை தொட்டவர்கள் 3142 என தகவல் சொல்கிறார்கள்.    பெண்கள், வயதானவர்கள், ஆக்சிஜன் உதவியில்லாமலே தொட்டுவிட்டு வந்தவர்கள் என பல சாதனைகளும் இருக்கின்றன. எவரெஸ்ட் செல்லும் பல கட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் என்கிறார்கள். நீண்ட பட்டியலைப் பார்த்தால் பகீரென்று இருக்கிறது. 

எவரெஸ்ட் தொட்டவர்களில் நினைவில் நிற்பது உத்திரபிரதேசத்தை சார்ந்த அருணிமா. ரயிலில் சென்ற பொழுது தனது செயினை அறுத்துக்கொண்டு ஓடிய திருடனுடன் போராடிய பொழுது, ரயிலில் இருந்து தள்ளிவிட்டுவிட்டான். அதில் தனது காலை இழந்துவிட்டார். அத்தோடு துவண்டு விடாமல், இரண்டே ஆண்டுகளில் கடுமையாக பயிற்சி செய்து 2013ல் எவரெஸ்டை தொட்டிருக்கிறார். அசாத்தியமான மன வலிமை தான்!


படத்தில் ஒரு இடத்தில் ஒரு அமெரிக்க பயணி எவரெஸ்ட்டை தொட 65000 டாலர் கட்டியுள்ளேன் என்பார். இந்திய பணமதிப்பில் 40 லட்சம்.  இதில் சாமான்யனின் சாத்தியம் என்ன என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது.
படம் பார்த்து உற்சாகம் வந்து நிறைய துட்டு இருந்தாலும், உடனே மலை ஏறிவிடமுடியாது.  முறையாக நேபாள அரசு அனுமதி பெறவேண்டும். காத்திருப்போர் பட்டியல் அதிகம். இதில் நிறுவனங்களின் போட்டி, பொறாமை எல்லாம் உண்டு. படத்திலும் ஆங்காங்கே வெளிப்படும்.
பார்க்கவேண்டிய படம் Everest. பாருங்கள்

August 8, 2015

கணபதியின் தேநீர் இனி கிடைக்காதா ?

நீங்கள் சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியை காலை, மதியம், இரவு என ஏதேனும் ஒருவேளையில் கூட குறுக்கும் நெடுக்குமாக சாலையை கடந்து, சைக்கிளில் தேநீர் கொண்டு செல்லும் கணபதியை காணலாம்! பல தொழிற்சாலைகள், அலுவலகங்களுக்கு சுடச்சுட தேநீர் தருவது தான் கணபதியின் வேலை.

வேலைச்சுமையாலும், நிதிச்சுமையாலும் வாழ்க்கை கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தொழிலாளிகளுக்கு கண நேரமாவது கணபதியின் தேநீர் ஆசுவாசமளிக்கும்.

எங்கள் அலுவலகத்திற்கும் கடந்த ஆறு வருடங்களாக கணபதி தான் தேநீர் தருகிறார்.  மெலிந்த தேகம், ஐந்தே கால் அடி உயரம், நல்ல களையான முகம்.  ஜீன்ஸ் பேண்டை வெட்டி தைத்து முக்கால் காலுக்கு போட்டிருப்பார்.  நானும் பல வருடங்களாக கவனித்து வருகிறேன். கணபதிக்கு வயது ஏறுவதேயில்லை.

எனக்கு பால் என்றால் அலர்ஜி. அதனால் பால் கலந்த தேநீர் சாப்பிடுவதில்லை. ஆனால், கணபதி தரும் தேநீர் குடித்தால் பிரச்சனையேயில்லை. அதில் பால் பெயரளவுக்கு தான் இருக்கும்!   பால் விலை கூடினால் உங்களுக்கு பிரச்சனையே கிடையாதுல்ல! என கிண்டல் செய்வேன். ஒரு புன்னகையுடன் கடந்து போய்விடுவார். ஆனால் அவரது தேநீரில் கலந்திருந்த பாலின் பின்னே ஒரு சோகம் இருந்தது எனக்குத் தெரியாது.

ஒருமுறை வார கணக்கை முடிக்கும் பொழுது, வேறு அலுவலகங்களின் கணக்கு அட்டையை அவர் கையில் வைத்திருந்ததை வாங்கிப் பார்த்தேன். ஒரு நிறுவனத்திற்கு தேநீர் விலை 5.50, ஒரு நிறுவனத்திற்கு ரூ. 5.45 என வெவ்வேறு விலைகளில் இருந்தது.  கணபதி கொண்டு வருவது ஒரே தரமான தேநீர் தான். விலை மட்டும் எப்படி வேறுபடுகிறது என குழம்பி போனேன்.
அதற்கு கணபதி ” எந்த முதலாளி சார் நல்ல விலை கொடுத்து, தங்கள் தொழிலாளிக்கு நல்ல தேநீர் வாங்கித் தர தயாரா இருக்காங்க. தேநீர் எந்த தரத்துல இருந்தாலும் விலையை மட்டும் குறைக்கணும்னு தரை ரேட்டுக்கு இறங்கி பேரம் பேசுறாங்க. ஒப்புக்கு வாங்கி கொடுக்கிறாங்க சார்! பால், டீத்தூள், சர்க்கரை எல்லாம் அப்பப்ப விலை கூடிட்டே இருக்கு.  நானும் முடிஞ்ச வரைக்கும் நல்ல தேநீரை கொடுக்க அல்லாடுறேன் சார்’ என்றார்.
Cycle tea 2கணபதியை பற்றி பேச்சு வரும்பொழுதெல்லாம் பல ஊழியர்கள், தொழிலாளிகள், “எனக்கு அவரை 8 வருசமா தெரியும், 12 வருசமா தெரியும்” என்பார்கள். ஒருநாள் கணபதியை நிறுத்தி, எத்தனை வருசமா தேநீர் விற்கிறீர்கள் என்றேன். “டவுசர் போட்ட காலத்திலிருந்தே விற்கிறேன். 17 வருசமா ஓடிட்டு இருக்கேன்!” என்றார்.  ’இப்ப என்ன வயசு’ என்றேன். ’இருபத்தொன்பது’ என்றார்.

ஞாயிறன்று வேலை இருந்தால் கூட கணபதி தேநீர் தருவார். ஏழுநாளும் ஓய்வில்லாத வேலை! அப்பொழுதிலிருந்து கணபதியின் கடும் உழைப்பில் உருவாகும் தேநீரில் அவரது செந்நீரும் கலந்திருப்பதாக தோன்றும்.
அப்பப்ப எங்க எம்.டியிடம் எங்கேயாவது ஒரு சின்ன இடம் இருந்தா சொல்லுங்க சார்! என சொல்லிக்கொண்டிருந்தார். ’கணபதி நிறைய பணம் சேர்த்திட்டீங்க போல! இடமெல்லாம் வாங்கி போடுறீங்க!’ என்றேன். ”எத்தனை வருசம் ராவும் பகலும் ஓடிட்டே இருக்கிறது? ஒரு நல்ல கூட்டம் கூடுற இடத்தில தேநீர் கடை ஒன்னு சொந்தமா போடணும். கையில உள்ள பணம் பத்தல! பல வருசம் உழைச்சு, சிறுக சிறுக சேர்த்தது! கையில வைச்சிருந்தா, ஏதாவது செலவு வந்துருது! ஒரு சின்ன இடத்தை வாங்கி போட்டுட்டு, பின்னாடி வித்து கடை போடலாம்னு ஒரு யோசனை” என்றார். ”விரைவில் சொந்த கடை போட வாழ்த்துக்கள்” என்றேன். முகம் மலர ’நன்றி’ என்றார்.

இன்னும் சில தொழிற்சாலைகள் கூடுதலாக கிடைக்க, வேகமாக கொண்டு செல்ல, சைக்கிளிலிருந்து டிவிஎஸ் 50க்கு மாறினார். கணபதிக்கு திருமணம் முடிந்ததை கேள்விப்பட்டு, ’ஏன் சொல்லல கணபதி? என்றேன்.  கொஞ்சம் தடுமாறி, சமாளித்தார். அவருக்கு தெரிஞ்சவுங்கள கூப்புட்டா முழு அம்பத்தூரும் கல்யாணத்துக்கு போக வேண்டியிருக்கும்.

பிறகு நான் அந்த அலுவலகத்தில் வேலையிலிருந்து நின்றுவிட்டேன். 9 மாதம் கழித்து அங்கு சென்ற பொழுது, வேறு ஒருவர் தேநீர் கொண்டு வந்து தந்தார். ” என்ன ஆச்சு? கணபதியை மாத்திட்டீங்களா? என்றேன்.
“இரண்டு மாதங்களுக்கு முன்பு மதியம் 3 மணியளவில் சாலையை கடக்கும் பொழுது, ஒரு வேன் மோதி, தலையில் அடிப்பட்டு ஸ்பாட்டிலேயே இறந்துவிட்டார், கணபதி அண்ணன்” என்றார் தம்பி. அதிர்ச்சியில் உறைந்து போனேன். கணபதிக்கு 6 மாத கைக்குழந்தை ஒன்று அம்மாவுடன் இனி ஆதரவின்றி காலம் தள்ள வேண்டும்.

இறந்த நாள் கூட ஒரு ஞாயிற்றுக்கிழமை தானாம்! உடல்நலம், உறவினர் திருமணம், சுற்றுலா, சொந்த ஊர் பயணமென்று நாம் அடிக்கடி விடுமுறை எடுக்கிறோம். கணபதியோ அதை கனவிலும் நினைத்து பார்க்க முடியாது. தேநீர் கொண்டு வரத் தவறினால் அவரையே தவிர்த்து விடுவார்கள். என்றாலும் அவர் விடுமுறையின்றி தேநீர் தருவதை சலிப்புடன் செய்து பார்த்ததில்லை.
tea boyபல அலுவலக ஊழியர்கள், தொழிலாளிகள் தேநீரைக் குடித்து விட்டு அவருடன் பேசுவார்கள். தான் தேநீர் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் இன்று குடிக்க முடியாதே என்று பொறுப்புணர்வோடும் அன்போடும் செய்தபடியால்தான் கணபதி அப்படி கடுமுழைப்பு செய்து வாழ முடிந்தது.

ஆனாலும் கணபதியை நினைத்துப் பார்க்காமல் அம்பத்தூர் தனது வழமையான வேலைகளுக்கு திரும்பி விட்டது. கணபதியை நினைத்துப் பார்க்க அவரொன்றும் அப்துல் கலாமில்லை.

“பிறப்பு சம்பவமாக இருக்கலாம், இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்று உலகமெங்கும் பல்வேறு பன்ஞ் முழக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நைந்து போன வாக்கியம்தான் அப்துல் கலாம் நினைவஞ்சலி பேனரில் இடம்பெற்ற இந்த சம்பவம், சரித்திர வகையறா.

அப்துல் கலாமுக்கு அம்பத்தூர் அஞ்சலி செலுத்துவதை ஆடம்பரத்துடன் செய்து முடித்தது. விடுமுறை என்ன, மெழுகுவர்த்தி என்ன, படங்கள் என்ன, சுவரொட்டிகள் என்ன என்று அமர்க்களப்படுத்தி விட்டார்கள். இதில் என்ன கொடுமை என்றால் பலருக்கு அப்துல் கலாம் யார் என்றே தெரியாது. ஏதோ மற்றவங்க மதிக்கிறாங்க நாமும் மதிச்சு வைப்போமே என்ற போலச் செய்தல்தான்.

ஆனால் தினசரி வாழ்க்கையில் கணபதியைப் போன்றோர் வெறும் சம்பவமாகத்தான் மறைந்து போகிறார்கள். இவர்களின்றி இந்த உலகத்தின் இயக்கம் இல்லை. சாதாரண மனிதர்களின், தொழிலாளிகளின் காலம் ஒன்று வரும் போது கணபதிகள் ஹீரோக்களாக போற்றப்படுவார்கள். அந்த வரலாற்று திருப்பத்திற்காகவேணும் கணபதியை நான் நினைத்துக் கொள்கிறேன்.

கடும் உழைப்பாளியான கணபதிக்கு எனது அஞ்சலிகள்!

வினவு தளத்தில் 06/08/2015 அன்று வெளிவந்தது

July 20, 2015

ஆட்சியில் பங்கும் காங்கிரசு தொண்டனும்!

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இயக்கப்பணி தொடர்பாக வீடு வீடாக, ரயில்களில், பேருந்துகளில் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்திருக்கிறேன். மக்களில் நேற்று துவங்கிய கட்சிக்கு கூட தொண்டர்களை சந்தித்திருக்கிறேன். ஆனா பாருங்க இந்த காங்கிரசு தொண்டரை மட்டும் பார்த்ததேயில்லை. சக தோழர்களிடமும் அவ்வப்பொழுது கேட்பதுண்டு. அவர்களும் பார்த்ததேயில்லை என்பார்கள்!

என் வாழ்வில் இரண்டு காங்கிரசுகாரர்கள் கடந்து போயிருக்கிறார்கள். ஒருவர் என் அப்பா. பஞ்சாலை தொழிலாளியான அவர், தன் வாழ்வில் இறுதி ஆண்டுகளில் குடியில் காலம் கழித்தார். அதனால், அவ்வப்பொழுது வேலைக்கு போகமாட்டார். அங்கிருந்த காங்கிரசின் தொழிற்சங்கமான ஐஎன்டியூசி தான் அவ்வப்பொழுது வேலை போகாமல் காப்பாற்றியது. அதற்கு நன்றி பாராட்டும் விதமாக, வீட்டில் ஒரு இந்திரா படத்தை மாட்டி வைத்திருந்தார். மற்றபடி, காங்கிரசின் நடவடிக்கைகளை எப்பொழுதும், எவ்வளவு விமர்சனம் செய்தாலும், எதிர்த்து பேசமாட்டார். மெளனமாக இருப்பார்.

இன்னொரு காங்கிரசுகாரர். 1991ல் அப்பொழுதெல்லாம் ரெம்ப சின்ன பையன் நான். வீட்டு திண்ணையில் என் அப்பாவுடன் தூங்கிகொண்டிருந்தேன். திடீரென பெருங்குரலெடுத்து அழும் சத்தம் கேட்டு எழுந்தேன். பக்கத்து வீட்டில் குடியிருந்த 55 வயது பெரியவர் துக்கம் தாளாமல் விடிய விடிய அழுதார். என்னவென்று கேட்ட பொழுது ராஜீவ் கொல்லப்பட்ட விசயத்தை சொன்னார்கள்.

என் வாழ்வில் நான் சந்தித்த இந்த இரண்டு காங்கிரசுகாரர்களும் செத்துப்போய் 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. நிலைமை இப்படி இருக்கும் பொழுது, E.V.K.S இளங்கோவன் எந்த தைரியத்தில் ஆட்சியில் பங்கு கேட்கிறார்? சிரிப்பு சிரிப்பாக தான் வருகிறது! இவரே பங்கு கேட்கும் பொழுது, டாக்டர் அன்புமணிக்கு முதலமைச்சர் ஆசை வருவது எல்லாம் இயல்புதான் போல!
சாத்தியமில்லை தான். இருந்தாலும் சொல்லி வைக்கிறேன். உங்களில் யாராவது காங்கிரசு தொண்டரை பார்த்தால், என்னிடம் தெரிவியுங்கள். வாழ்வில் ஒருமுறையாவது நான் பார்த்துவிடவேண்டும் என ஆவலோடு இருக்கிறேன்.

June 22, 2015

யோகாவும் ஆர்.எஸ்.எஸ்.யும்!

மோடி அரசின் கோரிக்கையை ஐ.நா. அங்கீகரித்து ஜூன் 21-ஐ சர்வதேச யோகா தினம் என அறிவித்து இருக்கிறது. யோகாவை கல்லாக் கட்டும், கார்ப்பரேட் சாமியார்கள் எல்லாம் பம்பரம் போல சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள். வாழைப்பழத்திற்குள் மருந்தை வைத்து மாடுகளுக்கு தருவார்கள். அதுபோல இந்துத்துவவாதிகள் யோகாவிற்குள் இந்துத்துவ கருத்துக்களை வைத்து தந்துகொண்டிருக்கிறார்கள். இனியும் தருவார்கள்.

வீட்டிற்கு அருகில் உள்ள பார்க்கில் காலையில் இரண்டே இரண்டு ஆர்.எஸ்.எஸ் ஹெட்கேவரின் வாரிசுகள் ஏதோதோ புரியாத சமஸ்கிருத மந்திரங்களை சொல்லி, தரையில் எதையும் விரிக்காமல் மண் தரையிலேயே உருண்டு புரண்டு உடற்பயிற்சி செய்துகொண்டிருப்பார்கள். இன்று யோகா தினத்தை சாக்காக வைத்து 20 பேரை திரட்டியிருந்தார்கள்.

நான் யோகா எதிர்ப்பாளன் எல்லாம் கிடையாது. கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக யோகா வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 5.30 முதல் 6.30 வரை போய்க்கொண்டிருக்கிறேன். ஆஸ்துமா தொந்தரவு இருந்தபடியால், மூச்சுப்பயிற்சிக்காகவும், உடற்பயிற்சிக்காகவும் துவக்கத்தில் போனேன். 1 வருடத்தில் ஹோமியோபதி மருந்தினாலும், யோகாவின் உதவியினாலும், உணவுக் கட்டுப்பாட்டினாலும் ஆஸ்துமாவிலிருந்து விடுதலை பெற்றேன். இருப்பினும், மரபு வழியாக வந்த நோய் என்பதால், அதன் வேர் இன்னும் உடலில் இருப்பதால், தொடர்ந்து யோகாவை தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

யோகா செய்வதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கமுடியும். ஏதேனும் ஒரு நோயில் சிரமப்பட்டுக்கொண்டிப்பவர்கள் யோகாவை தொடரும் பட்சத்தில் அதை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளமுடியும். யோகா நல்லது என நல்லெண்ணத்தில் வருபவர்கள் வெகு சீக்கிரத்தில் நின்றுவிடுவார்கள். நாலுநாள், 10 நாள், 30 நாள், 6 மாதம் என நின்று போனவர்கள் அதிகம். பகுதியில் நான்கு வருடங்களில் பாதிபேரை யோகாவை வைத்தே பழக்கமாகியுள்ளேன்.

திருமணத்தில் ஐயர் ஓதுவது போல யோகா வாத்தியார்கள் அதன் செய்முறையில் புரியாத சமஸ்கிருத மந்திரங்களை சொல்வார்கள். மாணவர்களும் சொல்வார்கள். ஒருமுறை அர்த்தம் கேட்டபொழுது, இதெல்லாம் சொன்னால் ரெம்ப நல்லது என்றார். அர்த்தம் தெரியவில்லை என புரிந்துகொண்டேன். நான் மந்திரங்களை சொல்வதில்லை. அவர்களும் ஏன் சொல்லவில்லை என கேள்வியும் கேட்பதில்லை. இந்த நான்கு வருடங்களில் 7 வாத்தியார்கள் மாறியிருக்கிறார்கள். ஒரு சிலர் வகுப்பு முடிகிற தருவாயில், இந்துத்துவ கருத்துக்களை நைச்சியமாக பேசுவார்கள். நான் அதில் கேள்வி எழுப்புவதின் மூலம் அவர்களை இடைமறித்திருக்கிறேன். இப்பொழுது உள்ள வாத்தியார் கருத்துக்கள் பேசுவதில்லை. தொல்லையும் இல்லை. தொடருகிறேன்.

நான் யோகா சேரும் பொழுது ரூ. 350 இருந்தது. இப்பொழுது ரூ.600 வாங்குகிறார்கள். விசாரித்த பொழுது, பல இடங்களில் யோகாவை வைத்து நிறைய கல்லாக் கட்டுகிறார்கள் என தெரிய வந்தது. உடல் உழைப்பு செய்கிறவர்கள் வருவதில்லை என சொல்ல தேவையில்லை. உடல் உழைப்பிலிருந்து பிரிந்த நடுத்தர வர்க்கம் தான் பெரும்பாலும் யோகாவை நாடுகிறார்கள்.

நடுத்தரவர்க்கத்தில் பலர் தான் மோடி அப்படி, இப்படி என இல்லாத பில்டப் எல்லாம் கொடுத்தார்கள்.  அதனால் தான் மோடி அரசு யோகாவிற்கு ஒரு அமைச்சரவையை உருவாக்கி சுறு சுறுப்பாக வேலை செய்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் என் செல்பேசிக்கு யோகா நல்லது என நாலைந்து குறுஞ்செய்திகளை அரசு அனுப்பி வைத்திருக்கிறது!

ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு ஆள் பிடிக்க அவர்களுக்கு கோயில், கும்பாபிசேகம், கலவரம் என பலவற்றில் இப்பொழுது யோகாவும் சேர்ந்துள்ளது. யோகா நல்லது என நல்லெண்ணத்தில் வருபவர்களை ஆர்.எஸ். எஸ். சிறிது சிறிதாக தன் இந்துத்துவ வெறிக்கருத்துக்களை திணிக்கும். நாம் தாம் கவனமாய் இருக்கவேண்டும்!

April 15, 2015

மாணவர்களுடன் ஒரு பயணம்!




இரவு பதினொருமணி. மதுரை இரயில் நிலையம். எல்லா ரயில்களும் வந்து போய், பரப்பரப்பு எல்லாம் அடங்கி ஓய்வெடுக்க ஆரம்பித்திருந்தது.  அந்த அமைதியை கலைத்து, ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வர, ஆங்காங்கே இருட்டில் அமர்ந்திருந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக முதல் நடைமேடையில் ஒன்றுகூட ஆரம்பித்தார்கள்.


பண்டிகைநாள் என்பதால் பேருந்துக்காக  செய்த எல்லா முயற்சிகளும் வீணாய் போக, வீட்டுக்கு போய்விடலாம் என நினைத்தேன். முதலாளியின் கடுகடு முகம் நினைவுக்கு வந்து சென்னைக்கு செல்லும் கடைசி வண்டியான அனந்தபுரியை பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில், வேர்க்க விறுவிறுக்க நடைமேடையை வந்தடைந்தேன்.


சில விநாடிகளுக்குள் அந்த நீண்ட ரயில் அமைதியை கலைத்து, பெரிய சத்தத்தோடு வந்து நின்றது. முன்பதிவு செய்யப்படாத (Unreserve) காம்பார்ட்மெண்டிற்கு சென்று பார்த்தால், திக்கென்றிருந்தது. வாசல்வரை நின்று கொண்டிருந்தார்கள். இது கடைசிபெட்டி. முன்னால் இருக்கும் இதேபோல இன்னொரு பெட்டிக்கு போகலாம் தான். ஆனால், அதற்கு நேரம் இல்லை. ஒருவேளை இதைவிட அதிகமாய் கூட்டம் இருக்ககூடிய அபாயமும் உண்டு. ரிஸ்க் வேண்டாம் என ஏறிக்கொண்டேன். 200 பேர்வரை அந்த காம்பார்ட்மெண்டில் நிச்சயம் இருந்தார்கள். புதிதாய் ஏறியவர்கள் உட்கார இடம் தேடினார்கள். உள்ளே ஒரே கூச்சலும் குழப்பமாய் இருந்தது.

அடுத்து வந்த நிறுத்தத்தில் இறங்கி உள்ளே நோட்டம் பார்த்த பொழுது, உள்ளே சிலர் படுத்து நன்றாக தூங்கி கொண்டு வந்தனர். 4 பேர் உட்கார வேண்டிய இடத்தில் இருவர் கால் நீட்டி உட்கார்ந்திருந்தனர். என்ன செய்யலாம்? ஒன்றும் செய்யமுடியாது.  வாயிலோரம் நின்றுகொண்டு கையில் இருந்த நாவலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.

திண்டுக்கல்லை அடையும் பொழுது, நடுநிசியாகிவிட்டது. அங்கும் சிலர் ஏறினர். அதில், நான்கு கல்லூரி மாணவர்களும் இருந்தார்கள். ஏறும்பொழுது, கலகலவென பேசிக்கொண்டே ஏறினார்கள். அந்த காம்பார்ட்மெண்டின் நிலைபுரிய அவர்களுக்கு  பத்து நிமிடங்கள் கூட ஆகவில்லை. அவர்களுக்குள் பேசிக்கொண்டு, விறுவிறுவென மக்களை விலக்கி, காம்பார்ட்மெண்டிற்குள் உள்ளே நுழைந்து, ஒரு மாணவன் கட்டளைகள் தர, மற்றவர்கள் அமுல்படுத்த என பரபரவென செயல்பட்டார்கள்.

தொந்தியும் தொப்பையுமாய் குறட்டைவிட்டு படுத்து தூங்கிக்கொண்டு இருந்தவர்களை எழுப்பி, அன்பாய் கேட்டுக்கொண்டு உட்கார வைத்தனர். சத்தம் போட்டவர்களை சத்தத்தால் அடக்கினார்கள். நின்றுகொண்டிருந்த பெரும்பான்மை மக்களின் ஆதரவு இருந்ததால், மாணவர்கள் சொல்வதை கேட்பதை தவிர வேறு வழியில்லை.


இடம் ஒதுக்கி தந்ததில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் முன்னுரிமை தந்தார்கள். அரை மணி நேரம் ஒழுங்குபடுத்தியதில் சிரமப்பட்டு நின்றுக்கொண்டிருந்த  சகலருக்கும் உட்கார இடம் கிடைத்துவிட்டது.  இடம் பறிபோனவர்கள் புலம்பியதோடு அந்த மாணவர்களை திட்டியும் தீர்த்தார்கள். இடம் கிடைத்தவர்களோ மாணவர்களின் செயல்பாடுகளை வியந்து பேச ஆரம்பித்தார்கள். மாணவர்கள் தங்களுக்கு வாசலோரம் கிடைத்த கொஞ்சூண்டு இடத்தில் அமர்ந்து காலாட்டிக்கொண்டே ஜாலியாக பேச ஆரம்பித்துவிட்டனர். அவர்களோடு சேர்ந்து மக்களை ஒழுங்குப்படுத்தியதில் எனக்கும் கூட ஒரு இடம் கிடைத்தது.  அங்கு உட்கார மனசில்லாமல் நானும் அந்த மாணவர்களோடு வாசலை ஒட்டி அமர்ந்துகொண்டேன்.

இடையில் ஒரு நிறுத்தத்தில் தொழிலாளி பீடிக்குடித்தார் என இருப்பதை பிடுங்க, ரயில்வே போலீசு முயற்சி செய்ய, பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள் பைசா தராமல், பேசியே தொழிலாளியை மீட்டு வந்தார்கள்.

அடுத்து ஒரு மணி நேரத்தில், வந்த நிறுத்தத்தில் மக்கள் சிலர் ஏற வந்த பொழுது, "இவ்வளவு பேருக்கு இடம் இல்லை. வண்டி நீளம் என்பதால், நடப்பதற்கு சிரமப்படும் வயதானவர்கள் மட்டும் ஏறிக்கொள்ளுங்கள். இந்த ஸ்டேசனில் நிறைய நேரம் வண்டி நிற்கும். ஆகையால், மற்றவர்கள் முன்பெட்டிக்கு சென்றுவிடுங்கள்" என அறிவுறுத்தினார்கள். அவர்களின் பேச்சை மறுக்காமல், நிலைமையை புரிந்து கொண்டு, மீதிபேர் முன்பெட்டிக்கு நகர்ந்தார்கள். ஏறிய சிலருக்கும், பொறுப்பாய் இடம் தேடி, அவர்களையும் அமர வைத்தார்கள். தன்னுள்ளே நடக்கும் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்து, புன்னகைத்தப்படி அந்த ரயில் இருட்டைக் கிழித்துக்கொண்டு வேகமாக போய்க்கொண்டிருந்தது.


இதற்கிடையில், சமீபத்தில் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்த வயதான அம்மா நடக்கும் வழியில் அமர்ந்திருந்ததால், போகிற, வருகிறவர்களின் செருப்பு கால் மிதிபட்டு வலியால் அழுததைப்  பார்த்த மாணவர்கள், அந்தம்மாவை பாதையை விட்டு விலகி அமர வைக்க முயற்சி செய்தார்கள். ம்ஹூம். இடம் இல்லை. எல்லோருக்கும் கேட்கிற மாதிரி, 'இனி இந்த இடத்தை கடக்கிறவர்கள் யாரும் செருப்பணிந்து செல்லக்கூடாது' என சத்தமாக அறிவித்தார்கள். அங்கேயே இருபது நிமிடங்கள் வரை இருந்து, மக்கள் அமுல்படுத்துகிறார்களா என உறுதிப்படுத்தினார்கள். அருகில் இருந்தவர்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு,  திரும்பவும் தங்கள் இடத்திற்கு வந்து, விட்டதிலிருந்து பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

சென்னைக்கான தூரம் குறைந்ததால், பயணிகள் ஏறுவது நின்று போனது. சிலர் இறங்கி கொண்டும் இருந்தார்கள்.    

‘பிறவித் தலைவர்கள்’ அவர்கள் என் மனதைக் கவர்ந்து கொண்டார்கள். பேச்சுக் கொடுத்ததில், எல்லோரும் இரண்டாமாண்டு கல்லூரி படித்துக் கொண்டிருப்பதாக சொன்னார்கள்.  ’எப்படி இந்த யோசனை?’ என கேட்டதற்கு, ”எல்லோரும் நம்ம சனங்க. இதுதான் சரின்னு எடுத்துச் சொன்னா கேட்டுக்க போறாங்க!” என்றனர்.

மாணவர்கள் என்றால் பொது மக்களுக்கு இடையூறு செய்வார்கள், பெண்களை கேலி செய்வார்கள், பொறுக்கிகள், குடும்ப நிலையை உணராதவர்கள் என்பதெல்லாம் பொதுப்புத்தியில் உறைந்து போன விசயங்கள்.

அந்த உறைந்து போன கருத்துக்கு இந்த அனுபவம் ஒரு அழகிய கவிதை அடி.

- குருத்து

March 2, 2015

டாஸ்மாக் ஒழிய அழிவிடைதாங்கி மக்கள் வழியை பின்பற்றுவோம்!




தமிழகத்தில் எல்லா ஆறுகளும் வற்றிக்கொண்டு இருக்க டாஸ்மாக் ஆறு மட்டும் வற்றாத ஜீவநதியை போல ஓடிக்கொண்டே இருக்கிறது!  பெரியவர் முதல் மாணவர் வரை போதையில் மிதக்கிறார்கள்.  சாலையில், சாக்கடையில் புரள்கிறார்கள்.  மெல்ல மெல்ல தனது ஆளுமையை இழக்கிறார்கள். நோயில் சிக்கி உயிர் துறக்கிறார்கள். குடும்பங்கள் சீரழிகின்றன. யார் குடி கெட்டால் என்ன? எனக்கு லாபம் வந்தால் போதும் என ஒரு கேடு கெட்ட முதலாளியை போல அரசு சிந்திக்கிறது.  ஒவ்வொர் ஆண்டும் கூச்சமே இல்லாமல் ஆயிரக்கணக்கான கோடிகளில் லாபம் என பெருமை பேசுகிறது.


கடந்த 20 ஆண்டுகளாக தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் ஏகாதிபத்தியங்களின் நெருக்கடி, ஆளும் கட்சிகளின் அடிவருடித்தனம் காரணமாக வெறித்தனமாக அமுல்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். விளைவாக, விவசாய நாடான இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்குள் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இப்படி  வாழ்விழந்த மக்கள் நாடு முழுவதும் தன்னெழுச்சியாக போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.  ஒருபுறம் போராடுகிற மக்களை ஒடுக்க அரசு காவல்துறையை நவீனப்படுத்தியும், பலப்படுத்தியும் வருகிறது. சீனாவில் பிரித்தானிய அரசு அபினியை இறக்குமதி செய்து போதையில் தள்ளியதைபோல மறுபுறம் மக்களை போதையில் தள்ளுகிறார்கள்.
 
அதிமுக, திமுக தவிர பெரும்பான்மையான கட்சிகள் மதுவிலக்கை ஆதரிக்கிறார்கள்.  சிலர் காலில் விழுகிறார்கள். உண்ணாவிரதமிருக்கின்றனர். வைகோ மாரத்தான் போட்டி நடத்துகிறார். லட்சகணக்கில் அணிகளை வைத்திருப்பதாக சொல்லிக்கொள்கிற  கட்சிகள்கூட அடையாள போராட்டங்களை நடத்துகிறார்கள். இந்த கட்சிகளில் உள்ளவர்கள் தான் டாஸ்மாக் பார்களை நடத்தி கல்லாவும் கட்டுகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அழிவிடைத்தாங்கி கிராமத்தில் பள்ளிக்கருகே டாஸ்மாக் கடை திறந்தார்கள். அன்று தொடங்கி பெண்பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அழிவிடைத்தாங்கி மட்டுமல்ல, சுற்றியிருந்த ஆறு கிராமங்களும் மோசமாக பாதிக்கப்பட்டன.  கடந்த இரண்டு ஆண்டுகளில், கடையை அகற்ற எல்லாவித அறப்போராட்டங்களையும் செய்தார்கள். மூன்றுமுறை முற்றுகையிட்டார்கள்.  அரசு கஜானவை நிரப்ப என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற சாணக்கியவழி வந்தவர்கள்தானே ஆள்கிறார்கள்.  அசைந்துகொடுக்கவில்லை.

எல்லா வழிகளும் அடைபட்ட நிலையில், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சார்ந்த தோழர்கள் ஏழு கிராமத்திலும் பிரச்சாரம் செய்தார்கள். மீண்டும் முற்றுகையிட மக்களோடு பேசி நாளும் குறித்தார்கள்.  ஏழு கிராமங்களிலிருந்தும் குடும்பம் குடும்பமாய் பேரணியாய் திரண்டு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. வழக்கம் போல கத்தி கலைந்துவிடுவார்கள்  என காவல்துறை வேடிக்கைப் பார்த்தனர்.  தோழர்கள் மக்களைப் பார்த்துஇப்போது என்ன செய்வது? வழக்கம் போல கலைந்து செல்வதா? டாஸ்மாக் கடையை அழிக்கப்போகிறோமா?” என்றனர். பேசிக்கொண்டு இருக்கும் போதே ஒருவர் கடைக்குள்ளே போய் ஒரு கேசை தூக்கிப் போட்டு உடைக்க, அடுத்த நொடியில், மொத்த மக்களும் சாராயக்கடைக்குள் புகுந்து உடைக்க ஆரம்பிக்க, சிறுவர்களோ கால்களில் பாட்டில்கள் குத்தி ரத்தம் வந்தாலும் கடைக்குள் புகுந்து துவம்சம் செய்தனர்.

தோழர்களை மட்டும் கைது செய்ய முயன்ற போலீசை, மொத்த மக்களும் ”எங்களையும் கைது செய்! அல்லது அவர்களை விடுதலை செய்” என சொல்ல,  பணிந்த காவல்துறை தோழர்களை விடுதலை செய்தது.

மக்கள் கலைந்து சென்ற நேரம் பார்த்து, காவல்துறை தோழர்களையும், ஆதரவாய் பேசிய ஒரு அம்மாவையும் கைது செய்து, 14 கி.மீ தூரமுள்ள வேறு ஒரு காவல்நிலையம் கொண்டு சென்று 11 பிரிவுகளில் பொய் வழக்கு போட்டு, சிறையிலடைத்தனர்.

மக்கள் ஆதரவோடு தோழர்கள் விரைவில் வெளியே வந்துவிடுவார்கள். ”அழிவிடைதாங்கி மக்களைப்போல, நாங்களும் தயாராக இருக்கிறோம். எங்கள் பகுதிக்கு வாருங்கள் என தொலைபேசியில் மக்கள் பு.மா.இ.முவை உரிமையுடன் அழைக்கிறார்கள். சீனமக்கள் அபினி யுத்தத்தில் வெற்றி பெற்றதுபோல, நாமும் வெற்றி பெறுவோம்!