> குருத்து: February 2010

February 19, 2010

காட்டு வேட்டை எதிர்ப்பியக்கம் - மக்களிடைய பிரச்சாரமும், இன்று பொதுக்கூட்டமும்!


இந்திய அரசு தன்னுடைய சொந்த நாட்டு மக்கள் மீது ஒரு உள்நாட்டு போரைத் தொடுத்திருக்கிறது.

இந்திய தரகு முதலாளிகளுக்கும், தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கும் விசுவாசுவாய் நடந்து வரும் இந்திய அரசு, தன் சொந்த பழங்குடி மக்கள் மீது ஒரு பச்சை வேட்டையை துவங்கி பல மாதங்களாகிவிட்டன.

சுதந்திரம் பெற்றதாக சொல்லப்படும் 60 ஆண்டுகளில் அந்த பழங்குடி மக்களுக்கு அடிப்படை உரிமைகள்... கல்வி, மருத்துவம் என எதுவும் சென்றடையவில்லை. இன்று அவர்கள் வசிக்கும் நிலத்தில் கனிம வளங்கள் கொட்டி கிடக்கிறது என்பதற்காக பழங்குடி மக்களை அங்கிருந்து துரத்துகிறார்கள்.

ஓட்டு கட்சிகள் கட்சி வேறுபாடில்லாமல் ஒத்துழைக்க, ஊடகங்களும் அரசின் ஊது குழலாய் மாற... சத்தமில்லாமல் பழங்குடி மக்களை அகற்றி கொண்டே இருக்கிறார்கள். முகாம்களில் அடைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இன்றைக்கு தன்னிடமுள்ள வில்லையும், அம்பையும் கொண்டு அரசுக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஒரே ஒரே ஆதரவாய் களத்தில் நிற்பவர்கள் மாவோயிஸ்டுகளும், இதர நக்சல்பாரி கட்சிகளும் தான்.

போராடும் மக்களை மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தி... ஈழத்தில் நடந்தது போல... இனப்படுகொலை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் பரந்துபட்ட அளவில் போராட்டங்கள் எழுந்திருக்க வேண்டும். எழவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக போராட்டங்கள் நடக்கின்றன. இந்திய அரசுக்கு இந்த அமைதியான நிலை தான் வேண்டும்.

இந்த 'அமைதி நிலையை' தமிழக்கத்தில் உடைக்க மக்கள் கலை இலக்கியமும், அதன் தோழமை அமைப்புகளும் முன்கை எடுத்து தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கத்தை கடந்த மாதத்திலிருந்து துவங்கின.

காட்டு வேட்டையை அம்பலப்படுத்திய புதிய ஜனநாயகம் ஜனவரி, பிப்ரவரி இதழ்கள், துண்டறிக்கைகள், எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய 'இந்தியாவின் இதயத்தின் மீதான போர்" எல்லாவற்றையும் மக்களிடத்தில் கொண்டு போன பொழுது... துவக்கத்தில் என் மனதில் ஒரு தயக்கம் இருந்தது. மத்திய இந்தியாவில் பழங்குடி மக்கள் மீதான தாக்குதலை தமிழக மக்கள் எப்படி எடுத்து கொள்வார்கள்? எப்படிப்பட்ட ஆதரவு இருக்கும்? என்ற கேள்வி இருந்தது.

மெட்ரோ ரயில்களில், பேருந்துகளில், வீடு வீடாக பிரச்சாரம் துவங்கியதும் மக்களிடம் கிடைத்த ஆதரவு இருக்கிறதே! வாய்ப்பே இல்லை. பெரியவர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என சகலரிடத்திலும் அப்படி ஒரு ஆதரவு. புத்தகங்கள் விறு விறு விற்பனையாயின. தன்னால் இயன்ற அளவு நன்கொடை தந்தார்கள். இது நாள் வரைக்கும் மற்ற இயக்கங்களுக்கு கிடைத்த ஆதரவை விட... அருமையான ஆதரவு கிடைத்தது.

"மலையையே வித்திட்டாங்களா! அடப்பாவிகளா!" என வாய்விட்டு வியந்தார்கள்.

"உங்கள் பணி யாரும் செய்யாத சிறப்பான பணி. தொடர்ந்து செய்யுங்கள்" என பாராட்டினார்கள்.

மக்களியிடையே நடந்த பிரச்சாரங்களில் அரசுக்கு ஆதரவாக பேசிய யாராவது ஒருவரையும்...பொதுமக்களே பேசி... வாய் மூட வைத்தார்கள்.

இப்படி பொதுப்பிரச்சனைகளுக்கு போராடுகிற அமைப்புகளில் இணைய பலரும் தானாய் முன்வந்து தன் செல்பேசி எண்ணை தந்தார்கள். முகவரி தந்தார்கள். இன்று நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு நிச்சயம் வருகை தருவதாக சொன்னார்கள்.

மக்கள் கலை இலக்கிய கழகமும் அதன் தோழமை அமைப்புகளும் போராட்டத்தை துவக்கி வைத்திருக்கின்றன. இனி மக்கள் போராட்டங்கள் அலை அலையாய் எழும் பொழுது தான் இந்த காட்டு வேட்டையை நிறுத்த முடியும்.

அனைவரும் இன்று நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தாருங்கள். நன்றி.

மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!

சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்

பிப்.20 சனிக்கிழமை மாலை 6 மணி
எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் (அசோக் பில்லர் அருகில்), சென்னை.

தலைமை: அ. முகுந்தன்
தலைவர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு

உரையாற்றுவோர்:

தோழர் எஸ். பாலன்
உயர்நீதிமன்ற வழக்குரைஞர், பெங்களூரு.

தோழர் மருதையன்
பொதுச்செயலர், ம.க.இ.க., தமிழ்நாடு

தோழர் வரவரராவ்
புரட்சிகர எழுத்தாளர் சங்கம், ஆந்திரப் பிரதேசம்.

ம.க.இ.க மையக் கலைக்குழுவின்
புரட்சிகர கலைநிகழ்ச்சி

__________________________________________

சென்னை வாழ் பதிவர்கள், வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் வருக!

February 14, 2010

காட்டு வேட்டை : உங்களால் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது!


காந்தியவாதி ஹிமான்சு குமார்
தமிழில் : தேவிபாரதி

பழங்குடிகள் வாழும் தண்டேவாடாப் பகுதியில் 17 ஆண்டுகளாகப் பணிபுரியும் மனித உரிமைச் செயல்பாட்டாளரும் காந்தியவாதியுமான ஹிமான்சு குமார் சத்தீஸ்கரில் உள்ள நிலைமை பற்றி மும்பை பிரஸ் கிளப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ஆற்றிய உரை, பத்திரிகையாளர் ஜியோதி புன்வானியால் தொகுக்கப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுக் கட்டுரையாக நவம்பர் 21, 2009 தேதியிட்ட EPW (Economic and Political Weekly) ஆங்கில வார இதழில் வெளிவந்துள்ளது.
உண்மையான இந்தியா கிராமங்களில் வாழ்கிறது, இளைஞர்கள் கிராமங்களுக்குச் சென்று அவற்றுக்குப் புத்துணர்வூட்ட வேண்டும் என்னும் காந்தியின் நம்பிக்கையை அடியொற்றிப் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு நான் தண்டேவாடாவுக்குச் சென்றேன். ஆசிரமம் அமைப்பதற்கான நிலத்தை எனக்கு அங்குள்ள கிராமவாசிகள் வழங்கினர். ஐந்தாவது அட்டவணையின் கீழ் அதற்கான அதிகாரம் கிராமசபைக்கு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அரசு 1000 போலீசாரையும் கண்ணிவெடியை அகற்றும் வாகனங்களையும் அனுப்பி என் ஆசிரமத்தை இடித்துத் தள்ளியது...! இறுதியில் பழங்குடி மக்கள் நானும் அவர்களைப் போன்ற ஒருவன் என்று என்னை ஏற்றுக் கொண்டனர். என் வீடும் இடித்துத் தள்ளப்படலாம்!

தண்டேவாடாக் காடுகளில் அவற்றின் ஆதிக்குடியினரைப் (aboriginals) போல் இயற்கையோடு இயைந்து வாழ்கின்றனர் பழங்குடிகள். அங்கு இயற்கை நீதி நிலவுகிறது. காடுகளில் குற்றங்கள் இல்லை, காவல் துறையினர் இல்லை. திருமணம் முடிந்த ஒரு மாதத்திற்குப் பிறகு நான் தண்டேவாடாவுக்குச் சென்றேன். நானும் என் மனைவியும் சுவர்களில்லாத மேற்கூரையை மட்டும் கொண்ட குடிசை ஒன்றை அங்கே கட்டினோம். என் மனைவியை அங்கே விட்டுவிட்டு ஐந்தாறு நாட்கள்வரை மத்தியப் பிரதேசம் முழுக்கச் சுற்றிவிட்டுத் திரும்புவேன். அவள் ஒருபோதும் அஞ்சியதில்லை.

2005இல் தண்டேவாடாவில் உள்ள மாவோயிஸ்ட்டுகளை அபாயகரமானவர்கள் என சத்தீஸ்கர் அரசு உணர்ந்து ‘சால்வா ஜூடும்’ என்னும் அமைப்பைத் தொடங்கியது. ‘ஒருங்கிணைந்த அமைதி இயக்கம்’ என்பது அதன் பொருள். மாவோயிஸ்ட்டுகள் பழங்குடி மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தார்கள் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆகவே பழங்குடி மக்கள் வசிக்கும் கிராமங்களைக் காலிசெய்வது எனத் தீர்மானித்தனர். பழங்குடியினரை அவர்களது கிரா மங்களிலிருந்து வெளியேற்றிக் காவல் நிலையங்களுக்கு அருகில் அமைக்கப்பட்ட முகாம்களுக்குத் துரத்தினர். குண்டர் படைகளின் உதவியோடு காவல் துறையினர் பழங்குடி மக்கள்மீது தாக்குதல் நடத்தி அவர்களை முகாம்களுக்கு விரட்டியடித்தனர்.

ஆனால் பழங்குடியினர் மலை மீது, காடுகளுக்குள் இயற்கைச் சூழலில் நீரோடைகளின் அருகில் வாழ்ந்து பழகியவர்கள். ஒவ்வொரு பழங்குடி மனிதனின் வீடும் மற்றொருவருடையதிலிருந்து வெகு தூரம் தள்ளியிருக்கும். முகாம்களில் அரசு அமைத்துள்ள கொட்டகை ஒன்றிலிருந்து வெளியே வந்தால் எதிரில் ஒரு கொட்டகை இருக்கும், பின்னால் மற்றொரு கொட்டகை. பழங்குடி மக்கள் அவற்றிலிருந்து தப்பிப்போக முயன்றால், ‘தேசப்பற்றுமிக்க’ நமது படை அவர்களைச் சுட்டுக்கொல்கிறது, பிடித்துச் சிறையில் தள்ளுகிறது, பழங்குடிப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்துகிறது.

ஒரு தருணத்தில் 1,000 கிராமங்களைச் சேர்ந்த 54,000 பழங்குடி மக்கள் அந்த முகாம்களில் இருந்தனர். அரசு 644 கிராமங்களைத் ‘துப்புரப்படுத்தி’யிருப்பதாகச் சொல்லிக்கொண்டது. பழங்குடியினர் 50,000 பேர் காடுகளுக்குள் ஓடிவிட்டனர். அந்தச் சமயத்தில் முதலமைச்சர் ராமன்சிங் ‘முகாமுக்கு வந்திருப்பவர்கள் எங்களுடன் இருக்கிறார்கள், காடுகளுக்கு ஓடிப்போனவர்கள் மாவோயிஸ்ட்டுகளுடன் இருக்கிறார்கள்’ என அறிவித்தார்.

நான் முதலமைச்சருக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதினேன்-மாநிலத்தின் முதல்வராகிய நீங்கள் தம் சொந்த வீட்டில் வசிப்பதைத் தேர்ந்தெடுத்த மக்களை நக்ஸலைட்டுகள் என்கிறீர்கள். அப்படியானால் நீங்கள் அவர்களைச் சுட்டுக்கொல்ல உத்தரவிடுவீர்களா எனக் கேட்டேன். அவர் அதைத்தான் செய்தார். சில பழங்குடியினர் வசிப்பிடங்களின் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அவர்கள் திரும்பிவந்து தம் நிலங்களில் பயிரிட முயல்கிறார்கள். ஒவ்வொருமுறையும் அவர்கள் தம்மீது பிரயோகிக்கப்படும் கொடூரமான சித்திரவதைகளை அனுபவிக்கிறார்கள். அவர்களுடைய விளைபொருட்கள் தீயிட்டுக் கொளுத்தப்படுகின்றன. இது போன்ற தருணங்களில் அவர்களை ஆதரிப்பவர்கள் நக்ஸலைட்டுகள்தாம். இதனால்தான் அவர்கள் நக்ஸலைட்டுகளைத் தம் நண்பர்களாகக் கருதுகிறார்கள்.

சால்வா ஜூடும் படையினருக்கு மது தேவை, கோழிகளும் இறைச்சியும் தேவை, பெண்கள் தேவை. ஒவ்வொரு நாளும் இவை அவர்களுக்குத் தேவைப்படுகின்றன. பழங்குடி மக்களிடமிருந்தே அவர்கள் இவற்றைப் பறித்துக்கொள்கிறார்கள். நாம் இவற்றைக் கண்டுகொள்ளாத குருடர்களாய் இருக்கிறோம். ஆனால் காவல் துறையினரை எதிர்ப்பதற்காகப் பழங்குடிகளில் ஒருவர் ஒரு கம்பைக் கையிலெடுக்கிறபோது மட்டும் நாம் கூச்சலிடுகிறோம்.

அரசு மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை பற்றிப் பேசுகிறது. ஆனால் வன்முறையைப் பிரயோகிப்பது அரசுதான். உள்துறை அமைச்சர் அமைதியைப் பற்றி ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் நீங்கள் எல்லோரும் தொடர்ந்து பழங்குடியினர்மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறபோது அமைதி எப்படி வரும்? பிறகு மாவோயிஸ்ட்டுகளிடம் வன்முறையைக் கைவிடுமாறு வற்புறுத்த வேண்டுமென்று நீங்கள் என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள். தற்போதுள்ள நிலையில் பழங்குடி மக்கள் வெளியிலிருந்து வரும் ஒவ்வொரு மனிதனையும் தம் எதிரியாகவே பார்க்கிறார்கள். பழங்குடி மக்கள் தம் சக பழங்குடி மனிதனையேகூட எதிரியாகப் பார்க்கும் நிலையை அரசு உருவாக்கியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு இழப்பீடு வழங்குமாறும் அங்கு மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறும் உச்ச நீதிமன்றம் அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது. எனினும் ஒரு கிராமத்தில்கூட மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. ஒரேயொரு பழங் குடி மனிதனுக்குக்கூட இழப்பீடு வழங்கப்படவில்லை.

சால்வா ஜூடும் அமைப்பால் தண்டேவாடாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகளைப் பற்றி ஆராயுமாறு கடந்த 2008 ஜூன் 10இல் தேசிய மனித உரிமை ஆணையத்தை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. எங்கள் அமைப்பைச் சேர்ந்த களப்பணியாளர்கள் மூலம் பழங்குடி மக்களைத் தேசிய மனித உரிமை ஆணையக் குழுவிடம் அழைத்துச் சென்றோம். அவர்களில் சிலர் தேசிய மனித உரிமை ஆணையக் குழுவிடம் முறையிடுவதற்காக ஆந்திரப் பிரதேசம் வரை சென்றவர்கள். ஜூன் 11இல் நேந்த்ரா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினர் திரும்பிக்கொண்டிருந்தபோது ஒரு ஜீப்பில் வந்த சால்வா ஜூடும் உறுப்பினர்கள் அவர்களைத் தடுத்துநிறுத்தித் தாக்கினர். நாங்கள் உடனே காவல் துறைத் தலைமை இயக்குநரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தேசிய மனித உரிமை ஆணையக் குழுவைச் சந்திக்கச் சென்றது ஒரு குற்றச் செயலா எனக் கேட்டோம். அதனால் எதுவும் நடக்கவில்லை. தேசிய மனித உரிமை ஆணையத்திடம் முறையிடுமாறு மாவோயிஸ்ட்டுகளால் தாம் நிர்ப்பந்திக்கப்பட்டதாகப் பழங்குடி மக்களிடமிருந்து கட்டாய வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

காந்தியவாதியான நான் கடுங்கோபம் கொண்டேன். அதிகாரபூர்வமான உண்மையறியும் குழுவிடம் முறையிடச் சென்ற ஒரே காரணத்துக்காகப் பழங்குடியினர் என் கண்முன்னால் தாக்கப்பட்டார்கள். நாங்கள் அந்தக் கிராமத்தை விட்டுப் போவதில்லை என முடிவு செய்தேன். சால்வா ஜூடும் அமைப்பினர் அந்தக் கிராமத்தை எரிப்பதானால் முதலில் என்னை எரிக்கட்டும். தம் கிராமத்திற்குத் திரும்பிவருமாறு நாங்கள் மக்களை வற்புறுத்தினோம். ஜூலை ஒன்று அன்று நாங்கள் கிராமத்தைச் சுற்றி ஒரு மனிதக் கேடயத்தை உருவாக்கினோம். நேந்த்ராவில் ஆறு மாதங்கள்வரை தங்கியிருந்தோம். மக்களைத் திரும்ப அழைத்து வருவதற்காக எங்கள் தொண்டர்களை ஆந்திரப் பிரதேசத்திற்கு அனுப்பினோம். அவர்களுடைய முயற்சியால் மக்கள் திரும்ப அழைத்துவரப்பட்டு கிராமத்தில் தங்கவைக்கப்பட்டனர். மூன்றாண்டுகளாக அவர்களால் தம் நிலங்களை உழ முடியவில்லை. அவர்களுக்கு விதைகள் இல்லை. அவர்களுடைய கால்நடைகள் மறைந்துவிட்டன. அவர்களுடைய கிராமம் திரும்பத் திரும்ப எரிக்கப்பட்டது. நாங்கள் அவர்களது மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்தோம். இப்படித்தான் முதல் கிராமம் காப்பாற்றப்பட்டது. அருகாமைக் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு எங்களைச் சந்திக்கும் துணிவு ஏற்பட்டது. எங்கள் தொண்டர்கள் அதே பரிசோதனை முயற்சிகளை மீண்டும் தொடங்கினார்கள்.

பழங்குடியினர் எங்கள் தொண்டர்களின் பாதுகாப்புடன் லிங்காகிரி கிராமத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதை அறிந்த மாவட்ட ஆட்சியர் என்னைச் சந்தித்தார். அது ஒரு சனிக்கிழமை பிற்பகல் 4:30 மணி. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்பதும் அவருக்குத் தெரியும். பாதுகாப்புப் படையினர் அனைவரும் தேர்தல் பாதுகாப்புக்குச் சென்றுவிட்டதால் எங்கள் பயணத்துக்குத் தன்னால் எவ்விதப் பாதுகாப்பும் வழங்க முடியாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நாங்கள் உங்களிடம் வேறு எப்போது பாதுகாப்புக் கோர முடியும்? அரசியல் சாசனப்படி ஒருவரைத் தன் சொந்த வீட்டுக்குப் போக முடியாதபடி யாரும் தடுத்து நிறுத்த முடியாது என நான் ஆட்சியரிடம் சொன்னேன். ஆனால் பழங்குடியினர் பாலத்தை அடைந்தபோது போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். கடந்த மூன்றாண்டுகளாகப் போலீசாரால் அந்தப் பாலத்தைக் கடந்துவர முடிந்ததில்லை. நான் ஆட்சியரை அழைத்து நீங்கள் மக்களை அவர்களது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப் போகிறீர்களா இல்லையா? எனக் கேட்டேன். இல்லையென்றால் அவர்களை உச்ச நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப் போவதாகவும் நீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்ற அவர் மறுப்பதாகவும் சொல்வேன் என்றேன். அன்று மாலை அனைவரும் பாலத்தைக் கடந்து சென்றனர்.

ஆனால் நிர்வாகம் அத்தோடு அந்தப் பிரச்சினையை விட்டுவிடவில்லை. அவர்கள் என் வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். அதை விடுவிப்பதற்காக நாங்கள் நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது. கிராமத்தவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரேஷன் பொருட்களில் பாதியைக் காவல் துறையினர் எடுத்துக்கொண்டு விட்டதை நாங்கள் கண்டுபிடித்தோம். இப்படிப்பட்ட செயல்பாடுகளைக் கொண்ட காவல் துறையை யாரால் காப்பாற்ற முடியும்!

பழங்குடியினர் மீண்டும் தம் நிலங்களில் பயிரிடத் தொடங்கினர். ஆனால் புனரமைக்கப்பட்ட அவர்களது கிராமங்களை காவல்துறை மீண்டும் தாக்கத் தொடங்கியது. நாங்கள் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறோம். இப்போது அங்குள்ள 30 கிராமங்களில் அமைதி நிலவுகிறது. இப்போது யாரும் அங்கே போக முடியும். அவற்றின் நிலையைப் பார்க்க முடியும். இந்தக் கிராமங்களை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுங்கள் என நாங்கள் அரசிடம் சொன்னோம். அங்குள்ள மக்கள் சௌகரியமாக இருக்கிறார்கள், ஆகவே அவர்களுக்குப் போரிடுவதில் ஆர்வமில்லை. ஆனால் அரசு அந்த மக்களை அவர்களது நிலங்களிலிருந்து விரட்டியடித்துவிட்டு அவற்றைச் சுரங்கம் தோண்டுவதற்காகத் தொழிலதிபர்களிடம் தர வேண்டும் என்னும் ஒரே நோக்கத்துடன் அரசு மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறது.

பிறகு பழங்குடியினர் தம் இளைஞர்கள் சால்வா ஜூடும் அமைப்பிடமிருந்து தமது கிராமங்களைக் காக்க வேண்டுமென முடிவுசெய்தனர். லத்திகள், விவசாயக் கருவிகள் எனக் கையில் கிடைத்தவற்றைக் கொண்டு அவர்கள் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர். தானியங்களை மலைகளுக்குள் ஒளித்துவைக்கத் தொடங்கினர். இப்போது உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அந்த இளைஞர்களை நக்ஸலைட்டுகள் என வர்ணிக்கிறார். அவர்கள் அரசுக்கெதிராக ஆயுதமேந்தியிருப்பதாகச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்.
அரசுக்குத் தேவைப்படுவது அமைதி அல்ல, நிலங்கள்தாம். அரசு வெறித்தனமாக நடந்துகொள்கிறது. தான் செய்துள்ள குற்றங்களை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. பாலியல் வன்முறை, ஆள் கடத்தல், தீவைத்தல் போன்ற கொடுங்குற்றங்கள் தொடர்பாக நாங்கள் சுமார் 1000 வழக்குகளைப் பதிவுசெய்ய முயன்றோம். ஆனால் அவை பதிவுசெய்யப்படவில்லை. அவை பொய்யான குற்றச்சாட்டுகள் என்பதால் அவற்றின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்கிறார் காவல் துறைக் கண்காணிப்பாளர். ஒரு குற்றச்சாட்டு பொய்யானதா, உண்மையானதா என்பதைக் காவல் துறை முடிவுசெய்யக் கூடாது என்கிறது உச்ச நீதிமன்றம். குறிப்பாகக் குற்றச்சாட்டுக்குள்ளானவர் காவல் துறையைச் சேர்ந்தவராக இருக்கும்போது.

எங்களிடம் வந்த ஒரு பெண் தான் காவல் நிலையத்தில் இரண்டு நாட்கள்வரை போலீஸ்காரர்களால் கூட்டு வன்புணர்ச்சிக்குட்படுத்தப்பட்டதாகக் கூறினார். அது தொடர்பாக நாங்கள் அளித்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யக் காவல் துறைக் கண்காணிப்பாளர் மறுத்துவிட்டார். நாங்கள் உச்ச நீதிமன்றம் சென்றோம். பதிலளிக்கச் சொல்லி நீதிமன்றம் அரசைக் கேட்டது. காவல் துறைக் கண்காணிப்பாளர் தன் பதிலில், “நாங்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் (குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சால்வா ஜூடும் அமைப்பினர்) நீங்கள் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்முறைக் குட்படுத்தினீர்களா? எனக் கேட்டோம். அவர்கள் ‘இல்லை, அந்தப் பெண் எங்களை அவதூறு செய்கிறாள்’ என்கிறார்கள். ஆக நம் காவல் துறையினர் பாலியல் வன்முறை போன்ற கொடிய புகார்களின் மீது இப்படித்தான் விசாரணை நடத்துகிறார்கள். குற்றம் சுமத்தப்பட்டவரைப் பார்த்து நீங்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டீர்களா என்று கேட்பார்கள். பிறகு அவர்கள் சொல்லும் பதிலை வைத்து முடிவெடுப்பார்கள்!

பினாயக் சென் விடுதலைக்காக நாங்கள் நடத்திய இயக்கத்தில் சால்வா ஜூடும் அமைப்புக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதையும் ஒரு கோரிக்கையாக வைத்தோம். சத்தீஸ்கர் பொதுப் பாதுகாப்புச் சிறப்புச் சட்டத் (சிலீணீttவீsரீணீக்ஷீலீ ஷிஜீமீநீவீணீறீ -றிuதீறீவீநீ sமீநீuக்ஷீவீtஹ் கிநீt)தின் கீழ்க் கைதுசெய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டுமெனக் கோரினோம். எதுவும் நடக்கவில்லை. உண்மையில் இப்போது அந்தச் சட்டம் கிராமப்புற மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. “நீங்கள்தான் மாவோயிஸ்ட்டுகளுக்கு உயிர்கொடுக்கிறீர்கள், அவர்களுக்குப் பாதையமைத்துக் கொடுக்கிறீர்கள், நீங்களும் குற்றவாளிகள்தான்” என ஆட்சியாளர்கள் குற்றம் காட்டுகிறார்கள்.

“உங்கள் நீதித் துறை, நிர்வாக அமைப்பு, உங்கள் ஜனநாயகம்- நீங்கள், நீங்கள்தாம் அவற்றை அழித்துக்கொண்டிருக்கிறீர்கள். பிறகு நக்ஸலைட்டுகளுக்குச் செய்வதற்கு அதிகமாக எதுவுமில்லை. ஒரு சமயத்தில் எழுதுவதும் பேசுவதும்கூடக் குற்றம் என்றாகிவிட்டது. பினாயக் சென் எழுத மட்டுமே செய்தார், நான் பேச மட்டுமே செய்தேன்-நீங்கள் என்ன செய்வீர்கள்? வேறுவழியின்றிப் பழங்குடி மக்கள் ஆயுதமேந்துவதைக் குற்றம் என எப்படிச் சொல்வீர்கள்?

ஜனவரியில் 19 பழங்குடி மக்கள் கொல்லப்பட்டார்கள். நான்கு பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டனர். நாங்கள் நீதி மன்றத்துக்குச் சென்றோம். அரசு வழக்கறிஞர் தொடர்ந்து விசாரணையை ஒத்திவைத்துக்கொண்டிருந்தார். நீதிபதிகள் மாறிக்கொண்டிருந்தனர். சிறப்புக் காவல் படை அதிகாரிகள் மூன்று பழங்குடியினரைக் கொன்றனர். அவர்களுடைய விதவை மனைவியர் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். அரசு தன் பதிலில் அவர்களைக் கொன்றது நக்ஸலைட்டுகள் எனவும் கொல்லப்பட்டவர்களின் மனைவிகளைக் காவல் துறையினருக்கு எதிராகப் புகார் கொடுக்க நிர்பந்தித்தது அவர்கள்தாம் எனவும் சொன்னது. நீதிபதி எந்தக் கேள்வியுமில்லாமல் அதை ஏற்றுக்கொண்டார்.

சாதாரணக் கிராமவாசிகளைக் கொன்றுவிட்டு அவர்களை நக்ஸலைட்கள் என முத்திரை குத்துகிறார்கள். இவற்றையெல்லாம் மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் நாங்கள் கேட்டோம். ஆனால் பாதிப்புக்குள்ளான அந்தக் கிராமவாசிகளிடம் நீதிபதி சொல்கிறார், “நீங்கள் எந்த முகாமில் இருக்க வேண்டுமென விரும்புகிறீர்களோ அதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அரசு உங்களைக் கவனித்துக்கொள்ளும்.”

செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் கிரீன் ஹன்ட்’டின் முதல் கட்டத்தில் படையினர் ஒரு குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தினர். முதலில் அவர்கள் துப்பாக்கி முனையில் செருகப்பட்டிருந்த கத்தியைக் கொண்டு தந்தையைக் குத்தினர், பிறகு தாயை, அதற்குப் பிறகு அவர்களுடைய இளம் பெண் பிள்ளையை. அவர்களுடைய இரண்டு வயது ஆண் குழந்தையைத் தாக்கி அவனது பற்களை உடைத்தனர், நாக்கை அறுத்தனர். அவர்களுடைய கதையைப் பத்திரிகையாளர்கள் அறிந்துகொள்ள வேண்டுமென அவர்களை ராய்பூர் அழைத்துச் செல்ல முடிவுசெய்தேன். ராய்பூர் பிரஸ் கிளப் என்னிடம் முதலில் அவர்கள் நக்ஸலைட்டுகள் அல்ல என்பதற்கான நிரூபணத்தை அளிக்குமாறு கேட்டது. அரசுகூட அவர்களை நக்ஸலைட்டுகள் எனச் சொல்லவில்லையே என நான் அவர்களைக் கேட்டேன். அவர்களுக்குரிய அரங்கைப் பயன்படுத்திக்கொள்ள என்னை அனுமதிக்கக் கூடாது என அவர்கள் தீர்மானித்திருந்தனர். ஆக இப்போது பழங்குடி மக்களால் ஊடகங்களிடம் செல்ல முடியாது. அவர்கள் வேறு யாரிடம் செல்வார்கள்?

அனைத்துப் பாதைகளும் அவர்களுக்கு மறுக்கப்பட்டுவிட்டன. காவல் துறை அவர்களைத் தாக்குகிறது. அரசியல் கட்சிகள் - அது காங்கிரஸாயினும் பிஜேபியாயினும் - சால்வா ஜூடும் பக்கம் இருக்கிறார்கள். நீதிமன்றங்கள் அவர்களது குறைகளைக் கேட்கத் தயாராக இல்லை. ஊடகங்கள் அவர்களைப் பொருட்படுத்துவதில்லை. மாவோயிஸ்ட்டுகளைத் தவிர அவர்கள் வேறு யாரிடம் செல்வார்கள்? காவல் துறை அவர்கள்மீது தாக்குதல் தொடுக்கும்போது அவர்களைக் காப்பாற்றுவது மாவோயிஸ்ட்டுகள்தாம். உங்களுக்கு அமைதி தேவையென்றால் நக்ஸலைட்டுகளின் செல் வாக்குப் பெருகுவதற்கான மூலகாரணிகளுக்கு முடிவுகட்ட வேண்டும்.

எத்தகைய நிலைமையின் கீழ் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர முடியுமோ அத்தகைய நிலைமையை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். ஆனால் அந்தச் சூழலில்தான் காவல் துறையினர் வயதான பழங்குடிப் பெண்களின் முலைகளை அறுக்கிறார்கள், வயதான ஆண்களைக் கத்தியால் குத்துகிறார்கள், பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். இது போன்ற ஒரு சூழலில் கிராமத்தவர்களின் கைகளில் சிக்கிக்கொள்ள நேரும் போலீசாரின் கதியைக் கற்பனை செய்து பாருங்கள். அரசால் வன்முறையை முடிவுக்குக்கொண்டுவரக்கூடிய நிலைமையை உருவாக்க முடியாது. அரசியல் கட்சியினர் நக்ஸலைட்டுகள் பெற்றுள்ள செல்வாக்குக்கான காரணங்களை யோசிக்க வேண்டும். ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு ஏன் செல்வாக்கு இல்லை என்பதை யோசிக்க வேண்டும். பழங்குடி இனத்தவர் ஒருவர் காவல்நிலையத்திற்குச் சென்று ஒரு பட்வாரி தன் பணத்தைப் பிடுங்கிக்கொண்டதாகப் புகார் கொடுத்தால் போலீஸ் அதை விசாரிக்க முன்வருமா?

உங்களுடைய காவல் துறை ஏழைகளின் வாழ்வுரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் துப்பாக்கியை உயர்த்துகிற நாளில் நக்ஸலிசம் முடிவுக்கு வரும். என் குழந்தையின் நடத்தையில் கோளாறு காணப்பட்டால் அதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க முற்படமாட்டேனா? ஏன் இவ்வளவு பெரிய அளவிலான வன்முறை நிலவுகிறது என மாவோயிஸ்ட்டுகளிடம் நம் பிரதமரால் கேட்க முடியாதா என்ன? ஒரு பெரிய போராட்டம் காத்திருக்கிறது என நக்ஸலைட்டுகள் பழங்குடி மக்களைப் பல பதிற்றாண்டுகளாகத் தயார்படுத்திவந்திருக்கிறார்கள். ஒரு நாள் நான் நடந்து சென்றுகொண்டிருந்தபோது மரத்தடியில் படுத்திருந்த ஒரு முதியவர் என்னைக் கேட்டார், “Ladaai hogi, na?” “சண்டை நடக்கும், இல்லையா?”

அதனால்தான் நான் இந்தப் பகுதிக்குள் நுழைந்துவிடாதீர்கள் என மைய நீரோட்ட அரசியல்வாதிகளிடம் சொல்கிறேன். பழங்குடி மக்கள் உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள், நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள் என அவர்களிடம் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இங்கே உள்ள பழங்குடியினர் உத்திரப் பிரதேசத்திலுள்ளவர்களைப் போன்றவர்கள் அல்ல. அவர்களால் உங்கள் மேல் பாய்ந்து உங்கள் பாதுகாவலர்களிடமுள்ள ஏ.கே. 47 துப்பாக்கிகளைப் பறித்துக்கொண்டுவிட முடியும். ஜம்மு காஷ்மீரில் கொல்லப்பட்ட துருப்புகளின் எண்ணிக்கையைவிட ‘ஆபரேஷன் கிரீன் ஹண்ட்’ நடவடிக்கையில் கொல்லப்படும் துருப்புகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். ஆபரேஷன் கிரீன் ஹண்ட் நடவடிக்கையை அவர்கள் செப்டம்பரில் தொடங்கினார்கள். ஒரேயொரு மாவோயிஸ்ட்கூட இதுவரை கொல்லப்படவில்லை. ஆனால் கோப்ரா (COBRA) படையைச் சேர்ந்த 6 வீரர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். துருப்புகளால் பழங்குடி இனத்தின் முதியவர்களையும் குழந்தைகளையுமே கொல்ல முடிந்திருக்கிறது. ஒரு 6 வயதுக் குழந்தை குத்தப்பட்டிருக்கிறது. 85 வயது முதியவர் ஒருவர் துப்பாக்கி முனையால் குத்தப்பட்டு அவரது படுக்கையிலேயே கொல்லப்பட்டார். காவல் துறை ரத்தம் சிதறும் படுகொலைகளை நடத்திக்கொண்டிருக்கிறது. பிறகு அரசு கேட்கிறது, “நீங்கள் அரசின் பக்கம் இருக்கிறீர்களா, நக்ஸலைட்டுகளின் பக்கம் இருக்கிறீர்களா?” நான் பகிரங்கமாகச் சொல்கிறேன், நாங்கள் உங்கள் காவல் துறையுடன் இல்லை. உங்களால் கொல்லப்பட்ட பழங்குடி மக்களுடன் இருக்கிறோம்.

வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் எப்படி நக்ஸலிசத்தின் செல்வாக்கைக் குறைக்க முடியும் என்பதைப் பற்றி திக் விஜய் சிங் ஒரு கட்டுரை எழுதினார். நான்கு கோரிக்கைகளை முன்வைக்கும்படி நான் அவருக்குக் கடிதம் எழுதினேன். உங்கள் படைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் என்பதுதான் அவற்றில் முதலாவது. 700 கிராமங்கள் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. கிராமவாசிகள் அவற்றிலிருந்து வெளியே போக முடியாது. வெளியாட்கள் யாரும் உள்ளே வர முடியாது. ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் சந்தைக்குச் சென்றால் அங்குள்ள சிறப்புப் போலீஸ் படை தன்னைப் பிடித்துக்கொள்ளும் என்பதை அறிந்துள்ள ஒரு பழங்குடிப் பெண் 85 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வேறொரு சந்தைக்குச் செல்கிறார். போக இரண்டு நாட்கள் திரும்பி வர இரண்டு நாட்கள் என அவரது சந்தைப் பயணம் நான்கு நாட்களை எடுத்துக்கொள்கிறது. ஒவ்வொரு வாரத்திலும் நான்கு நாட்களை நடப்பதில் கழிக்கிறார் அவர். நான் அவரிடம் ஏன் ஒரு மாதத்திற்கான அரிசியை மொத்தமாக வாங்கி வந்துவிடக் கூடாது எனக் கேட்டேன். அதற்கு அவர், “நாங்கள் கொண்டு செல்லும் மாஹுவா எவ்வளவு விலைக்குப் போகிறதோ அவ்வளவுக்குத்தான் எங்களால் அரிசி வாங்க முடியும். அது 20 ரூபாய்க்கு விற்றால் எங்களால் இருபது ரூபாய் மதிப்புள்ள அரிசிதான் வாங்க முடியும்” என்றார்.

நிலைமை இப்படி இருப்பதற்குக் காரணம் அரசுதான், நக்ஸலைட்டுகள் அல்ல. நக்ஸல் ஆதரவுப் பகுதிகளை ‘விடுதலை பெற்ற பகுதிகள்’ என வகைப்படுத்துவது அரசின் தந்திரங்களில் ஒன்று. அதன் மூலம் அரசு செயல்பட அனுமதிக்கப்படவில்லை எனப் புகார் கூறுவது அரசுக்கு முடியும். அரசின் செயல்பாடுகளை முடக்கியிருப்பது சால்வாஜூடும்தான். அங்கே அரசின் எந்த நிறுவனமும் செயல்படவில்லை, சட்ட அதிகாரமும் நடப்பிலில்லை. அரசியல் சட்டத்தின் 21ஆம் பிரிவின் வாழும் உரிமைகூட அங்கே இல்லை. பழங்குடிகள் வேட்டையாடப்படுகிறார்கள். வன்முறை சில தருணங்களில் அச்சத்திலிருந்தும் கையறுநிலையிலிருந்தும் உருவாகிறது.

முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ள இக்கிராமங்களில் அரசு எல்லாவற்றையும் இழுத்து மூடியிருக்கிறது. அங்கு எதுவுமே இல்லை. பள்ளிகள் இல்லை, மருத்துவர்கள் இல்லை. அங்கிருப்பவர்கள் அனைவரும் நக்ஸலைட்டுகள் என அரசு உயர் நீதிமன்றத்தில் சொல்கிறது. நக்ஸலைட்டுகள் சூறையாடுவதன் காரணமாக அப்பகுதிகளுக்குப் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி வழங்குவதற்கு வாய்ப்பே இல்லை எனச் சொல்கிறது காவல் துறை. ஆகையால் கடந்த ஐந்தாண்டுகளாக அப்பகுதிக்கு அரிசி கொண்டுசெல்லப்படவில்லை. அதனால் அங்குள்ள ஒரு நக்ஸலைட்டாவது பசியால் செத்து விட்டிருக்கிறாரா என்ன? “நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக நாங்கள் காடுகளுக்குச் சென்றால் மத்திய ரிசர்வ் போலீஸ் படை எங்களை அடிக்கிறது என எங்களிடம் சில மருத்துவ அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆசிரியர்கள் சென்றாலும் அடிக்கிறார்கள். அவர்கள் வெறித்தனமாக இருக்கிறார்கள். நீங்கள் காடுகளுக்குள் போனால் கடுமையாகத் தாக்கப்படுவீர்கள்” என்கிறார்கள். எதற்காக நாங்கள் தாக்கப்பட வேண்டும்? உங்களுக்கு நக்சல்களோடு தொடர்பு இருக்கிறது என்கிறார்கள். நாங்கள் உங்களைப் போல ஆயுதங்களுடன் போவதில்லை என நான் அவர்களிடம் சொல்கிறேன்.

பழங்குடியினரின் நிலங்களை எடுத்துக்கொள்வதற்குப் பழங்குடியல்லாதவர்களுக்கு தண்டேவாடா ஆட்சியர் மகிழ்ச்சியுடன் அனுமதி தருகிறார். அரசு தானே நிலத்தைப் பறிமுதல் செய்து அதை மற்றவர்களுக்கு வழங்குகிறது. ஆனால் மாவோயிஸ்ட்கள் அங்கே இருப்பதால் நிலங்களைப் பெற்றுக்கொண்ட அந்த நிறுவனங்களால் தம்முடைய தொழில் திட்டங்களைத் தொடங்க முடியவில்லை.

நக்ஸலைட்டுகள் மோசமானவர்கள், ஆனால் அரசு மிக நியாயமானது என்பதுதான் நமக்குத் தொடர்ச்சியாகக் கிடைத்துவருகிற சித்திரம். தண்டேவாடாவில் உள்ள பழங்குடி மக்களைக் கேட்டுப் பாருங்கள். நான் சில அரசியல்வாதிகளிடம் சொன்னேன் நீங்கள் மாவோயிஸ்ட்டுகளிடம் பேச வேண்டாம் நக்ஸலைட்டுகளால் பாதிக்கப்பட்டவர்கள் என நீங்கள் சொல்கிறீர்களே அந்தப் பழங்குடி மக்களிடம் பேசுங்கள் என்றேன். நீங்கள் ஜனநாயகரீதியில் அவர்களால் தேர்ந்தெக்கப்பட்ட தலைவர்கள். ஒருவேளை பொதுமக்கள் உங்களை நேசிக்கலாம். நீங்களும்கூட அவர்களை நேசிக்கக் கூடும். மக்கள் உங்களை நேசிப்பதைக் கைவிட்டுவிட்டு நக்ஸலைட்டுகளை நேசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்றால் அது ஏன் என்று யோசியுங்கள்.

அஹிம்சையே என் வழி. கடந்த 17 ஆண்டுகளாக ஜனநாயகரீதியிலான நிறுவனங்களை வலுப்படுத்துவதற்காகவும் மக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகள், அரசின் நலத்திட்ட உதவிகள், மக்களின் உரிமைகள் ஆகியவற்றிற்காக எப்படிப் போராடுவது என்பது குறித்த விழிப்புணர்வை உருவாக்க முயன்று வருகிறேன். நக்ஸலைட்டுகள் துப்பாக்கிகளை எடுத்துள்ளதால் அங்கே சென்று அஹிம்சையைப் பலப்படுத்த விரும்புகிறோம். அரசின் செயல்பாடுகள் இப்படியிருக்கின்றன. அவர்கள் உங்களை ஓட ஓட விரட்டுகிறார்கள். துன்புறுத்துகிறார்கள். பிறகு உங்களை நக்ஸலைட் என்று அழைக்கிறார்கள்.

நக்ஸலைட்டுகளைப் பற்றி வினோபா பாவே சொன்னார், “இந்த இளைஞர்கள் ஏழைகளின் மீதான அன்பினால் தூண்டப்பட்டவர்கள். நான் அவர்களை வணங்குகிறேன்” அவர் பூதான இயக்கத்தைத் தொடங்கியபோது நக்ஸலைட் இயக்கத்தை 30 ஆண்டுகள் பின்னடையச் செய்தார். நான் தண்டேவாடாவில் இருந்துவரும் இந்த 17 ஆண்டுகளில் நக்ஸலைட்டுகள் எப்படிப் பழங்குடி மக்களிடையே வேலைசெய்துவருகிறார்கள் என்பதைப் பார்த்துவருகிறேன். காட்டிலிருந்து ஒரு கட்டு விறகு எடுத்துச்செல்லும் பழங்குடிப் பெண்ணை வன அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்து தண்டிக்கிறார்கள். பழங்குடிகள் மூன்று ரூபாய்த் தண்டத்தொகையைச் செலுத்தத் தவறினால் அவர்களிடமிருந்து 300 ரூபாயைப் பறித்துக்கொள்கிறார்கள்.

பிறகு 1980களில் நக்ஸலைட்டுகள் அங்கு வந்தார்கள். அவர்கள் வனக் காவலர் ஒருவரைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிவைத்துப் பழங்குடியினரை விட்டு அடிக்கச் சொன்னார்கள். தங்களுக்கும் அதிகாரம் இருக்கிறது என்பதைப் பழங்குடி மக்கள் உணர்ந்த முதல் தருணம் அது. தவறு செய்யும் வன அதிகாரிகளைத் தண்டித்திருந்தால் அரசு அங்கு வலுவடைந்திருக்கும். அவர்களுடைய கானக விளைபொருட்களுக்கு அரசு ஒருபோதும் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ததில்லை. ஆனால் நக்ஸலைட்டுகள் அதைச் செய்தார்கள்.

பழங்குடி மக்கள் ஒருபோதும் வன்முறையாளர்களாக இருந்ததில்லை. ஆனால் எப்போதெல்லாம் அவர்கள் தம் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிறார்களோ அப் போதெல்லாம் அரசு போலீசை அனுப்பியது. நக்ஸலைட்டுகள் என் மீது ஒருபோதும் வன்முறையைப் பிரயோகிக்காதது ஏன்? வாருங்கள் குருஜி, உட்காருங்கள் என அவர்கள் என்னைக் கட்டிலில் அமரச் சொல்கிறார்கள். தொடக்கத்தில் மாவோயிஸ்ட்டுகள் தம் செல்வாக்குப் பகுதியில் எந்த அரசுத் திட்டங்களும் செயல்படக் கூடாது என அறிவித்தார்கள். ஆனால் நாங்கள் எங்கள் பணிகளைத் தொடர்ந்தோம். இப்போது அவர்கள் “நாங்கள் ஹிமான்சுவின் பணிகளில் குறுக்கிடமாட்டோம், அவருக்கு எந்த அரசியல் நோக்கமும் இல்லை” என அறிவித்திருக்கிறார்கள்.

மக்கள் காவல் துறைக்கு எதிரான, அப்பாவி மக்களுக்கெதிரான மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை குறித்துப் பேசுகிறார்கள். ஆனால் வன்முறையைச் சரியாகப் புரிந்துகொள்ள அதன் ஆழங்களுக்குச் செல்ல வேண்டும். ஒரு ஷிறிளி கொல்லப்பட்டால் அப்பாவி ஒருவர் கொல்லப்பட்டுவிட்டதாக அரசு சொல்கிறது. ஊடகங்கள் அவற்றைச் செய்தியாக்குகின்றன. பழங்குடியினரில் ஒருவர் கொல்லப்படும்போது மாவோயிஸ்ட் தலைவர் கொல்லப்பட்டதாக அரசு சொல்கிறது. பழங்குடியினர் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மனிதன் நம் மறைவிடங்களை போலீஸிடம் காட்டிக்கொடுத்து விடுவான் என்று அவர்கள் நினைக்கும்போது . . . நீங்கள் தொடர்ந்து வேட்டையாடப்படும்போது, உங்கள் வீட்டைவிட்டு நீங்கள் துரத்தப்படும் போது, காவல் துறையினரிடமிருந்து வெகுதூரம் விலகி, அவர்களால் கண்டுபிடிக்க முடியாத ஓர் இடத்தில் நீங்கள் வாழ நேரும்போது, யாராவது ஒருவர் வருகிறார், அவர் உங்களுடைய இருப்பிடத்தைப் போலீசாருக்குக் காட்டிக்கொடுத்து விடுவாரோ என்னும் சந்தேகம் உங்களுக்கு ஏற்படும்போது . . . ஒருமுறை எனக்கே அப்படியொரு நிலை ஏற்பட்டது.

காட்டில் நடந்த ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்பிழைத்தவர்களை மீட்க உதவும்படி அரசு என்னிடம் கேட்டுக்கொண்டது. காடுகளுக்குள் செல்ல அவர்களுக்குப் பயம். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் பதற்றமுற்றிருந்தனர். பேச்சு வார்த்தைக்குப் பின் நான் சென்றேன். ஆனால் காவல் துறை என்னை ஏமாற்றியது. அளித்திருந்த வாக்குறுதிக்கு மாறாக அவர்கள் என்னைப் பின் தொடர்ந்து வந்திருந்தனர். அவர்கள் தம் வழக்கமான பாணியில் வழியில் தென்பட்ட கோழிகளையும் மது வகைகளையும் சூறையாடத் தொடங்கினர். காவல் துறையினரை நான்தான் அழைத்து வந்திருக்கிறேன் என மாவோயிஸ்ட்டுகள் கருதினர். என்னை ஒரு மரத்தில் கட்டிவைத்தனர். உண்மை நிலை தெரியாததால் அவர்கள் என்னைக் கொல்லவும் வாய்ப்பிருந்தது. தம்மை ஏமாற்றும் சகாக்களையேகூட அவர்கள் விட்டுவைத்ததில்லை.

நான் அந்தக் கிராமத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்தேன். அவர்களில் யாருமே நாற்பது வயதைக் கடந்தவர்கள் அல்லர்-அதற்கு மேல் அவர்கள் வாழ்ந்ததும் இல்லை. குழந்தைகளுக்குக் கடுமையான ஊட்டச் சத்துப் பற்றாக்குறை இருந்தது. ஒரு எட்டு வயதுச் சிறுவன் என் பாதுகாவலுக்கு இருந்தான். அவன் ஒரு குல்லாய் அணிந்திருந்தான். கையில் விசில் இருந்தது. அவை அவனைப் பெருமிதம்கொள்ளச் செய்திருந்தன. நான் அவனிடம் காவல் துறையினர் அந்தக் கிராமத்துக்குக் கடைசியாக எப்போது வந்தார்கள் எனக் கேட்டேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு என அவன் சொன்னான். அவர்கள் என்ன செய்தார்கள்? 40 வீடுகளைக் கொளுத்தினார்கள், மூன்று பேரைக் கொன்றார்கள், அங்கு நின்றுகொண்டிருந்த பெண்களைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார்கள். பைலாடிலாக்குக்குச் சற்றே பின்புறம் உள்ள ஒரு கிராமம் அது. நிலக்கரிப் புழுதியால் மூடப்பட்டிருந்தது அக்கிராமம். அங்கு பள்ளிக்கூடம் இல்லை. வளர்ச்சியின் இந்திய உதாரணம் இது.

வன்முறையைக் கைவிடச் சொல்லி நீங்கள் மாவோயிஸ்ட்டுகளிடம் சொல்லுங்கள் என அரசு ஜனநாயக உரிமைக்கான அமைப்புகளிடம் கேட்கிறது. ஆனால் முதலில் உங்கள் படைகளிடம் வன்முறையைக் கைவிடச் சொல்லுங்கள் என நாங்கள் அரசிடம் சொல்கிறோம். உங்கள் காவல் துறைக்கெதிராக மனித உரிமை அமைப்புகள் கொடுத்துள்ள புகார்களின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யுங்கள். அதைக்கூடச் செய்யாமல் அவர்களை வன்முறைப் பாதையைக் கைவிட வற்புறுத்திக்கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் என்ன சொல்ல வேண்டுமென்று விரும்புகிறீர்கள்? நாங்கள் அங்கே வாழ்கிறோம். எங்களுக்கு அங்குள்ள நிலைமை தெரியும். வெளியிலிருந்து பார்க்கும்போது சில நிகழ்வுகள் பயங்கரமானவையாகத் தோற்றமளிக்கும். ஷிறிளிக்களின் கும்பல் ஒன்று கிராமங்களை ஒன்றன்பின் ஒன்றாக எரித்துக்கொண்டிருந்தது. கிராம மக்கள் இந்தக் கும்பலைச் சுற்றி வளைத்துக் கொன்றனர்.

கடந்த ஐந்தாண்டுகளில் எந்த ஓர் அரசியல் தலைவரும் தண்டே வாடாவுக்கு வந்து பழங்குடி மக்களைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் என்ன எனக் கேட்டதில்லை. ஆகவே நான் பழங்குடி மக்களைத் தில்லிக்கு அழைத்துச் செல்ல நினைத்தேன். அங்கே பெரிய கவனம் கிடைக்கும் என எதிர்பா£ர்த்தேன். காயமுற்ற பழங்குடி மக்களைத் தில்லியின் நீஷீஸீstவீtutவீஷீஸீ நீறீuதீக்கு அழைத்துச் சென்றேன். ஒன்றுமே நடக்கவில்லை. நகரவாசிகளின் தற்போதைய நிலை இதுதான். கிராமங்களில் என்ன நடக்கிறது என்பது குறித்து அவர்களுக்கு எந்தக் கவலையுமில்லை. சௌகரியமாக வாழ்பவர்கள்தாம் அமைதியைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர்களது சௌகரியமான வாழ்க்கைக்கு இடையூறு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அமைதி ஏற்பட வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தேவையானது நீதி மட்டுமே. வினோபா பாவே சொன்னார், “எங்கே நீதி இல்லையோ அங்கே அமைதியும் நிலவ முடியாது” ஆனால் அரசு நீதியைப் பற்றிப் பேசுவதில்லை.

ஏன் லட்சக்கணக்கான குடிமக்கள் ஆயுதமேந்தியிருக்கிறார்கள்? நடுத்தர மக்களாகிய நம்மால் அதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நாம் நகரங்களில் வாழ்கிறோம். காவல் துறை நமக்காக இருக்கிறது. அரசு நமக்காக இருக்கிறது. நாம் ஒரு பக்கச் சார்புடையவர்களாக இருக்கிறோம். மறுபக்கத்தில் இருப்பவர்களுக்குக் காவல் துறை இல்லை, அரசு இல்லை. அவர்களுக்குச் சாப்பிடுவதற்கு எதுவுமே இல்லை. அவர்கள்தாம் ஆயுதம் தாங்கியிருப்பவர்கள். பல ஆண்டுகளாக அவர்கள் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு நிர்வாக அமைப்பு இருக்கிறது. சிலர் அந்த அமைப்புக்கு வெளியே இருத்தப்பட்டிருக்கிறார்கள். இதுதான் அவர்கள் போராட்டத்திற்குக் காரணம். பூமியின் இந்த நிலங்கள் யாருடையவை என்னும் ஒரு கேள்வி எழுமானால் அவை எல்லோருக்குமானவை எனப் பதில் கிடைக்கலாம். எனினும் நிலம் சிலருக்கு அதிகமாகவும் சிலருக்கு மிகக் குறைவாகவும் இருக்கிறது என்பதே எதார்த்தம். நீங்கள் நகரத்தில் இருக்கிறீர்கள், அதனால் உங்களுக்கு அதிகமாக இருக்கிறது. நீங்கள் பிராமணர், அதனால் உங்களிடம் அதிக நிலம் இருக்கிறது, நீங்கள் படித்தவர், அதனால் உங்களிடம் அதிக நிலம் இருக்கிறது. மும்பையின் மரைன் டிரைவில் பிறந்த ஒரு குழந்தை தாராவியில் வசிக்கும் ஒரு குழந்தையின் வீட்டை இடிக்க முடியுமென்றால் அது ஏன் தலைகீழாக நடக்கக் கூடாது?

சமத்துவமின்மை நம் அமைப்பிற்குள்ளேயே இருக்கிறது. இயற்கை வளங்களின் மீது யாருக்கு அதிக அதிகாரம் என்பது குறித்து நிலவும் கருத்தியல் நம் மதிப்பீடுகளின் ஒரு பகுதியாகியிருக்கிறது, பிறகு அரசியல் அமைப்பின் பகுதியாகியிருக்கிறது. மேற்குறிப்பிட்ட இரண்டுமே நம் பொருளாதார அமைப்பால் பேணப்படுபவை. இந்த நம் சமூக அமைப்பின் அடிப்படைகள் இதன்படியே உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புமுறைதான் ஏழைகளை ஏழைகளாகவும் பணக்காரர்களைப் பணக்காரர்களாகவும் வைத்திருக்கிறது. நாம் இந்த அமைப்பு குறித்து திருப்தியடைந்திருக்கிறோம். ஆனால் இந்த அமைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் நிலை என்ன? அவர்கள் இந்த அமைப்பு முறையை மாற்ற விரும்புகிறார்கள். இப்போது நடந்துகொண்டிருக்கும் போராட்டம் அமைப்புரீதியான வன்முறைக்கு எதிரானது. இந்த அமைப்பு முறை மாறாமல் எல்லோரும் சமம் என்னும் நிலை உருவாகாமல் இந்தப் போராட்டங்கள் முடிவுக்கு வரமாட்டா.

விரக்தியுற்ற மனிதன் எவனோ அவன் போராடுவான். இது ஏழைகளின் போராட்டம். நக்ஸலைட்டுகள் அவர்களுக்கு அடையாளமாக மட்டுமே இருக்கிறார்கள். மார்க்ஸ் இல்லாமலிருந்திருந்தால், காந்தி இல்லாமலிருந்திருந்தால் அவர்கள் போராட மாட்டார்களா? போராடுபவர்களுக்கு மாவோயிஸ்ட்டுகளோ காந்தியவாதிகளோ தேவையில்லை. ஆனால் சில தருணங்களில் வினோபா, சில தருணங்களில் காந்தியவாதிகள் அல்லது மாவோயிஸ்ட்டுகள் அவர்களது போராட்டங்களில் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள். இந்தப் போராட்டங்களை ராணுவத்தைக் கொண்டு ஒடுக்கிவிடலாம் என மத்திய அரசு கருதுமானால் அது தவறான அணுகுமுறை. சில தருணங்களில் உச்சபட்சமான அடக்குமுறைகள் போராடுபவர்களுக்கு வலுவூட்டும்.

அமைதி வேண்டும் என மத்திய அரசு நினைக்குமானால் அதை அவர்களால் ஒரே வாரத்தில் அடைய முடியும். அவர்கள் பழங்குடியினரிடம் சென்று அவர்களுக்கு மகிழ்ச்சியை வழங்க வேண்டும். மூடப்பட்டிருக்கும் அங்கன்வாடிகளை, சுகாதார மையங்களை, பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் துன்பத்துக்கு இரையாக்குவதன் மூலம் நீங்கள் அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றுவிடலாம் என நினைக்கிறீர்கள். நீங்கள் நெருப்பின் மீது கம்பளியைப் போர்த்தினால் கம்பளி பற்றியெரியும். நீங்கள் உங்களுடைய சிளிஙிஸிகி படையை அனுப்புகிறீர்கள், அவர்கள் படுக்கையில் இருக்கும் ஒரு முதியவரைக் குத்திக் கொல்கிறார்கள். நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள் என மாவோயிஸ்ட்டுகள் சொன்னார்களோ அப்படியே நடந்துகொள்கிறீர்கள். அரசு என்பது ஒடுக்குமுறைக் கருவி என அவர்கள் நீண்டகாலமாகப் பழங்குடி மக்களிடம் சொல்லி வந்திருக்கிறார்கள்.

இப்போது உலகம் முழுவதும் ஏழைகள் சுமையாக, அடிப்படை வளங்களைக் குறைப்பவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். இப்போது அவர்களை ஒரேயடியாக ஒழித்துக் கட்டிவிட்டு எஞ்சியிருப்பவர்கள் பூமியின் வளங்களுக்குச் சொந்தக்காரர்களாகிவிட வேண்டும்! பழங்குடி மக்களே மிகப் பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறார்கள். அரசு அவர்களை இனப்படுகொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறது. இந்தத் திசையில்தான் நாகரிக சமூகம் சென்றுகொண்டிருக்கிறது. உங்களால் லட்சக்கணக்கான மக்களைக் கொல்ல முடியுமா? நீங்கள் நிச்சயம் அதற்கு முயல்வீர்கள். ஆனால் அவர்கள் கிளர்ந்தெழுந்து உங்களைக் கொல்ல முற்பட்டால் நீங்கள் உங்களைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.

மூன்று வகையான ஏழைகள் இருக்கிறார்கள். (1) பணக்காரர்களான உங்களை அண்டிப் பிழைக்கும் பலூன் வியாபாரிகள், வீட்டு வேலைக்காரர்கள், கட்டுமானப் பணியாளர்கள் (2) படிப்பறிவற்றவர்களாக, தாழ்த்தப்பட்ட சாதியினராக இருப்பதால் ஒருபோதும் தம்மால் வசதி படைத்தவர்களாக ஆக முடியாது எனக் கருதுபவர்கள் (3) நீங்கள் உங்கள் வசதியைப் பெருக்கிக்கொள்வதற்காக யாருடைய நிலங்களை ஆக்கிரமித்திருக்கிறீர்களோ அந்த, முன்பு தங்களுக்குரிய காடுகளில் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்த பழங்குடி மக்களைப் போன்றவர்கள். அதனால்தான் அவர்கள் ஆயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நீங்கள் சிதம்பரத்திடம் ஓடுகிறீர்கள். முதலிரண்டு வகையினரும் மூன்றாவது வகையினரோடு சேரும்போது நீங்கள் முற்றாக அழிக்கப்பட்டுவிடுவீர்கள். இதில் எங்களுடைய நிலைப்பாடு என்ன? வினோபா சொல்வார், “அநீதியை ஏற்றுக்கொள்வது தவறு. அவ்வாறு பணிந்துபோவதற்கு எதிராக ஏழைகளை நான் தூண்டிவிடுவேன்” சத்தீஷ்கரில் இப்போது நடந்துகொண்டிருப்பவை மத்தியத் தர வர்க்கத்தின் ஒப்புதலற்று நடப்பவையல்ல.

வன்முறையின் விதையை, அபாயத்தின் விதையை நீங்கள்தான் தூவுகிறீர்கள். சால்வா ஜூடும் என்னும் அமைப்பு தோற்றுவிக்கப்படுவதற்கு முன்பு மாவோயிஸ்ட்டுகளின் எண்ணிக்கை வெறும் 5000 மட்டுமே. அது தோற்றுவிக்கப்பட்ட பிறகு அவர்களது எண்ணிக்கை 1,10,000 ஆக வளர்ந்திருக்கிறது. அதாவது 22 மடங்கு அதிகமாக வளர்ந்திருக்கிறார்கள். ஆபரேஷன் கிரீன் ஹண்ட்டின் முடிவில் உயிரோடு எஞ்சியிருக்கும் ஒவ்வொரு பழங் குடியும் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முழுநேர ஊழியராக மாறுவார். மாவோயிஸ்ட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அவர்களது ஆளுகைப் பரப்பும் அதிகரிக்கும். அவர்கள் மும்பைக்கும் தில்லிக்கும் வருவார்கள். நம் பாதுகாப்புப் படைகளில் பணிபுரியும் இளைஞர்களுக்காக நான் வருந்துகிறேன். எந்த வழியிலும் அவர்களுக்கு இழப்புதான். துணை ராணுவப் படைகளிலும் காவல் துறையிலும் சேரவில்லையென்றால் அவர்கள் பட்டினியால் மடிய நேரிடும். அவற்றில் சேர்ந்தால் அவர்கள் மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்படுவார்கள். கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக அவர்களை ஏன் மரணத்தை நோக்கித் தள்ளுகிறீர்கள்? இளைஞர்களில் ஒரு பிரிவினரை மற்றொரு பிரிவினரோடு சண்டையிடச் செய்வதன் மூலம் கார்ப்பரேட்டுகள் தம் செல்வத்தைப் பெருக்கிக்கொள்கின்றன.

பஸ்தாருக்கு வாருங்கள் என நான் உங்களிடம் வேண்டுகிறேன். அங்குள்ள பழங்குடி மக்களோடு இணைந்து நில்லுங்கள்.

நன்றி : காலச்சுவடு

தொடர்புடைய இணைப்புகள் :

இந்தியாவின் இதயத்தின் மீதான போர் - எழுத்தாளர் அருந்ததிராய்

போரை நிறுத்து - வினவு

பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீது இந்திய அரசு தொடுத்துள்ள போர்! - மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் புரட்சிகர அமைப்புகள்.

மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!! பிப்-20 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்!!

February 10, 2010

நான் வித்யா - புத்தக அறிமுகம்!


நடந்து முடிந்த தமிழ்மண விருது போட்டியில்... பெண்கள்/திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல் பிரிவில்.. குருத்து தளத்திற்கு இரண்டாம் பரிசும், பதிவர் லிவிங் ஸ்மைல் வித்யாவிற்கு முதல் பரிசு கிடைத்தது. பரிசுத் தொகைக்கு வாங்கிய புத்தகங்களில் இந்த புத்தகமும் ஒன்று.

வாங்கிய இரண்டாவது நாளின் பின்னிரவிற்குள் படித்து முடித்துவிட்டேன். இந்த புத்தகம் 2007 டிசம்பரில் வெளிவந்த சமயத்தில் தமிழ்மணத்தில் விளம்பரம் பார்த்தும், பிறகு புத்தக கண்காட்சியில், கடைகளில் கண்ணில் பட்டும், கடந்து சென்றுவிட்டேன். காரணம் - கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் என்னை ஈர்ப்பதில்லை. புத்தக கண்காட்சிகளுக்கு வரும் வாசிப்பு பழக்கம் இல்லாத மக்களுக்காக எழுதப்படும் புத்தகங்களாக இருப்பது தான் பிரதான காரணம். சில புத்தகங்களை வாசித்த பொழுதும் இந்த கருத்து வலுப்பட்டிருக்கிறது.

"சொர்க்கம் வேண்டும் என்று நான் கேட்கவில்லை;
நரகம் வேண்டாமே என்று தான் மன்றாடுகிறேன்"


என...வித்யா புத்தகத்தின் இறுதி பக்கங்களில் வேண்டும் பொழுது...குஜராத்தில் இனப்படுகொலை நடந்த பொழுது... இந்து மத பயங்கரவாதிகளிடம் கைகூப்பி தன் உயிருக்காக.. கண்ணீர் மல்க... கெஞ்சி நிற்கும் அந்த முஸ்லீம் இளைஞரின் முகம் தான் நினைவுக்கு வந்து போனது.

வித்யாவின் இந்த கோரிக்கையை, பொதுமக்களுக்கு பரவலாய் சென்று சேர்க்கும் விதத்தில்.. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டது மிகச்சரி என கருதுகிறேன்.

****

வித்யா கடந்து வந்த பாதையின் சரிதை இது. பால்ய காலம் தொட்டே தன்னை பெண்ணாய் உணர ஆரம்பித்தது முதல் எதிர்கொண்ட மனசிக்கல்கள், உறவின் உரசல்கள், சமூக சிக்கல்கள் என வித்யாவின் பாதையெங்கும் வலி தான். நமக்கும் நன்றாகவே வலிக்கிறது.

****

முதல் அத்தியாயமே 'நிர்வாணம்'. முன்பொருமுறை மேலை நாட்டில் நடந்த மாற்று பாலினம் மாறுவதற்கான அறுவை சிகிச்சையை யூ டியூப்-பில் பார்த்துவிட்டு கதிகலங்கி போனேன். அதை விட அதிர்ச்சியாக இருந்தது வித்யாவிற்கு நடந்த அறுவை சிகிச்சை. எந்த பரிசோதனையும் இல்லை. முறையான அறுவை தியேட்டர் இல்லை. கருவி இல்லை. 'நிர்வாணம்' - மறு ஜென்மம் என்றால் மிகையில்லை.

****

புத்தகத்தை வாங்கும் பொழுது... முகப்பு அட்டையில் உள்ள வித்யா படம் சரவணனும் + வித்யாவும் கலந்து இருப்பதை உணர முடிந்தது. படித்து முடித்ததும்... சரவணன் காணாமல் போய்... அறுவை சிகிச்சையின் பொழுது... பிடிவாதமாய் கழட்ட மறுத்த அந்த மெல்லிய மூக்கத்தியோடு வித்யாவாக மட்டும் கண்ணுக்கு தெரிந்தார். புத்தகம் அந்த ரசவாதத்தை அருமையாக செய்திருக்கிறது.

****

வெளியிட்ட ஆண்டில் புத்தக கண்காட்சியில் இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிறது. தமிழோடு, ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

"புரிந்து கொள்வீர்களா? எனில், நன்றி" யுடன் புத்தகத்தை நிறைவு செய்கிறார்.

புரிந்து கொள்ள முடிகிறது வித்யா.


தோழமையுடன்,

குருத்து


பின்குறிப்பு : சென்னையில் ஒரு பொது நூலகம் ஒன்றிக்காய்... படித்த புத்தகங்களை பொதுமக்களிடமிருந்து வாங்கி கொண்டிருக்கிறார்கள். என்னுடைய மற்ற புத்தகங்களை தருகிறேனோ இல்லையோ, வித்யாவின் புத்தகத்தை மட்டுமாவது நிச்சயம் அனுப்ப வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன்.

தொடர்புடைய இணைப்புகள் :

லிவிங்ஸ்மைல் வித்யாவின் தளம்

பொட்டை - ஒரு உண்மை நிகழ்வு

என்னை சக மனுசியாக பார்த்தார்கள் - குருத்து

February 8, 2010

கறுப்பு நிறம் : நம் நிறத்தையே நமக்கு எப்படி பிடிக்காமல் போனது?

சாதி மறுப்பு திருமணம் செய்வதற்காக, பெண் தேடிக்கொண்டிருந்தோம். ஒரு பெண்ணைப் பார்த்து தனியாக பேச, எட்டு வயது அக்கா பையனையும் உடன் அழைத்து சென்றிருந்தேன்.
அரைமணி நேரம் பேசிவிட்டு... வீடு திரும்பும் பொழுது,
'அவங்களை பிடிச்சிருக்கா?' அக்கா பையனிடம் கேட்டேன். அமைதியாக இருந்தான்.
"பிடிக்கல" என்றான்.
"ஏண்டா?" என்றேன்.
'அவங்க கருப்பா இருக்காங்க!" என்றான்.
மிகுந்த கவலைக்குள்ளானேன்.
ஏனென்றால்... அவன் நல்ல கருப்பு.

****

தமிழர்களின் நிறம் கருப்பு. நம் நிறத்தையே நமக்கு பிடிக்காமல் போனது? கேலியும், கிண்டலும் செய்யும் அளவிற்கு ஏன் ஆனது? '7 நாளில் சிவப்பழகு' என கோடிக்கணக்கில் நம்மிடமே தைரியமாக சொல்லி.. பன்னாட்டு நிறுவனங்கள் எப்படி கோடிக்கணக்கில் நம்மிடமே கல்லாக் கட்ட முடிகிறது? சிவந்த நிறமுள்ள பெண்/ஆண் வேண்டும் என பத்திரிக்கைகளில் திருமண விளம்பரங்கள் பார்க்கும் பொழுது கோபம் தலைக்கேறுகிறது. இதற்கான சமூக, வரலாற்று காரணங்களை தேடி அலைந்த பொழுது... பேராசிரியர் தொ. பரமசிவன் சில அரிய தகவல்கள் தருகிறார். படியுங்கள். உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்.

****

தாழ்வுக்கும் இழிவுக்கும் உரியதாகக் கறுப்பு நிறம் கருதப்பட்டதன் சமூக வரலாற்றுக் காரணிகள் யாவை?

இக்கேள்விக்கான விடையை சமூக அமைப்பில் காண இயலாது. மாறாக அதிகாரம் சார்ந்த அரசியல் அமைப்புக்குள்ளே தேடவேண்டும். அதுவும் தமிழ் அரசுகள் வீழ்ச்சியடைந்த 13ம் நூற்றாண்டின் இறுதிக்குப் பின்னரே தேட வேண்டும்.

கி.பி. 1310 முதல் 1323 வரை தமிழ்நாடு இசுலாமியர் படையெடுப்பால் அலைக்கழிந்தது. மீண்டும் 1383ல் விஜய நகரப் பேரரசின் தளபதிகளின் படையெடுப்பால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. விஜய நகரப் பேரரசு இசுலாமியருக்கு எதிராக வைதிக நெறியை உயர்ந்த இலட்சியமாகக் கொண்டு தோன்றிய அரசமரபாகும். ஆட்சியதிகாரம் விஜய நகரப் பேரரசின் தள்பதிகளின் கைக்கு மாறியவுடன் தமிழ்நாடு ஒரு பண்பாட்டு நெருக்கடியை எதிர்கொண்டது.

அதாவது வரலாற்றில் முதல்முறையாகத் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரம் பிறமொழி பேசும் ஆட்சியாளர்களிடம் மாறியது. இந்த ஆட்சியாளரைத் தொடர்ந்து தெலுங்கு மொழி பேசும் மக்கள் பெருமளவு குடியேறத் தொடங்கினர். பிராமணர் தொடங்கிச் சக்கிலியர் ஈறாக இந்தக் குடியேற்றம் அமைந்தது. பிராமணர், பிராமணரை அடுத்த 'மேல் சாதியினரான' புலால் உண்ணாத ரெட்டியார், ராஜுக்கள் இவர்களுக்கு அடுத்த படிநிலைகளில் அமைந்த நாயுடு (வெலமா, கம்மவார், கவர, காப்பு, பலிஜா), இவர்களுக்கும் அடுத்த நிலையில் உள்ள ஆசாரிகள், பெரும்பாலும் புன்செய் நிலத்து விவசாயிகளான நாயக்கர், மிகத் தாழ்நிலையில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியர், தோட்டி வேலை செய்யும் சக்கிலியர் என இவர்களை வகைப்படுத்துக் காணலாம்.

இவர்களோடு செளராட்டிரப் பகுதியிலிருந்து ஏற்கனவே வெளியேறி ஆந்திரத்தில் இருந்த நெசவுத் தொழில் செய்யும் சாதியான செளராட்டிரர்களும் தமிழகத்தில் வந்து குடியேறினர். இக்கால கட்டத்தில் தமிழ்நாட்டில் தனித்து வளர்ந்திருந்த சைவ, வைணவ மதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. வைதிக நெறியே முன்னிறுத்தப்பட்டது. 'இந்து மதம்' அதிகாரத்தில் அமர்ந்தது. தமிழ் அக்காலத்தில் ஆட்சி மொழியாக இல்லை. ஆட்சியாளர்களின் மொழியாகிய தெலுங்கு பேணப்பட்டது. அரசியல் அதிகாரத்தில், வைதிக நெறியின் காவலர்களான பிராமணர்க்கும் சம்சுகிருதத்திற்கும் முன்னுரிமை தரப்பட்டது.

இவர்களின் ஆட்சி முடியும் தறுவாயில் கி.பி. 1700க்குப் பிறகு உருது பேசும் வடநாட்டு முசுலீம்கள் அங்காங்கே சில பகுதிகளில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினர். மிகச்சில பகுதிகளில் பிரஞ்சுக்காரரும் ஏனைய பகுதிகளில் பிரிட்டிஷ்காரர்களும் ஆட்சியைக் கைப்பற்றினர்.

கி.பி. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலாகத் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தைக் கையிலே வைத்திருந்த அனைத்து ஆட்சியாளர்களும், தமிழர்களின் சாரசரி நிறத்திலிருந்து வேறுபட்ட சிவந்த நிறமுடையவர்கள். அவர்களால் ஆதரிக்கப்பட்ட வடநாட்டில் இருந்து வந்த இசுலாமிய ஞானிகள், ஐரோப்பியத் பாதிரிமார்கள், பிராமணர்கள் ஆகிய அனைவரும் தமிழர்களைவிடச் சிவந்த நிறமுடையவர்கள். எனவே ஐந்து நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரமும், அரசியல் சித்தாந்தங்களையும் நடைமுறைகளையும் உயர்ந்த்திப் பிடிக்கின்ற ஆன்மீக அதிகாரமும் சிவந்த நிறமுடையவர்களின் கையிலேயே இருந்தது. எனவே இந்த நிறம் அதிகாரத்தின் நிறமாக, உயர்ந்த ஆன்மீகத்தின் நிறமாக, உயர்ந்த ஆன்மீகத்தின் நிறமாக, மேட்டிமையின் சின்னமாக, அழகு நிறைந்ததாகக் காட்டப்பட்டது. சுருக்கமாகச் சொல்வதானல், தமிழ் பேசும் பெருவாரியான மக்கள் கூட்டத்தாரின் மரபுவழி அழகுணர்ச்சி மனிதத் தோலின் நிறத்தைப் பொறுத்த மட்டில் திசைமாற்றம் பெற்றது.

எதிர்நிலையில் சொல்வதனால். கருப்பு நிறமுடைய மக்கள் அழகற்றவர்களாகவும், ஆளப்படுவர்களாகவும், அதிகாரத்திற்குத் தகுதியற்றவர்களாகவும், இழிவின் சின்னமாகவும் கருதப்பட்டனர். இன்றளவும் இதுவே தொடர் கதையாகி வருகிறது.

எனவே தான் 'கறுப்பு - சிவப்பு' என்பது வெறும் அழகுணர்ச்சி சார்ந்த பிரச்சனையன்று. அது மரபுவழி அழகுணர்ச்சியிலிருந்து திசை மாற்றப்பட்டவர்களின் அதிகார வேட்கைக்கும் மரபுவழிச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட எளிய மக்களுக்கும் இடையிலே நிலவிவரும் ஒரு முரண்பாடு ஆகும்.

- பேராசிரியர் மற்றும் ஆய்வாளர் தொ. பரமசிவன் எழுதிய பண்பாட்டு அசைவுகள் புத்தகத்திலிருந்து...பக்கம் 113, 114.

February 1, 2010

விருதுகளுக்குப் பின்னால்!

விருதுகளும் பட்டங்களும் ஜமீன்தாரி சிந்தனையின் பாதிப்பால் ஏற்பட்டவை என்று கூறினால் அதைப் பலரும் மறுக்கக்கூடும்.​ அளப்பரிய சேவை செய்தவர்களையும்,​​ திறமையாளர்களை​யும் கெளரவிப்பது ஏன் என்று அவர்கள் கேட்கக்கூடும்.​ நியாயம் தான்.​ ஆனால் தங்களது சேவையை சமுதாயம் அங்கீகரிக்கிறது என்பதை எண்ணிப் பெருமைப்படுவதுடன் நின்றுவிடாமல் அந்த விருதையோ,​​ பட்டத்தையோ பெயருடன் இணைத்துக்​கொண்டு பெருமை தட்டிக்​கொள்​வது அவசியம்​தானா என்று கேட்கத்​தோன்றுகிறது.​

ஒருவரின் சேவையை அங்கீகரிக்கும் விதத்தில் வழங்கப்படுவது​தான் பல்கலைக்​கழகங்களால் தரப்​படும் கெளரவ டாக்டர் பட்டம்.​ இந்தியாவிலேயே மிக அதிகமான பல்கலைக்​கழகங்களால் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்​பட்டவர் பண்டித ஜவஹர்லால் நேருவாகத்​தான் இருக்கும்.​ அவர் ஒரு​போதும் தன்னை டாக்டர் ஜவஹர்லால் நேரு என்று அழைப்பதை விரும்பவில்லை.​ கெளரவ டாக்டர் பட்டத்தை யாரும் தனது பெயருக்கு முன்னால் போட்டுப் பெருமை தட்டிக்​கொள்வதில்லை என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தார்.​

இன்னாருக்கு கெளரவ டாக்டர் பட்டம் தரப்பட​வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல்,​​ தனியார் நிகர்நிலைப் பல்கலைக்​கழகங்​கள் நகைச்சுவை நடிகர்கள் உள்பட பலருக்கும் டாக்டர் பட்டத்தை வாரி வழங்குகின்றன.​ அதை நமது ஊடகங்களும் விளம்பரப்படுத்தி மகிழ்கின்றன.​ விருதுகளும் பட்டங்களும்,​​ அமெரிக்காவில் உள்ளது​போல விரைவிலேயே விலை நிர்ணயம் செய்யப்​பட்டாலும் நாம் வியப்படையத் தேவையில்லை.

அரசு விருதுகள் வழங்குவது என்பதைத் தவிர்க்க இயலாது தான். மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் வழங்கும் விருதுகளும் தங்களது மதிப்பையும், மரியாதையையும் இழந்து கேலிப்பொருள்களாக மாறிவருவது வேதனைக்குரிய ஒன்று. ஆட்சியாளர்களின் அடிவருடிகளும், ஆளூட்கட்சியின் நலம் விரும்பிகளும் மட்டுமே இந்த விருதுகளின் பட்டியலில் இடம் பெறுபவர்களில் பெரும்பான்மையினர் என்பஹு இந்தியாவின் எழுதப்படாத சட்டங்களில் ஒன்றாகிவிட்டது.

தகுதிக்கும், திறமைக்கும் தரப்பட்டுள்ள அங்கீகாரம் என்பது போய், நன்றி விசுவாசத்துக்காகத் தரப்படும் நற்சான்றிதழ் தான் இந்த விருதுகள் என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது.

மாநில விருதுகள் தான் இப்படியென்றால், மத்திய அரசின் "பத்ம பூஷண்' விருதுகளின் நிலைமையும் அது தான் என்கிற போக்கு சமீபகாலமாக ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்த வருடத்திய "பத்மபூஷண்' விருதுகளின் பட்டியல் அமெரிக்காவாழ் இந்தியரான ஹோட்டல் அதிபர் சந்த்சிங் சத்வாலின் பெயர் அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த மனிதர் அமெரிக்காவில் பல மோசடிகளில் தொடர்புடையவர் என்பதும், ஒரு அரசியல் தரகர் என்பது தெரிந்தும், இவருக்குப் "பத்ம பூஷண்" விருது தரப்படுகிறது என்றால், அது தெரியாமல் நடந்த தவறல்ல!​

இரண்டாண்டுகளுக்கு முன்பே பிரதமரின் அலுவலக்த்தில் "பத்மஸ்ரீ' விருதுக்காக சத்வாலின் பெய​ரைச் சிபாரிசு செய்த​போது வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் இந்த மனிதரின் பின்னணி​யைக் காரணம் காட்டி அதைத் தடுத்து நிறுத்தியது.​ அப்போது பத்மஸ்ரீ விருதுக்கு நிராகரிக்கப்​பட்ட இவரது பெயர்,​​ இப்போது பத்மபூஷண் விருதுக்குத் தகுதிபெற்றிருக்கிறது என்றால் வேடிக்கையாக அல்லவா இருக்கிறது.

சந்த்சிங் சத்வாலின் மோசடிப் பின்னணி என்ன தெரியுமா?​ பஸ்ட் நியூ​யார்க் என்கிற வங்கியில் இவரும் ஓர் இயக்குநர்.​ அந்த வங்கியில் 12 மில்லியன் டாலர் ​(சுமார் 60 கோடி ரூபாய்)​ கடன் வாங்கியதுடன்,​​ கடனைத் திருப்பிக் கொடுக்க வழியில்லாத பலருக்கும் ​ கடன் வழங்க​வும் பரிந்துரைத்தவர் இந்த சத்வால்.​ அந்த வங்கியே இவருடைய கைங்கர்யத்தால் திவாலாகி​யது. பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்கிற அமெரிக்கக் காப்பீட்டு நிறுவனம் இவர் மீது ​ வழக்குத் தொடர்ந்​தது.​ தனது மொத்த வங்கி சொத்தின் மதிப்பே 2,600 டாலர்​தான் என்றும்,​​ வங்கிக் கையிருப்பு நூறே நூறு டாலர்​தான் என்றும் வாக்கு​மூலம் வழங்கிய​வர் 12 மில்லியன் டாலர் கடன் வாங்கிய இந்த சந்த்சிங் சத்வால்.​ பல மில்லியன் டாலர் பெறு​மானமுள்ள ஆடம்பர பங்களாவில் குடியிருந்து​கொண்டு அது தனது தம்பியின் வீடு என்றும், தாம் அங்கே 5,000 டாலர் வாடகைக்கு இருப்பதாகவும்,​​ தானும் மனைவியும் ஹோட்டலில் வேலைக்காக பெறும் 7,600 டாலர் சம்பளப்பணத்தில் வாடகை தருவதாகவும் பொய் வாக்குமூலம் வழங்கியவர்​தான் இவர்.​

நமது இந்தியக் கைவண்ணத்தை சத்வால் அமெரிக்காவிலும் காட்டினார்.​ அன்றைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் மற்றும் அவரது மனைவியும் தற்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டனுக்கு மிகவும் நெருக்கமானவராகி​விட்டார்.​ விளைவு?​

1997-ல் இவர் தர​வேண்டிய 12 மில்லியன் டாலர் கடன் தொகை,​​ பில் கிளிண்டனின் பதவிக்​காலம் முடிய ஒரு மாதம் இருக்கும்​போது வெறும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் டாலராகக் குறைக்​கப்பட்டு தள்ளுபடி செய்யப்​பட்டு​விட்டது.​ இப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா​வின் தேர்தலுக்கும் பெரிய அளவில் நிதி வசூலித்துக்​கொடுத்து அவருக்கும் நெருக்கமாகிவிட்டிருக்​கிறார் சந்த் சிங் சத்வால்.​

சத்வாலுக்கு "பத்மபூஷண்' தரப்படுவதன் காரணம் என்னவாம் தெரியுமா?​ இவர் இந்திய அமெ​ரிக்க அணு​சக்தி ஒப்பந்தம் ஏற்படுவதற்குப் பாடுபட்டவராம்.​ இவரை​விட அதிகமாகப் பங்களிப்பு நல்கியவர்கள் பலர் இருந்தும்,​​ வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் எதிர்ப்புத் தெரிவித்த பிறகும்,​​ இந்த மனிதரின் பல்​வேறு நிதி மோசடிகளும் பின்னணியும் தெரிந்திருந்தும் இவருக்கு இந்தியாவின் மிகவும் கெளரவமான "பத்மபூஷண்' விருது வழங்கப்படு​கிறது என்றால் அந்த விருதுக்கு இனிமேல் மரியாதை எப்படி இருக்கும்?​

சந்த் சிங் சத்வாலுக்கு "பத்ம​பூஷண்' விருது தரப்​பட்டால் தவறான முன்னுதாரணம் ஏற்பட்டு​விடும்.​ விருதுகளை விலைக்கு வாங்கலாம் என்கிற நிலைமை ஏற்பட்டு​விடக்​கூடாது.

தினமணி தலையங்கத்திலிருந்து... 02.01/2010