> குருத்து: December 2018

December 4, 2018

தற்கொலைகளும் வங்கிகள் மீதான நம்பிக்கையின்மையும்!


ஒவ்வொரு வருடமும் தீபாவளி நெருங்கும் வேளையில் பத்திரிகைகளில் சில தற்கொலைகள் கண்ணில் படுகின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்பு கொரட்டூர் பகுதியில் அம்மாவும் மகனும் ஏலச்சீட்டு நடத்தி பலரிடம் பணத்தை வாங்கி, பங்குச்சந்தையில் முதலீடு செய்ததில் 15 லட்சம் வரை நஷ்டமடைந்து விட்டது என இருவரும் தூக்கிலிட்டு இறந்துவிட்டனர். தான் வளர்த்த நாயை கவனிக்க ஆள் இல்லாததால் விசம் வைத்தும் கொன்று விட்டனர்.

இன்று மதுராந்தகம் பகுதியில் சில கோடிகளை வசூல் செய்து தலைமறைவாகிவிட்டனர்.

கடந்தாண்டு மதுரை மாவட்டம் வண்டியூரில் ஏலச்சீட்டு நடத்தி பணத்தை திரும்பக் கொடுக்க முடியாமல் குடும்பத்தில் உள்ள எட்டு பேரும் தற்கொலைக்கு முயன்றதில், வீட்டிலேயே 6 பேர் வரை இறந்துவிட்டனர்.

மக்கள் தங்களுடைய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக சிறுக, சிறுக சேமிப்பதற்காக பண்டு, ஏலச்சீட்டு என தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தனி நபர்களை நம்பி பணத்தை கட்டுகின்றனர்.

பணத்தை வாங்கிய அந்த நபர்கள் தெரிந்த சிறுவியாபாரிகளுக்கு, தொழிலாளிகளுக்கு, சிறு தொழில் செய்பவர்களுக்கு பணத்தின் அளவுக்கு தகுந்த மாதிரி இரண்டு சதவிகித வட்டி, மூணு வட்டி, கந்து வட்டி என்ற அளவில் கடன் தருகிறார்கள். அந்தப் பணம் சரியாக திரும்ப வரும் வரைக்கும் பிரச்சினையில்லை. வாங்குகின்ற நபர்கள் இறந்துவிட்டாலோ, ஊரை விட்டு ஓடிவிட்டாலோ, நொடித்துப் போய் விட்டாலோ, தனது ஊதாரித்தனத்தாலோ நெருக்கடியில் சிக்கிவிடுகின்றனர்.

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு அமல்ராஜ் (50) தான் நடத்தும் ஏலச்சீட்டில் ஆட்டோ ஓட்டுனரை சேர்க்கிறார்.

சில மாதங்கள் பணத்தை கட்டுகிறார். ஏலச்சீட்டு பணத்தை ஒரு குறிப்பிட்ட காலத்தில் எடுக்கிறார். அதற்குப் பிறகு தான் கட்டவேண்டிய பணத்தை கட்ட மறுக்கிறார். போலீசிடம் பஞ்சாயத்து போகிறது. சமரசம் பண்ணி விடுகிறார்கள். அதற்குப் பிறகும் பணத்தை தர மறுக்கிறார்.

அமல்ராஜ் பெட்ரோலை வாங்கி கொண்டு போய் சண்டையிடுகிறார். சண்டையின் முடிவில் பணத்தை கொடுத்தவரும் இறந்துவிடுகிறார். பணத்தை வாங்கியவரும் இறந்துவிடுகிறார். கூடுதலாக பணத்தை வாங்கிய அவருடைய துணைவியாரையும் நெருப்பு பற்றி விடுகிறது.
இப்படி பல ஆண்டுகளாக பல பகுதிகளில் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இதை எப்படி தவிர்க்கலாம்? பெரும்பாலான மக்களுக்கு வங்கி நடவடிக்கைகள் அன்னியமாகத் தான் இருக்கிறது. படிப்பறிவு இல்லாத பெரும்பாலான மக்களுக்கு ஏடிஎம்-ல் பணம் எடுப்பதே மலைப்பாக தான் இருக்கிறது.

கிராமப் பகுதிகளில் வங்கிகளின் தூரம் அதிகம். மேலும் வங்கி தரும் வட்டி விகிதம் குறைவானது என்பதும் ஒரு காரணம்.

சமீபத்தில் உறவினர் ஒருவர் புதிதாக வீடு வாங்கினார். எப்படி இத்தனை லட்சம் என விசாரித்தால்... நெருங்கிய உறவினர்கள் பலரும் நடுத்தரவர்க்க பிரிவினர்கள். வங்கியில் நிரந்தர வைப்பு (Fixed Deposit) வைத்திருந்தார்கள்.

மோடி அரசு நிரந்தர வைப்புகளை எடுக்கவிடாமல் செய்யப்போகிறது என்ற பேச்சு அடிபட்டது. உடனே நிரந்தர வைப்புகளை எடுத்து நெருங்கிய உறவினருக்கு கடனாக கொடுத்து விட்டனர்.

அரசு வங்கிகளும் தனியார் வங்கிகளை போலவே எல்லாவற்றுக்கும் சேவை கட்டணத்தை அதிகமாகிக் கொண்டே போகிறார்கள். சேவைத்துறை என்ற கண்ணோட்டத்திலிருந்து, வருவாய் ஈட்டும் துறையாக மாறி பலகாலமாகிவிட்டது! எஸ்.பி.ஐ வங்கி சில மாதங்களுக்கு முன்பு சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் ரூ. 5000 இருக்கவேண்டும் என அறிவித்தது. கிராம பகுதிகளுக்கு ரூ. 3000 என அறிவித்தது. இதையே காரணம் காட்டி என்னுடைய சேமிப்பு கணக்கை ரத்து செய்ய விண்ணப்பித்தேன். அதற்கான கட்டணம் ரூ. 625 என்றார்கள். பொதுத்துறை வங்கிகளை ஒழித்துக் கட்டுவதற்காக தான் வேலை செய்கிறீர்களா என வங்கி மேலாளரிடம் சண்டையிட்டேன்.

வங்கியில் தகராறு செய்தால் பிற்காலத்தில் வீட்டுக் கடன் தனிநபர் கடன் வாங்க முடியாது என பல நடுத்தர வர்க்கத்தினர் எவ்வளவு கட்டணம் என்றாலும், அமைதியாக கட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள். நீங்கள் தான் சண்டை போடுகிறீர்கள் என்றார் மேலாளர். இறுதியில் வங்கி கணக்கை ரத்து செய்யாமலே மொத்தப் பணத்தையும் தந்தார்கள்.

வங்கிகள் பெருமுதலாளிகளுக்கு கடன்களை அள்ளித் தருகின்றன. அவர்கள் ஒன்று கட்ட மறுக்கிறார்கள். அல்லது நாட்டை விட்டு அரசு பாதுகாப்போடு ஓடிவிடுகிறார்கள். அல்லது அரசே வராக்கடனாக மாற்றிவிடுகிறது அல்லது ரத்து செய்துவிடுகிறது.

வங்கிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. பொதுத்துறை வங்கிகளை இணைத்துக்கொண்டே செல்கிறார்கள்.

இப்பொழுது மோடி 59 வினாடிகளில் சிறு தொழில்களுக்கு ஒரு கோடி வரை கடன் என அறிவித்திருக்கிறார். என்ன திட்டத்தில் அறிவித்திருக்கிறார் என தெரியவில்லை. காத்திருந்து பார்க்கலாம்.

கரையெல்லாம் செண்கப்பூ - சுஜாதா

நாட்டுப்புற பாடல்களை சேகரிக்க பட்டணத்திலிருந்து நாயகன் கிராமத்திற்கு வருகிறார். ஒரு காலத்தில் ஜமீனாக இருந்த அந்த பழைய வீட்டில் இப்பொழுது தனியாளாக தங்குகிறார். வீட்டில் இரவில் சில மர்மங்கள் நடக்கின்றன. பாடல்களை ஆய்வு செய்ய வந்தவர், வீட்டையும் அவ்வப்பொழுது ஆய்வு செய்கிறார்.

இதற்கிடையில் ஜமீந்தாரின் பேத்தியும் நகரத்திலிருந்து வந்து சேர்கிறாள். அந்த வீட்டிலேயே அவளும் தங்குகிறாள். கொஞ்ச நாளில் அவள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறாள். பேய் அடித்துவிட்டது என ஊர்க்காரர்கள் சிலரும், ஊர்க்கார பெண் ஒருத்தி கொன்றுவிட்டாள் என சிலரும் பேசிக்கொள்கிறார்கள்.

கொலை செய்தது யார்? வீட்டில் நடக்கும் மர்மங்களுக்கு காரணம் யார்? என்பதை மீதி கதையில் சொல்கிறார்கள்.

*****


ஆனந்தவிகடனில் 21 வாரம் வெளிவந்து வாசகர்களிடம் பரவலாக பேசப்பட்ட தொடர் இது. சுஜாதா சொல்கிறார் “நாவல் வெளியானதும் ஒரு கிரிக்கெட் டீம் அளவிற்கு தயாரிப்பாளர்கள் வீட்டிற்கு படை எடுத்தார்கள். அதில் பாலுமகேந்திரா, பஞ்சு அருணாச்சலம் என பல பிரபலங்களும் அடக்கம்”

பிறகு மெல்ல மெல்ல சுதி குறைந்து, பிரதாப் போத்தன், ஸ்ரீபிரியா, மனோரமா என பலர் நடித்து, சி.என். இரங்கராஜன் இயக்கியிருக்கிறார். இந்த கதைக்காக ஒரு தயாரிப்பாளர் முன்பணமான ரூ. 5000 தந்துள்ளார். அவர் படம் பண்ணவில்லை என்று ஆனதும் முன்பணத்தை சின்சியராக திரும்ப வாங்கி கொண்டாராம். அதில் வங்கி செலவு ரூ. 10 ஆகியுள்ளது. எடுத்த கதைக்கு ஒத்த ரூபாய் கூட கொடுக்கவில்லை என சுஜாதாவே தனது பேட்டியில் கொஞ்சம் சூசகமாக சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட சினிமாக்காரர்கள் தான் இலவசங்களைப் பற்றி வியாக்கியனம் செய்கிறார்கள்.

சுஜாதா மட்டும் இந்த கதையை எழுதாமல், வேறு யார் எழுதியிருந்தாலும், பிரதாப்பை இறுதியில் ஆய்வாளர் இல்லை. ரகசிய போலீசு என சொல்லியிருப்பார்கள்.



படம் ஊத்திகிச்சு. ஒரு வாரம் கூட ஓடவில்லை. சில டல்லான சானல்களில் இந்த படத்தை அவ்வப்பொழுது போடுவார்கள். “ஊரெல்லாம் பிச்சிப்பூவு, கரையெல்லாம் செண்பகப்பூ”, ”ஏரியில எலந்த மரம்” இளையராஜாவின் பிரபல இரண்டு பாடல்களை நாம் கேட்டிருப்போம்.