> குருத்து: June 2022

June 30, 2022

Stranger Things (2022) Web Series சீசன் 4


1980கால கட்டம். அமெரிக்கா. 500 தலைக்கட்டுகள் கொண்ட கிராமம். நம்மூர் கிராமம் மாதிரி நினைத்துவிடக்கூடாது. சகல வசதிகளும் இருக்க கூடிய கிராமம் தான்.


அங்கு நான்கு பதின்பருவத்து நண்பர்கள். அவர்கள் வயதிற்கேற்ப விளையாடிக்கொண்டு ஜாலியாக இருக்கிறார்கள். அதில் ஒரு பையன் திடீரென காணாமல் போகிறான். உள்ளூரிலேயே காடுகள் இருப்பதால், தன்னார்வலர்களை வரவழைத்து தேடு, தேடு என தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

மக்களுக்கு தெரியாமலேயே எலிகளை சோதனை செய்வது போல, குழந்தைகளை வைத்துக்கொண்டு ஆய்வு செய்கிறார்கள். அதில் சில குழந்தைகளுக்கு (Mutant போல) சில சக்திகள் கிடைக்கின்றன. அதில் ஒரு பெண் குழந்தை அங்கிருந்து தப்பித்துவிடுகிறது.

உள்ளூரில் ஏலியன் ஒன்று சுற்றிக்கொண்டிருக்கிறது. அந்த பையன் காணாமல் போனதற்கும், வேறு சிலரும் காணாமல் போவதற்கும் அது தான் காரணம். அது யாருக்கும் தெரியாத இடத்தில் ஒளிந்து கொள்கிறது.

அடுத்தடுத்து ஆட்கள் காணாமல் போவதால், ஊர் பதட்டமாகிறது. பையனை தேடும் அம்மா, அண்ணா, இயல்பிலேயே துறுதுறுவென இருக்கும் அந்த பசங்க, விசேச சக்தியுள்ள அந்த பெண், யார் காரணம் என மும்முரமாய் தேடும் அந்த போலீசு அதிகாரி இறுதியில் என்ன ஆனது என்பது தான் மீதி கதை.

****

நான் மேலே சொன்னதை கொஞ்சம் கொஞ்சம் மாற்றி நாலு சீசன் வரை வந்துவிட்டார்கள். ஊரில் நடக்கும் ஆபத்தான காரியங்களுக்கு யார் காரணம் என மூணு நாலு குழுக்கள் வேறு வேறு வழிகளில் தேட துவங்குவதும், பிறகு இறுதியில் எல்லோரும் ஒன்று சேர்ந்து பொது எதிரிக்கு எதிராக ஒன்றாக இணைந்து சண்டை செய்வதும் தான் கதை. இதில் இரண்டாவது சீசனில் இருந்து அமெரிக்காவிற்கு பிடிக்காத ரசியாக்காரர்களை வில்லனாக்கி வைத்திருக்கிறார்கள்.

80ஸ் காலத்து ஆடை, மக்களின் பழக்க வழக்கங்கள், சிறுவர்களின் விளையாட்டு, பதின்பருவத்து காதல், ஊடல் என பார்த்து பார்த்து செய்து, கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் திரில்லர், கொஞ்சம் ஏலியன் கலந்து எடுத்து 80ல் சிறுவர்களை இருந்தவர்களை ஈர்த்திருக்கிறார்கள். நடிப்பது பசங்க என்பதால், பசங்களையும் ஈர்த்திருக்கிறார்கள். முதல் சீசனில் பதின்பருவத்து பசங்களாக இருந்தவர்கள் இப்பொழுது கடந்த ஏழு வருடங்களில் இளைஞர்களாக வளர்ந்துவிட்டார்கள். ஏலியனும் சாவப்போவதில்லை. சீசன்களும் முடியப்போவதில்லை. 🙂

நேரம் நிறைய இருப்பவர்கள் பாருங்கள். நெட் பிளிக்சில் தமிழிலும் கிடைக்கிறது. மூன்று சீசன்களின் சுருக்கத்தை நடிகர் பாலாஜி தம் கட்டி வேகமாக சில நிமிடங்களில் பேசியிருக்கிறார். பின்னூட்டத்தில் தருகிறேன். நான் சொன்னது பத்தாது என நினைப்பவர்கள் அதைக் கேட்கலாம்.

சார்லி (2022) தமிழ்


நாயகன் ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்கிறான். அவனது சிறுவயதில் மோசமான கார் விபத்தில் அம்மா, அப்பா, தங்கை மூவரையும் இழந்து, தனியாளாக அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறான். குடும்பத்தை மொத்தமாக தொலைத்ததில் அவனுக்குள் வெறுப்பு சுரந்துகொண்டே இருக்கிறது. சுற்றி இருக்கும் மனிதர்களிடம் அந்த வெறுப்பை உமிழ்ந்துகொண்டே இருக்கிறான்.


இந்த சமயத்தில், எங்கிருந்தோ வந்த ஒரு நாய் அவன் வாழும் குடியிருப்பு பகுதிக்கு வருகிறது. இவனிடம் மெல்ல மெல்ல நெருங்குகிறது. மெல்ல மெல்ல அவனுக்குள் மாற்றங்கள் நிகழ்கின்றன. அவனுக்கு மிகவும் பிடித்த நாயகன் சார்லி என்பதால், சார்லி என அழைக்க துவங்குகிறான்.

நாயை ஆட்கொல்லி நோய் ஒன்று தாக்குகிறது. அவனால் அதை தாங்கிகொள்ள முடியாமல் திணறுகிறான். பிறகு அவனும் அந்த நாயும் என்ன ஆனார்கள் என்பதை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.
***

நாய்க்கும் மனிதனுக்குமான உறவு என்பது மிக நீண்ட காலம் என்கிறது வரலாறு. மனிதன் தன்னுடன் வேட்டையாடினால் நாய்க்கும் பங்குண்டு என நாயை பழக்க ஆரம்பித்திருக்கிறான். வேட்டை எல்லாம் ஒழிந்த பிறகு கூட, வீட்டு விலங்காய் நாய் தொடர்ந்து இருக்கிறது. விசுவாசத்தில் நாயை மிஞ்ச எதுவுமில்லை என்கிறார்கள். தொடர்ந்து நாய் குறித்த செய்திகளும், கதைகளும் உலகை சுற்றி வந்து கொண்டே இருக்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு கதை தான் இந்த படமும். நாயகனும், நாயும் இரண்டு பேர் தான் மொத்த திரையையும் ஆக்கிரமித்து இருக்கிறார்கள். இடையிடையே வேறு சிலரும் வந்து போகிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை நன்றாக காண்பித்திருக்கிறார்கள்.

நாய்களின் உலகம் மிகப்பெரியதாக இருக்கிறது. வீட்டில் ஏதும் நாய்கள் வளர்க்காததால் எனக்கு எந்த அறிவும் இல்லை. ஒருமுறை வீட்டில் நாய் வளர்க்கலாம் என அம்மாவிடம் சின்ன வயதில் கேட்ட பொழுது, “வீட்டில் உள்ள நாய்களையே (எங்களை) வளர்க்க முடியவில்லை. இதில் வாயில்லா ஜீவனையும் வளர்த்து கஷ்டப்படுத்துனுமா!” என சொன்னது நினைவுக்கு வருகிறது.

இப்பொழுது அக்கா வீட்டில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இரண்டு நாய்களை வளர்த்து வருகிறார்கள். பிள்ளைகளில் ஒன்றாக தான் வளர்க்கிறார்கள். ஊருக்கு போனால், “மாமா”டா! என என்னை சொல்லி நெருக்கத்தை உண்டாக்குவார்.

படத்தில் அந்த ஆட்கொல்லி நோய்க்கு ஒரு காரணம் சொல்வார்கள். அதை தெளிவாகவே சொல்லவில்லை. Inbreed என போகிற போக்கில் லேசாக சொல்வார்கள். அது என்னவென்று தேடினால், ஒரு தாயின் மக்களை இணைத்து புதிய குட்டிகளை உருவாக்குவது என்பது கடுமையாக நோய்களை உருவாக்குகிறது என்கிறார்கள். இதை ஏன் செய்கிறார்கள்? என்றால், நாய் வணிகம் என்பது பெரிய சந்தையாக வளர்ந்து நிற்கிறது. ஆகையால் எல்லா கோளாறுகளையும் இதிலும் கொண்டு வந்துவிட்டார்கள்.

அடிப்படையில் இது ஒரு கன்னடப்படம். அதை தமிழ், தெலுங்கு, இந்தி என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். நெருக்கமான காட்சிகளில் எல்லாம் தமிழில் வாயசைக்கிறார்கள். ஒரு சில இடங்களில் கொஞ்சம் வாயசைப்பு வேறு மாதிரி இருக்கிறது.. துணைப் பாத்திரங்கள் தமிழ் முகங்களாய் இல்லை. சில காட்சிகள் பாபி சிம்ஹா வருகிறார். அப்படியே ரஜினியின் மேனரிசம். மொத்தத்தில் ஒரு தமிழ் படம் பார்க்கிற உணர்வை கொண்டு வந்தது பெரிய விசயம் தான்.

கன்னடப்படங்களில் இப்படி படங்கள் சமீப காலமாக வருவது உற்சாகமளிக்கிறது. தமிழில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தான் தமிழில் வாங்கி வெளியிட்டிருக்கிறார். திரையரங்குகளில் படம் வெளியாகியிருக்கிறது. அவசியம் பாருங்கள்.

June 29, 2022

எப்பொழுதும் மாணவனாய் இரு


நேற்று ஐம்பதை கடந்த என் சீனியரைப் போய் பார்த்தேன்.


சீனியர் : "ஜி.எஸ்.டியில் (GST) பிஎச்டி பண்ணலாமான்னு சிந்திக்கிறேன்."

நான் : "கண்டிப்பா படிங்க சார். தொழிலுக்கு பயன்படும்."

சீனியர் : "இன்னொரு சீனியரிடம் பேசினேன்". (அவர் பெயரைச் சொன்னார். அவர் 70 தை கடந்தவர்). நான் பி.எச்.டி படிக்கப்போறேன்னு சொன்னதும் அவரும் என் கூட சேர்ந்து படிக்கிறேன்னு உற்சாகமாக‌ சொல்லிட்டார். இப்படி இப்படி செய்யலாம்னு அடுத்தடுத்து நீண்ட நேரம் பேச ஆரம்பித்துவிட்டார்.

நான் : "அருமை சார். உங்களுக்கு நல்ல கம்பெனி. இது சம்பந்தமா என்ன வேலைன்னாலும் சொல்லுங்க! நான் வந்து செய்றேன்" என்றேன்.

அவரிடம் பேசிவிட்டு வீட்டுக்கு வரும் வழியில், எங்கள் வீடு அருகே இருந்த நடனப் பள்ளி கண்ணில்பட்டது. எனக்கு கூட நடனம் முறையா கத்துக்கனும்னு நிறைய ஆசை. சேரலாமான்னு சீரியசா யோசிச்சுகிட்டு இருக்கிறேன்.

டிஸ்கி : இது காமெடி பதிவல்ல! பாசிட்டிவான பதிவு.

June 15, 2022

"ஆன் லைன் ரம்மி விளையாடுவீங்களா?"


 "நமஸ்தே சார்"

"தமிழ் தெரியுமா?"
"தெரியும் சார். கோவாவில் இருந்து பேசுறேன் சார்"
(ஒரு நொடி. கோவா கடற்கரையில் ரஹ்மானும், சித்தாராவும் அலைகளோடு விளையாடுவது நினைவுக்கு வந்தது)
"ஆன் லைன் ரம்மி விளையாடுவீங்களா?"
"தெரியாதும்மா!! விளையாடுற ஐடியாவும் இல்லை"
"வீட்டில் யாராவது விளையாடுவாங்களா?"
"விளையாட மாட்டாங்கம்மா! அப்படியே விளையாண்டா செல்லை உடைச்சுருவேம்மா!"
(எதிர் முனையில் எந்த சலனமுமில்லை)
"உங்க ப்ரண்ட்ஸ் யாருக்காவது ரெகமண்ட் பண்ணலாமே சார்"
"என் ப்ரண்ட்ஸ் மீது எனக்கு அக்கறை இருக்கும்மா. நானே தற்கொலைக்கு தூண்டுவேனா?"
"யாராவது கேட்டா இந்த எண்ணை கொடுங்க சார்"
டேய்!
May be an image of text that says "Ready, Set, Rummy! Fω"

புத்தகங்கள்


நேற்று அசோக் நகர் வரை ஒரு வேலை. பக்கத்தில் தானே என டிஸ்கவரி புக் பேலஸ் கடைக்கு போனேன்.


சில புத்தகங்களுக்கு பிளாஸ்டிக் கவர் போட்டு பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். அதில் ஆத்மார்த்தியின் புத்தகமும் ஒன்று. ஆத்மார்த்தியை இதுவரை படித்ததில்லை. ஒரே ஒரு சிறுகதை மட்டும் படித்துள்ளேன். "புத்தகம் பற்றி தெரியாமல் எப்படி வாங்குவது?" என கேட்டேன். கடையில் வேலை செய்பவர் கடை முதலாளியிடம் போய் கேட்டு வந்தார். பிரித்து தந்தார்.

முன் அட்டையிலும், பின் அட்டையிலும் ஆத்மார்த்தி. உள்ளே முழுவதும் சாரு இருந்தார். எழுத்துப் பிரசுரம் என்பதால், இப்படி அட்டை மாறாட்டம். நல்லவேளைப் பார்த்தேன். கடை முதலாளியிடம் தெரிவித்தேன். அவரும் சரிபார்த்துவிட்டு "தப்பாக பைண்ட் செய்திருக்கிறார்கள்" என்றார். "மனக்குகை சித்திரங்கள்" வாங்கிக்கொண்டேன்.

பேராசிரியர் அ. மார்க்ஸ் "ஆளுமைகள்" என பாலகோபால், கோ. கேசவன் என சிலரைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதையும் வாங்கிக்கொண்டேன். இரண்டுமே எழுத்துப் பிரசுரம். இரண்டுமே எடை குறைவாய் இருந்தன. இது பாசிட்டிவ். இரண்டுமே டல்லான தாளில் இருந்தன. படிப்பதற்கு எளிதாய் இல்லை.

பாரதி தம்பியின் "கற்க கசடற" வாங்கிக்கொண்டேன். "உலகின் ஆகச் சிறந்த ஒளிப்பதிவாளர்களின் உரையாடல்கள்” என்ற தலைப்புடன் ஜா. தீபா அவர்கள் மொழிபெயர்த்த "ஒளி வித்தகர்கள்" என்ற புத்தகமும் வாங்கிக்கொண்டேன்.

சுற்றிச் சுற்றி நிறைய புத்தகங்கள் பார்த்ததில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.

இன்னும் இரண்டு மாதத்தில் நான்கு புத்தகங்களையும் படித்து முடித்துவிடவேண்டும் என மனதில் சபதமும் செய்துகொண்டேன். பார்க்கலாம். 🙂

இனி முன்பு போல மாதம் ஒருமுறை வரவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

June 14, 2022

தேநீர்





அந்த தேநீர் கடைக்குள் ஐவர் நுழைகிறோம்.


ஒவ்வொருவரும் அவரவர் வயதுக்கேற்ப தேர்வில் சொல்கிறார்கள்.

Black Tea
Black Tea - without Sugar
Green Tea
Lemon Tea
Normal Tea - half sugar

பரபரப்பாக இயங்கும் மாஸ்டருக்கு தெரிவித்து, ஐவருக்கும் பொறுப்பாக வாங்கி கொடுப்பதில் இருக்கிறது திறமை.

நான் எப்பொழுதும் இந்த சாகசத்தில் ஈடுபடுவதில்லை.

8 வருடத்தில் மோடி உடைத்த பர்னிச்சர்கள்


மோடி எட்டு ஆண்டுகளில் செய்த ”சாதனையை” மக்கள் வரிப் பணத்திலேயே ஏகப்பட்ட பணத்தை செலவழித்து, பிரச்சாரம் செய்கிறார்கள். 2024 மக்களவை தேர்தலுக்கு தயாராக காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டார்கள். நாம் எப்படி சும்மா இருக்கமுடியும். நம்ம பங்குக்கு நாம் எட்டு ஆண்டு “சாதனையை” சொல்லவேண்டியது காலத்தின் அவசியமாகிறது.


இத்தனை ஆண்டுகளில் மோடி உடைத்த பர்னிச்சர்கள் அதிகம். மக்களின் வாழ்வை சிக்கலாக்கியதும் அதிகம். துறைவாரியாகவே எட்டு, எட்டா எடுத்துவிடலாம். பறவைப் பார்வையில் பார்த்தால்…. பரந்துப்பட்ட மக்களைப் பாதித்த சில முக்கிய விசயங்களை சொல்வோம்.

1. கொரானா கொன்றது கொஞ்சம். மோடி கொன்றது அதிகம் :




உலக நாடுகள் கொரானாவை எதிர்கொள்ள தயாரான பொழுது, எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல் ஊரடங்கு அறிவித்தார். அன்றாடம் உழைத்து, வீட்டில் உலை பொங்கியவர்கள் எல்லாம் தவித்துப் போனார்கள். மற்ற புயல், வெள்ள காலங்களில் சிவில் சமூகம் களத்தில் இறங்கி தன்னால் சாத்தியமானதை செய்யும். கொரானா ஆட்கொல்லி நோய் என்பதால் அவர்களாலும் உதவ முடியவில்லை. விளைவு. தற்கொலைகள். ஆயிரக்கணக்கான மைல்கள் தகிக்கும் வெயிலில் கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் நடந்தார்கள். நடந்தே சொந்த ஊரை அடைந்தார்கள். இரண்டாம் அலையில், தன் சொந்தங்களுக்கு ஆக்சிசன் கிடைக்காமல், மருந்து கிடைக்காமல், பெட் கிடைக்காமல், பிறகு இடுகாட்டில் எரிக்க இடம் கிடைக்காமல் பதைபதைப்புடன் அலைந்துகொண்டே இருந்தார்கள். இந்த அரசு நமக்கானது இல்லை என்பது பளிச்சென உணர்ந்த தருணம்.

2. பணமதிப்பிழப்பு கொடுத்த அலைச்சலும் மன உளைச்சலும் அதிகம்.

ஒரு ”சுபயோக சுப” தினத்தில், மோடி திடீரென தொலைக்காட்சியில் தோன்றி, 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்றார். ”கருப்பு பணத்தை வெளியே கொண்டுவர மக்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்” என்றார். மக்கள் ஏற்கனவே கடுஞ்சிரமத்தில் இருந்தவர்கள், இன்னும் அல்லாடினார்கள். வங்கிகளின் நீண்ட வரிசையில் தங்கள் நாட்களை செலவழித்தார்கள். வங்கிகளில் பணம் இருந்தும், திட்டமிட்ட நல்ல காரியங்களை செய்ய முடியாமல் திணறினார்கள். பணம் இல்லாமல் பிணத்தை அடக்கம் செய்ய முடியாது அலைந்தார்கள். “கருப்பு பணம்” உட்பட அத்தனைப் பணமும் பாதுகாப்பாக வங்கிக்கு வந்து சேர்ந்தது. உலகமே காறித்துப்பினாலும், மோடி எதுவும் நடைபெறாதது போல தன் துப்பட்டாவால் துடைத்துக்கொண்டார்.




3. விலைவாசி உயர்வு தரும் மன உளைச்சல்.

கடந்த எட்டு ஆண்டுகளில் மோடியின் நண்பர்கள் மில்லியனர்கள் எல்லாம் பில்லியனர்களாகி இருக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் ஏறிக்கொண்டே இருக்கும் விலைவாசி உயர்வால் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். அவர்களின் மாதாந்திர குடும்ப பட்ஜெட்டை இந்திய பட்ஜெட் போலவே பற்றாக்குறை பட்ஜெட்டாக மாற்றியிருக்கிறார். காரணம் மோடி நேரடி வரியை குறைத்து, மறைமுகவரியை அதிகப்படுத்திக்கொண்டே செல்கிறார். கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை. பொதுமக்கள் மீது வரிச்சுமையை ஏற்றிக்கொண்டே போகிறார். கடந்த எட்டு ஆண்டுகளில் மோடி பெட்ரோல், டீசல், எரிவாயு என பொருட்களில் விலை ஏற்றி கொள்ளையடித்தது மட்டும் 26 லட்சம் கோடி. சராசரியாக கணக்கிட்டால், ஒரு குடும்பத்திற்கு ஒரு லட்சம் என்கிறார்கள். எல்லா குடும்பத்துக்கும் கேஸ் அடுப்பு, சிலிண்டர் என புகை அடுப்பிலிருந்து பெண்களை விடுதலை செய்கிறோம் என்றார்கள். இப்பொழுது ஏறிவரும் கேசு சிலிண்டர் விலையால், மீண்டும் பழைய புகை அடுப்புக்கு பெண்கள் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ‘பெருமை’ எல்லாம் மோடிக்கே போய்ச்சேரும்.

4. கலவரங்கள் மேலும் கலவரங்கள் :


1925ல் சித்பவன பார்ப்பனர்களால் துவங்கப்பட்டது ஆஎஸ்.எஸ். இயக்கம் அவர்களுடைய கனவு இந்து ராஷ்டிரம். வர்ணாசிரம தர்மத்தை மக்கள் கடைப்பிடிப்பது மூலம் இந்த மண்ணிலேயே அவர்களுக்கான சொர்க்க பூமியை உருவாக்குவது தான் அவர்களின் நோக்கம். நமக்கெல்லாம் செத்ததுக்கு பிறகு தான் ”சொர்க்கம்”. இந்து மதத்தின் ”பெருமைகள்” சொல்லி இந்துக்களை ஒன்றுப்படுத்த முடியாது என்பதை அறிந்துகொண்ட அவர்கள் முசுலீம்களையும், கிறிஸ்துவர்களையும் எதிரிகளாக பிரச்சாரம் செய்தார்கள். அதற்காக அவர்கள் உருவாக்குவது கலவரங்கள். அதற்காக அவர்களின் குண்டர்படைகள் கடுமையான பயிற்சி எடுக்கிறார்கள். இந்த எட்டு ஆண்டுகளில், ஆட்சி அதிகாரத்தில் அவர்கள் வந்ததும், கள் குடித்த குரங்காகி போனார்கள். மக்கள் அன்றாட வாழ்க்கையை தள்ளுவதற்கே சிரமப்படும் வேளையில் தான் இவர்கள் கலவரங்களைத் தூண்டி, மக்களை பலிகொடுத்து அதில் குளிர்காய்கிறார்கள். இந்தியா முழுவதும் மெல்ல மெல்ல காவிமயப்படுத்தி வருகிறார்கள்.

5. மோடி உடைத்த பர்னிச்சர்களின் எண்ணிக்கை அதிகம்.

சிபிஐ, ரிசர்வ் வங்கி, வங்கிகள், நீதிமன்றம், நாடாளுமன்ற ஜனநாயகம், பிரதமர் தேசிய நிவாரண நிதி என பல அமைப்புகளையும் சல்லி சல்லியாக உடைத்தது மோடியின் சாதனை. ஏற்கனவே அதன் சமூக மதிப்பு மலையின் விளம்பில் நின்று கொண்டிருந்ததை, மோடி உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட்டார் எனலாம். ஆர்.எஸ். எஸ்காரர்களை எல்லா அமைப்புகளுக்குள்ளும் மெல்ல மெல்ல புகுத்திவிட்டார்கள். இப்பொழுது அவர்களின் வானரப்படைகளை கொண்டு கஷ்டப்பட்டு கலவரம் செய்யவேண்டியதில்லை. ஒரு நீதிமன்ற தீர்ப்பை ‘பெறுவதின்’ மூலம் தன் அரசுப் படைகளைக் கொண்டே அமுல்படுத்திவிடமுடியும். அமுல்படுத்துகிறார்கள்.

6. பொதுச் சொத்துக்களை ஒழி; மலிவு விலையில் ”நண்பர்களுக்கு” படையல் வை


1947ல் அதிகாரம் கைமாறிய பிறகு, நேரு ரசிய சார்பாளராக இருந்தார். தரகு முதலாளிகள் அப்பொழுது இந்தியாவில் வளர்ந்திருக்கவில்லை. ரசியாவில் வெற்றிகரமாக அமுல்படுத்திய ஐந்து ஆண்டு திட்டங்களை இந்தியாவிலும் அமுல்படுத்த துவங்கினார். தொழில்துறை, பொதுப்பணித்துறை, ரயில்வே, மருத்துவதுறை, தகவல் தொடர்பு துறை, வங்கித்துறை அடிப்படை கட்டுமானங்கள் எல்லாவற்றையும் மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கினார். இப்பொழுது ஏகாதிப்பத்தியங்களின் நெருக்கடியால் தனியார்மயம், தாராளமயம், உலகமய கொள்கைகளை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அமுல்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதில் நாலுகால் பாய்ச்சலில் பொருளாதார திட்டங்களை அமுல்படுத்துகிறார். பொதுத்துறைகளை தன் நண்பர்களுக்கு மலிவு விலையில் விற்றுத் தீர்க்கிறார். எதிர்காலத்தில் மிஞ்சப்போவது அமெரிக்காவைப் போல, அரசு மரத்தை வெட்டி வெட்டி நோட்டடிக்கும். வரி வசூலிக்கும். வெளி விவகாரத்துறைகளை பார்த்துக்கொள்ளும். பெரும்பாலான மக்கள் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து போராடும் பொழுது, போலீசு, இராணுவத்தை வைத்து கடுமையாக ஒடுக்கும்.

கார்ப்பரேட்டு - காவி பாசிஸ்டுகளை ஒழித்துக்கட்டுவதில் தான் நமக்கு விடிவு இருக்கிறது.

June 13, 2022

சனாதன தர்மம் என்றால்?


ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியால் இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது,"

- ஆளுநர் ரவி.
”சனாதன தர்மம் என்றால் அவரவர் குலம் என்ன கடமையை செய்ய வேண்டும் என்று விதித்தார்களோ அதை எப்போதும் தவறாமல் செய்ய வேண்டும் என்று பொருள்.

பகவத் கீதையில் கிருஷ்ணன் என்கிறவன் தானே கடவுள் என்கிறான். மக்களை நான்கு வகையாய் பிரித்தவன் தானே என்கிறான். ஓரொர் பிரிவுக்கும் அடிப்படையாக ஒரு குணம் என்கிறான். இந்த அடிப்படை குணம் என்பது innate அல்லது inborn அதாவது கூடவே வருவது அதவாவது பிறவியில் உண்டானது என்கிறான். பிராமணனை உன் குணப்படி கோயில் பூசாரியாக கடமையை செய் என்கிறான். சத்திரியனை பார்த்து அரசாங்கம் சண்டை கடமைகளை செய் அதற்க்கான குணம் உண்டு என்று சொல்கிறான். வைசியன் என்பவனைப்பர்த்து மாடுகள் வளர்த்து அதற்க்கான குணம் உனக்கு உண்டு என்றான். இவர்களை இரண்டுமுறை பிறந்த உயர் பிறவிகள் என்றான். நான்காவதாக உள்ள சூத்திரர்களைப் பார்த்து குணம் ஏதும் சொல்லாமல் முன் கூறிய மூவருக்கும் வேலையாளக இரு என்றான். இந்த பிரிவினையை செயத தன்னாலேயும் மாற்ற முடியாது என்றும் சொன்னான்.

கிருஷ்ணன் இது மட்டுமா சொன்னான்? அவரவர் கடமையை மட்டும்தான் செய்ய வேண்டும் என்றான். சூத்திரன் எவ்வளவு தான் வீரமுள்ளவனாய் இருந்தாலும் சத்திரியன் கடமை வேலை செய்யக்கூடாது என்றான். சத்திரியன் எவ்வளவு தான் படித்திருந்தாலும் பூஜை வேலைகளை செய்யக்கூடாது என்றான். அப்படி செய்தால் பாவங்கள் உண்டாகும் என்றான். இந்த பாவங்கள் அடுத்த பிறவியில் தொடரும் என அச்சுரித்தினான். இன்னும் சொல்கிறான் மற்ற கொள்கைகளை மதங்களை ஒதுக்குகுங்கள் என்றான். தன்னை வழிபாடு செயதால் கீழுள்ள பெண்கள், சூத்திரர்கள், வைசியர்கள் மாட்சிமை அடையலாம் என்றான். இதெல்லாம் இரகசியம் என்றான்.”

- இணையத்தில் இருந்து...
****
சுருக்கமாக சனாதன தர்மத்தை மக்கள் கடைப்பிடிப்பது மூலம் இந்த மண்ணிலேயே அவர்களுக்கான சொர்க்க பூமியை உருவாக்குவது தான் அவர்களின் நோக்கம். நமக்கெல்லாம் செத்ததுக்கு பிறகு தான் ”சொர்க்கம்”.

Sleep Tight (while you sleep) Spanish Psychological Thriller (2011)


நகரம். சில வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அது. நாயகனுக்கு நடுத்தர வயது. அங்கு வரவேற்பாளராகவும், அங்குள்ள வீடுகளில் சின்ன சின்ன வேலைகள் என்றால் அவனே செய்கிறான். அவனுடைய அம்மா உடல்நலமில்லாமல் படுத்த படுக்கையாய் மருத்துவமனையில் இருக்கிறார்.


இத்தனை வயது வரை, அவனுக்கு வாழ்வில் மகிழ்ச்சியில்லை. அப்படி ஏதும் அபூர்வமாய் நடந்தாலும், அவனால் சந்தோசப்படமுடியவில்லை. அதனால், அவனுடன் சுற்றி உள்ளவர்கள் யார் மகிழ்ச்சியாய் இருந்தாலும், உள்ளுக்குள் எரிகிறது. அந்த புன்னகையை, மகிழ்ச்சியை அழித்துவிடவேண்டும் என சிந்திக்கிறான். அதற்காக எந்த அளவிற்கு வேண்டுமென்றாலும், இறங்குகிறான்.

அங்கு வாழும் மனிதர்களில் ஒரு பெண் தனியாக வாழ்கிறாள். நல்ல உற்சாகத்துடன் இருக்கிறாள். தங்களுக்காக வேலை செய்யும் ஆள் என நாயகனிடம் இயல்பாக பழகுகிறாள். அவளின் ஒவ்வொரு செயலிலும் உள்ள உற்சாகம், புன்னகை அவனை தொந்தரவு செய்கிறது. ஒவ்வொரு வீட்டின் சாவியும் ஒரு டூப்ளிகேட் அவனிடம் இருப்பதால், அவளின் வீட்டிற்குள் நுழைந்து, சின்ன சின்ன வேலைகள் செய்கிறான். அதனால், அவளுக்கு உடலில் அலர்ஜி ஏற்படுகிறது.

அவளுக்கு ஒரு செல்போன் எண்ணிலிருந்து தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்புகிறான். விடாமல், கடிதம் எழுதுகிறான். இன்னும் அதைவிட கொடூரமாய், அவள் இரவு வருவதற்கு முன்பு போய் படுக்கைக்கு கீழே ஒளிந்துகொள்கிறான். அவள் வந்து தூங்கியதும், மயக்க மருந்து கொடுத்து, அவளுடன் உறவு கொள்கிறான். காலையில் ஐந்து மணி போல அலாரம் வைத்து கமுக்கமாய் எழுந்து வந்துவிடுகிறான்.

இப்படியே அவன் செய்யும் செயல்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. பிறகு என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஆட்களுக்கு நண்பர்கள் இருக்கமாட்டார்கள். படத்திலும் இல்லை. அவன் செய்கிற அத்தனை செய்கைகளையும் படுத்த படுக்கையாய் இருக்கிற, பேச முடியாத, ஆனால் கேட்க முடிகிற அவனின் அம்மாவிடம் தான் போய் சொல்வான். அவனுக்கு பேசுவதற்கு வேறு ஆட்கள் இல்லை.

சில படங்களில் நீதி வெல்வதில்லை. இந்தப் படத்திலும்! நடைமுறையில் கூட நீதி எப்பொழுதும் வெல்வதில்லை தானே. ஊரையே கொள்ளையடித்த ஒரு ஆள் வயதாகி மற்றவர்களைப் போல மடிகிறான். அவர்களுக்கு எல்லாம் சமூகத்தில் தண்டனை கிடைத்துவிடுகிறதா என்ன? நீதி கிடைக்கும் படங்கள் ஒருவித நிம்மதியை பார்வையாளனுக்கு தருகின்றன. நீதி கிடைக்காத இந்தப் படம் நிறைய கேள்விகளை எழுப்புகின்றன. அவனுக்கு ஏன் மகிழ்ச்சி கிடைக்கவில்லை? அப்படியே கிடைத்தாலும், அவனால் ஏன் மகிழ்ச்சிடைய முடியவில்லை? இப்படிப்பட்டவர்களை எப்படி குணப்படுத்துவது? சமூகம் என்ன சிஸ்டம் வைத்திருக்கிறது?. என கேள்விகள் வந்துகொண்டே இருக்கின்றன.

குறைவான பாத்திரங்கள் தான். வெறுக்கும் நாயகனாக வரும் Luis Tosar ஸ்பெயினில் முக்கிய நடிகர் என்கிறார்கள். மற்றவர்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இப்பொழுது Notify me என்ற தளத்தில் மட்டும் இந்தப் படம் இருப்பதாக Justwatch
தளம் சொல்கிறது. வேறு வகைகளில் முயலுங்கள். நான் இங்கிலீஷ் சப் டைட்டிலுடன் பார்த்தேன். போகிற போக்கில் ஒன்றிரண்டு அடல்ட் காட்சிகள் உண்டு.

அறத்தை சொல்வோம்!


திரைத்துறை சார்ந்தவர்களுக்கு ஒரு பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்து, திரை உலக பிரபலங்கள் சிலர் பேசியிருக்கிறார்கள். அந்த நிகழ்வை துவக்கி வைத்து பேசியவர் இயக்குநர் மிஷ்கின்.


அவருக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு ஓடிடி. திரையரங்கு டிக்கெட் விலை, ஸ்னாக்ஸ் விலை, ஒரு குடும்பம் படம் பார்க்க வேண்டுமென்றால், ஆயிரத்தைத் தாண்டுகிறது. பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் மாதம் ஒரு படம் பார்ப்பது பெரிய விசயம். ஆகையால், மக்கள் திரையரங்குகள் வருவது குறைந்து கொண்டே வருகிறது. இனியும் குறையும். ஆக சமூகம் ஓடிடிக்கு மெல்ல மெல்ல நகருகிறது.

படைப்பாளிகளுக்கு இது சவால் தான். நமக்கு முன்பு ஒரு கதையை சொல்வதற்கு 2.30 மணி நேரம் இருந்தது. காலப்போக்கில் இப்பொழுது 2 மணி நேரமாக குறைந்து இருக்கிறது. ஓடிடியில் இப்பொழுது (30 நிமிடங்களிலிருந்து) ஒரு மணி நேரமாக இன்னும் குறைந்திருக்கிறது. இந்த குறைந்த நேரத்தில் ஒரு கதையை எங்கு துவங்கி, எங்கு முடிக்கப் போகிறோம்.

இன்னொரு பிரச்சனை. இந்திய பார்வையாளர்கள் இப்பொழுது இந்திய வெப் சீரிஸைப் பார்ப்பதில்லை. வெளிநாடுகளின் சீரிஸை தான் பார்க்கிறார்கள் என தகவல் சொல்கிறார்கள். திரையரங்கிலாவது 2 மணி நேரம் நிறுத்தி வைக்கலாம். ஓடிடியில் அப்படி நிறுத்த முடியாது. சில பிரேம்கள் போரடித்தாலும், அடுத்த சீரிஸூக்கோ, அடுத்தப் படத்திற்கோ பார்வையாளர்கள் நகர்ந்து விடுகிறார்கள். நாமே அப்படித்தானே செய்கிறோம்.


உலக அளவில் எப்படிப்பட்ட கதைகளை கையாள்கிறார்கள்? அவர்களுக்கு எவ்வளவு பட்ஜெட் கிடைக்கிறது? நமக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதெல்லாம் கூட சவால் தான். இதை எப்படி எதிர்கொள்ள போகிறோம்?

”ஒரு நொடியில் 24 பொய்கள்” சொல்கிறோம். அதை தெரிந்துகொண்டு தான் ஒரு பார்வையாளன் பணம் கொடுத்து திரையரங்கிற்கு வருகிறான். அவனை நாம் ஏமாற்றக் கூடாது. நல்ல கதைகளை தருவது தான் ஒரு படைப்பாளியின் அறம்.

இப்படி பல விசயங்களை அந்த உரையில் பேசியிருக்கிறார். பின்னூட்ட பெட்டியில் அந்த உரையின் சுட்டி தருகிறேன். கேளுங்கள்.

https://www.youtube.com/watch?v=3Zp4drEHE4E

June 11, 2022

Strangers (2008) American Psychological Horror Movie


நாயகனும், நாயகியும் ஒரு விசேசத்துக்கு போய்விட்டு, அந்த வீட்டுக்கு விடிகாலை நான்கு மணிக்கு வந்து சேர்கிறார்கள். அந்த வீடு கோடை காலத்தில் ஓய்வு எடுப்பதற்காக கட்டப்பட்டிருக்கும் வீடு.


அவர்களுக்குள் ஏதோ பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. அவன் சோர்வாக இருக்கிறான். அவள் கண் கலங்கி இருக்கிறாள். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது. இந்த நேரத்தில் யார் என கேள்வியோடு போய் பார்த்தால், ஒரு பெண் இருட்டிற்குள் நின்று கொண்டு “இன்னார் இருக்கிறாரா?” என கேட்கிறாள். இவன் இல்லை என்றதும், அங்கிருந்து நகர்ந்துவிடுகிறாள்.

அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு இதோ வந்துவிடுகிறேன் என நாயகன் வெளியே போகிறான். ஆனால் அடுத்தடுத்து அந்த வீட்டிற்கு வெளியிலும், உள்ளுக்குள்ளம் விநோதமான சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. சன்னல் திரையை விலக்கிப் பார்த்தால், அங்கு முகமூடி போட்டுக்கொண்டு ஒருவன் நிற்கிறான். திடீரென பார்த்ததும் பயத்தில் அலறிவிடுகிறாள். இவள் பாதுகாப்புக்கு கத்தியை எடுத்து வைத்துக்கொள்கிறாள். அந்த சமயத்தில் நாயகன் வந்துவிடுகிறான். போனை கவனமாக திருடிவிடுகிறார்கள்.

பிறகு இந்த நிகழ்வுகள் அடுத்தடுத்து தொடர, நாயகன் அப்பாவின் துப்பாக்கியை எடுத்து அந்த முகமூடிகாரனைப் பார்த்து சுடவும் செய்கிறான். முகமூடிக்காரன் அங்கிருந்து விலகிவிடுகிறான். நாயகன் சுட தயாராக காத்திருக்கும் பொழுது, இந்த சமயத்தில் நாயகனின் நண்பன் அவர்களை அழைத்துச் செல்வதற்காக உள்ளே வருகிறான். அங்கு ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதை உணர்கிறான்.

அங்கிருந்து அவர்கள் உயிரோடு தப்பித்தார்களா என்பதை திரில்லராக சொல்லியிருக்கிறார்கள்.
***


படம் துவங்கும் பொழுது அமெரிக்காவின் FBI கணக்குப்படி, ஆண்டுக்கு 1.40 மில்லியன் (Violent Crimes) வன்முறை நிகழ்வுகள் நடப்பதாக எழுத்தில் போடுகிறார்கள். அதில் ஒரு துளி தான் இந்த சம்பவம். (inspired from true events)

உலக நாடுகளில் எல்லாம் புகுந்து ரவுடித்தனம் செய்யும் அமெரிக்காவின் உள்ளுக்குள் இப்படித்தான் அழுகி நாறிக்கொண்டு இருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

ஊருக்கு ஒதுக்குப்புறமான வீடு. அங்கு ஓய்வுக்கு வரும் ஒரு குடும்பம். ஒரு கும்பல் உள்ளே புகுந்து அட்டகாசம் செய்யும். அதை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை சில படங்களில் பார்த்திருக்கிறேன். இந்தக் கதையும் அப்படி துவங்கினாலும், முடிக்கும் பொழுது வேறு வகையில் முடித்திருப்பது தான் வித்தியாசம்.

சுப்பிரமணியப்புரத்தில் சிறைக்குள் இருக்கும் சசி, ஜெய்யிடம் “ஏன் இந்த கொலை?” என கேட்கும் பொழுது “பழக்கத்துக்காக” என சகஜமாய் சொல்வார்கள். அதை கேட்கும் நாம் அதிர்ந்து போவோம். அது போல இந்தப் படத்திலும் ஒரு வசனம் வரும். அது தான் நம்மை தொல்லைப்படுத்தும்.

குறைவான பாத்திரங்கள். குறைவான வெளிச்சம். ஒன்றரை மணி நேரமும் காப்பாற்றுவது நடித்தவர்களும், இசையும், எடுத்தவிதமும் தான்.

Justwatch தளத்தில் தேடிப்பார்த்தால், இந்தப் படமும் அமேசானில் மட்டும் வாடகைக்கு இருப்பதாக சொல்கிறது. வேறு வகைகளில் தேடிப்பாருங்கள்.

June 8, 2022

Sympathy for lady vengeance (2005) தென்கொரியா

 


19 வயது அப்பாவியான உங்களை ஐந்து வயது பையனை கொன்றதாக  சிறையில் பதிமூன்று வருடம் உள்ளே தள்ளினால் எப்படியிருக்கும். கொதித்துபோய்விடமாட்டீர்கள். இருடா வர்றேன்ன்னு கொலைவெறியோடு தானே வெளிவருவீர்கள். அது தான் ஒன் லைன்.
 
நடுத்தர வயது ஆசிரியன் அவன். பிள்ளைகளை கடத்தி கொல்கிறவன். ஒருமுறை ஒரு 19 வயது பெண்ணான நாயகியை மாட்டிவிடுகிறான். அப்படி ஒத்துக்கொள்ளவில்லை என்றால், கைக்குழந்தையாய் உள்ள உன் பெண் குழந்தையை கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறான். தனக்கு இருக்கிற ஒரு சொந்தத்தை இழக்க விருப்பம் இல்லாமல் அவள் பழியை ஏற்றுக்கொள்கிறாள்.
 
சிறை ஒரு வதை முகாம். போலீசும் வதைக்கும். சக கைதிகளும் வதைப்பார்கள். அப்படி வதைபடும் சக கைதிகளை நாயகி உதவி செய்து காப்பாற்றுகிறாள். 13 வருடம் கழித்து வெளியே வருகிறாள். ஆஸ்திரேலியா தம்பதிகளால் தத்து எடுக்கப்பட்டு வளர்ந்து நிற்கும் பிள்ளையை போய்ப் பார்க்கிறாள். அழுது பிடித்து அம்மாவுடன் வந்துவிடுகிறாள். இனி தன் சக ஜெயில் தோழிகளைப் போய் பார்க்கிறாள். அவர்களால் முடியும் உதவிகளைப் பெறுகிறாள்.
 
தன் வாழ்வை சீரழித்தவனை என்ன செய்தாள் என்பதை கொஞ்சம் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அனுப்புகிறார்கள்.
 
ஒரு செயல். சில நாட்களுக்கு நினைவில் இருக்கும் பொழுதே, எத்தனை கொடூரமாய் சமூகத்தில் வெளிப்படுகிறது. சில நாட்களுக்கு பதிலாக 13 வருடங்கள் என்றால், எவ்வளவு கொடூரமாய் வெளிப்படும். அதை சொன்னவிதத்தில், எடுத்தவிதத்தில் ஈர்க்கிறார் இயக்குனர். நான் பார்த்த படங்களில் தென்கொரிய இயக்குநர்கள் உணர்வுகளை காட்சிகளோடு அத்தனை அருமையாக இணைக்கிறார்கள். ஆனால் ஏன் வாளி, வாளியாக ரத்தத்தை ஊற்றி எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு படத்திலும் ரத்தம் கொட்டுவது அதிகமாகிகொண்டே தான் போகிறது. குறைவேனா என்கிறது.
 
 
இந்தப் படமும், இதன் இயக்குநரும் உலகப்புகழ் பெற்றவர்கள். பழிவாங்கலை அடிப்படையாக கொண்டு மூன்று படங்களை வரிசையாக எடுத்தார். Sympathy for Mr. Vengenance (2003), Old boy (2003), Sympathy for lady vengeance (2005) இதில் Old boy மிகவும் புகழ்பெற்ற படம். மூன்று படங்களையும் வெவ்வேறு காலக்கட்டங்களில் பார்த்திருக்கிறேன். மூன்றுமே நல்ல படங்கள்.
 
இந்தப் படத்தைத் தழுவி தான், 22 Female Kottayam என மலையாளத்தில் எடுத்து இருக்கிறார்கள் என பளிச்சென தெரிகிறது. அவர்கள் படம் போடுவதற்கு முன்பு அத்தனை பேருக்கு நன்றி சொல்வார்கள். இந்த படத்திற்கு நன்றி சொல்லவேண்டும் என்றால், பல லட்சங்கள் கொடுக்கவேண்டும் என்பதால், வசதியாக மறந்துவிட்டார்கள் போல! மலையாளப் படத்தின் வெற்றியில், தமிழில் இயக்குநர் ஸ்ரீபிரியா மீண்டும் எடுத்தார். அதற்காக சில லட்சங்கள் வாங்கியிருப்பார்கள். இப்படி கலாய்த்திருப்பார்களோ! “ஏம்பா நீயே கொரிய படத்தைத் தான் சுட்டிருக்க! கேட்கிற காசுக்கு கொடுத்துட்டு போப்பா!” 🙂
 
இப்பொழுது Notify me தளத்தில் மட்டுமே இருப்பதாக Justwatch தளம் சொல்கிறது. வேறு வகைகளில் முயலுங்கள்.

தொழிலாளர்களுக்கான வைப்பு நிதியின் (PF) வட்டிக் குறைப்பு

 




தொழிலாளர் வருங்கால வைப்புநிதி எனப்படும் இபிஎப் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் வட்டியை குறைத்துள்ளது ஒன்றிய அரசு. இது 44 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்த வட்டியாகும்.
 
தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்களின் எதிர்கால பாதுகாப்புக்காக 1952 ம் ஆண்டில் ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டம் இது.
 
நாடு முழுவதும் சுமார் 7 லட்சம் நிறுவனங்களில் பணியாற்றும் 6.12 கோடி பணியாளர்களை சந்தாதாரர்களாக கொண்ட பி.எப் திட்டத்தில் தற்பொழுது 14 லட்சம் கோடி வைப்பு நிதியாக சேர்ந்துள்ளது. தொழிலாளர்களின் வருங்கால சேமிப்பு மீதான வட்டி விகிதம், 8.10% என குறைக்கப்பட்டிருப்பது அநீதியானது.
2020-21ம் ஆண்டில் நாடு ஊரடங்கில் மூழ்கி இருந்த பொழுது கூட 8.5% என நீடித்தது. இப்பொழுது நிலைமை சரியாகி வரும் பொழுதும். வருங்கால வைப்பு நிதி வாரியம் பங்கு சந்தையிலும், கடன் சந்தையிலும் செய்துள்ள முதலீடுகள் கணிசமாக லாபம் ஈட்டியுள்ள நிலையிலும், 44 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமைக்கு வட்டி விகிதத்தை கொண்டு சென்றிருக்கிறது.
 
வங்கியில் பொதுமக்களால் வைக்கப்படும் வைப்புத்தொகைகளுக்கு தரப்படும் வட்டிவிகிதம் என்பது 6.5%க்கு கீழாக தருகிறார்கள். அதோடு ஒப்பிட்டு இப்படி குறைப்பது என்பது அபத்தமானது. இந்த அரசு தொழிலாளர்களின் நலத்திட்டமான வைப்பு நிதிக்கும், பொதுமக்களின் வைப்பு தொகைக்கும் (Fixed Deposit) ஒப்பிடுகிறது என்றால், நாம் ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத மனநிலையை புரிந்துகொள்ளவேண்டும்.
 
தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை எல்லாம் ஒன்றிய அரசு முதலாளிகளின் நலனுக்காக வெட்டி சுருக்கிய நிலையில் தான் இப்பொழுது தொழிலாளர்களுக்கான வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை வரலாறு காணாத வகையில் குறைத்திருக்கிறது. தொழிலாளர்கள் இதன் அபாயத்தை உணர்ந்து, உடனடியாக போராட்டத்தில் இறங்கவேண்டும். இல்லையெனில், ஒன்றிய அரசு இன்னும் வட்டியை குறைக்கும் நடவடிக்கையில் தைரியமாக இறங்குவார்கள். தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டம் தான் தொழிலாளர் விரோத அரசை பணிய வைக்கும். வேறு குறுக்கு வழிகள் இல்லை.

ஆன்லைன் ரம்மியால் இதோ இன்னுமொரு (தற்)கொலை

 



மணலியைச் சேர்ந்த பவானி (வயது 29). கணவன், இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டாக‌ ரம்மி விளையாட ஆரம்பித்து தன் சகோதரிகளிடம் கடன் வாங்கி, மொத்தம் 20 லட்சம் வரை தொலைத்துள்ளார். குடும்ப உறவுகள் அறிவுரை கூற, இழந்த பணம் மன உளைச்சலை தர தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.
 
கடந்த இரண்டு நாட்களாக எல்லா செய்தி தாள்களிலும் ஆன் லைன் ரம்மி விளையாடுங்கள் முழுப்பக்கத்தில் விளம்பரம் தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன! காசு கொட்டுவதால், நிறைய விளம்பரம் தருகிறார்கள். பத்திரிக்கைகளும் உடன் சேர்ந்து கொண்டு கல்லா கட்டுகிறார்கள். இந்திய பிரபலங்களும், சினிமா பிரபலங்களுகும் ரம்மி விளம்பரங்களில் நடிக்கிறார்கள். "ரம்மி விளையாடதீர்கள்" என உள்ளூர் உயர் போலீசு அதிகாரிகள் கடைசிப் பக்கத்தில் மக்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள்.
 
இன்னும் எத்தனை மனிதர்களை காவு வாங்க காத்திருக்கிற்தோ! ஆன் லைன் ரம்மியை உடனே தடை செய்யவேண்டும். இந்த குரல் இந்தியா எங்கும் ஓங்கி ஒலித்திட வேண்டும்.