> குருத்து: July 2023

July 31, 2023

Bhediya (2022) ஓநாய் – இந்தி


அருணாச்சலப் பிரதேசத்தில் காட்டின் வழியே சாலை அமைக்கும் ஒரு பணி நாயகன் வேலை செய்யும் நிறுவனத்திற்கு கிடைக்கிறது. தன் முதலாளிக்காக  தன் வீட்டை அடமானம் வைத்து, அந்த வேலைக்கான முன்பணத்தை கட்டுகிறார். (!)

 

அங்கு போனால், மக்கள் எதிர்க்கிறார்கள். நாயகனோ, இளைஞர்களை அழைத்து “உங்களுக்கு மால், வைபை, ஸ்டார் பக்ஸ் இதெல்லாம் வேண்டாமா?” என ஆசைக் காட்டி, பெற்றோர்களை ஒத்துழைப்பு கொடுக்க சொல்லுங்கள் என பேசுகிறார். அது வேலை செய்கிறது.

 

இதற்கிடையில், நண்பர்களுடன் வீடு திரும்பும் பொழுது, அவரை ஓநாய் விரட்டி வந்து பின்பக்கத்தை கடித்துவிடுகிறது.   அன்றிலிருந்து அவர் பகலில் மனிதன், இரவில் ஓநாயாக மாறுகிறார்.

 

இவர் பணத்திற்காக, தன் நிறுவனத்திற்காக காட்டை அழிக்க ஊரில் உள்ள ஒவ்வொருவராக சரிக்கட்டுகிறார்.  அவரே ஓநாயாக இரவில் மாறி, காட்டை அழிக்க ஒத்துழைக்கும் ஆட்களை  ஒவ்வொருவராக கடித்துத் குதறுகிறார்.

 

இந்த முரண்பாட்டை எப்படி நாயகன் எதிர்கொண்டார் என்பதை  கொஞ்சம் திகலாகவும், கொஞ்சம் நகைச்சுவையுடனும் சொல்லியிருக்கிறார்கள்.

 

****


இந்த இயக்குநரின் முதல் படமான  ஸ்திரீ படத்தைப் பார்த்திருக்கிறேன். நல்ல பேய் படம்.  நகைச்சுவையும், பயமும் கலந்து தமிழில் எடுக்கிறார்களே அப்படி ஒரு படம்.  அவரின் மூன்றாவது படம் தான் இந்தப் படமும் நன்றாக எடுத்திருக்கிறார்.

 

படத்தின் கதை நாட்டுப்புறக் கதை போல தான் இருக்கிறது.  இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பது படத்தின் அடிநாதமாக ஒலிப்பது நல்ல விசயம்.

 

நாயகன் வருண் தவான்,  நாயகியாக கீர்த்தி சனான்,  நண்பனாக வரும் அபிஷேக் என எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். வசனம், பாடல், இசை, ஒளிப்பதிவு, மனிதன் ஓநாயாக மாறும் தருணம்  என அனைத்தும் படத்தை நன்றாக  தூக்கி நிறுத்துவதற்கு உதவியிருக்கிறார்கள்.

 

தமிழில் நன்றாக மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள்.   ஜியோ சினிமா சானல் தளத்தில் இந்தியில் இலவசமாகவே பார்க்க கிடைக்கிறது. தமிழில் எங்கு கிடைக்கிறது என தேடிப் பார்த்துக்கொள்ளுங்கள்.

July 30, 2023

அகத்தியர் அருவி


குற்றாலத்தில் இருந்து 40 கிமீ. திருநெல்வேலியில் இருந்து கணக்கிட்டால்...42 கிமீ.


அம்பாசமுத்திரம் வட்டத்தில் இருக்கிறது இந்த அருவி. இந்தப் பகுதி வனச்சரகத்தின் எல்லைக்குட்பட்டது. ஆகையால் உள்ளே நுழையும் பொழுதே, வனச் சரக காவலர்கள் வண்டியைச் சோதித்து தான் அனுமதிக்கிறார்கள். பிளாஸ்டிக் குப்பைகளை போடாதீர்கள் என சொல்லி அனுப்புகிறார்கள். ஒரு ஆளுக்கு 30 என வசூலிக்கிறார்கள். வண்டிக் கட்டணம் தனி.

அருவி 25 அடி உயரத்தில் இருந்து அருமையாய் விழுகிறது. பொதுவாக அருவிகள் எல்லாமே குறிப்பிட்ட மாதங்கள் தான் விழும். வருடம் முழுவதும் வற்றாத தாமிரபரணியின் அருவி என்பதால்... வருடம் முழுவதும் விழும் என்பது இதன் சிறப்பாக இருக்கிறது.

குற்றால அருவிகளில் நல்ல குளிர்ச்சி இருக்கும். சீசன் காலத்தில் குளிக்கும் பொழுது பெரும்பாலோருக்கு நடுக்கம் இருக்காது. சிலருக்கு நடுக்கம் கொடுக்கும். ஆனால், இந்த அருவியில் குளிப்பதற்கு தேவையான அளவு குளிர்ச்சி இருப்பது சிறப்பு.

ஆண்டு முழுவதும் நீர் விழும் என்பதால் கூட்டமும் அளவாகவே இருக்கும். இன்றைக்கு காலை 11 மணியில் நாங்கள் போன பொழுது குறைவான கூட்டமே இருந்தது. நிறைய நேரம் குளித்தோம்.

குழப்பம்


தென்காசியில் ரயியில் ஏறியதும் ஒரு பஞ்சாயத்து. இருவர் இருவராக அமர்ந்திருக்க இருவரிடமும் குழப்பம்.


ஒருவர் 49, 52 படுக்கைகள் எங்களுடையது என்கிறார். இன்னொருவரும் இது எங்களுக்கு ஒதுக்கப்பட்டவை என்கிறார்கள்.

நால்வரும் வயதானவர்கள். ஆகையால் நால்வரிடமும் ஏக குழப்பம்.

ஒருவர் "அதெப்படி? ரயில்வேயில் ஏதோ கோளாறு. டிக்கெட் பரிசோதகரிடம் பேசிக்கொள்ளலாம்" என்கிறார்.

இதற்கு மேல் நாம நுழைஞ்சு மக்களுக்கு உதவுலைன்னா தப்பா போயிரும்!

"ரயில்வேயில் வேறு வேறு கோளாறுகள் இருந்தாலும்... இப்படிப்பட்ட கோளாறுகள் வருவதில்லை" என்றேன்.

ஒருவரிடமிருந்த டிக்கெட்டை வாங்கி.. ரயில் எண், தேதி, இருக்கைகளை சரிப்பார்த்தேன். எல்லாம் சரியாக இருந்தன.

"அப்ப அவர் வைத்திருக்கும் டிக்கெட்டில் தான் கோளாறுக்கு வாய்ப்பு" என்றேன்.

அவரே தன் டிக்கெட்டை சரி செய்துவிட்டு....

"எனக்கு இன்றைக்கு மாலை 5 மணிக்கு, சிலம்பு எக்ஸ்பிரஸ். நாங்க ஒரு பெரிய டீமாக குற்றாலம் வந்தோம். நானாக பொதிகை ரயில் என நினைத்துக்கொண்டேன்" என்றார்.

அவ்வளவு தான் பஞ்சாயத்து முடிஞ்சுப் போச்சு!

15 ஆண்டுக்கு முன்பு, பாண்டியனில் ஏறி, இதே மாதிரி உட்கார்ந்து, இன்னொருவரை பதட்டமாக்கி, பிறகு ஒரு மணி நேரத்துக்குப் பிறகான வண்டி என சரிப்பார்த்து, மன்னிப்பு கேட்டு, சரியான வண்டிக்கு வந்துவிட்டேன்.
🙂

பாலருவி



தமிழகத்தில் அருவிகளுக்கு பெயர் பெற்றது குற்றாலம்.

குற்றாலத்தில் இருந்து 25கிமீ செங்கோட்டை வழியாக போனால் கேரளாவைத் தொட்டு, கொல்லம் மாவட்டத்தில் ஆரியங்காவில் உள்ள பாலருவியை அடைந்து விடலாம்.

பாலருவி என நுழைவு வாயிலை கடந்ததும், அங்கே பசுமையான பரந்த இடம் இருக்கிறது. பயணிகள் வந்த சிறிதும், பெரிதுமான கார்கள், பேருந்துகள் நின்றுகொண்டுருக்கின்றன.

காட்டுக்குள்ளே நான்கு கிமீ போனால் தான் அருவியை அடைய முடியும்.

காடு என்பதால், காட்டு விலங்குகளின் நடமாட்டம் இருக்கும் என்பதால், நாம் கொண்டு செல்லும் எந்த வண்டியையும் உள்ளே அனுமதிப்பதில்லை. நடந்து செல்லவும் அனுமதியில்லை.

கேரள அரசு 50 இருக்கைகள் கொண்ட பேருந்துகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். 10 நிமிடங்கள் பயணிக்கிறோம்.


பெரியவர்களுக்கு போக, வர ரூ.70 வசூலிக்கிறார்கள். குழந்தைகள், மாணவர்களுக்கு கொஞ்சம் குறைவான கட்டணம் வசூலிக்கிறார்கள்.

காலை 8 மணிக்கு துவங்கும் இந்த பேருந்து பயணத்தை மாலை நான்கு மணிக்கு முடித்துக்கொள்கிறார்கள். ஐந்து மணிக்கு அங்கிருந்து மக்களை கிளப்பிவிடுகிறார்கள்.

அருவி என்றாலே சீசனில் தான் தண்ணீர் விழும். வார நாட்களில் மிதமான கூட்டம், வார இறுதிகளில் நல்ல கூட்டமும் இருக்கிறது. கூட்டத்திற்கேற்றவாறு காத்திருக்கும்படி ஆகிவிடுகிறது.

உள்ளே கொண்டு போய், இறக்கிவிட்டால்... நானூறு மீட்டர் நடந்து சென்றால்... பாலருவியை அடைந்துவிடுகிறோம்.

300 மீட்டர் உயரத்தில் இருந்து பாலை ஊற்றியது போல அருவி அழகாய் கொட்டுகிறது. அதனால் தான் பாலருவி.

நேரடியாக அருவி விழும் இடத்தில் குளிக்க ஏற்பாடு இல்லை. கீழே விழும் நீர் இரண்டு வழிகளில் பிரிந்து விழுகிறது. ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் ஒரு பக்கம் என பிரிந்து குளிப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

பாதை கொஞ்ச தூரம் தான். ஆனால் எளிது அல்ல! வயதானவர்கள், நோயுற்றவர்கள் அந்த பாதை வழியாக கடந்து அருவியில் குளிப்பது சிரமம்.

நாங்கள் இன்று போயிருந்த பொழுது, கேரளா என்றாலும்... பெரும்பாலும் தமிழர்கள் தான் வந்திருந்தார்கள். வண்டிகளின் பதிவெண்களே சாட்சியாய் நிற்கின்றன.

சாப்பிட கடைகள் ஏதும் இல்லை. டிக்கெட் கொடுக்கும் இடத்தில் ஐஸ் கிரீம் விற்கிறார்கள். விலை அளவாகத்தான் இருக்கிறது.

உள்ளே அருவிக்கு பக்கத்தில் தேநீர், பஜ்ஜி, முட்டைப் போண்டாவும் அளவான விலைகளில் கிடைக்கிறது.

நல்ல குளிர்ச்சியான பகுதி. நல்ல அருவி. நல்ல குளியல். நிச்சயம் போய்வரலாம்.

July 25, 2023

குடிப் பிரியர்களின் அட்டகாசம்!


பெருங்குடிகாரன் அவன். இப்படி சொன்னா குடிப்பிரியர்களின் மனம் கெடும். பெருங்குடிப்பிரியன் அவன். அந்த அம்மாவின் கடைசிப் பிள்ளையும் அவன். வயது 30ஐ கடந்தாலும், இன்னும் பொறுப்பு என்றால் என்னவென்று கேட்பவன். "ஒழுங்கு மரியாதையாக மூணாவது தெருவில் இருக்கும் கதிரேசனின் மகளை பெண் கேட்டு கட்டி வை!" என மிரட்டுகிறான். அதுவும் வீட்டு வாசலில் நின்று ஊரே கேட்குமளவு கத்துகிறான். மானத்தை வாங்குகிறானே என அம்மா வருந்தி, கல்யாணம் கட்டி வைக்கும் என யோசிக்கிறான். என்ன ஒரு புத்திசாலித்தனம்!


எதற்கும் மசியாமல் அம்மா இருப்பதால், கடைசி ஆயுதமாக பூச்சி மருந்தை சாராயத்தில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுகிறான்.

சொன்னது போலவே, ரோசத்துடன் சரக்குடன் பூச்சி மருந்தை பொறுப்பாய் (கொஞ்சமாய்) குடித்துவிட்டு, அதே வாசலில் வந்து, வாயில் நுரை தள்ள விழுந்துவிடுகிறான். தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள்.

அவன் மிச்சம் வைத்துவிட்டு போனதை, இரண்டு பேர் பார்த்து, அதை பொறுப்பாய் முழுவதும் குடித்துவிட்டு, அவர்கள் அநியாயமாய் செத்துப்போகிறார்கள்.

இப்பொழுது மதுப்பிரியரான மகன் தான் அந்த இரண்டு பேருக்கும் ஊத்திக் குடித்து, இரண்டு பேரையும் சாகடித்துவிட்டதாக, பஞ்சாயத்து நடக்கிறது. குடிப்பிரியரான மகன் அவர்களின் சாவுக்கு தான் காரணமில்லை என நிதானமாய் சொன்னாலும், ஊர் நம்பவில்லை. இறுதியில், அம்மா தன்னிடம் மிச்சமிருந்த கடைசி நிலத்தையும் அந்த இரண்டு பேருக்கு கொடுத்துவிடுகிறார்.

இன்னும் முடியவில்லை. கொசுறு ஒன்று இருக்கிறது.

இந்த கதையைக் கேட்ட ஒருவர் "அந்த கதிரேசன் மகளைத்தான் கட்டி வைச்சிருலாம்ல!" என அப்பாவியாக கேட்கிறார்.

"அந்த பொண்ணு கல்யாணம் கட்டி, மூணு பிள்ளைகளுக்கு அம்மா. அவ புருஷன் ஒரு போலீஸ்காரன் வேறு. அதனாலேயே போலீசே அவனுக்கு பிடிக்காதாம்!"

இப்படி ஒவ்வொருவருக்கு "அதகளமான" அறிமுகம் என போகிறது கதை.

மீதியையும் பார்த்துவிட்டு, பிறகு படம் பற்றி எழுதுகிறேன்.

Inherit the Wind (1960) டார்வினின் வருகை


கவிஞர் ஞானக்கூத்தன் வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு என்றொரு கவிதையை எழுதியிருக்கிறார். அந்தக் கவிதையில் வருவது போல எனது பள்ளி நாட்களில் அறிவியல் பாடம் நடத்தும் போது எலும்புக் கூடு ஒன்றை வகுப்பறைக்குக் கொண்டுவருவார்கள்.


அந்த எலும்புக்கூடு மனிதன் யார் என்று தெரியாது. அவனது கைகால்களின் எலும்புகளைக் காட்டி ஆசிரியர் டார்வின் தியரியை விளக்கிச் சொல்லுவார். வகுப்பு முடிந்தவுடன் எலும்பு கூட்டை கொண்டு போய்ச் சயின்ஸ் லேப் உள்ளிருந்த கண்ணாடி பெட்டகத்திற்குள் வைத்துவிடுவார்கள்.

காரிடாரில் எலும்புக்கூடு போவதைக் காண வேடிக்கையாக இருக்கும்.
வகுப்பறைக்குள் டார்வின் சிந்தனைகள் நுழைந்து நூறு ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன. இன்று பரிணாமக் கோட்பாடு முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. டார்வினின் அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் உருவாகி மரபணு ஆய்வுகள் வழியே பரிணாமத்தை விளக்குகிறார்கள். இன்று பரிணாமவியலில் நடந்துள்ள பாய்ச்சல் நினைத்துப் பார்க்க முடியாதது.

ஆனால் டார்வின் பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்தது எளிதாகயில்லை. மத நிறுவனங்களின் கடுமையான எதிர்ப்பை மீறியே டார்வின் கோட்பாடுகளை ஆசிரியர்கள் பள்ளியில் கற்பித்தார்கள். இதற்காக அறிவியல் ஆசிரியர்கள் கேலி செய்யப்பட்ட்டார்கள். தண்டிக்கபட்டார்கள். நீதி விசாரணை நடைபெற்றிருக்கிறது.

அப்படியான ஒரு நீதி விசாரணையை மையமாக் கொண்டு உருவாக்கப்பட்டதே Inherit the Wind திரைப்படம்.

ஆசிரியர்கள் அவசியம் காண வேண்டிய திரைப்படம்.


அமெரிக்காவில் 1925ம் ஆண்டு ஜான் டி. ஸ்கோப்ஸ் என்ற பள்ளி ஆசிரியர் வகுப்பில் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டினை கற்பித்த காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டார். அவர் மீது நீதி விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் மாநில சட்டத்தை மீறியதற்காகவும் தெய்வ நிந்தனைக்காகவும் அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது

இந்த வழக்கில் இருதரப்பிலும் இரண்டு முக்கியப் பிரபல வழக்கறிஞர்கள் பங்கேற்றார்கள். பரிணாமக் கோட்பாடு சரியா. தவறா அதை வகுப்பில் கற்பிக்கலாமா வேண்டாமா என்பது பற்றி வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.

இந்த உண்மைச் சம்பவத்தை மையமாக் கொண்டு உருவாக்கப்பட்டதே Inherit the Wind திரைப்படம். ஜெரோம் லாரன்ஸ் மற்றும் ராபர்ட் எட்வின் லீயின் நாடகத்தைத் தழுவி, ஸ்டான்லி கிராமரால் உருவாக்கபட்டுள்ளது.

வகுப்பறை சுதந்திரம் குறித்து பேசும் இப்படம் ஆசிரியர் எதைக் கற்பிக்க வேண்டும் எதை கற்பிக்க கூடாது என்பதை யார் முடிவு செய்வது ஏன் மதம் இதில் தலையிடுகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.

அமெரிக்காவின் ஹில்ஸ்போரோ நகரிலுள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர் டார்வினை பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். அப்போது காவலர்கள் உள்ளே நுழைந்து கைது செய்கிறார்கள். ஆசிரியருக்கு வால் இருக்கிறதா என்று கேலி பேசுகிறார்கள். ஆசிரியரின் செயலை நகரமக்கள் கண்டிக்கிறார்கள். அவரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்கிறார்கள். அந்த வழக்கு விசாரணையில் இரண்டு முக்கிய வழக்கறிஞர்கள் எதிரெதிராக களம் இறங்குகிறார்கள். மதமும் அறிவியலும் நேரடியாக மோதிக் கொள்ளும் நீதிமன்ற வாதங்கள் அபாரமாகவுள்ளன.

வழக்கறிஞர் டிரம்மண்ட் ஒரு காட்சியில் “fanaticism and ignorance is forever busy, and needs feeding.“ என்று சொல்கிறார். அது இன்றைக்கும் பொருந்தக்கூடியதே.

அடிப்படைவாதத்தை நேரடியாகக் கேள்வி கேட்கும் படம் என்ற விதத்தில் இப்படம் முன்னோடியானது. அறிவியல் உண்மைகளை எவராலும் மறைத்துவிட முடியாது என்பதற்கு இப்படமே சாட்சியம்.

ஸ்பென்சர் டிரேசியின் நடிப்பு மற்றும் எர்னஸ்ட் லாஸ்லோவின் ஒளிப்பதிவு மிகுந்த பாராட்டிற்குரியது.

- எஸ். இராமகிருஷ்ணன்,
எழுத்தாளர்

July 18, 2023

மின்சார பில் ”ஷாக்” கொடுத்த கதை!


தோழி ஒருவர் மதுரையில் வசிக்கிறார். அவர் தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.


வழக்கம் போல மின்சார பில் வருகிறது. அதை என் கணவரிடம் தெரிவித்தேன். என் கணவர் ஜிபே மூலம் செலுத்திவிட்டு, வேலைக்கு போய்விட்டார்.

இரண்டு மாதம் நகர்கிறது. வழக்கம் போல மின்சார அளவீடு எடுப்பதற்கு அந்த மின்சார ஊழியர் வருகிறார். வாசலில் நின்றுகொண்டே, யாருக்கோ போன் செய்து, “கரண்ட் பில் கட்டலைன்னு, பீஸை பிடுங்கனும்! ஆனால் வீட்டை கண்டுபிடிக்க முடியலைன்னு சொன்னியே! அந்த வீடு இங்கத்தான் இருக்கு!” என்றார்.

ஏதோ ஒரு வீட்டைப் பற்றி சொல்கிறார் என நினைத்துக்கொண்டே இருக்கும் பொழுது, அந்த வயர்மேனும் எங்கள் வீடு வந்து சேர்ந்தார். “மேடம்! நீங்க கடந்த பில்லுக்கு இன்னும் பணம் கட்டலை! ஆகையால் இன்றைக்கே கட்டுங்க!” என்றார்.

”நாங்க பணம் கட்டிட்டேமே! அதற்கான ரசீது கூட வைச்சிருக்கேன்!” என சொல்ல… ”பணம் திரும்ப வந்திருக்கும். சரிப்பாருங்க! சரிப்பார்த்துவிட்டு, திரும்ப வந்திருச்சுன்னா… இன்றைக்கே பணத்தை கட்டிருங்க! இல்லைன்னா பீஸை பிடுங்கியிருவோம்!” என சொன்னார்.

உடனே, வங்கிக் கணக்கை சரிப்பார்க்க சொல்லி, கணவருக்கு சொன்னால், ”ஆமா! பணம் திரும்ப வந்திருக்கு!” என சொல்ல, உடனடியாக மின்சார பில்லுக்கு பணத்தை செலுத்திவிட்டேன். அதற்கான அபராதத் தொகையையும் சேர்த்து கட்டிவிட்டேன்.

அடுத்து தான் ஒரு பெரிய பூதம் கிளம்பியது. இந்த மாதம் எடுத்த பில்லுக்கு, பணம் கட்ட மின்சாரம் கட்டுவதற்கான தளத்திற்கு போனால், எந்த பில் தொகையையும் காட்டவில்லை. ஆகையால் கட்ட முடியவில்லை.

மின்சார அலுவலகத்துக்குப் போய் விசாரித்தால், கடந்த பில்லுக்கு இப்பொழுது தான் பணம் கட்டியதால், இந்த பில்லை கட்ட முடியாது. இனி அடுத்தப் பில் வரும் பொழுது தான் கட்டமுடியும் என்றார்கள்.

இதென்ன அநியாயம், அடுத்த பில் தான் கட்டமுடியும் என்றால், நான்கு மாதத்துக்கு சேர்த்து பெரிய தொகையாக வரும். எல்லாம் டிஜிட்டல் மயம் என்கிறார்கள். ஜிபேயில் செலுத்தி, அது போய் சேராமல், இவர்கள் சிஸ்டத்தின் படி, பீஸ் கட்டையை பிடுங்க போகிறேன் என சொல்லியிருந்தால், கட்டியிருப்பேன். அதையும் அவர்கள் செய்யவில்லை.

இவை எல்லாம் முடிந்து, அடுத்த பில்லுக்கு கணக்கிட வந்து, நாலு மாதத்துக்கும் சேர்த்து ரூ 11000 செலுத்தவேண்டும் என பெரிதாக ஷாக் கொடுத்தார்கள்.

இரண்டு இரண்டு மாதத்திற்கு பிரித்து எவ்வளவு எனச் சொல்லுங்கள். நான் கட்டிவிடுகிறேன். இவ்வளவுப் பணத்தை என்னால் கட்டமுடியாது. அது நியாயமும் இல்லை என சொன்னேன். என் நியாயத்தை கேட்பதற்கு அங்கு எந்த காதும் தயாராக இல்லை.

என்ன நடந்தது என முறையாக கடிதம் எழுதி, மேலதிகாரிக்கு கொண்டுப் போய் கொடுத்தால், அவரும் ”என்னால் ஒன்றும் செய்யமுடியாது. நீங்கள் கட்டத்தான் வேண்டும்” என்றார்.

இதற்கிடையில், பணம் கட்டவில்லை என்றால், பீஸ் கட்டையை பிடுங்க வேண்டிய பொறுப்பில் உள்ள லைன் மேன் “நான் தான் பீஸ் கட்டையை பிடுங்கியிருக்கவேண்டும். தேடித்தேடிப் பார்த்து, உங்கள் வீட்டை கண்டுபிடிக்கமுடியவில்லை. பிறகு மறந்து போனேன். இப்பொழுது நீங்கள் இந்தப் பிரச்சனையை எழுப்பினால், என் வேலையில் சிக்கல் செய்வார்கள். மெமோ கொடுப்பார்கள். நான் இப்பொழுது வீடு கட்டிக்கொண்டிருக்கிறேன். ஆகையால், நீங்கள் எவ்வளவு கட்டவேண்டும் என்பதை கணக்கிட்டு கொடுங்கள். மிச்சத்தை நானே போட்டு கட்டிவிடுகிறேன்” என வந்து தனிப்பட்ட முறையில் பேசினார்.

இதற்கிடையில், மின்சாரத் துறையின் தலைமை அலுவலகம் போய், புகார் கொடுக்கப் போனால், அங்கு இருந்த ஒரு அதிகாரி “நேரிடையாக இங்கு வந்து விட்டீர்கள். இடைப்பட்ட நிலையில் ஒரு அதிகாரியிடம் புகார் கொடுக்கவேண்டும்” என என்னிடம் சொல்லிவிட்டு, சம்பந்தப்பட்ட அலுவலரிடம் பேசினார். “அவர்கள் பணம் செலுத்தவில்லை என்றால், முறையாக தெரிவித்து, அவர்களை பணம் செலுத்த வைத்திருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு, இப்படி செய்திருக்கிறீர்களே! உங்க வீட்டுக்கு இப்படி செய்வீர்களா? அவர்கள் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு போனால், நீங்கள் நால்வரும் தான் நிற்கவேண்டும்.” என பேசினார்.

அடுத்தநாள், மின்சார அலுவலகம் போனால், மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிட்டார்கள். ”நீங்கள் பணம் கட்டித்தான் ஆகவேண்டும்.” என பழைய பல்லவியே பாடத் துவங்கினார்கள். ”நான் கோர்ட்டுக்கு போவேன். நீங்க நாலு பேர் வந்து அங்கு பதில் சொல்லுங்கள்” என சொல்லிப்பார்த்தேன். எதுவும் அவர்களை அசைக்கவில்லை. அல்லது அசைக்காதது மாதிரி நடித்தார்கள்.

அந்த லைன் மேன், “இது என்னுடைய தவறு. நாமே பேசி சரி செய்துவிடலாம் என்றேன். நீங்கள் இப்பொழுது அடுத்தடுத்த நிலைக்கு போகிறீர்கள். இப்பொழுது எனக்குத்தான் சிக்கல். ஆகையால், நான்கு மாத கணக்கை, இரண்டு இரண்டு மாதங்களாக பிரித்து என்ன தொகை வருகிறதோ, அந்தத் தொகையை என்னிடம் கொடுங்கள். மீதிப்பணத்தைப் போட்டு நான் கட்டிவிடுகிறேன்” என்றார்.

இறுதியில், ஆறாயிரத்தை அவரிடம் கொடுத்து, லைன் மேன் கூடுதலாக பணத்தை போட்டு, கட்டிவிட்டு, என்னிடம் ரசீது தந்தார்.

இப்படியாக இந்தப் பிரச்சனை முடிந்தது என என்னிடம் தெரிவித்தார். கூடுதலாக கட்டியப் பணத்தை அடுத்த மாதம் போல அவரிடம் கொடுக்கலாம் என இருக்கிறேன் என தெரிவித்தார் தோழி.

ஆக, இந்த நிகழ்வில், பெற்ற பாடம் என்பது இது தான்.

ஜி.பே போன்றவற்றின் மூலமாக பணம் செலுத்தினால், அந்தப் பணம் மின்சாரத்துறைக்கு போய்விட்டதா என நாம் ஒருமுறைக்கு, இருமுறை நன்றாக சோதித்துக்கொள்ளவேண்டும். இல்லையெனில், சிக்கல் தான்.

மின்சாரத்துறையும் தன் கடமையை சரியாக செய்யாது. அது செய்யும் சிக்கல்களுக்கும் சேர்த்து நாம் தாம் தண்டத்தை அழவேண்டும்.

கவனம் கொள்ளுங்கள்.

July 16, 2023

பாவமன்னிப்பு (1961)




ஊரில் வைர வியாபாரி ஒருவர் இருக்கிறார். பேராசைப் பிடித்த ஆள். தன்னிடம் வியாபாரம் செய்த ஒருவரை விஷம் வைத்து கொல்கிறார். போலீசு விசாரணையில், தன் கார் ஓட்டுநரை மாட்டிவிடுகிறார். இதனால், ஓட்டுநரின் குடும்பம் சிதைகிறது. அவருடைய இரு மகள்களும் இரு குடும்பத்தால் தத்து எடுக்கப்பட்டு, வளர்க்கப்படுகிறார்கள்.


ஓட்டுநர் போலீசிடமிருந்து தப்பித்து வைர வியாபாரியை கொலை செய்யும் முயற்சியில் தோற்க, அவர்களில் இரு பையன்களில் இளையவனைத் தூக்கிக்கொண்டு போய் தண்டவாளத்தில் விட்டுவிடுகிறார். அந்த பையனை ஒரு முசுலீம் எடுத்து வளர்க்கிறார்.

பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகிவிடுகிறார்கள். வைர வியாபாரியின் பையன் சொந்த ஊரிலேயே போலீஸ் அதிகாரியாகிறார். அவர் ஓட்டுநரின் மூத்தப் பெண்ணை காதலிக்கிறார். முசுலீம் பாய் தத்தெடுத்த பையன் ஊருக்கே மருத்துவம் பார்க்கும், நல்லது, கெட்டதுகளில் பங்கேற்கும் இளைஞனாகிவிடுகிறார். ஓட்டுநரின் இரண்டாவது பெண்ணான கிறித்துவர் எடுத்து வளர்க்கும் பெண்ணை காதலிக்கிறார்.

வைரவியாபாரி திருந்தியவராயில்லை. கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாழும் மக்களை காலி பண்ணி, ஒரு முதலாளிக்கு விற்பதற்கு ஏற்பாடு செய்கிறார். தன் செயல்களுக்கு தடையாய் இருக்கும் யாராயிருந்தாலும், என்ன வேண்டுமென்றாலும் செய்ய துணிகிறார்.

இறுதியில் என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
***

படத்தில் சிவாஜி, தேவிகா, ஜெமினி, சாவித்திரி, எம்.ஆர். ராதா என பல முக்கிய கதாப்பாத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் ஒருவர் பேட்டியில் இரு நாயகர்கள் நடிப்பது குறித்து சொல்லும் பொழுது, அந்த காலத்தில் அது இயல்பாக நடந்தேறியிருக்கிறது. இந்தப் படம் போல பல படங்களில் இயல்பாக நடித்திருக்கிறார்கள். இன்றைக்கு மலையாள திரையுலகில் அந்த பண்பாட்டை இன்னும் கடைப்பிடித்துவருகிறார்கள் என தெரிகிறது.

சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, தேவிகா இன்னும் சில குணச்சித்திர நடிகர்கள் என தேர்ந்த நடிகர்கள் பலர் இருந்தாலும், மொத்தப் படத்தையும் தன் வில்லத்தனமான நடிப்பாலும், வசனத்தாலும், ஆக்கிரமிப்பது எம்.ஆர். ராதா தான். துவக்கத்தில் இருந்து அவ்வளவு வில்லத்தனமாக நடித்துவிட்டு, இறுதியில் திருந்துவது எல்லாம் நேர்மறையான முடிவுக்கு வேண்டுமென்றால், ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் இருக்கிறது.

சிவாஜிக்கு அத்தனை சாந்தமான பாத்திரம். மக்களுக்கு தொண்டாற்றும், வழிகாட்டும் பாத்திரம். அப்படிப்பட்டவர் ஓரிடத்தில் எம்.ஆர். ராதாவிற்கு எதிராக துப்பாக்கியை காட்டி மிரட்டுவது, சரியாக போலீசு வந்து அவரை கைது செய்து அழைத்துச் செல்வது தான் நம்பும்படி இல்லை. அவரை அவர் வாழும் பகுதியிலிருந்து நகர்த்தினால் தான் அந்த மக்களை அங்கிருந்து அகற்றமுடியும். அதனால் சிறைக்கு அனுப்ப இயக்குநர் முடிவு செய்துவிட்டார். அவ்வளவு தான்.

படத்தில் பல்வேறு மதத்தினர் ஒரே பகுதியில் ஒன்றாக கலந்து வாழ்கிறார்கள். அப்பொழுதும் அப்படித்தான். இப்பொழுதும் அப்படித்தான். இடையில் மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள், குறிப்பாக இந்துத்துவ கருத்தை வைத்து அரசியல் செய்வதால் அந்த ஒற்றுமையில் ஒரு சுணக்கம் வந்திருக்கிறது. அதை நம்முடைய ஒற்றுமையால் அவர்களை ஓரம்கட்டுவோம்.

”அத்தான் என்ன அத்தான்”, “எல்லோரும் கொண்டாடுவோம்”, “காலங்களில் அவள் வசந்தம்”, ”பாலிருக்கும் பழமிருக்கும்”, “சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்”, “வந்த நாள் முதல்” என படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் எல்லா பாடல்களுமே சிறப்பு. பீம்சீங் இயக்கியிருக்கிறார்.

படம் மூன்று மணி நேரம் ஆறு நிமிடங்கள் ஓடுகிறது. தெளிவான தரத்தில் யூடியூப்பிலேயே இலவசமாக பார்க்க கிடைக்கிறது.

Will you be there (2016) தென்கொரியா - Feel Good Movie



நாயகன் ஒரு மருத்துவர், தன் கல்லூரி செல்லும் பிரியத்துக்குரிய மகளுடன் வாழ்ந்து வருகிறார். அவருக்கு புற்றுநோய் இருக்கிறது. எப்பொழுது வேண்டுமென்றாலும் செத்துபோய்விடும் நிலையில் இருக்கிறார்.


கம்போடியாவில் மருத்துவ முகாம் சென்றிருந்த பொழுது, கண் தெரியாத ஆதிவாசி ஒருவரின் பேத்திக்கு உதவும் பொழுது, நன்றிக்கடனாக அவர் (மந்திர) மாத்திரைகளைப் போல இருக்கும் ஒரு சின்ன பாட்டிலைத் தருகிறார்.

அதில் ஒன்றை விழுங்கினால், சரியாக முப்பது வருடங்களுக்கு முன்பாக காலப் பயணம் செய்கிறார். அங்கு தன்னுடைய இளவயதுள்ளவனைப் பார்க்கிறார். எல்லாம் இருபது நிமிடம் தான். மீண்டும் சமகாலத்துக்கு வந்துவிடுகிறார்.

மீண்டும் பயணிக்கிறார். தான் காதலித்த பெண்ணைப் பார்க்க செல்கிறார். இதில் இளவயது நாயகனுடன் பேசும் பொழுது, அவள் ஒரு விபத்தில் இறந்து போகும் ஒரு செய்தியை வாங்கிவிடுகிறான். காதலியைக் காப்பாற்ற வேண்டும் என்கிறான். அவளைக் காப்பாற்றினால், அதற்கு பிறகு ஒருவரை திருமணம் முடித்து பிறந்து, இப்பொழுது தன் மகளாக இருக்கும் அவள் இல்லாது போய்விடுவாள்.

இருவருக்கும் பாதிப்பு இல்லாமல் என்ன செய்வது என்பதை இருவரும் பேசி வைத்துக்கொண்டு நடக்க முயல்கிறார்கள். ஆனால், இயற்கை சில திருப்பங்களை தருகிறது. அதை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

***
காலப்பயணம் குறித்து உலக அளவில் நிறைய படங்கள் வந்துவிட்டன. தமிழிலும் கூட படங்கள் வந்துவிட்டன. முன்பெல்லாம் காலப்பயணம் குறித்து நீட்டி முழக்கிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. சமீபத்தில் பார்த்த ஒரு படத்தில் ஒரு இருட்டான அறையில் போய் ஒரு தேதியை நினைத்துக்கொண்டால், அங்கு போய்விடுவார் என காட்சி வைத்திருந்தார்கள். அது போல இந்தப் படத்திலும், எளிதாக ஒன்றை வைத்திருக்கிறார்கள்.

காலப்பயணத்தில் (என்ற கற்பனையில்) நல்லதும் இருக்கிறது. அபாயமும் இருக்கிறது தானே! இப்பொழுது உள்ள கொஞ்சம் நஞ்சம் நல் வாழ்க்கையும் தொலைந்து போனால் என்ன செய்வது? தனக்கு கிடைத்த நல் (!) வாய்ப்பினை அந்த மருத்துவர் எவ்வளவு புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டார்? அதில் வெற்றி பெற்றரா என்பதை பீல் குட் மூவியாக நகர்த்தியிருக்கிறார்கள். உணர்வுப்பூர்வமாகவும் நகர்த்தியிருக்கிறார்கள்.

ஒரு மனிதனுடைய ஆளுமை கட்டமைக்கப்படுவது என்பது, அவன் வாழ்ந்த வாழ்வியலில் தானே இருக்கிறது. வாழ்க்கையை அதன் திசை வழியில், அப்போதிருந்த மனநிலையில் , சூழலில் வாழ்ந்து, அதன் நல்லது, கெட்டதில் கற்றுக்கொண்டு, அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்துவிடுவது தான் சரியானது. என்ன சொல்கிறீர்கள்?

படத்தில் நடித்தவர்கள் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் ஒரு பிரெஞ்சு நாவலை அடிப்படையாக கொண்டு எடுத்தது என்கிறார்கள். படம் மெதுவாகத் தான் நகர்கிறது. நிறைய நேரம் இருப்பவர்கள் பாருங்கள். இப்பொழுது இணையத்தில் எங்கும் இருப்பதாக தெரியவில்லை. நான் நண்பரிடமிருந்து வாங்கிப் பார்த்தேன்.

July 13, 2023

Koode (2018) மலையாளம் அண்ணனுக்கும் தங்கைக்குமான உரையாடல்


“உங்களுக்குத் தேவையானது உங்கள் மீது உண்மையிலேயே அக்கறை கொண்ட ஒரு மனிதர் மட்டுமே. ஆனால் உங்களைக் கண்டுபிடிக்க, நீங்கள் எப்போதும் கடமைகள் மற்றும் தளைகளுக்கு அப்பால் பார்க்க வேண்டும். அங்கு, அடிவானத்தில், உண்மையான சுதந்திரம் உள்ளது.”

- From Hindustan times

அம்மா, அப்பா, பள்ளி படிக்கும் மாணவன் என சிறுகுடும்பம் அது. மீண்டும் ஒரு மகள் பிறக்கிறாள். அவளை மொத்த குடும்பமும் மகிழ்வோடு வரவேற்கிறது.

இந்த மகிழ்ச்சி எல்லாம் இரண்டு வருடங்கள் தான். அந்த குழந்தை நோயுறுகிறாள். அவளின் நோயைக் குணப்படுத்த மருந்தில்லை அவள் வாழும் வரை வாழட்டும். அதற்கு மருத்துவம் உதவி செய்யும் என சொல்லிவிடுகிறது.

மருத்துவ செலவுகள் அந்த எளிய குடும்பத்தை தலைகீழாய் புரட்டிப்போட்டுவிடுகிறது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு போய்விடுகிறது. மகனின் பத்தாவது படிப்பை நிறுத்திவிட்டு, அவனை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புகிறார்கள். அவனுக்கு படிப்பின் மீது அத்தனை ஆர்வம் இருந்தாலும், தங்கையின் நிலைக்காக அவன் சம்மதித்து செல்கிறான்.

அவளுக்கு வாழவேண்டும் என அத்தனை ஆசை. அத்தனை உற்சாகம். ஆனால், கல்லூரி படிக்கும் பொழுது, அவள் அணைந்துவிடுகிறாள். அவளின் இறப்புக்கு பிறகு நாயகனான சகோதரன் ஊருக்கு வந்துசேர்கிறான்.


தங்கையின் உணர்வுகளால் அவன் உந்தப்படுகிறான். ஆகையால், அவனுக்கு மட்டும் கண்ணில்படுகிறாள். அப்பா வைத்திருந்த ஒரு பழைய வேனை எடுத்துக்கொண்டு ஊரைச் சுற்றி வருகிறான். அந்த வேனில் அவனோடு கலகலப்பாக பேசுகிறாள். விவாதிக்கிறாள். சண்டை போடுகிறாள்.

அவனோடு பள்ளிப் படித்த நாயகி, திருமணமாகி, பிறகு விவாகரத்தாகி, இப்பொழுது தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியராக வேலை செய்கிறாள். அவளின் குடும்பம் பழைய விழுமியங்களோடு இருக்கிறது. நாயகனோடு பேச துவங்குகிறாள். அந்த குடும்பம் சண்டைக்கு வருகிறது.

பிறகு என்ன ஆனது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

***

படம் மனித உணர்வுகளைப் பற்றித்தான் பேசுகிறது. தங்கையைப் பிடிக்கும். தங்கையின் வாழ்வுக்காக தான் அவன் வெளிநாடு செல்லவேண்டிய நிர்ப்பந்தம். ஆகையால் சூழலின் மீது அத்தனை கோபம் அவனுக்கு. அவன் இழந்து போன வாழ்வில் தேங்கி நிற்கிறான். தங்கையோ அந்த தன் வாழ்நாளின் இறுதி தெரிந்துவிட்டதால், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் உற்சாகமாய் வாழ்ந்தாள். அண்ணனுடனான உரையாடல் மூலம் அவனையும் நிகழ்காலத்துக்கு இழுத்து வருவது தான் கதை.

நாயகன் பிரித்விராஜ். மென்சோகத்தோடு அலைகிற பாத்திரம். கச்சிதமாக பொருந்துகிறார். துறுதுறுப்பான தங்கையாக நஸ்ரியா. இந்தப் பாத்திரம் வேறு யாருக்கும் இத்தனை பொருந்திபோகும் என தெரியவில்லை. நஸ்ரியாவிற்காக இந்தக் குழு காத்திருந்திருக்கிறது. நாயகியாக பார்வதி. அருமையாக நடித்திருக்கிறார்.

படத்தில் வரும் அந்த வேனுக்கு படத்திலேயே ஒரு காதல் கதை சொல்வார்கள். எனக்கு அந்த வேனைப் பார்த்ததும், Into the wild (2007) கிறிஸ்டோபர் நினைவுக்கு வந்தார். அவர் ஒரு மாணவர். தன் எல்லா அடையாளங்களையும் அழித்துவிட்டு, அலாஸ்காவிற்கு போய், இப்படி ஒரு வேனில் தான் வாழ்ந்து, உயிர் துறப்பார். அது ஒரு உண்மைக் கதை. அதுவும் நல்லப் படம். பாருங்கள்.

Bangalore days இயக்கிய அஞ்சலி தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். நல்ல படம். பாருங்கள். அமேசானிலும், யூடியூப்பிலும் இருப்பதாக இணையம் சொல்கிறது.

July 12, 2023

தியாகிகளுக்கு வணக்கம்


வழக்கமாக பொருளாதார வல்லுநர்கள் அட்வைஸ் பண்ணும்போது, உங்களது சம்பளத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கவேண்டும் என்று சொல்வார்கள் அல்லவா, நான் இன்னொன்று சொல்கிறேன். நீங்கள் செய்யும் இரண்டாவது செலவு உங்களுக்கான சொந்த செலவாக இருக்கவேண்டும். சேமிப்பை விட இது ரொம்ப முக்கியம். இன்னும் சொல்லப்போனால் சேமிப்பே இரண்டாம் பட்சம்தான்.


ஏன் என்று சொல்கிறேன் கேளுங்கள். பல சைக்கோக்கள் உருவாவதற்கு அவர்கள் கைக்கொள்கிற "தியாக உணர்ச்சிதான்" காரணம். ஒரு நல்ல பேண்டோ சட்டையோ வாங்காமல் பையன் படிப்புக்கும் பெண் படிப்புக்கும் செலவு பண்ணும் தகப்பன். குழந்தைகளுக்கு நல்ல ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்துவிட்டு இப்போதும் அந்த பழைய நோக்கியா போனில் செட்டில் ஆகும் அம்மா. எப்போதும் கிழிந்த ஜட்டியையே போட்டுக்கொண்டு அதை தியாகமாக கற்பனை செய்துகொண்டிருக்கும் மாமாக்கள் இவர்களால் நிறைந்திருக்கிறது உலகம்.

வீட்டிற்கு இப்படி தியாகம் செய்து ஓடாக உழைக்கும் இந்த அடிமைகள் சமூகத்திற்கு என்ன மாதிரியான தீங்குகளை விளைவிப்பார்கள் என்று பாருங்கள். பெரும்பாலும் மிஸ்ட் கால் கொடுப்பார்கள். ஓசி குடி குடிப்பார்கள். டீயை ரொம்ப நேரம் ஊதி ஊதிக் குடிப்பார்கள். சேர்ந்து உணவு அருந்தியபிறகு பில் கொடுக்கும் நேரத்தில் அவர்களுக்கு போன் வரும். யார் என்ன பொருள் வாங்கினாலும் அது என்ன விலை என்று தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். அது அழகாக இருக்கிறதா என்பது முக்கியமே இருக்காது. இவள் என் மகன் என் மகள் என்று நண்பர்கள் யாராவது அறிமுகப்படுத்தினால், என்ன படிக்கிற, எந்த ஸ்கூல், என்று கேட்டுவிட்டு அப்படியே திரும்பி எவ்ளோ ஃபீஸ் கட்டுறீங்க, அந்த அளவுக்கு ஒர்த்தா, டியூஷன் எங்க போட்ருக்கீங்க அந்த ஃபீஸுக்கு அது ஒர்த்தா போன்ற முக்கியமான கேள்விகளைக் கேட்பார்கள். இதை விட அந்த ஸ்கூல் டீச்சர்களுக்கு பூப்ஸ் நல்லாருக்குமா என்று கேட்கும் தகப்பன் மன ஆரோக்கியம் உள்ளவன்.

இந்த ஓல்மாரித்தனம் ஏன் ஒரு மதமாக நம் ஆட்களிடம் இருக்கிறது என்பதைக் கள ஆய்வு செய்து நான் கண்டுபிடித்த முடிவுகளையே இங்கு சொல்கிறேன். தனக்கென்று இவர்கள் எதுவுமே செய்துகொள்வது கிடையாது. எது செய்தாலும் குடும்பத்த்தோடு சேர்ந்து செய்வது என்பதாக டியூன் ஆகியிருக்கிறார்கள். அப்படி செய்து செய்து, தான் ஒரு தனி மனிதன் என்கிற சொரணையே அற்றுப் போய்விட்டது. அது சுரண்டலாக மொன்னைத்தனமாக மாறிவிட்டதைக் கூட அறியாதவர்களாக இருக்கிறார்கள். இந்த கொடூர தவறுகளை சமன்படுத்தும் காரியத்தைத்தான் அவர்களது தியாக உணர்ச்சி செய்கிறது. வெளி ஆட்களுக்கு கொடூர மொக்கையாக இருக்கும் இவர்கள் எப்படி வீட்டில் மட்டும் தியாகிகளாக இருக்கிறார்கள்?

இதிலிருந்து வெளியேற சில வழிகள்.

கொஞ்சம் பணம் இருந்தாலும் சரி, தனக்கென்று ஏதாவது வாங்குங்கள். வெறும்
அழகுணர்ச்சிக்காகக் கூட அது இருக்கட்டும். ஒரு சிறிய பிளாஸ்டிக் ரோசாப்பூ, ஐந்து ரூபாய் கூட இருக்கலாம், நீங்கள் பில் பே பண்ணும் மேசை பக்கத்தில் இருக்கிறது என்று வையுங்கள், சும்மா வாங்குங்கள். பொண்டாட்டிக்கோ, கேர்ள்பிரண்டுக்கோ கொடுங்கள். இல்லையா கொஞ்ச நேரம் சும்மா கையில் வைத்திருந்துவிட்டு தூக்கிக் கீழே போடுங்கள். பணம், மதிப்பு என்று அந்த சில்லறை விஷயத்துக்கு அல்லாடாதீர்கள்.

தனியாகப் போய், ஏதாவது பர்சேஸ் பண்ணுங்கள், ஒரு ஜட்டியோ பணியனோ கிழியும் வரைக் காத்திருக்காதீர்கள். அது கிழியாவிட்டாலும் சில மாதம் கழித்து மாத்துங்கள். பொண்டாட்டிக்கு, கேர்ள் பிரண்டுக்கும் வாங்கலாம். அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் பிரச்சினை இல்லை. இது ரொம்பவும் நுணுக்கமானது. இது உங்களுக்குப் பிடிக்கிறது வாங்குகிறீர்கள். இதுவேதான் பெண்களுக்கும். புருஷனுக்குப் பிடிக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை. தூக்கிப் போடட்டும். பரவாயில்லை.

எப்போதும் படுக்கையறைக்கு வரும்போது சாம்பார் தாளித்த வாசனை நைட்டியின் நெஞ்சுப் பகுதியில் கமழக் கமழ மனைவி வருகிறாளா, நைட்டியை உங்கள் கையாலேயே உருவி எடுத்து விடுங்கள். மிதியடியாக கட்டிலுக்குக் கீழே போடுங்கள். இல்லை அந்த சாம்பார் வாசனைதான் விரைப்பைத் தூண்டுகிறது என்றால் பரவாயில்லை. ஃபெட்டிஷ் ஓரளவுக்கு ஓகேதான்.

யார் வீட்டுக்குப் போனாலும் இது சொந்த வீடா வாடகை வீடா இந்த பொருள் எப்போது வாங்கினீர்கள் என்று கேட்காதீர்கள். கேபிள் டிவியா, செட்டாப் பாக்ஸா, கேரண்டி இருக்கா மூச்...

அந்த வீட்டுக் குழந்தைகள் பற்றி எதுவுமே விசாரிக்காமல் இருக்க முடியுமா என்று பாருங்கள். அவர்கள் தப்பாக நினைத்துக் கொள்வார்கள் என்பதற்காக சும்மாவாவது எதுவும் கேட்காதீர்கள். நீங்களும் சொல்லாதீர்கள். இரண்டு நண்பர்கள் மீட் பண்ணும்போது குடும்ப விவகாரம் பற்றி பேசாமல் வேறு ஏதாவது பேச வருகிறதா என்று முயன்று பாருங்கள்.

போனவுடனேயே உங்கள் wifi பாஸ்வோர்ட் கொஞ்சம் கொடுங்கள் என்று கேட்காதீர்கள். netflix, amazon பாஸ்வோர்ட் கேட்பது அராஜகம். அப்படியே அவசரமாக பாஸ்வோர்ட் தேவைப்பட்டால் ஃபோனை அவரிடமே கொடுத்து டைப்படிக்க சொல்லுங்கள். horny neighbour என்று கூட இருக்கலாம். நீங்கள் பக்கத்து வீடாக இருக்கையில் மனவுளைச்சலாக இருக்கும்.

சுற்றியுள்ளவர்களுக்கு அதாவது குடும்பத்துக்கு உறவினர்களுக்கு ஏதாவது வாங்கினால், அதை முதலில் உங்களுக்கு வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு மற்றவர்களுக்கு வாங்குங்கள். இது நீங்கள் கிஃப்ட் பண்ணும் பொருள் மீதான உங்கள் உடமை மனப்பான்மையை மட்டுப்படுத்தும். நான் எனக்குன்னு செஞ்சுக்காம உனக்காக பண்ணேனே போன்ற ஊளை சென்டிமென்டுகளை ஒழிக்கும். இது ரொம்பவும் முக்கியம்.

அடுத்தவர்களுக்கு கிஃப்ட் பண்ணுவதற்கு, ஹோட்டலில் சுடும் பொருட்கள், ஆபீசில் இருந்து எடுத்து வரும் பொருட்கள், உங்களுக்கு யாராவது கிஃப்ட் பண்ணும் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள். நீங்கள் பரிசாக தருகிறீர்கள் என்பதால் நீங்கள் அற்பர் என்பது மாறிவிடாது.

சர்பிரைஸாக யாருக்காவது செலவு செய்யுங்கள். காரணமே இல்லாமல் இருக்கட்டும். உடனே மறந்துவிட முயற்சி செய்யுங்கள்.

எல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக்கொண்டு அதை மீண்டும் சந்திக்கையில் சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள். இப்படித்தான் நான் போன முறை உங்க வீட்டுக்கு வந்தப்ப, நீங்க கோவிலுக்கு கிளம்பிட்டிருந்தீங்க பையன் அடம் பண்ணிட்டிருந்தான், அன்னைக்கு நீங்க கொடுத்த காப்பியில் சுகர் கொஞ்சம் அதிகமா போட்டுட்டீங்க ஹி...ஹி...

யாருக்கும் அறிவுரை சொல்லாதீர்கள். கேட்டாலும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசியுங்கள். இரண்டு நண்பர்கள் தொடர்புடைய காரியத்தில் இரண்டு பேருக்கும் சேர்த்து மூன்றாவது நண்பரிடம் கமிட் பண்ணாதீர்கள். அது டீ குடிப்பதாக இருந்தாலும் சுவர் ஏறிக் குதிப்பதாக இருந்தாலும் சரி...

சம்பளத்தில் இது எனக்கான பணம், எனக்கு மட்டுமேயான பணம் என்று கொஞ்ச பணத்தை மனதிற்குள் சொல்லிக்கொள்ளுங்கள். அதைக் களிப்புடன் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், அது எவ்வளவு அற்பத்தனமாக இருந்தாலும் சரி, அடுத்தவரை சுரண்டாமல் காயப்படுத்தாமல் களிப்புடன் செலவு பண்ணிப் பாருங்கள். இணையருக்கும் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு அதை மறந்துவிடுங்கள். ஆத்மார்த்தமாக மறக்க முயலுங்கள்..

- காரல் மார்க்ஸ் கணபதி, முகநூலில்....!