> குருத்து: 2007

December 26, 2007

இரத்தம் தோய்ந்த செங்கல் - குஜராத்!



கொதிக்கின்ற - தார்ச்சாலையில் நிர்வாணமாக கிடக்கிறாள் அந்தப் பெண் - பிணமாக. அவள் உடம்பிலிருந்து உரித்தெறியப்பட்ட சேலை அருகே சுருண்டு கிடக்கிறது. கிழித்தெறியப்பட்ட அவளது உள்ளாடையின் ஒரு பாதியை தவிப்புடன் இறுகப் பற்றியிருக்கிறது அவளது இடது கை. உடலும் கையும் நசுங்கிச் சிவந்து ரத்தம் உறைந்திருக்கிறது. இடது தொடை முழுவதும் ரத்தம். உடலுக்கருகில் பரிதபமாக கிடக்கிறது அவளது பிளாஸ்டிக் செருப்பு.

அருகே ரத்தமும், வெறுப்பும் தோய்ந்த ஒரு செங்கல். கொலைகாரர்கள் அவள் மீது எறிந்த இறுதி ஆயுதம், அதுவும் கிடக்கிறது.

அவளது பெயர் கீதாபென். மார்ச் 25ம் தேதி அகமதாபாத்தில் அவளுடைய வீட்டு வாசலிலேயே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் வைத்து பட்டப்பகலில் அவள் கொடூரமாகக் கொல்லப்பட்டாள்.

அவள் ஒரு இந்துப் பெண். இருந்தும் ஒரு முசுலீம் இளைஞனைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் மாபாதகத்தைச் செய்துவிட்டாள். "அவனை ஒப்படைத்து விடு" என்று வீட்டு வாசலில் நின்று ஆர்.எஸ்.எஸ் காலிகள் மிரட்டிய போது ஒருபாறையைப் போல அவள் உறுதியாக நின்றாள் - கணவன் தப்பிச்செல்லும் வரை.

முசுலீமைக் காதலித்த குற்றம், அவன் உயிரைக் காப்பாற்றிய குற்றம். இந்த இரண்டு குற்றங்களுக்காகவும் அந்தக் கணமே, அங்கேயே அவள் நிர்வாணமாக்கப்பட்டு, நடுத்ததெருவில் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டாள்.

- செய்தி: Times of India, 19th April/2002.

கொதிக்கின்ற தார்ச்சாலையில்
நிர்வாணமாகக் கிடக்கிறாள்
அந்தப் பெண்.

கீதா பென்னின்
உயிரைப் பறித்த செங்கல்
ஆயிரக்கணக்கான முசுலீம்களின்
உயிரைக்குடித்த அதே செங்கல்

செங்கல் காவு கொண்ட
கீதா பென்னின் உயிர்
காவுக்குத் தப்பிய
அவள் கணவனின் உயிர்
கீதாபென் - கள் பலர்
குஜராத்தில் இருந்திருந்தால்
கீதா பென்
நடுவீதியில் ஆடையின்றி
பிணமாகக் கிடந்திருக்க
மாட்டாள்.

குஜராத்தும்
அம்மணமாக நின்று
அவளை வேடிக்கை
பார்த்திருக்காது.

இந்து - முசுலீம் தம்பதியர். திருமணப் பதிவு அலுவலகத்திலிருந்தும் பிற அரசு ஆவணங்களிலிருந்தும் இத்தகைய கலப்பு மணம் புரிந்தோரின் பட்டியலை சேகரித்துக் கையில் வைத்துக் கொண்டு தம்பதியரில் முசுலீமை மட்டும் கொலை செய்திருக்கிறது இந்து மதவெறிக்கும்பல். ஆனால் இது திடீரென்று நடக்கவில்லை.

கடந்த 15 ஆண்டுகளில் இந்து மதவெறி இயக்கங்களின் வளர்ச்சியையொட்டி குஜராத் சமூகத்தின் பண்பாடும் பாசிசமயமாகி வந்திருக்கிறது. மத மறுப்புத் திருமணத்தைக் கேலி செய்வது, இழிவு படுத்துவது, குடியிருக்க இடம் தராமல் தனிமைப்படுத்துவது ஆகியவை தொடர்ந்து நடந்திருக்கின்றன. இதனை முகாந்திரமாக வைத்தே பல முசுலீம் எதிர்க் கலவரங்கள் நடந்துள்ளன.

இவையனைத்திற்கும் மேலாக மாநில பாரதீயஜனதா அரசு ஆகஸ்டு'98ல் காவல் துறைக்கு அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஒரு சுற்றறிகையை அனுப்பியது. "மதமாற்றத்தை நோக்கமாகக் கொண்டுதான் இந்து முசுலீம் திருமணங்கள் நடைபெறுகின்றன; எனவே, இத்தகைய எல்லா திருமணங்களையும் புலன் விசாரனை செய்யவேண்டும்" எனக் கூறி இதற்க்கென தனியே ஒரு போலீஸ் படையையும் அமைத்தது குஜராத் அரசு.

மதமாற்றம் செய்வோருக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கும் மசோதா ஒண்றை இருப்பினும் இந்த முடிவை அரசு வாபஸ் பெறவில்லை.குஜராத் பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. நாடு முழுவதும் எழுந்த கண்டனங்களின் விளைவாக தற்காலிகமாக அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் வாழும் கிறித்தவர்களையும் முசுலீம்களையும் மட்டும் கணக்கெடுப்பதற்கென்றே தனியாக ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும் ஜனவரி'2000-ல் குஜராத் அரசு அறிவித்தது. குஜராத் உயர் நீதிமன்றம் இதற்குத் தடை விதித்துள்ளது.

கீதாபென்னும் திடீரெனக் கொல்லப்படவுமில்லை.

புதிய கலாச்சாரம் - மே 2002- இதழிலிருந்து

நன்றி : இயல் from http://venmani.blogspot.com

பின்குறிப்பு:

இயல் அக்டோபர் மாத இறுதியில், இதை தன் பதிவில் போட்டிருந்தார். அதை மீண்டும் எடுத்துப் போட்டதற்கு, மூன்று முக்கிய காரணங்கள்.

ஒன்று : குஜராத்தில், தனி பெரும் மெஜரிட்டி பெற்று, மோடி மீண்டும் முதல்வராகியிருக்கிறார். தனது நடவடிக்கைகளாலும், பேச்சினாலும் இட்லரின் வாரிசுகளாக அறியப்பட்ட ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் நிறைய உற்சாகமடைந்திருக்கின்றன. அவர்களைப் பற்றி மீண்டும் நினைவுப்படுத்த இந்த பதிவு.

இரண்டு : இயல் பதிவாய் போட்டவுடனே, கெட்ட கெட்ட வார்த்தைகளால், ஆர்.எஸ்.எஸ்.
ஆதரவாளர்கள் நிறைய திட்டியிருந்தார்கள். அது எனக்கு நிறைய பிடித்துபோனது.

மூன்று : மோடி வெற்றி பெற்றதுமே, மதுசூதனன் என்ற பதிவர், வாழ்த்து சொல்லி பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கான பின்னூட்டங்களில், மதுசூதனன் இப்படி ஒரு பதில் சொல்லியிருந்தார்.

//என்வரையில் மோடி நல்லவர். ஏனென்றால் பத்து பேருக்கு கெடுதல் செய்தாலும் ஆயிரம் பேருக்கு நல்லது செய்தவர் என்பதையும் இங்கே வாதிடும் யாராலும் மறுக்க முடியாது //

மூவாயிரம் உயிர்களை கொன்று குவித்த மோடி இட்லரின் வாரிசு என்றால், மதுசூதனன் போன்றவர்கள், மோடியின் வாரிசுகள்.

December 14, 2007

காமம் + களவு = மரணம்



நேற்று நடுநிசி
'அவனும் + நானும்'


யாரோ உளவு சொல்லி...
அப்பாவும், அண்ணனும்
செருப்பால்
விளக்குமாற்றால்
இருவரையும்
வதைத்தார்கள்

"நான் தான் அழைத்தேன்
அவரை விட்டுவிடுங்கள்"
அழுத்தமாய் சொன்னேன்

அழுகை
வரவேயில்லை

சுற்றிலும்
முணுமுணுப்பு கேட்டது

மகன் ஏதுமறியாமல்
தூங்கி கொண்டிருந்தான்

வெறுமையாய்
வெறுப்பாய் இருந்தது

காலை 11 மணி

மார்ச்சுவரியில் - 'நான்'
கிடத்தப்பட்டிருந்தேன்

காமம் - இனி
என்னுள் ஊறாது

காதில் - இனி
எதுவும் விழாது

என்னை நானே
தண்டித்துவிட்டேன்

முன்கதை சுருக்கம்

நோயாளி - துணை

முதலில்
கொஞ்சமாய் ஊறி
தொல்லை செய்தது

தணிக்கப்படவில்லை

ஒருநாள்
அதிகாலையில்
துணை மரித்துப்போனான்

பெருக்கெடுத்தது

செல்கள்,
எண்ணங்கள் - அனைத்தையும்
ஆக்கிரமிக்கத் தொடங்கியது

மானம், அவமானம்
குடும்பம், சமூகம்
கண்களில்
மறையத் தொடங்கியது

என் கண்களில்
'நீலத்தை - 'அவன்'
கண்டுகொண்டான்


பின்குறிப்பு :

பதிவின் சாரம் கற்பனையல்ல. நடந்த சம்பவங்களின் சாரம் தான். (தூரத்து சொந்தமான) அண்ணனின் மனைவி தூக்கிலிட்டு கொண்டார் என நேற்று காலையில் செய்தி வந்தது. அவரை, கடந்த 10 ஆண்டுகளில், விசேஷ வீடுகளில் 4 அல்லது 5 முறை சந்தித்து பேசியிருப்பேன். கடந்த ஓர் ஆண்டுக்கு முன்னால், நோயில் அண்ணன் இறந்து போனார்.

இந்த பதிவின் மூலம், எழுப்பும் கேள்வி இதுதான். இந்த நாட்டில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடப்பதே, மிகுந்த சிரமமாயிருக்கிறது.

கணவனை இழந்த பெண்ணுக்கு, அதுவும் பத்து வயது பையன் வைத்திருக்கிற பெண்ணுக்கு மறுதிருமணம். சிரமம்.

ஆனால், இயற்கையாய் உடலில் எழுகிற காமத்தை என்ன செய்வது?

"நான் தான் அழைத்தேன்
அவரை விட்டுவிடுங்கள்"

- இறந்து போன வசந்தாவின் உண்மை உரையாடல் தான்.

எனக்கென்னவோ, பிற்போக்குத்தனமான சமூகம் தான் சத்தமில்லாமல் பல கொலைகளை செய்கிறது. நாம் தாம் அந்த கொலையை, தற்கொலையென தனிநபர் சம்பந்தபட்ட விசயமாய் புரிந்து கொள்கிறோம்.

December 4, 2007

இளமையின் கீதம் - நாவல் - அறிமுகம்


"நான் படித்த நூல்களில், சிறந்த புத்தகங்கள் என பத்து தேர்ந்தெடுத்தால், அந்த வரிசையில் இந்த புத்தகம் நிச்சயம் இடம் பெறும். இது கற்பனை நாவல் அல்ல. ரத்தமும், சதையுமான விடுதலைப் போராட்ட வரலாற்று நாவல்" - என்று... மகா அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு, அவருடைய பதிவில் அறிமுகப்படுத்தியிருந்தார்.

பிறகு, தேடிப்படிக்க சில காலங்கள் கடந்துவிட்டன. நல்ல ஆரோக்கியமான குண்டு புத்தகம் தான். மொத்தம் 748 பக்கங்கள். இப்படி கனமான புத்தகங்கள் நான் படித்தது மிகு குறைவு தான். அதும், நான் விரைவாக படித்த சில புத்தகங்கள் தான்.

அதில், மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் நாவல் முதல் புத்தகம். கடைசியாக படித்தது மொழிபெயர்ப்பு நாவலான பட்டாம்பூச்சி. சில ஆண்டுகளுக்கு பிறகு, இந்த புத்தகம் தான் விரட்டி, விரட்டி படித்த புத்தகம். மகா அவர்கள் சொன்னது போல, அற்புதமான நாவல்.

இன்றைக்கு கதை மட்டும் சொல்கிறேன். வரும் நாட்களில், நாவலில் சொல்லத்தக்க விசயங்கள் நிறைய இருக்கின்றன, அதையும் சொல்கிறேன்.

கதை தொடர்கிறது.

ஒரு நிலப்பிரவுவால் சீரழிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் நாயகி லிண்டாவோ சிங். நெருக்கடியில், தன்னந்தனியாக தன் சொந்த ஊரைவிட்டே வெளியேறுகிறாள்.

தேடிப்போன மாமாவும் அந்த கடலோர கிராமத்தில் இல்லாமல் போக, அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல், ஆதரவின்றி குழப்பத்தில் நிற்கும் அவளை, மேலும் துயரங்கள் துரத்த, மிகவும் தளர்ந்து தற்கொலைக்கு முயல்கிறாள்.

டாவோசிங்கைப் பிடித்துப்போய், அவளும் அறியாமல் பின் தொடரும் யூங்சே என்ற மாணவரால் காப்பாற்றப்படுகிறாள். அடுத்து வரும் காலங்களில் இருவரும் விரும்பி, காதலிக்கிறார்கள். காலங்கள் உருண்டோட, பீப்பிங் நகரத்துக்கு நகர்ந்து, அவன் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் தன் படிப்பைத் தொடர, இருவரும் இணைந்து வாழ்கிறார்கள்.

அப்பொழுது, சீனாவில் 1930க்குப் பிறகான காலகட்டம். ஏகாதிபத்திய நாடான ஜப்பான், வடக்கு சீனாவையும், வடகிழக்கு சீனாவையும் கைப்பற்றி மேலும் தனது ஆக்கிரமிப்பு எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே போனது. நிலவிய கோமிண்டாங் ஆட்சியும் மக்களுக்கு துரோகமிழைத்தது. சீனமண்ணை ஜப்பான் ஏகாதிபத்தியத்திற்கு விட்டு தரக்கூடிய அரசாக இருந்தது. சீன மக்கள் தங்கள் மண்ணை மீட்க, கம்யூனிஸ்டுகள் தலைமையில், போராடிக் கொண்டிருந்த காலம்.

அநீதிகளை எதிர்க்கும் பண்பும், சுதந்திர மனப்பான்மையும் கொண்ட டாவோசிங்கை இயல்பாகவே புற போரட்டச் சூழல் ஈர்க்கிறது. இந்த காலத்தில் கம்யூனிஸ்டுகள் அறிமுகமாகிறார்கள். அவர்களின் மூலம் மார்க்சிய-லெனினிய புத்தகங்கள் அறிமுகமாகின்றன. சமூகத்தையும், நாட்டின் சமகால நிலைமையையும் புரிந்து கொள்கிறாள்.

அறிமுக காலத்தில் முற்போக்காளனாய் தெரிந்த யூங்சே, இப்பொழுது, தன் படிப்பு, அந்தஸ்தான பதவிக்காக மிகுந்த கவனம், சமகால போராட்டத்திலிருந்து ஒதுங்கி நிற்கும் போக்கு, டாவோசிங்கின் கம்யூனிஸ்டுகளுடான தொடர்பில் வெறுப்பு என இன்னும் சில பிற்போக்குத்தனங்களுடன் வெளிப்படையாய் நடந்து கொள்ள, இனி அவனுடன் வாழ்வது சாத்தியமில்லை என்ற உறுதியான முடிவோடு அவனைப் பிரிகிறாள்.

டாவோசிங் சில போராட்டங்களில் ஈடுபட அரசின் உளவாளிகள் பிடித்து மிரட்ட, சுதாரித்து அங்கிருந்து தப்பித்து, ஒரு கிராமத்திற்கு போய் ஆசிரியப் பணி செய்கிறாள். அங்கும் போராட்டத்தில் ஈடுபட, கைது செய்ய அரசு படைகள் நெருங்க, அங்கிருந்தும் சிலரின் உதவியால் தப்பிக்கிறாள். இப்படி அடுத்தடுத்து வரும் நடைமுறை போராட்டங்களில் நிறைய தெளிகிறாள்.

அச்சமயத்தில் கோமிண்டாங் அரசு கம்யூனிஸ்டு என சந்தேகப்பட்டாலே, சிறையில் தள்ளியது. கொடூர சித்திரவதை செய்தது. காட்டிக்கொடுக்க மறுப்பவர்களை உயிரோடு புதைத்தது. இப்படி பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகளை கொன்று குவித்தது. பலவீனமானவர்களை மிரட்டி, காட்டிக்கொடுக்கும் உளவாளிகளாக மாற்றியது.

டாவோசிங் ஒருமுறை நகரம் வந்தடைந்ததும், அரசு படைகளால் பிடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறாள். கடும் சித்ரவதைக்குள்ளாகிறாள். நடமாட முடியாமல் படுத்தப் படுக்கையாகிறாள். அச்சமயத்தில், சிறையில் அடிப்படைத் தேவைகளுக்காக கைதிகள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அந்த மோசமான உடல்நிலையிலும், மனநிலையிலும் மன உறுதியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்கிறாள்.

டாவோசிங்கின் பொராட்டக்குணம், மன உறுதி, துணிவு எல்லாவற்றையும் கம்யூனிஸ்டு கட்சி பரிசீலனை செய்து, தன் உறுப்பினராக்குகிறது. மேலும் உற்சாகத்துடன் கட்சி வேலைகளில் ஈடுபடுகிறாள்.

அச்சமயத்தில், கோமிண்டாங் அரசு ஏற்கனவே நடந்த மாணவர் போராட்டங்களை ஒடுக்க கையாண்ட கடும் அடக்குமுறையால் மாணவர் அமைப்புகள் மந்த நிலையில் இயங்குகின்றன. கட்சி முடிவு செய்து, மாணவர்களிடையே வேலை செய்ய அனுப்புகிறது.

ட்ராஸ்கியவதிகள், கோமிண்டாங் விசுவாசிகள், பிற்போக்குவாதிகடையே கருத்து ரீதியாக மோதி, சில ஆதாரங்களை காட்டி அம்பலபடுத்தி, கம்யூனிஸ்டு மாணவர் அமைப்பு உற்சாகத்துடன் முன்னேறுகிறது.

இறுதியில், ஒரு ஆர்ப்பாட்டத்தை மாணவர் அமைப்பு பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்கிறது. தூக்கமில்லாமல் இரவு பகலாக டாவோசிங்கும், மாணவர்களும் வேலைகள் செய்கிறார்கள்.

திட்டமிட்டப்படி, வெற்றிகரமாக ஊர்வலம் தொடங்கி,

"என் தாய்நாட்டு மக்களே, அணிதிரட்டுங்கள்! ஆயுதமேந்துங்கள்!
தேசத்தைக் காக்க கிளர்ந்தெழுங்கள்!"

என்ற விண்ணை எட்டும் முழக்கங்கள் மீண்டும் மீண்டும் கிளர்ச்சியுடன் ஒலித்தன. தொழிலாளர்களும், இளைஞர்களும், அறிவுஜீவிகளும் இணைந்து கொள்ள, கோமிண்டாங் படைகள் கொடூரமாய் தாக்கி, தடுக்க முயன்று திணறின. டாவோசிங் அந்த மக்கள் திரளில் ஒரு போராளியாய் எதிரி படைகளோடு போராடுவதில் முனைப்பாய் இருந்தாள். தடைகளை எல்லாம் கடந்து, மேலும், மேலும் அந்த தேசபக்த படை முன்னேறிக்கொண்டே இருந்தது.

போராட்டமே மகிழ்ச்சி என்றார் மார்க்ஸ். இங்கு போராட்டத்தை இளமையின் கீதமாக அந்த மாணவர்கள் இசைத்தார்கள். வரலாற்றில் மக்கள் சீனா மலர்வதற்கான துவக்கமாக அந்த கீதம் விடுதலையின் கீதமாக காற்றில் கலந்தது.

October 7, 2007

ராமசாமியும், அவன் பொண்டாட்டியும், கந்தசாமியும்...

நன்றி : பால்வெளி

ஒரு குட்டி கதை சொல்லட்டா?

நம்ம ராமசாமி பொண்டாட்டிய புதுசா வேஷம் கட்டிக்கினு வந்த கந்தசாமி வூட்டுக்குள்ளாற பூந்து தூக்கினு பூட்டானாம்.. ராமசாமி ரிடர்ன் வந்து விஷயத்தை கண்டுக்கினு படா டென்ஷன் ஆகிக்கினானாம்..அப்பால கந்தசாமியோட பேக்கிரவுண்டு இன்னா, ஏதுன்னு விசாரிக்கசொல்லோ மெய்யாலுமே மெர்சலாகி போச்சு தாம் ராமசாமிக்கு.. சரி இன்னா பண்றதுன்னு வூட்டாண்ட இருந்த ஆளுங்கள எல்லாம் வலிச்சுகினு போனாலும் பத்தாதுன்னு நெனைச்சுகினு போற வழியில நம்ம வீராசாமியயும் அவம் ஆளுங்களயும் கூட்டம் சேர்த்துகினு கிளம்புனானாம். அப்படியே கெளம்பி போயி கந்தசாமியோட பேட்டைக்குள்ளாறயே ஜபர்தஸ்தா பூந்து சும்மா அடி பின்னி எடுத்துப்புட்டு, வீராசமிய வுட்டு பேட்டையில அல்லாத்தயும் கொளுத்தி போட்டுட்டு அவம்பொண்டாட்டிய மட்டும் வூட்டுக்கு இட்டாந்தானாம்.. அதுக்கு பொறவுதான் ஒரு டவுட்டானானாம்.. இன்னாடாது.. நம்ம பொண்டாட்டிய திரும்ப இட்டாந்த பொறவு அவ போக்கே செரியில்லயே..இத்தினி நா கந்தசாமி வூட்டுல இருக்கசொல்லோ எதுவும் மேட்டர், கீட்டர் ஆயிடுச்சான்னு..அத கேட்ட ராமசாமி பொண்டாட்டிக்கு மெய்யாலுமே மனசுக்கு கஸ்டமா பூடுச்சாம். இன்னாடாது நமக்கு கட்டுனவனும் சரியில்ல, இவனுக்கு தூக்கிட்டு போனவனே தேவலாம்போலன்னு சொல்லிகினு தாம் மேலயே நெருப்ப பத்த வச்சுகினாளாம். அவ்ளோதான்! கத முடிஞ்சு போச்சு...

இன்னாம்மே முயிக்கிறே..
இந்த கத உனுக்கு தெரியாதா..? இன்னாமே சொல்ற?
இத தானம்மே ஆயிரம், ரெண்டாயிரம் வருசமா நம்ம நாட்டுல சொல்லிகினுகீராங்க..
பொண்டாட்டிய திரும்ப இட்டாந்த ராமசாமியத்தான் அங்கங்க செல வச்சு கும்பிட்டுகினுகீறாங்களாமே..
இந்த கத தாம்மே நம்ம நாட்டுக்கே பேர் பெத்த ஏதோ "ராமாயணம்"னுவாங்களாமே?
----------------------------------------------------------
உங்கள் புரிதலுக்காக இங்குள்ள சென்னைத்தமிழ் வார்த்தைகள்..

வூடு - வீடு
பூந்து - புகுந்து
பேக்கிரவுண்டு - பின்னணி
மெர்சல் - பயம்
வலிச்சுகினு - சேர்த்துக் கொண்டு
பேட்டை - இடம்
ஜபர்தஸ்தாக - தைரியமாக, வலுக்கட்டாயமாக
டவுட்டு - சந்தேகம்
செல - சிலை
-----------------------------------------------------------
-படைப்புக்கு மூலக் கருத்து பேரா. பெரியார்தாசன் சொற்பொழிவில் இருந்து உருவானது..

பின்குறிப்பு :

மேலும், இது இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது என்பவர்கள், சூத்திரென்றும், பஞ்சமரென்றும் சொல்லி, நாளும் உடலையும், உள்ளத்தையும் புண்படுத்துவதை நிறுத்திவிட்டு வாருங்கள். பிறகு, உங்கள் மனம் புண்படுவதைப் பற்றி யோசிக்கலாம்.

September 28, 2007

Stinking Place Called India - பத்திரிக்கையாளர் சாய்நாத்




நன்றி : திரு. பிரகாஷ்

சாய்நாத் அவர்கள் கடந்த 19ந்தேதி சென்னைக்கு வந்திருந்த பொழுது, அந்த கூட்டத்திற்கு அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்ற நினைத்திருந்தேன். வேலை காரணமாக, அன்றைக்கு கலந்து கொள்ள முடியவில்லை.

பிரகாஷ் அவர்களின் பதிவில், அந்த கூட்டம் தொடர்பான செய்திகள், நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் சாரத்தையும் படித்த பொழுது, மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், அதை மறுபதிவிடுகிறேன்.

பிரகாஷ் அவருடைய பதிவில், சில இணைப்புகளை தந்துள்ளார். அதை என்பதிவில் எடுத்து போடும் போழுது, நமக்கு டெக்னிக்கல் அறிவு குறைச்சல் என்பதால், அப்படியே காப்பி, பேஸ்ட் செய்துள்ளேன். அந்த லிங்க் வேண்டும் என நினைப்பவர்கள் அவருடைய பதிவிற்கு சென்று பார்த்துக்கொள்ளுங்கள். விரைவில் யாருடைய உதவியின் மூலம் அந்த அறிவையும், கற்றுக்கொள்கிறேன். நன்றி.

******

The Farm Crisis: Why have more than a lakh farmers ended their lives in India during the past decade” என்ற பொருளிலே, தி ஹிந்து நாளிதழின் ரூரல் எடிட்டரும், இந்த ஆண்டின் ( 2007 ) ரமோன் மக்சேசே விருது பெற்றவருமான பாலகும்மி சாய்நாத் பாராளுமன்றத்தில் ஒரு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சி, நேற்று இரவு 12 மணிக்கு , லோக்சபா டிவியிலே ஒளிபரப்பானது.

சமீபகாலமாக, பாராளுமனறம், பல்துறை வித்தகர்களைக் கொண்டு இது போன்ற சிறப்புச் சொற்பொழிவுகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.

பி.சாய்நாத், ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு முடித்து விட்டு, ப்ளிட்ஸ், தி டெய்லி போன்ற பத்திரிக்கைகளில், தன் இதழியல் பணியைத் துவங்கினார். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஃபெலோஷிப் மூலமாக, கிராமப்புறப் பொருளாதாரம் மற்றும் விவசாயிகளின் நிலைமை ஆராய்ச்சி மற்றும் ரிப்போர்ட்டிங் செய்யும் பணியை மேற்கொண்டார். கடந்த இருபது வருடங்களாக, வருடத்தில் 300க்கும் மேற்பட்ட நாட்களை, கிராமப்புறங்களில் செலவழித்து அங்கே ஏழ்மை மிகுந்து காணப்படும் பிரதேசங்களில் பயணம் செய்து அங்குள்ளவர்களின் நிலை பல கட்டுரைகளை டைம்ஸ் ஆஃப் இந்தியா , தி ஹிந்து போன்ற நாளிதழ்களில் எழுதியுள்ளார். இவர் எழுதி 1996 இலே வெளிவந்த Everybody Loves a Good Drought - Stories form India’s Poorest Districts ( வாசித்துக் கொண்டிருக்கிறேன் ) என்ற நூல், இந்திய மற்றும் உலக அளவில் பதிமூன்று விருதுகளைப் பெற்றிருக்கிறது.

லக்மே அழகிப் போட்டிகளைக் கவர் செய்ய, ஐநூற்றுக்கும் மேற்பட்ட ‘ஜெர்னெலிஸ்ஸ்ட்டுகள்’ தங்கள் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் எக்ஸ்ளூசிவ் புகைப்படத்துடன் வெளியிடத் துடிக்க, அதே சமயம், அழகிப் போட்டி நடக்கும் நகரங்களிலிருந்து சில நூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் விவசாயிகள் , வறுமை காரணமாகத் தற்கொலை செய்து கொள்வதன் பொருளாதார / அரசியல் / உளவியல் காரணங்களை, வெகுசன ஊடகங்கள் கண்டுகொள்ள மறுக்கும் நிலைமை பற்றி சாய்நாத்தின் பேச்சில் தென்படும் நாகரீகம் குறையாத நக்கலைக் கண்டு கொள்ள மொழியியலிலே பட்டம் பெற்றிருக்கத் தேவை இல்லை என்கிற நிதர்சனத்தை, இந்தக் கட்டுரையின் அடுத்த சில பகுதிகளிலே பார்த்துக் கொள்ளலாம்.

இப்போது நேராக மேட்டர்.

கிராமப்புற பொருளாதாரம், பழங்குடி இனங்கள், அவர்களின் வாழ்வாதாரங்கள், விவசாயம் போன்ற பல்வேறு காரணிகளைக் கொண்டு இயங்கும் சங்கதிகளைப் பற்றிய அடிப்படை அறிவு சிறிதும் இல்லாத எனக்கு, சாய்நாத் அவர்கள் கொடுத்த லெக்சரில் இருந்து விளங்கியவை இதுதான்.

- பின் தங்கிய மாவட்டங்களில் வசிக்கும் மிகக் கடுமையான வறுமையில் உழலும் தாழ்த்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடியினரைப் போன்ற இளிச்சவாயர்களை நாம் உலகில் எங்குமே பார்க்க முடியாது.

- கடந்த பத்து வருடங்களில் நடந்த தற்கொலைகளின் எண்ணிக்கை லட்சத்தைத் தொடும். இதுவும் துல்லியமான கணக்கு அல்ல. சொந்தமாக நிலம் இருந்து தற்கொலை செய்து கொண்டால் தான், அவர் அரசாங்கத்தின் கணக்கெடுப்புக்குள் வருவார். விவசாயிகளின் குடும்பத்தினரோ அல்லது நிலமில்லாத விவசாயக்கூலிகள் செய்து கொள்ளும் தற்கொலைகள் கணக்கில் வராது.

- தற்கொலைகளுக்கு முக்கியமான காரணம் கடன் தொல்லை. நான்கு ஆண்டுகளாக , லாபகரமாக விவசாயம் செய்ய , ரூபாய் ஒரு லட்சம் வரை கடன் சுமை ஏறி தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒரு ஆந்திர விவசாயியை நண்பர்கள் சரியான சமயத்தில், மருத்துவர்கள் உதவியுடன் காப்பாற்றி விட்டார்கள். நான்காண்டுகளாக சிறுகச் சிறுக அசல் மற்றும் வட்டியுடன் சேர்ந்திருந்த ஒரு லட்ச ரூபாய்க் கடன் சுமை, அவர் காப்பாற்றப்பட்ட நான்கு நாட்களில் , சடாரென்று ஒன்றரை லட்சமாக உயர்ந்தது. Thanks to The Fifth Most Privatised Health Care System in the World, India.

- 2004 இலே India Shining என்ற பெயரில், பொதுத்தேர்தலுக்காக ஊடகங்களில் விளம்பரம் செய்து, முந்தைய அரசு, மக்களிடம் செருப்படி வாங்கிய பிறகுதான், விவசாயிகளின் வாழ்வாதாரப்பிரச்சனை பற்றி லேசாக ஊடகங்களில் செய்திகளில் வரத்துவங்கியது. ஆந்திரத்தின் பின் தங்கிய மாவட்டங்களில் தற்கொலைகள் மிக அதிகமாக இருந்த காலகட்டத்தில் தான், எகானாமிக் டைம்ஸ் நாளிதழ், அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு CEO of the Year என்ற விருது கொடுத்து மகிழ்ந்தது.

- மானியம் இல்லாத விவசாயம் உலகில் எங்குமே கிடையாது. விவசாயத்தைப் பொறுத்தவரை மானியம் என்பது உலக மரபு. மானியம் அளிக்கப்படாத விவசாயத் தொழில் என்பது உலகத்தில் எங்கும் இல்லை. 3.9 பிலியன் டாலர் பருத்தி விவசாயத்துக்கு, அமெரிக்க அரசாங்கம் அளிக்கும் மானியம் 4.7 பிலியன் டாலர்கள்.

- விவசாயம் லாபகரமான தொழில் இல்லை என்பது உண்மை. ஆனால், அது நட்டத்தில் இயங்கவில்லை. நட்டத்தில் இயங்க வைக்கப்படுகிறது. சாய்நாத் வார்த்தைகளிலேயே சொல்வதானால், ‘agriculture in India is not unviable but being made unviable by imposition’

- ஒரே குடும்பத்தில், குறைந்த இடைவெளியில் அடுத்தடுத்து தற்கொலைகள் நடப்பது சகஜம்.

- ஒரு பின் தங்கிய மாவட்டத்தில், ஒரு விவசாயி , தன்னுடைய பெண் திருமணத்தின் போது கடன் கொடுத்தவர்களால் ( எட்டாயிரம் ரூபாய் ) அவமானப்படுத்தப் பட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தான், ஒரிசா போன்ற இடங்களில் இருந்து வந்திருந்திருத உறவினர்களை மீண்டும் வரவழைத்து திருமண ஏற்பாடுகள் செய்ய முடியாது என்பதால், இறந்தவரை அடக்கம் செய்து விட்ட கையோடு பெரியவர்கள் திருமணத்தையும் நடத்தி வைத்தார்கள். இந்தச் சம்பவம் நடந்த போது உடன் இருந்த சாய்நாத், வேலை முடிந்து தன்னுடைய இல்லத்துக்குத் திரும்பிய போது, ஒரு மல்டிநேஷனல் வங்கியில் இருந்து ‘ பென்ஸ் கார்’ வாங்கிக் கொள்ள லோன் ஆ·பர் அவருக்கு வந்திருந்தது. ஜஸ்ட் 6 சதவீத வட்டி. No collateral Required. இந்தச் சம்பவம் நடந்த இடத்துக்கு சில நூறு மைல்கள் தூரத்தில், தே நேரத்தில் உலகின் மிகக் காஸ்ட்லி திருமணம் ( லக்ஷ்மி மித்தல் இல்லத்திருமணம் ) நடந்தது.

- ட்சுனாமி தாக்கிய போது, பாதிக்கப்பட்ட நாடுகளில் ( இந்தியா , இலங்கை, இந்தோனேசியா ) இருந்த பங்கு சந்தைகளின் பர்ஃபாமன்ஸ் சட சடவென்று உயர்ந்தது. குழப்பமாக இருக்கிறதா? பங்குமார்கெட்டுக்கு, ட்சுனாமியினால் ஏற்பட்ட தேசியத் துயரத்தை விடவும், நிவாரணப்பணிகளை முன்னிட்டு உள்ளே வரவிருக்கும் ‘பணம்’ பற்றித்தானே மகிழ்ச்சி ஏற்படுவதுதானே நியாயம்?

- National Sample Survey அளித்த அறிக்கையின் படி, விவசாயத்தில் ஈடுபடுபவர்களில் நாற்பது விழுக்காட்டினர் உண்மையில் விவசாயம் செய்வதை விரும்பவில்லை. வேறு தொழிலுக்கு பெயர முயற்சி செய்கிறார்கள்.

- மகாராஷ்டிரத்தின் விதர்பா உள்ளிட்ட மாவட்டங்களில் சென்ற ஆண்டு பள்ளி இறுதி ஆண்டுத் தேர்விலே , தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையில் பெரிய சரிவு ஏற்பட்டது. இது பற்றிய விவாதம் எழுந்த போது, கல்வித்தரம், ஆசிரியர்கள் தரம் பற்றிப் பேசிய அரசாங்கப் பீடாதிபதிகள், ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள மறுத்து விட்டார்கள். அது, அந்த மாவட்டங்களில், தேர்வு நடப்பதற்கு மூன்று மாதங்கள் முன்பு வரை, தோராயமாக நாள் ஒன்றுக்கு பதினேழு மணிநேரங்கள் மின்வெட்டு இருந்தது. இது போல ஒரே ஒரு நாள், நரிமன் பாய்ண்ட் வட்டாரத்தில் மின் வெட்டு ஏற்பட்டால், மாநில அரசு கவிழ்ந்து விடும். முரண் நகை என்ன என்றால், மகாராஷ்டிரத்தில், மிக அதிகமாக மின் உற்பத்தி செய்யும் மாவட்டம், விதர்பா.

- வறுமைத் தற்கொலைகள் அதிகமாகி, ஊடகங்களில் பரவலாகச் செய்தி வந்ததும், அந்த இடங்களுக்குச் சென்று பார்வையிடச் செல்ல, பிரதமர் எடுத்துக் கொண்ட காலம், இரண்டு மாதங்கள். அதே சமயம் பங்கு மார்கெட்டில் பிரச்சனை என்றதும் , நிலைமையைச் சீர் செய்ய அங்கே செல்ல நிதி அமைச்சர் எடுத்துக் கொண்ட நேரம், வெறும் அரை மணி நேரம். இந்திய ஜனத்தொகையில் , பங்குமார்க்கெட்டில் ஈடுபட்டிருக்கும் மக்களின் சதவீதம் 1.8 %. விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களின் சதவீதம், 40 சதவீதத்துக்கும் மேலே.

- Indian Express, Telegraph போன்ற - பிசினஸ் பத்திரிக்கை அல்லாத - general interest தேசிய நாளிதழ்களில் வர்த்தகச் செய்திகளைக் கவர் செய்ய 12 அல்லது 13 நிருபர்கள் உண்டு. விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இங்கே விவசாயம்/ கிராமங்களைக் கவர் செய்ய ஒருத்தர் அல்லது இருவர் இருந்தால் அதிகம்.

- ஆந்திராவில் மென்பொருள் ஏற்றுமதித் தொழிலை விட அதிகமாகப் பணம் புழங்கும் துறை விதைகள் வியாபாரம். 1991 இலே கிலோ எட்டு ரூபாய்க்கு விற்ற விதை, இப்போது கிலோ இரண்டாயிரத்துச் சொச்சம். விற்பது வெளிநாட்டு நிறுவனம். சந்திரபாபு நாயுடு, தலையிட்டு அதை ஆயிரத்துச் சொச்சமாகக் குறைக்க வைத்திருக்கிறார்.

***********

பி.கு 1:

சாய்நாத் கொடுத்த லெக்சரில் இருந்த புள்ளிவிவரங்கள் ஜீரணிக்க முடியாததாக இருந்தது. அவை அனைத்தும், அரசு பொதுவிலே வைக்கும் தகவல்களில் இருந்தும், மக்களை நேரடியாகச் சந்தித்தும் பெறப்பட்டவையே. பல விஷயங்கள் நினைவில் இல்லை. இந்த நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை அன்று பகல் 12 மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தொட்டதற்கெல்லாம் குற்ற உணர்ச்சி அதிகமாகி அவஸ்தைப் படுபவர்கள் பார்க்க வேண்டாம்.

பி.கு 2:

ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மேல், இழுக்காமல் உடனடியாகப் படித்து முடிக்கிற வழக்கம் கொண்டிருக்கும் எனக்கு, சாய்நாத் எழுதிய Everybody Loves a Good Drought - Stories form India’s Poorest Districts’ நூலை ஒரே மூச்சில் படிக்க இயலவில்லை. சரமாரியாக வந்து விழும் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களைச் சீரணம் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. சில அத்தியாங்களைப் படிக்கையில் விரல்கள் நடுங்குகின்றன. இந்தியாவின் அச்சு அசலான ஏழைகளை அறிமுகப்படுத்தும் அந்த நூலின் தலைப்பைக் குறித்த சந்தேகம், முதல் சில பக்கங்களைப் படித்ததும் நீங்கியது. சாய்நாத் சந்திக்கும் ஒருவர் சொல்கிறார்,

” In this year’ drought, all i did was sub-contract one small dam. I bought a new scooter. If there’s a drought next year, I shall buy a new jeep.”

படித்து முடித்தவுடன், நூல் குறித்த அபிப்ராயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

பி.கு 3.

விவசாயிகளின் தற்கொலைகள் பற்றி சாய்நாத் எழுதி வந்த கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

பி.கு 4 :

இந்த கருத்துக்களையும் உள்ளடக்கி, சாய்நாத், இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் ( சென்னை ) நடத்திய நிகழ்ச்சியில், When rising inequalities threaten democracy என்ற பொருளில் , சென்றவாரம் ஒரு உரை நிகழ்த்தினார். உரை, ஒலி வடிவத்தில் இங்கே கிடைக்கும். 46 எம்பி சொச்சம் இருக்கும் கோப்பை இறக்கிக் கேட்பது சிரமம் தான். இருந்தாலும் கேளுங்கள்.

from http://icarusprakash.wordpress.com/

September 16, 2007

விநாயகர் ஊர்வலம்! உஷார்! உஷார்!



நன்றி : மகா

விநாயகர் சதுர்த்தி முடிந்துவிட்டது. இனி தேதி வாரியாக, இந்துத்துவ வெறியைத் தூண்டும் இயக்கங்கள் வரிசையாக விநாயகர் ஊர்வலம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். கலவரத்தையும், பதட்டத்தையும் உருவாக்கியும் வருகிறார்கள்.

பின்வருகிற ஆர்.எஸ்.எஸ் எழுப்பும் இந்த கேள்வியும், பின் வருகிற ம.க.இ.க வினரின் பதிலும், விநாயகர் ஊர்வலத்தின் அர்த்தம் நன்றாக உணர்த்தும். ஆர்.எஸ்.எஸ்-இன் பொய் பிரச்சாரத்தை முறியடிக்கவும் முடியும்.

மசூதிமுன் ஊர்வலம் நடப்பதேயில்லையா?

"நாடு முழுவதிலும் எங்கெல்லாம் ஒரு மசூதி அல்லது ஒரு முசுலீம் பேட்டை இருக்கின்றதோ, அந்தப் பகுதியை உண்மையில் தமக்கே சொந்தமான சுதந்திரமான பிரதேசமாக முசுலீம்கள் கருதுகின்றனர். ஹிந்துக்களின் ஊர்வலம் இசைக்கருவிகளுடனும், பாட்டுகளுடனும் அவ்வழியே சென்றால், அவர்கள் தமது மத உணர்ச்சிகள் புண்படுத்தப்பட்டதாகக் கடுங்கோபம் கொள்கின்றனர்.

இனிய இசையைக் கேட்டுப் புண்படும் அளவிற்கு, அவர்களுடைய சமய உணர்ச்சி தொட்டால் சிணுங்கியாக இருக்குமானால் தமது மசூதிகளைக் காடுகளுக்கு மாற்றி அமைத்துக்கொண்டு அங்கு மெளனமாகத் தொழுகை நடத்தக் கூடாதா? சாலை ஓரத்தில் ஒரு கல்லை நட்டு அதற்கு வெள்ளையடித்து, அதனைத் தொழுகைத் தலம் என்று அறிவித்துவிட்டு, அங்கு இசை பாடப்படுவது தமது தொழுகையைக் கலைப்பதாகும் எனக் கூப்பாடு போடுவானேன்?"

- ஆர்.எஸ்.எஸ் - இன் இரண்டாவது தலைவர் கோல்வால்கர்,
('ஞானகங்கை'- இரண்டாம் பாகம் - பக். 170)


மசூதிக்கு முன்னால் நடக்கவோ, பாடவோ, மேளம் அடிக்கவோ, ஊர்வலம் நடத்தவோ இந்துக்களுக்கு உரிமை கிடையாதென்றால் இந்நாடு இந்துஸ்தானா, இல்லை, பாகிஸ்தானா என்று இந்துமத வெறியர்கள் அடிக்கடி உரிமைக்குரல் எழுப்புவது வழக்கம். மசூதிகளின் தொழுகைக் காலத்தோடு பிரச்சனை இல்லாமல், நல்லிணக்கத்தோடு இயங்கி வந்த மக்களிடையே - இல்லாத ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி, முசுலீம் எதிர்ப்புக் கலவரம் நடத்துவதே அவர்கள் நோக்கம். அதைப் பல இடங்களில் ஆண்டுதோறும் செய்தும் வருகிறார்கள்.

முதலில் மசூதிகள் பிரபலமான, பரபரப்பான தெருக்களிலும், சந்தைகளிலும், வணிக முக்கியத்துவம் மிகுந்த இடங்களில் இருப்பது உண்மைதான். காரணம், அவ்வட்டாரத்தில் கணிசமான முசுலீம்கள் வாழ்வதும், அதிலும் வணிகர்களாக இருப்பதும், தமது வேலை நேரத்தில் குறிப்பாக வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்துபோக வசதியாக இருக்கவும்தான் அப்படி கட்டப்படுகின்றன. வேறு எந்த நோக்கமும் இல்லை.

அதே சமயம் மசூதிகள் முன்பு மாணவர்கள், தொழிலாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் ஊர்வலமாய்ப் போகிறார்கள். ஏன், கோவில் திருவிழாக்கள் கூட இடையூரின்றிச் செல்லுகின்றன. மசூதி அருகே பொதுக்கூட்டங்கள் நடப்பதும், பாங்கு ஓதும் நேரம் ஓரிரு நிமிடம் அமைதி காப்பதும் தமிழகத்தில் இயல்பான காட்சிகள்தான். இதனாலெல்லாம் எங்கும் கலவரம் ஏற்பட்டதில்லை.

1980-களில் தோன்றிய இந்து முன்னணி, மசூதி முன்பு விநாயகர் ஊர்வலத்தை வம்படியாக நடத்திய போதுதான், இக்கலவரங்கள் ஆரம்பித்தன. சரியானத் தொழுகை நேரத்தில் ஊர்வலம் நடத்துவது, "துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியைக் கட்டு, அல்லாவுக்குக் குல்லா போட்டு அரேபியாவுக்கு அடிச்சுத் துரத்து, இந்த நாடு இந்து நாடு இல்லேங்கிற துலுக்கன் யாரு" போன்ற 'இனிய இசை மொழிகளை'க் கூவுவது இவற்றினால்தான் தகராறுகல் ஆரம்பித்துக் கலவரங்களாய் முடிகின்றன.

பம்பாய், ஹைதாரபாத், சென்னை மூன்று நகரங்களிலும் ஆர்.எஸ்.எஸ். வானரங்கள் நடத்த்டும் விநாயகர் ஊர்வலங்கள் மசூதி வழியாகச் சென்று முசுலீம் மக்களைத் தாக்குவதற்கான அவலங்களாய் மாறிவிட்டன. தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் இந்த நோய் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. எனவே, மசூதி முன்பு ஊர்வலம் நடத்தும் இந்து மதவெறி அமைப்புக்களை முழுமையாகத் தடை செய்யும் போதுதான் இந்த அராஜகங்களுக்கு முடிவு கட்ட முடியும்.

பெரும்பான்மை இந்துக்களின் ஏகபோகப் பிரதிநிதிகள் என உரிமை கொண்டாடும் சிறு கும்பலான பார்ப்பன-இந்து மதவெறி அமைப்புக்களைத் தனிமைப்படுத்தி முறியடிப்பது உழைக்கும் மக்களின் கடமையாகும்.

மசூதியை வைத்து உரிமைக்குரல் எழுப்பும் இவர்கள்தான் அக்கிரகாரம், ஊர், தேரோட்டம் போன்றவற்றில் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கிறார்கள். கேவலம், தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து தேரை இழுக்க முடியாது என கண்ட தேவியில் சில ஆண்டுகளாய் நிறுத்தப்பட்டிருக்கும் மரத்தேர் இந்த மரமண்டைகளின் யோக்கியதைக்குச் நல்ல சான்று.
******

சமீபத்தில், "கண்ணை மறைக்கும் காவிபுழுதி" என்றொரு புத்தகத்தை, மக்கள் கலை இலக்கிய கழகம் வெளியிட்ட புத்தகத்தை மீண்டும் வாசித்தேன். அதில், விநாயகர் ஊர்வலம் தொடர்பாக ஒரு கட்டுரை சிறப்பாக இருந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

from mahasocrates.blogspot.com

September 14, 2007

'கலைஞர் டிவி' - ஆரம்பமே 'அசத்தலா' இருக்கே!


நாளை முதல், இந்திய சானல்களில் (பில்டப் அதிகமா இருக்கோ!) தமிழ்சானல் ஒன்று ஆர்ப்பாட்டமாய் தன் ஒளிபரப்பைத் தொடங்க இருக்கிறது.

காலை முதல் இரவு வரைக்கும் திரை நட்சத்திரங்கள் தங்கள் வியர்வை சிந்தி உழைத்த நேரங்களை, நம்மோடு பகிர்ந்து கொள்ள இருப்பதை, இன்றைக்கே டிரைலர் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். நாளை முதல், தமிழனின் வாழ்வு ஒருபடி உயரப்போகிறது(!).

திராவிட வெகுஜனக் கட்சிகளில், திமுகவின் தலைவர் கலைஞர் தான், இன்றைக்கும் அவ்வப்பொழுது பகுத்தறிவு பேசி, இந்துத்துவ ஆட்களிடம் திட்டு வாங்கிக்கொண்டு இருக்கிறார். இது நாடறியும்.

ஆனால், அப்படிப்பட்ட கலைஞரின் பெயரில், தொடங்குகிற சானலை, இரண்டு நாட்களுக்கு முன்பாக அண்ணாவின் பிறந்த நாளில் தொடங்கியிருக்கலாம். அல்லது, இன்னும் மூன்று நாளில், செம்டம்பர் 17 ந்தேதியன்று பெரியாரின் பிறந்த நாள் வருகிறது அன்றைக்கு தொடங்கியிருக்கலாம்.

இப்படிப்பட்ட சிறப்பான நாட்களை விட்டு விட்டு, ஏன் விநாயகர் சதுர்த்தியன்று தொடங்குகிறார்கள்?

கலைஞருக்கு பிடிக்காத நபர் யாராவது இப்படி இந்த நாளில், சானல் தொடங்குவதைப் பற்றி, கேள்வி கேட்டிருந்தால், கலைஞர் என்ன பதில் சொல்லியிருப்பார்.

"ஒரு தடவை சிவபெருமான் கையாலயத்தில் தியானத்தில் ஆழ்ந்துவிட, தனிமையில் விடப்பட்ட பார்வதி தன் மீது அன்பு செலுத்தவும் தன்னை பாதுகாக்கவும் வேண்டி தன் உடல் அழுக்கை உருட்டி இளைஞன் ஒருவனை உருவாக்கினாள். அவனைக் காவலாளாக நியமித்து யாரையும் அனுமதிக்க வேண்டாமென்று கட்டளையிட்டு, குளிக்க செல்கிறாள்.

இதற்கிடையில், சிவன் தியானத்திலிருந்து விடுபட்டு, பார்வதியின் அந்தப்புரத்திற்குள் சிவன் நுழைய, காவலுக்கு நின்ற அவன் அனுமதி மறுக்க, சிவன் கோபப்பட்டு, தலையை வெட்டிவிடுகிறார். பிறகு, அழுது வடிந்த பார்வதியை சமாதனப்படுத்த, வடதிசையில் கண்ணில்பட்ட ஒரு யானையின் தலையை வெட்டி வந்து ஒட்ட வைக்கிறார்கள். இப்படித்தான், யானை முகம் கொண்ட விநாயகர் தோன்றினார்".

இதிலிருந்து நாம் பெறுகிற செய்தியாவது, அழுக்கில் உருவானவர் விநாயகர். இந்த நாளில் தொடங்கப்படுகிற சானலின் தரமும் இப்படி அழுக்காகத்தான் இருக்கும்"

இது சிரிப்பதற்காக, சொல்கிற செய்தி அல்ல! திமுகவின் கொள்கைகளும், இந்துத்துவ கொள்கைகளும் இருவேறு துருவங்கள் என்று நினைப்பவர்கள், இப்படி இரண்டும் இணைகிற இந்த புள்ளியைப் பார்த்தாவது, புரிந்து கொண்டால் சரி.

August 25, 2007

இவர் தான் பத்திரிக்கையாளர்!



தனது டெஸ்க்கை விட்டு நகர மறுக்கிற, அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் தரும் செய்திகளை, கொஞ்சம்கூட உறுதிப்படுத்தாமல், அப்படியே வாந்தி எடுக்கிற பத்திரிக்கையாளர்கள் இங்கு அதிகம்.

மக்களூடைய ஜீவாதாரமான பிரச்சனைகளை, அதன் காரண, காரியங்களை அலச, ஆராய விரும்பாத, ஆனால் பிரேமனந்தா, கன்னடபிரசாத், பத்மா - போன்ற 'செக்ஸ்' சம்பந்தமான விசயங்களை அலசி ஆராய்ந்து, தன் கற்பனை எல்லாம் கலந்து, சுவையாக, கிளுகிளுப்பாக தருகிற பத்திரிக்கையாளர்களும் இங்கு அதிகம்.

இந்தியாவில், நாலாவது தூண் பல பத்திரிக்கையாளர்களால் நிறைய அசிங்கப்பட்டு போயிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், 'சாய்நாத்' என்றொரு பத்திரிக்கையாளர் 'தி இந்து' (THE HINDU) நாளிதழில் 'கிராமப்புற செய்தி' (Rural affiars) சேகரிப்பாளராக, எடிட்டராக இருக்கிறார்.

புள்ளிவிவரங்களை சொல்லியே, இந்தியா முன்னேறுகிறது என்று பல அமைச்சர்கள் நம்மை குழப்பி, நம்ப வைக்க முயல்கிறார்கள்.'இந்தியா ஒளிர்கிறது', வருங்காலத்தில் வல்லரசாகப் போகிறது என்பவர்களின் முகத்தில் காறித்துப்புகிறது இவரது கட்டுரைகள் வெளிப்படுத்தும் உண்மைகள்.

பத்திரிக்கையாளர் சாய்நாத் அவர்கள் இந்தியாவின் பின்தங்கிய பல மாவட்டங்களுக்கு நேரிடையாக சென்று, விவசாயிகளின் வாழ்க்கையை, அவர்களின் பரிதாபமான தற்கொலைகளை, அதற்கான காரணங்களை ஆய்ந்து, சேகரித்து உலகுக்கு வெளிப்படுத்துகிறார்.

சமீபத்தில், அவருடைய மகத்தான சேவையை பாராட்டி, அவருக்கு 'மகசேசே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே பி.டி. கோயங்கா விருது, பிரேம் பாட்டியா இதழியல் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

அவருக்கு உழைக்கும் மக்களின் சார்பாக, நாமும் நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.

பின்குறிப்பு : சமூகத்தை, அதன் உண்மை நிலையை அறிய சாய்நாத் அவர்களின் கட்டுரையைத் தேடி படியுங்கள்.

August 10, 2007

கனவுகள் - கவிதை!

கண் திறந்தால்
அடுத்த இரவுக்கு
காத்திருத்தல்

கண்மூடினால்
தொலைந்து போன
காட்சிகளுக்குத் தேடல்! - யாரோ!

******

போகிற வழியெல்லாம்
தங்க வெள்ளி காசுகள் சேகரித்து
தலையணைக்கடியில் பாதுகாத்து
காலையில் பார்த்தால்
காணாமல் போகும்

ஆவி விரட்டும் பொழுது மட்டும்
ஓட முடியாமல் தடுக்கி விழுந்து
'அது' நெருங்கி மிக நெருங்கி
வேர்த்து விறுவிறுத்து கண்விழிக்கையில்
நடுநிசி வேளையில்
நாய் ஊளையிட்டு கொண்டிருக்கும்

எட்டுபேருடன்
பறந்து பறந்து சண்டையிட்டு
கதாநாயகனாய் ஜெயித்து
காலையில் எழுகையில்
கழுத்து வலிக்கும்

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து
உள்ளம் களித்து பாக்கள் பாடி
உறக்கம் கலைகையில்
ஓட்டின் துவாரத்தால்
சூரிய வெளிச்சம் கண்ணைக்கூசும்
உள்ளம் பெருமூச்சுவிடும்

கனவுகளை
பொழுதுகளாய் பிரிக்கலாம்
பகற்கனவு
இரவுகனவு

பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு
கனவுகளே
வித்தாய் விழுந்திருக்கிறது

எனக்கு கனவே வருவதில்லை
பெருமையாய் சொல்கிறார்கள்
படுத்ததும் சவமாவதில்
என்ன இருக்கிறது?

நல்ல கனவுகளுக்கு
ஆக்கம் கொடுப்பதே
விழித்திருக்கும் வேளையில்
என் வேலையாகிறது

ஆகையால்
கனவுகளுக்காய்
தவம் இருங்கள்

August 8, 2007

அம்மா - கவிதை

சூரியன் விழிக்கும் முன்
தன் துயில் கலைத்து
வாசல் தெளித்து, கோலமிட்டு
பாத்திரங்கள் துலக்கி
அவசர அவசரமாய் சமைத்து
அறியாமையால் மாமியாரிடம்
'நல்ல மருமகளாய்'
நடந்துகொண்டாய்

காபியுடன்
அப்பாவை எழவைத்து
துவைத்து, தேய்த்து
எல்லா மனைவியரையும் போல்
'நல்ல பணிப்பெண்ணாய்'
மாறிப்போனாய்

அக்காவை உன் வாரிசாய்
என்னை அப்பாவின் வாரிசாய்
அறிந்தும், அறியாமையால்
உருப்பெற செய்தாய்

நல்ல ரத்தம் உள்ளவரை
சளைக்காது உழைத்தாய்
இத்தனை காலம்
சுகமாய், சுமையாய்
இருந்தவைகளெல்லாம்
பெரும்சுமைகளாய்
மாறிப்போயின.

இன்று
இயலாமையின் கோபத்தால்
தளர்ந்து போன மாமியாரை
வார்த்தைச் சவுக்கால் விளாசுகிறாய்
அப்பாவின் மீதும்
என் மீதும்
வலிக்காது பாணங்கள் தொடுக்கிறாய்

இறுதியில்
உன் ராச்சியத்திற்கு வாரிசாய்
'நல்ல மருமகளாய்' எதிர்பார்க்கிறாய்

முதலில்
எனக்கான வேலைகளை
நான் பழகிகொள்கிறேன்
பிறகு யோசிக்கலாம்
புதிய வரவான
இன்னொரு 'மனுசியை'

July 7, 2007

"கடைத்தேங்காய எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடை"

அன்பர்களே,

இம்முறை, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் நடைமுறைப்படுத்திய படு கேவலமான சட்ட,திட்டங்களில் ஒன்று தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிச் சலுகை அளிப்பது.இதைப் பற்றி ஏற்கனவே பல முறை பல கட்டுரைகளில் படித்திருப்பீர்கள்.

சில மாதங்களுக்கு முன், மதனோ, சுஜாதாவோ எழுதியதாக நினைவு..
"கேள்வி: சமீபத்தில் நீங்கள் ஆச்சரியப்பட்ட விசயம்?பதில்: நம் கலைஞர் அவர்கள் கத்தியின்றி, ரத்தமின்றி ஒரே ஒரு சட்டம் போட்டு ஒரே நாளில் அனைத்து தமிழ் படங்களையும் தமிழில் பெயர் வைக்கும் படி மாற்றியது..இது ஒரு அளப்பரிய சாதனை.."

அன்பர்களே, யோசித்துப் பாருங்கள்..

தமிழ் நாட்டில், தமிழர்கள் பார்க்கும தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் தமிழக அரசிடமிருந்து வரிச் சலுகை உண்டு... யோசிக்கவே கேவலமாக இல்லை?..அநேகமாக, இது போன்ற ஒரு கேவலமான நிலைமை எந்த நாட்டிலும் இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது...

உண்மையில், தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பது என்பதை நாம் ஆதரிக்கிறோம்.அது அவசியமும் கூட.. அதே நேரத்தில், அதை எப்படி நடைமுறைப் படுத்துவது என்பதில் தான் சிக்கல் இருக்கிறது. ஏற்கனவே நம் ஊரில் திரைத் துறையினருக்கு ஏகப்பட்ட சலுகைகள்..( போன முறை இதே திமுக ஆட்சியில் நடிகர் சங்க கடனில் ஒரு பகுதியை தள்ளுபடி செய்தது.. ஜெ ஜெ ஆட்சியில் படம் வெளி வந்த முதல் 15 நாட்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் வைத்துக்கொள்ளலாம் என அறிவித்தது..இன்னும் இது போல் பல...)

ஒரு பழ மொழி உண்டு.. "கடைத்தேங்காய எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடை"ன்னு..ஒவ்வொரு கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் வேளையில் பொதுவான ஒரு அறிக்கை போர் நடக்கும்..தாங்கள் தான் திரைத்துறையினருக்கு அதிக சலுகை கொடுத்தோம் என்று மாற்றி மாற்றி பட்டியல் இடுவது நடக்கும்..நாமும் பார்த்துகொண்டு ஏதோ நமக்கு சம்பந்தமில்லாத விசயம் போல சும்மா இருப்போம்..இப்போது தமிழ் பெயருள்ள படங்களுக்கு வரிச் சலுகை என அறிவித்த முதல் 4,5 மாதங்களில் 40 கோடி ரூபாய் அளவில் தமிழக அரசுக்கு வரி இழப்பு என்று படித்தேன்.உண்மையில் இது யாருடைய வரிப் பணம்?

மேலும் ஒரு நண்பர் சொன்ன தகவல் இது..சில வருடங்களுக்கு முன்பெல்லாம் வரிச் சலுகை என்றால் நேரடியாக மக்களை போய் சேரும். அதாவது வரி சலுகை தேவையான படங்களுக்கு கேளிக்கை வரி இல்லையென்றால் திரையரங்கு கட்டணம் பாதி விலையில் இருக்கும். நாம் பார்த்திருக்கிறோம்.. இப்போதுள்ள வரி சலுகை எல்லாம் வெறுமனே திரைத் தயாரிப்பாளருக்கு மட்டுமே செல்கிறது..

அதிலும் திமுக ஆட்சியின் மற்றுமொரு சமீபத்திய அயோக்கியத்தனம் சிவாஜி படத்துக்கு வரி விலக்கு என்றது.."சிவாஜி என்பது தமிழ் பெயரா? ஏன் வரி விலக்கு?" என்றால், "இல்லை.. அது பெயர்ச் சொல்.. அதனால் வரி விலக்கு"என்று விளக்கம் சொல்கிறது கலைஞர் அரசு. அப்படியென்றால் சீனாவில் சின்-சாய்-ஸூய் அப்படின்னு ஒரு அறிஞர் இருந்தாராம்..அவர் பேருல நாளைக்கு யாராவது இங்கே படம் எடுத்தா வரி சலுகை கொடுப்பாரா கலைஞர்? ங்கொய்யா.. அதுவும் பெயர்ச் சொல் தானய்யா அப்படின்னு கேட்க மாட்டான்?ரஜினிக்காக சிறப்பு சலுகை..அதுவும் சிவாஜி படத்தை கலைஞர் டிவிக்கு உரிமம் கொடுப்பது என்ற கொடுக்கல் வாங்கலில் தமிழக அரசுக்கு வரி இழப்பு..

முன்பு படங்களுக்கு தமிழ் பெயர் தான் வைக்க வேண்டும் என்று சிலர் போராட்டம் நடத்திய போது "அய்யோ தீவிரவாதம்...அராஜகம்...கருத்து சுதந்திரம் போச்சு"என்றெல்லாம் அத்தனை பேரும் கூப்பாடு போட்டார்கள்..சில பேர் "நாங்கள்லாம் கதைக்கு ஏற்ற மாதிரி தான் பெயர் வைப்போம்.. இதையெல்லாம் அரசு கட்டாயப்படுத்துவதா" என்று ஒப்பாரி வேறு.

ஆனால் இப்போதெல்லாம் எல்லா படங்களுமே தமிழ் பெயரோடு தான் வருகின்றன.. எப்படி?... ஒரு உதாரணம் சொல்கிறேன்.. ஆர்யா நடிக்கிற ஒரு படத்துக்கு பூஜை போடும்போது வைத்த பெயர் "ஆட்டோ"வாம்.. ஆனா இப்போது அதே படத்துக்கு பெயர் "ஓரம் போ"வாம்.. இப்படி பல கூத்து..எல்லாம் வரிச் சலுகை செய்கிற வேலை..ஆக இந்த மாதிரியெல்லாம் பெயர் மாற்றினவுடனே தமிழ் வானளாவ வளர்ந்து விடுமோ?.."பெயர் மட்டும் தமிழில் வை.. உள்ளே நீ எவ்வளவு மோசமாக படம் எடுத்தாலும் பரவாயில்லை"என்பது எவ்வளவு அயோக்கியத்தனம்..

இறுதியாக, படைப்..ப்ப்..பாளிகளின் கருத்து சுதந்திரமும் பறிக்கக் கூடாது.. தமிழில் பெயர் வைப்பதையும் அமலாக்க வேண்டும் என்பதை அரசு எப்படி நடைமுறைப்படுத்துவது?..ஒரு எளிமையான வழி உண்டு..எப்போதும் போல எந்த படத்துக்கும் சலுகை வேண்டாம்..அதே நேரத்தில் தமிழ் தவிர்த்து வேறு எந்த பெயர் இருந்தாலும் அதற்கென்று ஒரு சிறப்பு வரி அல்லது ஒரு முறைக் கட்டணம் (2 லட்சம், 3 லட்சம் என்ற அளவில் ஒரு குறைந்த பட்ச கட்டணமாக இருக்கலாம்)படத்தின் அனுமதிக்கு..

இப்படி உண்மையிலேயே எங்கள் படத்துக்கு இந்த பெயர் தான் பொருத்தம் என்கிறவர்கள் அப்படியே வைத்துக் கொள்ளலாம்..இந்த வகையில் தமிழில் பெயர் வைப்பதை ஊக்கப்படுத்திய மாதிரியும் ஆச்சு.. கருத்து சுதந்திரத்தை காப்பாற்றிய மாதிரியும் ஆச்சு.. அரசுக்கு எந்த வரியிழப்பும் இல்லை..

நன்றி - பால்வெளி

from http://paalveli.blogspot.com

June 6, 2007

ஒன்றைப் பற்றி மட்டுமே சொல்வது தொடர்பாக - கவிதை

நான் ஒன்றைப் பற்றிப் பேசும்போது
இன்னொன்றைப் பற்றிப்
பேசுவதுபோல இருக்கிறது என்கிறாய்
மெய்தான் -
இந்த நாளில் ஒன்றை விலக்கி
இன்னொன்றைக் காணுவது
இயலாத காரியம்

மன்னாரிலிருந்து வெளிக்கிட்ட
தற்கொலைப் போராளியின் உடல்
ஜெருசலம் நகரில் வெடித்துச் சிதறுகிறது
மட்டக்களப்புக்குப் போகையில்
மறிக்கப்படுவோரது அடையாள அட்டைகள்
இஸ்ரேலியப் படையினனிடம்
ஒரு பலஸ்தீனியனரால் நீட்டப்படுகின்றன
திரிகோணமலை முற்றவெளியில்
பொலிஸ் தேடும் சந்தேக நபர்
சிரிநகரில் இந்தியப்படையினரால்
கொண்டு செல்லப்படுகிறார்

பினோஷேயின் சிலியில் காணாமற் போனவர்கள்
சூரியகந்தலிலும் செம்மணியிலும் புதையுண்டார்கள்
கொழும்புச் சோதனைச் சாவடியில்
சிக்குண்ட பெண்ணைத்
தமிழகத்துக் காவல்நாய்கள்
தடுப்பு மறியலில் கடித்துக் குதறுகின்றன

வட இலங்கையிலிருந்து விரட்டப்பட்ட இஸ்லாமியன்
அவுஸ்திரேலிய அரசால் அனுமதி மறுக்கப்படுகிறான்
எல்லா அகதி முகாம்களையும் சூழுகிற வேலி
ஒரே முட்கம்பிச் சுருளால் ஆக்கப்பட்டிருக்கிறது
எல்லாச் சிறைக்கூடத்துச் சுவர்களும்
ஒரேவிதமான அரிகற்களால் எழுப்பப்பட்டுள்ளன

உலகின் எல்லாத் தடுப்பு முகாம்களிலும் உள்ளவர்கள்
ஒரே மொழியில்தான் இரவில் அலறுகிறார்கள்
துருக்கியில் குர்தியனுக்கு மறுக்கப்பட்ட மொழியை
இலங்கையில் தமிழன் இழந்து கொண்டிருக்கிறான்

யாழ்ப்பாண நூலகத்தைச் சூழ்ந்த தீயிலல்லவா
பாபர் மசூதியை இடித்த
கடப்பாரைகள் வடிக்கப்பட்டன

சாவகச்சேரியைத் தரைமட்டமாக்கிய குண்டுகள்
காஸா நகரத்தின் மீது விழுந்து கொண்டிருக்கின்றன
கிளிநொச்சியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள்
பாமியன் புத்தர் சிலைகளை முடமாக்கிச் சரிக்கின்றன

கியூபா மீதான அமெரிக்க வணிகத்தடை
வன்னிக்கு எரிபொருள் போகாமல் தடுக்கிறது

புலம்பெயர்ந்த உயர்சாதித் தமிழனின் முகம்
கூ-க்ளுக்ள்-க்ளான் முகமூடிக்குள் ஒளிகிறது
இலங்கையில் விதிக்கப்படும் செய்தித் தணிக்கை
அமெரிக்காவிலும் செல்லுபடியாகிறது

காஷ்மீர் விடுதலைப் போராளியின் உயிர்த்தியாகம்
இலங்கைத் தமிழனுக்காக வழங்கப்படுகிறது
நேபாளத்தின் கெரில்லாப் போராளி
மலையகத் தமிழ்த் தொழிலாளிக்காகப் போராடுகிறான்

கொலாம்பியாவில் விரிகின்ற விடுதலைப்போர்
இலங்கை விவசாயிகளின் விமோசனதுக்கானது
இலங்கைத் தமிழரது இடையறாத போராட்டம்
பலஸ்தீனப் போராளிகட்கு உற்சாகமூட்டுகிறது

ஒரு நியாயத்தை ஆதரிக்கிற சொற்கள்
இன்னொரு நியாயத்தையும் ஆதரிக்கின்றன
ஒரு கொடுமையை ஏற்கும் சொற்கள்
எல்லா கொடுமைகளையும் நியாயப்படுத்துகின்றன
எனவேதான்
நான் எதைப் பற்றிச் சொன்னாலும்
நீ எதைப் பற்றிச் சொன்னாலும்
எல்லாவற்றைப் பற்றியும் சொன்னது போலத்தான்


சி. சிவசேகரம், ஈழக்கவிஞர்

- மூன்றாவது மனிதன் தொகுப்பிலிருந்து

May 31, 2007

சிவாஜி - The Boss! - பராக்! பராக்!




சிவாஜி - The Boss!

சொல்லும்பொழுதே அதிருதுல்ல!


'யோக்கியன் வர்றான்
செம்பெடுத்து உள்ளே வையுங்க!'

ரூ 200, 300 என அசந்தால்
உங்கள் பையிலிருந்து
அபகரித்துக்கொள்வான்.

அன்பானவன்
ஏழை ரசிக கண்மணிகளிடம் கூட
ரூ 500, 600 - அன்பாய்
சுட்டுவிடுவான்

வித்தியாசமானவன்
தாத்தா ஆனபிறகும்
இளம் நாயகிகளோடு
கொஞ்சி திரிபவன்

ரஜினி ஒரு செமி
ஷங்கர் ஒரு செமி - நிச்சயமாய்
படம் வரும் முழுசாய்

மூளையை கழட்டி வைத்து
காத்திருங்கள்
விரைவில் வருகிறான்
ஜீன் 15ல்.

கட்டாய ஹெல்மெட் - சில கேள்விகள்



மகன், மகள்
பேரன், பேத்திகளுக்கு அப்பால்
'மக்கள்' உயிரின் மீதும் கரிசனம்
நம் மாண்புமிகு முதல்வருக்கு.

ஹெல்மெட் முதலாளிகள்
முடியில்லாத தலைக்கு
வைரம் பதித்த
தங்க ஹெல்மெட் தந்திருப்பார்களோ!

விசுவாசமான காவல்துறைக்கு
'புதிய போனசு'
அறிவிப்போ?

'வாக்கு வங்கி'
வாழ்ந்தால்தான்
நாமும், நம் சந்ததியினரும்
வாழமுடியும் என்ற
தொலைதூர சிந்தனையோ?

May 25, 2007

வாழ்க்கை - கவிதை



பரமபதமாகி விட்டது
வாழ்க்கை

கவனமாய்
மெல்ல மெல்ல
நகர்கிறேன்

கிடைத்த சிறு ஏணியில்
உற்சாகமாய்
மேலே ஏறுகிறேன்

நகரும் பாதையில்
ஏணியை விட
பெரிய பாம்பு கொத்தி
துவங்கிய புள்ளியிலேயே
துவண்டு விழுகிறேன்

வயதுகள் கடக்கின்றன
பொறுப்புகள் பெருகுகின்றன
சுமைகள் அழுத்துகின்றன

மீண்டும் நகர்கிறேன்
நம்பிக்கையுடன்

தூரத்தில் சில
ஏணிகள் தென்படுகின்றன

தெரிந்தும் வசதியாய்
மறந்துவிடுகிறேன்
தூரத்தில் தெரியும்
ஏணியைவிட பெரிதான
சில பாம்புகளை

May 23, 2007

கருணாநிதி சொந்த பந்தங்கள் - வரைபடம்



மதுரை தினகரன் அலுவலகம் சமீபத்தில் அழகிரியால் தாக்கப்பட்ட பொழுது, என்னிடம் என் அம்மா 'கருணாநிதி குடும்பத்தில், யார்? யார்?' எனக் கேட்ட பொழுது, வரிசைக்கிரமமாக சொல்வதில் நிறைய குழப்பம்.

அந்த பெரிய குடும்பத்தின் சொந்த பந்தங்களை எளிய முறையில் புரியும்படி வரைபடம் போட்டு, இன்றைக்கு என் நண்பர் மெயிலில் அனுப்பி இருந்தார்.

தமிழகத்தையே, இப்பொழுது இந்தியாவையும் ஆட்டி படைக்கும் ஒரு குடும்பம் பற்றி அனைவரும் அறிய வேண்டும் அல்லவா! அதனால் உங்கள் பார்வைக்கும்.

பின்குறிப்பு : இதுபோக இன்னும் இந்த குடும்பத்தில் சில குடும்பங்கள் இருக்கலாம். அதுபற்றி எதும் தகவல்கள் தெரிந்தாலும், தயவு செய்து உலகத்திற்கு சொல்ல வேண்டாம். இருக்கிற வாரிசுகளின் தொல்லையே தாங்க முடியவில்லை.

வரைபடம் தெளிவாக பார்க்க - படத்தின் மீது, ஒரு 'க்ளிக்' செய்யுங்கள்.

May 20, 2007

எங்கள் தெரு - கவிதை

பத்தாண்டுகளுக்கு முன்பு

சூரியனுக்கு முந்தி
நாலு முப்பதுக்கே
சுறுசுறுப்பாய் எழும்.

தீப்பொறிகள் தெறிக்க
நெருப்பில் கருவிகள் செய்யும்
பூமாரியின் குடும்பம்.

கழணி தண்ணி
வீடு வீடாய் சேகரித்து
புண்ணாக்கு கரைத்து
அம்பாரமாய் வைக்கோல் கொணர்ந்து
கறவை மாடுகளோடு வாழும்
பால்வாடை கமழும்
பல குடும்பங்கள்.

சாணி சேகரித்து
வட்ட வட்டமாய் - அழகாய்
எரு தட்டி பிணம் எரிக்க
சுடுகாட்டுக்கு விற்கும்
பாலா குடும்பம்.

அம்பது பைசாவிற்கு
ஆவி பறக்க இட்லி விற்கும்
பார்வதியம்மாள்.

திறந்தவெளி தொழிற்சாலை
எங்கள் தெரு.

ஒரு காம்பவுண்டிற்குள் பத்து வீடுகள்.
கொழம்பிலிருந்து சீம்பால் வரை
பரிமாறி கொள்ளப்படும்.

பூட்டுக்களைப் பார்த்ததில்லை
வீட்டின் கதவுகள்.
களவு எப்பொழுதும் போனதில்லை.

உழைப்பில் ஈடுபடுகிற அழகான மனிதர்கள்.
நாகரிக மனிதர்கள் வர தயங்கும்
'அசுத்தமான' தெரு.

இப்பொழுது

சோம்பலாய் ஏழு மணிக்கு எழுகிறது.
எழுந்ததும் நிறுத்திய வண்டி நிற்கிறதா
சரிபார்க்கிறார்கள்.

காம்பவுண்டு வீடுகளை
கந்து வட்டி குடும்பங்கள் கையகப்படுத்தி
மாடி வீடுகளாய் மாறிப்போனது.
ஆளுயர கேட் முன்நிற்கிறது.
தாண்டினால் நாய் இரைகிறது.

அழைப்பு மணி அழுத்தினால்
திருடனா?
சரி பார்த்தபின்பு
கதவு திறக்கப்படுகிறது.

தீப்பொறிகள் பறப்பதில்லை.
மாடுகள் வழிமறிப்பதில்லை.
எரு நினைவில் மட்டும் நிற்கிறது.
ஆவி பறக்கும் இட்லி இல்லை.
செம்மண் சாலை போய்
தார் சாலையாகிப் போனது.

பூமாரி, பாலா - என
எல்லா குடும்பங்களும்
சிதறடிக்கப்பட்டுவிட்டன.
ஒப்புக்குக்கூட புன்னகைக்க மறுக்கிறார்கள்
புதிய மனிதர்கள்.
உழைக்க மறுக்கும் அவலமான மனிதர்கள்.
நாகரிக மனிதர்கள்
வர விரும்பும்
'அழகான தெரு'.

தெருவில் நுழையும்பொழுதெல்லாம்
எண்ணம் எழுகிறது.
'சுத்தமான தெரு'வுக்கு பதிலாக
'அசுத்தமான தெரு'வாகவே இருந்திருக்கலாம்.

May 18, 2007

நீ வருவாய் என - கவிதை

சத்தங்களை வடிகட்டி
நுட்பமாய்
உன் கொலுசு இசையை
பதிவு செய்திருக்கின்றன
என் காதுகள்.

சலனங்களைத் தவிர்த்து
கவனமாய்
உன் ஒவ்வொரு அசைவையும்
படம் பிடித்திருக்கின்றன
என் கண்கள்.

உன் மெளனத்தைக்கூட
மொழி பெயர்க்க
கற்றிருக்கிறது
என் மனசு.

நீயில்லாத நாள்களால்
வெற்றுத்தாள்களாய்
நகருகிறது
என் நாட்குறிப்பு.

கனவுகளில் மட்டும்
தாலாட்டிப் போகிறாய்.

முளரி மொட்டு
என் கவிதைகள்
பால் நிலா
நாட்குறிப்பு - எல்லாம்
என்னோடு
உன் வருகைக்காக
காத்திருக்கின்றன.

எப்பொழுது வருகிறாய்
இங்கு
நிஜத்தில் நீ

சுதந்திரம் இன்னும் தொலைவில் இல்லை - கவிதை

பொய்களின் கைப்பிடித்து
நெடுந்தொலைவு
வந்துவிட்டோம்.

ஒவ்வொரு மைல்கல்லிலும்
சுமைகளென
நம் செல்வங்கள்
அனைத்தையும்
இறக்கி வைத்துவிட்டோம்.

இலவசமாய் கிடைத்ததென
ப்ல வண்ணப் பந்தல்களில்
நிறைய மூடநம்பிக்கைகளை வாங்கி
வயிறு முட்ட குடித்துவிட்டோம்.

பொய்கள்
கொழுத்துப்போய்விட்டன.
நாம் நிறைய
இளைத்து போய்விட்டோம்.

பொய்கள் அழைத்து செல்வது
மகிழ்ச்சியின் தேசத்திற்கு அல்ல!
மரணக்குழிக்குத்தான்!
உண்மை எச்சரித்துக்கொண்டே
உடன் வருகிறது.

பொய்கள் இதுவரை
உண்மையின் ஆடைகளை
உடுத்தியிருந்தன.

இப்பொழுது
தன் மூகமூடிகள்
உண்மையின் ஆடைகள்
எல்லாவற்றையும் களைந்தெறிந்து
தன்னை எவர் ஜெயிக்கமுடியும்
கோரப்பற்களைக் காட்டி
எக்காளச் சிரிப்புடன்
உண்மையைப் பார்த்து
கேலி செய்கிறது.

சாவின் விளிம்பிற்கு
வந்துவிட்டோம்.
இப்பொழுதாவது
உண்மையின் கைப்பிடிப்போம்.
கரங்களை ஒன்றிணைப்போம்.

உற்றுப்பாருங்கள்
சாவின் முகத்தில்
சவக்களை.

சுதந்திரம்... இன்னும்
தொலைவில் இல்லை


- 2003-ல் புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்தது.

May 17, 2007

என் பெயர் R.S.S - கவிதை

என் பெயர் R.S.S.

பிறக்கும் பொழுது
எல்லாக் குழந்தைகளும்
நல்ல குழந்தைகள். அப்படியா?
நான் அந்த ரகம் இல்லை.
நஞ்சு கொண்டுநான் பிறந்தேன்.

நான்
செம்டம்பர் 27, 1925
விஜயதசமி நாளில்
உயர்குடியில்
வீர சிவாஜி பிறந்த
மராட்டிய மண்ணில்
பிறந்தவன்.

என் அப்பா கேசவ பல்ராம் கெட்கேவர்
இனம் - இட்லர் இன்மான ஆரிய இனம்
சாதி - சித்பவன் பார்ப்பான் சாதி.

'இந்துயிசமே எங்கள் தேசியம்' - என
கொள்கை வழி பிறந்தவன் நான்.
இதில் எந்தவித சம்ரசமற்றவன்.
காந்தியைக் கொன்ற
நாதுராம் கோட்சே
என்னைத் தூக்கி வளர்த்தவர்.

அறியாமை இருள்
எங்கெல்லாம் இருந்ததோ
அங்கெல்லாம் தழைத்து வளர்ந்தேன்.
சாதி, மதம் எவ்விடத்தில் இருந்ததோ
அவ்விடத்தில்
காட்டுத் தீயாய்ப் பற்றிக் கொண்டேன்.
எனக்கு உணவு குருதி.
இரத்தம் குடிக்காமல்
என்னால்உயிர் வாழமுடியாது.
இள ரத்தமெனில்
இன்னும் ருசி.

நான் எந்த மண்ணில்
தவழ்ந்தேனோ, வளர்ந்தேனோ
அந்த மண் கலவர பூமியானது.
எனக்கு மறதி அதிகம்.
நான் குடித்தஉயிர்களின்
எண்ணிக்கையைக்
கணக்கு வைத்துக்கொள்ளவில்லை.
ஏனென்றால்
கணக்கிடலங்காது.

கடந்த 82 ஆண்டுகளில்
பெரிய மரமாய், மண்ணில்
ஆழப் பதிந்து நிற்கிறேன்.
உலகமெங்கும், இன்னும்
என் வேர்களை
விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.

இந்து முன்ணணி, இந்து மஸ்தூர் சங்,
பஜ்ரங்தள், A.B.V.P.,
விஸ்வ இந்து பரிசத் - என
என் விழுதுகள் என்னைப்
பலப்படுத்துகின்றன.

எனக்கு விரோதிகள் உண்டு.

முதல் விரோதி - கம்யுனிஸ்ட்,
2வது விரோதி - முஸ்லீம்.
3வது விரோதி - கிறித்துவன்.
4வது விரோதி - ஜனநாயகவாதி.

எனக்கு வலிமையான மகன் உண்டு.
பெயர் - பாரதீய ஜனதா.
எனக்கு ஆபத்து வருகிற பொழுதெல்லாம்
துடித்து, காப்பாற்றுவன் அவனே.

என்னை அழிக்கும் முயற்சியில்
தோற்றுப் போனவர்கள் ஏராளம்.

தமிழகத்தில்
என் தளபதிகள்
மடாதிபதி சங்கராச்சாரியா,
வீரத்துறவி இராமகோபலன்,
அறிவுசீவி துக்ளக் சோ,
பா.ஜ.க பிரமுகர் இல. கணேசன்.

உங்களிடத்திலும் சாதி, மதம்
இருக்கிறதா?
எனக்கு பசிக்கிறது.
ரத்தம் வேண்டும்.
இளரத்தம் வேண்டும்.
இதோஎன் படை பரிவாரங்களோடு
புறப்பட்டுவிட்டேன்.
முடிந்தால்,
என் முதல் எதிரியான கம்யுனிஸ்களிடம்
அடைக்கலம் தேடிக் கொள்ளுங்கள்.

பின்குறிப்பு :
கம்யுனிஸ்டுகள் என்றால்
C.P.I., C.P.I (M) என அப்பாவித்தனமாய்
நினைக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.
நான் சொல்வது நக்சல்பாரிகளை.

May 16, 2007

கனா - கவிதை

தேவையின் சுழிப்பில்
சிக்கி சுழல்கிறேன்

நல்லெண்ணங்களின் வனப்பில்
சொக்கி கிடக்கிறேன்

கனவுகளின் பள்ளதாக்குகளில்
வீழ்ந்து
வானம் வெறிக்கிறேன்

முடிவுகளின் தயக்கத்தில்
கலங்கிய குட்டையாகிறேன்

குடித்து குடித்து
வயிறு புடைத்து
விரும்பி நகர்கிறேன்
சவக்குழி நோக்கி

திடுக்கிட்டு
விழித்துப் பார்க்கிறேன்
'நிஜத்திலும் அப்படியே!'

May 10, 2007

திருமணம் - சிறுகதை/கவிதை

திருமணம்

இளம் மாலைப்பொழுது
குழந்தைக்ளோடு குழந்தையாய் மாறி
விளையாடிக் கொண்டிருந்தாள்
அவள்.
நண்பன் அறிமுகப்படுத்தினான்.

மூன்று வருடங்களில்...
ஆரோக்கியமாய் இடைவெளி நிர்வகித்து
மனதில் நெருங்கினோம்.
நிறையவற்றில் ஒன்றுபட்டோம்
கருத்து வேறுபாடுகள் எழுந்த பொழுது
களைந்து கொண்டோம்.

எனக்கு பெண்ணும்
அவளுக்கு மாப்பிள்ளையுமாய்
அவரவர் வீட்டில்
வலைவீசிக் கொண்டிருந்தார்கள்
இருவரில் யார் கேட்டிருந்தாலும்
மற்றவர் மறுத்திருக்க மாட்டோம்
ஆனால் மெளனம் காத்தோம்.

'இந்த பெண் எப்படி?'
அம்மாதான் ஆரம்பித்தாள்
படம் பார்க்காமலேயே...
'முகம், மனம்
அறியா பெண்ணுடன் எப்படியம்மா?' என்றேன்.
அதெல்லாம் சொல்லாதே! ஊர் வாழலை?
இந்த நொண்டி சாக்கெல்லாம் வேண்டாம்.

அவளை அறிந்திருந்ததால்
'வேறு சாதிப்பெண்ணை
திருமணம் செய்யலாம் என
கனவில்கூட நினையாதே
சாதி சனம் எல்லாம் எச்சில் துப்பிவிடும்
என் உயிர் போய்விடும் - என்றாள்.
தொடர்ந்து புலம்பினாள்.

சுற்றம் மொத்தமாய்
என்மேல் விழுந்து
மூட்டை மூட்டையாய்
அறிவுரைகளை வைத்தார்கள்
மீண்டும் மெளனமானேன்
திருமணம் நடந்தேறியது.

முதல்நாள் இரவில்
இருவரும் அறிமுகமாகி
ஏதோ மனதில் நெருட
சுற்றிலும் இருள் படர்ந்தது.

வந்த நாட்களில்
அம்மாவின் பழமையும்
அவளின் நடைமுறையும்
கடுமையாய் மோதிக்கொள்ள
நடுவில் நான்.
நான்கே மாதங்களில்
தனிக்குடித்தனம்.

கனவுகளைத் தவிர்த்து
மண்ணில் அழுந்த நடப்பவன்
நான்
கனவுகளில் வாழ்ந்து
அபூர்வமாய்
தரைக்கு இறங்கி வருகிறவள்
அவள்.

ரசனை, நுகர்வு
அனைத்திலும்
எதிரும், புதிருமாய்.

இரண்டு மனதும்
இரண்டு உடலும்
இணைந்தால் தான்
'மழலை' என்றில்லையே!
பனிப்போர் தொடரும் வேளையில்
மண்ணில் வந்திருங்கினான்.

துடுப்பும், படகுமாய்
ஒரு திசை வழி செல்ல வேண்டியவர்கள்
வெவ்வேறு இலக்கு பயணப்படும்
இரூ படகுகளாய் நாங்கள்

சரியாய் இரண்டு வருடங்கள்
இருவரும் முடிவெடுத்தோம்
இனி இணைந்து வாழ்வது அபத்தம்
பிரிந்துவிடுவோம்.

உன் கனவுகளின் வாழ்க்கைக்கு
மழலை தடையாய் இருப்பான் - என்றேன்
சிறிது யோசித்து புன்னகையுடன்
வைத்துக்கொள் - என்றாள்

இடைக்காலங்களில்
'என் வாழ்க்கை
நோயின் தீவிரம்' இரண்டும்
அம்மாவின் உயிரை
சரிபாதியாய் எடுத்துக்கொண்டன.

இப்பொழுது அனாதையாய்
நானும், எனது மகனும்
ஒரு துருவத்தில்.
அவள் ஒரு துருவத்தில்
சுற்றம் அனைத்தும்
'ச்சூ! ச்சூ!' என
நாயை அழைத்தார்கள்

அவள்மீது எனக்கு துளியும்
வருத்தமில்லை
என் கோபம் அனைத்தும்
என் மெளனங்களின் மீதும்,
என் தாயின் சாதியப்பிடிப்பின் மீதும்.

இன்று
வாழ்க்கை மரத்தின்கீழ்
ஞானோதயம் பிறக்கிறது
அன்று
நல்ல மகனாய் இருந்திருப்பதைவிட
சுய சிந்தனை கொண்ட
நல்ல மனிதனாய் இருந்திருக்கலாம்

April 23, 2007

உனக்கும் எனக்கும் - கவிதை

அவசர அவசியமாய் தின்று
ஓடியாடி உழைத்து
உடல் களைத்துப் போகையில்
இரவு உனக்காய் படுக்கை விரித்துவிடும்.
பதினைந்து நாட்களிலேயே பற்றாக்குறை
கடன்களை பெற்றெடுக்கும்.

பொய்கள் சொல்லி பொருட்கள் விற்று
ஆசை ஆசையாய் வாங்கி ஏமாந்து
சக மனிதன் மீது நம்பிக்கை இழக்கையில்
உள்ளம் கனத்துப் போகும்.

காதலாய் பழகியவர்களிடம் நட்பை வலுப்படுத்தி
நட்பாய் பழகியவர்களிடம் காதலை வெளிப்படுத்தி
இறுதியில்
முகமறியா நபருடன் வாழ்க்கை பயணிக்கும்.

ஓடுகிற ஓட்டத்தில்
ஆபூர்வமாய் திரும்பி பார்க்கையில்
வெறுமை நிலவி கண்கள் பனிக்கும்.

உனக்கும் எனக்கும் வித்தியாசமில்லை.

நீ ஏழு வயதில்
கண்ணாடி அணிந்திருப்பாய்.
நான் இருபத்தேழு வயதில்.

உன் அப்பா ஆலையிலிருந்து
ஏழு நாட்களுக்கு முன்
வெளியேற்றப்பட்டிருப்பார்.
என் அப்பாஏழு ஆண்டுகளுக்குமுன்.

உனக்கும் எனக்கும் வித்தியாசம்
உருவத்தில் மட்டுமே!
உள்ளடக்கத்தில் ஒன்றாய்.

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
உன் கனவில் கவிபாரதி வந்திருப்பான்.
வேறு வார்த்தைகள் கொண்டு
என் கனவில் பாரதிதாசன்.
ஆளுக்கொரு சாதி சொல்லி
தனித்தனியாய் கனவுகள் கண்டு
இத்தனை காலம்
சிங்கங்களுக்கும் நரிகளுக்கும்
இரையாகிப்போனோம்.

கரங்களை ஒண்றிணைப்போம்.
கனவுகளுக்கு ஆக்கம் கொடுப்போம்.
பணிவதைவிட நிமிர்வது உயர்வானது