> குருத்து: May 2007

May 31, 2007

சிவாஜி - The Boss! - பராக்! பராக்!




சிவாஜி - The Boss!

சொல்லும்பொழுதே அதிருதுல்ல!


'யோக்கியன் வர்றான்
செம்பெடுத்து உள்ளே வையுங்க!'

ரூ 200, 300 என அசந்தால்
உங்கள் பையிலிருந்து
அபகரித்துக்கொள்வான்.

அன்பானவன்
ஏழை ரசிக கண்மணிகளிடம் கூட
ரூ 500, 600 - அன்பாய்
சுட்டுவிடுவான்

வித்தியாசமானவன்
தாத்தா ஆனபிறகும்
இளம் நாயகிகளோடு
கொஞ்சி திரிபவன்

ரஜினி ஒரு செமி
ஷங்கர் ஒரு செமி - நிச்சயமாய்
படம் வரும் முழுசாய்

மூளையை கழட்டி வைத்து
காத்திருங்கள்
விரைவில் வருகிறான்
ஜீன் 15ல்.

கட்டாய ஹெல்மெட் - சில கேள்விகள்



மகன், மகள்
பேரன், பேத்திகளுக்கு அப்பால்
'மக்கள்' உயிரின் மீதும் கரிசனம்
நம் மாண்புமிகு முதல்வருக்கு.

ஹெல்மெட் முதலாளிகள்
முடியில்லாத தலைக்கு
வைரம் பதித்த
தங்க ஹெல்மெட் தந்திருப்பார்களோ!

விசுவாசமான காவல்துறைக்கு
'புதிய போனசு'
அறிவிப்போ?

'வாக்கு வங்கி'
வாழ்ந்தால்தான்
நாமும், நம் சந்ததியினரும்
வாழமுடியும் என்ற
தொலைதூர சிந்தனையோ?

May 25, 2007

வாழ்க்கை - கவிதை



பரமபதமாகி விட்டது
வாழ்க்கை

கவனமாய்
மெல்ல மெல்ல
நகர்கிறேன்

கிடைத்த சிறு ஏணியில்
உற்சாகமாய்
மேலே ஏறுகிறேன்

நகரும் பாதையில்
ஏணியை விட
பெரிய பாம்பு கொத்தி
துவங்கிய புள்ளியிலேயே
துவண்டு விழுகிறேன்

வயதுகள் கடக்கின்றன
பொறுப்புகள் பெருகுகின்றன
சுமைகள் அழுத்துகின்றன

மீண்டும் நகர்கிறேன்
நம்பிக்கையுடன்

தூரத்தில் சில
ஏணிகள் தென்படுகின்றன

தெரிந்தும் வசதியாய்
மறந்துவிடுகிறேன்
தூரத்தில் தெரியும்
ஏணியைவிட பெரிதான
சில பாம்புகளை

May 23, 2007

கருணாநிதி சொந்த பந்தங்கள் - வரைபடம்



மதுரை தினகரன் அலுவலகம் சமீபத்தில் அழகிரியால் தாக்கப்பட்ட பொழுது, என்னிடம் என் அம்மா 'கருணாநிதி குடும்பத்தில், யார்? யார்?' எனக் கேட்ட பொழுது, வரிசைக்கிரமமாக சொல்வதில் நிறைய குழப்பம்.

அந்த பெரிய குடும்பத்தின் சொந்த பந்தங்களை எளிய முறையில் புரியும்படி வரைபடம் போட்டு, இன்றைக்கு என் நண்பர் மெயிலில் அனுப்பி இருந்தார்.

தமிழகத்தையே, இப்பொழுது இந்தியாவையும் ஆட்டி படைக்கும் ஒரு குடும்பம் பற்றி அனைவரும் அறிய வேண்டும் அல்லவா! அதனால் உங்கள் பார்வைக்கும்.

பின்குறிப்பு : இதுபோக இன்னும் இந்த குடும்பத்தில் சில குடும்பங்கள் இருக்கலாம். அதுபற்றி எதும் தகவல்கள் தெரிந்தாலும், தயவு செய்து உலகத்திற்கு சொல்ல வேண்டாம். இருக்கிற வாரிசுகளின் தொல்லையே தாங்க முடியவில்லை.

வரைபடம் தெளிவாக பார்க்க - படத்தின் மீது, ஒரு 'க்ளிக்' செய்யுங்கள்.

May 20, 2007

எங்கள் தெரு - கவிதை

பத்தாண்டுகளுக்கு முன்பு

சூரியனுக்கு முந்தி
நாலு முப்பதுக்கே
சுறுசுறுப்பாய் எழும்.

தீப்பொறிகள் தெறிக்க
நெருப்பில் கருவிகள் செய்யும்
பூமாரியின் குடும்பம்.

கழணி தண்ணி
வீடு வீடாய் சேகரித்து
புண்ணாக்கு கரைத்து
அம்பாரமாய் வைக்கோல் கொணர்ந்து
கறவை மாடுகளோடு வாழும்
பால்வாடை கமழும்
பல குடும்பங்கள்.

சாணி சேகரித்து
வட்ட வட்டமாய் - அழகாய்
எரு தட்டி பிணம் எரிக்க
சுடுகாட்டுக்கு விற்கும்
பாலா குடும்பம்.

அம்பது பைசாவிற்கு
ஆவி பறக்க இட்லி விற்கும்
பார்வதியம்மாள்.

திறந்தவெளி தொழிற்சாலை
எங்கள் தெரு.

ஒரு காம்பவுண்டிற்குள் பத்து வீடுகள்.
கொழம்பிலிருந்து சீம்பால் வரை
பரிமாறி கொள்ளப்படும்.

பூட்டுக்களைப் பார்த்ததில்லை
வீட்டின் கதவுகள்.
களவு எப்பொழுதும் போனதில்லை.

உழைப்பில் ஈடுபடுகிற அழகான மனிதர்கள்.
நாகரிக மனிதர்கள் வர தயங்கும்
'அசுத்தமான' தெரு.

இப்பொழுது

சோம்பலாய் ஏழு மணிக்கு எழுகிறது.
எழுந்ததும் நிறுத்திய வண்டி நிற்கிறதா
சரிபார்க்கிறார்கள்.

காம்பவுண்டு வீடுகளை
கந்து வட்டி குடும்பங்கள் கையகப்படுத்தி
மாடி வீடுகளாய் மாறிப்போனது.
ஆளுயர கேட் முன்நிற்கிறது.
தாண்டினால் நாய் இரைகிறது.

அழைப்பு மணி அழுத்தினால்
திருடனா?
சரி பார்த்தபின்பு
கதவு திறக்கப்படுகிறது.

தீப்பொறிகள் பறப்பதில்லை.
மாடுகள் வழிமறிப்பதில்லை.
எரு நினைவில் மட்டும் நிற்கிறது.
ஆவி பறக்கும் இட்லி இல்லை.
செம்மண் சாலை போய்
தார் சாலையாகிப் போனது.

பூமாரி, பாலா - என
எல்லா குடும்பங்களும்
சிதறடிக்கப்பட்டுவிட்டன.
ஒப்புக்குக்கூட புன்னகைக்க மறுக்கிறார்கள்
புதிய மனிதர்கள்.
உழைக்க மறுக்கும் அவலமான மனிதர்கள்.
நாகரிக மனிதர்கள்
வர விரும்பும்
'அழகான தெரு'.

தெருவில் நுழையும்பொழுதெல்லாம்
எண்ணம் எழுகிறது.
'சுத்தமான தெரு'வுக்கு பதிலாக
'அசுத்தமான தெரு'வாகவே இருந்திருக்கலாம்.

May 18, 2007

நீ வருவாய் என - கவிதை

சத்தங்களை வடிகட்டி
நுட்பமாய்
உன் கொலுசு இசையை
பதிவு செய்திருக்கின்றன
என் காதுகள்.

சலனங்களைத் தவிர்த்து
கவனமாய்
உன் ஒவ்வொரு அசைவையும்
படம் பிடித்திருக்கின்றன
என் கண்கள்.

உன் மெளனத்தைக்கூட
மொழி பெயர்க்க
கற்றிருக்கிறது
என் மனசு.

நீயில்லாத நாள்களால்
வெற்றுத்தாள்களாய்
நகருகிறது
என் நாட்குறிப்பு.

கனவுகளில் மட்டும்
தாலாட்டிப் போகிறாய்.

முளரி மொட்டு
என் கவிதைகள்
பால் நிலா
நாட்குறிப்பு - எல்லாம்
என்னோடு
உன் வருகைக்காக
காத்திருக்கின்றன.

எப்பொழுது வருகிறாய்
இங்கு
நிஜத்தில் நீ

சுதந்திரம் இன்னும் தொலைவில் இல்லை - கவிதை

பொய்களின் கைப்பிடித்து
நெடுந்தொலைவு
வந்துவிட்டோம்.

ஒவ்வொரு மைல்கல்லிலும்
சுமைகளென
நம் செல்வங்கள்
அனைத்தையும்
இறக்கி வைத்துவிட்டோம்.

இலவசமாய் கிடைத்ததென
ப்ல வண்ணப் பந்தல்களில்
நிறைய மூடநம்பிக்கைகளை வாங்கி
வயிறு முட்ட குடித்துவிட்டோம்.

பொய்கள்
கொழுத்துப்போய்விட்டன.
நாம் நிறைய
இளைத்து போய்விட்டோம்.

பொய்கள் அழைத்து செல்வது
மகிழ்ச்சியின் தேசத்திற்கு அல்ல!
மரணக்குழிக்குத்தான்!
உண்மை எச்சரித்துக்கொண்டே
உடன் வருகிறது.

பொய்கள் இதுவரை
உண்மையின் ஆடைகளை
உடுத்தியிருந்தன.

இப்பொழுது
தன் மூகமூடிகள்
உண்மையின் ஆடைகள்
எல்லாவற்றையும் களைந்தெறிந்து
தன்னை எவர் ஜெயிக்கமுடியும்
கோரப்பற்களைக் காட்டி
எக்காளச் சிரிப்புடன்
உண்மையைப் பார்த்து
கேலி செய்கிறது.

சாவின் விளிம்பிற்கு
வந்துவிட்டோம்.
இப்பொழுதாவது
உண்மையின் கைப்பிடிப்போம்.
கரங்களை ஒன்றிணைப்போம்.

உற்றுப்பாருங்கள்
சாவின் முகத்தில்
சவக்களை.

சுதந்திரம்... இன்னும்
தொலைவில் இல்லை


- 2003-ல் புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்தது.

May 17, 2007

என் பெயர் R.S.S - கவிதை

என் பெயர் R.S.S.

பிறக்கும் பொழுது
எல்லாக் குழந்தைகளும்
நல்ல குழந்தைகள். அப்படியா?
நான் அந்த ரகம் இல்லை.
நஞ்சு கொண்டுநான் பிறந்தேன்.

நான்
செம்டம்பர் 27, 1925
விஜயதசமி நாளில்
உயர்குடியில்
வீர சிவாஜி பிறந்த
மராட்டிய மண்ணில்
பிறந்தவன்.

என் அப்பா கேசவ பல்ராம் கெட்கேவர்
இனம் - இட்லர் இன்மான ஆரிய இனம்
சாதி - சித்பவன் பார்ப்பான் சாதி.

'இந்துயிசமே எங்கள் தேசியம்' - என
கொள்கை வழி பிறந்தவன் நான்.
இதில் எந்தவித சம்ரசமற்றவன்.
காந்தியைக் கொன்ற
நாதுராம் கோட்சே
என்னைத் தூக்கி வளர்த்தவர்.

அறியாமை இருள்
எங்கெல்லாம் இருந்ததோ
அங்கெல்லாம் தழைத்து வளர்ந்தேன்.
சாதி, மதம் எவ்விடத்தில் இருந்ததோ
அவ்விடத்தில்
காட்டுத் தீயாய்ப் பற்றிக் கொண்டேன்.
எனக்கு உணவு குருதி.
இரத்தம் குடிக்காமல்
என்னால்உயிர் வாழமுடியாது.
இள ரத்தமெனில்
இன்னும் ருசி.

நான் எந்த மண்ணில்
தவழ்ந்தேனோ, வளர்ந்தேனோ
அந்த மண் கலவர பூமியானது.
எனக்கு மறதி அதிகம்.
நான் குடித்தஉயிர்களின்
எண்ணிக்கையைக்
கணக்கு வைத்துக்கொள்ளவில்லை.
ஏனென்றால்
கணக்கிடலங்காது.

கடந்த 82 ஆண்டுகளில்
பெரிய மரமாய், மண்ணில்
ஆழப் பதிந்து நிற்கிறேன்.
உலகமெங்கும், இன்னும்
என் வேர்களை
விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.

இந்து முன்ணணி, இந்து மஸ்தூர் சங்,
பஜ்ரங்தள், A.B.V.P.,
விஸ்வ இந்து பரிசத் - என
என் விழுதுகள் என்னைப்
பலப்படுத்துகின்றன.

எனக்கு விரோதிகள் உண்டு.

முதல் விரோதி - கம்யுனிஸ்ட்,
2வது விரோதி - முஸ்லீம்.
3வது விரோதி - கிறித்துவன்.
4வது விரோதி - ஜனநாயகவாதி.

எனக்கு வலிமையான மகன் உண்டு.
பெயர் - பாரதீய ஜனதா.
எனக்கு ஆபத்து வருகிற பொழுதெல்லாம்
துடித்து, காப்பாற்றுவன் அவனே.

என்னை அழிக்கும் முயற்சியில்
தோற்றுப் போனவர்கள் ஏராளம்.

தமிழகத்தில்
என் தளபதிகள்
மடாதிபதி சங்கராச்சாரியா,
வீரத்துறவி இராமகோபலன்,
அறிவுசீவி துக்ளக் சோ,
பா.ஜ.க பிரமுகர் இல. கணேசன்.

உங்களிடத்திலும் சாதி, மதம்
இருக்கிறதா?
எனக்கு பசிக்கிறது.
ரத்தம் வேண்டும்.
இளரத்தம் வேண்டும்.
இதோஎன் படை பரிவாரங்களோடு
புறப்பட்டுவிட்டேன்.
முடிந்தால்,
என் முதல் எதிரியான கம்யுனிஸ்களிடம்
அடைக்கலம் தேடிக் கொள்ளுங்கள்.

பின்குறிப்பு :
கம்யுனிஸ்டுகள் என்றால்
C.P.I., C.P.I (M) என அப்பாவித்தனமாய்
நினைக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.
நான் சொல்வது நக்சல்பாரிகளை.

May 16, 2007

கனா - கவிதை

தேவையின் சுழிப்பில்
சிக்கி சுழல்கிறேன்

நல்லெண்ணங்களின் வனப்பில்
சொக்கி கிடக்கிறேன்

கனவுகளின் பள்ளதாக்குகளில்
வீழ்ந்து
வானம் வெறிக்கிறேன்

முடிவுகளின் தயக்கத்தில்
கலங்கிய குட்டையாகிறேன்

குடித்து குடித்து
வயிறு புடைத்து
விரும்பி நகர்கிறேன்
சவக்குழி நோக்கி

திடுக்கிட்டு
விழித்துப் பார்க்கிறேன்
'நிஜத்திலும் அப்படியே!'

May 10, 2007

திருமணம் - சிறுகதை/கவிதை

திருமணம்

இளம் மாலைப்பொழுது
குழந்தைக்ளோடு குழந்தையாய் மாறி
விளையாடிக் கொண்டிருந்தாள்
அவள்.
நண்பன் அறிமுகப்படுத்தினான்.

மூன்று வருடங்களில்...
ஆரோக்கியமாய் இடைவெளி நிர்வகித்து
மனதில் நெருங்கினோம்.
நிறையவற்றில் ஒன்றுபட்டோம்
கருத்து வேறுபாடுகள் எழுந்த பொழுது
களைந்து கொண்டோம்.

எனக்கு பெண்ணும்
அவளுக்கு மாப்பிள்ளையுமாய்
அவரவர் வீட்டில்
வலைவீசிக் கொண்டிருந்தார்கள்
இருவரில் யார் கேட்டிருந்தாலும்
மற்றவர் மறுத்திருக்க மாட்டோம்
ஆனால் மெளனம் காத்தோம்.

'இந்த பெண் எப்படி?'
அம்மாதான் ஆரம்பித்தாள்
படம் பார்க்காமலேயே...
'முகம், மனம்
அறியா பெண்ணுடன் எப்படியம்மா?' என்றேன்.
அதெல்லாம் சொல்லாதே! ஊர் வாழலை?
இந்த நொண்டி சாக்கெல்லாம் வேண்டாம்.

அவளை அறிந்திருந்ததால்
'வேறு சாதிப்பெண்ணை
திருமணம் செய்யலாம் என
கனவில்கூட நினையாதே
சாதி சனம் எல்லாம் எச்சில் துப்பிவிடும்
என் உயிர் போய்விடும் - என்றாள்.
தொடர்ந்து புலம்பினாள்.

சுற்றம் மொத்தமாய்
என்மேல் விழுந்து
மூட்டை மூட்டையாய்
அறிவுரைகளை வைத்தார்கள்
மீண்டும் மெளனமானேன்
திருமணம் நடந்தேறியது.

முதல்நாள் இரவில்
இருவரும் அறிமுகமாகி
ஏதோ மனதில் நெருட
சுற்றிலும் இருள் படர்ந்தது.

வந்த நாட்களில்
அம்மாவின் பழமையும்
அவளின் நடைமுறையும்
கடுமையாய் மோதிக்கொள்ள
நடுவில் நான்.
நான்கே மாதங்களில்
தனிக்குடித்தனம்.

கனவுகளைத் தவிர்த்து
மண்ணில் அழுந்த நடப்பவன்
நான்
கனவுகளில் வாழ்ந்து
அபூர்வமாய்
தரைக்கு இறங்கி வருகிறவள்
அவள்.

ரசனை, நுகர்வு
அனைத்திலும்
எதிரும், புதிருமாய்.

இரண்டு மனதும்
இரண்டு உடலும்
இணைந்தால் தான்
'மழலை' என்றில்லையே!
பனிப்போர் தொடரும் வேளையில்
மண்ணில் வந்திருங்கினான்.

துடுப்பும், படகுமாய்
ஒரு திசை வழி செல்ல வேண்டியவர்கள்
வெவ்வேறு இலக்கு பயணப்படும்
இரூ படகுகளாய் நாங்கள்

சரியாய் இரண்டு வருடங்கள்
இருவரும் முடிவெடுத்தோம்
இனி இணைந்து வாழ்வது அபத்தம்
பிரிந்துவிடுவோம்.

உன் கனவுகளின் வாழ்க்கைக்கு
மழலை தடையாய் இருப்பான் - என்றேன்
சிறிது யோசித்து புன்னகையுடன்
வைத்துக்கொள் - என்றாள்

இடைக்காலங்களில்
'என் வாழ்க்கை
நோயின் தீவிரம்' இரண்டும்
அம்மாவின் உயிரை
சரிபாதியாய் எடுத்துக்கொண்டன.

இப்பொழுது அனாதையாய்
நானும், எனது மகனும்
ஒரு துருவத்தில்.
அவள் ஒரு துருவத்தில்
சுற்றம் அனைத்தும்
'ச்சூ! ச்சூ!' என
நாயை அழைத்தார்கள்

அவள்மீது எனக்கு துளியும்
வருத்தமில்லை
என் கோபம் அனைத்தும்
என் மெளனங்களின் மீதும்,
என் தாயின் சாதியப்பிடிப்பின் மீதும்.

இன்று
வாழ்க்கை மரத்தின்கீழ்
ஞானோதயம் பிறக்கிறது
அன்று
நல்ல மகனாய் இருந்திருப்பதைவிட
சுய சிந்தனை கொண்ட
நல்ல மனிதனாய் இருந்திருக்கலாம்