> குருத்து: June 2012

June 29, 2012

மது வேண்டும் : தா. பாண்டியன் மது வேண்டாம் : நல்லக்கண்ணு

28.06.2012 தேதியிட்ட தினமணி நாளிதழில்: பூரண மதுவிலக்கு கோரி நடத்தப்பட உள்ள 'ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை' தொடக்கிவைத்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கையெழுத்திட்டார் என்று ஒரு செய்தி மூன்றாம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது.

தே 28.06.2012 தேதியிட்ட தினமணி நாளிதழில்: "தமிழகத்தில் மதுக் கடைகளை மூடத் தேவையில்லை" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் கருத்து தெரிவித்தார் என்று மற்றொரு செய்தியும் ஏழாம் பக்கத்தில்வெளிவந்துள்ளது.

"தமிழகத்தில் அரசு மதுக் கடைகளை மூடினால் புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களுக்குச் சென்று மது குடித்துவிட்டு வருவார்கள். எனவே, தமிழகத்தில் மதுக் கடைகளை மூடத் தேவையில்லை. தமிழகத்தைப் போன்றே மதுபானக் கடைகளைத் திறக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது" என்று தா.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்

இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால், 02-06- 2012 அன்று காந்தீய மக்கள் இயக்கம் நடத்திய மதுவிலக்கு மாநாட்டில் தா.பாண்டியன் கலந்து கொண்டு மதுவை ஒழிக்க சிறப்புரை ஆற்றியிருக்கிறார்.

- அருள் பக்கங்களிலிருந்து....

இலவச கல்வி உரிமைக்காக போராடியவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்! கைது!

காட் ஒப்பந்தம் என்கிற அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டதை அடுத்து வந்த காட்ஸ் ஒப்பந்தத்தின்படி கல்வி, மருத்துவம், குடிநீர், உணவுப்பொருள் வழங்கல் உள்ளிட்ட அனைத்து ’சேவை’த் துறைகளையும் தனியார்மயமாக்கி கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளைக்கு திறந்துவிடும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது இந்திய அரசு.
இலவசமாக வழங்க வேண்டிய அடிப்படை கல்வியிலிருந்து உயர் கல்வி வரையிலான மொத்த கல்வித்துறையையும் தனியார் முதலாளிகளுக்கு திறந்துவிட்டு, கல்வி அளிக்கும் சேவையிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகளில் ஒன்று தான் ’கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009’. தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்கிற பெயரில் கல்வியில் தனியார்மயமாக்கலின் முதல் நடவடிக்கையாக இதை தற்போது செயல்படுத்தி வருகிறார்கள்.
கல்விக் கொள்ளையர்களுக்கு துணைபோகும் அரசின் இந்த நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றன. கடந்த 3-6-12 அன்று  சிதம்பரத்தில் இலவசக் கல்வி உரிமைக்காக ‘மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும்’ ’மனித உரிமை பாதுகாப்பு மையமும்’  இலவச கல்வி உரிமை மாநாட்டை நடத்தின.
வரும் 17-ம் தேதி தனியார்மய கல்விக்கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் ! உழைக்கும் மக்களின் கல்வி கற்கும் அடிப்படை உரிமையை நிலைநாட்டுவோம் ! என்கிற முழக்கத்துடன் புரட்சிகர மாணவர்–இளைஞர் முன்னணி ’கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாட்டை’ சென்னை, திருச்சி, கரூர், விழுப்புரம், கடலூர் ஆகிய நகரங்களில் நடத்துகிறது.
இந்த மாநாட்டிற்கு முன்னதாக இன்று காலை தனியார்மய கல்விக்கொள்ளைக்கு முடிவு கட்டுவோம் ! மறுகாலனியாக்க கொள்கையை மோதி வீழ்த்துவோம் ! என்கிற முழக்கத்துடன் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட முடிவு செய்தனர் பு.மா.இ.மு.வினர்.
அதன்படி சென்னையின் முக்கிய இடங்களில் எல்லாம் இதற்கான அறிவிப்பு சுவரொட்டிகள் முதல் நாள் இரவே, அதாவது நேற்று நள்ளிரவே ஒட்டப்பட்டிருந்தன. இன்று விடியற் காலையிலேயே இந்த சுவரொட்டிகளை பார்த்து அதிர்ந்து போன நுங்கம்பாக்கம் துணை ஆணையர் வெங்கடாஜலபதி காலை ஆறு மணிக்கே பு.மா.இ.மு அலுவலகத்திற்கு தொலைபேசி செய்துவிட்டார். “முற்றுகை எல்லாம் வேண்டாம், கல்வித்துறை இயக்குநரை சந்திக்க நான் ஏற்பாடு செய்கிறேன், எனவே முற்றுகையை விலக்கிக் கொள்ளுங்கள்” என்றார். அவருடைய வாக்குறுதிகளை எல்லாம் தோழர்கள் நம்பவில்லை. எனவே திட்டமிட்டபடி காலை 11 மணிக்கு பள்ளிக் கல்வித்துறையின் முன்பு கூடினர். ஆனால் அதற்கு முன்பாகவே போலீசை கூட்டம் கூட்டமாக அங்கே இறக்கியிருந்தனர். இன்னொரு பக்கம் பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
தோழர்களை உள்ளே விடாமல் வாயிலை மறித்து நின்று கொண்டிருந்தது போலீசு. சேத்துப்பட்டு, எழும்பூர், நுங்கம்பாக்கம் ஆகிய மூன்று காவல் நிலையங்களின் ஆய்வாளர்களும், நுங்கம்பாக்கம் துணை ஆணையரும் இவர்களோடு நூற்றுக்கணக்கான போலீசும், சின்னஞ்சிறு பள்ளி குழந்தைகளையும் கல்லூரி மாணவர்களையும் அவர்களுக்கு துணையாக நின்ற பெண்கள் மீதும் எப்போதும் பாய்ந்து பிடுங்குவதற்கு தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது.
துணை ஆணையர் வெங்கடாஜலபதி மீண்டும் தோழர்களிடம் வந்து “இயக்குனரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன், முற்றுகை போராட்டம் வேண்டாம், ஒதுங்கிக் கொள்ளுங்கள்” என்றார். “இயக்குனரை சந்திக்க நாங்களும் தயாராக இருக்கிறோம், சார் வரச்சொல்லுங்கள் பேசுவோம்” என்றார்கள் தோழர்கள். உங்களில் ஐந்து பேர் மட்டும் வாருங்கள் உள்ளே போய் பேசுவோம் என்றார்.
அதற்கு உடனடியாக பதிலளித்த தோழர்கள், “ஐந்து பேர் மட்டும் உள்ளே போய் ரகசியமாக எல்லாம் பேச முடியாது. மாணவர்கள், பெற்றோர்கள் என்று மக்கள் அனைவர் முன்பும் பேச வேண்டும் எனவே அவரை கீழே வரச்சொல்லுங்கள் மக்கள் அவரோடு பேசுவார்கள்” என்றார்கள். தனியாக கூட்டிச்சென்று சமரசம் செய்துவிடலாம் என்பதற்கான போலீசின் முயற்சிகளை எல்லாம் தோழர்கள் முறியடித்தனர்.
அடுத்ததாக வாயிலுக்கு முன்பாக காவல் துறை வாகனங்கள் அனைத்தையும் கொண்டு வந்து நிறுத்தினர். உள்ளே நுழைய முடியாதபடி வாயிலை சுற்றி பாதுகாப்பு அரணை அமைத்தனர். உள்ளே நுழைய காத்திருந்த தோழர்கள் முழக்கமிட்டபடியே அந்த அரணை மீறி வாயிலை நோக்கிச் செல்ல முயன்ற போது, அதற்காகவென்றே காத்திருந்த போலீசு கும்பல் தோழர்கள் மீது பாய்ந்து குதறியது. எதிர்த்து நின்ற தோழர்களை கடுமையாக தாக்கி முன்னேற முடியாதபடி அங்கேயே தடுத்து நிறுத்தி தனது வெறியாட்டத்தை துவங்கியது.
டிபிஐ-முற்றுகை-மாணவர்கள்-தோழர்கள் மீது-போலீசு-கொலைவெறி தாக்குதல்
குழந்தைகள், சிறுவர்கள் என்று கூட பாராமல் அவர்களின் பிஞ்சு கைகளையும் கால்களையும் பிடித்து போலீசு வெறியர்கள் முரட்டுத்தனத்துடன் சாலையில் இழுத்து வீசினார்கள். எதிர்த்து நின்ற மாணவர்களையும் பெற்றோர்களையும் கைகளை இறுக்கிக் கொண்டு வயிற்றிலும், நெஞ்சிலும் ஓங்கி ஓங்கி குத்தினார்கள். பெண் தோழர்களை லத்தி கம்புகளால் விளாசினார்கள். ஆறு மாத கைக்குழந்தைகளோடு வந்திருந்த பல பெண் தோழர்களையும் கூட விட்டுவைக்கவில்லை. வெறி நாய் கூட்டம் போல மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் என்று அனைவர் மீதும் பாய்ந்த போலீசு நாய்கள் கடித்துக் குதறின.
துணை ஆணையர் வெங்கடாஜலபதி நடுவில் நின்று கொண்டு வெறித்தனத்துடன் நாலா பக்கமும் திரும்பி திரும்பி இதோ இவனை அடி, அதோ அவனை அடி, அவளை அடி, கையை உடை, காலை உடை என்று ஒரு ரவுடியை போல கத்திக் கொண்டிருந்தார். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் இரண்டு பெண் தோழர்களுக்கு பலத்த அடிபட்டதால் கடுமையான நெஞ்சு வலியால் அங்கேயே மயங்கி விழுந்தனர். ஆஸ்த்மா நோயாளியான ஒரு தோழரின் நெஞ்சிலேயே ஓங்கி ஓங்கி குத்தியதால் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவரும் மயக்க நிலைக்குச் சென்றார். இன்னொரு தோழரின் உயிர்நிலையில் பூட்ஸ் கால்களால் ஒரு போலீசு பொறுக்கிநாய் ஓங்கி உதைத்ததில் அவர் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். இவர்களோடு மேலும் ஒரு தோழர் மோசமாக தாக்கப்பட்டிருந்தார்.
கடுமையான தாக்குதலுக்குள்ளான இந்த ஐந்து தோழர்களையும் போராட்டக்களத்திலிருந்து KMC மருத்துவமனைக்கு பிற தோழர்கள் எடுத்துச் சென்றனர். இன்னொரு பக்கம் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.
போராடுவதற்கான ஜனநாயக உரிமைகளை மறுத்து மனிதத்தன்மையற்ற முறையில் தடியடி நடத்தி வெறியாட்டம் போட்ட போலீசை கண்டித்து மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் மில்டனும், சக்தி சுரேஷும் உடனடியாக அங்கு வந்தனர். அவர்கள் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே அவர்களையும் தாக்கியது பாசிச ஜெயாவின் விசுவாச நாய்கள். சுற்றி நின்று கொண்டிருந்த பத்திரிகையாளர்களின் காமராக்கள் அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருந்தன.
இந்த தாக்குதலை கண்டித்து தோழர்கள் அனைவரும் அடுத்தபடியாக கல்லூரி சாலையை மறித்துக் கொண்டு உட்கார்ந்தனர். முற்றுகைப் போராட்டம் மறியலாக மாறியது. ஆனால் அதற்கும் அனுமதி மறுத்த போலீசு உட்கார்ந்துகொண்டிருந்த தோழர்களை தரதரவென இழுத்துச் சென்று போலீசு வண்டிகளில் ஏற்றியது. தோழர்கள் ஏற மறுத்து அடம்பிடித்த போது மீண்டும் கைகளை குவித்து பலங்கொண்ட மட்டும் குத்தி மூச்சு முட்டச் செய்து வண்டிக்குள் திணித்தனர். மொத்த தோழர்களையும் பள்ளிக்கல்வித் துறை வளாகத்தைவிட்டு அப்புறப்படுத்தி கல்விக் கொள்ளையர்களுக்கு துணைபோகும் அரசுக்கு விசுவாசமாக வெறியாட்டம் போட்டது பாசிச ஜெயாவின் போலீசு.
தோழர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அடுத்து பத்திரிகையாளர்களையும் விட்டு வைக்கவில்லை. துணை ஆணையரிடம் கேள்வி கேட்கச் சென்ற வின் டி.வி யின் நிருபரை முரட்டுத்தனத்துடன் தாக்கிக் கீழே தள்ளிவிட்டனர். இதை கண்டித்து அவர்கள் ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தற்போது நூற்று இருபத்நு ஐந்து தோழர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள APVP திருமணமண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் குழந்தைகளும் பெண்களுமாவர். இவர்களுடன் மாணவர்களும் பெற்றோரும் உள்ளனர். காலையில் கைது செய்யப்பட்ட தோழர்கள் இந்த நிமிடம் வரை விடுவிக்கப்படவில்லை.
திருமணம் நடக்கின்ற மண்டபத்தில் தற்போது அரங்கக்கூட்டம் கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறன ! ஆம் திருமண மண்டபத்தை நமது தோழர்கள் பிரச்சார மேடையாக்கி வருகின்றனர். மண்டபத்திற்குள் நுழைந்ததுமே அமைப்பு கொடிகளையும் பதாகைகளையும் கட்டி ஒரு பொதுக்கூட்டம் நடக்கின்ற இடத்தை போல மண்டபத்தை மாற்றியமைத்து விட்டனர்.
தோழர்கள் அனைவரும் சிறை வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்தபடியே நடந்திருக்கிறது. சைதை நீதிபதி முன் ஆஜர் செய்து சிறையில் அடைத்து விட்டார்கள்.  ஆனால் மத்திய, மாநில ஆட்சிகளில் அதிவேகமாக அமல்படுத்தப்படும் கல்வி தனியார் மயத்தை எதிர்த்து தோழர்கள் தொடர்ந்து போராடுவார்கள். இந்த தடியடியும், சிறையும் அவர்களை அசைத்து விடாது. அணிதிரளும் மக்களையும் தடுத்து விடாது.

- புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

June 27, 2012

தனிநபர் பகுத்தறிவாதம்

நண்பனின் மூத்த சகோதரியின் கணவர் 'ஹார்ட் அட்டாக்கால்' திடீரென இறந்தார்.  நண்பனுடன் இறப்பு நிகழ்வுக்கு போயிருந்தேன்.  இறந்தவருக்கு பிள்ளைகள் இல்லை. அவருடைய மனைவியின் சகோதரியின் பிள்ளையை வைத்து, எல்லா சடங்குகளும் 'குறைவின்றி' செய்தார்கள்.

இதில் நகை முரண் என்னவென்றால், தன் வாழ்நாள் முழுவதும் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் கடுமையாக எதிர்த்தவர் அவர்..  தமிழக அரசின் போக்குவரத்து துறையில் குமாஸ்தாவாக சேர்ந்து, ஓய்வு பெறும் பொழுது, சூப்பரின்டடாக (Supt.)  வெளியேறினார்.  எந்த அமைப்பிலும் இல்லை.  குடும்பங்களில், உறவுகளில் தன் கருத்துக்கு  யாரையும் வென்றெடுக்கவும் இல்லை.

கொஞ்சம் யோசித்திருந்தால், தன் இறப்பிற்கு பிறகு சடங்குகளற்ற முறையில் தான் அடக்கம் செய்யவேண்டும் என உயில் போல எழுதி வைத்திருக்கலாம் அல்லது நெருங்கிய மரியாதைக்குரிய உறவுகளிடம் தனது ஆசையை நிறைவேற்ற சொல்லி தெரிவித்திருக்கலாம்.  நான் கவனித்தவரையில் சாவை எதிர்கொள்ளும் பக்குவம் தமிழ் சமூகத்திற்கு வரவில்லை எனலாம்.

தனிநபர் பகுத்தறிவுவாதத்திற்கு ஏற்பட்ட உதாரணம் இது!

June 22, 2012

ஆணாதிக்க ஒடுக்குமுறை!

நேற்றிரவு 11 மணி துவங்கி 12 மணி வரை டிஸ்கவரி தமிழ் சானலில் பெண்கள் எவ்வாறெல்லாம் ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்படுகிறார்கள், பெண்கள்  தங்களுடைய அரசியல் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் எப்படியெல்லாம் போராடினார்கள் என்பதை ஒரு நிகழ்ச்சி மூலம் போராடினார்கள் என்பதை விளக்கினார்கள். நிகழ்ச்சியின் இடையில் இருந்து தான் பார்த்தேன்.

பெண் தெய்வ வழிபாடு துவங்கி, சதி, உடன்கட்டை ஏறுதல்,பர்தா அணிதல், பெண்களுக்கு சுன்னத், பிறப்புறுப்புக்கு பாதுகாப்பு சாதனம் என பல விசயங்களையும் அலசினார்கள்.

அதில் ஒன்றிரண்டு சொல்லவேண்டுமென்றால்...

"கிறித்துவ முறைப்படியான திருமணத்தில் இரண்டாம் விரலில் மோதிரம் அணிவதற்கான காரணம், அந்த விரல் மற்ற விரல்களை போல சுதந்திரமாக இயங்க முடியாது என்பதால் தான்!"

தேன்நிலவு காலம் 4 வாரம் என்பதற்கு முக்கிய காரணம்! ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் காலத்திற்கான சராசரியான இடைவெளி 4 வார காலம்.  தன்னுடைய கருதான் தன் மனைவியின் கருவில் வயிற்றில் உருவாகிறது எனப்தை உறுதிப்படுத்துகிறது.

- இப்படி பல தகவல்கள்!

இவற்றை வரலாற்று ரீதியாக விளக்குவதில், ஆண், பெண் அரசியல் என்பதாக இருந்தது.  மார்க்சிய கண்ணோட்டம் இல்லை என்பது குறை!

டிஸ்கவரி நம்ம ஊர் விஜய் டிவி போலதான், மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவார்கள்.  கண்டிப்பாய் பாருங்கள்!

June 19, 2012

மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழும்! நம்மிடம் பணம் இருக்காது!

ஒவ்வொரு ஆண்டும் மின்சாரத்தின் விலையை ஏப்ரல் 1க்கு முன்பாக மாநில அரசுகள் விலையை நிர்ணயம் (ஏற்ற) வேண்டும். இல்லையெனில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம் கேட்கும்!

-  தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி கற்பக விநாயகம்.- தினத்தந்தி - 18/06/2012

கடந்த ஏப்ரலில் மின்சார விலையை தாறுமாறாக ஏற்றிய பொழுது, 'இந்த விலை ஏற்றம்  இன்னும் ஓராண்டு தான் அமலில் இருக்கும்!' என்ற செய்தியை எத்தனை பேர் கவனித்தோமோ தெரியவில்லை.  இந்த தாறுமாறான விலை உயர்வுக்கு காரணம் கட்ந்த 7 வருடங்களாக விலையை ஏற்றவில்லை என காரணம் சொல்கிறார்கள்.  அப்பட்டமான பொய். 

மின்சாரம் தனியார்மயமானது தான் காரணம்.  ஒரு யூனிட் ரூ. 17வரை தனியாரிடம் கொள்முதல் செய்ததும், ஊக சந்தையில் அனுமதித்ததும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை விலையில் ரூ. 3.50க்கு தருவதும் தான் மின்சார வாரியம் ரூ.50000 கோடிக்கு மேல் கடன்பட்டதற்கு காரணம்.

ஒப்பந்தம் போட்டுவிட்டதால், பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை ஏற்றமுடியாது என்கிறார்கள்.  ஒப்பந்தம் போடாமல் வாக்கு அளித்த மக்களுக்கோ, தண்டனையாக மேலும் மேலும் சுமை ஏற்றுகிறார்கள்.

ஜெயலலிதா அடிக்கடி சொல்வது போல, தமிழகம் மிகை மின்மாநிலமாக மாறும். அவர்கள் மின்சாரம் தர தயாராக இருப்பார்கள்.   நம்மிடம் தான் வாங்குவதற்கு காசு இருக்காது.   ஆகையால், மின்சார ஒழுங்குமுறை வாரியத்தை ஒழித்துக்கட்ட போராட்டங்களை நாடு முழுவதும் கட்டியமைக்கவேண்டும்.

June 8, 2012

டாஸ்மாக் கடையை இழுத்து மூடுவோம்! ஆர்ப்பாட்டம்!

உழைக்கும் மக்களே!

டாஸ்மார்க் போதையால்
சாவது மக்கள், அழிவது குடும்பம்
கல்லாவை நிரப்புவது தமிழக அரசு!

தமிழர் குடும்பங்களின் தாலி அறுத்து
இலவசத்தால் ஏய்க்குது ஓட்டுக்கட்சிகள்!

கல்வி - மருத்துவம் - வேலை இல்லை.
வீதிக்கு 4 டாஸ்மார்க் கடைகளா?

சாரயத்தால் மானம் இழந்தது போதும்
பெண்களின் வாழ்க்கை அழிந்தது போதும்
இலவசங்களில் நாம் கொடுத்தது போதும்.

வீதியில் இறங்கிப் போராடுவோம்.
நாளை நமது வாழ்க்கை வேண்டுமா?
டாஸ்மாக் கடையை
இன்றே இழுத்து மூடுவோம்!

- பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை

தொடர்புக்கு : 98416584578