> குருத்து: May 2012

May 17, 2012

தோழர் சீனிவாசனுக்கு இரங்கல் உரை - தோழர் மருதையன்

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் இன்று (5.5.2012, சனிக்கிழமை) காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 61. எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்தே அவர் நக்சல்பாரி புரட்சிகர அரசியலின் ஆதரவாளராக இருந்து, பின்னர் அமைப்பு நடவடிக்கைகளில் தன்னை இணைத்துக் கொண்டார். அமைப்பு நடவடிக்கைகளிலும், புரட்சிகர அரசியலின் மீதும் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக, அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வில் விடுபட்டு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையாக அமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். மகஇக மாநிலப் பொருளாளராகப் பணியாற்றியது மட்டுமின்றி, பல்வேறு போராட்டங்களிலும் முன்னணிப்பாத்திரம் ஆற்றி, பல முறை சிறை சென்றிருக்கிறார்.

இன்று காலை அவரது வாழ்க்கை முடிவுற்றது. ஒரு விபத்தைப் போல புற்று நோய் அவரைத் தாக்கியிருக்காத பட்சத்தில், தன் வாழ்நாள் முழுவதும் தன்னை அமைப்புப் பணியில் அவர் ஈடுபடுத்திக் கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக புரட்சிகர அரசியலில் தோளோடு தோள் நின்று ஓய்வின்றி உழைத்த தோழர் சீனிவாசனுக்கு, கனத்த இதயத்துடனும் கண்ணீருடனும் விடைகொடுக்கிறோம். தோழர் சீனிவாசனுக்கு எம் சிவப்பஞ்சலி.

- வினவு

*****
தோழர் சீனிவாசன் அவர்களுடைய இறுதி ஊர்வலம் மே 6 ஞாயிறு காலையில் நடைபெற்றது. அதற்கு முன்பாக ம.க.இ.க வின் தோழர்களும், அதன் தோழமை அமைப்பைச் சேர்ந்த தலைமையில் உள்ள தோழர்கள் தோழரைப் பற்றி இரங்கல் உரை ஆற்றினார்கள்.  இறுதியில் ம.க.இ.க.வின் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் 15 நிமிடம் இரங்கல் உரை ஆற்றினார்.
அதன் முழு உரையும் கீழே தரப்பட்டுள்ளது.

****

தோழர் சீனிவாசன் நக்சல்பாரி அமைப்புக்கு அறிமுகமாகி கடந்த 30 ஆண்டுகாலமாக அறிமுகமாகி செயல்பட்டுவருபவர்.  எனக்கு முன்னால் இரங்கல் உரை ஆற்றிய பல தோழர்கள் குறிப்பிட்டதுபோல, சீனிவாசன் என்றால் சுறுசுறுப்பு; சீனிவாசன் என்றால் துணிவு; தயக்கமின்மை.  இதெல்லாம் மிகையல்ல!

அவருக்கு வயது 61.ஆனால் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில செயற்குழுவிலே என்னைவிட வயதில் மூத்த தோழர் அவர்.  ஆனால், மாநில செயற்குழுவில் இளைஞர் அவர் என சொல்லலாம். ஒரு பதின்பருவத்து இளைஞனைப்போல எப்பொழுதும் பரபரப்பாக சுறுசுறுப்பாக இருப்பது என்பது அவருடைய பண்பு.  அவருடைய இயல்பு.  போற்றத்தக்க ஒரு முன்னுதாரணம். பல சந்தர்ப்பங்களிலே பள்ளிச்சிறுவர்களை கண்டிப்பது போல நான் அவரை கண்டித்திருக்கிறேன்.சின்ன பையன் போல நடந்துகொள்வது; பரபரப்பாக இருப்பது; அவசரப்பட்டு வேலை செய்வது!

இன்று தோழர் சீனிவாசன் உறங்கும் நிலையில், மறைந்த நிலையில் சவப்பட்டியில் படுத்திருக்க, தோழர்கள் எல்லாம் அவருடையை நினைவைப் போற்றி பேசுகிறோம்.  பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர இயக்கங்களில்  எல்லாமே மற்ற ஓட்டுப்பொறுக்கிகளை போல, வாழ்கின்ற காலத்திலே மேடை போட்டு, மணிவிழா, வெள்ளிவிழா, பொன்விழா நடத்தி புகழச் சொல்லி கேட்டுகொள்வது என்பது கிடையாது.

வாழ்கின்ற காலத்தில் எல்லாம் கம்யூனிஸ்டுக்கு கிடைப்பது என்னவென்றால் தாங்கள் செய்த வேலைகளைப் பற்றிய பரிசீலனை; தங்கள் வேலைகள் மீதான விமர்சனம்; குறைகள் குறித்த இடித்துரைகள்; அதைக்கேட்டு மாற்றிக்கொண்டு முன்னேறுவது; இன்று அவர் தன் மீது ஆற்றப்படுகிற புகழுரைகளை கேட்க முடியாத நிலை.  அவருடைய நற்குணங்களை பற்றி; ஆற்றல்களைப்பற்றி இங்கு தோழர்கள் புகழ்ந்து பேசுகிறார்கள்.  இது வரலாறு முழுவதும் மக்களுக்காக போராடிய அனைவருக்கும் நிகழ்கின்ற ஒரு விசயம்.  வாழும் பொழுது அப்படி முதுகு சொறியப்படுவதை உண்மையான போராளிகள் விரும்புவதில்லை.

தோழரை சீனிவாசனை பொறுத்தவரையிலே கடந்த ஆண்டு ஜனவரி இறுதியிலோ அல்லது பிப்ரவரி துவக்கத்தில் அவருக்கு ராயப்பேட்டை மருத்துவமனையில் கணையப்புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.  கணையப் புற்றுநோய் என்பது ஒரு ஆட்கொல்லி நோய். உலக அளவில் இதுவரை தீர்வு காணப்படவில்லை.  இது தெரிந்த பிறகு புற்று நோய் மருத்துவர்களிடம் விசாரித்த பிறகு இதற்கு அதிகப்பட்ச வாழ்நாள் என்பது கண்டறியப்பட்ட நாளிலிருந்து 5 அல்லது 6 மாதங்கள்.  விதிவிலக்கான வாய்ப்புகளில் 10 மாதங்கள் என்றார்கள்.

அதற்கு பிறகு இதற்கான மருத்துவத்தை மேற்கொண்டோம்.  ஆங்கில மருத்துவமும், சித்த மருத்துவம் உள்ளிட்டு மாற்று மருத்துவ முறைகளை இணைத்து மேற்கொண்டோம். ஒருவகையில் பொதுவாக கணையப் புற்று நோயாளிகள் வாழும் காலத்தை விட அதிகமாக 1 1/4 ஆண்டுகள் வரை தோழர் சீனிவாசன் வாழ்ந்திருக்கிறார் என்றால் எனக்கு தெரிந்த வரையிலே அதற்கு இரண்டு காரணங்கள்.  ஒன்று. அமைப்பு, அமைப்பின் மீதான அவருடைய ஈடுபாடு; அதன் வழியாக அவர் பெற்ற நெஞ்சுரம்; அதனால் கிடைத்த மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை.  இரண்டாவது அவர்மீது தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி மருத்துவம் பார்த்த மருத்துவர் சிவராமன்.  இந்த இரண்டு காரணங்களினாலேயே அவருடைய வாழ்நாளை ஒன்னேகால் ஆண்டு நீட்டிக்கமுடிந்தது.

புற்றுநோய் என கண்டறியப்பட்டதுமே மரணம் நிச்சயம் என அவருக்கும் தெரியும்; எங்களுக்கும் தெரியும். இராஜீவ் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டவர்களுக்கு அது தொடர்பாக ஒரு வாதத்தை எழுப்புகிறார்கள் அல்லவா!  மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியின் கருணை மனுவை தள்ளிப்போட, தள்ளிப்போட அது அவர்களுக்கு துன்பத்தை அளிக்கிறது என்று ஒரு கோணத்திலே இப்படி அணுகவேண்டும் என மேல்முறையீட்டு மனுவைப்பற்றி பேசும்பொழுது சொல்வார்கள்.

தோழர் சீனிவாசன் ஒன்னேகால் ஆண்டு காலமாக மரணம் நிச்சயிக்கப்பட்ட கைதியைப் போலத்தான் வாழ்ந்தார்.  நாங்களும் அவருடைய மரணத்தின் நாள் தெரியாதே தவிர மரணம் உறுதி என்பது தெரியும்.  இப்படியான ஒரு உறவில், திடீரென உடல்நிலை மோசமாகும்; பிறகு சில மருத்துவங்கள் செய்வோம்.  பிறகு உடல்நிலை கொஞ்சம் மேம்படும்.  அதாவது  நிச்சயமாக தோற்கப்போகிறோம் என தெரிந்த ஒரு போரில் அவ்வப்பொழுது கிடைக்கும் முன்னேற்றங்களையே வெற்றியாக நினைத்து மகிழ்ந்துகொண்டிருந்தோம்.  ஆனால் தோழரை பொறுத்தவரையில் மரணம் நிச்சயிக்கப்பட்டவரை போல நடந்துகொள்ளவில்லை. இது புகழுரை அல்ல!

அதற்கு பின்னரும் கூட வழக்கமான சுறுசுறுப்புடன் அமைப்பு பணிகளை செய்ய முடியவில்லை என்றாலும், எனக்கு வேலை கொடுங்கள் என கேட்டுக்கொண்டே இருந்தார்.  அவரால் என்ன முடியுமோ அதற்கு தகுந்தபடி சில வேலைகள் தந்தோம். அவரால் செய்யமுடியவில்லை.  அதன்பிறகு, அமைப்பினுடைய கூட்டங்களில் கலந்துகொள்ள கூறுவது; தோழர் கோவன் என்னிடம் பேசும்பொழுது சொன்னார்.  சில மாதங்களுக்கு முன்பு கூடங்குளம் தொடர்பாக நடந்த கூட்டத்தில் , அந்த போராட்டத்தில் கலநதுகொண்டவரை போல தோழர் சீனிவாசன் கருத்து சொல்லியிருக்கிறார். நாளைக்கு சாகப்போகும் ஒரு மனிதனுக்கு மரணம் குறித்தான நினைவு தன் குடும்பம் குறித்தான கவலைகள் தான் மேலோங்கியிருக்கும்.  அப்படி இல்லாமல் அமைப்பு வேலைகளில் மிகுந்த ஈடுபாட்டைக் காட்டினார்.

அவருக்கு மருத்துவம் பார்க்க சென்ற பொழுது, புற்றுநோய் மருத்துவர் சொன்னார்.  ஓராண்டுக்கு முன்பே ஒரு அறுவை சிகிச்சை செய்திருக்கலாம்.  அந்த அறுவை சிகிச்சைக்கு 50 லட்சங்கள் செலவாகும். அவர் பிழைத்திருக்க வாய்ப்புண்டு என சொன்னார்.  அவர் பிழைப்பதற்கு வாய்ப்பு இல்லை என அவருடைய சக மருத்துவர்கள் சொன்னார்கள் என பட்டியலிட்டு காண்பித்தேன்.  அதற்கு அவர் "நீங்கள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் என்கிறீர்கள்.  ஒரு சதவிகித வாய்ப்பு இருந்தாலும் முயற்சி செய்து பார்த்திருக்க வேண்டாமா!" என்றார். ஆனால், அந்த ஒரு சதவிகிதத்தின் விலை பல லட்சங்கள்.  அதிலும் உத்தரவாதம் கிடையாது. அதை விட்டுவிடுவோம்.

இதில் மருத்துவர் சொல்லும் செய்தி முக்கியமானது.  ஒரு சதவிகித வாய்ப்பு இருந்தாலும், முயற்சித்திருக்கவேண்டாமா  என ஒரு மருத்துவர் ஆலோசனை வழங்குகிறார்.  இப்படிப்பட்ட புரட்சிகர அரசியலில் ஈடுபடும் பொழுது இந்த கருத்துக்கு ஆதரவானவர்கள் கூட எப்படி சிந்திக்கிறார்கள் என்றால் புரட்சி நடக்குமா? என் வாழ்நாளில் நடக்குமா?  எத்தனை வருடத்தில் நடக்கும்?  அதற்காக நான் இப்பொழுது இழக்க வேண்டுமா?  வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம்.  ரயில் வரும்பொழுது ஏறிக்கொள்ளலாம் என்று சிந்திக்ககூடியவர்கள் மிக அதிகம் பேர்.

நியாயம் என கருதினாலும் ஏற்க தயங்குவதற்கு மிக முக்கிய காரணம். கருத்தெல்லாம், கொள்கையெல்லாம் நல்ல கொள்கை தான்.  ஆனால் அது இப்பொழுது நடக்ககூடியதாக தெரியவில்லை. அதனால் இருக்கின்ற வாழ்க்கையை இழப்பதற்கு நான் தயாரில்லை என்பது தான் பலரின் மனநிலை.  அமைப்பில் செயல்படுகின்ற தோழர்களின் மனநிலைகூட சில சொந்த செளகரியங்களை விட்டுக்கொடுப்பது தொடர்பாக வரக்கூடிய பலவீனங்கள் இந்த அடிப்படையிலிருந்து தான் எழுகின்றன.  ஆனால், தோழர் சீனிவாசனை பொறுத்தவரையிலே 1991, 1992ல் மின்சார வாரியத்தில் பணியாறி வந்தார்.  அப்பொழுது அவருக்கு வயது 39 இருக்கலாம்.  திடீரென்று வேலையை விருப்ப ஓய்வுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு வந்துவிட்டார்.  யாருக்கும் தெரியாது.  அமைப்பு தோழர்களுக்கு கூட தெரியாது. அவருடைய இரண்டு குழந்தைகள் ஆரம்ப பள்ளியிலேயே படித்துகொண்டிருக்கிறார்கள்.  "இவங்களோடு யாருங்க மாரடிக்கிறது!" என பதிலளித்தார்.  இப்படி அரசு பணியை உதறுவது என்பது அரிதானது.  இது அவரது இயல்பு என சொல்லலாம்.  அந்த இயல்பு எங்களோடு கொண்டுவந்து சேர்த்தது.

தோழரைப் பொறுத்தவரையில் 1983ல் எனக்கு அறிமுகம்.  கோவையில் மகஇகவின் கிளை துவங்கிய காலத்தில், அவரும் நானுமாக சென்று கோவை பேருந்து நிலையத்திற்கு எதிரே இருந்த குடிசைப்பகுதியிலே கூட்டம் நடத்தினோம்.  அதன் பின்னர் சென்னை வந்தபிறகு 1991-96 தமிழக சூழ்நிலையில் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டம்.  ராஜீவ்காந்தி கொலையை ஒட்டி, அதனை முன்வைத்து ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார்.  அந்த காலத்திலே தமிழகத்தில் நடந்த ஒரு பாசிச காட்டாச்சி.  அப்பொழுது  புதிய கலாச்சாரம் பத்திரிக்கையிலே தொடர்புக்கு சீனிவாசன், 41, செங்குன்றம் சாலை, வில்லிவாக்கம் என இருக்கும்.  அங்கு ஒரு சிறிய வீடு. அங்கே தான் குடும்பமாக வாழ்ந்தார்.  அமைப்பு முகவரியாக கொடுத்து,  ஒரு நெருக்கடியான காலகட்டத்திலே அங்கு வாழும் பொழுது, தோழர்கள் அந்த நெருக்கடியான நிலையை தோழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.  அவர்களுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை ஒன்று கிடையாது.  இருபத்து நாலு மணி நேரமும் ஆள்கள் வந்து கொண்டே இருப்பார்கலள்.  ராத்திரி 12 மணிக்கு கூப்பிட்டு போனில், "என்னடா இப்படி எழுதியிருக்கிறீர்கள்? கொழுப்பா?!" என திட்டுவார்கள். வாசலில் சந்தேகப்படக்கூடிய நபர்கள் நடமாடுவார்கள்.  நிரந்தரமாக ஒரு போலீஸ் அவுட்போஸ்ட் போல உளவுத்துறை போலீஸ் வீட்டுவாசலில் நின்றுகொண்டே இருக்கும்.    இத்தனையும் தாண்டி, இதைப்பற்றியெல்லாம் ஒரு புகாராக கூட எப்பொழுதுமே சொன்னதில்லை. இதனால் தனது தனிப்பட்ட வாழ்வை இழந்துவிட்டேன் என ஒரு நாளும் சொன்னதில்லை.  மனைவி மக்களுடன் தனியாக இருக்ககூடிய வாய்ப்பு; அதெல்லாம் போய்விட்டது என குறைப்பட்டு கொண்டது கூட கிடையாது.

இந்த காலத்திலே பலமுறை சிறை சென்றிருக்கிறார்.  அதற்கு பிறகு வரிசையாக நடைபெற்ற போராட்டங்கள் கருவறை நுழைவுப் போராட்டம் முதல் எல்லா போராட்டங்களிலும் பல தோழர்கள் குறிப்பிட்டது போல  ஒரு போராட்டம் என்றால் சீனிவாசன் அங்கு முன்னாலே போய்விடுவார்.  எல்லாம் முடிந்த பிறகும், கடைசியாய் கிளம்புகிறவரும் அவரே!  மாநாடு என்றால், ஒரு கல்யாண வீட்டின் கடைசி வேலைகள் பார்ப்பது போல எல்லாவற்றையும் கணக்குப் பார்த்து, வேலைகளை முடித்துவிட்டு, நான்கு நாட்கள் கழித்து ஊருக்கு திரும்புவார்.  ஒரு போராட்டமாக இருந்தால் அதற்காக ஒரு மாத காலம், இரு மாத காலம் முன்பே போய் தங்குவது; அதை அவர் ஒரு பொருட்டாக கருதியதே இல்லை. தோழர் முகுந்தன் சொன்னது போல, "சீனிவாசன், திருநெல்வேலியில் ஒரு பிரச்சனை  என்றால்... சரி கிளம்புகிறேன் தோழர்" என்பார்.  எனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது.  ஒரு வேலை இருக்கிறது.  இன்றைக்கு முடியாது.  நாளை கிளம்புகிறேன் என அவர் சொன்னது இல்லை.  நாள்கணக்கில் தங்குவது குறித்தும் அவர் பொருட்டாக கருதியதும் இல்லை.  தோழர் இராஜு சொன்னது போல, ஒரு எல்லை கடந்த மனிதர் என்பதும் உண்மை.  எந்த ஊராக இருந்தாலும் தனது சொந்த ஊர் போல நடமாடிக்கொண்டு இருப்பார்.  அப்படி அதை இயல்பாக எடுத்துக்கொள்ளும் பண்பு.

இதெல்லாம் நிறைகள் என்றால், குறைகள் இல்லை என்ற பொருள் அல்ல!  ஆனால் அவருடைய பாத்திரத்தை புரிந்துகொள்ளவேண்டும் என்றால், இன்றைக்கு மகஇகவும், அதன் தோழமை அமைப்புகளும் மா.லெ. அரசியலனுடைய ஒரு மக்கள் திரள் சக்தியாக, தமிழகத்தில் எழுந்து நிற்கிறது என சொன்னால்,  அது ஏறத்தாழ 35 ஆண்டுகளுடைய கடுமையான போராட்டத்தின் விளைவு. 80, 83 காலத்தில் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து ஏறத்தாழ 1990 வரையிலே பெறும் வெடிகுண்டு, பொய்வழக்குகள்.  அது இங்கு இருக்கும் எல்லோருக்கும் பொருந்தும். அதன்பின்னர் 90க்கு பிறகு, கருவறை நுழைவுப் போராட்டம்; இறால் பண்ணை அழிப்பு போராட்டம் ; விநோதகன் மருத்துவமனை போராட்டம்; மான்சாண்டோ எதிர்ப்பு என பல போராட்டங்கள் மூலமாக ஒரு அரசியல் ரீதியான சக்தியாக, இயக்கமாக ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் தமிழகத்திலே நிலைபெற்றன.

அப்படி, இந்த அரசியலை நிலைநிறுத்துவதற்கு போராடிய, இன்றைக்கும் போராடி வருகின்ற தோழர்கள் ஏராளமான பேர்.  தோழர் சீனிவாசனையோ அல்லது என்னைப் போன்றவர்களையோ உங்களுக்கு தெரியலாம்.  ஆனால், முகம் தெரியாத தோழர்கள் பல அடித்தளத்திலே இருக்கின்றனர்.  கோட்டையை போல கட்டியமைத்திருக்கின்ற இந்த மா.லெ. அரசியல் இயக்கம் முகம் தெரியாத செங்கற்கற்களாக பல தோழர்கள் இருக்கிறார்கள்.  அப்படி இந்த இயக்கத்தை உருவாக்கிய கற்களிலே ஒரு முக்கியமான கல் தோழர் தோழர் சீனிவாசன்.   இந்த போராட்டங்கள் காரணமாக அமைப்புக்கு ஒரு கெளரவம் கிடைத்திருக்கிறது என்றால், இந்த போராட்டங்கள் காரணமாக மக்கள் மத்தியிலே அமைப்புக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றால் அது பல தோழர்களின் பங்களிப்பு இருக்கிறது.  தோழருடைய பங்களிப்பு அதில் குறிப்பிடத்தக்கது.

இந்த போராட்டங்கள் அனைத்திலும் கைது ஆவதற்கும், சிறை செல்வதற்கும், பிரச்சனையை எதிர்கொள்வதற்கும் அவர் ஒரு பொருட்டாக கருதியது இல்லை.  தஞ்சையில் தமிழ்மக்கள் இசைவிழாவை ஆண்டு தோறும் நடத்திவருகிறோம்.  அது திருவையாற்றிலே தமிழ் தீட்டுக்கு எதிராக நடைபெறுகின்ற விழா.  அங்கு திருவையாற்றிலே தியாகய்யர் விழாவில், தமிழில் பாட தடை விதித்திருக்கின்ற இடத்திலே ஒரு போராட்டம்.  அது தோழர் சீனிவாசன் தலைமையில் தான் நடந்தது.  அந்த தியாகய்யர் மகோசற்வத்தின் தலைவர் மூப்பனார்.  தோழர் சீனிவாசன் நேரே வெள்ளைச் சட்டை, வேஷ்டியுடன் நேரே போய், மூப்பனார் அருகே போய் அமர்ந்துவிட்டார்.  தோழர்கள் முழக்கங்கள் எழுப்பியவுடன், மூப்பனார் அரண்டுவிட்டார்.  அவர்களை பொறுத்தவரையில் அது பாதுகாப்பு அபாயம்.

அவருடைய மகள் பொற்கொடி வழக்கறிஞராக இருக்குகிறார்.  சுப்பிரமணிய சாமிக்கு எதிராக முட்டை வீச்சு நடைபெற்றது. அந்த போராட்டத்தில் அவருடைய மகள் முன்னணியில் நின்றார். அந்த போட்டோவை பத்திரிக்கையில் பார்த்ததும் அவருக்கு அளவில்லா மகிழ்ச்சி.  இந்த போராட்டத்தினால், அவருடைய வழக்கறிஞர் தொழிலே கூட பறிபோகலாம். கைது செய்யப்படலாம்.  ஆனால், அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தவில்லை.  போராட்டத்தில் முன்னணியில் நின்றது மகிழ்ச்சி அவருக்கு.

அதன்பிறகு, செம்மொழி மாநாடு நடந்த பொழுது,  அதை எதிர்த்து, மதுரை, சென்னையில் வழக்கறிஞர்கள் போராடிய பொழுது, அவருடைய மகள் உண்ணாவிரதத்தில் அமர்ந்து போராட்டத்தில் அமர்ந்த பொழுது அதிலும் அவருக்கு மகிழ்ச்சி.  அப்படி இதிலெல்லாம் மகிழ்ச்சி கண்டவர் என்ற முறையிலே அவர் முன்னுதாரணமிக்க தோழர்.

ஒரு கம்யூனிஸ்ட் என்றால் அவர் எல்லா கோணங்களிலும் எல்லா பரிமாணங்களிலும் பரிசுத்தவானாக தவற்றவராக இருக்கமுடியாது.  தவற்றவராக இருப்பதற்கு நம்மை மென்மேலும் செதுக்கி கொள்ள முயற்சிக்கிறோம்  தனிநபர்களாகவும் முயற்சிக்கிறோம்.  முன்மாதிரி மனிதர்களைப் பார்த்து, மனிதகுலம் பின்பற்றதக்க புதிய முன்மாதிரிகளை உருவாக்குவது என்ற கோணத்திலும் நாம் அதை அணுகுகிறோம்.

தோழர் சீனிவாசனைப் பொறுத்தவரையிலே  குறைகள் பல இருப்பினும் அதையெல்லாம் அதை அமைப்பின் விமர்சனத்திற்கும் அதன்மூலம் அவைகளை களைந்து கொள்ள தன்னை உட்படுத்திகொண்டார்.  அது மிக முக்கியமானது.  குறையும் நிறையும் கலந்த மனிதர்கள் சமூகத்தில் நிறைய இருக்கிறார்கள்.  ஆனால், நீங்கள் செய்வது தப்பு.  எப்படி இது மாதிரி செய்யலாம்? இப்படி சிந்திக்கிறீர்கள்; இப்படி செயல்படுகிறீர்கள் என முகத்திற்கு நேராக சொல்லும் பொழுது கெளரவம் பார்ப்பதும் அல்லது அப்படி சொல்லப்பட்டதற்காக முகத்தை முறித்துகொள்வதும் பரவலாக நடக்க கூடிய காரியங்கள்.  ஆனால், சாதாரண புதிய தோழர் கூட அவரை விமர்சனம் செய்தாலும், அதற்காக அவர் முகத்தை திருப்பிக் கொண்டதோ, கோபப்பட்டதோ இல்லை.  ஒரு தோழருக்கு விமர்சனம் செய்யும் உரிமை உண்டு என்பதை மிக இயல்பாக எடுத்துக்கொண்டவர்.  அப்படி தன்னுடைய தவறுகளை களைந்து கொள்வதில் முன்நின்றார்.  தவறுகளை களைந்துகொண்டு முன்மாதிரி மனிதனாக உருவாவதற்கு, முன்மாதிரி சமூகத்தையும், முன்மாதிரி மனிதர்களையும் உருவாக்குவதற்கு தன் வாழ்நாள் முழுவதும் இந்த அமைப்பில்  அவர் செயல்பட்டவர் என்பது சிறப்பு. 

கொஞ்ச காலம் கம்யூனிஸ்டாக இருக்கலாம்.  ஆதரவாளராக இருக்கலாம்.  அதெல்லாம் எல்லோருடைய வாழ்விலும் நடக்ககூடியது.  கொஞ்சம் புரட்சி பேசலாம். அப்புறம் முடியல தோழர் என்று ரிடையர் ஆகிக்கலாம்.  அப்படி அவர் ரிடையர் ஆகவில்லை.  அப்படி ஓய்வு பெறவில்லை.  தன் இறுதிகாலம் வரை, தன் இறுதிநாள் வரை இந்த அமைப்பு வாழ்க்கையை பிரிக்கமுடியாத சொந்த வாழ்க்கையாக கருதினார்.  அமைப்பு வாழ்க்கை என்பது எல்லோரும் நினைத்துக்கொண்டிருப்பது போல மகிழ்ச்சி அல்ல! மகிழ்ச்சி சில தருணங்களில் மட்டும்!  போராட்டமும், துன்பமும் கவலைகளும் பல நேரங்களில்!  இதை இயல்பாக ஏற்றுக்கொள்வது என்பது தோழரிடம் இயல்பாக இருந்தது.  அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.  அவை கடைப்பிடிக்கவேண்டும் என்ற பற்றுறுதி அவரிடம் இருந்தது.  அந்த வகையில் தோழர் முன்னுதாரணமாக திகழ்கிறார்.  அது செயற்கையாக இல்லாமல், அமைப்பு வாழ்க்கை என்பது சொந்த வாழ்க்கையிலே அங்கமாக கருதினார். 

இப்பொழுது எங்களை எடுத்துக்கொண்டாலும், பொதுவாக தோழரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பது; வருத்தம் சொல்வது என்பது ஒரு மரபு; உண்மை தான் அது.  ஆனால்,வேறொரு கோணத்தில் யோசித்துப் பார்த்தால் அவர் குடும்பத்தோடு இருந்த காலத்தைவிட எங்களோடு இருந்த காலம் அதிகம்.  அந்த வகையில் குடும்ப உறுப்பினர்களை காட்டிலும்  மேலதிகமாக இழப்பை உணர்பவர்கள் நாங்கள்.  ஒன்றரை ஆண்டு காலம் அவர் உயிரை மீட்பதற்காக நடத்திய போராட்டத்தில் அந்த போராட்டத்தின் வெம்மையில்  அவருடைய உடலை புற்றுநோய் அரித்து அரித்து தின்று விழுங்கி எலும்பும் தோலுமாக அவரை ஆக்கிவிட்டதை போல உள்ளேயிருந்த கண்ணீரை எல்லாம் இந்த போராட்டம் உறிஞ்சிவிட்டது.  ஒரு அதிர்ச்சியாக, ஒரு எதிர்பாராத நிகழ்வாக எதிர்கொள்ளக்கூடிய நிகழ்வாக தோழருடைய மரணம் இல்லை.  ஒன்றரை ஆண்டு காலமாக எதிர்பார்த்து, எதிர்பார்த்து துயரங்களை மனதில் தேக்கி தேக்கி அவருடைய குடும்பத்தாராக இருக்கட்டும் அல்லது அவர்களுடைய நெருக்கமான தோழர்களாக இருக்கட்டும் எல்லோருமே கண்ணீர் வற்றியவர்களாக இருக்கிறோம்.  துயரம் மட்டும் எஞ்சி நிற்கிறது. அந்த துயரம் செயலுக்கு மாறவேண்டும்.  இந்த இறுதி ஊர்வல நிகழ்ச்சியிலே இத்தனை ஆயிரம் பேர் பங்கேற்பது என்பதன் பொருள் தோழர் சீனிவாசனுடைய பணி அவரது கனவு! அதை நிறைவேற்றுவதற்கு நாம் எவ்வளவு பங்காற்றுகிறோம் என்பது தான் தோழர் சீனிவாசனுக்கோ அவரை ஒத்த புரட்சிகர தோழர்களுக்கோ செய்யக்கூடிய உண்மையான மரியாதையாக, அஞ்சலியாக இருக்கும்.  அந்த வகையில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும் எங்களுடைய நெடுநாள் தோழருமான தோழர் சீனிவாசனுக்கு பிரியாவிடை கொடுக்கிறோம்  தோழருக்கு செவ்வணக்கம்.

- தோழர் மருதையன்

May 14, 2012

ஜெவின் ஓராண்டு ஆட்சி சாதனையா? வேதனையா?

முதல்வர் ஜெ. ஓராண்டு ஆட்சியை "வெற்றிகரமாக" நடத்தி, சாதனைகள் பல செய்துவிட்டாராம். அதற்காக 234 தொகுதிகளிலும் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்போகிறார்களாம். கொடுமை!

ஆட்சிக்கு வந்து முதலில் போட்ட கையெழுத்து, சமச்சீர் பாடத்திட்டத்தை தடை செய்து, மாணவர்களின் படிப்பை 2 மாதத்திற்கு மேலாக பாழாக்கினார். அப்பொழுது தொடங்கி, கூடங்குளம் அடக்குமுறை, பேருந்துகட்டண உயர்வு, மின்சார கட்டண உயர்வு என அடுக்கிகொண்டே போகலாம். நேற்றைய அறிவிப்பான கூடுதலாக 15% வசூலித்து கொள்ளலாம் என தனியார் பள்ளிகளுக்கு சலுகை காட்டி, பெற்றோர்களை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறார்.

ஆகையால், பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள். கடந்த ஒரு வருடத்தில் ஜெ.வின் காட்டாச்சியை விளக்கி எழுதிய பதிவுகளை எல்லாம், மீண்டும் ஒருமுறை மீள்பதிவு செய்யுங்கள்.மக்களுக்கு நினைவூட்டுவோம்!

ஜெவின் நிர்வாகத்திறன் : கலைகிறது பம்மாத்து - பாகம் 1 - வினவு

ஜெவின் நிர்வாகத்திறன் : கலைகிறது பம்மாத்து - பாகம் 2 - வினவு

May 4, 2012

தோழர் சீனிவாசன் அவர்களுக்கு வீரவணக்கங்கள்!

இன்று காலை 9 மணி அளவில் தோழர் சீனிவாசன் இறந்த செய்தியை தோழர்கள் தெரிவித்தனர்.

தோழர் சீனிவாசன் 70 களின் பிற்பகுதியிலிருந்தே புரட்சிகர அரசியலின் ஆதரவாளர். அமைப்பு, அரசியலின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக, அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வில் விடுபட்டு, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொருளாராகவும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளராகவும்  பொறுப்புக்களை ஏற்று அயராது பணியாற்றியவர்.  ம.க.இ.கவின் போராட்டங்கள், மாநாடுகள், கருத்தரங்குகள் அனைத்திலும் மிகுந்த உற்சாகத்தோடு அவர் பணியாற்றினார். பலமுறை சிறை சென்றிருக்கிறார்.

கடந்த ஓராண்டிற்கும் மேலாக கணைய புற்றுநோயுடன் போராடி வந்தார்.  கணையப் புற்று நோயைப் பொறுத்தவரை அது மற்றெல்லா புற்று நோய்களையும் விடக்கொடியது.  விரைந்து வளரக்கூடியது. அலோபதி மருத்துவம், மாற்று மருத்துவம் சேர்ந்து சிகிச்சை எடுத்துவந்தார்.

மருத்துவம் எடுத்துக்கொண்ட காலத்தில் வலி அவரை வதைத்தாலும், கலக்கமோ, அச்சமோ சிறிதுமின்றி, அமைப்பு நிகழ்ச்சிகள், போராட்டங்கள் பற்றி கேட்டறிந்தார்.  இதழ்களை வாசித்தார். தோழர்களுடன் மகிழ்ச்சியுடன் உரையாடினார்.  இப்படி உறுதியையும், உற்சாகத்தையும் தோழர் வெளிப்படுத்தினார்.

நான் சென்னை வந்த புதிதில் என்னை வந்து பார்த்தவர் தோழர் சீனிவாசன் தான்.  அதன்பிறகு எங்கு, எப்பொழுது பார்த்தாலும் தோழமையுடன் நலம் விசாரிப்பார். அவருடைய இழப்பு அவருடைய குடும்பத்தினருக்கும், ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளுக்கும் மிகப்பெரிய இழப்பு.

அவருக்கு நமது வீரவணக்கங்கள்.  அவருக்கு செலுத்தும் மரியாதை என்பது அவர் கண்ட புதிய ஜனநாயக புரட்சி கனவை நாம் நிறைவேற்றுவதில் தான் இருக்கிறது.