> குருத்து: March 2014

March 26, 2014

சட்டத்தை நீதிபதிகள் மீறலாம்! நாம் மீறக்கூடாதா?



சட்டத்தை நீதிபதிகள் மீறலாம்! பொதுமக்கள் மீறக்கூடாதா? – தமிழை வழக்காடும் மொழியாக்கும் வரை விடாது போராடுவோம்!

அன்பார்ந்த பொதுமக்களே!

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சென்னை உயர்நீதி மன்றத்திலும், உயர்நீதி மன்ற கிளை இருக்கும் மதுரையிலும் வழக்கறிஞர்கள் தமிழை வழக்காடும் மொழியாக்க தொடர் உண்ணாவிரதம், உள்ளிருப்பு போராட்டம் என பலவகைகளில் போராடி வருகிறார்கள்.  

தமிழை வழக்காடும் மொழியாக்கும் கோரிக்கை என்பது வழ்க்கறிஞர்களுக்கான கோரிக்கை என்பதை விட, பொதுமக்களான நமது கோரிக்கை என்பது தான் சரி! நம் வாழ்வில் குடும்பத்திலோ; சொந்தங்களில் மத்தியில் ஏற்படும் சச்சரவுகள் ஏற்படும் பொழுதோ;  ஒரு மாணவன் அரசின் தங்கும் விடுதியில் அடிப்படை வசதிகளுக்காகவோ, தங்களது கல்வி உரிமைக்காகவோ;  ஒரு தொழிலாளி முதலாளியால் வேலையிலிருந்து அநியாயமாக துரத்தப்பட்டாலோ; தொழிலாளிகள் தனது தொழிற்சங்க உரிமைகளுக்காகவோ,   நிலங்களை கையகப்படுத்தும் திட்டங்களினால் ஒரு விவசாயி தனியாகவோ, சக விவசாயிகளுடன் ஒன்று சேர்ந்து போராடும் பொழுது, காவல்துறையினரையும், அதை தொடர்ந்து நீதிமன்றத்தையோ சந்திக்கவேண்டியிருக்கிறது.

நீதிமன்ற நடவடிக்கைகளோ நமக்கு புரியாத ஒன்றாகவும், எப்பொழுதும் அந்நியமாகவே இருக்கிறது.  காரணம்,  கீழமை நீதிமன்றங்களிலும், உயர்நீதிமன்றங்களிலும் ஆங்கிலத்தை வழக்காடு மொழியாகவும் அலுவலக மொழியாகவும் பயன்படுத்துகிறார்கள். 

சுதந்திரம் பெற்றதாய் சொல்லப்படும் இந்த 67 ஆண்டுகளில் தனது குடிமக்களுக்கு இந்த அரசால் அடிப்படை கல்வி கூட கொடுக்கமுடியவில்லை. இதை மத்திய அரசே வெட்கி தலைகுனிந்து வெளிப்படையாக அறிவித்திருக்கிறது.

நம்மில் பெரும்பான்மையான மக்களுக்கு தமிழே எழுத படிக்க தெரியாமல் இருக்கும் பொழுது,  நம் சம்பந்தபட்ட வழக்குகளை வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் ஆங்கிலத்தில் உரையாடுவது அநீதி அல்லவா!

இந்த நிலைக்கு யார் காரணம்? நமது இந்திய அரசியலமைப்பு சட்டப்படியே அந்தந்த மாநிலங்களில் உள்ள ஆட்சி மொழியை உயர்நீதி மன்றத்தில் வழக்காடுவதற்கான மொழியாக்க முடியும்.  அதன்படி, இந்தியாவில் பல பத்தாண்டுகளாக ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், பீகார் மற்றும் மத்திய பிரதேசம் என நான்கு மாநிலங்களில் இந்தியை வழக்காடும் மொழியாக்கியுள்ளனர்.  இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் ஆட்சி மொழியான தமிழையும், மேற்கு வங்கத்தில் ஆட்சி மொழியான வங்காளத்தையும் வழக்காடும் மொழியாக்க கோரி போராடும் பொழுது, மத்திய அரசும், உச்சநீதி மன்றமும் கூட்டு சேர்ந்து கொண்டு தமிழை வழக்காடும் மொழியாக்க தடையை ஏற்படுத்தியிருக்கிறது.

உயர்நீதிமன்றத்தில் த்மிழை மத்திய அரசு தடுத்து நிறுத்தி இருக்கிறது என்றால், கீழமை நீதிமன்றங்களில் தமிழை வழக்காடும் மொழியாக்கமல் தடுத்து தடை போட்டிருப்பது சென்னை உயர்நீதிமன்றம்.

1956ம் ஆண்டில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுது,  தமிழ்நாடு ஆட்சி மொழிச்சட்டப்படி கீழமை நீதிமன்றங்களில் ஆட்சி மொழியான தமிழை வழக்காடும் மொழியாக்க உத்தரவிட்டது. இருபது ஆண்டுகள் ஜவ்வாக இழுத்து, பல போராட்டங்களுக்கு பிறகு குற்றவியல் நீதிமன்றங்களில் 1976ம் ஆண்டும், உரிமையியல் நீதிமன்றங்களில் 1982ம் ஆண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

தமிழ் தெரியாத ஒன்றிரண்டு நீதிபதிகளுக்காக ‘இரக்கப்பட்டு, பெரும்பான்மை தமிழக மக்களின் உரிமைகளையும், உணர்வையும் காலில் மித்தித்து,  1994ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளும் ஒன்று கூடி, தீர்ப்புகளை ஆங்கிலத்திலும் எழுதலாம் என ஒரு தீர்மானத்தை இயற்றி, ஆட்சிமொழி சட்ட்த்தை குப்பையில் போட்டுவிட்டார்கள்.

ஆங்கிலத்தில் வழக்காடுபவன், தீர்ப்பு எழுதுபவன் அறிவாளிஎன்ற பொதுப்புத்திக்கேற்ப ஆங்கிலம் இன்று நீதிமன்றங்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் சகலத்தையும் ஆக்கிரமித்து இருக்கிறது.
இதன் விளைவாக அதிகம் பாதிக்கப்பட்ட்தும், பாதிக்கப்படுவதும் பொதுமக்களாகிய நாம் தான்! வழக்கு விவரங்கள் எதுவுமே தெரியாமல், மந்தைகளைப் போல நீதிமன்றங்களில் வழக்கறிஞர் சொல்வதையே உண்மை எனவும், நீதிபதிகள் தீர்ப்பு எழுதுவதற்கு கட்டுப்பட்டும் வருகிறோம்.

இன்றைக்கும் காலனிய அடிமைப் புத்திக் கொண்டவர்களும், மக்களின் அறியாமையை பயன்படுத்தி, கல்லா கட்டும் வழக்கறிஞர்களும் ஆங்கிலம் தான் சிறந்தது என வாதாடுகிறார்கள். 
சட்டத்தின் ஆட்சி சட்டத்தின் ஆட்சிஎன மூச்சுக்கு முன்னூறு முறை பேசும் மகா கணம் பொருந்திய நீதிபதிகள் தான் ஆட்சி மொழிச் சட்ட்த்த்தை ஒரு தீர்மானத்தின் மூலம் செல்லாகாசாக்கி வைத்திருக்கிறார்கள்.

பொதுமக்களாகிய  நாம் சட்ட்த்தை இம்மி மீறினாலும், காவல்துறையும், நீதித்துறையும் உடனே பொங்கி எழுந்து வழக்குகளை போட்டு, சிறையில் தள்ளுகிறார்கள். படித்த ‘மேன்மக்களாகியநீதிபதிகள் அதை மதிக்க மறுக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் சொல்லும் நீதி “இராஜா மட்டும் குசுவிடலாம்!”

இந்தி திணிப்புக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழகம் பிறகு மெல்ல மெல்ல அடங்கி போனதால், இன்று பள்ளிகளில் ஆங்கிலம், கோயில்களில் சமஸ்கிருதம் எங்கும் பிறமொழி ஆதிக்கம் என மாறிப்போய் தாய்த்தமிழை இழந்து நிற்கிறோம். இந்நிலையை மாற, நீதிமன்றங்களில் போராடிக்கொண்டிருக்கும் வழக்கறிஞர்களோடு கரம் கோர்ப்போம்!

மத்திய அரசே!

உ.பி. உள்ளிட்ட நான்கு மாநில உயர்நீதிமன்றங்களில் இந்திய வழக்காடும் மொழியாக்கியது போல தமிழ்நாடு உயர்நீதி மன்றங்களிலும் தமிழை வழக்காடும் மொழியாக்கு!

சென்னை உயர்நீதி மன்றமே!

தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்ட்த்தை முடக்கி கீழமை நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடும் மொழியாவதை தடுத்து நிறுத்தி உள்ள உயர்நீதி மன்ற தீர்மானத்தை உடனே திரும்ப பெறு!

உழைக்கும் மக்களே!


தமிழை வழக்காடும் மொழியாக்கும் வரை தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம்!

March 8, 2014

உழைக்கும் மகளிர் தினம் - அம்மா!

”என்னிடம் ஏதாவது நல்ல குணம் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அவைகள் என் அம்மாவிடமிருந்து வந்தவை!”

- என் திருமண ஏற்புரையில்!

அம்மாவோடு உடன்பிறந்தவர்கள் நாலு சகோதரிகள். அம்மா தான் மூத்தவர். தனது கணவனுடன் போட்ட சண்டையில் அம்மாவின் அம்மா ஒரு நாள் மருந்தை குடித்துவிட்டு செத்துப்போய்விட்டார்.  அம்மாவும், நான்கு சகோதரிகளும் பெரியம்மா வீட்டில் தான் வளர்ந்தார்கள்.

நெசவாளி குடும்பம்.  அம்மாவுக்கு 12 வயது இருக்கும் பொழுது அம்மாவின் அப்பாவும் உடல்நலக்குறைவில் இறந்துவிட்டார். நெசவுத் தொழிலை நம்பி, உழைத்து வளர்ந்தது அம்மாவின் குடும்பம்.

அம்மாவிற்கு திருமணம் முடியும் பொழுது வயது 18.. அப்பாவும் நெசவு தொழிலாளி தான்.  இரண்டு ஆண்டுகளில் தன் அம்மா வேலை பார்த்த மில்லில் வாரிசு அடிப்படையில் அப்பாவிற்கு வேலை கிடைத்தது.

சொத்தில்லை. எதுவும் சேமிப்பும் இல்லை. உழைத்தால் சோறு என்பது தான் யதார்த்தம்.  10 ஆண்டுகளில் 5 பிள்ளைகள்.  மூன்று பெண் பிள்ளைகள். இரண்டு பையன்கள்.(நான் கடைக்குட்டி)அப்பாவிற்கு குடிப்பழக்கம் தொற்றிக்கொண்டது. வேலைப்பார்த்த சம்பளத்தை குடித்தே செலவழித்துவிடுவார்.

அம்மாவின், அக்காகளின் உழைப்பில் வளர்ந்தது எங்கள் குடும்பம்.  எவ்வளவு சிரமம் வந்தாலும் சொந்தங்கள் வீட்டில் போய் அம்மாவும் உதவி கேட்டதில்லை. எங்களையும் நிற்க வைத்தவரில்லை.  பல நெருங்கிய சொந்தங்கள் யாரென்றே பல காலம் நாங்கள் அறிந்ததில்லை.

அபூர்வமாய் விசேச வீட்டிற்கு போனால், முக ஜாடையை வைத்து “ஜானகி பிள்ளையா நீ” என அடையாளம் காண்பார்கள்.  அம்மாவின் அடையாளத்தில் அறிமுகமாவதில் எனக்கும் சந்தோசம்.

எவ்வளவோ சிரமங்கள். அம்மா ஒருநாளும் புலம்பியதில்லை.  அழுததில்லை. சொந்தங்களின் விசேச வீட்டிற்கு போனால், அம்மாவின் வருகைக்காக காத்திருப்பார்கள்.  உழைப்பாளிகளின் வீடுகள் என்பதால், வேலைகளுக்கு யாரையும் வைக்கமுடியாது.  சொந்தங்களிடம் வேலை வாங்குவது என்பது சிக்கலான விசயம்.  அம்மா பலரையும் உழைப்பில் ஈடுபடுத்துவதை லாவகமாக செய்வார்கள். அம்மாவின் சொல்லுக்கு கட்டுப்படுவார்கள்.

எப்பொழுதும் உழைப்பை முழு மனதுடன் நம்பினார். அப்பா லாட்டரி வாங்கினால், உழைக்காத காசு உடம்பில் ஒட்டாது என்பார்! அம்மா கண்டிப்பானவர். அம்மாவின் அதட்டலுக்கே எல்லோரும் அடங்கிப்போவோம்.  எங்களை சுதந்திரமாகவும் இருக்கவும் அனுமதித்தார். நாங்கள் அறியாதவாறு கண்காணிப்பில் வைத்துக்கொள்வார்.

அம்மாவின் பட்டறிவில் அருமையாக விவாதிப்பார்.  அம்மாவிற்கும் எனக்கும் பொதுவான பல விசயங்கள் குறித்தும், பல நல்ல விவாதங்கள் காரசாரமாய் நடந்திருக்கின்றன.  அதனாலேயே அம்மாவிற்கும் எனக்கும் புரிதல் அதிகம்.  அப்பாவின் இறுதி நாட்களில் அப்பாவை மருத்துவமனையில் அருகில் இருந்து கவனித்துக்கொண்டேன்.  அப்பா இறந்த பிறகு நான் சடங்குகள் செய்ய மறுத்து சொந்தங்களுடன் விவாதித்துக்கொண்டு இருந்த பொழுது, அம்மா “அவனை விட்டுருங்கப்பா!  அப்பா முடியாம இருந்த பொழுது பார்த்தான்ல!” என்றார்.

ஒரு கட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் தான் முடிப்பேன் என சொல்லும் பொழுது அம்மாவிற்கு உடன்பாடு இல்லையென்றாலும், என்னை, என் கொள்கைகளை புரிந்து கொண்டு சரி என ஏற்று, என் திருமணத்தை நடத்திவைத்தார்.

எனக்கு அம்மாவை பிடித்ததைப் போலவே, சர்க்கரைக்கும் அம்மாவை பிடித்துபோய்விட்டது!  20 வருடங்கள். அம்மாவை உலுக்கி எடுத்துவிட்டது!  எதற்கும் கலங்காத அவரை, சர்க்கரை கலங்கவைத்துவிட்டது!  இருப்பினும் தன் துன்பங்களை எதிர்த்து போரிட்டதை போலவே, தன் நோயை எதிர்த்தும் இன்றைக்கும் போராடிக்கொண்டிருக்கிறார்.

அம்மாவின் உழைப்பிலும், உறுதியிலும் ஐந்து பிள்ளைகளில் என் பங்கான இருபது சதவிகிதத்தை பெற்றால் கூட நான் பெரும் பலசாலியாக என் வாழ்நாள் முழுக்க கம்பீரமாய் வாழ்வேன்!

எல்லோருக்கும் உழைக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்!