> குருத்து

November 21, 2009

தொழிலாளர்கள் பற்றிய இலக்கியங்கள்


"குறைந்த உழைப்பு, நிறைய பணம்" - ஈஸி மணி என்னும் கலாச்சாரம் சென்னை மாதிரி பெருநகர சூழலில் மனிதர்களை பிடித்திருக்கும் ஒரு வியாதி. இந்த நாட்டில் இப்படியெல்லாம் சிந்திக்க தெரியாத மனிதர்கள் காலம் காலமாக கடுமையாக உழைத்து, இந்த நாட்டை தாங்கி பிடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

அந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் சொல்ல முடியாத துயரமும், அவலமும் இருக்கிறது. இன்றைக்கு சென்னையில் மிகப்பெரிய கட்டிடங்கள் பிரமாண்டமாய் எழுந்து நிற்கிறது. அந்த கட்டிடங்களை உருவாக்குவதற்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவும் பகலுமாய் வேலை செய்கிறார்கள். அங்கு அடிப்படை வசதியான கழிவறை வசதி இருக்காது. நல்ல குடிநீர் கூட இருக்காது. ஒவ்வொரு கட்டிடமும் கட்டி முடிக்கும் பொழுது, குறைந்த பட்சம் ஒரு தொழிலாளியாவது மண் மூடியோ, மேலிருந்து கீழாக விழுந்தோ, மின்சாரம் பாய்நதோ பலியாகியிருப்பார். நம்மில் எத்தனை பெருக்கு தெரியும்?

10 ஆண்டுகளுக்கு முன்பாக ஆசியாவில் கைத்துண்டு உற்பத்தியில் பெரும்பான்மை பங்கு வகித்த பகுதி மதுரையில் செல்லூர் பகுதி. அந்த சமய்த்தில் தினமணியின் வணிகமணியில் இது குறித்து சிறப்பு கட்டுரை ஒன்று வெளிவந்தது. உலகுக்கு கைத்துண்டு கொடுத்த அந்த கைத்தறி தொழிலாளர்களின் வீட்டில் நல்ல துண்டு வீட்டில் இருக்காது. நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

தமிழகத்தில் வேலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மற்றும் சென்னை குரோம்பேட்டை - நாகல்கேணி பகுதிகளில் தோல் பதனிடும் தொழில் நடைபெறுகிறது. 50000 தொழிலாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். தோல்களை பதப்படுத்துவதற்காக அமிலம், ரசாயன உப்பு பயன்படுத்தப்படுவதால்... கை, கால்களில் புண்கள், கொப்பளம் ஏற்பட்டு மாதக்கணக்கில் புரையோடி போவதும், சில சமயங்களில் உறுப்புகள் வெட்ட்டி எடுக்கப்படுவதும் சகஜமாக உள்ளது. தோல் நோய் இல்லாதவரை காண்பது அரிது. நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இதுவரை அறியாமல் இருந்தது போகட்டும். இனி அறிந்து கொள்ளலாம். தொழிலாளர்களை நெருக்கமாக அறிந்து அவர்களின் துயரங்களை சில நாவல்கள், சில கவிதைகள், சில கட்டுரைகள் சொல்ல முயற்சிக்கின்றன. நான் அறிந்த சில நாவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். படித்து சில ஆண்டுகள் ஆகிவிட்டதால், சில குறிப்புகள் மட்டும் தருகிறேன். இதுபோல நீங்களும் அறிமுகப்படுத்துங்கள்.

படித்த நாவல்கள் :

* பஞ்சும் பசியும் - 1950 காலகட்டத்தில் தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய நாவல்களில் ஒன்று. திருநெல்வேலி மாவட்ட நெசவாளர்களை பற்றிய நாவல். தமிழில் யதார்த்தவாத நாவலில் முதல் நாவல் என்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு படித்தேன். கதையின் போக்கு, கதாபாத்திரங்கள் பழைய தமிழ் படம் பார்த்தது போல இருந்தது.

* உப்பு வயல் - ஸ்ரீதர கணேசன் எழுதிய நாவல். தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளகத் தொழிலாளர்கள் பற்றிய வாழ்க்கைப் பற்றிய கதை. சிபிஐ அல்லது சிபிஎம் வட்டத்திலிருப்பவர் என நினைக்கிறேன். நாவலில் இறுதி காட்சி தாய் நாவலில் வரும் இறுதி காட்சியை காப்பியடித்திருப்பார்.

* நிழல் முற்றம் _ பெருமாள் முருகன் எழுதிய நாவல்களில் ஒன்று. திரையரங்கில் பணிபுரியும் இளைஞர்களைப் பற்றியது. கொஞ்சம் விவரமாக அறிய இங்கு கிளிக்கவும்.

* தாய் - ருசிய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி எழுதிய உலக புகழ்பெற்ற நாவல் இரண்டு பாகங்களை கொண்டது. முதல் பகுதி ஆலைத்தொழிலாளர்களின் வாழ்க்கைப் பற்றியது. இரண்டாம் பகுதி - விவசாயிகளைப் பற்றியது. உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்களில் முதலிடம் என படித்திருக்கிறேன்.

இன்னும் படிக்காத நாவல்கள்


* கல்மரம் - திலகவதி எழுதிய நாவல். கட்டுமான தொழிலாளர்கள் பற்றிய நாவல். படித்தவர்கள் எப்படி இருக்கிறது என சொன்னால், நன்றாக இருக்கும்.

* எரியும் பனிக்காடு - பி.எச். டேனியலால் எழுதப்பட்ட நாவல். வால்பாறை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வைப் பற்றிய நாவல். எஸ். இராமகிருஷ்ணன் இது குறித்து விரிவாக எழுதியுள்ளார். இங்கு கிளிக்கவும்.

* சுரங்கம் - கு.சின்னப்ப பாரதி எழுதிய நாவல். கல்கத்தா நிலக்கரிச் சுரங்கங்கள், அவற்றில் பணி செய்யும் தொழிலாளர்கள் வாழ்க்கை அவலம் பற்றிய நாவல்.

கவிதைகள்

* பூக்காயம் - துரை. சண்முகம் எழுதிய கவிதை.


பூக்கட்டும் தொழிலாளியின் சிரமங்களை சொல்லும் அருமையான கவிதை. இங்கு கிளிக்கவும்.

கட்டுரைகள்

* ஓனிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் துப்புரவு தொழிலாளிகளைப் பற்றிய கட்டுரை. - புதிய கலாச்சாரத்தில் வெளிவந்தது. படியுங்கள். இங்கு கிளிக்கவும்.

* 30 ரூபாய் கூலிக்காக நாளொன்றுக்கு 150 கீ.மீ ரயில் - சிறு நகரத்திலிருந்து கிராமக் நோக்கி வேலை தேடிப்போகும் விவசாய கூலி தொழிலாளர்களின் அவலத்தைப் பற்றிய பத்திரிக்கையாளர் சாய்நாத் எழுதிய கட்டுரை. இங்கு கிளிக்கவும்.

****

* நான் எழுதியிருப்பது எல்லாம் ஒரு அறிமுகத்திற்காக தான். இதை விட நீங்கள் நிறைய படித்திருக்க கூடும். பின்னூட்டங்களில் அறிமுகப்படுத்துங்கள்.

November 18, 2009

காவல்நிலையங்களின் தரம் - "ஏ" கிரேடு யாருக்கும் கிடைக்கவில்லை!

சென்னையில் இருக்கும் காவல்நிலையங்களின் தரம் பற்றி அறிய துறைவாரியான ஆய்வுக்கு கமிசனர் ராஜேந்திரன் ஓர் ஆய்வு ஒன்றை நடத்தி இருக்கிறார். முதலில் காவல்நிலையங்களில் உள்ள செயல்பாடுகளை 23 வகைகளாக பிரித்திருக்கிறார்கள். பிறகு, துணை கமிசனர்கள் தனக்கு கீழ் இயங்கும் காவல்நிலையங்களுக்கு பணிகளின் தரம் குறித்து, நேரடியாக சென்று ஆய்ந்து (!) மார்க் போட்டிருக்கிறார்கள். பிறகு, இணை கமிசனர்களும் மார்க் போட்டிருக்கிறார்கள்.

எல்லா ரிப்போர்ட்டுகளும் ஒன்றாய் சேர்த்து பார்த்தால், மொத்தம் 104 நிலையங்களில் "ஏ" கிரேடு எந்த காவல்நிலையத்துக்கும் கிடைக்கவில்லை. "பி" கிரேடு 22 காவல் நிலையங்களுக்கு கிடைத்திருக்கின்றன.
மற்றவையெல்லாம் "சி" கிரேடுகள். 104க்கு 22 தேறுகிறது என்றால்... சதவிகித அடிப்படையில் 21%. அப்படின்னா பெயில். எல்லா இன்ஸ்பெக்டர்களையும் நேரடியாக அழைத்து, கமிஷனர் (என்ன இப்படி மானத்தை வாங்கிட்டீங்க என!) அட்வைஸ் செய்கிறாராம். இனி, தரத்தை உயர்த்துவது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுமாம்.

இந்த நாட்டில், சட்டங்களை மீறுவது யார் என பட்டியலிட்டால்... அதில் முதலிடத்தை பெறுவது காவல்துறையாக தான் இருக்கும். ஆளும் வர்க்கத்திற்கும், அதிகார வர்க்கத்திற்கும் விசுவாசமாய் நடப்பது, பாவப்பட்ட தொழிலாளி ஏதேனும் புகார் கொடுக்க போனால், டீ வாங்கி வா! ஒரு குயர் பேப்பர் வாங்கி வா! என விரட்டுவதும். புகார் கொடுப்பவரிடம் காசு வாங்குவது, புகார் கொடுக்கப்பட்டவரிடமும், மிரட்டி காசு பிடுங்குவது, சட்ட விரோதமாக இரண்டு தரப்பினரையும் வைத்து கட்டபஞ்சாயத்து செய்து அநியாய தீர்ப்பு வழங்குவது, கைதிகளை சட்டவிரோதமாக அடிப்பது, உதைப்பது, தன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், டாஸ்மார்க் பாரிலிருந்து, தரையில் பரிதாபமாய் கடை விரித்திருக்கும் பாட்டி வரைக்கும் மிரட்டி மாமூல் வாங்குவது, ஏதேனும் போராட்டமென்றால், உடனே ஆஜராகி, துவைத்தெடுப்பது, பெண்கள் புகார் கொடுக்கப்போனால், அவர்களை பலாத்காரம் செய்வது. (இதற்காக தான் மொத்தம் 104 காவல் நிலையங்களில் 18 மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன) என மக்கள் விரோத, அராஜக செயல்களை செய்வதில் நம்பர் ஒன்னாக இருப்பது காவல்துறை தான். இதெல்லாம் கற்பனையாக சொல்லவில்லை. தினசரி செய்திகளில் மலிவாக கிடைக்கும் செய்திகள் தான். நிலைமை இவ்வாறு மோசமாக இருக்க, எப்படி "ஏ" கிரேடு கிடைக்கும்?

துறைவாரியாக அந்தந்த துறை நிர்வாகம் செய்யும் துணை கமிஷனர்கள் மார்க் போட்டதால் தான், 22 காவல்நிலையங்களுக்காகவாவது "பி" கிரேடு கிடைத்திருக்கிறது. மனித உரிமை அமைப்பு மற்றும் வேறு துறை சார்ந்த நபர்களை குழுவாக நியமித்திருந்தால், எந்த காவல் நிலையத்துக்கும் "சி" கிரேடு கூட கிடைத்திருக்காது.


செய்தி ஆதாரம் : தினத்தந்தி, 19/11/2009 இதழில்