> குருத்து: December 2013

December 15, 2013

தில்லை கோயிலை தீட்சிதர்களுக்கு தாரை வார்க்காதே!


December 13, 2013

வாடகைக்கு குடியிருப்போர் கிரிமினல்களா?





தொடர்பான சுட்டி :

2013 டிசம்பரில் இந்த உத்தரவு குறித்த நீதிமன்ற நடவடிக்கை!

வாடகைதாரர் விவரம் கேட்கும் விவகாரம் : கமிஷனருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்


2012ல் மனித உரிமை பாதுகாப்பு மையம் போராடி பெற்ற வெற்றி :


வாடகைதாரர் விவரம் சேகரிக்கும் போலீசுக்கு முதல் கட்ட ஆப்பு – HRPC வழக்கில் தீர்ப்பு !!

December 8, 2013

பெயர் தெரியாத பாட்டி!

எங்கள் வீட்டிற்கு நேர் எதிர்வீடு.  எங்கள் வீட்டு சாவியை அவர்களிடம் தான் கொடுப்பதும் வாங்குவதுமாய் அவர்கள் உதவுவார்கள்.

அவர்களுடைய வீட்டின் கதவுக்கு அருகே கால்மிதி போடும் இடத்தில் ஒரு பாட்டி பரிதாபமாக அமர்திருப்பார். வயது எப்படியும் 75ஐ தாண்டும். கழுத்தில் பெரிய கட்டி.  அவர் பேசி நான் பார்த்ததில்லை. முகத்தில் ஒருவித இறுக்கத்தோடு இருப்பார்.  எவ்வளவு வெயில் அடித்தாலும் அந்த வெட்கையில் அதே இடத்தில் அமர்ந்திருப்பார்.  வீட்டிற்குள் போக அனுமதியில்லை.

பழகுகிற பக்கத்து வீட்டுக்காரர்கள் உரிமையோடு பெத்த அம்மாவை இப்படி பாடாய்படுத்தாதீர்கள்! என திட்டுவதை கவனித்திருக்கிறேன்.  அந்த வீட்டுக்காரரோஅதையெல்லாம் சட்டையே செய்வதில்லை.  திடீரென அந்த பாட்டி சில மாதங்கள் காணாமல் போய்விடுவார்.  கேட்டால், அண்ணன் வீட்டில் இருக்கிறார் என்பார்கள்.  அண்ணன் ஆறுமாதம்.  தம்பி ஆறுமாதம் கணக்கு போல!

எங்கள் வீட்டில் அப்பாவின் தாயார் 95 வயதுவரை இருந்தார்.  அவருடைய நடுத்தர வயதில் காசு இருந்த பவுசில் ஒரு மோசமான மாமியாராக அம்மாவை நிறைய தொல்லை செய்திருக்கிறார். தன் பெண் பிள்ளைகளுக்கு நிறைய செய்முறைகள், பண உதவி செய்திருக்கிறார்.  ஆனால், அப்பாவிற்கு பெரிதாய் செய்யவில்லை.  அதற்கு பிறகு பெண் பிள்ளைகள் யாரும் வசதியாய் இல்லை. அதனால், வயதான பிறகு மகன் வீட்டில் இருக்க வேண்டிய நெருக்கடி நிலை. கடந்த முப்பது ஆண்டுகளாக எங்கள் வீட்டில் தான் இருந்தார். அம்மா மாமியாரை பாதுகாத்தாலும், இளவயதில் அனுபவித்த தொல்லைகளால் தன் மாமியாரை திட்டிக்கொண்டே இருப்பார். அப்பொழுதெல்லாம் அம்மாவிடம் பழசையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு இப்படி நடக்காதீர்கள் என கடுமையாக சண்டையிடுவேன். அம்மா அமைதியாகிவிடுவார். அதற்கு பிறகு சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோனார்.

நம் வீடுகளில் வயதாகிவிட்டால் அவர்களுடைய இருப்பு நமக்கு பயன்படுவதில்லை. தொல்லையாகிவிடுகிறார்கள். பெரும்பாலும் வசதி இருந்தால் தான் மதிக்கிறார்கள். வயதானவர்களுக்கு என்று சமூக பாதுகாப்பு என்று எதுவும் இல்லை. பென்சன் இல்லை. எல்லாம் காசு என்ற இந்த சமுதாயத்தில் உறவுகள் சிக்கலாகிவிடுகின்றன. வயதான பிறகு சுயமரியாதை இல்லாமல் வாழ்வது என்பது பெரிய உளரீதியான சிக்கல் தான்.

இரண்டு நாள்கள் ஊருக்கு போய்விட்டு திரும்பி வந்து சாவி கேட்கும் பொழுது, அந்த பாட்டி இறந்துபோன செய்தியை அவர் மகன் சொன்னார்.  ஒரு வாரம் முடியாமல் இருந்தாராம்.  கடைசி இரண்டு நாள் சாப்பாடு எதுவும் சாப்பிடவில்லையாம். பிள்ளைகள், பேரன்,பேத்திகள் எல்லோரும்  வந்து பார்த்தார்கள்.  இறந்த இறுதிநாளில் பால் தருகிறோம் என எவ்வளவு வறுபுறுத்தினாலும், அந்த பாட்டி குடிக்கவேயில்லையாம். மறுத்துவிட்டார்களாம்.  இறந்துவிடலாம் என முடிவு செய்துவிட்டார் போல!

நீங்கள் எத்தனை பிள்ளைகள் என்றேன்? மொத்தம் 6 பிள்ளைகள். பசங்க மூவர். பெண்கள் மூவர் என்றார்.   இத்தனைப் பிள்ளைகளை பெற்றுமா, கால்மிதி போடும் இடத்தில் உட்கார வைத்திருக்கிறார்கள் என நினைத்த பொழுது, ஓங்கி மூக்கில் குத்தலாம் போல இருந்தது. 

பாட்டிக்கு எனது அஞ்சலிகள்! 

மழை!

கடையில் பலசரக்கு வாங்கும் பொழுது... ஒரு நடுத்தர வயது அம்மா கடைக்காரரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

"மழை பெய்தால், எங்கள் வீட்டில் எல்லா பக்கமும் ஒழுகும். வீட்டிற்கு வந்த தண்ணியை அள்ளி அள்ளி வெளியில் ஊத்துவதற்கே வேலை சரியாக இருக்கும். மழை பெய்யும் நாளில் சமைக்கமுடியாது. அன்னைக்கு பட்டினி தான். தூங்கமுடியாது. ஏதாவது குறைஞ்ச வாடகைக்கு ஒரு சின்ன அறையா, ஒழுகாம இருந்தா போதும்! நானும் என் இரண்டு பிள்ளைகளும் இருந்துக்கிருவோம். ஒரு வீடு பார்த்து சொல்லுங்க" என்றார்.

December 4, 2013

மருத்துவர் கோவன்!

நேற்று பாடியில் இருக்கும் ஹோமியோபதி மருத்துவர் சத்தியநாராயணனை பார்க்க போயிருந்தேன். தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வரும் அப்ரோச்‍-சின் ஆண்டு விழாவிற்கு அழைப்புவிடுத்தார்.

அதில் ஒரு நிகழ்ச்சியாக, மக்களுக்கு இல்வசமாக ஹோமியோபதி மருத்துவம் பார்த்துவரும் மக்கள் மருத்துவர்களை கண்டறிந்து கெளரவிக்கிறோம். இந்த ஆண்டு ஒரு விவசாயியாக இருக்கும் ஒருவர் களத்துமேட்டிலேயே தன்னைத் தேடிவரும் விவசாய மக்களுக்கு இலவசமாக ஹோமியோபதி மருத்துவம் பார்த்துவருகிறார். அவரை அழைத்து வந்து கெளரவிக்கிறோம் என்றார்.

அடுத்த ஆண்டு திருச்சியில் 9 ஆண்டுகளாக உழைக்கும் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வரும் மருத்துவர் கோவனை கெளரவிக்க இருக்கிறோம் என்றார். அவரிடம் மருத்துவம் பார்த்த மக்களில் சிலர் எங்களிடம் தெரிவித்தனர் என்றார்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மையக்கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியை பார்த்திருக்கிறீர்களா என்றேன். நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்ததில்லை என்றார். அந்த குழுவின் மையப்பாடகர் தான் தோழர் கோவன் என்றேன். ஆச்சர்யப்பட்டார்.

சில மைய வேலைகளின் பொழுது கோவன் தோழரிடம் மருந்து வாங்கி குணமானவர்களில் நானும் ஒருவன்!

நாம் அறிந்த தோழரை வேறொரு ஆளுமையாக நமக்கே அறிமுகப்படுத்துவதில் சந்தோசம் தான்!

December 3, 2013

மழைக்கு கூட ஒதுங்காதவர்கள்!

தினகரன் பத்திரிக்கை செய்தியில், "ஒரே ஒரு பக்தரை வைத்துக்கொண்டு, மழைக்கு கூட கோயில் பக்கம் ஒதுங்காதவர்கள் போராட்டம் செய்கிறார்கள்" என ஆலய பாதுகாப்பு குழு என்ற பெயரில் தீட்சிதர் கும்பல் சொல்கிறது.

தமிழ் தீட்டுமொழி என்று அறிவிக்கும் தீட்சிதர்களின் திமிரை ஒடுக்கவும், கொள்ளை போகும் மக்களுக்கான தில்லை கோயிலை மக்களுக்கே மீட்டுக்கொடுப்பதற்காகவும், மழையில் கூட கோயிலுக்கு ஒதுங்காத தோழர்கள் இப்பொழுது அடாத மழையிலும் உற்சாகத்துடனும், உறுதியுடனும் போராடியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.

பக்தர்களாகிய மக்கள் தங்கள் கோயிலுக்காக  போராட்ட களத்திற்கு வரும் வரை தான், மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்களுக்கும், நக்சல்பாரி தோழர்களுக்கும் அங்கு வேலை! மக்களுக்காக காத்திருக்கிறார்கள் தோழர்கள்!