> குருத்து: July 2016

July 21, 2016

வயநாடு வரை போயிருந்தோம்!

சென்னையில் அடிக்கிற அக்னி நட்சத்திர வெயிலிருந்து மூன்று நாட்கள் தப்பிக்கலாம் என மலையும் மலைசார்ந்த இடமான கேரளாவின் வடபகுதியான வயநாடு வரை போய்வந்தோம்! கோழிக்கோடு வரை ரயில் பயணம். அங்கிருந்து பேருந்தில் மலைப்பயணம். வயநாட்டின் ஒருபகுதியான சுல்தான் பத்தேரியில் உள்ள ஹோட்டலில் தங்கினோம்.
குருவா டிவீப்

காலை 9 மணியளவில் முதல் ஆளாய் போய்சேர்ந்தோம்.   இயற்கை சூழலோடு இந்த ஆற்றுப்படுகை தீவுத்திட்டு கபினி ஆற்றில் அமைந்துள்ளது. 13 யானைகள் அந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்ததால், யாரையும் அனுமதிக்கவில்லை. காத்திருந்த ஒருமணிநேர வேளையில் கல்லால் அடித்து தித்திக்கும் நாவல் பழங்களை சாப்பிட்டோம். மிதகுகள் மூலம் கபினியை கடக்க உதவுகிறார்கள். ஒரு கிலோமீட்டர்வரை காட்டுக்குள் அனுமதி. போன யானைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற பயமிருந்ததுஉள்ளே குளுகுளு என ஓடும் கபினியாற்றில் நிறைய நேரம் குளித்தோம். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டேயிருந்தார்கள்.
பாணசுரசாகர் அணை

கபினியின் துணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கரைத்தடுப்புஅணை. திரைப்படங்களில் யாரையாவது கடத்திக்கொண்டு போவார்களே, அப்படி ஒரு வேகமாக செல்லக்கூடிய இன்ஜின் போட்டில் சுற்றிலும் பசுமையான மலைகளுக்கு மத்தியில்அதோ அந்த பறவை போல வாழவேண்டும்! இதோ இந்தஅலைகள் போல ஆடவேண்டும்என்ற பாட்டை கோரசாகப் பாடி, சாகச பயணம் செய்தோம்.   என்ன கொஞ்சம் காசுதான் அதிகம்! 6 பேருக்கு ரூ. 750 வசூலிக்கிறார்கள்.

அடுத்து, அணையின் அருகேயே இருந்த கர்லேட் ஏரியின் மேலே கம்பிகளின் வழியே  இடுப்பில் பெல்ட் போட்டு அந்தரத்தில் பயணித்த பொழுது கொஞ்சம் பதட்டமாகவும், சந்தோசமாகவும்தான் இருந்தது!
முத்தங்கா வனவிலங்கு சரணாலயம்

சுல்தான் பத்தேரியிலிருந்து 14 கி.மீ தூரத்தில் இருக்கிறது. கேரளாவில் முத்தங்கா, கர்நாடகத்தில் பந்திப்பூர், தமிழகத்தில் முதுமலை சரணாலயம் என மூன்று மாநிலத்திலும் மூன்று பெயர்களில் கோடைகாலத்திலும் பசுமையாக பரந்து நிற்கிறது ஒரேகாடு. காலை 7மணி முதல் 10மணிவரை. மாலை 3லிருந்து 5 மணிவரை காட்டுக்குள் அழைத்துசெல்கிறார்கள். 40ஜீப்கள் தான் காலையில் அனுமதி. மாலையிலும் கோட்டா தான். ஆகையால், காலை 7மணிக்கே போனால், 20பேர் நமக்கு முன்னால் வரிசையில் நிற்கிறார்கள். 16 கிமீ காட்டிற்குள் ஜீப்பில் பயணித்தபொழுதுமூன்று வெவ்வேறு இடங்களில் மான்கள் கூட்டம், 200 மீட்டர் தள்ளி எதையோ தின்றுகொண்டிருந்த  ஒத்த யானை, தயங்கி, தயங்கி காட்டுப்பாதையை கடந்து சென்ற காட்டெருமையை பார்த்தோம். 23புலிகள், 810 யானைகள் என பெரும்பட்டியலை ஓட்டுநர் சொல்லிக்கொண்டே போகும்பொழுது, பகீரென்று இருந்தது.  
அருவிகள்

மேற்குமலை தொடர்ச்சியில் மீன் முட்டி விழும் மீனுமுட்டி அருவி, சூச்சிப்பாறை அருவி என இன்னும் சில அருவிகள் இருந்தாலும், ஜூன் ஒன்றாம் தேதியிலிருந்து மழை விழத்துவங்கும் பொழுதுதான் அருவிகள் உயிர்பெறுகின்றனமே மாதத்தில் போனதால் நாங்கள் அருவிகளை இழந்தோம்.
செம்பரா சிகரம்

வயநாடு மாவட்டத்திலேயே உயரமான சிகரமாக கருதப்படும் இந்த சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறதுஇதன் உச்சியை தொட்டுவர ஒருநாள் டிரெக்கிங் போவது அவசியம். மூன்றுநாள் திட்டத்தில் ஒரு முழுநாளை ஒதுக்கமுடியாததால் போகவில்லை.
உணவு

எங்கு போனாலும் அங்கு வாழும் மக்களிடம் கேட்டாலே நல்ல ஹோட்டல் எதுவென சரியாக கைகாட்டிவிடுகிறார்கள். சென்னையை விட குறைவான விலையில் சுவையான டிபன் கிடைத்தது. மூன்று நாளும் மதிய வேளையில் கேரளத்தின் சுவையான பிரியாணியை வெவ்வேறு இடங்களில் சாப்பிட்டோம்.
நான் ரெம்ப சாப்ட். ரெம்ப அன்பானவாஎன அறிமுகப்படுத்திக்கொண்டு நீச்சல்குளத்தில் உற்சாகமாய் முங்கு நீச்சலடித்து, தெருவில் பழக்கப்படுத்திய யானை போனாலும், “நாங்க யானைப் பார்த்திட்டோம்என ஊரே கேட்கும்படி கத்தி, ‘என்லக்கில் தான் எல்லோரும் மான்கள், யானைகள் எல்லாம் பார்த்தீங்கஎன பயணம் முழுவதும் கலகலக்க வைத்த ஆறுவயது பூவரசி தான் எங்கள் பயணத்தை உற்சாகமாய் வழிநடத்திய குட்டித்தேவதை.
ஊர்வந்து சேர்ந்த அடுத்தநாள் காய்கறி வாங்க சென்றபொழுது, , தென்காசிகாரரான பாய், ’குற்றாலத்தில் சீசன் இப்பவே தொடங்கிருச்சு. அருவிகளில் தண்ணீர் விழுகிறதுஎன்று சொன்னதும் குற்றாலசாரல் மனதில் அடிக்க ஆரம்பித்தது.  யாரெல்லாம் குற்றாலம் வருகிறீர்கள்? :)