> குருத்து: September 2008

September 18, 2008

இனி மெல்ல, மெல்ல இருளும், தமிழகம்!




கடந்த சில ...மன்னிக்கவும்... பல நாள்களாக மின்சாரம் இல்லாது, இருளில் மூழ்கி கிடந்தது தமிழகம். பதிலாய், ஆற்காடு வீராச்சாமி வருண பகவானும் (!), வாயு பகவானும் (!) தன் கடமையை சரி வர செய்யாதது தான் காரணம் என்றார்.

வீராச்சாமி தி.மு.க காரராய் இருப்பதால், கை காட்டியதோடு நின்றுவிட்டார். இவரே, பாரதிய ஜனதாவில் அமைச்சராய் இருந்திருந்தால் மாநிலங்கள் முழுவதும் யாகங்கள் நடத்தச் சொல்லி ஆலோசனை சொல்லியிருப்பார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இம்பூட்டு மின்சார சப்ளையாம். ஒரு இந்தியனாய் நாம் பெருமைப்பட்டு கொள்ள வேண்டிய முக்கிய செய்தி இது.

வருண பகவான்(!) கருணையில் மழையும், வாயு பகவான்(!) காற்றாலைகளையும் இயக்கியதால் தமிழக மக்கள் தற்காலிகமாக தப்பித்துவிட்டோம்.

இதெல்லாம் எல்லோரும் அறிந்த பழைய செய்தி.

புதிய செய்தி, மின்சார வெட்டிலிருந்து தப்பித்து விட்டதாய் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இனி தான், மிகப் பெரிய சிக்கலே இருக்கிறது.

தமிழக மின்சார வாரியத்தின் உபரி நிதி (இது வணிகவியல் சொல்லாடல். புரிகிற மாதிரி சொன்னால் லாபம். மின்சார வாரியம் லாப நோக்கமற்ற அமைப்பின் கீழ் வருவதால், லாபம்
என சொல்லக்கூடாது). கடந்த சில ஆண்டுகளாக குறைந்து கொண்டே வந்து, இப்பொழுது இழப்பில் வந்து நிற்கிறது. (அதாவது நட்டத்தில்)

ஆண்டும் உபரியும்

2002-03 1712 கோடி
2003-04 747 கோடி
2004-05 850 கோடி
2005-06 805 கோடி
2007-08 455 கோடி (நன்றி - தினமலர் (16.09.08)

நடப்பு ஆண்டில் 1421 கோடி இழப்பாகி இருக்கிறது.

இதற்கு காரணமாய் சொல்லப்படுவது என்னவென்றால்.... மின்சார பற்றாக்குறையும், அதனால் அதிக விலைக்கு தனியாரிமிருந்து கொள்முதல் செய்வதால் ஏற்படும் மிகை செலவு. பிறகு, நிறைய திட்டங்களுக்கு தரப்படுகிற இலவச மின்சாரம் தான்.

மானியம் யாருக்கு தருகிறார்கள் என்றால்,

விவசாயிகளுக்கு,
சொந்தமாக தறி வைத்திருந்து தாமே நெய்யும் நெசவாளிகளுக்கு,
இலவச கலர் டிவி பெற்ற வீடுகளுக்கு,
சமத்துவபுர வீடுகளுக்கு,
இலவசமாய் இரண்டு ஏக்கர் நிலம் பெற்றவர்களுக்கு,
முதன்முதலாய் தொழில்கள் தொடங்குவோருக்கு குறிப்பிட்ட காலம் வரைக்கும்,
பிறகு... சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு.

அரசின் நிதி, தொழிற்கொள்கைகள், நடப்பு நிகழ்வுகள் எல்லாவற்றையும் வைத்துப் பார்த்தால்....
வருங்காலத்தில் யார் தேறுவார்கள் என பறவைப் பார்வை பார்த்தால்....

இந்த தேசத்தில் பாவப்பட்ட ஜென்மங்களாய் போனவர்கள் விவசாயிகள். இந்தியா முழுவதும் விவசாயிகளின் தற்கொலைகள், உலகத்துக்கே தெரிந்து, அசிங்கப்பட்டு போன பின்பு, மத்திய அரசு 60 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி அறிவிப்பு செய்தது. (அதில் உள்ள கோளாறுகள் தனி)

அடுத்து, நெசவாளிகளுக்கு. விவசாயத்திற்குப் பிறகு, அதிக மக்களுக்கு வாழ்வு தருகிற தொழில். மதுரையில் செல்லூர் என்ற பகுதி கைத்தறிக்கு புகழ் பெற்ற பகுதி.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தினமணியின் வணிகமணி பகுதியில், "தெற்கு ஆசியாவிலேயே கைத்தறித் துண்டு அதிக உற்பத்தி செல்லூரில் தான்" என படித்திருக்கிறேன்.
இன்றைக்கு அந்த பகுதி எப்படியிருக்கிறது என விசாரித்துப் பார்த்தால்... தொழில் நசிந்து போய், பல குடும்பங்கள் ஜெயமங்கலம், வெள்ளக்கோயில், சென்னிமலை என இடம்
பெயர்ந்து விட்டார்கள். வாழ்வுக்காக குறைந்த விலையில் கிட்னி விற்று கொண்டிருக்கிறார்கள் என செய்திகளில் படிக்கிறோம். இவர்களும் தேற மாட்டார்கள்.

இலவச டி.வி. பல காலத்துக்கு வேலை செய்யாது என்பது பலரும் அறிந்த செய்தி தான். எனவே, அவைகளும் தேறாது.

முன்பு போல, ஒரு பேச்சுக்குக் கூட இப்பொழுதெல்லாம், தேர்தலில் பங்கெடுக்கிற எந்த கட்சிகளும் சமத்துவம், சமூக நீதி என்றெல்லாம், மறந்தும் கூட பேச மறுக்கிறார்கள். ஆகையால், சமத்துவபுரங்கள் இனி எழாது.

நவீன இயந்திரங்கள், இறக்குமதிக்கு இருந்த தடைகளை நீக்கி விட்டதினாலும், அரசால் புறக்கணிக்கப்படுவதின் மூலம் சிறிய தொழில்கள் திட்டமிட்டே அழிக்கப்படுவதை நாம் கண் முன்பே பார்த்துக்கொண்டேயிருக்கிறோம். ஆகையால், இனி அவர்களும் தேறமாட்டார்கள்.

இந்த பட்டியலில் தேறுபவர்கள் எனப் பார்த்தால்... பிரகாசமாய் பளிச்சிடுகிறவர்கள் "சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இயங்கும் பன்னாட்டு தொழிற்சாலைகள் தான்".

நமது உள்துறை அமைச்சர் ஸ்டாலின்

பன்னாட்டு நிறுவங்களின் வருகையால்.... "கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உற்பத்தியை விட, கடந்த இரண்டு ஆண்டுகளில் உற்பத்தி 100 சதவிகித உற்பத்தி
பெருகிவிட்டது.. சீனாவில் உற்பத்தி செய்யப்படும் செலவை விட, தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் செலவு 11% குறைகிறது என பன்னாட்டு நிறுவனமான நோக்கியா சந்தோசமாய்
சொன்னது" என உளப்பூரிப்புடன் சொல்கிறார். கொழுத்த பன்னாட்டு நிறுவங்களுக்கு கோடிகளில் லாபம். எல்லாம் இழந்து நிற்கும் மக்களுக்கு 1ரூ. அரிசி. அண்ணாவின் கனவுத் திட்டமாம். (Operation success. Patient died)



பன்னாட்டு நிறுவனங்கள் - நமது விவசாய நிலங்கள், நம்முடைய நிலத்து நீர், மலிவான விலையில் மனித உழைப்பு என பயன்படுத்திக் கொண்டு, கொள்ளை லாபம் பார்க்கிறார்கள்.
இது தவிர அரசு கலால் வரி விலக்கு, விற்பனை வரி விலக்கு, இலவச மின்சாரம் - என சலுகைகளை அள்ளித் தருவது ஏன்? மின்சாரம் இங்கு மிதமிஞ்சிய உற்பத்தியெல்லாம்
கிடையாது. நிலைமை இவ்வாறு இருக்கையில் மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு, அதிக விலைக்கு வாங்கி சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு இலவசமாக தருகிறார்கள்.


கோவையில் சிறிய, நடுத்தர, பெரிய என 3000 பஞ்சாலைகள் இருக்கின்றன. அதன் சங்கத் தலைவர் "பன்னாட்டு நிறுவங்களுக்கு என்னென்ன சலுகைகள் தருகிறீர்கள் என அரசு விளக்க வேண்டும்" எனக் கேட்கிறார். சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பற்றிய தகவல்கள் எல்லாம் இரகசியமாக இருக்கின்றன. அரசு இது பற்றி ஒரு வெள்ளை அறிக்கை தர வேண்டும் என கோரிக்கை தற்பொழுது எழுந்துள்ளது.

சிறப்பு பொருளாதார மண்டலங்களின் கட்டமைப்பிலேயே "365 - நாட்களும் தடையில்லா மின்சாரம்" தர வேண்டும் ஒரு விதி இருக்கிறது. நமக்கு ஒரு சந்தேகம் வருகிறது. நம் வீடுகள், நம் தொழிற்சாலைகள், அலுவலகங்கள் எல்லாம் இருளில் மூழ்கி கிடக்கும் பொழுது, சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு மின்சாரம் தங்கு தடையின்றி
தானே வழங்கியிருப்பார்கள். (இது சம்பந்தமாக வலையில் தேடிப் பார்த்ததில், எந்த தகவலும் இல்லை. அங்கு வேலை செய்கிற தொழிலாளர்கள் தான் தெரியப்படுத்த வேண்டும்.)

ஏற்கனவே தமிழகத்தில் இயங்குகிற நோக்கியா, மகேந்திரா சிட்டி, இன்னும் இரண்டும் போக.... தமிழகத்தில் புதிதாக 52 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாகப் போகிறதாம்.
பணிகள் தொடங்கப்பட்டு, சுறுசுறுப்புடன் நடந்து வருகின்றன. இனி அவைகளுக்கும், இலவச மின்சாரம் தடையின்றி தருவார்கள். ஒரு கட்டத்தில், நட்டத்தில் இயங்குவதாய் சொல்லி,
தமிழக மின்சார வாரியத்தின் தலையில் துண்டைப் போர்த்தி, இழுத்து மூடிவிடுவார்கள். பிறகு, சிறப்பு பொருளாதாரத்தில் இயங்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம் மின்சாரம் தயாரித்து,
யூனிட்டுக்கு இருபது ரூபாய், முப்பது ரூபாய்க்கு நம்மிடமே விற்பார்கள்.

யூனிட் 1ரூ, 2 ரூ என்று இருக்கும் பொழுதே, மக்கள் வரிக் கட்ட திணறுகிறார்கள். யூனிட் 20 ரூ. 30 ரூ. என்றால்...

இனி, தமிழகம் மெல்ல மெல்ல இருளும்! என்பது இப்பொழுது உணர முடிகிறது அல்லவா!

இருளை விரட்டாமல் வெளிச்சம் வராது நமக்கு!
பன்னாட்டு நிறுவங்களை மண்ணிலிருந்து விரட்டாமல், நம் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை!


பின்குறிப்பு : 1ரூ அரிசி அறிவிப்பு செய்யும் பொழுது, கருணாநிதி "இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள், திருடு போய்விடும்! திருடு போய்விடும்! என சொல்கிறார்கள். ஒரு திருடனைப் போல ஏன் சிந்திக்க வேண்டும்" என்றார்.

"புதிது புதிதாய் பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு, இந்த மண்ணை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து, இந்த மண்ணின் மக்களை எப்படி நிராதாரவாய் நிற்க வைத்து விட்டு, கொஞ்சம் கூட மனம் கோணாமல் ஒரு நல்லவரைப் போல எப்படி தான் வலம் வர முடிகிறது?" என நாம் கேட்கலாம் அல்லவா!

http://sezindia.nic.in/HTMLS/dated-10-8-06-amending-sez-rules06.pdf

365 நாட்களும் தடையில்லா மின்சாரம் என்கிற விதியை, SEZ அரசு வலையிலிருந்து எடுக்கப்பட்டது.

3. After rule 5 of the principal rules, the following rule shall be inserted,
namely:-

“5A. Infrastructure requirements relating to information technology.-
In case of a Special Economic Zone relating to information
technology, the following facilities shall be ensured, namely:-

(a) twenty-four hours uninterrupted power supply at stable
frequency in the Zone;


(b) reliable connectivity for uninterrupted and secure data
transmission;
(c) provision for central air-conditioning system; and
(d) a ready to use, furnished plug and pay facility for end
users.”.