> குருத்து: September 2018

September 25, 2018

The Post - பத்திரிக்கை சுதந்திரம்


1960-களில் அமெரிக்கா வியட்நாம் மீது ஆக்கிரமிப்பு போர் செய்து கொண்டிருந்தது. வியட்நாமிய போராளிகள் கொரில்லா போர் செய்து அமெரிக்க ராணுவத்தினரை சிதறடித்துக் கொண்டிருந்தார்கள்.

உச்சக்கட்ட போர் சமயத்தில் 60 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இறந்தும் காணாமலும் போயினர். அமெரிக்க அரசோ கெத்தாக போரில் முன்னேறி கொண்டிருப்பதாக கதை விட்டுக் கொண்டிருந்தது.

இராணுவ ஆய்வாளர் ஒருவர் உலகுக்கு உண்மையை சொல்ல நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு ஆதாரம் அளிக்கிறார். இதழில் வெளியானதும் நாடே கொந்தளிக்கிறது. அமெரிக்க அரசு ஆடிப்போய்விடுகிறது!

'நியூயார்க் டைம்ஸ்'க்கு போட்டி பத்திரிக்கையான 'வாஷிங்டன் போஸ்ட்' மேலும் வியட்நாமிய போர் தொடர்பான செய்திகளை தேடுகிறது. கண்டுபிடித்தும் விடுகிறது.

இதற்கிடையில் வாஷிங்டன் போஸ்ட் பொருளாதாரத்தில் தள்ளாடுகிறது. பொதுமக்களிடம் பங்குகளை வெளியிட்டு, தன்னைப் பலப்படுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்கிறது.

இதே சமயத்தில் நியூயார்க் டைம்ஸில் ஆதாரம் வெளியானதை ஒட்டி, அமெரிக்க அரசு சுதாரித்து மேற்கொண்டு ஆதாரங்களை வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி விடுகிறது.

கிடைத்த ஆதாரங்களை, தடையை மீறி வெளியிட்டால், வாஷிங்டன் போஸ்ட் இதழை இழுத்து மூடவேண்டி இருக்கும். பத்திரிகை ஆசிரியரும், அதன் மேலாண் இயக்குநரும் நிச்சயமாய் கைது செய்யப்படுவார்கள்.

அதனால் பத்திரிக்கையில் வெளியிட மற்ற இயக்குனர்கள் மறுக்கிறார்கள்.

எல்லாவற்றையும் மீறி மக்களுக்கு வாஷிங்டன் போஸ்ட் உண்மையை சொன்னார்களா என்பது முழு நீளக்கதை!
****

இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கு இரண்டு முகங்கள். ஜாஸ், ஜுராசிக் பார்க் , இண்டியனா ஜோன்ஸ் என ஒரு முகம். இன்னொரு முகம் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், அமிஸ்டாட், தி போஸ்ட்.

படத்தில் பத்திரிக்கை ஆசிரியராக வரும் டாம் ஹாங்க்ஸ், முதலாளியாக வரும் மெரில் ஸ்டிரிப் என எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சிறந்த திரைப்படம், இயக்குனர், நடிகர், நடிகை, திரைக்கதை, இசை என ஆறு வகைகளில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அமெரிக்கா உலகம் முழுவதிலும் போர் என்ற பெயரில் பல உயிர்களை கொன்று குவித்துள்ளது. வியட்நாமில் தோற்றுப் போவோம் என தெரிந்தே பல ஆயிரம் தனது சொந்த நாட்டு இளைஞர்களையே பலிகொடுத்தது.

படத்தில் ஒரு இடத்தில் சொல்லப்படும் செய்தி.

ஊடகம் ஆளப்படுகிறவர்களுக்கு தான் சேவை செய்ய வேண்டும். ஆள்பவருக்கு அல்ல!

இந்திய நிலைமைகளில் இதை யோசித்துப் பார்த்தால்... நிலைமை மிக மோசமாக இருக்கிறது. ஊடகங்கள் பச்சையாக மிரட்டப்படுகின்றன. நேர்மையான பத்திரிகையாளர்கள் வேலையில் இருந்து தூக்கி எறியப்படுகிறார்கள். மிக நெருக்கடியான கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

அவசியமான படம்! பாருங்கள்!

September 6, 2018

’கடவுள்' கொடுத்த பல்லும், சரவண ஸ்டோர் முதலாளியும்!

பத்தாண்டுகளுக்கு முன்பு இடதுப்புறம் கடைசியில் இருந்த கடவாய்ப்பல் தொந்தரவு செய்தது. ஒரு பல் மருத்துவரை பார்த்ததில், பூச்சி குடைந்தவரை சுத்தப்படுத்தி மேலே பூச்சு பூசி, பல்லைக் காப்பாற்றிக் கொடுத்தார்.

மீண்டும் கடந்த மாதம் மீண்டும் அதே பல் தொந்தரவு தந்தது. மருத்துவரைப் பார்த்ததில்... கடந்தமுறை குடைந்ததைவிட, பூச்சி இன்னும் ஆழமாய் குடைந்திருந்தது. இந்தமுறை பல்லை காப்பாற்ற முடியவில்லை. மொத்தமாய் காலி செய்து, ஒரு செயற்கைப் பல் பொருத்தவேண்டும் என மருத்துவர் சொன்னதை, சோகத்துடன் ஏற்றுக்கொண்டேன்.

தையற்காரர் அளவெடுப்பது போல, புதிய முறையில் அளவெடுத்தார். ஒரு வாரம் கழித்து சென்றேன். பல் தயாராகி எனக்காக காத்திருந்தது. விளம்பரத்தில் காட்டுவது போல அழகாய் இருந்தது.

மருத்துவர் எனக்கு பல்லைப் பொருத்துவதற்கு முன்பு, மலையாளம், ஆங்கிலம், தமிழ் கலந்து 'கடவுள்' கொடுத்த பல்லை, இழந்துவிட்டீர்கள். இந்தப்பல் செயற்கையானது. இயற்கையான பல்லை போல கிடையாது. ஆகையால், பார்த்து கவனமாய் கடியுங்கள்' என்றார். அவர் சொன்னதும் தான் இழந்த பல்லுக்காக நிறைய வருந்தி, புதுப்பல்லுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

இன்று திநகர் வழியாக வந்த பொழுது, சரவண ஸ்டோர் கடை வாசலில், வாடிக்கையாளர்களை வரவேற்கும் விதமாக, கடை முதலாளி கைகூப்பி பேனரில் நின்றிருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டோ, மூன்றோ பற்கள் முன்பக்கம் எத்தி நின்று, நம்மூர் அண்ணாச்சியாய் நன்றாக இருந்தார்.

மீம்ஸ்கள் போட்டு கலாய்த்தார்கள் என்பதற்காகவா, பிரபல நடிகைகளோடு விளம்பரத்தில் நடிப்பதற்காகவா என தெரியவில்லை. எத்திக்கொண்டு இருந்த பற்களை தட்டி, சரி செய்து, இப்பொழுது செயற்கை பற்களுடன் வலம் வருகிறார்.

ஒரு 'Legend' அல்லது ஒரு 'Legend' கடையின் சொந்தக்காரர் சொந்த பற்களை இழக்கும் பொழுது, 'சொல்லாமலே' நாயகன் போல எவ்வளவு அழுதிருப்பார். எத்தனை கோடிகள் வைத்திருந்தும், இழந்த சொந்த பற்களை வாங்க முடியுமா?

தூறல் நின்னுப் போச்சு! (1982) – சில குறிப்புகள்

இன்று மதியம் கே தொலைக்காட்சியில் பார்த்தேன். எப்பொழுதும் எந்த காட்சி பார்த்தாலும், படத்தின் இறுதிவரை நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் வசீகரம் கொண்டது! பாக்யராஜின் முதன்மையான படங்களில் இது முக்கியமான படம்.

2563 இருக்கைககள் கொண்ட ஆசியாவின் பிரமாண்டமான முதல் திரையரங்கான மதுரை தங்கம் திரையரங்கில் உலகம் சுற்றும் வாலிபனுக்கு பிறகு அரங்கு நிறைந்த காட்சிகளாக நூறு நாட்கள் ஓடிய படம்!

படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, தெலுங்கிலும், இந்தியிலும் கூட எடுத்தார்கள். அந்தந்த மொழி, கலாச்சாரத்திற்கு ஏற்ப சின்ன சின்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். என்னென்ன என்று கவனித்தால் சுவாரசியமாக இருக்கிறது. தெலுங்கில் விஜயசாந்தி நடித்திருக்கிறார். இந்தியில் அனில் கபூர் நடித்திருக்கிறார். தமிழில் நாயகியின் அப்பா சாகிறார் அல்லவா! தெலுங்கில் நாயகியை அரளி விதையை சாப்பிட வைத்து, பிழைக்க வைத்திருக்கிறார்கள். இந்தியில் நம்பியார் பாத்திரத்தில் 'சோலே' அம்ஜத்கான், கத்திக் குத்தை வாங்கிகொள்கிறார். 
இந்த படத்தின் பாதிப்பில் இன்றைக்கு வரைக்கும் படம் எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அப்பாஸ் – சிம்ரன் நடித்த “பூச்சூடவா” படத்தை உற்றுப் பாருங்கள். தூ. நி. போச்சு படம் தான் என பளிச்சென தெரியும். செந்தாமரை கதாபாத்திரத்தை கிரிஷ் கார்னட் செய்திருப்பார். இப்பொழுது சசிக்குமார் மீண்டும் எடுக்கப்போவதாக சொல்கிறார்கள்.

செந்தாமரையும், நம்பியாரும் அருமையாக செய்திருப்பார்கள். செந்திலுக்கு இந்தப்படம் தான் திருப்புமுனை என்கிறார்கள்.

ஏற்பாடு திருமணத்தில் வரதட்சணை பேசுவது ஒரு வியாபாரம் பேசுவது போல மிக கறாராக பேசுவார்கள். இந்த படத்தில் அதை சரியாக காட்டியிருப்பார்கள். படத்தில் இறுதியில் ஆணாதிக்கத்தை நன்றாகவே சாடியிருப்பார்கள். அதையெல்லாம் கேட்டு திருந்துவார்களா என்பது தான் எனக்கு ஆச்சர்யம்.

ஆறெல்லாம் வறண்டு, ஆற்று மணலை எல்லாம் அரசே முன்நின்று சூறையாடிய வேளையில், ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க போவது போல இப்பொழுது காட்சி வைக்க முடியுமா?

படத்தின் பலத்தில் இளையராஜாவும் ஒருவர். எல்லா பாடல்களும் இனிமையானவை. பின்ணனி இசையும் அசத்தியிருப்பார்.

படத்தலைப்புகளை ரெம்பவும் பாந்தமாக, மங்களகரமாக பெயரிடுவார்கள். ”தூறல் நின்னுப் போச்சு” என நெகட்டிவாக தைரியமாகவே வைத்திருக்கிறார் பாக்யராஜ்!