> குருத்து: October 2010

October 27, 2010

வட மாநில தொழிலாளர்களின் அவல வாழ்வும்! கண்டு கொள்ளாத மாநில, மத்திய அரசுகளும்!

பூந்தமல்லி பைபாஸை ஒட்டி நும்பல் என்றொரு ஊர். அங்கு பன்னாட்டு நிறுவனத்திற்கு ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருக்கிறது. அந்த தொழிற்சாலையில் ஒரு தொழிலாளி மிஷினில் கை மாட்டி, கடுமையான அடிபட்டதாய் தகவல் வந்தது.

ஒரு தொழிலாளிக்கு கொஞ்சம் பெரியதாக அடிபட்டால் இ.எஸ்.ஐ. அலுவலகத்திற்கு இருபத்தி நாலு மணி நேரத்திற்குள் காய விவரங்களை தெரியப்படுத்த வேண்டும். இல்லையெனில் அவருக்கு சேர வேண்டிய சலுகைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அதற்குரிய விண்ணப்பத்தை எடுத்து கொண்டு தொழிற்சாலைக்கு சென்றேன். அடிபட்ட தொழிலாளியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தனர். அடிபட்டவர் ஒரு வட மாநில தொழிலாளி. அவரைப் பற்றிய அடிப்படை தகவல்களை பெற்றுக்கொண்டு, தொழிற்சாலையில் வேலை செய்யும் பொழுது தான் அடிபட்டதாக உடன் பணிபுரிந்த இரு தொழிலாளர்கள் சாட்சி கையெழுத்திடவேண்டும். அதற்காக இரண்டு தொழிலாளர்களை வரச் சொன்னேன். வந்தவர்களை கையெழுத்திட சொன்னால்... ஒரு தொழிலாளிக்கு இரண்டு விரல்கள் இல்லை. இன்னொரு தொழிலாளிக்கு ஐந்து விரல்களுமே இல்லை. அதிர்ச்சியாய் இருந்தது. இருவருக்கும் வயது 25ஐ தாண்டாது. ஒரு தொழிலாளிக்கு உழைப்புக்கு அடிப்படையானது கைகள் தானே! கைகளே போய்விட்டால்...இனி வாழும் காலத்தில் இவர்கள் என்ன வேலை செய்து வாழ்க்கையை தொடர்வார்கள். விசாரித்ததில் இரு விபத்துகளுமே 8 மாத இடைவெளியில் நடைபெற்றவை தான் என்றார்கள்.

இப்படி கடுமையாக அடிபடுவதால் தான், இந்த நிறுவன முதலாளி ரிஸ்கிலிருந்து தப்பிக்க அங்கு வேலை செய்கிற அனைவருக்கும் இ.எஸ்.ஐ. கட்டி வருகிறார். ஆனால், தமிழ்நாட்டின் முக்கிய தொழிற்பேட்டையான அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சிறிய, நடுத்தர, பெரிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.

இந்த நிறுவனங்களில் வேலை செய்யும் பெரும்பான்மை தொழிலாளர்கள் வட மாநில தொழிலாளர்கள் தான். கடந்த ஐந்து ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையில் கணிசமானவர்களாகிவிட்டார்கள். இந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் பீகார், ஒரிசா, உத்திர பிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்.

இப்படி விரல்கள், கை, கண் போய் வேலை இந்த தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள அடிப்படை சம்பளமான குறைந்தபட்ச ஊதியம் ரூ. 4000/- கூட முதலாளிகள் தருவதில்லை. முதலில் அவர்களுக்கு என்ன வயது என்றாலும்... ரூ. 2500 தான். பிறகு ஒரு வருடம் கழித்து ரூ. 3000/- அல்லது ரூ. 3500/- என இரக்கப்பட்டு உயர்த்துகிறார்கள். இதில் பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு எந்த முதலாளியும் இ.எஸ்.ஐ.(மருத்துவ வசதி), வருங்கால வைப்பு நிதி (பி.எப்) கட்டுவதில்லை.

முதலாளிகள் தரப்பில் சொல்லும் சொத்தையான காரணம். "யாரும் சில மாதங்கள், சில நாட்கள் கூட வேலையில் தொடர்வதில்லை. அவர்களே இ.எஸ்.ஐ., பி.எப். வேண்டாம் என்கிறார்கள்" என சொல்கிறார்கள்.

இதில் பாதி பொய்; பாதி மெய். அவர்களின் கடுமையான உழைப்புக்கு கொடுக்கும் சம்பளம் சொற்ப சம்பளம். அதில் இ.எஸ்.ஐ,(1.75%) பி.எப்.(12%) என பிடித்தம் செய்தால் அவர்களின் வாழ்க்கை தேவைக்கு என்ன மிஞ்சும்? அதனால் வேண்டாம் என்கிறார்கள். மேலும், குறைந்த சம்பளம் என்பதாலேயே ரூ. 500/- சம்பளம் அதிகமாக வேறு யாராவது கொடுத்தால், எளிதாய் நகர்ந்தும் விடுகிறார்கள்.

அப்படியே பல தொழிலாளிகள் வருடக்கணக்கில் வேலை பார்த்தாலும், அவர்களே விரும்பி கேட்டாலும் முதலாளிகள் இ.எஸ்.ஐ, பி.எப். கட்ட முன்வருவதில்லை. லாப விகிதம் குறைந்துவிடும் என மிக கவலைப்படுகிறார்கள்.

மேலும், இ.எஸ்.ஐ. பி.எப். விதி என்ன சொல்கிறது என்றால்...ஒரு தொழிலாளி ஒரு நாள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலே அவர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப். கட்ட வேண்டும் என்று தான்.

இவர்களின் சிப்டு நேரம் என்பது 8 மணி நேரம் கிடையாது. குறைந்தபட்ச வேலை நேரம் 10 மணி நேரம் அல்லது 12 மணி நேரம். அதற்கும் மேலாக உழைத்தால் தான் ஊரில் உள்ள தன் குடும்பத்திற்கு பணம் அனுப்ப முடியும் என ஓவர் டைம் செய்கிறார்கள். ஆக 14 மணிநேரம், 16 மணி நேர உழைப்பு என்பது சர்வ சாதாரணமாக நடைமுறையில் இருக்கிறது. காலசக்கரம் மீண்டும் திரும்பி சுற்றுகிறது.

இப்படி கடுமையாக உழைக்கும் இந்த தொழிலாளர்களை நடத்தும் விதம் இருக்கிறதே! கொடுமை. ஐம்பது வயது தொழிலாளி என்றாலும் வா! போ! என ஒருமையில் அழைப்பது , சகட்டுமேனிக்கு திட்டுவது என மிக மோசமாக நடத்துகிறார்கள்.

பல மாநிலங்கள் கடந்து வருவதால்.. பெரும்பான்மையான தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களை உடன் அழைத்து வருவதில்லை 20 வயதிலேயே பெரும்பான்மையான வட மாநில தொழிலாளிகளுக்கு திருமணம் முடிந்திருக்கிறது. இவர்களுக்கு முதலாளிகள் தான் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்து தருகிறார்கள். ஒரு குடவுன் போல உள்ள அறையை 8க்கு 8 அடி என மறைப்பு கொடுத்து... ஒரு அறையில் 6 பேர் என தங்க வைக்கிறார்கள். அந்த அறையில் சுத்தமுமில்லை: சுகாதாரமுமில்லை.

அடிப்படை சம்பளம் இல்லை, 8 மணி நேரம் உழைப்பு என்கிற அடிப்படை உரிமைகள் இல்லை; சுகாதாரமான தங்குமிடம் இல்லை: மோசமாக நடத்துவது - கொத்தடிமை முறைக்கும், இந்த தொழிலாளர்களுக்கும் என்ன வித்தியாசம்?

இப்படி லட்சகணக்கான வட மாநில தொழிலாளர்களின் மோசமான நிலை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியாமலா இருக்கப் போகிறது. நிச்சயம் தெரியும். இவர்களை முதலாளிகள் கொள்ளையடிப்பதற்காக... கண்டும் காணாமல் இருக்கின்றன.

தொழிற்சாலைகளை கண்காணிக்கிற இ.எஸ். ஐ., (ESIC), பி.எப்.,(P.F) தொழிற்சாலை (Inspector of Factories) ஆய்வாளர்கள் எல்லாம்.. முதலாளிகள் எவ்வளவுக்கெவ்வளவு தப்பு செய்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு லஞ்சத்தை அன்பாகவோ அல்லது மிரட்டியோ வாங்கி கொண்டு சென்று விடுகிறார்கள். அபூர்வமாய் (அபூர்வம் தான்) லஞ்சம் வாங்காமல் யாரேனும் அதிகாரி வந்தால்... அவர்களிடம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை காண்பிக்காமல் இழுத்தடித்து விடுகிறார்கள்.

கல்வியறிவு, விழிப்புணர்வு, மொழி, அடிக்கடி இடம் மாறுவது என பல சிக்கல்களினால்.. வட மாநில தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அரசியல் படுத்தி தொழிற்சங்கம் கட்டுவது தொழிற்சங்கங்களுக்கு சிரமமானதாக இருக்கிறது. இருப்பினும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி போன்ற புரட்சிகர தொழிற்சங்கங்கள் கடந்த காலங்களிலும், சம காலத்திலும் இவர்களை ஒன்று திரட்டி, சங்கம் கட்டி, போராட வைத்து வெற்றிகரமாக உரிமைகளை வெல்ல வைத்திருக்கிறது.

மத்திய, மாநில அரசுகள் இவர்களின் துயரை துடைக்கும் என்பது கானல் நீர் தான். கடந்த 10 ஆண்டுகளில் நம் விவசாயிகள் லட்சகணக்கானக்கில் (தற்) கொலையால் சாகும் பொழுது கூட கண்டு கொள்ளாத அரசு, இவர்களின் துயரத்தையா துடைக்கப்போகிறது.

தன் துயரங்களை தீர்ப்பதற்கு போராட்டத்தை தவிர வேறு குறுக்கு வழிகள் ஏதுமில்லை!

தொடர்புடைய சுட்டிகள் :



October 26, 2010

தொழிலாளர்களின் உரிமை : போனஸ்?

எந்த தொலைக்காட்சி சானலை பார்த்தாலும், பண்டிகை கால விளம்பரங்கள் கொல்கின்றன. தீபாவளி வரைக்கும் தொலைக்காட்சி பார்க்காமல் இருந்தால் நல்லது என நினைக்கிறேன்.

பண்டிகைகள் வந்தால்... பணம் உள்ளவர்களுக்கு குஷி. இல்லாதவர்களுக்கு சுமை. அதுவும் தீபாவளி என்றால்... மிகப்பெரிய சுமை தான். தீபாவளி செலவுகளை தாக்குப்பிடிக்க உதவுவது..போனஸ் என்பது மிகப்பெரிய ஆறுதல். இன்றைக்கு எல்லா அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும் போனஸ் பற்றிய பேச்சு தான் பரவலாக இருக்கும்.

பல தொழிலாளர்கள் போனஸ் என்றால் ....முதலாளி இரக்கப்பட்டு பண்டிகை கொண்டாட போனஸ் தருகிறார்கள் என தவறாக நினைத்துக்கொண்டிருப்பார்கள். இப்படி பல தவறான அபிப்ராயங்கள் பலரிடம் உலாவுகின்றன. உண்மை பலருக்கும் தெரிவதில்லை. அதனால் சில தகவல்களை பகிர்வதற்காக இந்த பதிவு. நம் வசதிக்காக... கேள்வி பதில் வடிவத்தில்.

தொழிலாளர்களின் உரிமை : போனஸ்?

ஆம். முதலாளிகள் இரக்கப்பட்டு, பெருந்தன்மையாக தருவதல்ல இந்த போனஸ். சம்பளம் போல நம் உழைப்புக்கு தருவது தான் இந்த போனஸ். போனஸ் சம்பந்தமாக ஒரு வழக்கு 6 மாதத்திற்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்பில்...போனஸ் தொழிலாளர்களின் உரிமை என தீர்ப்பு வழங்கியது.


தொழிற்சாலை நட்டத்தில் இயங்கினால்... நிறுவனம் போனஸ் தர தேவையில்லையா?

நிதி மூலதன சூதாடிகள் பங்கு சந்தையில் ஏகமாக விளையாடி, கொள்ளையடித்ததின் விளைவாக வரலாற்றில் இதுவரை சந்தித்திராத மிகபெரிய நெருக்கடியை முதலாளித்துவ உலகம் சந்தித்து.. இன்னும் மீள முடியாமல் திணறிக்கொண்டிக்கிறது. இந்த நெருக்கடியை தொழிலாளர்கள் தலையில் தான் இறக்கியது முதலாளித்துவம். வேலையில்லை என துரத்தினார்கள். வருடக்கணக்கில் போராடி பெற்ற உரிமைகளை எளிதாக வெட்டினார்கள். இதன் தொடர்ச்சியில் போனஸ் கூட இல்லையென்பார்கள்.

ஒரு நிறுவனம் நட்டத்தில் இயங்கினாலும் போனஸ் தரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டியிருக்கிறது. (லாபத்தில் நிறுவனம் கொழித்தால்... தொழிலாளர்களுக்கு அள்ளியா தரப்போகிறார்கள் முதலாளிகள்?)

ஆதாரம் : இந்த ஆண்டு பி.எஸ்.என்.எல். - அரசு தொலை தொடர்பு நிறுவனம் நட்டத்தில் இயங்குவதால்(!) ஊழியர்களுக்கு போனஸ் தர மறுத்துவிட்டது. இப்பொழுது, உச்சநீதி மன்ற வழிகாட்டலை நிறைவேற்ற சொல்லி, போராடி கொண்டிருக்கிறார்கள் பி.எஸ்.என்.எல். தொழிலாளர்கள்.

ஒரு தொழிலாளி ஒரு வருடம் வேலை செய்தால் தான் போனஸ் பெற தகுதியானவரா?

தொழிலாளர்கள் வருடக்கணக்கில் போராடி சில உரிமைகளை பெற்றால்.. அந்த அரசு விதியை கூட பெரும்பாலான முதலாளிகள் கடைப்பிடிப்பதேயில்லை. சட்டம் ஒன்று சொன்னால்..அவர்களாகவே அவரவர் நிறுவனத்திற்கென்று ஒரு விதியை உருவாக்கி வைத்துக்கொள்வார்கள்.

ஒரு நிறுவனத்தில் ஒரு தொழிலாளி 30 நாட்களுக்கு மேலே வேலை செய்தாலே அவர் போனஸ் பெற தகுதியானவர்.

ஒப்பந்த தொழிலாளி - போனஸ் பெற தகுதியானவரா?

சட்டப்படி நிரந்தர தொழிலாளியும், ஒப்பந்த தொழிலாளியும் சமமானவர் தான். இ.எஸ்.ஐ., வருங்கால வைப்பு நிதி சட்டங்கள் இதை தான் நிரூபிக்கின்றன. ஆனால், கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக... ஒப்பந்த தொழிலாளி என்கிற முறையை உருவாக்கி முதலாளிகள் அடிக்கும் கொள்ளை அநியாயம்.

ஒப்பந்த தொழிலாளியும் நிரந்தர தொழிலாளியைப் போலவே மேலே சொன்னது போல தகுதியானவர் தான்.

என்னளவில் தோன்றிய சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளேன். வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். பதில் சொல்ல விழைகிறேன்.

October 19, 2010

தொழிலாளர்களின் சேமிப்பு பணத்தை சூறையாட துடிக்கும் "மக்கள் நல அரசு"!



தொழிலாளர்களின் சேமிப்பு பணமான வருங்கால வைப்பு நிதியின் (Provident Fund - PF) இன்றைய கையிருப்பு ரூ. 5 லட்சம் கோடிகள். இந்த பணத்தை பங்கு சந்தை சூதாட்டத்தில் இறைக்க சொல்லி, மத்திய அரசு தனது நிதி அமைச்சகம் மூலமாக வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தை வற்புறுத்துகிறது.

கடந்த 58 ஆண்டுகளாக வருங்கால வைப்பு நிதி பணத்தை அரசு வங்கியான எஸ்.பி.ஐ. தான் நிர்வகித்து வந்தது. இவ்வளவு பணமும் இவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறதே என நினைத்த மன்மோகன்சிங் அரசு, 2008ல் முதன்முறையாக பி.எப். பணத்திலிருந்து 2.5 லட்சம் கோடியை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேப்பிடல், ஐசிஐசிஐ புரூடன்சியல், HSBC போன்ற தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தூக்கி தந்தது. அந்த பணத்தின் கதியே இன்றைக்கு என்ன நிலை என்று தெரியவில்லை.

அந்த சமயத்தில், நாடு முழுவதும், தொழிற்சங்கங்கள் தனது எதிர்ப்பை காட்டின. இப்பொழுது இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் மீதியுள்ள பணத்தையும் பங்கு சந்தையில் கொட்ட காய் நகர்த்துகிறது. இதற்காக சமீபத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், "பங்குச் சந்தையில் போடலாம்! ஆனால், அப்படி போடுகிற பணத்திற்கு அரசு உத்திரவாதம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்காத பட்சத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட மாட்டாது" என்று பி.எப். நிதியை நிர்வாகம் செய்யும் மத்திய அறங்காவலர் வாரியம் அரசுக்கு தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தையில் நிதி மூலதன சூதாடிகள் பந்தய ஒப்பந்தங்கள் மூலமாகவும் பல்வேறு வகைகளில் விளையாடி தான், உலகமே நிதி நெருக்கடிக்குள் சிக்கியது. அதிலிருந்தே முதலாளித்துவ உலகம் மீளமுடியாமல் சிக்கி திணறிக்கொண்டிருக்கிறது. சீட்டு விளையாடுபவன் விளையாடி கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் கை நடுங்கும் அல்லவா! அது போல உலகம் முழுவதுமே நிதி மூலதன சூதாடிகள் எங்கெல்லாம் பாதுகாப்பாக பணம் இருக்கிறதே அதையெல்லாம் பங்குச்சந்தையில் கொட்டு என எல்லா அரசுகளையும் மிரட்டி வருகிறார்கள். இந்தியாவில், மன்மோகன் சிங் தான் நிதிமூலதன சூதாடிகளுக்கு நல்ல விசுவாசமான ஆள் அல்லவா! அதனால், பி.எப். நிதியை சூறையாட துடியாய் துடிக்கிறார்.

இதன் அபாயத்தை தொழிலாளர்கள் உணர்ந்து, நாடு முழுவதும் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். ஏற்கனவே நடத்திய போராட்டங்களின் விளைவாக தான் "உத்திரவாதம் தா!" என பேச வைத்திருக்கிறது. ஆகையால் தொழிலாளர்கள் இறுதிவரை தொடர்ந்து போராட வேண்டும்.

தொடர்புடைய சுட்டிகள் :

அரசு உறுதி அளிக்காதவரை பி.எஃப். பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட மாட்டாது: மத்திய தொழிலாளர் நலத்துறை

October 11, 2010

போபால் - முகிலனின் ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு!










- நன்றி : புகைப்படங்கள் : பதிவர் சந்தனமுல்லை

October 9, 2010

போபால் -‍ ஓவியக்காட்சி! அனைவரும் வருக!


கற்பனைக்கு அடங்கா
மனவெளிக்கு அழைத்துச் சென்று
மகிழ்ச்சியின் நிழல் பரப்பும்,
வண்ணப் பூச்சுக்கள் இல்லை.

துரோகமும், லாபவெறியும்
கைகோர்த்துக் கொண்டு
போபால் வீதிகளில்
வீசியெறிந்த பிணங்களின் குவியல்,
அதற்காக,
இன்றும் கதறிடும்
அழுகையும் விம்மலும்
செவியில் அறைந்து கொண்டிருக்க,
தூரிகையை வண்ணங்களில் புதைத்து
அழகு பார்ப்பது முரணின் உச்சம்.
நீதிக்கான குரலை
கோடுகளால் பேசும்
கமாய் விரிகிறது…இந்த காட்சிப் படிமங்கள்.

1984, டிசம்பர் 2, போபால் – யூனியன் கார்பைடு:
துரோகத்தின் விலை என்ன?
ஓவியக் கண்காட்சி

ஓவியங்களின் வழியே கலைபூர்வமான
தன் எதிர்வினையைத் தருகிறார் தோழர் முகிலன் (ம.க.இ.க)

ஓவியக் காட்சியை திறந்து வைக்கிறார் -‍ ஓவியர் மருது

ஓவியக் காட்சி பற்றி கலந்துரையாடல்: மாலை 6 முதல் 7.30வரை

நாள்: 10.10.2010 ( காலை 8 முதல் இரவு 8 வரை)

இடம்: செ.தெ.தெய்வநாயகம் மேல்நிலைப்பள்ளி, தியாகராயநகர், வெங்கட்நாராயணா சாலை, நடேசன் பூங்கா அருகில்.

- மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை

October 5, 2010

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!


ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''

படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!

ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...

வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?

நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.

இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.

தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்! -

கட்டுரையாளர் : சமஸ், தினமணி, 05/10/2010