> குருத்து: January 2016

January 29, 2016

ஒரு விபத்து : அனுபவமும் படிப்பினையும்!



டந்த வாரம் வேலை முடிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையை கடந்த பொழுது, பரபரப்பான அந்த சாலையில் விளக்கு எரியாமல் இருட்டாக இருந்தது. அங்கு சிறு கூட்டம் கூடியிருந்தது. 24 வயதுடைய இளைஞனை சாலையோரமாய் கிடத்தியிருந்தார்கள். உடம்பில் எங்கும் அடியில்லை. பின்னந்தலையில் அடிபட்டு, ரத்தம் வந்திருந்தது. காதில் ரத்தம் வெளிவந்து உறைந்து போயிருந்தது.


சாலை விபத்து
(படம் – இணையத்திலிருந்து, விளக்கத்துக்காக மட்டும்)

பலரும் 108 ஆம்புலன்ஸை அழைத்தார்கள். எல்லா ஆம்புலன்ஸும் பிஸியாக இருந்ததாக சொன்னார்கள். நேரம் போய்க்கொண்டேயிருந்தது. ஒருவர் அங்கு கடந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தி விசயத்தை சொல்ல, பயணிகளை இறக்கிவிட்டு அந்த பையனை நான்குபேர் தூக்கி போட்டுக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு நகர்ந்தார்கள்.

இந்த களேபரத்தில் அந்தப் பையனிடமிருந்து எடுத்த செல்போனை யாரோ சுட்டுவிட்டார்கள். அந்த ஹோண்டா வண்டியில் சைடில் இருந்த பெட்டியில் ஆர்.சி. ஜெராக்ஸ் தாளில் இருந்த ஒரு எண்ணை கண்டுபிடித்து பேசிய பொழுது அடிப்பட்டவருடைய தம்பி பேசினார். உடனே மருத்துவமனைக்கு வரச்சொன்னோம்.

ஆம்புலன்சுக்கு போன் செய்யும் பொழுதே, அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள காவல்நிலையத்திற்கும் ஒருவர் போன் செய்து தெரிவித்தார். அந்தப் பையனை அவ்வளவு போராட்டத்திற்கு பிறகு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற பிறகு, காவல் நிலையத்திலிருந்து ஒரு போலீசும், போக்குவரத்து காவலர் ஒருவரும் அசமந்தமாய் வந்து சேர்ந்தனர். வண்டியை செந்நீர் குப்பம் எடுத்து செல்வதாய் தெரிவித்தார். அடிபட்டவருடைய செல்லை திருடிவிட்டார்களே என பொதுமக்களில் இருவர் மிகவும் ஆதங்கப்பட்டனர்.

இந்த விபத்தில் கவனிக்கத்தக்கவை :
  • தலையில் அடிப்பட்டு காதில் ரத்தம் வந்து கொண்டிருந்த அந்தப் பையனுக்கு ஒவ்வொரு நொடியும்  முக்கியமானது. ஆனால் 108 ஆம்புலன்ஸ் வெகுநேரமாகியும் வந்து சேரவில்லை.
  • 1970-களில் எம்.ஜி.ஆர் படங்களில் படத்தில் இறுதிக்காட்சியில் வருவது போலவே இப்பொழுதும் சாகவாசமாய் போலீசு வந்து சேர்கிறது. வந்தும் கூட எந்தவித பதைபதைப்பும் இல்லை.
  • அம்பத்தூர் தொழிற்பேட்டை என்பது சென்னையில் முக்கியமான தொழிற்பேட்டை. அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து வாவின் வரும் வழியில் உள்ள பிரதான சாலையில் தான் விளக்கெரியாமல் கும்மிருட்டாக இருந்தது. இந்த விபத்துக்கு அடிப்படை காரணம் இருட்டுதான். இந்த தொழிற்பேட்டையை பராமரிக்கும் பொறுப்பு AIEMA (AMBATTUR INDUSTRIAL ESTATE MANUFACTURER’S ASSOCIATION) -க்கு தான்! அந்த நாள் மட்டுமில்லை. அதற்கடுத்து வந்த நாட்களும் அங்கு கும்மிருட்டாக தான் இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் சாலை பராமரிப்பு, பார்க்கிங் பிரச்சனை, கால்வாய் பராமரிப்பு என பல பிரச்சனைகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நிலவுகின்றன. அய்மாவின் தொடர்ச்சியான அலட்சியம் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகிறதோ!
  • இதே சாலையில் தான் தினமணியும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள் இயங்கிவருகினறன. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பல அடிப்படை பிரச்சனைகளை தொடர்ந்து அம்பலப்படுத்தினாலே ஓரளவு நிலைமை சீராகும். செய்வதில்லை.
கவலைதரும் அம்சங்கள் :
  • அந்தப் பையனின் வண்டியில் முன்னாடி உள்ள பம்பர் நன்றாக வளைந்து வண்டியோடு ஒட்டிப் போயிருந்தது. பையனின் வண்டியை இடித்த நபருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பேயில்லை. இடித்துவிட்டு வண்டியை நிறுத்தாமல் போயிருக்கிறான்.
  • ஒரு உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் பொழுது, காப்பாற்ற வேண்டிய வேண்டிய நேரத்தில் செல்லை சுட்டு நகர்ந்த நபர். நுகர்வு கலாச்சாரம் மனிதர்களை இந்த அளவுக்கு சீக்குப்பிடித்த நபராக மாற்றுகிறது.
நம்பிக்கை தரும் அம்சங்கள் :
  • அந்த பையனை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் பதறி, மருத்துவமனைக்கு தூக்கி சென்ற மனிதர்கள்.
  • தனது ஷேர் ஆட்டோவில் முழுவதுமாய் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு, பையனை தூக்கிச் சென்ற அந்த ஆட்டோகாரர்.
இரண்டு மூன்று நாட்கள் சாலையில் கிடத்தப்பட்டிருந்த அந்த பையனின் உருவம் நினைவில் ஓடிக்கொண்டேயிருந்தது. நடந்த நிகழ்வுகளை அசைபோடும் பொழுது, எனக்கென்னவோ சமூகம் கூட அந்தப் பையனின் நிலையில்தான் இருப்பதாகப் படுகிறது.


நன்றி : வினவு தளத்தில் 29/01/2016 கட்டுரை வெளிவந்தது.

அடிபட்டவர் நலமுடன் இருக்கிறார்!

இன்றைக்கு ஆவடி வரைக்கும் ஒரு வேலை இருந்தது.  அப்படியே அடிப்பட்டவரை நலம் விசாரிக்கலாம் என தோன்றியது. அடிப்பட்டவரின் ஓட்டுநர் உரிமத்தை அன்றைக்கு பார்த்தப்பொழுது வீடு திருமுல்லைவாயிலிருந்து, செங்குன்றம் போகிற வழியில் ஒரு கிராமம் தான் வீடு.  ஊரில் அந்த பையனின் தெருவிலிருந்து நாலு தெரு தள்ளி ஒரு கடையில் கேட்ட பொழுது கூட அந்த பையனைப் பற்றி சொன்னார்கள்.  இதெல்லாம் கிராமத்தில் மட்டும் தான் சாத்தியம்.

வீட்டிற்கு போன பொழுது, அடிபட்டவர் படுத்துக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டிருந்தார்.  ராம்கி, நிலம் விற்கும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். அன்றைக்கு அலுவலக வேலை சம்பந்தமாக மதுராந்தகம் வரை போய்விட்டு திரும்பும் பொழுது தான் அடிப்பட்டிருக்கிறது. எப்படி விபத்து நடந்தது என்பது அவருக்கு சுத்தமாக நினைவில்லை. என்னை இடிச்ச ஆள், நிற்கவேயில்லை என சொன்னார்கள் என்றார்.  ஹெட்மெட் போடாமல் பெட்ரோல் டாங்கில் வைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.  தலையில் அடிப்பட்டதினால் நாலு நாள் சொந்த அம்மாவையே அடையாளம் காணமுடியவில்லையாம்.  பிறகு நினைவுகள் திரும்ப வந்திருக்கின்றன.   வலது முட்டியில் தான் பலத்த அடி.  அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். ரூ. 50000 வரைக்கும் செலவானதாம்.

செல் காணாமல் போச்சுன்னு சொல்லிட்டுருந்தாங்க! உங்ககிட்ட அதுக்கப்புறம் யாரும் கொடுத்தார்களா? என்றதற்கு, ”இல்லண்ணா” என்றார்.  ”பர்சும் கூட காணாம போச்சுண்ணா! நிறைய பணம் இருந்ததுண்ணா” என்றார்.  அந்த களேபரத்தில் அவர் பர்சில் ஏதாவது போன் நம்பர் இருக்கிறதா என பார்ப்பதற்காக, வேகமாக பர்சை எடுத்து பார்த்த நபரை அன்றைக்கு கவனித்தேன். இப்பொழுது அந்த முகத்தை நினைத்துப் பார்க்கிறேன்.  சுத்தமாக நினைவில்லை!

January 28, 2016

காந்தி தப்பித்துவிட்டார்!

இன்றைய தமிழ் இந்து நாளிதழில் கட்டுரையாளர் சமஸ் சாதிய விசயத்தில் காநதியின் நடத்தை குறித்து நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார்.  இதற்கு சரியான எதிர்வினைகளை இடதுசாரி தரப்பிலிருந்து யாராவது அழுத்தமாக எழுதுவார்கள் என எதிர்பார்க்கிறேன்!

இந்த கட்டுரையைப் படித்து தோழர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது ”காந்தி” சம்பந்தமாக சமீபத்திய ஒரு காவல் நிலையம்  தொடர்பான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்!
டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்கள் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. இடையில்  காந்தியவாதி சசிபெருமாள் மரணத்திற்கு பிறகு, பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் கடையை நொறுக்கியதும், தமிழ்நாடு தழுவிய அளவில் கடைகளை தன்னெழுச்சியாகவும், அமைப்பு ரீதியாகவும் பலரும் கடையை அடித்து நொறுக்கினார்கள்.  அதில் மக்கள் அதிகாரம் தோழர்கள் முன்னணியில் நின்றார்கள் என்பது அனைவரும் அறிந்த விசயம். வருகிற பிப்ரவரியில் 14 தேதியில் கூட டாஸ்மாக்கை எதிர்த்து திருச்சியில் சிறப்பு மாநாடு வேலைகளில் பரபரவென இருக்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியில், தென் தமிழகத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஒரு பகுதியில் மக்கள் மத்தியில் தொடர்ந்து டாஸ்மாக் எதிர்ப்பு பிரச்சாரம், கடையில் சாணியடிப்பது, கடையை நொறுக்குவது என போய்க்கொண்டிருந்த பொழுது, போலீசு இரண்டு தோழர்களை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளது.  தொடர்ந்து குடைச்சல் தருகிறார்களே என்ற கடுப்பில், ”நம்ம நீதியரசர்கள்” பாணியில் காந்தியின் அகிம்சை குறித்து தங்களுக்கு தெரிந்த அரைகுறை விசயங்களுடன் தோழருக்கு ”போதித்திருக்கிறார்கள்”. அதிகபட்சமாக போய், காந்தி குறித்து இரண்டு பக்க அளவில் எழுதி தர கேட்டிருக்கிறார்கள். (மனசில ஆழப்பதியனுமாம்!)   ”காந்தி பற்றி எழுதி கேட்பதற்கெல்லாம் உங்களுக்கு உரிமையில்லை. இருப்பினும் நீங்கள் ”மிகவும் விருப்பப்பட்டு” கேட்பதால் எழுதி தருகிறோம்.  அதற்கு பிறகு மனம் புண்பட்டுவிட்டது என சொல்லக்கூடாது!” என பதிலளித்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் வழக்குரைஞர் வந்துவிட, பேச்சு வேறு திசையில் திரும்பிவிட்டது. தோழர்களிடமிருந்து ”காந்தி தப்பிவிட்டார்”. :)

January 22, 2016

மறந்து போச்சு!

நல்ல தமிழ்படங்கள் பார்த்த நேரம் போக, வேற்றுமொழி படங்களும் பார்ப்பது வழக்கம்! பிற மொழிப்படங்களின் தரத்தை உரசிப் பார்க்க சமீப காலங்களில் IMDB உதவுகிறது.  10க்கு 7 மார்க் வாங்கினால், மினிமம் கேரண்டி கிடைக்கிறது. சில சமயங்களில் சொதப்பவும் செய்கிறது!

அப்படித்தான் நானி நடத்த தெலுங்கு படமான Bhale Bhale Magadivoy (You are a strange man) பார்த்தேன்.  நகைச்சுவை காதல் படம் என வகைப்படுத்தலாம்.

சிறு வயதிலிருந்தே நாயகனுக்கு மறதி ஒரு பெரும் பிரச்சனை.  ஒரு வேலையில் ஈடுபடும் பொழுது, வேறு ஒரு வேலை குறுக்கிட்டால் அதிலேயே மூழ்கிப்போவது!  உதாரணத்துக்கு உங்களுக்கும் சேர்த்து ஒரு படத்துக்கு டிக்கெட் எடுத்துவிட்டு,  வேறு வேலையில் மூழ்கி வராமல் போனால், திரையரங்கு வாயிலில் காத்திருக்கும் உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்?

திருமணம் என வரும் பொழுது சிக்கலாகிறது. அவமானப்படுத்தப்படுகிறான்.  இதற்கிடையில் காதலில் விழுகிறான். காதலியிடம் தனது பிரச்சனையை சொல்லாமல், மறைத்து தான் சொதப்பும் பொழுதெல்லாம் கதை சொல்லி தப்பித்து, இறுதியில் மாட்டி, அவனுடைய இயல்பான நல்ல குணத்தால் காதல் கல்யாணத்தில் முடிகிறது!

கொஞ்சம் மிகையாக தெரிந்தாலும், கற்பனையான பிரச்சனையல்ல!  ஒரு நேரத்தில் ஒரு வேலை செய்கிற நபர்களை சந்தித்திருக்கிறேன். இன்னொரு வேலை வந்தால், அதையும் திட்டமிட்டு நகர்த்தாமல், இரண்டு வேலைகளையும் குழப்பிக்கொள்கிற ஆட்கள் இருக்கிறார்கள். மருத்துவரீதியாக இது என்ன பிரச்சனை? எப்படி கையாள்வது என்பதை கொஞ்சம் விளக்கியிருக்கலாம். எதுவும் இல்லை!  நகர்த்தும் காட்சிகளில் கூட அத்தனை புதுமையில்லை.

நீங்கள் இது மாதிரி ஆட்களை பார்த்திருக்கிறீர்களா? தெலுங்கில் நன்றாக ஓடிய படம் என்கிறார்கள்.

January 21, 2016

நினைவுகள் தொலைகிற பொழுது!

உறவினர் ஒருவர் சிங்கப்பூர் நிறுவனத்தில் முதன்மை கண்காணிப்பாளராக (Chief Supervisor) சில ஆண்டுகளாக பணிபுரிகிறார்.  சென்னையை விட பல மடங்கு பரபரப்பான ஊர் சிங்கப்பூர்.   அவருக்கான வேலை கூட பத்து மணி நேரத்திற்கும் மேலே!  அவருக்கு கீழே பல பணியாளர்களை கண்காணிக்கிற வேலை!  எல்லாமும் சேர்ந்து ஒரு நாள் காலையில், வேலைக்கு கிளம்பும் பொழுது, மயங்கிவிழுகிறார். நினைவு திரும்பும் பொழுது, தன் துணைவியாரையே அடையாளம் தெரியவில்லை.   சிங்கப்பூரில் தங்க வைக்க அனுமதி, படிக்க வைக்க, பராமரிக்க என எல்லா சிரமங்களும் சேர்ந்து, அவருடைய எட்டு வயது பையனை தாத்தா பாட்டி தான் வளர்த்து வருகிறார்கள்.  சட்டென தனது பையன் நினைவுக்கு வந்து, ஊருக்கு போய் உடனே பார்க்கவேண்டும் என பரபரக்கிறார்.  பிள்ளையை பிரிந்து இருக்கும் ஏக்கம் நினைவு அடுக்குகளில் இருந்து மேலே வந்துவிட்டது!

மருத்துவமனையில் சேர்த்து சில நாட்கள் இருந்தார்.  ஊரில் இருக்கும் பரபரப்பு சிங்கப்பூர் மருத்துவத்தில்  இல்லை.  விமான பயணத்தில் ஏதும் பயமில்லை என மருத்துவரின் ஆலோசனை பெற்று சென்னைக்கு கடந்த ஞாயிறு வந்து சேர்ந்தார்.  மருத்துவர் சத்யாவிடம் இந்த பிரச்சனை குறித்து ஆலோசனை கேட்டதற்கு, சென்னை பொது மருத்துவமனை, வேலூரி சிஎம்சி, பாண்டிச்சேரி ஜிப்மர் என பரிந்துரைத்தார்.  உறவினரின் நண்பர்களோ  அப்பல்லோவை பரிந்துரைத்து, சேர்த்து நேற்றுவரை அங்குதான் இருந்தார்.

ஒருநாள் மருத்துவர் நயந்தாரா புகைப்படத்தை காட்டி யாரென கேட்கும் பொழுது, “இவளை நல்லா தெரியுமே! ரெம்ப பிடிக்குமே!” என சொல்கிறார். ஆனால் பெயர் நினைவுக்கு வரவில்லை. அடுத்தநாள், டி.ராஜேந்தர் புகைப்படத்தை காண்பிக்கும் பொழுது, “டி.ராஜேந்தர்” என நொடி கூட தாமதிக்காமல் சொல்லிவிடுகிறார். என்ன ஒரு சோகம் இது! நயந்தரா பெயர் மறந்துவிடுகிறது! டி.ராஜேந்தர் பெயர் நினைவில் நிற்கிறது.

பல விசயங்களையும், செய்திகளையும் சொல்லி அவரிடம் நிறைய விவாதிக்கவேண்டும் என மருத்துவர் ஆலோசனை சொல்லியிருக்கிறார். அவரின் இயல்போ பேசுவதை விட, செயல்படுவதில் தான்  ஆர்வமாய் உள்ளவர். நகைமுரண் தான்!

நினைவுகள் தான் வாழ்க்கை.  நினைவுகள் மூளையில் ஒரு மூளையில் ஒளிந்து கொள்கிற பொழுதோ, தொலைந்து போகிற பொழுதோ, முதலில் இருந்து துவங்க வேண்டுமோ?! எவ்வளவு பெரிய துயரமிது!

- சாக்ரடீஸ்