> குருத்து: October 2009

October 30, 2009

பலான தியேட்டர்களும்! அரசின் ஒத்துழைப்பும்!


ஷகீலா படங்களுக்கு புகழ்பெற்ற பரங்கிமலை ஜோதி, போரூர் பானு, ஆதம்பாக்கம் ஜெயலட்சுமி வரிசையில்... நெற்குன்றம் ஈகிள் திரையரங்கு கடந்த வாரம் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஷகீலா ரசிகர்கள் நிச்சயம் குலுங்கி, குலுங்கி அழுதிருப்பார்கள்.

மதன மர்ம மாளிகை, சாயாக்கடை சரசு, மாயக்கா, ட்யூசன் டீச்சர் போன்ற ஷகீலா படங்களைப் பற்றி சில பதிவுகளில் லக்கிலுக்கும், சுகுணாதிவாகரும் பேசியிருக்கிறார்கள். இந்த பதிவு அந்த படங்களைப் பற்றி அல்ல! அந்த படங்களை திரையிடும் திரையரங்குகளைப் பற்றியது!

மதுரவாயிலில் இயங்கும் ஈகிள் திரையரங்கு இப்படித்தான் தமிழ்படங்களை திரையிட்டு கொண்டிருந்தார்கள். மூன்று வருடங்களுக்கு முன்பு, நண்பனுடன் ஒரு நாள் இரவு 'குமரன் s/o. மகாலட்சுமி' என்ற படத்திற்கு தப்பி தவறி போய், போன கால்மணி நேரத்தில் வெளியே வந்துவிட்டோம். எல்லாமே மோசம். தரையிலிருந்து, சவுண்ட் சிஸ்டம் வரை. அடுத்து வந்த சில நாட்களில், பலான படங்களை திரையிட துவங்கினார்கள்.

இப்படி பலான படங்களை வெளியிடும் திரையரங்குகளின் தகுதி மோசமான சேர்ஸ், மோசமான ஸ்கீரின், மோசமான கழிவறை என எல்லா மோசங்களும் அடங்கியது தான். பொதுவாக தமிழ் படங்களை திரையிடும் திரையரங்குகள் கொஞ்சம் கொஞ்சமாய் பராமரிப்பை கைவிடும் பொழுது மக்கள் அந்த திரையரங்குக்கு போவதை கொஞ்சம் கொஞ்சமாய் தவிர்க்கிறார்கள். ஒரு கட்டத்தில்... திரையரங்கை நடத்த வேண்டும். "மக்களும் வரவேண்டும்" என்கிற பொழுது... பலான வகை படங்களை திரையிட துவங்குகிறார்கள். மோசமான பராமரிப்பு, கூடுதல் கட்டணம் வசூல் என்பது இந்த திரையரங்கிற்கான தகுதி. இரண்டு மாநகராட்சி, நிறைய நகராட்சிகளை கவனித்த பொழுது இதுதான் எதார்த்த நிலைமை. விதிவிலக்குகள் இருக்கலாம்.

இப்படிப்பட்ட திரையரங்குகள் ஒருவேளை கைமாறும் பொழுது, செலவழித்து திரையரங்கை புதுப்பிக்கும் பொழுது மீண்டும் பலான படங்களை திரையிடுவதில்லை. ஏனென்றால், என்ன தான் மாதம் மாதம் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கோ அல்லது திரைப்பட கண்காணிப்பு சார்ந்த அரசு அதிகாரிகளை 'கவனித்தாலும்' ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஒப்புக்கு ஒருமுறை பலான பிலிமை கைப்பற்றி ஆபரேட்டரையும், திரையரங்கு நிர்வாகியையும் கைது செய்து, வழக்குப் போடுகிறார்கள். இது மானக்கேடாய் ஆகிவிடுகிறது.

ஆக, அரசு மக்கள் கூட்டம் கூட்டமாய் செல்லும் திரையரங்கை, அதற்கு உரிய பராமரிப்பை செய்ய சொல்லி, கறாராய் இருந்தாலே போதும். பலான திரையரங்குகள் உருவாவதை தடுக்க முடியும்.

இந்த அரசு மக்களைப் பற்றி கவலைப்பட்டது? மதித்தது? அந்தந்த பகுதியில் இயங்கும் முற்போக்கு அமைப்புகள், சமூக மன்றங்கள், குடியிருப்பு சங்கங்கள் ஒன்றாய் சேர்ந்து....

"அரசே!

ஆபாச படங்களை திரையிட அனுமதிக்காதே!
திரையரங்கை இழுத்து மூடு!"


என போஸ்டர் ஒட்ட வேண்டும். அதற்கும் நடவடிக்கை இல்லையெனில்... மக்களை ஒன்று திரட்டி, உருட்டை கட்டைகளை எடுத்து போய் நிர்வாகிகளை உதைக்க வேண்டியது தான். நிலைமை சரியாகிவிடும்.

தமிழக வரலாற்றில் இப்படி ஏற்கனவே நடந்திருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் தீபா, ரூபா என இரண்டு திரையரங்குகள் இருந்தன. மேலே சொன்ன மோசமான எல்லா தகுதிகளுக்கும் திரையரங்கு வந்தடைந்த பொழுது, ஆபாச படங்களை திரையிட துவங்கினார்கள். ஒருமுறை புரட்சிகர பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பெண் தோழர்கள் குழு உள்ளே நுழைந்து... பிலிமை எடுத்து வந்து, முக்கிய சாலையில் கொண்டுவந்து நடுரோட்டில் போட்டு கொளுத்தினார்கள். தமிழகம் முழுவதும் பரபரப்பான செய்தி அது.

மக்களுக்கான புரட்சிகர இயக்கங்கள் வளர வேண்டும். அது ஒன்றே இதையெல்லாம் தீர்க்க வழி.

October 13, 2009

லஞ்சம் விளையாடும் புழல்சிறை!


இந்த நாட்டில் சட்டத்தை மீறுபவர்கள் முதலில் யார் என போட்டி வைத்தால் நிச்சயமாய் காவல்துறை தான் ஜெயிக்கும். காவல்துறையின் சகல நடவடிக்கைகளிலும் மக்கள் இதை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.

காவல்துறையின் கண்காணிப்பில் உள்ள சிறையும் இதில் விதிவிலக்கல்ல! புழல் சிறையில் லஞ்சமும், முறைகேடுகளும் மலிந்திருக்கின்றன என்ற தொடர்ச்சியான புகார்களின் அடிப்படையில்... வரலாற்றில் முதன் முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருக்கிறது.

கடந்த வாரம் எஸ்.பி, டி.எஸ்.பிக்கள் அடங்கிய 50 பேர் கொண்ட ஒரு குழு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறை என்று பெயர் பெற்ற சென்னை புழல் சிறையில் சோதித்தனர்.

சிறையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான பீடி, சிகரெட், பான்பராக், குட்கா தாராளமாய் கட்டு கட்டாய் சிக்கியிருக்கின்றன. கைதிகளுக்கான உணவு பொருட்கள் அதன் உண்மை இருப்பைக் காட்டிலும் மிக அதிகமாகவோ அல்லது மிக குறைவாகவோ இருந்திருக்கின்றன. வெளி மார்க்கெட்டில் நிறைய கடத்தி விற்பனை செய்கிறார்கள் என்று எழும் புகார் தனி.

இது தவிர... ஆபாச டிவிடிக்கள் நிறைய சிக்கியிருக்கின்றன. அதுவும் துணை ஜெயிலர் அறையில் 21 ஆபாச சிடிக்கள் கிடைத்தனவாம். நான்கு கைதிகளின் அறையில் விதிமுறைகளை மீறி கேபிள் டிவி இணைப்புடன் தொலைக்காட்சி பெட்டிகள் இருந்திருக்கின்றன.



சிறை அதிகாரிகள், வார்டன்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை, கிளுகிளுப்பான படங்களை ஏன் கைதிகளுக்கு சப்ளை செய்கிறார்கள்? கைதிகள் மீது பாசமா? எல்லாம் பணத்திற்காக தான்.

சோதனையின் பொழுது.. சிறை அதிகாரிகள், வார்டன்கள், சிறை மருத்துவர் ஆகியோர்களிடம் சில ஆயிரம் லஞ்சப்பணம் சிக்கியிருக்கிறது.

வெளியே ஒரு சிகரெட் ரூ. 3 என்றால்.. சிறையில் ரூ. 10. வெளியே கஞ்சா பொட்டணம் ரூ. 5 என்றால்... உள்ளே பல மடங்கு. இது தவிர மருத்துவமனைக்கு போக வேண்டுமா? மருத்துவருக்கு லஞ்சம் கொடுத்தால்... அவர் பரிந்துரைப்பார். கறிக்கஞ்சி வேணுமா? மருத்துவருக்கு பணம் கொடுத்தால்... அவர் பரிந்துரைப்பார்.

ஏற்கனவே புழல் சிறையில் கடந்த துறை வாரியான சோதனையின் பொழுதே... 30க்கும் மேற்பட்ட செல்போன்கள், 2 பென்டிரைவர்கள், 12 கிலோ கஞ்சா சிக்கியிருக்கின்றன. மேலும் ஆபாச டிவிடிக்கள் சிக்கியிருக்கும் பொழுது...டிவிடி பிளேயரும் மாட்டியிருக்க வேண்டும். சிறையில் சகல நடவடிக்கைகளிலும், சகல மட்டத்திலும் லஞ்சம் விளையாடும் பொழுது, பிடிபட்ட பொருள்களும், பணமும் குறைவாக இருக்கிறதே என யோசிக்கும் பொழுது, அதற்கும் பதில் இருக்கிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை மதியம் 1 மணிக்கு போய் அனுமதி கேட்டு, வேண்டுமென்றே அரை மணி நேரத்திற்கும் மேலாக இழுத்தடித்து தான் உள்ளே அனுமதித்திருக்கிறார்கள். அரைமணி நேரத்தில் எவ்வளவோ மறைக்கலாமே!

சகல மட்டத்திலும் இப்படி லஞ்சம் விளையாடுவது அரசுக்கு தெரியாதா என்ன? எல்லாம் தெரியும். தெரிந்து... கண்டும் காணாமல் இருக்கிறது. சிறைக்கு வெளியே பத்திரிக்கைகள், பொதுமக்கள் என கண்காணிப்பு இருக்கும் பொழுதே சமூகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடும் பொழுது, சிறை காவல்துறையின் பேட்டை! அங்கு சொல்லவா வேண்டும்.

காசு கொடுத்தால் எல்லாம் கிடைக்கும் இந்த சிறையில் தான்.... அரசியல் ரீதியாக கைதாகும் முற்போக்கு மற்றும் கம்யூனிஸ்ட் தோழர்கள் சிறையில் இருக்கும் பொழுது தான், அவர்கள் ஒவ்வொரு அடிப்படை உரிமைக்கும் போராடும் பொழுது, அங்கு நடக்கும் முறைகேடுகள் பற்றிய செய்திகள் வெளியே வருகின்றன.

குற்றங்கள் புரிந்து உள்ளே செல்லும் கைதிகளை சீர்ப்படுத்தி, திருத்தி அனுப்பும் வேலையை சிறை செய்வதாக சொல்கிறார்கள். கிரிமினல்களே நிர்வகிக்கும் பொழுது.... இது எப்படி சாத்தியப்படும்?

****

தொடர்புடைய மேலும் சில பதிவுகள்

பயங்கரங்களுக்கு பஞ்சமில்லாத புழல்சிறை

விசாரணை கைதிகள் - சிறையில் சமையல்காரர்கள்- குருத்து

October 9, 2009

தீபாவளி - தமிழர்களின் திருவிழா அல்ல! 'இந்துக்களின்' திருவிழா!



முன்குறிப்பு : தீபாவளியை கொண்டாட தமிழ்நாடு தயாராகி வருகிறது. துணிக்கடைகளில் கூட்டம் பிதுங்கி வழிவதும், எந்த பக்கம் திரும்பினாலும், முதலாளிகள் தங்கள் பொருளை விற்று தீர்ப்பதற்கு விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ரயில்களிலும், பேருந்துகளிலும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிரம்பிவிட்டன. இடம் கிடைக்காமல் மக்கள் அல்லல்படுகிறார்கள். ஆங்காங்கே தீபாவளிக்காக வாங்கப்படும் வெடிகள் பல உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன. நிற்க.

தீபாவளி - தமிழர்களின் திருவிழா அல்ல! 'இந்துக்களின்' திருவிழா.

பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் மகாவீரர் இறந்ததை தான், நரகாசுரன் அழிந்ததாக கொண்டாடப்படுகிறது என வரலாற்று வழி ஆதாரங்கள் மற்றும் மரபு வழிப்பட்டும் விளக்குகிறார்

- பண்பாட்டு துறை ஆய்வாளர் தொ. பரமசிவன், இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தார், பிறகு, திருநெல்வேலியில் உள்ள மனோன்மனியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியராகவும், பதிவாளராகவும் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். (தற்பொழுது எதுவும் பணியில் இருக்கிறாரா என தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும்)

****

தீபாவளி

இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப்பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, என்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் 'தேசிய திருவிழா' போலக் காட்டப்படுகிறது. ஆயினும் தைப்பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் ஒரு திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் சடங்குகளோடும் கொண்டாடப் பெறுவதாகவும் தீபாவளி அமையவில்லை. தைப்பொங்கல் சமய எல்லையினைக் கடந்து நிற்கும் திருவிழா. இது பழந்தமிழரின் அறுவடைத் திருவிழா. எனவே தான் இன்று ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்களில் கூடத் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஆனால் தீபாவளி தமிழரின் திருவிழாவாக அமையாமல் 'இந்து'க்களின் திருவிழாவாக அமைகிறது.

தமிழர் திருவிழா - இந்துக்களின் திருவிழா என்ற வேறுபாட்டினை எவ்வாறு பிரித்தறிவது? பழைய வழிபாட்டு முறைகளோடு கூடிய தொல் சமய வழிபாடுகள், இவற்றின் சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த சைவம், வைணவம் ஆகியவையே தமிழர்கைன் பழைய மதங்களாகும். இவை காட்டும் திருவிழாக்களான கார்த்திகைத் திருவிழா, திருவாதிரைத் திருவிழா, தைப்பூசத் திருவிழா, மாசிக்களரி எனப்படும் சிவராத்திரித் திருவிழா, பங்குனி உத்திரம், சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ஆகியன சைவமும் வைணவமும் பெருஞ்சமயங்களாக நிலைபெறுவதற்கு முன்னரே தமிழர்கள் கொண்டாடிய திருவிழாக்களாகும். பக்தி இயக்கத்தின் வளர்ச்சியில் இவை சைவ வைணவ மதங்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தீபாவளி, தமிழ்நாட்டின் மரபுவழிப் பொருளாதாரத்தோடும் பருவ நிலைகளோடும் சடங்குகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழா. பார்ப்பனியத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. தீபாவளியின் அடையாளமான வெடி, அதன் மூலப்பொருளான வெடிமருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்குப் பதினைந்தாம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீப+ஆவளீ) என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை. தமிழர்களின் விளக்குத் திருவிழா என்பது திருகார்த்திகைத் திருவிழாவே.

நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும். இந்த நாளே பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் இருபத்து நாலாம்
தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த (இறந்த) நாளாகும். தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுகொண்டார். ஆகவே, பிராமணீய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மாகாவீரர் இறந்த நாளையே அக்கும். விசயநகரப் பேரரசான, 'இந்து சம்ராஜ்ஜியம்', தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தக் காரணம் பற்றியே தமிழ்ப் பிராமணர்களைவிட, தமிழ்நாட்டில் உள்ள தெலுங்குப் பிராமணர்களே தீபாவளியைப் 'பக்தி சிரத்தை'யுடன் கொண்டாடுகின்றனர். வடநாட்டு இந்துக்களிடமும் சமணர்களிடமும் இல்லாதபடி தமிழ்நாட்டில் இத்திருவிழா நாளன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது தமிழ்நாட்டில் நீத்தார் நினைவில் இறுதி நாளைக் குறிக்கும் சடங்காகும். தமிழ்நாட்டுப் பிராமணர்களும் இத்திருவிழாவை இறந்தார் இறுதிச் சடங்கு போல 'கங்கா ஸ்நானம்' செய்து கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது. ஆகவே உண்மையில் இத்திருவிழா பார்ப்பனிய மதத்தின் திருவிழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.

'நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா' என்று பாரதி தாசன் பாடுவதும் இங்கே நினைவுக்குரியது.

- தொ.பரமசிவன் எழுதிய பண்பாட்டு அசைவுகள்' லிருந்து. பக்.58, 59

****

மேலும் சில தகவல்கள்

தீபாவளி பற்றிய இன்னபிற கதைகள் - தமிழ்ச் சமணம்

தொ.பரமசிவன் எழுதிய நூல்கள் குறித்த தகவல்

தேவையில்லாத தாலியும், சில உருப்படியான தகவல்களும் - தொ.பரமசிவன் - நந்தவனம்

தமிழ் - தொ. பரமசிவன் எழுதிய நூல் அறிமுகம்

"தெய்வம் என்பதோர்" - தொ. ப. எழுதிய கட்டுரை தொகுதி குறித்த ஒரு பார்வை