> குருத்து: December 2008

December 31, 2008

அமெரிக்க செனட் சீட் விலைக்கு வேண்டுமா?



“ஒபாமாவால் உருவான செனட் காலிப் பதவியை விற்கக்கூடிய சில்லரைத்தனமான செயலை கவர்னரே செய்திருப்பதும் நடந்துள்ளது. இது பிக்பாக்கெட்டுக்குச் சமமான செயலாகும். பொதுமக்களின் பணத்தைச் சூறையாடுவதாகும்.”-

பத்திரிக்கையாளர் சாய்நாத் எழுதிய கட்டுரையிலிருந்து...

****

அமெரிக்க அதிபராக இப்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒபாமா, முன்பு இல்லியனாய்ஸ் மாகாணத்திலிருந்து செனட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.


அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜெயித்ததும் செனட் பதவியை நவம்பர் 18 – யன்று ராஜினாமா செய்துவிட்டார். ஏனென்றால்.. அமெரிக்க அதிபராய் இருப்பவர் வேறு எந்த அவையிலும் உறுப்பினராக இருக்ககூடாது. எந்த அதிகார பொறுப்பிலும் இருக்கக்கூடாது என்ற விதி இருக்கிறது.

அந்த காலியான செனட் பதவியை தான் இல்லியனாய்ஸ் மாகாண ஆளுநர் ராட் பிளகோஜெவிக் (ஒபாமாவுடன் படத்தில் இருப்பவர்) நல்ல விற்பனைக்கு விற்க முயன்ற நிலையில், பிடிபட்டு எப்.பி.ஐ. யால் டிசம். 9 தேதியன்று கைது செய்யப்பட்டார்.

இந்த செய்தி உலகம் முழுவதும் தெரிந்து நிலை மோசமான நிலையில் ஒபாமா உட்பட பலர் அந்த கவர்னரை ராஜினாமா செய்ய கோரியும், அவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

இந்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரைக்கும் கூட அமெரிக்க சட்டத்தில் தண்டிக்க இடம் இருக்கிறதாம். அதனால் என்ன? சட்டம், தண்டனை எல்லாம் ஏழை பாழைகளுக்கு தான்.

ஜாமீன் தொகையாக 4500 டாலர் கொடுத்து வெளியிலும் வ்ந்துவிட்டார்.


நேற்று இந்த கறைபடிந்த கவர்னர் அமெரிக்க செனட் உறுப்பினராக ரோலண்ட் டபிள்யூ. பூரிஸ் (காண்க : படம்) என்பவரை நியமித்தும் விட்டார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட் உறுப்பினர்களாகவும், மாகாண கவர்னர்களாகவும் அமர்ந்திருப்பவர்களின் யோக்கியதை இவ்வளவு தான்.

December 30, 2008

முதலாளித்துவம் - ஆளும் தகுதியை இழந்துவிட்டது!

சென்னையில் ஒரு தொழிற்பேட்டையில் உள்ள 30 பேர் வேலை செய்யும் அந்த சிறிய தொழிற்சாலையின் நிர்வாகியை வேலை நிமித்தம் சந்திக்க சென்றிருந்தேன். அங்கே ஒரு தொழிலாளி அவரிடம் மன்றாடிக்கொண்டிருந்தார்.

“திடீரென வேலையை விட்டு நிற்க சொன்னால் எப்படி சார்? வெளியில பல கம்பெனிகளில்ல லே-ஆப் விட்டுட்டாங்க! எங்கே போய் வேலை தேடுவேன்?”

“நம்ப கம்பெனி நிலைமை உனக்கே தெரியும். இரண்டு மாசமா சம்பளத்தை ரெண்டா பிரிச்சு தர்றாங்க! நீயாவது இந்த மாசம் சம்பளம் வாங்கிட்ட! எனக்கு இன்னும் தரவேயில்ல! வர்ற மாசம் இன்னும் மோசமாகும். அதனால் தான் இப்பவே சொல்றேன்”

“எதுக்கு என்னை நிப்பாட்டிறீங்க! வேலை அதிகமா இருந்தப்ப நீங்க எப்பவெல்லாம் ஓவர் டைம் பார்க்க சொன்னப்ப எல்லாம் தட்டாம பார்த்தேன். இப்ப போக சொன்ன எப்படி சார்?”

“இது உனக்கு மட்டுமல்ல! ஏற்கனவே வேலை இல்லாம 7 பேரை அனுப்பியாச்சு. அடுத்த மாசம் என்னையே போக சொல்லக்கூட வாய்ப்பு இருக்கு! இதுக்கு மேலே நான் ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல!”

அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல், கண்கலங்கி நின்றிருந்தார்.
***

இந்த காட்சி, மார்க்சிய ஆசான்கள் சொன்னதை நினைவுப்படுத்தியது.
1600-h/marx_engels.jpg">
“ஆளும் வர்க்கத்தின் நலனுக்குத் தேவைப்படும் வரை மட்டுமே தொழிலாளிக்கு வாழ அனுமதி உண்டு என்ற இந்த இழிவான தன்மையைத்தான் நாங்கள் அழித்திட விரும்புகிறோம்”

- மார்க்ஸ், எங்கெல்ஸ் – கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. பக். 67 -1847ம் ஆண்டு.
***

இந்தியாவில் உலகளாவிய பொருளாதார சரிவினால் பாதிப்பு இந்தியாவிற்கு கொஞ்சம் தாமதமாக தெரியும் என்றார்கள். நன்றாகவே தெரிய தொடங்கிவிட்டது. இப்பொழுதே பல நிறுவனங்கள் தொழிலாளர்களை வேலையை விட்டு துரத்திக்கொண்டேயிருக்கின்றன. அமெரிக்காவில் வேலை இழந்தவர்களின் எண்ண்க்கை ஒரு கோடியை தாண்டிவிட்டது. தொட்டிருக்கிறது. நம் நாட்டில் ஏற்கன்வே வேலையில்லா திண்டாட்டம் நிறைய. இப்பொழுது பல கோடிகளாக நிலை மோசமடைந்திருக்கிறது.

வாகன தொழில்

அமெரிக்காவில் ஜெனரல் மோட்டார்ஸ் தொடங்கி, இந்தியாவில் டாடா மோட்டார்ஸ்,
ஹீண்டாய், அசோக் லேலேண்ட் நிறுவனங்கள் தயாரித்த வாகனங்கள் விற்காமல் செட்டிலேயே தூங்குவதால் மாதத்தில் பாதி நாள் தான் இயங்குகின்றன.

அரசு கலால் வரியை 4% குறைத்து இருக்கிறது. எல்லா கார் நிறுவனங்களும் விலையிலிருந்து 20
ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரை குறைத்து இருக்கின்றன. இருந்தும் விற்பனையில் பெரிய முன்னேற்றமில்லை.

இதை நம்பிக்கொண்டிருந்த பல நூறு சிறு தொழிலகங்கள் இயங்க முடியாமல் மூடப்பட்டு விட்டன. அப்படியே சில வேலைகள் செய்தாலும், வேலை தருகிற நிறுவனங்கள் முன்பெல்லாம் 1 மாதத்தில் பணம் தருவார்கள். இப்பொழுது 3 மாதங்கள் ஆகும். இந்த நிபந்தனையில் செய்வதானால் செய். இல்லையென்றால் விடு என்கிறார்களாம்.

மென்பொருள் துறை

உலக வங்கிக்கான பணிகளை சத்யம் கம்யூட்டர்ஸ் செய்துவந்தது. கடந்த வாரம், தனது பணிகளை உடனே நிறுத்த சொல்லியும், மேலும் 8 ஆண்டுகளுக்கு தடைசெய்திருக்கிறது. டேட்டா பேஸ் திருடு போனதாய் குற்றசாட்டும் சொல்லியிருக்கிறது. இதனால் சத்யம் கலகலத்துப் போயிருக்கிறது.

யாஹீ சர்வதேச அளவில் 10% வேலை நீக்கமும், இந்தியாவில் 3% வேலை நீக்கமும் செய்திருக்கிறது.

இப்படி மென்பொருள் துறையில் தினமும் பலரை வீட்டுக்கு அனுப்பி வைத்துகொண்டிருக்கிறார்கள். பல கண்ணீர் கதைகள் வந்து கொண்டேயிருக்கின்றன.

இது தவிர வேலையில் இருப்பவர்களுக்கு... போக்குவரத்து வசதிகளை குறைப்பது, கட்டாய விடுப்பு, போனஸ் குறைப்பு, விடுப்பு சரண்டர் கிடையாது என சலுகைகளை வெட்டுகிறார்களாம். சில நிறுவனங்கள் உணவுக்கு கூட சம்பளத்தில் பிடித்துகொள்கிறார்களாம்.

எல்லா ஊழியர்களும் திட்ட மேலாளர் (Project leader), குழு மேலாளர் (Team Leader) மனம் கோணாமல் நடந்துகொள்கிறார்களாம்.

இது தவிர, செயற்கை வைர பட்டை தீட்டலில் தொழில் பாதிப்பில் 1 லட்சம் பேர் வரை வேலை இழந்திருக்கிறார்கள்.

இப்படி எல்லா துறைகளிலும் வேலை நீக்கப் பட்டியல் நீள்கிறது.

பாரளுமன்றத்தில் வேலை இழப்பு பற்றி ஒரு கேள்வி பதிலில் கடந்த ஆகஸ்ட்- அக்டோபர் வரை மட்டும் 65500 பேர் வேலை இழந்திருக்கிறார்கள் என தொழிலாளர் துறை அமைச்சர் தெரிவித்தார். அமைச்சர்கள் எல்லாம் புள்ளிவிவரத்தை தான் அறிவிக்கிறார்கள். இதற்கான மாற்றுத்திட்டம் என்ன என்பதெல்லாம் அவர்கள் சொல்லமாட்டார்கள். அவர்களுக்கு வேறு முக்கிய அலுவல்கள் இருக்கிறது.

இந்த மோசமான நிலைக்கு யார் காரணம்?

நிதிமூலதன கும்பல்களும், இதை ஆட்டி வைத்த முதலாளிகளும், பங்குச்சந்தை சூதாடிகளும், இதற்கு வழிவகுத்த முதலாளித்துவ அரசுகள் தான் காரணம். தாராளமயம், தனியார்மயம், உலகமய கொள்கைகள் தான் காரணம்
.



20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிதிமூலதனம் பற்றி லெனின் ஆய்ந்து சொல்லியிருக்கிறார்.

நிதிமூலதனத்தின் வேர் முதலாளித்துவத்தின் உபரி உற்பத்தியில் இருந்து தான் எழுகிறது. சமூக உற்பத்தியில் எழும் மூலதனம், உபரி உற்பத்தியால் மீண்டும் மூலதனம் போட வழி இல்லாமல் நிலை உருவாகுகிற பொழுது, மூலதனத்தை பெருக்குவதற்காக மூலதனம் நிதி மூலதனமாக உருவெடுக்கிறது.

மீண்டும் மீண்டும் இப்படி பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எழும் பொருளாதார நெருக்கடி சமூகத்தை அநாகரிக நிலைக்கு தள்ளிவிடுகிறது. கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும், முதலாளித்துவம் பல இலட்சகணக்கான உழைக்கும் மக்களின் உயிர்களை கொன்று குவிக்கிறது.

முதலாளித்துவம் என்றைக்கோ வரலாற்று அரங்கில் காலாவதியாகிவிட்டது. இன்றைக்கு முதலாளித்துவம் அதன் தலையில் தொடங்கி வால்வரை அழுகி நாறி போய்விட்டது. அதற்கு ஒரு பாடைகட்டி புதைகுழியில் தள்ளும் வேலை மட்டும் பாட்டாளிகள் செய்ய வேண்டும்.

அதற்கு தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், அறிவுஜீவிகள், தேசிய முதலாளிகள் என அனனவரும் ஒரு புரட்சிகர கட்சியில் ஒன்றிணைந்து வேலை செய்வது தான் முதன்மையானது.


பின்குறிப்பு : இந்த மோசமான நிலைமையில் சந்தோசப்படுகிற ஒரே நபர் மின்சார துறை
அமைச்சர் ஆற்காடு வீராசாமி தான். தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை மே 2009ல் தரப் போவதாக அறிவித்திருக்கிறார்.

அவரால் பிப்ரவர் 1ந் தேதி முதலே தடையில்லா மின்சாரம் தந்துவிடமுடியும். எப்படி சாத்தியம் என்கிறீர்களா?

தொழில்கள் முடங்கி, தமிழ்நாட்டில் பாதி சுடுகாடாய் மாறும் பொழுது, எதற்கு மின்சாரம் தேவைப்படும்?

இன்றைய அமெரிக்காவின் நிலை!


இதுவரை 1 கோடியே 3 லட்சம் அமெரிக்கர்கள் வேலையை விட்டு துரத்தப்பட்டு இருக்கிறார்கள். நவம்பரில் மட்டும் 5 லட்சத்து 33 ஆயிரம் பேர்.

(டிசம்பர் 6ந்தேதி நிலவரப்படி)

America isn't working: jobless total rockets to a 34-year peak
• In one month, 533,000 people join unemployed
• Wall Street pins its hopes on more Fed intervention


“Yesterday's announcement brings the jobless total to 10.3 million people out of a workforce of 154.6 million”

from :

http://www.guardian.co.uk/business/2008/dec/06/usemployment-useconomy

ஒரு மாதம் வேலை இல்லாமல் இருந்தாலே பதட்டமாய் மாறும் அமெரிக்கனின் வாழ்வில் ஜனவரி 2008ல் துவங்கிய இந்த வேலை இழப்பு, தொடர்கதையாகி வருகிறது.

பொருளாதார நிலை நன்றாக இருக்கும் பொழுதே, தற்கொலைகள் அதிகமாய் நடக்கும் தேசம் அமெரிக்கா! இனி கண்ணீர் கதைகள் வந்து கொண்டேயிருக்கும்.

இப்படி பொருளாதார சுனாமியில் சிக்கித் தவிக்கிற மக்களை காப்பாற்றாமல், தனது தில்லுமுல்லுகளால் இந்த் சுனாமியை உருவாக்கிய முதலாளிகளை காப்பாற்ற துடிக்கிறது அமெரிக்க நாடாளுமன்றம். ஏனென்றால், செனட்டில் இருப்பவர்கள், மாகாண கவர்னர்களாய் அமர்ந்திருப்பவர்கள் பலர் முன்னாள் சூதாடிகள்.

தொடந்து வரும் கட்டுரையை படியுங்கள். உண்மை புரியும்.

****

ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது. (புதிய ஜனநாயகத்தில் வெளிவந்த ட்கட்டுரையின் 4-ம்பகுதி (பிற 3 பகுதிகளை முந்தைய பதிவுகளில் பார்க்கவும்)

அமெரிக்க நாடாளுமன்றத்தின் வேசித்தனம்

இக்கேடுகெட்ட கிரிமினல்தனத்தையும், ஒட்டுண்ணித்தனமான சுரண்டலையும் தட்டிக் கேட்க
வக்கற்ற அமெரிக்க நாடாளுமன்றம், இந்த ஊதாரித்தனத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு இச்சமூக விரோதக் கும்பலிடம் கெஞ்சுகிறது. உலகத்தில் எந்த மூலையில் ""தவறு'' நடந்தாலும் சண்டப் பிரசண்டம் செய்யும் பெரியண்ணன் ஜார்ஜ் புஷ், இச்சூதாடிக் கும்பலிடம் மண்டியிட்டுக் கிடக்கும் மர்மம் என்ன?

அமெரிக்காவின் அதிபர், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில கவர்னர்கள் உள்ளிட்டு அமெரிக்க ஆளும் கும்பலின் நுனி முதல் அடி வரையிலான அதிகார அங்கங்கள் அனைத்தும் வால்ஸ்ட்ரீட் சூதாட்டக் கும்பலிடம் காசு வாங்கிக் கொண்டு தான் தங்களின் அரசியல் பிழைப்பை நடத்துகின்றனர். தற்பொழுது நிதி மந்திரியாக இருக்கும் பால்சன், கோல்டு மேன் சாக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பொழுது, 1998 தொடங்கி 2006 முடியவுள்ள எட்டாண்டுகளில் குடியரசுக் கட்சிக்கு மட்டும் தனது சொந்தப் பணத்தில் இருந்து 3,36,000 அமெரிக்க டாலர்கள் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.

பால்சன் கும்பல் தயாரித்த 70,000 கோடி அமெரிக்க டாலர் மானியத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக ஹிலாரி கிளிண்டனுக்கு 4,68,200 அமெரிக்க டாலர்; ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பாரக் ஒபாமாவிற்கு 6,91,930 அமெரிக்க டாலர்; குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கெய்னுக்கு 2,08,395 அமெரிக்க டாலர் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் ""நன்கொடை'' கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

""வால்ஸ்ட்ரீட்'' சூதாடிகள் அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம், நன்கொடை கொடுப்பது ஒருபுறமிருக்க, அவர்களே தேர்தலில் நின்று வென்று நாடாளுமன்ற உறுப்பினர், கவர்னர், மேயர் பதவிகளைப் பிடித்து விடுகிறார்கள். அரசுப் பதவிகளை விலைக்கு வாங்குவதிலும் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம்தான் முன்னோடியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதன் முன்னாள் தலைவர் கோர்ஸைன் நியூ ஜெர்ஸி மாநிலத்தில் இருந்து செனட் சபைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, தற்பொழுது அம்மாநில ஆளுநராகவும் இருக்கிறார். அந்நிறுவனத்தின் தலைவர்களாகப் பணியாற்றிய ஸ்டீபன் ஃப்ரைடுமேன், ராபர்ட் ருபின், ஜோஸுவா போல்டன் உள்ளிட்ட பலர் கிளிண்டன், புஷ் நிர்வாகங்களில் அதிகாரமிக்க பசையுள்ள பதவிகளில் ஒட்டிக் கொண்டிருந்தனர். மக்களால், மக்களுக்காக... என நீட்டிமுழக்கப்படும் மக்களாட்சியின் தத்துவம், அதன் பிறப்பிடமான அமெரிக்காவில் சூதாடிகளால், சூதாடிகளுக்காக, சூதாடிகளின் ஆட்சியாகவே இருக்கிறது.

உண்மை இப்படியிருக்க, அமர்த்யா சென் போன்ற அறிஞர்கள் கூட பாராக் ஒபாமா ஆட்சியைப்
பிடித்தால், அமெரிக்க மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற குருட்டு நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ஒபாமாவோ தனது ஆலோசகராக ராபர்ட் ருபினை வைத்துக் கொண்டிருக்கிறார்.
கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ருபின், சப்பிரைம் லோன் சூதாட்டத்தைத் தொடங்கி வைத்த தளபதிகளுள் ஒருவர்; இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு இலாபமடைந்துள்ள ""சிட்டி குரூப்'' வங்கியின் தற்போதைய தலைவர். எனவே, அமர்த்யா சென் போன்ற அறிஞர்களின் ஜோசியம், பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்க்கும் முட்டாள்தனத்தைப் போன்றதுதான்!

• செல்வம்

நன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008

December 29, 2008

அமெரிக்க திவால் - திவாலான நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள்!

மருத்துவரை சந்திக்க காத்திருந்த வேளையில் என்னருகே நடுத்தர வயதில் ஒருவரும் காத்திருந்தார். நிறைய செய்திதாள்கள், நிறைய சங்கதிகள் கொண்ட தாள்களைப் புரட்டிக்கொண்டேயிருந்தார். பேச்சுக்கொடுத்தேன்.

‘நீங்கள் பங்குச்சந்தை முகவரா?’

‘ஆம்’ என்றார்.

'அமெரிக்கா - மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறதே! என்ன காரணம் சார்?'

‘சப் பிரைம் லோன்’ தான் காரணம். வங்கிகள் கடனைக் கட்ட வசதியில்லாதவர்களுக்கெல்லாம் கடன் கொடுத்தது தான் காரணம்’ என்றார்.

‘இதை பொதுவாக எல்லோரும் சொல்கிறார்கள். இவ்வளவு பெரிய நெருக்கடிக்கு இதுதான் உண்மையான காரணமா சார்? ’

‘நீங்கள் சொல்வது சரி தான். இதையும் மீறி அங்கு என்னவோ நடந்திருக்கு. ஆனால் உண்மையை மறைக்கிறார்கள்” என்றார்.

****

இந்த மாபெரும் நெருக்கடிக்கு திரைமறைவில் நடந்த விவகாரங்களை ஒவ்வொன்றாக அலசிக் கொண்டே வருகிறோம்.

திவாலான மற்றும் திவால் நிலையில் உள்ள நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் இந்த நெருக்கடிக்கு மிக முக்கியமான கதாபாத்திரங்கள். என்ரான் விசயத்தில் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அதன் துணை நிர்வாகிகள் எப்படி கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள் என ஏற்கனவே பார்த்தோம்.

மக்கள் தங்களுடைய சேமிப்பு பணங்களை மிகப்பெரிய நிறுவனங்களில் போட்ட பணம் எல்லாம் செல்லாக்காசுகளாக மாறிப்போய்விட்டன. ஆனால், அதன் தலைமை நிர்வாக அதிகாரிகள் எப்படி லாபம் சம்பாதித்தார்கள் என்பதை இந்த கட்டுரை விவரிக்கிறது. படியுங்கள்.

****

ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது. – புதிய ஜனநாயகத்தில் வெளிவந்த கட்டுரையின் 3ம்பகுதி (2 பகுதிகளை முந்தைய பதிவுகளில் பார்க்கவும்)

நிதி நிறுவன அதிபர்களின் ஒட்டுண்ணித்தனம்

லேமேன் பிரதர்ஸ், மெரில் லிஞ்ச், பியர் ஸ்டெர்ன்ஸ் உள்ளிட்டுப் பல நிதி நிறுவனங்களும்,
வங்கிகளும் திவாலாகிப் போனதால், அந்நிறுவனங்களை நடத்தி வந்த முதலாளிகளும், உயர் அதிகாரிகளும் போண்டியாகிப் போனார்கள் எனக் கருத முடியாது. இச்சூதாடிகள் எரிகிற வீட்டில் இருந்து பிடுங்குவதில் கில்லாடிகள் என்பதால், நிதி நிறுவனங்கள் திவால் நிலையை நோக்கி நகர நகர, இவர்களின் சம்பளமும் போனசும் எகிறிக் கொண்டே போயின.

உலகெங்கிலும் 60,000 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு கடனை வாங்கிப் போட்டுத்
திவாலாகி விட்ட லேமேன் பிரதர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான ரிச்சர்ட் ஃபல்ட், (படத்தில் இருப்பவர்) கடந்த எட்டாண்டுகளில் எடுத்துக் கொண்ட சம்பளம் மட்டும் 48 கோடி அமெரிக்க டாலர்கள்.

மெரில் லிஞ்ச் நிறுவனம் திவாலாகிக் கொண்டிருந்த சமயத்தில், அதன் தலைமை நிர்வாக
அதிகாரியாக இருந்த ஜான் தாய்ன், (படத்தில் இருப்பவர்) கடந்த எட்டுஒன்பது மாதங்களுக்குள் எடுத்துக் கொண்ட சம்பளம் 85 கோடி அமெரிக்க டாலர்கள்.

இந்நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மட்டும்தான் கொழுத்த சம்பளம் பெற்றார்கள் என்பதில்லை. நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் புசிவதைப் போல, அமெரிக்காவின் மிக முக்கியமான ஐந்து நிதி நிறுவனங்களைச் (அதில் மூன்று திவாலாகி விட்டன) சேர்ந்த 1,85,000 ஊழியர்களுக்கு 2007இல் மட்டும் சம்பளம் மற்றும் போனசாகச் சேர்த்து 6,600 கோடி அமெரிக்க டாலர்கள் கொட்டப்பட்டுள்ளது.

இத்தலைமை நிர்வாக அதிகாரிகள் உருவாக்கி நடத்திய சூதாட்டம்தான் இந்தப் பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கிறது. எனினும், இக்கிரிமில் குற்றத்திற்காக எந்தவொரு தலைமை நிர்வாக அதிகாரி மீதும் வழக்குத் தொடரப்படவில்லை; இதைவிடக் கேவலமானது, அவர்கள் தங்கள் பதவியில் இருந்து விலகக்கூட நிர்பந்திக்கப்படவில்லை என்பதுதான்.

என்ரான் திவாலானதற்கு நிர்வாகத்தின் மோசடித்தனங்கள்தான் காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் தலைமை நிர்வாக அதிகாரிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். இப்படிப்பட்ட தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, தற்பொழுது அமெரிக்க நிறுவனங்களில் சேரும் சூதாடிகள், ""தங்களின் நிர்வாகத்தின் கீழ் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால், அதற்குத் தங்களைப் பொறுப்பேற்கச் சொல்லக் கூடாது'' என ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சேருகிறார்கள்.

- செல்வம்

நன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008

December 26, 2008

இன்றைய அமெரிக்காவின் நிலை – பங்கு பிரிப்பதில் ஊழல்!

அமெரிக்காவில் ஆதரவற்றவர்களுக்கு, அனாதைகளுக்கென்று இலவச உணவு தரும் ஒரு விடுதி இருக்கிறது. தினமும் 1250 நபர்களுக்கு மட்டும் உணவு தருகிறது.

அமெரிக்க திவாலுக்கு பிறகு இன்றைக்கு அந்த விடுதியில் கூட்டம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறதாம் . தினமும் 1600 பேருக்கு மேலாக குவிகிறார்களாம். சமாளிக்கமுடியவில்லை என அந்த விடுதியின் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

- நன்றி - ‘மக்கள் செய்திகள் – 26.12.2008

****

அமெரிக்க மக்களின் நிலை இப்படி பரிதாபமாய் இருக்கிறது. இவர்களைப் பற்றி துளியும் கவலைப்படாத அமெரிக்க அரசு, பல தில்லுமுல்லுகளால் திவாலாகிப் போன அல்லது திவால் நோட்டீஸ் கொடுக்கப் போவதாக மிரட்டல் விடுத்து அரசிடம் (மக்களின் வரிப் பணத்தை) நிதி கேட்கும் பல்வேறு முதலீட்டு வங்கிகள், வங்கிகள், நிதி நிறுவனங்களளை கை தூக்கி விடுவதற்காக 70000 கோடி அமெரிக்க டாலர்களை அள்ளித்தர முடிவு செய்திருக்கிறது.

அதில் நடக்கும் தில்லு முல்லுகளை பின்வரும் கட்டுரை விவரிக்கிறது. முதல் பாதி ஏற்கனவே பதிவில் போட்டாயிற்று. இரண்டாம் பகுதி தொடர்கிறது.

****

ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது.

பேய் அரசாண்டால்...


இந்த "நெருக்கடி''யின் இரண்டாவது அத்தியாயம் நிதி ஆதிக்கக் கும்பலைக் கைதூக்கி விடும் படலம், முதல் அத்தியாயத்தைவிட மிகவும் சுவையானது. மிரட்டல், கூட இருந்தே குழி பறித்தல், கழுத்தறுப்புப் போட்டியில் ஒரு நிறுவனம் இன்னொன்றை விழுங்குதல், அரசு தூக்கியெறிந்த எலும்புத் துண்டைக் கவ்விக் கொள்ள நாய்ச் சண்டை போடுதல் என்ற முதலாளித்துவத்தின் நவரச "நற்குணங்களையும்' இதில் காண முடிந்தது.

"சப்பிரைம் லோன்'' சூதாட்டம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த சமயத்தில்தான் 2006இல் ஹென்றி ஜெ.பால்சன் என்பவர் அமெரிக்காவின் நிதி மந்திரியாக (Treasury Secretary)
நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் நிக்சனின் காலத்தில் நடந்த "வாட்டர் கேட்'' ஊழலின் முக்கியப் பங்காளியாக இருந்து தண்டிக்கப்பெற்ற ஜான் எர்லிச்மேன் என்ற அதிகாரியின் கீழ் நிர்வாகத்தின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டவர்தான் நிதி மந்திரி பால்சன். (படத்தில் புஷ்யுடன் இருப்பவர்)

1974இல் கோல்டுமேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கியில் நுழைந்த பால்சன், 1998இல் ஒரு
அதிரடிக் கவிழ்ப்பின் மூலம், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியைக் கைப்பற்றினார். ஏறத்தாழ 53 கோடி அமெரிக்க டாலர்கள் பெறுமான கோல்டன் சாக்ஸ் நிறுவனப் பங்குகள் பால்சனிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. "முதலீடு செய்வதில் துணிந்து சவால்களைச் சந்திக்கக் கூடியவர்'' என முதலாளித்துவப் பத்திரிகைகள் பால்சனைப் புகழ்ந்து தள்ளுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், நிதி மந்திரி பால்சன் கைதேர்ந்த சூதாடி.

பால்சன், தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்த நெருக்கடியில் இருந்து
கோல்டுமேன் சாக்ஸையும், அந்நிறுவனத்தில் இருந்த தனது முதலீட்டையும் பாதுகாத்துக் கொண்டதோடு, கோல்டுமேன் சாக்ஸுக்கு எதிரான முதலீட்டு வங்கிகளை ஒழித்தும் கட்டினார். லேமேன் பிரதர்ஸ் என்ற முதலீட்டு வங்கி திவாலாகவும்; ஜே.பி.மார்கன்சேஸ், பியர் ஸ்டெர்ன்ஸ் நிறுவனத்தையும்; பாங்க் ஆஃப் அமெரிக்கா, மெரில் லிஞ்ச் நிறுவனத்தைக் கையகப்படுத்தவும் அனுமதித்த பால்சன், இதன் மூலம் கோல்டுமேன் சாக்ஸை அமெரிக்காவின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளுள் ஒன்றாக மாற்றினார்.

இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்க அரசின் ஆதரவோடு பல நிறுவனங்களை விழுங்கிய பாங்க் ஆப் அமெரிக்கா, ஜே.பி.மார்கன் சேஸ், சிட்டி குரூப் ஆகிய மூன்று வங்கிகளும், அமெரிக்காவின் மொத்த வங்கி சேமிப்பில் மூன்றில் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டுள்ளன. நெருக்கடிக்கு முன்பாக 21.4 சதவீதமாக இருந்த இம்மூன்று வங்கிகளின் சேமிப்பு, இன்று 30 சதவீதத்தை நெருங்கி விட்டது.

வங்கி முதலாளிகளைக் கைது செய்ய வேண்டும் என அமெரிக்க மக்கள் நடுத்தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்த பொழுது, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷûம், நிதி மந்திரி பால்சனும் அம்முதலாளிகளைக் கரையேற்ற 70,000 கோடி அமெரிக்க டாலர்களை அவர்களுக்கு மானியமாக வாரிக் கொடுக்கும் திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்க நாடாளுமன்றம், மக்களின் போராட்டத்தால் இந்த மானியத்திற்கு ஒப்புதல் கொடுக்கத் தயங்கிய பொழுது, நிதி மந்திரி பால்சன், "பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் நிலைக்கு எங்களைத் தள்ளாதீர்கள்'' என்ற தொனியில் மிரட்டியிருக்கிறார். பால்சன் மிரட்டலாகச் சொன்னதை, வங்கி முதலாளிகள் பங்குச் சந்தையைக் கவிழ்த்துச் செய்து காட்டினார்கள்.


அமெரிக்காவின் குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் ""வால் ஸ்ட்ரீட்'' சூதாடிகள் வீசி எறியும் எலும்புத் துண்டுக்குக் காத்துக் கிடக்கும் நாய்கள் என்பதால், தங்களின் முனகலைக் குறைத்துக் கொண்டு, சூதாடிகளுக்கு மானியம் வழங்கும் இத்திட்டத்திற்கு ஒப்புக் கொண்டு, அதற்காகத் தனிச் சட்டத்தையும் உருவாக்கினார்கள்.

இந்தச் சட்டம், "மதிப்பிழந்து கிடக்கும் சொத்துக்களை, எந்த வங்கியிடமிருந்தும், என்ன விலை கொடுத்தும் வாங்குவதற்கான அதிகாரத்தை'' நிதி மந்திரி பால்சனுக்கு அளிக்கிறது. மேலும், "பொருளாதாரச் சரிவைத் தடுக்கும் நோக்கங்கொண்ட'' பால்சனின் இந்த முடிவுகளை, எந்தவொரு நீதிமன்றமோ, அரசின் வேறெந்தப் பிரிவோ கேள்வி கேட்கவோ, அதனை மறுபரிசீலனை செய்யவோ உரிமை கிடையாது என்ற உள்விதியும் இச்சட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை "பொருளாதாரப் பொடா'' எனலாம். பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திய அதிகாரிகளைத் தண்டிக்க முடியாது என்பது போல, இந்த மானியத் திட்டத்தை பால்சன் உள்நோக்கத்தோடு தவறாகப் பயன்படுத்தியிருந்தாலும், அவரை எதிர்காலத்தில் கூடத் தண்டித்துவிட முடியாது. ஊழலுக்கு, இதைவிட அதிகபட்ச சட்டபூர்வ பதுகாப்பை ஏற்படுத்தித் தந்துவிட முடியாது.

இந்த 70,000 கோடி டாலர் பெறுமான மானியத்தை பங்கு போட்டுக் கொள்வதில் அமெரிக்க வங்கிகளுக்கிடையே நாய் சண்டையே நடந்து வருகிறது. நிதிமந்திரி பால்சன், தான் பங்குதாரராக உள்ள கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் மற்றவர்களை விட முந்திக் கொள்ள வேண்டும் என்ற விதத்தில் காய்களை நகர்த்தி வருகிறார். இப்பொருளாதாரச் சரிவைத் தடுத்து நிறுத்துவதற்காக,
நிதி அமைச்சகத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய துறைக்கு நீல் கஷ்காரி என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதி மந்திரி பால்சன், கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகக் குப்பை கொட்டிக் கொண்டிருந்தபொழுது, அந்நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்து, பால்சனின் கையாளாகச் செயல்பட்டவர்தான் நீல் கஷ்காரி.(படத்தில் இருப்பவர்)

அமெரிக்க வங்கிகளிடம் அடமானமாகக் கிடக்கும் சொத்துக்களை மதிப்பீடு செய்வதற்காக நிதி அமைச்சகத்தில் உருவாக்கப்பட்டுள்ள துறைக்கு வில்லியம் கிராஸ் என்பவர் நியமிக்கப்படலாம் என்ற வதந்தி அடிபடுகிறது. வில்லியம் கிராஸ், பால்சனின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல, திவாலாகிப் போன ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு அடமான நிறுவனங்களை அமெரிக்க அரசு தேசியமயமாக்கியபொழுது, அதன் மூலம் 1,700 கோடி அமெரிக்க டாலர்களை இலாபமாகச் சுருட்டிக் கொண்டத் திருட்டுப் பேர்வழி என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008

December 25, 2008

சொட்டு மருந்தில் தெரியுது பார் பிள்ளை பாசம்!



என் வீடு
என் மனைவி
என் மக்கள் – என
நத்தைக் கூட்டுக்குள்
நகருகிறது வாழ்க்கை.
சன்னல் திறப்போம்!
சமுத்திரமாய்
விரிந்து கிடக்கிறது
உலகம்!
சமூகத்தையும் நேசிக்க
கற்றுக்கொள்வோம். – யாரோ!
***

தமிழகம் கடந்த ஞாயிறன்று (21.12.2008) சொட்டு மருந்து பீதியால் கல கலத்து போயிருந்தது. தமிழகம் முழுவதும் சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளை தூக்கி கொண்டு எல்லோரும் மருத்துவமனையை முற்றுகையிட்டார்கள். பிள்ளைகளை மருத்துவர்களைப் பரிசோதிக்க சொன்னார்கள்.

கட்டுப்படுத்த முடியாத கூட்டத்தால், மருத்துவர்களால் பரிசோதிக்க முடியாத சென்னை குரோம்பேட்டை மருத்துவமனையும், திருப்பூரில் ஒரு மருத்துவமனையும் கோபத்தில் பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

அதிமுக விசுவாசிகளும், ஜெயா தொலைக்காட்சியும் இணைந்து வெளியிட்ட செய்திகள் வதந்திகள் தான் என இப்பொழுது தெரிந்துவிட்டது.

இந்த பதிவு சொட்டு மருந்து பீதியைப் பற்றியது அல்ல! மாறாக குழந்தைகளின் பெற்றோருடைய மனநிலையை பற்றி பேசுவது.
****

இது நடந்து எட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன.

ஒருநாள் அப்பாவுக்கு திடீரென கடுமையான தலைவலி. இரண்டு மணி நேரத்தில் கோமா நிலைக்கு சென்றுவிட்டார். மருத்துவமனையில் அட்மிட் செய்து, சோதித்ததில்... மூளைக்கு செல்லும் ரத்த குழாய் உடைந்து, மூளையில் ரத்தம் கசிந்துவிட்டது.

4 நாட்கள் தனியார் மருத்துவமனையில் வைத்திருந்து விட்டு, பணப் பிரச்சனையில் அரசு மருத்துவமனைக்கு அப்பாவை எடுத்துச் சென்றோம்.

மயக்க நிலையில் இருந்த அப்பாவுக்கு அட்மிசன் போட உள்ளே போனால்... 50 பேர் வரிசையில் நிற்கிறார்கள். உள்ளே போய் “அப்பாவுக்கு சீரியஸ். மயக்க நிலையில் இருக்கிறார்” என்று சொன்னால்... “இங்கே எல்லாமே சீரியஸ் கேஸ்தான்” என எரிச்சலாய் பதில் வந்தது.

ஒன்றரை மணி நேரம் கழித்து, அப்பாவுக்கு அட்மிசன் கிடைத்தது. அதற்கு பிறகு, அவர்கள் கொடுத்த மோசமான சிகிச்சையில் ஆறு மணிநேரத்தில் நினைவு திரும்பாமலே இறந்து போனார்.

அப்பொழுது... மொத்த மருத்துவமனையை கொளுத்த வேண்டும் என்ற வெறி வந்தது.

இப்படி நம்மில் பலருக்கும் இது மாதிரி பல சம்பவங்களை கடந்து தான் வந்திருக்கிறோம்.

பலரும் தங்கள் சொந்த பந்தங்கள், உறவுகள் பாதிக்கப்படும் பொழுதெல்லாம் மருத்துவமனையில் கடுமையான முறையில் சண்டை போடுகிறோம். போட்டிருக்கிறோம். அதே தான் இந்த சொட்டு மருந்து பீதி விசயத்திலும் நடந்திருக்கிறது.

சொந்த விசயங்களுக்காக இப்படி கோப ஆவேசத்துடன் சாலை மறியல், மருத்துவமனையை நொறுக்கி சண்டையிடுகிற நாம்... ஏன் பொது விசயங்களுக்காக கோப ஆவேசப்படுவதில்லை. அது மற்றவர்களுக்கு என்பதலா!

மனிதனை ஒரு சமூக விலங்கு” என்கிறது இயற்கை விஞ்ஞானம்.

“தனக்கான ஆடையை தானே தான் தயாரிக்க வேண்டும் என இருந்தால் மனிதன் இன்னும் இலை தளைகளை தான் கட்டிக்கொண்டு திரிந்திருப்பான்.

தனக்கான தானியத்தை தானே தயாரிக்க வேண்டும் என்றால், விளைவிக்கிற உணவு நமக்கு வாய்க்கு அரிசியாக தான் நம் வாயில் விழும்.

“தனக்கான வீட்டை தானே தான் கட்ட வேண்டும் என்றால்... கட்டுகிற வீடே நமக்கு கல்லறையாகிவிடும்” - (அப்துல்ரகுமான்)

எல்லோருக்கும் தேவையானதை சமூகமே சேர்ந்து தான் உருவாக்குகிறோம். ஆனால், நமக்கான பிரச்சனைகளுக்கு மட்டும் நாம் ஒன்று சேர்ந்து போராட மறுக்கிறோம்.

வளர்ந்த நாடுகளில் ஒரு பொது பிரச்சனை என்றால்... லட்சகணக்கில் கலந்து கொள்கிறார்கள். தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம்.

ஆனால், நம் தமிழகத்தில்... முற்போக்கு, ஜனநாயக, மார்க்சிய, பெரியாரிய, மார்க்சிய-லெனினிய அமைப்புகள் பல சமூக பிரச்சனைகளுக்காக களத்தில் போராடுகின்றன. ஆனால், பல போராட்டங்களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 300 அல்லது 500-ஐ தாண்டுவதில்லை.

இப்படி நம் வீடு, மனைவி, குழந்தைகள் என மிகவும் குறுகிய வட்டத்திற்குள் வாழ்வதால் தான் தமிழகத்தில் பாசிச ஜெயலலிதாவை எதிர்கட்சி தலைவியாக பெற்றிருக்கிறோம். (பத்து ஆண்டுகள் ஆட்சியும் ஆண்டிருக்கிறார்) ஊழலில், நாட்டைக் காட்டிக்கொடுப்பதில் முன்ணணியில் திகழும் காங்கிரசு மத்தியில் ஆண்டு கொண்டிருக்கிறது என்பதை நாம் எப்பொழுது உணரப்போகிறோம்?

நம் பொதுப்பிரச்சனைகளுக்காக ஒன்று சேர்ந்து போராடுவதில் தான், நம் வாழ்வின் துன்ப துயரங்களுக்கான விடிவும், மக்கள் விரோதிகளாய் வலம் வந்து கொண்டிருக்கிற பலருக்கு முடிவும்
இருப்பதை நாம் எப்பொழுது புரிந்து கொள்ளப்போகிறோம்?

****


பின்குறிப்பு : மீண்டும், சொட்டு மருந்து பீதி விசயத்திற்கு வருவோம். இந்த பீதிக்கு அதிமுக விசுவாசிகள் மற்றும் ஜெயா தொலைக்காட்சி மட்டுமே காரணம் இல்லை.


வேறு காரணங்களும் இருக்கின்றன. கடந்த முறை சொட்டு மருந்து போடும் பொழுது சில குழந்தைகள் இறந்தன. மருந்தில் பிரச்சனை இருந்ததாக ஆய்வில் சொன்னார்கள். இறந்த குழந்தைகளுக்காக அரசு பொதுமக்களிடம் மன்னிப்பா கேட்டது? அல்லது இனிமேல் இவ்வாறு நடக்காது என உறுதிதான் கொடுத்ததா?

ஈரோட்டில் ஒரு குழந்தை இறந்தது சொட்டுமருந்தினால் அல்ல! அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் தான் என அரசு தரப்பில் விளக்கம் சொல்லப்பட்டது.

ஆனால், பிற மாவட்டங்களில் மூன்று குழந்தைகள் இறந்திருக்கின்றன. அதில் ஒரு குழந்தை மட்டும் சளித்தொந்தரவால் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்ற இரு குழந்தைகளின் நிலை மருத்துவ சோதனைக்கு பிறகு உண்மை தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

சொட்டு மருந்து கொடுக்காவிட்டால் குழந்தை போலியாவால் பாதிக்கப்படும். ஆனால், குழந்தை உயிரோடு இருக்கும் அல்லவா! என்று தானே மக்கள் இயல்பாக சிந்திப்பார்கள்.

மக்கள் நலன் நாடு அரசு அமையாத வரை, ஒவ்வொரு முறையும் சொட்டு மருந்து கொடுப்பதா, தடுப்பூசி போடுவதா என்பது ஒரு மக்களுக்கு மனப்போராட்டம் தான்.

December 24, 2008

அமெரிக்க திவால் – “பொன்முட்டை இடும் வாத்து” திட்ட ஊழல்

தில்லி அருகே நொய்டாவில் சாக்கடையை கிளற கிளற கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் மண்டையோடுகள் வந்து கொண்டிருந்தது போல.... அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடியை கிளற கிளற புதிய புதிய வகையிலான ஊழல்கள் வெளிவருகின்றன. புகழ்பெற்ற நிறுவனங்கள் தாங்கள் செய்த தில்லுமுல்லுகளால் திவாலாகி விழுந்து கொண்டேயிருக்கின்றன.

சமீபத்தில், ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தின் தில்லுமுல்லு கதை இதோ!

***

தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு, திடீர் திடீரென நிதி நிறுவனங்கள் தோன்றி... மக்கள் கொடுக்கும் பணத்திற்கு வருட வட்டியாக 36% வரை தருவதாக வாக்கு கொடுத்து, சேமிப்புகளை பெற ஆரம்பித்தன. அப்பொழுது தேசிய வங்கிகள் 12% வரை வட்டியாக அளித்துகொண்டிருந்தன.

சொன்னபடி 1 ஆண்டுக்கு மேலாக கொடுக்கவும் செய்தன. மக்கள் அலை அலையாய் போய் முதலீடு செய்தார்கள். இரண்டாவது ஆண்டின் முடிவில்... இப்படி வாக்கு கொடுத்த எல்லா நிறுவனங்களும் இழுத்து மூடி, மக்கள் தலையில் பெரிய்ய துண்டை போட்டார்கள்.

இதே முறையில் அமெரிக்காவில் ‘பெர்னார்ட் எல். மேட்ஆப் இன்ஸ்வெஸ்ட்மென்ட் செக்யூரிட்டீஸ்’என்ற நிறுவனம் 2 லட்சத்து 45 ஆயிரம் கோடிக்கு மக்கள் தலையில் துண்டை போட்டிருக்கிறது. இந்தியாவின் இந்த ஆண்டு பட்ஜெட் தொகையே 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்தான். மூன்றில் ஒரு பங்கு.


பெர்னார்ட் மேடாப் தன்னுடைய 22 வயதில் 1960ல் இந்த பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசனை
நிறுவனத்தை நியூயார்க்கில் துவங்கினார்.

பணம் வைத்திருக்கும் நபர்களை பிடித்து மற்றவர்கள் முதலீட்டுக்கு 3% அல்லது 5 % தந்த நிலையில் 10% தருவதாக சொல்லி, கோடிக்கணக்கில் வாங்கினார். சொன்னபடியே தரவும் செய்தார். அவர் புகழ் பரவ ஆரம்பித்து, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் நிறுவனத்தின் கிளைகள் பரவத் தொடங்கின. அமெரிக்க மக்கள், மற்றும் பிரபலங்களும் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு பணத்தைக் கோடி கோடியாய் கொட்டினார்கள்.


ஸ்டெர்லிங் ஈக்யுட்டீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பிரெட் வில்போன், ஹாலிவுட் நடிகர் ராபர்ட் லோகியா, யூதர்கள் அமைப்பான யேஷிவா பல்கலை, அரசு வக்கீல் ஜெர்ரி ரேஸ்மென் போன்ற பிரபலங்கள் இதில் முதலீடு செய்ததில் முதன்மையானவர்கள்.

அமெரிக்கா பொருளாதார நெருக்கடியில் சிக்கி... உலகப் புகழ்பெற்ற வால் ஸ்டீரிட் ஸ்தம்பித்த நிலையில் மக்கள் போட்டிருந்த முதலீடுகள் எல்லாம் மதிப்பிழந்து குப்பைக் காகிதங்களாக மாறிவிட்ட நிலையில்... மக்கள் தாமதமாய் சுதாரித்து தாங்கள் போட்டிருந்த முதலீடுகளை எல்லா இடங்களிலும் இருந்தும் திரும்ப பெற தொடங்கினர்.

இந்த நிலையில் பெர்னார்ட் மேடாப்-பிடம் கேட்டார்கள். அப்பொழுது, சகலரும் அதிரும்படி ஒரு உண்மையை சொன்னார்.

‘‘இத்தனை நாள் நான் நடத்தியது போலி நிறுவனம்தான். என்னிடம் எந்த சொத்தும் கிடையாது. நிறுவனம் திவாலாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது”

பிறகு, எப்படி தன் நிறுவனத்தை நடத்தி வந்தார் என விளக்கமாய் சொன்னார்.

முதலில் பணம் கொடுத்தவர்களுக்கு அடுத்து வருபவர்களிடம் பணம் வாங்கி வட்டியுடன் திருப்பி கொடுத்தார். அவர்களுக்கு அடுத்தடுத்து பணம் தருபவர்களிடம் வாங்கி வட்டியுடன் திருப்பி கொடுத்தார். இந்த திட்டத்திற்கு அவர் வைத்த பெயர் “பொன் முட்டையிடும் வாத்து”
இப்பொழுது பெர்னார்ட் சிறையில் கம்பி எண்ணுகிறார். அவருக்கு வயது 70. 1990, 1991, 1993ம் ஆண்டுகளில் அமெரிக்காவின் மிகப்பெரிய பங்குச்சந்தையான ‘நாஸ்டாக்’கின் தலைவராக இருந்தவர்.

முதல்கட்ட விசாரணையில் 83,300 கோடி ரூபாய் அளவுக்கு பெர்னார்டுக்கு சொத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடந்து நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு டுபாக்கர் நிறுவனத்தை 48 ஆண்டுகளாக புகழ்பெற்ற நிறுவனமாக பல தில்லுமுல்லுகளோடு அமெரிக்காவில் நடத்த முடிந்திருக்கிறது என்றால்... அமெரிக்க அரசு பற்றி, அதன் பொருளாதார கட்டமைப்பு பற்றி நாம் நன்றாக புரிந்து கொள்ளமுடிகிறது.

முதலாளித்துவத்தின் அடிப்படை மூலதனமே தொழிலாளர்களின் உழைப்பில் எழுந்த சுரண்டல் தானே! அடிப்படையே சுரண்டலாய் இருக்கும் பொழுது, அதன் மீது எழுப்பப்படுகிற எல்லாமே நேர்மையானதாகவா இருக்க முடியும்.

***

நன்றி :
தகவல்களுக்கு ஜே.எஸ்.கே.பாலகுமார், தமிழ் வணிகம்.

மேலும் படிக்க...

Madoff Hedge Fund Considered A Giant Ponzi Scheme Where Investors Lost 50 Billion Madoff Arrested

Bernard Madoff, the former NASDAQ Stock Market chairman faced charges of organizing a ponzi scheme that biked away $50 billion from the investors and consequently he was arrested. It has been discovered that the scheme, which has been running for years, has made use of new investors’ money to pay returns to the other investors. In this way, the founder of Bernard L. Madoff Investment Securities managed to keep up the reputation of the scheme.

Thanks :

http://www.encyclocentral.com/32466-Related-Bernard_L._Madoff_Investment_Securities_LIc_Charged_Arrested_For_Fraud_Ponzi_Scheme.html

Invest Big ‘fesses to $50B ‘Fraud’

A Wall Street legend was busted yesterday on charges of running a scam investment business for the super rich after telling his sons it was just "a big lie" - losing a whopping $50 billion.
Bernard L. Madoff, 70, a former Nasdaq chairman, was arrested a day after his sons Andrew and Mark, both senior employees, turned him in for running a business that had been insolvent for years, prosecutors said
Thanks : New york post … also read. Click below

http://www.nypost.com/seven/12122008/news/regionalnews/invest_big_fesses_to_50b_fraud_143843.htm

December 23, 2008

போக்குவரத்து சட்டங்கள் – ஒரு பார்வை!



கடந்த ஆண்டில் சென்னையில் நடந்த வாகனவிபத்துகளின் எண்ணிக்கையை இந்த ஆண்டில் நவம்பர் மாதத்திற்குள்ளேயே வெற்றிக்கரமாக(!) எட்டிவிட்டதால்...

அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து விதிகளை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என காவலர்கள் டிசம்பர் இறுதிவாரம் அறிவுரை சொல்வார்கள். ஜனவரிக்கு பிறகு கடைப்பிடிக்க வில்லையெனில் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து கமிசனர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். (21.12.2008)

***

முன்பெல்லாம் வேலை தொடர்பாக மாதம் ஒருமுறை சென்னை வந்து போவேன். அப்பொழுதெல்லாம் சென்னை சிக்னல்களில் மக்கள் “எவ்வளவு ஒழுங்காக வரிசையாக போகிறார்கள்” என வியந்து பார்த்திருக்கிறேன்.

வேறு வழியேதும் இல்லாமல், சென்னையில் செட்டிலாக வேண்டிய ஒரு நெருக்கடி வந்தது. சென்னையிலேயே தங்கினேன். தொடர்ச்சியாக கவனித்த பின்புதான் உண்மை தெரிந்தது. போலீசு எங்கெல்லாம் நின்று கவனிக்கிறார்களோ அங்கெல்லாம் தான் மக்கள் ஒழுங்காக நிற்கிறார்கள் என புரிந்துகொண்டேன்.

***

வளர்ந்த நாடுகளில் 80% வாகனங்கள் ஓடுகிறது. ஆனால், நம்மை போன்ற வளரும் நாடுகளில் தான் 80% விபத்து ஏற்படுகிறதாம்.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 12036 சாலை விபத்துகள் நடந்திருக்கின்றன. 11034 பேர் இறந்திருக்கிறார்கள். சென்னையின் பங்கு மட்டும் 1161 பேர். ஒரு நாளைக்கு குறைந்தது 3 பேர். மொத்த தமிழ்நாட்டில் சென்னையின் பங்கு மட்டும் ஏறத்தாழ 10%க்கும் மேல்.

கடந்த ஆண்டுகளில், வருடம் தோறும் 1000 என உயிர் இழப்புகள் அதிகரித்திருக்கிறது.

சென்னையில் வண்டி ஓட்டுவது மிக மிக சிரமமான காரியம்.
வேக வேகமாய் பறப்பார்கள். சிக்னலில் நிற்கும் பொழுது ஒவ்வொருவரையும் கவனியுங்கள். பயங்கர டென்சனுடன் எரிச்சலுடன் நிற்பார்கள். விதிகள் எல்லாம் மற்றவர்களுக்கு. தனக்கு மட்டும் இல்லை என நினைப்பிலேயே பெரும்பான்மையோர் வண்டி ஓட்டுகிறார்கள்.



போக்குவரத்து விதிகளை சரியாக கடைப்பிடிக்கிறேன் பேர்வழி என மஞ்சள் விளக்கு போட்டதும் வண்டியை நிறுத்தினீர்கள் என்றால்... பின்னாடி வரும் லாரியாலோ அல்லது அரசு பேருந்தாலோ நீங்கள் சட்னியாகிவிடுவீர்கள்.

மக்களுக்கு இவர்கள் சொல்கிற அறிவுரை எல்லாம் தெரியாது என்றா நினைக்கிறீர்கள். எல்லாம் தெரியும். பிறகு ஏன் இப்படி ஒழுங்கு இல்லாமல் இருக்கிறார்கள்

இந்த பிரச்சனை சமூக உளவியல் சார்ந்தது. சமூகப் பொறுப்பு இல்லாமல் இருப்பது தான் இவ்வளவு விபத்துக்கும் காரணம்.

சக மனிதர்களை பற்றிய அக்கறையின்மை, ஒவ்வொரு மனிதனும் சென்னையில் தனித்தனித் தீவாய் மனதளவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நேர்மையாக பணம், புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற நெறி இல்லாமல் விரைவில் சம்பாதிக்க வேண்டும். அதுவும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற சிந்தனை மக்களின் மனதில் பாசியாய் படர்ந்திருக்கிறது.

சென்னையில் நிலவுகிற முதலாளித்துவ சமூகம் அதற்கு நல்ல உதாரணமாய் இருக்கிறது.

‘என் தனிப்பட்ட செயல்களைப் பார்க்காதே! என் படைப்பை பார்!’ என்று கேவலமாய் வாழ்ந்தாலும், சமூகத்தில் புகழ்பெற்று வலம்வரும் இலக்கியவாதிகள்.

ஏரியாவிற்குள் கஞ்சா வித்தவன், கள்ளச்சாராயம் வித்தவன், கந்துவட்டி வாங்கியவன் எல்லாம் ஏதோவொரு ஓட்டுக்கட்சியில் சேர்ந்து கவுன்சிலர், எம்.எல்.ஏ. என வலம் வருகிறார்கள்.

சாராயம் வித்தவன், மாமா வேலை பார்த்தவனெல்லாம் தனியார் கல்லூரிகளை உருவாக்கி கோடிக்கணக்கில் கல்லாக்கட்டி சமூகத்தில் கல்வியாளராக வலம் வருகிறார்கள்.

இப்படி கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல் என எல்லா அரங்கிலும் மக்கள் விரோதிகள் முன்னணியில் நிற்கிறார்கள். சமூக அக்கறை உள்ளவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இப்படி மக்களின் மனதில் பாசியாய் படந்திருக்கிற கோளாறான சிந்தனை முறை மாற வேண்டும். சமூகமும் மாற வேண்டும்.

சிந்தனை இப்படி கோளாறாய் இருக்கும் பொழுது, சாலையில் மட்டும் சரியாக நடந்து கொள்வார்களா என்ன? ஒரு சமூக மாற்றம் ஏற்பட்டால் ஒழிய இந்த நிலையில் பெரியதொரு மாற்றம் வரச் சாத்தியமில்லை.

மற்றபடி, சட்டங்களை கடுமையாக்கினால்... சரியாக போய்விடும் என்கிறார்கள். நாடு லஞ்ச லாவண்யத்தில் மூழ்கி திளைக்கும் பொழுது, சட்டங்களை கடுமையாக்கினால்... காவலர்களின் தொந்திகளைத் தான் இன்னும் பெருக்க வைக்கும்.

இன்றைய அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் நிலை!


என்னுடைய பள்ளி பருவ காலத்தில் அம்மாவிடம் ஆசையாய் கேட்டிருக்கிறேன். “அம்மா! ஒரு நாய் வளர்க்கலாம்மா!”

எங்களுடைய மொத்த குடும்பமும் உழைப்பில் ஈடுபட்டாலும், வறுமையில் உழல்கிற குடும்பம்.

அம்மாவிடம் கேட்டதும், உடனே பதில் வரும்.

“உங்களுக்கே சோறு போட முடியல! இதுல அது வேற!”

“எதிர்வீட்டில் இரண்டு நாய் வளர்க்கிறார்களே!” என்பேன்.

“அது ஊரை கொள்ளையடிச்சு கந்து வட்டி-ல வர்ற பணம்டா!. அவங்க இன்னும் இரண்டு நாய் கூட வளர்ப்பாங்க!” என்பார் கோபமாய்.

****

இன்றைக்கு அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும் மக்களின் நிலை பரிதாபகரமான நிலை.

தங்களுடைய சேமிப்புகளை தொலைத்து, இருக்கிற வேலை இழந்து நிற்கும் அவர்களால் தங்களுடைய செல்ல வளர்ப்பு பிராணிகளை முன்பை போல ஆரோக்கியமான முறையில் கவனிக்க முடியவில்லை.


ஆகையால், பணம் செலுத்த முடிகிறவர்கள் தங்களுடைய செல்லப் பிராணிகளை காப்பகங்களில் ஒப்படைக்கிறார்கள். முடியாதவர்கள் வேறு பகுதிகளுக்கு சென்று தெருவில் விட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் வந்து விடுகிறார்கள்.

இந்த வளர்ப்பு பிராணிகள் சாப்பிடும் அளவு மற்றும் கலோரியின் அளவு எவ்வளவு தெரியுமா?

ஓரளவு வசதிப்படைத்த இந்தியர் சாப்பிடும் உணவை விட மூன்றுமடங்கு அளவும், கலோரியும் கொண்டவை.

மூன்றாம் உலக நாடுகளை கொள்ளையடித்து தங்களுடைய சொந்த நாட்டு மக்களை செல்லப்பிள்ளைகளாக பார்த்துக்கொண்டது. மக்களும் நிறைய செலவு செய்து பகட்டாய் வாழ்ந்தார்கள்.

அங்கு கடித்து, இங்கு கடித்து இறுதியில் தன் சொந்த நாட்டு மக்களையே முதலாளித்துவம் கடித்து குதறிவிட்டது.

அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் இனியாவது, ஏகாதிபத்திய நாடுகளான தங்கள் நாடுகள் பல்வேறு நாடுகளை கொள்ளையடிப்பதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.

December 21, 2008

அமெரிக்க திவால் - இன்றைய அமெரிக்காவின் நிலை!

நிதிமூலதன கும்பல்கள் விளையாடி, தங்களுடைய சேமிப்பை எல்லாம் பங்கு பத்திரங்களாக வாங்கி வைத்திருந்து.. இப்பொழுது மதிப்பிழந்து குப்பை காகித பத்திரங்களாக மாற்றப்பட்டு ஏமாந்து நிற்கும் அமெரிக்க நடுத்தர வர்க்கம், பல்வேறு தில்லுமுல்லுகளால் செயற்கையாக விலை பன்மடங்கு ஏற்றப்பட்டு, வீட்டுக்கடனை அடைக்க முடியாமல் வீட்டை விட்டு துரத்தப்பட்ட அமெரிக்க அடித்தட்டு மக்களின் இன்றைய யதார்த்த நிலை என்ன வென்று தெரியுமா?

ஜெயமங்கலம், வெள்ளக்கோவில் பகுதிகளில் நெசவுத் தொழிலை நம்பி இருந்த நெசவாளிகள் வேலையிழந்து வாழ்வதற்காக தன்னுடைய கிட்னியை விற்று பிழைத்தார்களே! அதே போல், அமெரிக்கர்கள் தங்களுடைய ரத்த பிளாஸ்மா, தலைமுடி, உடலில் சுரக்கும் சில மருத்துவ திரவங்கள், டிஷ்யூக்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆண்கள் தங்கள் உயிரணுக்களை விற்கிறார்கள். 100 டாலர் கிடைக்கிறதாம். சியாட்டிலில் உள்ள ஒரு உயிரணு வங்கியில் முன்பெல்லாம் 50 பேர் விண்ணப்பித்த நிலையில், இன்றைக்கு 150 விண்ணப்பங்கள் வருகின்றனாம்.

பெண்கள் தங்களுடைய கருமுட்டைகளை விற்கிறார்கள். அதற்கும் 100 டாலர் கிடைக்கிறதாம். நன்கு செழிப்பான கருமுட்டை 7000 டாலர்கள் விலை கிடைக்கிறதாம். முன்பு, நாளொன்றுக்கு இரண்டு முதல் ஐந்து பெண்கள் வந்தவர்கள்... இப்பொழுது, இருபது பேர் வருகிறார்களாம்.

(நன்றி – தினமணி கதிர் - 21.12.2008)

ஆனால் இந்த கொள்ளையை அடித்த கும்பல்களின் இன்றைய நிலை என்ன தெரியுமா? மேலே படியுங்கள்.

****

ஊரை அடித்து உலையில் போடும் கூட்டுக் களவாணிகள் – அமெரிக்க முதலாளிகள் அடித்த வீட்டுக் கடன் கொள்ளையில், அமெரிக்க அரசு ஜாடிக்கேத்த மூடியாய் செயல்பட்டுள்ளது.


நேற்று வரை, புகழ் பெற்ற அமெரிக்க நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக (C.E.O.) அறியப்பட்டவர்கள், இன்று அமெரிக்க மக்களால் கொள்ளைக்காரர்களாகக் காறி உமிழப்படுகிறார்கள். "வீடிழந்து, கடனாளியாகித் தெருவில் நிற்கும் மக்களைக் கைதூக்கி விடு; இந்தக் கொள்ளைக் கும்பலைச் சிறையில் தள்ளு'' என்ற முழக்கங்கள் அமெரிக்காவில் திரும்பிய பக்கமெல்லாம் எதிரொலிக்கின்றன.

செத்துப் போன பங்குச் சந்தை சூதாட்டப் பேர்வழி அர்சத் மேத்தாதான் இந்தியாவின் நிதி மந்திரி; இன்னொரு சூதாட்டப் பேர்வழியான கேதான் பாரேக்தான் ரிசர்வ் வங்கியின் கவர்னர்; தமிழக மக்களின் சேமிப்பையெல்லாம் சுருட்டிக் கொண்டு ஓடிப் போன "பிளேடு'' கம்பெனி அதிபர்கள்தான் நிதி ஆலோசகர்கள் இப்படிப்பட்ட நிலைமையைக் கற்பனை செய்து பார்ப்பது கூட நமக்கு அச்சமூட்டுவதாக இருக்கும். ஆனால், அமெரிக்காவிலோ அர்சத் மேத்தாக்களுக்கெல்லாம் அப்பனான நிதிச் சந்தை சூதாடிகள்தான் நாகரிகமாகச் சொல்வதென்றால் நிதி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக இருந்தவர்கள்தான் அந்நாட்டின் நிதியமைச்சராக, நிதித்துறை ஆலோசகர்களாகப் பதவி ஏற்கிறார்கள். இந்தச் சூதாடிகள் கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவையே சூதாட்ட விடுதியாக மாற்றி விட்டதோடு, பல்வேறு நாடுகளையும் இச்சூதாட்டத்தில் இழுத்துப் போட்டு விட்டார்கள் என்பதும்தான் இந்த ""நெருக்கடி'' உணர்த்தும் உண்மை.


அமெரிக்க ஜனநாயகம்: சூதாடிகளின் ஏஜெண்ட்

1930ஆம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் இந்த நெருக்கடியைப் போன்றதொரு வீழ்ச்சியைச் சந்தித்தபொழுது, கிளாஸ்ஸ்டீகல் சட்டம் உருவாக்கப்பட்டு, வர்த்தக வங்கிகளும், முதலீட்டு வங்கிகளும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. 1930க்கு முன்பு வங்கிகளே பங்குச் சந்தை தரகு நிறுவனங்களையும் நடத்தி வந்ததால், வர்த்தக வங்கிகள் பொதுமக்களிடமிருந்து பெறும் சேமிப்புகளைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு இச்சட்டம் உருவாக்கப்பட்டு, பொதுமக்களின் சேமிப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் காப்பீடு நிறுவனமும் அமைக்கப்பட்டது. இச்சட்டம், 1999ஆம் ஆண்டு பில் கிளிண்டன் அதிபராக இருந்த சமயத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதற்கு அடுத்த ஆண்டு, நிதிச் சந்தையில் நடைபெறும் சூதாட்டங்களுள் ஒன்றான "டெரிவேட்டிவ்'' (பங்குகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் மீது நடைபெறும் சூதாட்டத்தின் மீது நடக்கும் சூதாட்டம்) மற்றும் வாராக் கடன்களைக் கைமாற்றிக் கொண்டே போகும் சூதாட்ட வர்த்தகம் ஆகிய இரண்டும், பங்கு பரிமாற்றக் கழகத்தின் கண்காணிப்பில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.

அமெரிக்க முதலீட்டு வங்கிகள், தாங்கள் செய்யும் முதலீடுகள் நட்டமடைந்தால், அதனை ஈடு
செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னிருப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விதி இருந்து வந்தது. 2004ஆம் ஆண்டில், இந்த விதி நீக்கப்பட்டு, முதலீட்டு வங்கிகள் இருப்பு வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற சலுகை நடைமுறைக்கு வந்தது. 2004ஆம் ஆண்டு கோல்டுமேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஹென்றி ஜெ.பால்சன்தான் இவர்தான் இப்பொழுது அமெரிக்க அரசின் நிதியமைச்சர் இச்சலுகையை வாங்கிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"சப்பிரைம் லோன்'' சூதாட்டம் ஊதிப் பெருத்ததற்கும் இந்த மூன்று சலுகைகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதேசமயம், இச்சலுகைகள் நடைமுறையில் இல்லாத காலத்தில், அமெரிக்க நிதிச் சந்தை கட்டுப்பாடோடு, நாணயமாக நடந்து கொண்டதாகக் கற்பனை செய்து
கொள்ளக் கூடாது. குறிப்பாக, இக்கட்டுப்பாடுகள் அனைத்தும் நடைமுறையில் இருந்த சமயத்தில்தான் "லாங்டெர்ம் கேப்பிடல் மேனேஜ்மெண்ட்'' என்ற முதலீட்டு நிறுவனமும், என்ரானும் குப்புறக் கவிழ்ந்தன. நியாயமாகப் பார்த்தால், இந்த நிறுவனங்கள் திவாலான பிறகு, கட்டுப்பாடும், கண்காணிப்பும் கடுமையாக இருந்திருக்க வேண்டும்; ஆனால், நடந்ததோ அதற்கு நேர் எதிரானது.


அமெரிக்காவில் வங்கிகளின் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் ரிசர்வ் வங்கி (Federal Reserve) அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை. வங்கி முதலாளிகளின் சங்கம்தான், அதற்குத் தலையாக இருந்து இயக்கி வருகிறது. கிருஷ்ண பகவான் பகவத் கீதையில் "எல்லாம் நானே'' என உரைத்தது போல, அமெரிக்காவில் பங்குச் சந்தை சூதாடியே வங்கி முதலாளியாக இருக்கிறார்; அவரே போலீசாக (கண்காணிப்பாளராக) இருக்கிறார். அவரே நீதிபதியாகவும் (திவாலான பொருளாதாரத்தை மீட்கும் பொறுப்பு) இருக்கிறார்.

அமெரிக்க அரசு, சூதாடிகளின் மீது இருந்த அற்பமான கண்காணிப்புகளை விலக்கிக் கொண்டதோடு, சூதாட்டம் சூடாக நடைபெறுவதற்குத் தேவையான பணத்தையும் வாரிக் கொடுத்தது. அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவராக இருந்த ஆலன் கிரீன்ஸ்பான் அமெரிக்க அரசின் கருவூலத்தில் இருந்து வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை ஒரு சதவீதமாகக் குறைத்ததன் மூலம் டாலர் புழக்கத்தைத் தாராளமாக்கினார்.

இதேபொழுதில், அமெரிக்கப் பங்குச் சந்தை வாரியத்தின் வாராக் கடன்களைக் கண்காணிக்கும் பிரிவில் ஊழியர்களின் எண்ணிக்கை 100இல் இருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டது; ஊழல் தடுப்புப் பிரிவில் இருந்து 146 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். சூதாடிகளுக்கு வழங்கப்பட்ட இச்சலுகைகளை நியாயப்படுத்துவதற்காக, ""அனைவருக்கும் வீடு'' என்ற கவர்ச்சி முழக்கம் அமெரிக்க மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒரு பக்கம் பணத்தோடு சூதாடிகள்; இன்னொருபுறம் கடன் வாங்கி செலவு செய்யும் நாகரீகத்துக்கு ஆட்பட்டுப் போன மக்கள் பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொண்ட பின்னணி இதுதான்.

நன்றி : புதிய ஜனநாயகம் – நவம்பர் 2008

பின்குறிப்பு : இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் இடப்படும்.

December 17, 2008

நாள்தோறும் 46 விவசாயிகள் தற்கொலை – முதலாளித்துவ பயங்கரவாதம்!

இந்தியாவில் சராசரியாக தினமும் 46 விவசாயிகள் தற்கொலையால் மடிகிறார்கள்.

2007ம் ஆண்டு கணக்கு படி, மகாராஷ்டிராவில் 4,238 விவசாயிக்ளும், கர்நாடகாவில் 2,135 விவசாயிகளும், ஆந்திராவில் 1,797 விவசாயிகளும் தற்கொலை செய்து இருக்கிறார்கள்.

-தேசிய குற்ற ஆவணப் பிரிவு வெளியிட்டுள்ள தகவல். (தினமலர் – 17.12.2008 – பக். 4)

****

தீவிரவாதத்துக்கு எதிராக இரண்டு மசோதாக்கள் நேற்று பார்லிமென்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆளுங்கட்சிகளும், எதிர்கட்சிகளும் ஏகமனதாக நிறைவேற்றிவிட்டன.

மும்பைத் தாக்குதலுக்காக இந்த நடவடிக்கை என்கிறார்கள். இதே மும்பைக்கு அருகில் விதர்பா மாவட்டத்தில் கடந்த வருடத்தில் மட்டும் மேலே உள்ள கணக்குப்படி 4,238 விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கிறார்கள்.

உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்ற முதலாளித்துவ பயங்கரவாத கொள்கைகளை இந்தியாவில் நிறைவேற்ற துவங்கி... கடந்த 14 ஆண்டுகாலமாக லட்சகணக்கான நம் விவசாயிகள் தற்கொலையில் மடிந்திருக்கிறார்கள். இன்றைக்கும் அது நிறுத்த முடியாத தொடர்கதையாக மாறியிருக்கிறது.

நம் விவசாயிகளுக்காக எந்த ஆளுங்கட்சி துடித்தது? எதிர்கட்சி துடித்தது?

நேற்று 5 மணி நேரம் இரண்டு மசோதாக்களுக்காக விவாதித்து இருக்கிறார்கள். இறந்து போன விவசாயிகளுக்காக இவர்கள் எவ்வளவு நேரம் விவாதித்திருப்பார்கள். தீவிரவாதத்திற்காக இவ்வளவு மெனெக்கெடுக்கிற அரசு விவசாயிகளின் நல்வாழ்வுக்காக, தற்கொலைகளை தடுக்கும் விதமாக எத்தனை மசோதாக்களை நிறைவேற்றியிருப்பார்கள்?

இந்த நாட்டில் விவசாயின் உயிர் என்றால் துச்சமாக போய்விட்டது. மும்பை தாக்குதலில் உயிர் துறந்த காமோண்டாக்களுக்காக எத்தனை நெஞ்சங்கள் கண்ணீர் விட்டன. இருப்பினும் அந்த கமோண்டாக்களுக்காக பல்வேறு சலுகைகள், சம்பளங்கள் அரசு வாரி இறைக்கிறது. இந்த நாட்டின் உணவு உற்பத்திக்காக தன்னையே விதைக்கிற விவசாயிக்கு என்ன செய்தது?

ஏகாதிபத்தியமும், முதலாளித்துவமும் செய்கிற அத்தனை கேடுகெட்ட தில்லுமுல்லுகளின் சுமைகளை தாங்குபவர்கள் இந்த பாவப்பட்ட விவசாயிகள் தான்.

இந்தியா நாசமாய் போவதற்கு ஒரு குறியீடு இந்த விவசாயிகளின் சாவு.

நிலப்பிரபுக்கள், தரகு முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகள், அதிகாரவர்க்கம் - இவர்களை காக்க மத்தியில், மாநிலத்தில் ஆளும் கட்சிகளும், எதிர்கட்சிகளும் இருக்கிறார்கள்.

நம் விவசாயிகளைக் காக்க நாம் தான் போராட வேண்டும்.

அந்நிய முதலீடு – சில குறிப்புகள்!



முன்குறிப்பு:

அமெரிக்க திவால் தொடர்பான தேடலில் இந்த கட்டுரை ‘அந்நிய முதலீடு’ பற்றிய சிறு புரிதலை தருகிறது. படியுங்கள்.
***

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற கொள்கைகள் கடந்த 13 ஆண்டுகளாக இந்தியாவில் பின்பற்றப்படுகின்றன.

இந்த கொள்கைகளின் அடிப்படையில்.. அந்நிய முதலீடுகளை இந்தியாவில் எல்லா மாநிலங்களும் பல ஆண்டுகளாக வரவேற்று கொண்டிருக்கிறார்கள். இப்படி உள்ளே வருகிற அந்நிய முதலீடுகள் பல்வேறு வழிகளில் தங்களுடைய முதலீட்டை விட அதிகமாய் நாட்டை விட்டு கடத்திவிடுகின்றன.

பல நாடுகளில் இப்படி நிகழ்ந்திருப்பதை, தரவுகளுடன் தொடர்கிற கட்டுரை விளக்குகிறது.

****
இந்த கட்டுரையை லைட்லிங்க் என்ற பதிவர் எழுதியுள்ளார்.
***

நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறிய வல்லரசாக வேண்டுமா? வேலை வாய்ப்பு பெருக வேண்டுமா? தொழில் நுட்பம் தரமாக வேண்டுமா? பொருளாதார முன்னேற்றம் வேண்டுமா? வேண்டும் என்றால் நீங்கள் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த வாசகத்தை உயர்த்தி பிடிக்கிறார்கள்.

முதலில் அன்னிய நேரடி முதலீடு பற்றி பார்ப்போம். ஒரு அந்நிய நிறுவனம், நேரடியாகவோ அல்லது இங்குள்ள தரகுப் பெரு முதலாளிகளை பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டோ ஒரு தொழில் நிறுவனத்தை தொடங்கினால், அது அன்னிய நேரடி முதலீடு (FDI ) எனப்படுகிறது. இதற்கு அந்த அன்னிய நிறுவனம் தனது சொந்த பணத்தை முதலீடு செய்வதில்லை.

எந்த நாட்டில் முதலீடு செய்ய விரும்புகின்றனவோ, அந்த நாட்டில் உள்ள வங்கிகளில் கடன் பெற்று முதலீடு செய்கின்றன.ஆனால், ஒரு தொழிலில் நுழையும் அன்னிய நேரடி முதலீடானது காப்புரிமை தொகை, இலாப ஈட்டு தொகை, தொழில் நுட்ப கட்டணம், ஆதாயப் பங்கு, திறன் கட்டணம் என பல்வேறு வடிவங்களில் அரசு அந்த நிறுவனத்திற்கு மாத மாதம் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதனால் உள் நாட்டில் உள்ள அன்னிய செலாவணி வெகுவாக விரைவில் கரைந்து போய்விடும். இவ்வாறு அன்னிய நேரடி முதலீட்டை காலியாக்கப்படும் அன்னிய செலாவணியின் மதிப்பு, அன்னிய நேரடி முதலீட்டை விட அதிகமகா இருந்தால் அது நாட்டின் வளர்ச்சியா? அல்லது வீழ்ச்சியா?

1995-2003 ஆப்பிரிக்க நாடுகளில் நுழைந்த அன்னிய நேரடி முதலீடு ஏறத்தாழ 4243 கோடி ரூபாய். ஆனால், காப்புரிமை தொகை, இலாப ஈட்டு தொகை, தொழில் நுட்ப கட்டணம், ஆதாயப் பங்கு, திறன் கட்டணம் முதலிய வடிவங்களில் அன்னிய செலாவணியாக வெளியேறிய மூலதனமோ ஏறத்தாழ 25,294 கோடி ரூபாய்!

காங்கோ நாட்டில் அதே காலகட்டத்தில் போடப்பட்ட அன்னிய நேரடி முதலீடு ஏறத்தாழ 7,303 கோடி ரூபாய். வெளியேறிய மூலதனமோ 12,478 கோடி ரூபாய். தென் அமெரிக்க நாடான பிரேசிலும் இது தான் நடந்தது. அன்னிய நேரடி முதலீடு பெருக பெருக, நாட்டின் அன்னிய செலாவனி இருப்பும் கரைந்து கொண்டே போனது. 1993-இல் பிரேசிலை விட்டு வெளியேறிய உள்நாட்டு மூலதனம் ஏறத்தாழ ரூ.148 கொடியாக இருந்தது. 1998-இல் இது ரூ.28,000 கோடியாக உயர்ந்தது.

(ஆதாரம்: UNCTAD அறிக்கை,2005)



அமெரிக்க என்ரான் நிறுவனம் இந்தியாவில் தொழில் தொடங்க இந்திய வங்கிகளில் கடன் வாங்கியது. மகாராஷ்டிராவில் தபோல் மின் நிலையம் தொடங்க 40% மூலதனத்தை இந்திய வங்கிகளில் கடனை வாங்கியது. அமெரிக்க பங்கு சந்தையில் நடத்திய மோசடி காரணமாக அந்த நிறுவனம் திவாலாகி போனது, அந்த நிறுவனம் இந்தியாவில் வாங்கிய கடன் இந்திய மக்களின் தலையில் விழுந்தது.

அது மட்டுமல்ல இந்த நிறுவனம் உற்பத்தியை தொடங்குவதற்கு முன்பே காப்புரிமை தொகை, இலாப ஈட்டு தொகை, தொழில் நுட்ப கட்டணம், ஆதாயப் பங்கு, திறன் கட்டணம் என பல்வேறு வடிவங்களில் அந்த நிறுவனம் மாதம் தோறும் ரூ. 95 கோடியை விழுங்கியது.

இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் நடத்திய ஓர் ஆய்வின்பபடி, ஏறத்தாழ 300 அன்னிய நேரடி முதலீடு நிறுவனங்களால் கிடைத்த தொகையை விட அந் நிறுவங்களுக்கு இந்திய அரசு கொடுத்த காப்புரிமை தொகை, இலாப ஈட்டு தொகை, தொழில் நுட்ப கட்டணம், ஆதாயப் பங்கு, திறன் கட்டணம் அன்னிய செலவாணியே அதிகமாக உள்ளது.

அன்னிய நேரடி முதலீடுகள் இதோடு நின்று விடுவதில்லை. மோசடிக் கணக்கு வழக்குகள் மூலம் ஒரு நாட்டின் முதலீடு செய்த மூலதனத்தையே படிப் படியாக கடத்திச் சென்று விடுகின்றன.
பன்னாட்டு கம்பெனிகளால் ஆண்டு ஒன்றுக்கு அமெரிக்காவுக்கு 1,20,000 கோடிக்கு மேல் வரி இழப்பு ஏற்படுகிறது.

உலகின் மிகப் பெரிய எண்ணை நிறுவனமான எக்சான் தென் அமெரிக்க
நாடான சிலி நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக வரியே செலுத்தியதில்லை. ஏனென்றால், அந்த நிறுவனம் இன்றைக்கும் லாபம் இட்டவில்லையாம் அப்புறம் எதற்காக எக்சான் நிறுவனம் பல்லாயிரம் கோடி முதலீடு செய்து தொழில் நடத்துகிறது என்ற கேள்வியெல்லாம் நீங்கள் கேட்க கூடாது.

அன்னிய முதலீடுகள் வேலை வாய்ப்பு பெருகும் என்கிறார்கள். இதுவும் அப்பட்டமான புளுகு. இவ்வகை முதலீடுகள் பெரும்பாலும் நிதி நிறுவனங்கள் முதலீடுகளாகவும் - பங்கு சந்தை முதலீடுகளாகவும் இருப்பதால் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில்லை. சேவை துறையிலும், உற்பத்தி துறையிலும் கணிசமாக நுழைந்துள்ள அன்னிய முதலீடுகள் நேரடி வேலை வாய்ப்பை உருவாக்காமல், ஒப்பந்த தொழிலாளர்கள் மூலமே தங்கள் வேலையை முடித்து கொள்கின்றன.

இவ்வகை அன்னிய முதலீடுகள் பங்கு சந்தையில் புள்ளிகளை ஏற்றினாலும் திடீர் ஒருநாள் சரிவதும் பின்பு ஏறுவதும் (அப்பட்டமான) சூதாட்டம் தான் என மீண்டும் மீண்டும் நமக்கு நினைவு படுத்துகிறது. இதையும் மீறி சிலர் உடல் உழைப்பை நம்பாமல் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் தங்கள் வாழ்க்கையை (சேமிப்பைத்) தொலைத்து விடுகின்றனர். மும்பை பங்கு சந்தை அமைந்துள்ள அதே மகாராஷ்டிராவில் விதார்பா மாவட்டத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இந்த உண்மை நிலவரங்ளையெல்லாம் மூடிமறைத்து விட்டு, நமது அரசுகள் கண்ணை மூடிக்கொண்டு அந்நிய முதலீட்டை ஆதரிக்கின்றன.

நன்றி :

from : http://lightlink.wordpress.com

December 16, 2008

இந்திய வளர்ச்சியின் உண்மை நிலை!



முன்குறிப்பு :

பெரு நகரங்களில் எழுந்திருக்கிற செல்போன் வளர்ச்சியும், வாகன போக்குவரத்து வளர்ச்சியும் பார்த்து விட்டு, பலர் இந்தியாவே முன்னேறிவிட்டது என அப்பாவித்தனமாய் நம்புகிறவர்கள் பலர். அவர்கள் அளவுக்கு நம்பிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை. என்னிடம் ஒருவர் இதையே ஆதாரமாய் கொண்டு ஆணித்தரமாய் (!) பேசினார். பின்வருகிற கட்டுரை உண்மை நிலையை விவரிக்கிறது.

“நம் நாட்டில் 87 கோடி பேர் நாளொன்றுக்கு ரூ.20க்கும் குறைவாக வருமானம் பெற்று உயிர் வாழ்ந்து வருகிறார்கள்.”

இப்படி செய்தி வெளியான பொழுது, யாரும் நம்ப மறுத்தார்கள்.

இந்திய ஏழைகள் பற்றி இந்த அதிர்ச்சிகரமான விபரத்தை வெளிப்படுத்தியவர் டாக்டர் அர்ஜூன் சென்குப்தா எம்.பி.,. தேசிய அமைப்புசாரா தொழில்கள் ஆணையத்தின் தலைவராக இவர் செயல்பட்டு வருகிறார்.

மிகப்பெரிய உள்நாட்டுச் சந்தையைக் கொண்ட இந்தியா, உலகப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்து (9.12.2008) நாளிதழில் விவரித்துள்ளார். அதன் சுருக்கம் இங்கு தரப்படுகிறது)

****

இந்திய அரசு அண்மையில் ஏற்று மதியாளர்களுக்குச் சில சலுகைகளை அறிவித்துள்ளது. பணக்கார நாடுகளில் சந்தைகள் தேக்கமடைந்துள்ள நிலை யில் நுகர்வுத் தேவை அதிகரிக்காது. எனவே மத்திய ஆட்சியாளர்களின் இது போன்ற நடவடிக்கைகளால் பொருளா தார நெருக்கடிக்குச் சரியான தீர்வு ஏற்படாது. மாறாக இந்த பொருளாதார நெருக்கடி மேலும் தொடரவே செய்யும்.

இந்திய மக்களின் நுகர்வுத் தேவை யை விரிவுபடுத்தி உள்நாட்டுச் சந்தை யை பலப்படுத்த வேண்டும். இந்தியாவில் 20 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள வளர்ச்சி மிகக் குறைந்தவர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. சுமார் 26 கோடி பேருக்கு இந்த பலன்கள் கிடைத்தபோது பெரும் பான்மையான 87 கோடிப் பேர் புறக் கணிக்கப்பட்டுள்ளனர்.



பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது என்று சொல்லப்படும் இந்த கால கட்டத்தில் நாளொன்றுக்கு ரூ.12 மட்டுமே ஈட்டிவந்த மக்களில் கொஞ்சம்பேர் (2004 - 05ல்) நாளொன்றுக்கு ரூ.20 வருமானம் பெறும் அளவுக்கு உயர்ந்துள்ளனர். இதுதான் ஏழைகள் பெற்ற முன்னேற்றம்! வளர்ச்சி யின் பலன் தங்களைப் புறக்கணித்துச் செல்வதை அவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த 87 கோடி மக்களில் ஆகப் பெரும்பான்மையானோர் எழுத்தறிவில் லாதவர்களாக அல்லது ஆரம்ப கல்வி மட்டுமே பெற்றவர்களாக இருக்கின்றனர். சத்தான உணவு கிடைக்காமல் நோயில் துன்புறுகின்றனர். பெரும்பாலும் வேலை வாய்ப்பு கிடைக்காதவர்கள் அல்லது ஏழை உழைப்பாளிகள், சாலையோர வியாபாரம் போன்ற அமைப்புசாராத சுய வேலை செய்யும் தொழிலாளி வர்க்கத் தினராக இவர்கள் இருக்கின்றனர்.

வேளாண்மை துறையைச் சேர்ந்த 84 சதவீதம் குடும்பத்தினர் இந்த பொருளா தாரத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின் றனர். அதிகபட்சம் 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கக்கூடிய ஏழை விவசாயிகளான இவர்கள் வாழ்வ தற்காக நிலத்தோடு போராட வேண்டி யிருக்கிறது. மேலும் வாழ்க்கைத் தேவைக்கு விவசாயம் இல்லாத இதர உள்ளூர் வேலைகளை எதிர்பார்த்திருக்கின்றனர்.



தொழில் துறையைப் பொறுத்தவரை 5 கோடியே 80 லட்சம் சிறு, குறு தொழிற் கூடங்களில் 10 கோடியே 40 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ரூ.5 லட்சத்துக்குக் குறைவான முதலீடு கொண்ட இந்த சிறிய தொழிற்சாலை களில் மிக துன்பகரமான நிலைமையில் இவர்கள் வேலை செய்கின்றனர். கைத் தறி, கைவினை, கயிறு, தோல், ஆயத்த ஆடை, உணவு பதப்படுத்துதல் மற்றும் உலோகத் தயாரிப்பு தொழில்களில் வேலை செய்யும் இவர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 31 சதவீதம் பங்களிக்கின்றனர். இவர்களது உற்பத்திப் பொருட்களில் ஏறத்தாழ 90 சதவீதம் உள்நாட்டு சந்தைகளில் நுகரப்படுகிறது.

அரசு வழங்கும் நிதி தூண்டிவிடல் (ளவiஅரடரள) என்பதன் அர்த்தம் இந்தப் பிரிவினரை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். இதன் மூலம் உள்நாட்டுத் தேவையை விரிவாக்க வேண்டும்.
5 கோடியே 80 லட்சம் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு நிதி மற்றும் கடன் வசதியை நாம் அதிகரிக்க வேண்டும்.

நம் நாட்டு வங்கிகள் வழங்கும் நிகரக் கடனில் 5 கோடியே 40 லட்சம் தொழிற்சாலைகள் பெறும் கடன் வசதி வெறும் 2.2 சதவீதம் மட்டுமே. அதிகபட்சம் ரூ.25 லட்சம் முத லீட்டில் இயங்கும் இதர 40 லட்சம் சிறு தொழிற்சாலைகள் பெறும் கடன் வச தியும் மொத்த நிகரக் கடனில் 4 சதவீதம் தான். இந்த தொழிற்சாலைகளுக்கு வழங் கும் கடன் அளவை இன்னும் 1 சதவீதம் அதிகரித்தாலே புதிதாக 1 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர முடியும். உள்நாட்டு மொத்த உற்பத்தியும் பெருகும்.

அமைப்பு சாரா துறைக்கு தனி நிதி நிறுவனம்

வேளாண் துறைக்கு கடன் வழங்க ஏற்படுத்தப்பட்ட நபார்டு வங்கி போல அமைப்புசாரா துறைகளுக்கு கடன் மற்றும் நிதி வசதி ஏற்படுத்த தனி நிதி நிறுவனம் ஏற்படுத்த வேண்டும் என்று அமைப்புசாரா தொழில்களுக்கான தேசிய ஆணையம் ஓராண்டுக்கு முன்பு மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கியது. அமைப்புசாரா தொழில்களுக்கு கடன் வசதி மட்டுமின்றி, சந்தை வாய்ப்பு, தொழில்நுட்பம், காப்பீடு வழங்கவும் இந்த நிதியமைப்பு தேவை.

மத்திய அரசின் குறைந்தபட்சப் பொதுத் திட்டத் திலேயே அமைப்புசாராத் தொழில்களுக்கு வசதி ஏற்படுத்தித்தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு தேவையான நிதி முதலீடு செய்து இந்த பரிந்துரையை உடனடியாக நடைமுறைக் குக் கொண்டு வர வேண்டும்.
அரசின் கடன், மானியங்களைப் பெறு வதில் வழக்கமாக பலனடையும் பெரிய விவசாயிகளைத் தவிர்த்து, சிறிய, ஏழை விவசாயிகள், அமைப்புசாராத் துறையை நம்பி இருப்பவர்கள் பலனடையும் வகையில் ரூ.5 ஆயிரம் கோடி அளவில் திட்டத்தை தேசிய ஆணையம் பரிந்துரை செய்தது. இதையும் அரசு நடைமுறைப் படுத்த வேண்டும்.

மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்ற பொது உள்கட்டமைப்பு களில் நிதி ஒதுக்கி தூண்டிவிடும் நட வடிக்கையை அரசு மேற்கொள்வதன் மூலம் அமைப்புசாரா துறை பொருளாதா ரத்தையும் ஊக்குவிக்க முடியும்.

குறிப்பாக கிராமப்புற சாலை, சந்தை, மின்வசதி, சிறிய நீர்ப்பாசன திட்டங் களை அரசு பொது முதலீட்டைச் செலுத்தி மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தி பெருமளவு விரிவடையும். இது உள் நாட்டு தேவையை அதிகரிக்கும். தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டத்தை இன்னும் தீவிரமாக நடை முறைப்படுத்துவதன் மூலமும் கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து உள்நாட்டுத் தேவையைப் பெருக்க முடியும்.
ஏழ்மையில் துன்புறும் 87 கோடி மக்களை நோக்கி வருமானத்தை மாற்றி விடுவதற்காக வருத்தப்படத் தேவையில்லை.

வளர்ச்சியின் இறுதி இலக்கு என்பது சாமானிய மக்களின் நலன்களை மேம்படுத்துவதுதானே? மேலும் 36 கோடி அமைப்புசாராத் தொழிலாளர் களின் சமூகப் பாதுகாப்புக்கு தேசிய ஆணையம் விரிவான திட்டம் தீட்டியுள் ளது. இதை செயல்படுத்த மொத்த உள் நாட்டு உற்பத்தியில் அரை சதவீதம் ஒதுக்கினாலே போதுமானது. இதை நிறைவேற்றுவதன் மூலம் எதிர்பாராத இழப்பு, விபத்துக்களில் இருந்து அந்த மக்களைக் காக்கலாம். அவர்களின் வாங்கும் சக்தியையும் குறையாமல் பாதுகாக்கலாம். இவர்கள் வாங்கும் சக்தி அதிகரிப்பதால் அத்தியாவசியப் பொருட் கள் நுகர்வு அதிகரிக்கும். நாட்டிலுள்ள சிறு, குறு தொழிற்சாலைகளின் உற்பத்தி பெருகும்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக மற்ற முதலாளித்துவ நாடு கள் பின்பற்றும் வழிமுறையை நம் நாடும் பின்பற்ற வேண்டியதில்லை. மிகப்பெரிய உள்நாட்டுச் சந்தை இருந்தும் இத்தனை காலமாக அது புறக்கணிக்கப்பட்டு வந் துள்ளது. பொருளாதார வளர்ச்சி ஏற் படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக் கைகளிலும்கூட இந்த சந்தை இதுவரை புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது.

தேவையான கடன் வசதி, சந்தை வாய்ப்பு ஏற்படுத்தித் தராமல் பெரும் பிரச்ச னையை இதுவரை சந்தித்து வந்துள்ளது. இதை நிறைவு செய்யும் வகையில் உள் நாட்டு கொள்கை வகுத்தாலே குறைந்த காலஅளவில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முடியும். இதன் மூலம் தேசியப் பொரு ளாதாரம் நம்பிக்கையோடு நெருக்கடியில் இருந்து மீண்டு வர முடியும்.

டாக்டர் அர்ஜூன் சென்குப்தா

நன்றி :

இந்த கட்டுரையை மொழிபெயர்த்து வெளியிட்ட லைட்லிங்க் பதிவர் அவர்களுக்கு.

http://lightlink.wordpress.com

December 9, 2008

தொழிலாளர்களை அலைக்கழிக்கிறது தொழிலாளர் நல அரசு காப்பீட்டுக் கழகம் (இ.எஸ்.ஐ.)




இ.எஸ்.ஐ. மருத்துவ பயன் பெறுவதற்கு... தொழிலாளர்களுக்கு தரும் அடையாள அட்டைகளை தராமலே அருமையான சேவை தருகிறது”.


- அதெப்படி சாத்தியம் என்கிறார்களா? மேலே படியுங்கள். புரியும்.

***

தொழிலாளர்களின் மருத்துவ நலன்களுக்காக அரசு, தொழிலாளர் நல அரசு காப்பீட்டுக் கழகம் (E.S.I.C) என்றொரு கார்ப்பரேசனை உருவாக்கி, பல வருடங்களாக இயக்கிவருகிறது.

ரூ. 10000க்கு கீழ் வருமானம் பெறும் எல்லா தொழிலாளர்களும் இந்த திட்டத்தின் கீழ் பலன் பெறுவார்கள். தொழிலாளி தான் வாங்கும் சம்பளத்திலிருந்து 1.75% பணத்தை செலுத்த வேண்டும். முதலாளி 4.75% பணம் சேர்த்து கட்டவேண்டும். இது விதி. தொழிலாளி மற்றும் அவரைச் சார்ந்துள்ள குடும்பத்தினர் அனைவரும் இதில் பலன் பெறலாம் (சில நிபந்தனைகளுடன்).

“இந்தியாவிலேயே இந்த திட்டம் தான் குறைந்த பணம் செலுத்தி, பலன்கள் அதிகம் பெறும் திட்டம்” – என இ.எஸ்.ஐ. பெருமையுடன் கூறுகிறது. உண்மை தான்.

ஆனால், இந்த பலன் பெற அடிப்படையானது இ.எஸ்.ஐ. தரும் அடையாள அட்டை. அந்த அட்டையே தராமல் இழுத்தடித்தால் எப்படி பலன் பெறுவது?

****

இ.எஸ்.ஐ. விதிகள் சொல்வது என்னவென்றால்?

ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தவுடன் ஒரு விண்ணப்பத்தை (Form – 1) பூர்த்தி செய்து, தொழிலாளியின் போட்டா ஒட்டி 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்த உடன், 3 மாதங்களுக்கு மட்டும் மருத்துவம் பார்ப்பதற்கு புகைப்படத்துடன் கூடிய ஒரு தற்காலிக அடையாள அட்டை (Temporary Identity card) தருவார்கள்.

பிறகு, இரண்டு மாதங்கள் கழித்து, அந்த தற்காலிக அட்டையுடன் குடும்ப புகைப்படத்தை இணைத்துக் கொடுத்தால், நிரந்தர அட்டை (Permanent Identity card) தருவார்கள்.

இப்பொழுது நடப்பது என்னவென்றால்?

தற்காலிக அட்டை வாங்கும் படலம்

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால், 10 நாட்கள் கழித்து வாருங்கள் என்பார்கள். அங்குள்ள எழுத்தர் வேலை செய்ய சோம்பல்பட்டு இப்படிச் சொல்கிறார் என அலுவலக பொறுப்பாளரான மேனேஜரிடம் போய் விரைவில் வேண்டும் என சொன்னால்... அவர் 15 நாட்கள் கழித்து வாருங்கள் என்பார்.

15 நாட்கள் கழித்து போய் பார்த்தால், மீண்டும் 10 நாட்கள் கழித்து வாருங்கள் என்பார்கள். திரும்பவும் போய் கேட்டால், நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் கட்டு கட்டாய் இருக்கும்.

அதில் நம்மையே தேடித்தர சொல்வார்கள். நாம் 15 நிமிடம் பொறுமையாய் தேடி அவர்களிடம் கொடுத்தால்... நமக்கு முன்பே இரண்டு நிமிடத்தில் எண்ணை போட்டு தருவார்கள். (இந்த இரண்டு நிமிட வேலைக்காகவா நாம் மூன்று நாள் அலைந்தோம்! என்றெல்லாம் நீங்கள் சிந்தித்தால், உங்களுக்கு ரத்தக்கொதிப்பு அதிகமாய் சிரமப்படுவீர்கள்)

இப்படியாக பல அலைச்சலுக்கு பிறகு, மூன்று மாதத்திற்கான தற்காலிக அட்டையை நம் கையில் தரும்பொழுது, மூன்று மாதம் முடிந்திருக்கும். "The operation was a success but the patient died" என்ற பழமொழி நமக்கு நினைவுக்கு வரும்.

நிரந்தர அட்டை வாங்கும் படலம்

இப்படி பல போராட்டங்களுக்கு பிறகு, தற்காலிக அட்டை வாங்கியும் தொழிலாளர்கள் அதை பயன்படுத்த முடியாது. நிரந்தர அட்டையாவது வாங்கி கொடுக்கலாம் என மீண்டும் கொடுத்தால்... வாங்கியதும் நம் முன்னே ஒரு பெட்டியில் போடுவார்கள். ஒரு மாதம் கழித்து வரச் சொல்வார்கள். ஒரு மாதம் கழித்து போய் நின்றால்....

• மேனேஜர் விடுமுறையில் போய்விட்டார். அதனால், கையெழுத்து போட ஆளில்லை.

• நிரந்தர அட்டை இப்பொழுது ஸ்டாக் இல்லை. விரைவில் வந்துவிடும்.

• கணிப்பொறியில் விவரங்களை அடித்து, பிரிண்ட் எடுத்து மேனேஜர் கையெழுத்து போட்டு வேலையை முடிக்க நிறைய நேரம் பிடிக்கிறது. ஒரு நாளைக்கு சில கார்டுகள் மட்டுமே அடிக்க முடிகிறது.

• மின்சாரம் பல நேரம் இல்லாமல் இருக்கிறது.

இன்னும் இது மாதிரி பல காரணங்கள் சொல்லி இரண்டு மாதம் இழுத்தடிப்பார்கள். விக்கிரமாதித்தன் மாதிரி சளைக்காமல் போய்கொண்டேயிருக்க வேண்டும். பிறகு, ஒருநாள் மனம் இரங்கி, பெட்டியில் போட்டுக்கொண்டே வந்தார்கள் அல்லவா! அதில் நம்மையே தேடித்தாருங்கள் என்பார்கள்.

மலை போல் குவிந்திருக்கும், நூற்றுக்கணக்கான தற்காலிக அட்டைகளில்...அரைமணி நேரம் தேடினால், நீங்கள் மிகுந்த திறமைசாலி மற்றும் அதிர்ஷ்டசாலி என்றால் நீங்கள் கொடுத்திருந்த நாலும் கிடைத்துவிடும். துரதிருஷ்டசாலியாக இருந்தால், இரண்டு அல்லது ஒன்று தான் கிடைக்கும்.

அவர்களிடம் கொடுத்தால் “நான் தயாரித்து வைக்கிறேன். அடுத்த வாரம் வாருங்கள்” என்பார்கள். அதிலும் ஒரு கண்டிசன் “நீங்கள் லேமினேட் செய்து கொள்ள வேண்டும். நாங்க செய்தால் இன்னும் 15 நாட்கள் தாமதமாகும்” என்பார்கள் கூலாக.

இப்படி பல படலங்கள் தாண்டி, இந்த நிரந்தர அட்டையை வாங்கி அந்த தொழிலாளியிடம் கொடுக்க போகும் பொழுது, ஒரு வேளை வேலையை விட்டே அவர் போயிருப்பார். கையில் இருக்கும் “Permanent Card” “Dead card”யாக உருமாறியிருக்கும்.

சென்னையில் சில அலுவலங்கள் மட்டும் இப்படியில்லை. எல்லா இ.எஸ்.ஐ அலுவலகங்களும் கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு இழுத்தடிப்பதில் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள்.

இப்படி இ.எஸ்.ஐ. இழுத்தடிப்பது யாரை பாதிக்கும் என்றால்... தொழிலாளியைத் தான். சேர்ந்த முதல் மாதத்திலிருந்தே அவருடைய சம்பளத்திலிருந்து இ.எஸ்.ஐ.க்கான பணம் பிடிக்க தொடங்கிவிடுவார்கள். இவர்கள் 6 மாதம் கழித்து தரும் வரை வெளியில் தான் மருத்துவம் பார்க்கிறார்கள். ஒருவருக்கு உடல் நலக்குறைவு என்றால், மருத்துவருக்கே ரூ. 50 ரூ. 100 என கொடுக்க வேண்டியிருக்கிறது. இது போக மருந்து, மாத்திரைகளின் விலை வேறு தாறுமாறாக இருக்கிறது. தொழிலாளிகளின் வாழ்க்கை ஏற்கனவே நொந்து போய்கிடக்கிறது.

இப்படி, தொழிலாளர்களின் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட கார்ப்பரேசன் தொழிலாளர்களிடமிருந்து மாதம் மாதம் பணத்தையும் வாங்கிகொண்டு, இந்த லட்சணத்தில் இயங்குகிறது.

இப்படி மோசமான முறையில் வேலை செய்கிறார்களே, நாம் கம்ளைண்ட் பண்ணலாமே என நினைத்தால், இவர்கள் எப்பொழுதும் கவனமாக அத்தாட்சியே தருவதில்லை. வலியுறுத்தி கேட்டாலும்... அப்படி ஒரு சிஸ்டமே இல்லை என்பார்கள். இவர்களுடைய புத்திசாலித்தனத்தையெல்லாம் இழுத்தடிப்பதில் தான் காட்டுகிறார்கள்.

இந்த நிலை தொடர்ந்தால், இதையே காரணம் காட்டி எல்லாவற்றையும் தனியார் மயமாக்கி கொண்டிருக்கிற அரசு தனியார்மயமாக்கிவிடும்.

அப்பொழுதும் பாதிக்கப்படுவது தொழிலாளர்கள் தான். ஆகையால், இ.எஸ்.ஐ யால் பாதிக்கப்படுகிற தொழிலாளர்கள் இதன் எதிர்கால பாதிப்பை உணர்ந்து, அந்தந்த அலுவலகத்தில் மோசமாய் வேலை செய்பவர்களை கண்டிக்க வேண்டும்.

அரசை இ.எஸ்.ஐ-யை சரியான முறையில் இயக்கு என நிர்ப்பந்திக்க வேண்டும்.

‘பந்தய ஒப்பந்தங்களின்’ தன்மை



தோழி ஒருவர் இரண்டு நாள்களுக்கு முன்பு தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அமெரிக்காவில் ஒரு நிறுவனம். அதில் கணிப்பொறி வல்லுநர்கள் 10 பேர் வேலை செய்தார்கள். பொருளாதார நெருக்கடிக்கு பின்பு, 7 வல்லுநர்களை தூக்கி கடாசிவிட்டார்கள். குறைந்த பட்சம் 3 நபர்கள் இருந்தால் தான் நிறுவனம் இயங்கமுடியும் என்பதால், விட்டு வைத்திருக்கிறார்கள்.

அந்த 3 பேரில் ஒருவர் காலையில் வேலைக்கு கிளம்பும் பொழுது, தன் துணைவியாரிடம் “இப்ப வேலை இருக்கு என்ற நம்பிக்கையில் கிளம்புறேன். மாலை வரும்பொழுது வேலையில்லாமல் கூட போகலாம்” என சொல்லி பதட்டத்துடன் தான் தினம் விடை பெற்று போகிறாராம்.

இப்படிப்பட்ட கதைகள் இப்பொழுது அமெரிக்காவில் எங்கும் பரவிக்கிடக்கின்றன. ஏற்கனவே தற்கொலைகள் நிறைய நிகழ்கிற பூமி. இப்பொழுது, இன்னும் பல நிகழும்.

*****

பந்தய ஒப்பந்தங்கள் என்றால் என்ன? பந்தய ஒப்பந்தங்கள் எதில் போடப்படுகின்றன என ஏற்கனவே பார்த்தோம். சரக்கை பாதிக்கிறதா? இல்லையா எனப் பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியாக... பந்தய ஒப்பந்தங்களின் தன்மை என பார்க்கலாம்.

1900 காலத்தில் நிதி மூலதனம் தேசிய அரசுகளின் அடிப்படையில் அமைந்து, அவற்றால் வளர்க்கப்பட்ட ஒன்று.

வங்கி மூலதனம், தொழில் மூலதனம் இணைந்து உருவாக்கிய ஒருங்கிணைப்பு.

இத்துடன், நவீன காலத்தில் பல புதிய மூலதன நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அவைகள் காப்பீட்டு கம்பெனிகளின் நிதி, ஓய்வூதிய நிதிகள், நல நிதியங்கள் (Mutual Funds), வேலியிடப்பட்ட நிதியங்கள்.

இன்று, நிதி மூலதனமானது, எந்த நாட்டுக்கானது என்ற முத்திரையின்றி, ஒரு சில ஏகாதிபத்திய அரசுகளின் ஆதரவோடு மட்டுமே இயங்குகிறது என்பதோடல்லாமல் ஒரு சர்வதேச தன்மையுடன் விளங்குகிறது.

அது உலகின் எல்லாப் பகுதிகளிலும் நிதியை தங்குதடையின்றி உறிஞ்சுகிறது. நொடிக்குள் அது உலகின் எந்தப் பகுதிக்கும் செல்கிறது. பிரமாண்டமான அளவுகளில் நடக்கிறது. குறுக்கும் நெடுக்கும் பரந்து விரிந்து அதிகமான ஓட்டமும் சுழற்சி கொண்டதாக, பரபரப்பும் அலைபாயும் தன்மையும் கொண்டதாக, வெள்ளப்பெருக்கு போல எதிர்வருவனற்றையெல்லாம் அடித்துக் கொண்டு போகும் ஆற்றல் கொண்டதாக, திடீர் திடீரென ஏறி இறங்கும் இயல்பு கொண்டதாக (Volatile) இருக்கிறது.

சில தேசிய அரசுகளின் வருமானத்தை விட் அதிக தொகை கொண்டதாகவும், செயற்கைக் கோள் – கணிப்பொறி போன்ற நவீன சாதனங்களால் உலகளாவிய இணைப்பும் கொண்டதாக இருக்கிறது.

December 3, 2008

என்ரான் திவால் –அமெரிக்க திவாலின் ஒரு வெள்ளோட்டம்



ஒரு மாபெரும் குண்டு வெடிப்பை நிகழ்த்த குண்டுகள் தயாரிக்கும் பொழுது, தவறுதலாய் ஒரு குண்டு வெடிக்கும் அல்லவா!

அதுபோல, மாபெரும் பொருளாதார நெருக்கடியின் ஒரு வெள்ளோட்டமாக இருந்தது என்ரான் திவால்.

****

அமெரிக்காவில், இன்றைக்கு பல முதலீட்டு நிறுவனங்கள், மிகப்பெரிய வங்கிகள் உட்பட பல நிறுவனங்கள் திவலாகி விட்டன. மேலும், பல நிறுவனங்கள் மஞ்சள் கடிதாசி கொடுக்க தீவிரமாய் பரிசீலித்து வருகின்றன.

அமெரிக்க “தேசிய பொருளாதார குழு” நிலைமையை ஆய்வு செய்து, இரண்டாம் உலகப்போருக்கு பின், 70, 80 களில் இருமுறை (சமாளிக்க கூடிய) நெருக்கடியை அமெரிக்கா சந்தித்தது. இப்பொழுது நிகழ்ந்திருக்கிற சரிவு மிகப்பெரிய சரிவு. இப்பொழுது தொடர்கிற மந்தநிலை அடுத்த ஆண்டு (2009 ) மத்தியில் வரை நீடிக்கும் என அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது.

இந்த அறிக்கையை வெள்ளை மாளிகையும் ஒப்புக்கொண்டு இருக்கிறது. (2, டிசம். 2008)

இந்த அறிக்கை பங்குதாரர்களுக்கு ஒரு ஆறுதல் அளிப்பதற்காக தான். அடித்த கொள்ளை கொஞ்சமா! இன்னும் பல மாதங்கள் நீடிக்கும்.

****

இவ்வளவு பெரிய நெருக்கடிக்கு என்ன காரணமாக இருக்க முடியும்? என தேடுகிற பொழுது, 2001-2002ல் நிகழ்ந்த உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ‘என்ரான் திவால்’ பின்னணி இன்றைய நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது.

என்ரான் நிறுவனத்தின் நிர்வாகிகளும், கணக்கீட்டு நிறுவனம் மற்றும் முதலீட்டு வங்கிகளும் கூட்டுச் சேர்ந்து பல சித்து வேலைகள் செய்து நிறைய கொள்ளையடித்து தான் திவாலாக்கியிருக்கிறார்கள்.

தில்லுமுல்லு வேலைகள்

என்ரானின் நிர்வாகிகள் தங்களது துணைக் கம்பெனிகளின் வரவு செலவு அறிக்கைகளை, அடுத்தடுத்து என்ரானின் வரவு-செலவு அறிக்கையிலிருந்து நீக்கினார்கள். இதன் மூலமாக தமது பிரமாண்டமான கடன் பொறுப்புகளை மூடி மறைத்து, தமது வருவாய்களை ஊதிப் பெருக்கி காட்டினார்கள்.


அமெரிக்காவில் முதன்மையான கணக்கீட்டு (ஆடிட்டர்) நிறுவனமான ஆர்தர் ஆண்டர்சன் என்ற நிறுவனம் இந்த மோசடிகளை கணக்கு புத்தகங்களில் இருந்து மறைத்து சான்றிதழ் வழங்கியது. இதற்காக இவர்கள் பெற்று கொண்ட வருமானம் – வாரத்திற்கு பத்து இலட்சம் டாலர்கள்.



லாபத்தில் இயங்குவதாய் காண்பித்ததால், இதை நம்பி பலர் வாங்கியதால், பங்குகளின் மதிப்பு உயந்து கொண்டே சென்றது. இந்த சமயத்தில் இதன் முக்கிய நிர்வாகிகள் 10 பேர் தாங்கள் வைத்திருந்த பங்குகளை விற்று சம்பாதித்த பணம் 100 கோடி டாலர்கள். என்ரானின் தலைமை நிர்வாகி சம்பாதித்தது. 22.13 கோடி டாலர்கள். அதன் தலைவர் ஜெப்ரே ஸ்கில்லிங் சம்பாதித்தது 7.07 கோடி டாலர்கள்.



அமெரிக்காவின் நம்பர் ஒன் என அழைக்கப்படும் சிட்டி குரூப், நம்பர் 2 யாய் திகழ்ந்த ஜே.பி. மார்கன் சேஸ் மற்றும் மெரில் லின்ச் இந்த நிறுவனத்திற்கு கொடுத்த கடன்கள் 800 கோடி டாலர்கள். இந்த மிகப்பெரிய கடனை தனது கணக்கேடுகளில் கடனாக காட்டாமல் கொள்முதலாக காட்டினார்கள்.

இந்த முதலீட்டு வங்கிகள் இப்படி பல கூட்டு சதி வேலைகளை செய்ததற்காக இவர்கள் பெற்ற ‘சன்மானம்’ ரூ. 20 கோடி டாலர்கள்.

இவர்கள் செய்தது மோசடி. இதை விட மோசடி என்னவென்றால், என்ரான் வீழப்போவது மற்றவர்கள் அறிவதற்கு முன்னரே இவர்கள் அறிந்திருந்தால், கையில் வைத்திருந்த என்ரானின் கடன் பத்திரங்களை பெருமளவில் நல்ல விலைக்கு விற்று தள்ளிவிட்டார்கள்.

இவர்களால் இப்படி ஏமாற்றப்பட்ட பல ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் இந்த மூன்று முதலீட்டு வங்கிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்தார்கள். அமெரிக்க நாடாளுமன்றக் குழு மற்றும் நியூயார்க் அட்டர்னி ஜெனரலின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.

இப்படியாக 7000 கோடி டாலர் சொத்து மதிப்பு கொண்டிருந்த என்ரான் என்ற நிறுவனத்தை பூஜ்ய நிலைக்கு கொண்டுவந்து கவிழ்த்துவிட்டார்கள். இதில் பல கோடி கொள்ளையடித்தவர்கள் – என்ரானின் முதன்மை நிர்வாகிகள், கணக்கீட்டு நிறுவனம், முதலீட்டு நிறுவனங்கள்.

பணத்தை இழந்து போண்டியானவர்கள் - தனது சேமிப்பு பணம், ஓய்வூதிய பணத்தையெல்லாம் பங்குகளாய் வைத்திருந்த தொழிலாளர்கள் (என்ரான் இல்லாமல் போனதால், வேலையும் இல்லை) மற்றும் இதன் பங்குகளை நம்பி வாங்கி ஏமாந்து போன பொதுமக்கள்.

இந்த மோசடிக்கு நீதி கிடைக்க வேண்டும் அல்லவா! கிடைத்தது! எப்படி?

என்ரான் மோசடியில் ஈடுபட்டு பல கோடி சுருட்டிய நிர்வாகிகள் வேறு நிறுவனங்களுக்கு தாவிவிட்டார்கள்.

பல கோடி வருவாய் அடைந்த ஆர்தர் ஆண்டர்சன் கணக்கீட்டு நிறுவனத்தை ஊத்தி மூடிவிட்டார்கள். வேறு பெயரில் அவர்கள் புதிய நிறுவனத்தை தொடங்கி விட்டார்கள்.



பல கோடி லாபம் பார்த்த முதலீட்டு வங்கிகள் தான் இன்றைக்கு மஞ்சள் கடிதாசி கொடுத்து இருக்கின்றன. இப்படிபட்ட “நல்ல” நிறுவனங்களை கைதூக்கி விடுவதற்காக தான், மக்களின் வரிப்பணத்திலிருந்து 70000 கோடி டாலர் கொடுக்க ‘மக்கள் பிரதிகள்” ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அமுல்படுத்தியும் வருகிறார்கள்.

(முதலாளித்துவ அரசு என்பது முதலாளி வர்க்கத்துக்குத் தேவையான காரியங்களை முடித்துக்கொடுக்கும் காரியக் கமிட்டியே அன்றி வேறென்ன? என்று கேட்டார் மார்க்ஸ்.
மார்க்ஸின் கூற்றை நீருபித்துவிட்டார்கள்)

உண்மையில் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் பெரும்பான்மை மக்களுக்கு.... பட்டை நாமம்.

இது அநீதி என்கிறீர்களா?

இது தான் முதலாளித்துவ நீதி.


ஆதாரம் :

ராபர்ட் பிரென்னர் – “அகெய்ன்ஸ்ட் த கரண்ட்” என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் எழுதிய “ஊதிப் பெருக்கப்பட்ட என்ரான்: ஊழல்களும் பொருளாதாரமும்” கட்டுரையிலிருந்து.

நன்றி :

“இந்திய பொருளாதாரத்தின் கூறுகள்” என்ற பத்திரிக்கை வெளியிடும் “அரசியல் பொருளாதாரத்துக்கான ஆய்வுக்குழு, மும்பை.

தமிழாக்கம் – புதிய ஜனநாயகம்.

December 2, 2008

பெட்ரோலில் முடிந்த மட்டில் கொள்ளையடி!

கச்சா பேரல் விலையை தீர்மானிப்பதில் வாஷிங்டன் மற்றும் இங்கிலாந்தில் உள்ள இரண்டு சந்தைகள் தான் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த சந்தையை நிதிமூலதன கும்பல்கள் தான் ஆட்டி படைக்கின்றன. கச்சா பேரல் விலையில் ஊக வணிகம் விளையாடுகிறது என்பதை சமீபத்தில் சிதம்பரம் ஒப்புக்கொண்டார்.

உலக சந்தையில் கச்சா பேரல் விலையில் ஏற்றம் மற்றும் இறக்கம் பாதிக்காமல் இருக்க... அரசு பெட்ரோல் விலையை முன்பு நிர்ணயம் செய்தது. இடைக்காலத்தில் அதில் சில திருத்தங்கள் கொண்டு வந்து, உலக சந்தையில் என்ன விலை விற்கிறதோ அதற்கேற்றார் போல விலை நிர்ணயம் செய்யும் நிலை வந்தது. 160 டாலருக்கும் மேல் விற்ற கச்சா பேரல் விலை இன்றைக்கு 50 டாலருக்கும் கீழே விற்கிறது. நடப்புக் கொள்கைப் படி கூட இந்திய அரசு பெட்ரோல் விலையை குறைக்க மறுக்கிறது.

ஏறியிருக்கும் பொழுது, நிதி மூலதன கும்பல்கள் கொள்ளையடித்தன. இறங்கி நிற்கும் பொழுது, இந்திய அரசு, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன.

****

தொடரும் கட்டுரை "லைட் லிங்க்" என்பவர் எழுதியுள்ளார்.

முதலாளிகளுக்கு ஒரு சிரமம் என்றால், அரசு பதறுகிறது. விலையை குறைக்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு சிரமம் என்றால், அரசு கண்டும் காணாமல் இருக்கிறது.

****

முதலாளிகளுக்கு உதவும் பொருட்டு விமான எரிபொருள் விலையை சரிபாதிக்கும் கீழாக குறைத்துள்ள மன்மோகன் சிங் அரசு, சாதாரண ஏழை, எளிய மக்களின் அன்றாடத் தேவைகளுள் ஒன்றான பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க மறுத்துவருகிறார்.இவருக்கும், சிதம்பரத்திற்க்கும் இந்திய ஏழைகள் கண்ணுக்கு தெரிவதே இல்லை. இவர்கள் போட்டுள்ள கண்ணாடிகளின் சிறப்பம்சம்.

சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ச்சியாக குறைந்து வரும் நிலையிலும் கூட உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைக்க மன்மோகன் சிங் அரசு மறுத்து வருகிறது. கடந்த வாரத்தில் சர்வதேச எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 50 டாலருக்கும் கீழாக வீழ்ந்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் சர்வதேச எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 123 டாலரை தொட்ட போது, உள்நாட்டில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3-ம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் தற்போதைய நிலவரத்தின்படி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை பேரல் ஒன்றுக்கு 67 டாலர் அளவிற்கே இருக்கிறது என்ற உண்மையை அரசே ஒப்புக் கொண்ட போதிலும் கூட, சில்லரை விற்பனையில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க மறுப்பது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல.

கடந்த நான்கு மாத காலத்தில் மட்டும் 5 முறை, விமான போக்குவரத்து நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் விமான எரிபொருள் (ஏவியேசன் டர்பைன் ஆயில்) விலையை மன்மோகன் சிங் அரசு குறைத்துள்ளது. ஒரு கிலோ லிட்டர் (1000 லிட்டர்) ரூ.71,000 ஆக இருந்த விமான எரிபொருள் விலை தற்போது கிலோ லிட்டர் ஒன்றுக்கு ரூ.43,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், விமான எரி பொருளுக்கு இறக்குமதி வரி 5 சத வீதத்திலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இப்படி தனியார் விமான கம்பெனிகளுக்கு மிகப்பெரும் அளவில் சலுகை அளித்திருப்பதன் மூலம் பொதுத்துறை எண்ணெய் கம்பெனிகள் சந்திக்கும் மிகப் பெரும் இழப்பு குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கோ, நிதியமைச்சரோ யோசிக்க தயாராக இல்லை.

ஆனால் அதே நேரத்தில் மன்மோகன் சிங் அரசு, பெட்ரோல், டீசல் விலை உயர்வாலும், அதையொட்டி அனைத்து விதமான பொருட்களின் விலை உயர்வாலும் மிகக் கடுமையான துயரத்திற்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு நிவாரணம் தரும் பொருட்டு, பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கு மறுப்பதன் மூலம் ஒரு ஈன அணுகுமுறையை பின்பற்றுகிறது. பெட்ரோலிய பொருட்களின் விலைகளை உடனடியாக குறைப்பதே நாட்டின் பொருளாதாரத்தில் நல்ல பலனை ஏற்படுத்தும்; அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளையும் குறைக்க உதவும்.

உலகெங்கும் பெட்ரோல் விலை குறைப்பு

உலக நாடுகள் பலவும் பெட்ரோலியப் பொருட்களின் சில்லரை விலையைக் குறைத்துள்ள அதே நேரத்தில் இந்தியாவில் மட்டும் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட் (யுஏஇ), பிலிப்பைன்ஸ், மலேசியா, சீனா, கென்யா போன்றவையும் பெட்ரோல் விலையைக் குறைத்த நாடுகளின் பட்டியலில் அடங்கும். பெட்ரோல், டீசல் விலையை மலேசியா கடந்த செவ்வாயன்று மேலும் குறைத்தது. கடந்த ஆகஸ்ட்டுக்குப் பின் மலேசியா பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைப்பது இது ஆறாவது முறையாகும்.

பாகிஸ்தானில் பெட்ரோல் 13 சதவீதமும், டீசல் 11.6 சத வீதமும் குறைக்கப்பட்டது.
வங்கதேசம் முறையே 10.3 சத வீதமும் 12.7 சதவீதமும் குறைத்தது.

இலங்கையில் நவம்பர் முதல்வாரத்தில் டீசல் விலை லிட்டருக்கு 30 ரூபாயும் பெட்ரோல் விலை 15 ரூபாயும் குறைக்கப்பட்டது.

பிலிப்பைன்ஸில் கடந்த அக்டோபருக்குப் பின் ஐந்து முறை எரிபொருள் விலை குறைக்கப்பட்டது.
கென்யாவில் பெட்ரோல் 5 சதவீதம் டீசல் 4 சதவீதமும் குறைக்கப்பட்டது.

அயர்லாந்தில் பெட்ரோல் விலை 3 சதவீதம் குறைக்கப் பட்டது.

கென்யாவிலும் அயர்லாந்திலும் கூட சில்லரை விற்பனை அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. பெட்ரோல் - டீசல் விற்பனை செய்யும் தனியார் கம்பெனிகள் நிர்ப்பந்தம் எதுவும் இல்லாமலேயே எண்ணெய் உற்பத்தி நாடுகளும், பெட்ரோல் சில்லரை விற்பனை விலையைக் குறைக்கத் தொடங்கியுள்ளன.

துபாயில் டீசல் விலை காலனுக்கு 60 திர்ஹம் (துபாய் நாணயம்) குறைக்கப்பட்டது. கடந்த ஜூலைக்குப் பின் 10 முறை எரிபொருள் விலை இங்கு குறைக்கப்பட்டது!

கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் அக்டோபருக்குப் பின் பெட்ரோலியப் பொருட்களின் விலை 16.7 சதவீதம் குறைக்கப்பட்டது!

சீனாவிலும் பெட்ரோலியப் பொருட்களின் சில்லரை விற்பனை விலை குறையத் தொடங்கியது.
உலகிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல் விலை அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்த சாதனையை உலகிலுள்ள எந்த நாடும் நிகழ்த்தியதில்லை.

நன்றி : http://lightlink.wordpress.com