> குருத்து: August 2007

August 25, 2007

இவர் தான் பத்திரிக்கையாளர்!



தனது டெஸ்க்கை விட்டு நகர மறுக்கிற, அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் தரும் செய்திகளை, கொஞ்சம்கூட உறுதிப்படுத்தாமல், அப்படியே வாந்தி எடுக்கிற பத்திரிக்கையாளர்கள் இங்கு அதிகம்.

மக்களூடைய ஜீவாதாரமான பிரச்சனைகளை, அதன் காரண, காரியங்களை அலச, ஆராய விரும்பாத, ஆனால் பிரேமனந்தா, கன்னடபிரசாத், பத்மா - போன்ற 'செக்ஸ்' சம்பந்தமான விசயங்களை அலசி ஆராய்ந்து, தன் கற்பனை எல்லாம் கலந்து, சுவையாக, கிளுகிளுப்பாக தருகிற பத்திரிக்கையாளர்களும் இங்கு அதிகம்.

இந்தியாவில், நாலாவது தூண் பல பத்திரிக்கையாளர்களால் நிறைய அசிங்கப்பட்டு போயிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், 'சாய்நாத்' என்றொரு பத்திரிக்கையாளர் 'தி இந்து' (THE HINDU) நாளிதழில் 'கிராமப்புற செய்தி' (Rural affiars) சேகரிப்பாளராக, எடிட்டராக இருக்கிறார்.

புள்ளிவிவரங்களை சொல்லியே, இந்தியா முன்னேறுகிறது என்று பல அமைச்சர்கள் நம்மை குழப்பி, நம்ப வைக்க முயல்கிறார்கள்.'இந்தியா ஒளிர்கிறது', வருங்காலத்தில் வல்லரசாகப் போகிறது என்பவர்களின் முகத்தில் காறித்துப்புகிறது இவரது கட்டுரைகள் வெளிப்படுத்தும் உண்மைகள்.

பத்திரிக்கையாளர் சாய்நாத் அவர்கள் இந்தியாவின் பின்தங்கிய பல மாவட்டங்களுக்கு நேரிடையாக சென்று, விவசாயிகளின் வாழ்க்கையை, அவர்களின் பரிதாபமான தற்கொலைகளை, அதற்கான காரணங்களை ஆய்ந்து, சேகரித்து உலகுக்கு வெளிப்படுத்துகிறார்.

சமீபத்தில், அவருடைய மகத்தான சேவையை பாராட்டி, அவருக்கு 'மகசேசே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே பி.டி. கோயங்கா விருது, பிரேம் பாட்டியா இதழியல் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

அவருக்கு உழைக்கும் மக்களின் சார்பாக, நாமும் நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.

பின்குறிப்பு : சமூகத்தை, அதன் உண்மை நிலையை அறிய சாய்நாத் அவர்களின் கட்டுரையைத் தேடி படியுங்கள்.

August 10, 2007

கனவுகள் - கவிதை!

கண் திறந்தால்
அடுத்த இரவுக்கு
காத்திருத்தல்

கண்மூடினால்
தொலைந்து போன
காட்சிகளுக்குத் தேடல்! - யாரோ!

******

போகிற வழியெல்லாம்
தங்க வெள்ளி காசுகள் சேகரித்து
தலையணைக்கடியில் பாதுகாத்து
காலையில் பார்த்தால்
காணாமல் போகும்

ஆவி விரட்டும் பொழுது மட்டும்
ஓட முடியாமல் தடுக்கி விழுந்து
'அது' நெருங்கி மிக நெருங்கி
வேர்த்து விறுவிறுத்து கண்விழிக்கையில்
நடுநிசி வேளையில்
நாய் ஊளையிட்டு கொண்டிருக்கும்

எட்டுபேருடன்
பறந்து பறந்து சண்டையிட்டு
கதாநாயகனாய் ஜெயித்து
காலையில் எழுகையில்
கழுத்து வலிக்கும்

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து
உள்ளம் களித்து பாக்கள் பாடி
உறக்கம் கலைகையில்
ஓட்டின் துவாரத்தால்
சூரிய வெளிச்சம் கண்ணைக்கூசும்
உள்ளம் பெருமூச்சுவிடும்

கனவுகளை
பொழுதுகளாய் பிரிக்கலாம்
பகற்கனவு
இரவுகனவு

பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு
கனவுகளே
வித்தாய் விழுந்திருக்கிறது

எனக்கு கனவே வருவதில்லை
பெருமையாய் சொல்கிறார்கள்
படுத்ததும் சவமாவதில்
என்ன இருக்கிறது?

நல்ல கனவுகளுக்கு
ஆக்கம் கொடுப்பதே
விழித்திருக்கும் வேளையில்
என் வேலையாகிறது

ஆகையால்
கனவுகளுக்காய்
தவம் இருங்கள்

August 8, 2007

அம்மா - கவிதை

சூரியன் விழிக்கும் முன்
தன் துயில் கலைத்து
வாசல் தெளித்து, கோலமிட்டு
பாத்திரங்கள் துலக்கி
அவசர அவசரமாய் சமைத்து
அறியாமையால் மாமியாரிடம்
'நல்ல மருமகளாய்'
நடந்துகொண்டாய்

காபியுடன்
அப்பாவை எழவைத்து
துவைத்து, தேய்த்து
எல்லா மனைவியரையும் போல்
'நல்ல பணிப்பெண்ணாய்'
மாறிப்போனாய்

அக்காவை உன் வாரிசாய்
என்னை அப்பாவின் வாரிசாய்
அறிந்தும், அறியாமையால்
உருப்பெற செய்தாய்

நல்ல ரத்தம் உள்ளவரை
சளைக்காது உழைத்தாய்
இத்தனை காலம்
சுகமாய், சுமையாய்
இருந்தவைகளெல்லாம்
பெரும்சுமைகளாய்
மாறிப்போயின.

இன்று
இயலாமையின் கோபத்தால்
தளர்ந்து போன மாமியாரை
வார்த்தைச் சவுக்கால் விளாசுகிறாய்
அப்பாவின் மீதும்
என் மீதும்
வலிக்காது பாணங்கள் தொடுக்கிறாய்

இறுதியில்
உன் ராச்சியத்திற்கு வாரிசாய்
'நல்ல மருமகளாய்' எதிர்பார்க்கிறாய்

முதலில்
எனக்கான வேலைகளை
நான் பழகிகொள்கிறேன்
பிறகு யோசிக்கலாம்
புதிய வரவான
இன்னொரு 'மனுசியை'