> குருத்து: 2010

December 28, 2010

தேசம் கடக்கும் தரகு முதலாளிகளும், தற்கொலையால் சாகும் விவசாயிகளும்!


இன்று இந்து நாளிதழில்..முதல் பக்கத்தில் ஒரு அதிர்ச்சியான செய்தி வந்திருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 17368 விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில், கிட்டதட்ட 2 லட்சத்திற்கும் மேலான விவசாயிகள் மாண்டு போயிருக்கிறார்கள். தொடர்ச்சியாக கேள்விபடுவதால்..இதில் என்ன அதிர்ச்சி என்கிறீர்களா? மரத்துப் போய்விட்டோம் நாம்.

இந்நாட்டில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கைகள் அமுல்படுத்த துவங்கி 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிவிட்டன. கடந்து வந்த பாதையெங்கும் விவசாயிகளின் பிணங்கள்.

மரபணு மாற்ற விதைகள், உரங்களின் கட்டுபடியாகாத விலை, அரசு கடன், அதன் மீதான வட்டி, கந்து வட்டி கும்பலிடம் கடன், இப்படி பல மலைகளை கடந்து, விளைச்சல் விளைந்து, துன்பம் தொலையும் நினைக்கும் பொழுது, பருவநிலை மாற்றம், விளைச்சல் பல்லிளிப்பது, விளைச்சல் வந்தாலும், உரியவிலை கிடைக்காதது என்பதில் விவசாயிகள் துவண்டு போகிறார்கள்.

இதே இந்தியாவில், இன்னொரு புறம், தரகு முதலாளிகளின் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடுகிறது. காரணம் - அரசு இவர்களை செல்லப்பிள்ளையாக நடத்துகிறது.

கடந்த பல ஆண்டுகளாக பெருமுதலாளிகள் வங்கிகளில் வாங்கிய கடன் 'வராக்கடன்' என தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் ஜப்தி, கைது நடவடிக்கைகளை தரகு முதலாளிகளுக்கு, பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிராக அரசு எடுக்க மறுக்கிறது.

39000 கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி, 20000 கோடி ரூபாய் சுங்கவரி, கலால் வரி, சேவை வரி என நிலுவையாக உள்ளதை அரசு கறாராக வசூலிக்க மறுக்கிறது.

இது தவிர, (2007 - 08) கார்ப்பரேட் வரி, கலால் வரி, சுங்க வரி என பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய வரியில் 2.3 லட்சம் கோடி அரசால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. மொத்த வரியில் இதன் பங்கு 50%. மேலும், 42100 கோடி வருமான வரியை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறடு.

இப்படி அரசு செய்கிற தள்ளுபடிகள், மானியங்கள், சலுகைகள், தன் தொழிலில் வருகிற வருமானம், வெளிநாட்டு கடன் என எல்லாம் சேர்ந்து, கடந்த சில ஆண்டுகளில், தரகு முதலாளிகள் வெளிநாட்டு நிறுவனங்களை நாளும் வாங்கி குவித்து, தேசங்கடந்த தரகு முதலாளிகளாக பரிணாமம் பெற்றிருக்கிறார்கள்.

டாட்டா குழுமம் கோரஸ் உருக்காலையை (13000 கோடிக்கு) வாங்கியிருக்கிறது. இது தவிர, டாட்டா குழுமத்திற்கு இங்கிலாந்தில் மட்டும் 18 நிறுவனங்களை வாங்கியிருக்கிறார்கள். பிர்லா குழுமத்திற்கு ஆஸ்திரேலியாவிலும், ஆப்பிரிக்காவிலும் இரும்பு தாது சுரங்கங்கள் இருக்கின்றன.

தரகு முதலாளிகள் பற்றிய இந்த செய்தி எல்லாம், பழைய செய்திகள். புதிய செய்திகள். 2ஜி அலைக்கற்றை விவகாரம் புதியது. ராசா வருமான இழப்பு ஏற்படுத்தி விட்டார் என ஊடகங்கள் மீண்டும் மீண்டும் பேசுகின்றன. இதில் பல கோடிகளை சுருட்டி ஏப்பம் விட்டது தரகு முதலாளிகள் தான். டாடா, அம்பானி எல்லாம் களவாணிகள் என ஊடகங்கள் பேச மறுக்கின்றன. ஊடககாரர்களே தரகர்களாக தானே செயல்படுகிறார்கள்.

தனியார் மயம், தாராளமயம், உலகமயம் கொள்கைகள் தரகு முதலாளிகளை 15 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடிகளில் கொழிக்க வைத்திருக்கிறது. மறுபுறம் விவசாயிகள் தற்கொலையில் செத்துமடிகின்றனர். இந்த மக்கள் விரோத கொள்கைகளை நாம் முறியடிக்காமல், இவர்களை வீழ்த்த முடியாது. நம் விவசாயிகளையும் காப்பாற்றமுடியாது.

தொடர்புடைய சுட்டிகள் :
ஸ்பெக்ட்ரம் ஊழல் - மறுகாலனியாக்கத்தின் பம்பர் பரிசு! - வினவு
17,368 farm suicides in 2009 - சாய்நாத் - இந்து நாளிதழ் - 28/12/2010

2 ஆண்டில் 143 அமெரிக்க நிறுவனங்களை இந்திய நிறுவனங்கள் வாங்கி சாதனை

Tata steel gets corus boost, net at Rs. 12322 Cr. - Financial Express

One Farmer's sucide Every 30 minutes - பத்திரிக்கையாளர் சாய்நாத்

December 27, 2010

வாக்களித்த பதிவர்களுக்கு நன்றி!



தமிழ்மணம் நடத்துகிற போட்டியில், முதல் சுற்றில் குருத்து தளம் கலந்து கொண்ட கீழ்க்கண்ட மூன்று பதிவுகளும் தேர்வாகியிருக்கின்றன.

பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் பிரிவில்...

வாங்கப்படாத பிறந்தநாள் கேக்!

அரசியல், சமூக விமர்சனங்கள் பிரிவில்...

ஏழாம் நாளிலும் மார்ச்சுவரியில் காத்திருந்த ஜிதேந்தர்!

நூல் விமர்சனம், அறிமுகம் பிரிவில்...

நான் வித்யா - புத்தக அறிமுகம்!

குருத்து தளம் கலந்துகொண்ட மூன்று பதிவுகளிலும், ஒடுக்கப்பட்டவர்களாகிய தொழிலாளர்கள் மற்றும் திருநங்கை லிவிங் ஸ்மைல் வலி மிகுந்த வாழ்க்கை பதிவாகியிருக்கிறது. பல்வேறு தலைப்புகளில், பல்வேறு கருத்துகளில் எழுதிய பதிவுகள் போட்டியிடுகின்றன. பின்னாடி தள்ளப்பட்டுவிடுமோ என்ற எண்ணம் இருந்தது. ஆனால், முதல் சுற்றில் பதிவர்கள் வாக்களித்து அங்கீகாரம் தந்து இருக்கிறார்கள்.

வாக்களித்த பதிவர்களுக்கு என் அன்பு நன்றிகள். தேர்வாகியுள்ள மற்ற பதிவர்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,

குருத்து.

December 21, 2010

ஆத்தங்கரையோரம்! - நாவல் அறிமுகம்!


முன்குறிப்பு : சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாவலை எங்கள் பகுதியில் உள்ள நூலகத்தில் கிடைத்து படித்தேன். அரசு நூலகங்களில் அரைமணி நேரம் 300 புத்தகங்கள் தேடினால்...ஒரு நல்ல நாவலையோ, சிறுகதை தொகுப்பையோ கண்டுபிடிக்கலாம். இறையன்புவின் எழுத்து எழுதுகிற முறையில் நன்றாக ஈர்க்க கூடியது. இந்த நாவல் மக்கள் போராட்டத்தைப் பற்றிய நாவல் என்பதால் இன்னும் கூடுதல் ஆர்வம். எழுதியது ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தானே என புறந்தள்ளிவிட முடியாத படைப்பு. மகா நன்றாக அறிமுகப்படுத்தி இருக்கிறார். உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

****
"அருமையான நாவல் படியுங்கள்" என நண்பர் தந்தார். படிக்க துவங்கி, இரண்டு நாள்களில் முடித்துவிட்டேன். நான் வெகுவிரைவாக படித்த நாவல்களில் இதுவும் ஒன்று.

ஒரு ஆறு. அதன் குறுக்கே அணைக்கட்ட அரசு தீர்மானிக்கிறது. எழும் அணையால் பல கிராமங்கள் நீரில் காணாமல் போகும் நிலை. அரசு அங்கு வாழும் பழங்குடி கிராம மக்களை அப்புறப்படுத்த முயல்கிறது. பாதிக்கப்படும் மக்கள் அரசை எதிர்த்துப் போராடுகிறார்கள் என நகர்கிறது நாவல்.

பழங்குடி மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை, அரசின் பிரதிநிதிகள் மக்களுக்கு மாற்று வாழ்வாதாரம் உருவாக்கி தருகிறோம் என ஏமாற்றி அப்புறப்படுத்துவது, ஏற்கனவே அங்கிருந்து நகர்த்தப்பட்ட மக்கள் நகரங்களில் அகதிகளாய் அலைவது, நகர மறுக்கும் மக்களின் எதிர்ப்பை அரசு எப்படி கடுமையாக ஒடுக்குகிறது என நாவல் பல விசயங்களை அழுத்தமாக, உணர்வுபூர்வமாக பதிவு செய்திருக்கிறது.

என்.ஜி.ஓக்களுடன் இணைந்து மக்கள் போராடுகிறார்கள். ஓர் இடத்தில் ஒரு அரசு அதிகாரி சொல்வார் "இந்த போராட்டம் மட்டும் நக்சல்கள் கையில் போயிருந்தால்...போராட்டத்தின் திசை வேறு மாதிரி போயிருக்கும்". உண்மை தான். போலீசு, இராணுவம் என கொண்டிருக்கும் சர்வ அதிகாரம் கொண்ட மக்கள் விரோத அரசை எதிர்த்து போராடி, ஜெயிக்க வேண்டுமென்றால், சமரசம் செய்து கொள்ளாத, உழைக்கும் மக்களின் நலன் மீது அக்கறை கொண்ட, சமூக மாற்றத்தை நோக்கமாக கொண்டுள்ள ஒரு புரட்சிகர கட்சி இருந்தால் மட்டுமே சாத்தியம். நாவலை படித்து முடிக்கும் பொழுது, அந்த முடிவுக்கு நீங்கள் நிச்சயம் வந்தடைவீர்கள்.

படிக்கும் பொழுது, நர்மதா நதியின் குறுக்கே கட்டப்படும் அணைக்கு எதிராக பல ஆண்டுகளாக மக்கள் நடத்தும் போராட்டம் தான் நினைவுக்கு வந்தது.

சின்ன சின்ன வெளிச்சங்கள், கட்டுரை தொகுப்புகள் என இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய புத்தகங்களை வாசித்திருக்கிறேன். இந்த நாவலை தயங்காமல் அவருடைய 'மாஸ்டர் பீஸ்' என்பேன். நாவல் வெளிவந்து ஆண்டுகள் பலவாகிவிட்டன. நியூ செஞ்சுரி புக ஹவுஸ் வெளியிட்டு இருக்கிறார்கள்.

பின்குறிப்பு : அணையோ, வளர்ச்சியோ வேண்டுமென்றால், சில ஆயிரம் மக்கள் பாதிக்கப்படத்தான் செய்வார்கள் என ஒற்றை வரியில் கடந்து போனீர்கள் என்றால்...சிரமம். நீங்கள் எழுப்புகிற பல கேள்விகளுக்கு நாவல் விடை தரும். நாவலை படித்துவிட்டு வாருங்கள். நாம் விவாதிக்கலாம்.


நன்றி : நந்தவனம்

December 18, 2010

இன்று ஸ்டாலினின் 131வது பிறந்த தினம்!


*****

தோழர் ஸ்டாலின் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடலாம்?

தோழர் ஸ்டாலின் பிறந்தநாளை
எப்படிக் கொண்டாடலாம்?
யோசனையோடு நடந்து போனேன்,

இனிப்பு வாங்கி
இயன்றவரை கொடுக்கலாமா…

எஸ்.எம்.எஸ். அனுப்பி
நண்பர்களிடம் பகிரலாமா…

புத்தாடை உடுத்தி
சேர்ந்துண்டு மகிழலாமா…

ஒரு இசை…
ஒரு கவிதை…
ஒரு நிகழ்ச்சி…

ஏதாவது ஒன்று என்ற எனது நினைவுகளைக் கலைத்தது
கூவக்கரையோரம் பிய்த்தெறியப்பட்ட
குடிசைப் பகுதியிலிருந்து ஒரு குரல்;

“டேய் உழைக்காத உங்களுக்கு இவ்ளோன்னா,
எங்களுக்கு எவ்ளோ இருக்கும்.
அடிச்சா புடுங்குறீங்க… இப்படியே போயிடாது
உங்களுக்கு இருக்குடா ஒருநாள் வேட்டு!”

அடக்கும் லத்திக்கம்பை விலக்கித் தெறித்தது
அந்தப் பெண்ணின் குரல்

இப்போது கற்பனை குறுகுறுத்தது.
ஸ்டாலின் பிறந்தநாளை எப்படிக் கொண்டாட வேண்டும் என்பது
அந்தப் பெண்ணின் எதிர்ப்பார்ப்பில்
மண்டையில் உரைத்தது.

தோழர் ஸ்டாலினுக்கு யாரைப் பிடிக்கும்?

தோழர் ஸ்டாலினை எனக்குப் பிடிக்கும்
என்பது சரிதான்,
ஆனால் ஸ்டாலினுக்கு யாரைப் பிடிக்கும்?

படிக்கும் மாணவப் பருவத்தில்
மதம்பிடிக்கும் கருத்துக்களை
நீங்கள் வெறுப்பவரா…

துடிக்கும் இளமையின் காதலை
நீங்கள்
போராடும் தொழிலாளி வர்க்கத்திடம் போய் சேர்ப்பவரா…

கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி
தன்னலம், தன்குடும்பம் என நெருக்கும்
தாய், தந்தை கண்ணீரையும் உடைக்கும்
சமூகபாசம் படைக்கும் நபரா நீங்கள்…

சாதியெனும் பரம்பரை அழுக்கை
முதலில்
தன்முதுகில் சுரண்டி எறிய
சம்மதிப்பவரா நீங்கள்…

பாட்டாளிவர்க்க விடுதலை லட்சியத்திற்காக
கூடவே வந்த பலர் பாதிவழி போனாலும்…
“ஊர்வம்பு நமக்கெதுக்கு, நம் வழியைப் பார்ப்போம்” என
சொல்லிப்பார்த்து உறவுகள் தள்ளிப்போனாலும்…
எதிர்ப்பின் ஏளனம், துரோகத்தின் கவர்ச்சி
உரிய வர்க்கமே இன்னும் உணராமல்… தனியாய் ஆனாலும்
உலகத்தின் மரியாதையே
தன் கையிலெடுப்பதாய் நினைத்து…
உழைக்கும் மக்களின் உயரிய வாழ்வுக்காய்
கம்யூனிச இதயமாய் துடித்து…
ஓயாமல் போராடும் மனிதரா நீங்கள்…

உங்களைத்தான்
அட! உங்களைத்தான்
தோழர் ஸ்டாலினுக்குப் பிடிக்கும்!

-துரை.சண்முகம்

நன்றி : வினவு

பின்குறிப்பு : முழுக்கவிதையையும் படிக்க இந்த இணைப்பை பாருங்கள்.

December 13, 2010

தீண்டாத வசந்தம் - புத்தக அறிமுகம்!


எப்பொழுதும் படிக்கின்ற ஆள் இல்லை நான். ஆனால் எப்பொழுதாவது படிப்பேன். அப்படி ஒரு நாள் தோழர் இராமநுஜம் கொடுத்த ஒரு நாவல் படித்தேன். பெயர் - தீண்டாத வசந்தம். தெலுங்கில் ஜி.கே. கல்யாணராவ். அதை அழகாக தமிழில் தந்துள்ளார் எ.ஜி. எத்திராஜீலு.

இந்த நாவல் படிக்க ஆரம்பித்தவுடன் வேகமாக படிக்க தூண்டியது. ஆனால் படிக்க, படிக்க ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. இப்படி எல்லாம் கூட சக மனிதர்களை, மனிதர்களை கேவலமாக நடத்த முடியமா என்று.

இந்நூல் முழுக்க தீண்டாமையும், அதன் கொடுமையும் குறித்து எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் ஏறக்குறைய 5 தலைமுறையின் தலித் மக்களின் அவல வாழ்க்கை குறித்து சொல்லப்பட்டுள்ளது.

எனக்கு பள்ளியில் படித்த காலங்களில் வரலாறு அவ்வளவாக வராது (அவ்வளவாக வராதா - அவ்வளவும் வராதா?) ஆனால் இந்த புத்தகம் படித்ததும் எனது முன்னோர்களின் வரலாற்றை படித்த உணர்வு என்னுள் எழுந்தது.

இந்நூலில் வரும் நாயகன், அவ்வூரில் உள்ள தீண்டாமை கொடுமையை மீறி அழகான பாடல்கள் இயற்றியும் தெருக்கூத்துக்கள் நடத்தியும் தன் இனம் சார்ந்த மக்களை மகிழ்விக்கிறான். ஆதிக்க சாதியினர் மட்டும் அருகில் அமர்ந்து பார்த்த மகிழ்ந்த தெருக்கூத்துக் கலையை எட்ட இருந்து கூட பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட தன் இனமக்களுக்காகவே அக்கலையை கற்று பல பாடல்கள் இயற்றி, தெருக்கூத்துக்கள் நடத்துகிறான்.

தீண்டாமையின் கோர முகம், கொடுமை இந்நூல் படிப்பவர்களின் இதயத்தில் வலி ஏற்படுத்துவதை தவிர்க்க இயலாத ஒன்று. இந்நூலில் நாயகனின் மகனும், அவனது மனைவியும் (பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்) பஞ்சத்தால் படாத படுகிறார்கள். பஞ்சம் என்றால், மக்கள் உணவு இல்லாமல், பட்டினியால் கொத்து, கொத்தாக செத்து போகிறார்கள். தன் கண் முன்னே பட்டினியால் இறந்து போன தன் தாத்தா பாட்டி, அப்பா அம்மா ஆகியோரை தன் சொந்த ஊரில் புதைத்து விட்டு, வேறு ஊருக்கு வேலைதேடி செல்கிறான். வழியில் அவன் மனைவி நோய்வாய்பட அவளை எப்படியும் காப்பாற்றிட வேண்டும் என எண்ணி பாக்கிங்காம் கால்வாய் தோண்டும் இடம் நோக்கி நடந்தே செல்கிறான். வழியெல்லாம் மக்கள் பட்டினியால் பஞ்சத்தால், செத்துக்கிடக்கின்றனர். படாத பாடுபட்டு அங்கு சென்று அங்குள்ள மேஸ்திரியிடம் வேலை கேட்கிறான். நீ யார்? என்ன சாதி என்று மேஸ்திரி கேட்கிறான். அவன் தன் பெயரையும், சாதி பெயரையும் கூற உடனே மேஸ்திரி, பறை நாய்களுக்கு இங்கு வேலை இல்லை போடா என்று கூற, இதை கேட்ட மற்ற ஜாதி மக்கள் அவனையும், அவன் மனைவியையும் அடிக்க பாய, அவன் தன் மனைவியையும் உயிரையையும் கையில் பிடித்து கொண்டு ஓட, ஆதிக்க ஜாதி மக்கள் விரட்ட அப்பப்பா, என்ன ஒரு கொடுமை. இதே கொடுமை அடுத்தடுத்த தலைமுறைக்கு தொடர்கிறது.

இதற்கிடையில் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் இக்கொடுமை ஒழியும் என்று நினைத்து சிலர் மதம் மாறி - அதிலும் கொடுமை தொடரத்தான் செய்கிறது.

இதுபோன்ற கொடுமைகள் இந்த நாவல் முழுக்க அனைத்து தலைமுறையிலும் தொடர்கிறது.

எனக்கு சிறுவயதாக இருக்கும் பொழுது என் அப்பாவும், அத்தையும், அவர்களுக்கு சொந்த ஊரில் நடந்த தீண்டாமை குறித்து சொல்வார்கள். எனக்கு புரியாது. ஆனால் அது எவ்வளவு மோசமானது என்று இப்பொழுது யூகிக்க முடிகிறது.

இந்த கொடுமை இன்னும் தொடரவே செய்கிறது. இதற்கு காரணம் என்ன?

ஏன் இப்படி?

அம்பேத்கார் சொன்னது தான் :

"ஆடுகளைத் தான் பலியிடுகிறார்கள்; சிங்கங்களை அல்ல."

- சமுலா

தோழமை 2010 இதழிலிருந்து.....

தீண்டாத வசந்தம் - எழுத்தாளர் ஏ.ஜி. கல்யாணராவ்,

பக்கங்கள் : 301 விலை ரூ. 50/-

வெளியீடு : சவுத் விஷன், செல்பேசி : 94442 90820


தொடர்பான சுட்டிகள் :

தீண்டாத வசந்தம் - மனதை தீண்டிய நாவல்!

December 6, 2010

முகம் - கவிதை!

'சின்ட்ரல்லா' கவிதைக்கு பிறகு, மீண்டும் நண்பர் சுக்ரன் மின்னஞ்சலில் அனுப்பி வைத்த கவிதை. வாசிப்பவர்களின் விமர்சனங்கள் அவருக்கு தேவையாம். பின்னூட்டமிடுங்கள்.
*****

மெளனத்தை பரப்பி விரிந்து கிடக்கும் புல்வெளி
யாவற்றையும் கட்டியணைக்க
எத்தணிக்கும் பின் இரவு
ஆட்களற்றும், ஆடைகளற்றும்
விழுந்து கிடக்கும் நாம்
நிலவொளியை எடுத்து
கொஞ்சம் போர்த்திக்கொள்வோம்.
நம் இறுக்கத்தின் நடுவே
காற்றுக்கு தடையிடுவோம்.
பின்பு நேரிடும் முத்தச் சத்தத்தால்
காதுகளை பொத்திக்கொள்ளட்டும் மேகங்கள்!
நம் அசைவுகளை கண்டு
கண்கள் பொத்தும் விண்மீன்கள்
யாவரும் இவ்வாறாய் கிடக்க,
ஒரு ஓவியம் முற்றுப்பெற்றது.

உன்னை மணக்கத் துடிக்கும் தளர்ச்சியை,
பனித்துளியால் விரட்டிவிடு.
உறங்கி விடாதே! அதற்கான நொடிகள் மீதமில்லை,
தோட்டாக்களைப் போல!
கண்ணீரும், எச்சிலும் தேங்கிக் கிடக்கும்
உன் இதழ்களால்..
என் கரிய நெற்றியில் முத்தமிடு!

பின்னோரு மழை ஓய்ந்த மாலையில்
அது முடியாது போகலாம்.
என் மீதான அன்பை ஒரு பார்வையாக்கி,
சிரித்த என் முகத்தை பிரதியெடு!
நாளை மேற்கு தொடர்ச்சிய மலையடியில்
குண்டடிப்பட்டு
இரத்தமும், மண்ணும் அப்பிய முகத்தால்
அது வாய்க்காது போகலாம்!

எல்லாவற்றையும் எடுத்துச் செல் இங்கிருந்து,
நம் காதலை, கனவுகளை, முத்தங்களை...

மறந்துவிடாதே! பின்பொரு நடுநிசியில்
கண்ணாடிப் பெட்டிக்குள் நான் திரும்ப நேரிட்டால்,
என் முகத்தை அதில் தேடாதே!
இந்திய சோவியத் பள்ளிகளில்
பூக்கும் குட்டிப் புன்னகைகளில் தேடிப்பார்!

- சுக்ரன்

December 1, 2010

அம்பேத்கார் படம் வெளியாகிறது!


பல போராட்டங்களுக்குப் பிறகு, வருகிற 3ந் தேதி ஐநாக்ஸ் திரையரங்கில் ஐந்து நாட்களே காண்பிக்கப்படுகிறது. ஆல்பர்ட் திரையரங்கில் தினமும் பகல் காட்சியாகவும், . அபிராமி, சத்யம், எஸ்கேப்திரையரங்குகளில் ஒவ்வொரு சனி, ஞாயிறுகளிலும் பகல் காட்சியாக காட்டப்படுகிறது.

தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும், மகாராஷ்டிரா அரசும், மத்திய சமூக நீதித்துறையும் இணைந்து அம்பேத்கர் படத்தை தயாரித்து இருக்கிறார்கள்.

1999ல் ஆங்கிலத்தில் வெளிவந்த பிறகு, தொடர்ச்சியாக 2000-ல் இந்தியில் வெளியாகியிருக்கிறது.

2000-ம் ஆண்டுக்கான சிறந்த படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த கலை இயக்கம் பிரிவுகளில் தேசிய விருதுகளை பெற்றிருக்கிறது.

தமிழில் வெளியாக, இத்தனை ஆண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது. ஒரு படம் எத்தனை பேருடைய திருமுகங்களை அம்பலப்படுத்துகிறது.

த.மு.எ.க.ச தமிழகம் முழுவதும் 100 திரையரங்குகளில் வெளியிட முயற்சி எடுக்கப் போகிறதாம். பெரியார் படத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை, அம்பேத்கார் படத்திற்கும் கொடுப்பதற்கு அரசுக்கு நெருக்கடி தரும் போராட்டங்களை கட்டியமைக்காமல் தானே முயல்வதாக சொல்வது, எந்த அளவிற்கு காரிய சாத்தியம் ஆகப்போகிறது என தெரியவில்லை.

விரிவான செய்திகளுக்கு கீழ்கண்ட சுட்டிகளை வாசியுங்கள்:

அம்பேத்கார் என்ன பாவம் செய்தார்? - உண்மைத் தமிழன் - 28/11/2010

வழக்கறிஞர் சத்யசந்திரன், தமுஎச, எடிட்டர் லெனினுக்கு நன்றி - வே. மதிமாறன் - 29/11/2010

இணையவெளி அம்பேத்கருக்காக ஒன்றுகூடி நிற்கட்டும்! - மாதவராஜ்


November 26, 2010

ஊழலில் திளைக்கும் அலாகாபாத் நீதிமன்றம்!


புது தில்லி, நவ. 26: உத்தரப் பிரதேச மாநிலம் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளதாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நிலம் தொடர்பான அலாகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து வக்பு போர்டு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஞான் சுதா மிஸ்ரா ஆகியோர் வெள்ளிக்கிழமை விசாரித்தனர்.அப்போது அவர்கள் அலாகாபாத் நீதிமன்ற செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அலாகாபாத் நீதிமன்றத்துக்கு எதிராக பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனைத் தெரிவிப்பதற்கே வருத்தமாக உள்ளது. நீதிபதிகள் பலர் நியாயமாக தீர்ப்பளிப்பதில்லை என்பதே
முக்கியமான புகாராக உள்ளது.இது தொடர்பாக அலாகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உரிய நடவடிக்கை எடுக்க

வேண்டுமென்று வலியுறுத்துகிறோம். தங்களுக்கு வேண்டப்பட்ட வழக்கறிஞர் ஆஜராகும் போது,அவர்களுக்கு ஆதரவாக நீதிபதிகள் தீர்ப்பளிக்கின்றனர் என்று கூறப்படுகிறது.நீதிபதிகளின் மகன்கள், உறவினர் பலர் அங்கு வழக்கறிஞர்களாக உள்ளனர். இவர்களில் பலர்பணியைத் தொடங்கிய சிறிது காலத்திலேயே, அவர்கள் விலைஉயர்ந்த கார்களில் வலம் வருகிறார்கள், பங்களாக்களை வாங்கியுள்ளனர், பலர் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்றும் தெரிகிறது. நீதிபதிகள் பலர் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பளிப்பதே இதற்குக் காரணம் என்று தெரிகிறது. இதுபோன்ற மோசமான செயல்பாடுகள் நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை குலைப்பதாக அமைகிறது. எனவே அலாகாபாத், லக்னெü உயர் நீதிமன்றங்களைச்
சீரமைப்பது அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி - 27/11/2010 - இதழிலிருந்து....

பின்குறிப்பு : மாவட்ட நீதிமன்றம் தொடங்கி, உச்ச நீதி மன்றம் வரை காசு கொடுத்தால், தமக்கு ஆதரவான "நீதி" கிடைக்கிறது என்ற உண்மையை சில ஆண்டுகளாக வரும் பத்திரிக்கை செய்திகள் நிரூபிக்கின்றன. உச்சநீதி மன்றம் அலகாபாத் நீதி மன்றம் லஞ்சத்தில் கொஞ்சம் ஓவராக போவதை கண்டித்திருக்கிறது. இன்னும் நீதித் துறையை மக்கள் 'நம்புகிறார்கள்'. அந்த நம்பிக்கையை முற்றிலுமாய் இழந்துவிடக்கூடாது என்கிற கவலை இந்த கண்டிப்பில் தெரிகிறது.

November 24, 2010

அயோத்தி தீர்ப்பு - அரங்கக்கூட்டம்!

'சர்ச்சைக்குரிய இடம்' யாருக்கு என்பதை, அலகாபாத் தீர்ப்பு அறிவிக்கும் பொழுது, இந்தியா முழுவதும், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என இந்திய அரசும், பல கட்சித் தலைவர்களும் திரும்ப திரும்ப வலியுறுத்தினார்கள். ஆனால், சொல்லப்பட்டதோ அயோக்கியதனமான தீர்ப்பு. அதற்குப் பிறகு காத்த அமைதியும் அநியாயமானது.

நாடு முழுவதும் உண்மையான ஜனநாயகம் குறித்து கவலைப்படுகிறவர்கள், நீதி மன்ற பாசிசத்தை அம்பலப்படுத்திட வேண்டும். அவர்கள் விரும்பும் "நீதி"க்கு வேண்டும் அமைதியை குலைக்க வேண்டும்.

அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.

நீதிமன்ற இந்து பாசிசத்தை அம்பலமாக்கும் அரங்க கூட்டம்!


நிகழ்ச்சி நிரல்:

தலைமை : திரு.க.சுரேஷ், வழக்குரைஞர்
செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.

கருத்துரை : ”நீதித்துறை பேசும் காவி மொழி”
திரு.எஸ்.பாலன், வழக்குரைஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.

“அயோத்தி முதல் ராமன் பாலம் வரை”
திரு.ஆர்.சகாதேவன், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

“அயோத்தி தீர்ப்புக்கு எதிராக தீ பரவட்டும்”
திரு.எஸ்.ராஜு, வழக்குரைஞர், மாநில ஒருங்கினைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

விவாத அரங்கம் : வழக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்ப்பு!
அனைவரும் வாரீர்!

நாள் : 28.11.2010, ஞாயிறு மாலை 4.30 மணி

இடம் : செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை -17.

ஏற்பாடு :

மனித உரிமை பாதுகாப்பு மையம் சென்னை கிளை.

தொடர்புக்கு : க.சுரேஷ், வழக்குரைஞர் – 9884455494

November 23, 2010

வெடிக்காத பட்டாசு!


நேற்று அலுவலகம் முடிந்து, வண்டியை எடுத்து கிளம்பி கொண்டிருந்தேன். எங்கள் நிறுவனத்தின் அருகே தொழிற்சாலையில் வேலை செய்யும் அறிமுகமான தொழிலாளி "உங்க ஏரியா பக்கம் ஒரு வேலை இருக்கு சார். உங்களோட வருகிறேன்" என்றார். அவரையும் ஏற்றிக்கொண்டு, இருவருமாய் கிளம்பினோம்.

பேசிக்கொண்டே போகும் பொழுது, மிதமான தூறல் விழுந்தது. ஒரு தேநீர் சாப்பிட்டால், நன்றாக இருக்குமே என நினைத்தேன். கடை ஒன்றை தேடி, கடைப்பக்கமாய் வண்டியை ஓரங்கட்டினேன். முதல்நாள் பெளர்ணமி. நிலா வெளிச்சம் பிரகாசமாய் இருந்தது. வானத்தில் பட்டாசுகள் வண்ணமயமாய், அழகாய் வெடித்து சிதறிக்கொண்டிருந்தன். இல்லங்களில் தீபங்கள் எரிந்து கொண்டிருந்தன. நேற்று, பெரிய கார்த்திகை நாள் என நினைவுக்கு வந்தது.

என்னுடன் வானம் பார்த்துக்கொண்டிருந்தவர்...சொல்லத் தொடங்கினார். "தீபாவளி பண்டிகைக்கு வாங்கியதை, கொஞ்சம் மிச்சம் வைத்திருந்து வெடிக்கிறார்களோ?! மிச்சமே இவ்வளவு என்றால்...தீபாவளிக்கு எவ்வளவு வெடித்திருப்பார்கள்? இந்த பட்டாசை பார்க்கும் பொழுதெல்லாம், என் சிறுவயது சம்பவம் நினைவுக்கு வரும் சார்! 8, 9 வயசுல எங்க வீட்ல அவ்வளவு வறுமை சார். அப்பா பொறுப்பில்லாதவர். அம்மா மட்டும் வேலை செஞ்சு, குடும்பத்தை காப்பத்த முடியல! என் அக்கா, அண்ணன் எல்லாம் சின்ன வயசுலேயே வேலைக்கு போய்ட்டாங்க! அப்ப நான் மட்டும் தான் படிச்சுட்டிருந்தேன்."

"தீபாவளி வந்துட்டாலே, அம்மாவுக்கு பதட்டமாயிரும். எப்படியாவது, வட்டிக்கு கடனை வாங்கி, புதுத்துணி எடுத்திருவாங்க. ஒரே ஒரு இனிப்பு பலகாரம் அம்மா செஞ்சிருவாங்க! ஆனால், இந்த பட்டாசு மட்டும் கிடைக்காது சார். விபரம் தெரியாத வயசு வேற. பட்டாசு கேட்டு, பலமணி நேரம் அழுதா கூட, அம்மா வாங்கித்தர மாட்டாங்க! 10 வயசு இருக்கும். இந்த வருடம் எப்படியும் பட்டாசு வெடிக்கனும்னு நினைச்சு, கிடைக்கிற 25 பைசா, 50 பைசாவை எல்லாம் சேர்த்து வைச்சு, எனக்கு பிடிச்ச சங்கு சக்கரம், புஷ்வானம், பாம்பு பட்டாசுன்னு மூணு, நாலு நாளைக்கு ஒண்ணு வாங்கி, ஆசை ஆசையாய் பெட்டிக்குள்ளே சேர்த்து வைச்சேன். தீபாவளி வந்த பொழுது, 15லிருந்து 20 பட்டாசு வரைக்கும் சேர்ந்திருச்சு!"

"தீபாவளி அன்னைக்கு எழும் பொழுதே, பட்டாசு ஞாபகத்தோடு தான் சந்தோசமா எந்திரிச்சேன். குளிச்சு, சாப்பிட்டு, எல்லோரும் வெடிக்கும் பொழுது, என் பட்டாசையும் எடுத்து..பத்த வைச்சா... பட்டாசெல்லாம் பதபதத்து போய், 20ல் சமீபத்தில் வாங்கின மூணு, நாலு மட்டும் வெடிச்சுது. மற்றவையெல்லாம் வெடிக்கவேயில்லை. காசை சேர்த்து வைச்சு, தீபாவளி நாளில் வாங்கனும்னு கூட விபரம் தெரியாத வயசு. அன்னைக்கு எனக்கு வந்த சோகம் இருக்கே! வாழ்வில் மறக்கமுடியாததது" என சொல்லிவிட்டு, அமைதியாகிவிட்டார்.

என்னாலும் ஒன்றும் பேச முடியவில்லை. "வாங்க போகலாம்!" என்று மட்டும் சொன்னேன். வழியெங்கும் வண்ணமயமாய் பட்டாசுகள் வானத்தில் வெடித்து சிதறிக்கொண்டே இருந்தன. இப்பொழுது, எனக்கு அழகாய் தெரியவில்லை. கொண்டாட்டம் என்பது கூட வர்க்கம் சார்ந்தவை தான்.

November 11, 2010

சின்ட்ரல்லா - கவிதை!


உதட்டை மடித்து தூக்கும்
சாந்து சட்டியின் கீழ்
முகத்தில் சரியும் முடிகளை
புறங்கை ஒதுக்கும்பொழுதும்
அவளே! அவளே!
எங்கெங்கும் நிழலாடுகிறாள்.

தூரிகைகளின் தவறுகளால்
வான்காவின் முகம்போல
தனிமை அப்பிக்கிடக்கிறது அவளிடம்!

நிறமில்லா சட்டை
வெளுப்பில் தோய்ந்த
பூப்போட்ட பாவடை - இவையே
சின்ட்ரலாக்களின் அடையாளங்கள்!

எதிர்படும் முகங்கள் எல்லாம்
தாயாய், தங்கையாய்,
கூலியாய்,
சிறுமியாய், வித்தைகாரியாய்
எங்கெங்கும் அணுவாய்
உயிர்த்திருக்கிறாள்!

அவள் எப்பொழுதும் அழுவதில்லை - ஆனால்
அழுவதுண்டு.
அவள் எப்பொழுதும் சிரிப்பதில்லை - ஆனால்
சிரிப்பதுண்டு.

அவளின் வெற்றுப்புன்னகை
துளிக்கண்ணீரை விட கனமானது.
அவளின் கண்ணீரை யாரும்
நுகராதீர்!
மலம் மூடிய சமூகத்தின்
முடைநாற்றம் நெடி அடிக்கும்.
கடைசியில்
அது கண்ணீருக்கல்ல!
உங்கள் பாவங்களின் பின்குறிப்பு.
அவள் புன்னகைக்கு
பொருள் தேடாதீர்!
அதுவும் பூஜ்யங்களை போலத்தான்!

மோனாலிசாக்களுக்கு விடையுண்டு
சின்ட்ரலாக்களுக்கு விடையில்லை.

தூசி பறக்கும் சாலையில்
நடந்து செல்லும் சின்ட்ரலாக்களுக்கு
கவலையும் இல்லை;
கண்ணீரும் இல்லை - எனில்
அவளின் இரவின் பெருமூச்சை யாதென்பீர்?

முன்பொரு நடுநிசியில்
சின்ட்ரல்லா காத்திருந்தாள்
மாய ஷீ-வுக்கும், சாரட் வண்டிக்கும்.

மழைக்கு ஒழுகும் குடிசைக்குள்
சின்ட்ரல்லா காத்திருக்கிறாள்
சில தோட்டாக்களுக்கும்...
துப்பாக்கிக்கும்...

- சுக்ரன்

பின்குறிப்பு : ருசிய புரட்சி தினமான நவம்பர் 7 நினைவுகளில் .. நண்பர் எழுதிய கவிதையை மெயிலில் அனுப்பி வைத்தார். உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்...


October 27, 2010

வட மாநில தொழிலாளர்களின் அவல வாழ்வும்! கண்டு கொள்ளாத மாநில, மத்திய அரசுகளும்!

பூந்தமல்லி பைபாஸை ஒட்டி நும்பல் என்றொரு ஊர். அங்கு பன்னாட்டு நிறுவனத்திற்கு ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருக்கிறது. அந்த தொழிற்சாலையில் ஒரு தொழிலாளி மிஷினில் கை மாட்டி, கடுமையான அடிபட்டதாய் தகவல் வந்தது.

ஒரு தொழிலாளிக்கு கொஞ்சம் பெரியதாக அடிபட்டால் இ.எஸ்.ஐ. அலுவலகத்திற்கு இருபத்தி நாலு மணி நேரத்திற்குள் காய விவரங்களை தெரியப்படுத்த வேண்டும். இல்லையெனில் அவருக்கு சேர வேண்டிய சலுகைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அதற்குரிய விண்ணப்பத்தை எடுத்து கொண்டு தொழிற்சாலைக்கு சென்றேன். அடிபட்ட தொழிலாளியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தனர். அடிபட்டவர் ஒரு வட மாநில தொழிலாளி. அவரைப் பற்றிய அடிப்படை தகவல்களை பெற்றுக்கொண்டு, தொழிற்சாலையில் வேலை செய்யும் பொழுது தான் அடிபட்டதாக உடன் பணிபுரிந்த இரு தொழிலாளர்கள் சாட்சி கையெழுத்திடவேண்டும். அதற்காக இரண்டு தொழிலாளர்களை வரச் சொன்னேன். வந்தவர்களை கையெழுத்திட சொன்னால்... ஒரு தொழிலாளிக்கு இரண்டு விரல்கள் இல்லை. இன்னொரு தொழிலாளிக்கு ஐந்து விரல்களுமே இல்லை. அதிர்ச்சியாய் இருந்தது. இருவருக்கும் வயது 25ஐ தாண்டாது. ஒரு தொழிலாளிக்கு உழைப்புக்கு அடிப்படையானது கைகள் தானே! கைகளே போய்விட்டால்...இனி வாழும் காலத்தில் இவர்கள் என்ன வேலை செய்து வாழ்க்கையை தொடர்வார்கள். விசாரித்ததில் இரு விபத்துகளுமே 8 மாத இடைவெளியில் நடைபெற்றவை தான் என்றார்கள்.

இப்படி கடுமையாக அடிபடுவதால் தான், இந்த நிறுவன முதலாளி ரிஸ்கிலிருந்து தப்பிக்க அங்கு வேலை செய்கிற அனைவருக்கும் இ.எஸ்.ஐ. கட்டி வருகிறார். ஆனால், தமிழ்நாட்டின் முக்கிய தொழிற்பேட்டையான அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சிறிய, நடுத்தர, பெரிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.

இந்த நிறுவனங்களில் வேலை செய்யும் பெரும்பான்மை தொழிலாளர்கள் வட மாநில தொழிலாளர்கள் தான். கடந்த ஐந்து ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையில் கணிசமானவர்களாகிவிட்டார்கள். இந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் பீகார், ஒரிசா, உத்திர பிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்.

இப்படி விரல்கள், கை, கண் போய் வேலை இந்த தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள அடிப்படை சம்பளமான குறைந்தபட்ச ஊதியம் ரூ. 4000/- கூட முதலாளிகள் தருவதில்லை. முதலில் அவர்களுக்கு என்ன வயது என்றாலும்... ரூ. 2500 தான். பிறகு ஒரு வருடம் கழித்து ரூ. 3000/- அல்லது ரூ. 3500/- என இரக்கப்பட்டு உயர்த்துகிறார்கள். இதில் பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு எந்த முதலாளியும் இ.எஸ்.ஐ.(மருத்துவ வசதி), வருங்கால வைப்பு நிதி (பி.எப்) கட்டுவதில்லை.

முதலாளிகள் தரப்பில் சொல்லும் சொத்தையான காரணம். "யாரும் சில மாதங்கள், சில நாட்கள் கூட வேலையில் தொடர்வதில்லை. அவர்களே இ.எஸ்.ஐ., பி.எப். வேண்டாம் என்கிறார்கள்" என சொல்கிறார்கள்.

இதில் பாதி பொய்; பாதி மெய். அவர்களின் கடுமையான உழைப்புக்கு கொடுக்கும் சம்பளம் சொற்ப சம்பளம். அதில் இ.எஸ்.ஐ,(1.75%) பி.எப்.(12%) என பிடித்தம் செய்தால் அவர்களின் வாழ்க்கை தேவைக்கு என்ன மிஞ்சும்? அதனால் வேண்டாம் என்கிறார்கள். மேலும், குறைந்த சம்பளம் என்பதாலேயே ரூ. 500/- சம்பளம் அதிகமாக வேறு யாராவது கொடுத்தால், எளிதாய் நகர்ந்தும் விடுகிறார்கள்.

அப்படியே பல தொழிலாளிகள் வருடக்கணக்கில் வேலை பார்த்தாலும், அவர்களே விரும்பி கேட்டாலும் முதலாளிகள் இ.எஸ்.ஐ, பி.எப். கட்ட முன்வருவதில்லை. லாப விகிதம் குறைந்துவிடும் என மிக கவலைப்படுகிறார்கள்.

மேலும், இ.எஸ்.ஐ. பி.எப். விதி என்ன சொல்கிறது என்றால்...ஒரு தொழிலாளி ஒரு நாள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலே அவர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப். கட்ட வேண்டும் என்று தான்.

இவர்களின் சிப்டு நேரம் என்பது 8 மணி நேரம் கிடையாது. குறைந்தபட்ச வேலை நேரம் 10 மணி நேரம் அல்லது 12 மணி நேரம். அதற்கும் மேலாக உழைத்தால் தான் ஊரில் உள்ள தன் குடும்பத்திற்கு பணம் அனுப்ப முடியும் என ஓவர் டைம் செய்கிறார்கள். ஆக 14 மணிநேரம், 16 மணி நேர உழைப்பு என்பது சர்வ சாதாரணமாக நடைமுறையில் இருக்கிறது. காலசக்கரம் மீண்டும் திரும்பி சுற்றுகிறது.

இப்படி கடுமையாக உழைக்கும் இந்த தொழிலாளர்களை நடத்தும் விதம் இருக்கிறதே! கொடுமை. ஐம்பது வயது தொழிலாளி என்றாலும் வா! போ! என ஒருமையில் அழைப்பது , சகட்டுமேனிக்கு திட்டுவது என மிக மோசமாக நடத்துகிறார்கள்.

பல மாநிலங்கள் கடந்து வருவதால்.. பெரும்பான்மையான தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களை உடன் அழைத்து வருவதில்லை 20 வயதிலேயே பெரும்பான்மையான வட மாநில தொழிலாளிகளுக்கு திருமணம் முடிந்திருக்கிறது. இவர்களுக்கு முதலாளிகள் தான் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்து தருகிறார்கள். ஒரு குடவுன் போல உள்ள அறையை 8க்கு 8 அடி என மறைப்பு கொடுத்து... ஒரு அறையில் 6 பேர் என தங்க வைக்கிறார்கள். அந்த அறையில் சுத்தமுமில்லை: சுகாதாரமுமில்லை.

அடிப்படை சம்பளம் இல்லை, 8 மணி நேரம் உழைப்பு என்கிற அடிப்படை உரிமைகள் இல்லை; சுகாதாரமான தங்குமிடம் இல்லை: மோசமாக நடத்துவது - கொத்தடிமை முறைக்கும், இந்த தொழிலாளர்களுக்கும் என்ன வித்தியாசம்?

இப்படி லட்சகணக்கான வட மாநில தொழிலாளர்களின் மோசமான நிலை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியாமலா இருக்கப் போகிறது. நிச்சயம் தெரியும். இவர்களை முதலாளிகள் கொள்ளையடிப்பதற்காக... கண்டும் காணாமல் இருக்கின்றன.

தொழிற்சாலைகளை கண்காணிக்கிற இ.எஸ். ஐ., (ESIC), பி.எப்.,(P.F) தொழிற்சாலை (Inspector of Factories) ஆய்வாளர்கள் எல்லாம்.. முதலாளிகள் எவ்வளவுக்கெவ்வளவு தப்பு செய்கிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு லஞ்சத்தை அன்பாகவோ அல்லது மிரட்டியோ வாங்கி கொண்டு சென்று விடுகிறார்கள். அபூர்வமாய் (அபூர்வம் தான்) லஞ்சம் வாங்காமல் யாரேனும் அதிகாரி வந்தால்... அவர்களிடம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை காண்பிக்காமல் இழுத்தடித்து விடுகிறார்கள்.

கல்வியறிவு, விழிப்புணர்வு, மொழி, அடிக்கடி இடம் மாறுவது என பல சிக்கல்களினால்.. வட மாநில தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அரசியல் படுத்தி தொழிற்சங்கம் கட்டுவது தொழிற்சங்கங்களுக்கு சிரமமானதாக இருக்கிறது. இருப்பினும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி போன்ற புரட்சிகர தொழிற்சங்கங்கள் கடந்த காலங்களிலும், சம காலத்திலும் இவர்களை ஒன்று திரட்டி, சங்கம் கட்டி, போராட வைத்து வெற்றிகரமாக உரிமைகளை வெல்ல வைத்திருக்கிறது.

மத்திய, மாநில அரசுகள் இவர்களின் துயரை துடைக்கும் என்பது கானல் நீர் தான். கடந்த 10 ஆண்டுகளில் நம் விவசாயிகள் லட்சகணக்கானக்கில் (தற்) கொலையால் சாகும் பொழுது கூட கண்டு கொள்ளாத அரசு, இவர்களின் துயரத்தையா துடைக்கப்போகிறது.

தன் துயரங்களை தீர்ப்பதற்கு போராட்டத்தை தவிர வேறு குறுக்கு வழிகள் ஏதுமில்லை!

தொடர்புடைய சுட்டிகள் :



October 26, 2010

தொழிலாளர்களின் உரிமை : போனஸ்?

எந்த தொலைக்காட்சி சானலை பார்த்தாலும், பண்டிகை கால விளம்பரங்கள் கொல்கின்றன. தீபாவளி வரைக்கும் தொலைக்காட்சி பார்க்காமல் இருந்தால் நல்லது என நினைக்கிறேன்.

பண்டிகைகள் வந்தால்... பணம் உள்ளவர்களுக்கு குஷி. இல்லாதவர்களுக்கு சுமை. அதுவும் தீபாவளி என்றால்... மிகப்பெரிய சுமை தான். தீபாவளி செலவுகளை தாக்குப்பிடிக்க உதவுவது..போனஸ் என்பது மிகப்பெரிய ஆறுதல். இன்றைக்கு எல்லா அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும் போனஸ் பற்றிய பேச்சு தான் பரவலாக இருக்கும்.

பல தொழிலாளர்கள் போனஸ் என்றால் ....முதலாளி இரக்கப்பட்டு பண்டிகை கொண்டாட போனஸ் தருகிறார்கள் என தவறாக நினைத்துக்கொண்டிருப்பார்கள். இப்படி பல தவறான அபிப்ராயங்கள் பலரிடம் உலாவுகின்றன. உண்மை பலருக்கும் தெரிவதில்லை. அதனால் சில தகவல்களை பகிர்வதற்காக இந்த பதிவு. நம் வசதிக்காக... கேள்வி பதில் வடிவத்தில்.

தொழிலாளர்களின் உரிமை : போனஸ்?

ஆம். முதலாளிகள் இரக்கப்பட்டு, பெருந்தன்மையாக தருவதல்ல இந்த போனஸ். சம்பளம் போல நம் உழைப்புக்கு தருவது தான் இந்த போனஸ். போனஸ் சம்பந்தமாக ஒரு வழக்கு 6 மாதத்திற்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்பில்...போனஸ் தொழிலாளர்களின் உரிமை என தீர்ப்பு வழங்கியது.


தொழிற்சாலை நட்டத்தில் இயங்கினால்... நிறுவனம் போனஸ் தர தேவையில்லையா?

நிதி மூலதன சூதாடிகள் பங்கு சந்தையில் ஏகமாக விளையாடி, கொள்ளையடித்ததின் விளைவாக வரலாற்றில் இதுவரை சந்தித்திராத மிகபெரிய நெருக்கடியை முதலாளித்துவ உலகம் சந்தித்து.. இன்னும் மீள முடியாமல் திணறிக்கொண்டிக்கிறது. இந்த நெருக்கடியை தொழிலாளர்கள் தலையில் தான் இறக்கியது முதலாளித்துவம். வேலையில்லை என துரத்தினார்கள். வருடக்கணக்கில் போராடி பெற்ற உரிமைகளை எளிதாக வெட்டினார்கள். இதன் தொடர்ச்சியில் போனஸ் கூட இல்லையென்பார்கள்.

ஒரு நிறுவனம் நட்டத்தில் இயங்கினாலும் போனஸ் தரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்டியிருக்கிறது. (லாபத்தில் நிறுவனம் கொழித்தால்... தொழிலாளர்களுக்கு அள்ளியா தரப்போகிறார்கள் முதலாளிகள்?)

ஆதாரம் : இந்த ஆண்டு பி.எஸ்.என்.எல். - அரசு தொலை தொடர்பு நிறுவனம் நட்டத்தில் இயங்குவதால்(!) ஊழியர்களுக்கு போனஸ் தர மறுத்துவிட்டது. இப்பொழுது, உச்சநீதி மன்ற வழிகாட்டலை நிறைவேற்ற சொல்லி, போராடி கொண்டிருக்கிறார்கள் பி.எஸ்.என்.எல். தொழிலாளர்கள்.

ஒரு தொழிலாளி ஒரு வருடம் வேலை செய்தால் தான் போனஸ் பெற தகுதியானவரா?

தொழிலாளர்கள் வருடக்கணக்கில் போராடி சில உரிமைகளை பெற்றால்.. அந்த அரசு விதியை கூட பெரும்பாலான முதலாளிகள் கடைப்பிடிப்பதேயில்லை. சட்டம் ஒன்று சொன்னால்..அவர்களாகவே அவரவர் நிறுவனத்திற்கென்று ஒரு விதியை உருவாக்கி வைத்துக்கொள்வார்கள்.

ஒரு நிறுவனத்தில் ஒரு தொழிலாளி 30 நாட்களுக்கு மேலே வேலை செய்தாலே அவர் போனஸ் பெற தகுதியானவர்.

ஒப்பந்த தொழிலாளி - போனஸ் பெற தகுதியானவரா?

சட்டப்படி நிரந்தர தொழிலாளியும், ஒப்பந்த தொழிலாளியும் சமமானவர் தான். இ.எஸ்.ஐ., வருங்கால வைப்பு நிதி சட்டங்கள் இதை தான் நிரூபிக்கின்றன. ஆனால், கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக... ஒப்பந்த தொழிலாளி என்கிற முறையை உருவாக்கி முதலாளிகள் அடிக்கும் கொள்ளை அநியாயம்.

ஒப்பந்த தொழிலாளியும் நிரந்தர தொழிலாளியைப் போலவே மேலே சொன்னது போல தகுதியானவர் தான்.

என்னளவில் தோன்றிய சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளேன். வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். பதில் சொல்ல விழைகிறேன்.

October 19, 2010

தொழிலாளர்களின் சேமிப்பு பணத்தை சூறையாட துடிக்கும் "மக்கள் நல அரசு"!



தொழிலாளர்களின் சேமிப்பு பணமான வருங்கால வைப்பு நிதியின் (Provident Fund - PF) இன்றைய கையிருப்பு ரூ. 5 லட்சம் கோடிகள். இந்த பணத்தை பங்கு சந்தை சூதாட்டத்தில் இறைக்க சொல்லி, மத்திய அரசு தனது நிதி அமைச்சகம் மூலமாக வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தை வற்புறுத்துகிறது.

கடந்த 58 ஆண்டுகளாக வருங்கால வைப்பு நிதி பணத்தை அரசு வங்கியான எஸ்.பி.ஐ. தான் நிர்வகித்து வந்தது. இவ்வளவு பணமும் இவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறதே என நினைத்த மன்மோகன்சிங் அரசு, 2008ல் முதன்முறையாக பி.எப். பணத்திலிருந்து 2.5 லட்சம் கோடியை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேப்பிடல், ஐசிஐசிஐ புரூடன்சியல், HSBC போன்ற தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தூக்கி தந்தது. அந்த பணத்தின் கதியே இன்றைக்கு என்ன நிலை என்று தெரியவில்லை.

அந்த சமயத்தில், நாடு முழுவதும், தொழிற்சங்கங்கள் தனது எதிர்ப்பை காட்டின. இப்பொழுது இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் மீதியுள்ள பணத்தையும் பங்கு சந்தையில் கொட்ட காய் நகர்த்துகிறது. இதற்காக சமீபத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், "பங்குச் சந்தையில் போடலாம்! ஆனால், அப்படி போடுகிற பணத்திற்கு அரசு உத்திரவாதம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்காத பட்சத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட மாட்டாது" என்று பி.எப். நிதியை நிர்வாகம் செய்யும் மத்திய அறங்காவலர் வாரியம் அரசுக்கு தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தையில் நிதி மூலதன சூதாடிகள் பந்தய ஒப்பந்தங்கள் மூலமாகவும் பல்வேறு வகைகளில் விளையாடி தான், உலகமே நிதி நெருக்கடிக்குள் சிக்கியது. அதிலிருந்தே முதலாளித்துவ உலகம் மீளமுடியாமல் சிக்கி திணறிக்கொண்டிருக்கிறது. சீட்டு விளையாடுபவன் விளையாடி கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் கை நடுங்கும் அல்லவா! அது போல உலகம் முழுவதுமே நிதி மூலதன சூதாடிகள் எங்கெல்லாம் பாதுகாப்பாக பணம் இருக்கிறதே அதையெல்லாம் பங்குச்சந்தையில் கொட்டு என எல்லா அரசுகளையும் மிரட்டி வருகிறார்கள். இந்தியாவில், மன்மோகன் சிங் தான் நிதிமூலதன சூதாடிகளுக்கு நல்ல விசுவாசமான ஆள் அல்லவா! அதனால், பி.எப். நிதியை சூறையாட துடியாய் துடிக்கிறார்.

இதன் அபாயத்தை தொழிலாளர்கள் உணர்ந்து, நாடு முழுவதும் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். ஏற்கனவே நடத்திய போராட்டங்களின் விளைவாக தான் "உத்திரவாதம் தா!" என பேச வைத்திருக்கிறது. ஆகையால் தொழிலாளர்கள் இறுதிவரை தொடர்ந்து போராட வேண்டும்.

தொடர்புடைய சுட்டிகள் :

அரசு உறுதி அளிக்காதவரை பி.எஃப். பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட மாட்டாது: மத்திய தொழிலாளர் நலத்துறை

October 11, 2010

போபால் - முகிலனின் ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு!










- நன்றி : புகைப்படங்கள் : பதிவர் சந்தனமுல்லை

October 9, 2010

போபால் -‍ ஓவியக்காட்சி! அனைவரும் வருக!


கற்பனைக்கு அடங்கா
மனவெளிக்கு அழைத்துச் சென்று
மகிழ்ச்சியின் நிழல் பரப்பும்,
வண்ணப் பூச்சுக்கள் இல்லை.

துரோகமும், லாபவெறியும்
கைகோர்த்துக் கொண்டு
போபால் வீதிகளில்
வீசியெறிந்த பிணங்களின் குவியல்,
அதற்காக,
இன்றும் கதறிடும்
அழுகையும் விம்மலும்
செவியில் அறைந்து கொண்டிருக்க,
தூரிகையை வண்ணங்களில் புதைத்து
அழகு பார்ப்பது முரணின் உச்சம்.
நீதிக்கான குரலை
கோடுகளால் பேசும்
கமாய் விரிகிறது…இந்த காட்சிப் படிமங்கள்.

1984, டிசம்பர் 2, போபால் – யூனியன் கார்பைடு:
துரோகத்தின் விலை என்ன?
ஓவியக் கண்காட்சி

ஓவியங்களின் வழியே கலைபூர்வமான
தன் எதிர்வினையைத் தருகிறார் தோழர் முகிலன் (ம.க.இ.க)

ஓவியக் காட்சியை திறந்து வைக்கிறார் -‍ ஓவியர் மருது

ஓவியக் காட்சி பற்றி கலந்துரையாடல்: மாலை 6 முதல் 7.30வரை

நாள்: 10.10.2010 ( காலை 8 முதல் இரவு 8 வரை)

இடம்: செ.தெ.தெய்வநாயகம் மேல்நிலைப்பள்ளி, தியாகராயநகர், வெங்கட்நாராயணா சாலை, நடேசன் பூங்கா அருகில்.

- மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை

October 5, 2010

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!


ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''

படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!

ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...

வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?

நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.

இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.

தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்! -

கட்டுரையாளர் : சமஸ், தினமணி, 05/10/2010

September 20, 2010

லஞ்சம் விளையாடும் தபால்துறை!

நேற்று சொந்த ஊருக்கு போயிருந்தேன். அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது... ஊரிலிருந்து நான் அனுப்புகிற பணம் முழுவதும் வருகிறதா! அல்லது தபால்காரர் பணம் கேட்கிறாரா! என்றேன்.

அனுப்புவதற்கு ரூ. 100க்கு ரூ.5 செலவாகிறது. பணம் கொடுக்கும் பொழுதும்.. கமிசன் கேட்டால் செலவு கூடுகிறது அல்லவா! தபால்காரரும் கமிசன் கேட்டால்... வங்கி கணக்கு திறந்து...ஏடிஎம் கார்டை கையில் தந்துவிடலாம் எண்ணத்தில் கேட்டேன். முழுதாக தந்துவிடுகிறார் என்றார்.


பக்கத்து வீட்டு அம்மாவும் அங்கு இருந்தார். அவருக்கு ஆதரவற்றோருக்கான அரசு உதவி பணம் வருகிறது! ஆனால், ரூ. 400க்கு ரூ. 380 தான் தபால்காரர் தருகிறார் என்றார். எவ்வளவு நாட்களாக இப்படி வாங்குகிறீர்கள் என்றேன். இரண்டு மூன்று ஆண்டுகளாகவே இப்படித்தான் என்றார்.


" அவர் உங்களிடம் ரூ. 400 கொடுத்து... ரூ. 20/ கேட்பாரா?" என்றேன்.


"இல்லையில்லை! தரும் பொழுதே ரூ. 380/- தான் சில்லறையாக தருவார்!" என்றார்.


"கமுதியில் இருக்கும் அத்தையும் தபால்காரர் ரூ. 25/- எடுத்துக்கொள்வதாக கடந்தமுறை சந்திக்கும் பொழுது சொன்னார்" என்றார் அம்மா.


ஒரு ஆளுக்கு குறைந்தபட்சம் ரூ. 20/ என்றால்..நாடு முழுவதும் என்றால்... எவ்வளவு லஞ்சப்பணம். பல ஆண்டுகளாக தொடர்ந்திருக்கிற மோசடி இது. நிச்சயம் பல கோடிகள் தாண்டும். உடனடியாக தெரிந்த பெண் வழக்கறிஞர் ஒருவரிடம் தொலைபேசினேன். அவரிடம் இதை விளக்கி... இதற்கு எதாவது செய்ய வேண்டுமே தோழர்! என்றேன். முதலில் சம்பந்தப்பட்ட துறை தலைவருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்புவோம். பிறகு, சீனியர் வழக்கறிஞரிடம் கலந்து பேசி நீதிமன்றத்திலும் அணுகலாம் என்றார்.


இது குறித்து... வலைத்தளத்தில் ஒரு கட்டுரை எழுதி..அதை பத்திரிக்கைகளுக்கு அனுப்பலாம் என யோசித்துக்கொண்டே ரயிலில் வந்து வீடு வந்து சேர்ந்தால்... வழக்கறிஞர் அவர்களே தொலைபேசியில் அழைத்து...சன் செய்திகளைப் பார்க்க சொன்னார். சுருக்கமாக செய்தி சொன்னார்கள்.


பிறகு இந்து நாளிதழில் பார்த்த பொழுது...சிபிஐ சென்னையில் உள்ள தபால்துறை அலுவலங்களில் சோதனை நடத்தியதில்... நிறைய லஞ்சப்பணம் சிக்கியிருக்கிறது. சில தபால்காரர்களை கைது செய்திருக்கிறது.


தபால்காரர்களுக்கு ரூ. 400க்கு ரூ. 20/- லஞ்சம் வாங்கும் அளவுக்கு தைரியம் வந்திருக்கிறது என்றால்... நிச்சயம் இதில் மேலதிகாரிகள் பலர் சம்பந்தப்பட்டிருப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. சிபிஐ - நேர்மையாக ஆய்வு செய்தால்... பல பெரிய தலைகளையும் உள்ளே தள்ள முடியும். இல்லையெனில், சில கடைநிலை தபால்காரர்களை பலி கொடுப்பதோடு இந்த மிகப்பெரிய ஊழல் முடிவுக்கு வந்துவிடும். பார்க்கலாம் என்ன செய்ய போகிறது என!

விரிவான செய்திகளுக்கு!

CBI unearths major pension scam - தி இந்து
முதுமையில் கொடுமை - தினமணி

August 20, 2010

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!*


பாரதிய ஜனதா கட்சி, இடதுசாரிகள், பல்வேறு மாநிலக் கட்சிகள் என்று விலைவாசிப் பிரச்னையில் ஆளும் கூட்டணிக்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று வெற்றிகரமாக "பாரத் பந்த்' நடத்தியபோது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஒரு மாற்று ஏற்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கை வெறும் கானல்நீர்தான் என்பதை சமீபத்திய நாடாளுமன்ற நிகழ்வுகள் தெளிவாக்குகின்றன.

பாரதிய ஜனதா கட்சியின் தயவில் அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம், நடைபெறும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்பட்டுவிடும் என்று தெரிகிறது. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

அன்னிய முதலீடு, பொருளாதாரக் கொள்கை, அமெரிக்காவை மையப்படுத்தியுள்ள பிரச்னைகள், உலகமயமாக்கல் என்று வரும்போது காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் கைகோத்துச் செயல்படுவதைக் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக நாம் பார்த்து வருகிறோம்.
அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் முழுமையாக்கப்படும் என்பதுதான் நிலைமை.

நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்திய விஜயத்துக்குமுன் இந்தச் சட்டத்தை நிறைவேற்றி அமெரிக்க முதலீட்டாளர்களையும், அரசையும் மனம் குளிர்விக்க வேண்டும் என்பதில் பிரதமர் மன்மோகன் சிங் குறியாக இருக்கிறார் என்கிறார்கள். மன்மோகன் சிங்கின் இந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுப்பதில் காங்கிரஸýம், அதன் கூட்டணிக் கட்சிகளும் மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சியேகூட முனைப்புடன் செயல்படுகிறது என்பதுதான் குறிப்பிடவேண்டிய ஒன்று.

அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமும், அணுஉலை எரிபொருள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பும் வலியுறுத்துகின்றன. அதற்கு அடிப்படைக் காரணம், அணுமின் நிலையங்களில் அணுக்கசிவோ, விபத்தோ ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அணுமின் நிலைய உரிமையாளர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதால்தான் இந்த நிபந்தனை.

இழப்பீட்டுக்கு ஓர் உச்சவரம்பு விதிப்பதன் மூலம் அணுவிபத்தால் ஏற்படும் தலைமுறைகளைக் கடந்த பாதிப்புகளுக்கு அணுமின் நிலைய உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இருக்காது. அணுமின் நிலையங்களை அன்னிய முதலீட்டாளர்கள் மட்டுமே நிறுவ முடியும் என்பதால் தங்களது நாட்டு முதலீட்டாளர்களின் இழப்பைக் குறிப்பிட்ட வரம்புக்குள் நிறுத்த அணுஉலை எரிபொருள் வழங்கும் நாடுகளின் கூட்டமைப்பு விரும்புகிறது.

போபாலில் நடந்த விஷவாயுக் கசிவில் யூனியன் கார்பைடு நிறுவனம் முழுமையான இழப்பீடு கொடுக்காத நிலையில், இன்னமும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதும், நீதிமன்றப்படிகளில் ஏறி, இறங்கி சலித்துவிட்டிருப்பதும் இதுபோன்ற விபத்துகளில் இழப்பீட்டை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. ஆனால், அப்படிப்பட்ட இழப்பீட்டுக்கு உச்சவரம்பு விதிக்கப்படுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

அணுசக்தி என்பது ஆபத்தானது என்பதை ஏற்றுக்கொள்ளும்போது, அதனால் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு முழுமையான இழப்பீடு மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளுக்கும் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படுவதும்கூட ஒரு நல்லரசின் கடமை.

கடந்த மக்களவையில் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்து வாக்களித்த பாரதிய ஜனதா கட்சி இப்போது இந்த இழப்பீட்டு மசோதாவில் அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது ஏன்? தங்களது நிபந்தனைகளை அரசு ஏற்றுக்கொண்டிருப்பதாக பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள். அது என்ன நிபந்தனைகள்?

முதலாவதாக, அணுசக்திக் கூடங்கள் தனியார் தரப்பில் விடப்படக் கூடாது என்பதும் அரசுதான் நடத்த வேண்டும் என்பதும். இரண்டாவதாக, அணுசக்தி நிறுவனங்களின் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை 500 கோடியாக இருந்ததை 1,500 கோடியாக உயர்த்த வேண்டும் என்பதும் தேவைப்பட்டால் மேலும் உயர்த்திக் கொள்ளும் அதிகாரமும் அரசுக்கு இருக்க வேண்டும் என்பதும்.

முன்பு தயாரிக்கப்பட்ட மசோதாவின்படி, அணுசக்தி உற்பத்தியாளர்களின் இழப்பீடு 500 கோடி என்றும், அதற்குமேல் இழப்பீடு தரப்பட வேண்டுமானால் அதை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் இருந்தது. இப்போது பாஜகவின் கோரிக்கையின்படி அரசு நிறுவனமாக மட்டுமே அணுசக்திக் கூடங்கள் அமைக்கப்படும் என்கிற நிலையில் இழப்பீடு எவ்வளவு இருந்தாலும் அதை அரசு ஏற்றுக்கொள்வது என்பதுதானே நியாயம். அரசே நடத்தும்போது உச்சவரம்பின் அவசியம் தேவையில்லையே!

இப்படி ஒரு மசோதாவை நிறைவேற்றி, அரசு நிறுவனமாக அணுசக்திக் கூடங்களை அமைத்து, பிறகு அவற்றைத் தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிட்டிருப்பது இந்த மசோதாவிலிருந்தே பளிச்செனத் தெரிகிறதே. அப்படியானால் இது மக்களை முட்டாளாக்கும் மசோதாதானே?

சரி, மின்உலைகளில் தயாரிப்புக் குறைபாடுகள் இருந்தால் அதற்கு உலைகளை வழங்கிய பன்னாட்டு நிறுவனங்கள் பொறுப்பேற்குமா? அவர்களிடமிருந்து விபத்து ஏற்பட்டால் இழப்பீடு முழுமையாகப் பெறப்படுமா? இதுபோன்ற கேள்விகளுக்கு மசோதா பதில் சொல்லவில்லையே, ஏன்?

பாரதிய ஜனதாவும், காங்கிரஸýம் ஓரினப் பறவைகள். பொருளாதாரக் கொள்கையிலும், பன்னாட்டு நிறுவன ஆதரவிலும் இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்றம் இருக்காது என்பது உலகறிந்த ரகசியம். ஏனைய மாநிலக் கட்சிகள் இந்தப் பிரச்னையில் மௌனம் சாதிக்கின்றனவே, ஏன்? அவர்களைப் பொறுத்தவரை அணுவாவது.. உலையாவது.. விபத்தாவது.. இழப்பாவது..! உறுப்பினர்களின் சம்பள உயர்வுதான் இப்போதைய கவலை!
மக்களைப் பற்றியும் வருங்காலச் சந்ததியினரைப் பற்றியும் இவர்கள் எங்கே கவலைப்படுகிறார்கள்...?

நன்றி : தினமணி தலையங்கம் - 19/08/2010

பின்குறிப்பு : தினமணியின் தலையங்கத்தில் 'ஒரு மரத்து பறவைகள்" என சாந்தமாக தலைப்பு தந்திருந்தார்கள். பொருத்தமாக சொல்ல வேண்டுமென்றால்..."ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்" என்ற தலைப்பு தானே பொருத்தமாக இருக்கிறது. அதனால் தான் மாற்றி வைத்தேன்.

August 17, 2010

எழுத, படிக்க தெரியாத மாலைமலர்!

கடந்த 15/08/2010 அன்று மக்கள் கலை இலக்கிய கழகமும் அதன் தோழமை அமைப்புகளான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி - இணைந்து, "கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!" என முற்றுகை போராட்டம் நடத்தின. அதை பின்வருமாறு மாலைமலர் பதிவு செய்திருந்தது.

சென்னையில் கார்பைடு கம்பெனி அலுவலகம் முற்றுகை: 1000 பேர் கைது.
- சென்னை ஆக.15, 2010

சென்னையில் கார்பைடு கம்பெனி அலுவலகத்தை முற்றுகையிட சென்ற 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.

முற்றுகை போராட்டம்

போபால் விஷவாயு கசிவு சம்பவத்துக்கு தொடர்பபன கார்பைடு கம்பெனியின் அலுவலகம் ஈக்காடுதாங்கலில் உள்ளது. இக்கம்பெனியை மூடக்கோரி மக்கள் கலை இயக்கிய கழகம், ஜனநாயக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, ஜனநாயக புதிய முன்னாள் விவசாயிகள் விடுதலை முன்னணி - ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் அந்த அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.

அதற்காக ஊர்வலமாக புறப்பட்ட அவர்கள் அசோக் பில்லரில் உள்ல ஜவஹர்லால் ரோட்டில் திரண்டு நின்றனர். பின்னர் போராட்டம் நடத்த சிறிது நேரம் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

1000 பேர் கைது

தகவல் அறிந்ததும், போலீஸ் இணை கமிஷனர் சக்திவேல், துணை கமிஷனர் சாரங்கன் மற்றும் போலீசார் அங்கு வந்து போராட்டத்தின் ஈடுபட்ட 1000 பேரை கைது செய்தனர். அவர்களில் 300 பேர் பெண்கள்.

இவர்கள் அனைவரும் இப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிக்கு 500 போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

****
இந்த செய்தியை படிக்கும் பொழுது, இதை எழுதிய ரிப்போர்ட்டர் களத்திற்கு வந்ததாக தெரிகிறது. அங்கு நின்று போகிற வருகிற பொதுமக்கள் அனைவருக்கும் தோழர்கள் போராட்டம் தொடர்பான துண்டறிக்கையை விநியோகித்து கொண்டு இருந்தார்கள். அப்படி வாங்கிய துண்டறிக்கையில் அமைப்பு பெயர்கள் தெளிவாக இருந்தன. அப்படி இருக்கும் பொழுது, ஏன் தப்புத்தப்பாக அமைப்பு பெயரை போடுகிறார்கள்? மாலைமலருக்கு எழுத, படிக்க தெரியாதா என்ன?

புரட்சிகர அமைப்பு நடத்துகிற எந்த போராட்டங்களும் மக்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதில் பல பத்திரிக்கைகளும், சானல்களும் மிகுந்த கவனத்துடன் வேலை செய்கின்றன. அதனால் தான் இந்த போராட்ட செய்தியை கூட பல பத்திரிக்கைகளும், சானல்களும் கண்டும் காணாதது போல இருந்துவிட்டன.

'தேசிய நீரோட்டத்தில்' கலக்காமல் இருக்கும் எந்த அமைப்பு செய்திகளையும் இப்படித்தான் இருட்டடிப்பு செய்கிறார்கள். இருப்பினும், போராட்ட செய்திகளை எப்பொழுதாவது, வெளியிட்டால், இப்படித்தான் அமைப்புகளுக்கு அவர்களாகவே மேலே உள்ளது போல பெயர் சூட்டுவார்கள்.

சுதந்திரம் இன்னும் தொலைவில் இல்லை! - (மீள்பதிவு)


பொய்களின் கைப்பிடித்து
நெடுந்தொலைவு
வந்துவிட்டோம்.

ஒவ்வொரு மைல்கல்லிலும்
சுமைகளென
நம் செல்வங்கள்
அனைத்தையும்
இறக்கி வைத்துவிட்டோம்.

இலவசமாய் கிடைத்ததென
பல வண்ணப் பந்தல்களில்
நிறைய மூடநம்பிக்கைகளை வாங்கி
வயிறு முட்ட குடித்துவிட்டோம்.

பொய்கள்
கொழுத்துப்போய்விட்டன.
நாம் நிறைய
இளைத்து போய்விட்டோம்.

பொய்கள் அழைத்து செல்வது
மகிழ்ச்சியின் தேசத்திற்கு அல்ல!
மரணக்குழிக்குத்தான்!
உண்மை எச்சரித்துக்கொண்டே
உடன் வருகிறது.

பொய்கள் இதுவரை
உண்மையின் ஆடைகளை
உடுத்தியிருந்தன.

இப்பொழுது
தன் மூகமூடிகள்
உண்மையின் ஆடைகள்
எல்லாவற்றையும் களைந்தெறிந்து
தன்னை எவர் ஜெயிக்கமுடியும்?
கோரப்பற்களைக் காட்டி
எக்காளச் சிரிப்புடன்
உண்மையைப் பார்த்து
கேலி செய்கிறது.

சாவின் விளிம்பிற்கு
வந்துவிட்டோம்.

இப்பொழுதாவது
உண்மையின் கைப்பிடிப்போம்.
கரங்களை ஒன்றிணைப்போம்.

உற்றுப்பாருங்கள்
சாவின் முகத்தில்
சவக்களை.

சுதந்திரம்...இன்னும்
தொலைவில் இல்லை

- குருத்து


- 2003-ல் புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்தது.

August 11, 2010

போபால் : ஆகஸ்டு 15ல் முற்றுகை! அனைவரும் வருக!


போபால் : நீதி வேண்டுமா?.. நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை..

போபால் – காலம் கடந்த அநீதி

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

போபால் நச்சுவாயுப் படுகொலையை விபத்தாகச் சித்தரித்து குற்றவாளிகளை ஒரு நாள் கூட சிறைக்கு அனுப்பாமல் பிணையில் விடுவித்திருக்கிறது போபால் நீதிமன்றம். முதன்மைக் குற்றவாளியான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கிறது அமெரிக்க அரசு. 23,000 இந்திய மக்களை படுகொலை செய்து , 5,00,000 க்கும் மேற்பட்டோரை ஊனமாக்கியிருக்கும் அந்தப் பயங்கரவாதியை ஒரே ஒரு நாள் கூட கூண்டில் ஏற்றி விசாரிப்பதற்கு கூட விரும்பாத மன்மோகன் சிங் அரசு, மக்களுக்கு நிவாரணம் தருவதாகவும், மீண்டும் நீதி விசாரணை கோரப் போவதாகவும் நம்மிடம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது.

1984, டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவில் யூனியன் கார்பைடு ஆலையில் நடந்த நச்சுவாயுக் கசிவு எதிர்பாராமல் நடந்த விபத்தல்ல. அமெரிக்க நிறுவனம் தெரிந்தே செய்த படுகொலை. ஆபத்தான இந்த உற்பத்தியை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு தள்ளி விட்டது குற்றம். மெதில் ஐசோ சயனைடு என்ற நச்சு வாயுவிலிருந்து பூச்சிக் கொல்லி தயாரிக்கும் ஆலையை குடியிருப்பு பகுதியில் அமைத்தது குற்றம்.

அதே ஆலையில் பல விபத்துக்கள் நடந்த பின்னரும் இலாபத்தை கூட்டுவதற்காக நச்சுவாயுக் கிடங்கின் பாதுகாப்புச் செலவுகளை குறைத்தது குற்றம்.செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு மாற்று மருந்து கொடுத்து காப்பாற்ற முயன்ற மருத்துவர்களிடம் கூட சயனைடு வாயுவின் பெயரைக் கூறாமல் ஏமாற்றி, பல்லாயிரம் மக்களைத் துடித்துச் சாக விட்டது குற்றம். பூச்சிக் கொல்லி த்யாரிப்பதாக கூறிக் கொண்டு, இரகசியமாக இரசாயன ஆயுதங்களைத் தயாரித்தது தான் மேற்கூறிய குற்றங்கள் அனைத்திற்கும் அடிப்படையான கொலைக்குற்றம்.

தேடப்படும் குற்றவாளி ஆண்டர்சன்
குற்றவாளி யூனியன் கார்பைடு மட்டுமல்ல; ஆபத்தான இந்த ஆலைக்குத் தெரிந்தே உரிமம் வழங்கியவர் இந்திராகாந்தி. கைது செய்யப்பட்ட ஆண்டர்சனை விடுவித்து மன்னிப்பு கேட்டு, அரசு விமானத்தில் ஏற்றி அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைத்தவர் அன்றைய பிரதமர் இராஜீவ் காந்தி. ஒரு இந்திய உயிரின் விலை 12,414 ரூபாய் என்று 1989 இல் கார்பைடு நிறுவனத்துடன் கட்டைப் பஞ்சாயத்து பேசி முடித்தது இராஜீவ் அரசாங்கம்.

இந்தக் குற்றத்தை சாலை விபத்து போன்ற சாதாரணக் குற்றமாக குறைத்தது உச்ச நீதி மன்றம். வழக்கை சீர்குலைத்து குற்றவாளி ஆண்டர்சனைத் தப்பவைக்க முயன்றது சி.பி.ஐ. காங்கிரசு அரசின் எல்லா சதிகளுக்கும் உடந்தையாய் இருந்தது, அதன் பின் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அரசு. இந்த குற்றவாளிகள் அனைவரும் எதுவுமே தெரியாதவர்கள் போல் நாடகமாடுகிறார்கள்.

26 ஆண்டுகளாக காத்திருந்த போபால் மக்களுக்கு இன்று இழைக்கப்பட்டிருப்பது அன்றைய படுகொலையைக் காட்டிலும் கொடிய அநீதி. இந்த அநீதி இந்தியாவின் சட்டமாகவே மாறவிருக்கிறது. “இந்திய அரசு அமெரிக்காவிடம் வாங்கவிருக்கும் அணு உலைகள் வெடித்து நாளை இலட்சக் கணக்கான இந்தியர்கள் செத்தாலும், அதற்காக் அமெரிக்க முதலாளிகளிடம் நட்ட ஈடு கூட கேட்க மாட்டோம்” என்கிறது மன்மோகன் சிங் அரசின் அணுசக்தி மசோதா. தற்போது யூனியன் கார்பைடு நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருக்கும் டௌ கெமிக்கல்ஸ் , அன்று வியட்னாம் மக்களைக் கொல்வதற்கு நாபாம் தீக்குண்டுகளை அமெரிக்காவுக்கு தயாரித்து கொடுத்த நிறுவனம்.

இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு இந்தக் கொலைகார நிறுவனத்தை வருந்தி அழைத்துக் கொண்டிருக்கிறது மன்மோகன் அரசு. “பன்னாட்டு முதலாளிகளின் இலாபத்துக்காக இந்திய மக்களைக் கொல்வதும் மண்ணை விட்டு விரட்டுவதும் நம் தொழில்களை அழிப்பதும் உரிமைகளைப் பறிப்பதும் தான் நீதி: பன்னாட்டு முதலாளிகள் சொல்வது தான் சட்டம்; அவர்கள் கொழுப்பது தான் நாட்டின் முன்னேற்றம்” என்ற இந்திய அரசின் கொள்கையை அம்பலமாக்கியிருக்கிறது போபால் படுகொலை.

காலனியாதிக்கத்தின் கோர முகத்தை அம்பலமாக்கி, பகத்சிங் போன்ற விடுதலை வீரர்களை உருவாக்கியது ஜாலியன் வாலாபாக். இந்திய சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் பொய்முகங்களையும், மறுகாலனியாதிக்கத்தின் உண்மை முகத்தையும் உரித்துக் காட்டியிருக்கிறது போபால்.

நீதி வேண்டுமா?.
நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை!. இது போபால் படுகொலை நமக்கு கற்பிக்கும் பாடம்.
நீதி வேண்டுமா ?.. புரட்சி ஒன்று தான் பாதை ..

கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!
முற்றுகை

ஆகஸ்டு-15, காலை 10.30 மணி,

டௌ கெமிக்கல்ஸ் அலுவலகம், கிண்டி, சென்னை.
அனைவரும் வருக‌
-
மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி
-

தொடர்பு கொள்ள:
ம.க.இ.க : 94446 48879
பு.ம.இ.மு : 94451 12675
பு.ஜ.தொ.மு : 94448 34519
பெ.வி.மு : 98849 50952
வினவு : 97100 82506
*****
நன்றி : படம் உதவி - கலகம்
நன்றி : வினவு

August 9, 2010

ரெட் சன் - நக்சல் பகுதிகளில் ஒரு பயணம்!


நன்றி : தினமணி - நூல் மதிப்புரை

நூல் ஆசிரியர் : சுதீப் சக்கரவர்த்தி,

தமிழில் : அ. இந்திராகாந்தி

*****

பத்திரிக்கையாளரான நூலாசிரியர் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளதாக கூறப்படும் பகுதிகளில் பயணம் செய்து பலரைச் சந்தித்து, அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டு எழுதப்பட்டுள்ள நூல். மாவோயிஸ்டுகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும், அவர்களின் இன்றைய நிலையையும் மிக துல்லியமாக நூல் படம்பிடித்து காட்டுகிறது.

"மாவோயிசம் நமது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் மிகப் பெரிய பிரச்சனை அல்ல; மாறாக ஏழ்மை, சரியான ஆட்சியின்மை, மோசமான நீதி மற்றும் ஊழல் தான் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் ஆகும். ஒருநாடாக இந்திய அரசு செய்வதற்குத் தவறியவற்றைப் பிரதிபலிக்கும் வெறும் கண்ணாடி மட்டும் தான் இந்திய மாவோயிஸ்டுகள்" என்ற அடிப்படையில் பல விவரங்களை நூல் தருகிறது.

சம காலத்தில் நாம் எதிர்கொண்டிருக்கும் மிக முக்கியமான ஒரு பிரச்சனைப் பற்றிய விரிவான ஆய்வாக, தகவல் களஞ்சியமாகத் திகழும் குறிப்பிடத்தக்க நூல்.

பக்கம் : 424 விலை : ரூ. 250/-

வெளியீடு : எதிர் வெளியீடு, பொள்ளாச்சி - 1.

04259 - 226012

***

சென்னையில் புத்தகம் கிடைக்குமிடங்கள் :

கீழைக்காற்று பதிப்பகம், 10, ஔலியா சாகிப் தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002 தொலைபேசி – 044 2841 23677

நியூ புக் லேண்ட், 52சி, வடக்கு உஸ்மான் சாலை, தி. நகர் சென்னை - 600017.
தொலைபேசி - 044 -2815 6006

August 6, 2010

பொம்மைகளும்! விளையாட்டு பொருட்களும்!


நூறு பொருட்கள் கேட்டால்
அவள் அழுது அழுது - அல்லது
நாங்கள் அழுது அழுது
ஒன்றைத்தான் வாங்கித்தர முடிகிறது!

பொம்மைகளின் வழியே
யார்? யார்? பரிசாய் தந்தது என
அடையாளம் சொல்லிவிடுகிறாள்!

பொம்மைகளை கொண்டு
புதியவர்களை - எளிதாய்
நண்பர்களாக்கிவிடுகிறாள்!

எத்தனைமுறை கண்டித்தாலும்
கண்டுகொள்ளாமல் - வீடு முழுவதும்
பொம்மைகளை பரப்பிவிடுகிறாள்!

உடைந்த வளையல் துண்டு,
நாலு சக்கரம் இழந்த கார் - என எல்லாமும்
விளையாட்டு பொருட்களாகிவிடுகின்றன!

பொம்மைகளோடு விளையாட வைத்து
சமயங்களில் எங்களையும்
குழந்தைகளாக்கிவிடுகிறாள்!

பொம்மைகள் வாங்கிவராத விருந்தினர்கள்
விளையாட்டு பொருட்கள் இல்லாத குழந்தைப்பருவம்
நினைவுகள் - அவ்வப்பொழுது
வந்துபோவதை தவிர்க்கவே முடியவில்லை!

July 30, 2010

பட்டினியில் வதங்கும் மக்களும்! வீணாய் போகும் உணவும்!


இந்திய உணவு கழகம் விவசாயிகளிடமிருந்து அரிசி, நெல், மக்காசோளம் என பல விளைபொருட்களை கொள்முதல் செய்கிறது. ஆனால் அதை முறையாக பாதுகாப்பதற்கு குடவுன்கள் இல்லாததால், வெயிலிலும், மழையிலும் காயவிட்டு விடுகிறார்கள். இதனால் ஏற்படுகிற இழப்பு எவ்வளவு தெரியுமா? வருடத்திற்கு ரூ. 50000 கோடிக்கும் மேலே! அளவில் மதிப்பிட வேண்டுமென்றால், கொள்முதல் செய்யும் பொருட்களில் 20% வீணாய் போகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அறியும் சட்டம் மூலம் உணவு இந்திய உணவு கழகம் சொன்ன பதில் என்ன?

1997 முதல் 2007 வரையிலான கடந்த 10 ஆண்டுகளில் வீணாகிப்போன பொருட்களின் மதிப்பு - 10 லட்சம் டன். அதை அப்புறப்ப்டுத்த சில கோடிகள் செலவானது.

10 லட்சம் டன் உணவை கொண்டு, 1 கோடி இந்தியருக்கு 1 வருடத்திற்கு வயிறார சாப்பாடு போடலாம் என்கிறார்கள்.


இப்படி வீணாய் போவதைப் பற்றி நடந்த வழக்கில், சமீபத்தில் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து, சில கேள்விகளுக்கு அரசிடம் பதிலளிக்க சொல்லியிருக்கிறார்கள்.

"மக்கள் பசியால் வாடும் பொழுது, ஒரு கோதுமையை வீணடித்தால் கூட குற்றம் தான். பாதுகாப்பதற்கு குடவுன் இல்லையென்றால், குறைந்தபட்சம் தார்ப்பாலின் போட்டு மூட வேண்டியது தானே! உங்களால் பாதுகாக்க முடியவில்லை யென்றால், பசியால் வாடும் மக்களுக்கு சாப்பிட கொடுங்கள்"

அதிகாரிகளுக்கும், அரசுக்கும் எத்தனை கேள்விகள் கேட்டாலும் உரைக்காது. நாமும் பல காலம் பார்த்து கொண்டு தானே இருக்கிறோம்.

பசியால் வாடும் மக்கள் உணவு கிடங்குக்குள் உள்ளே புகுந்து, உணவை கைப்பற்றுவது தான் ஒரே தீர்வு. அந்த நல்ல நாள் எந்த நாளோ?!


தொடர்புடைய சுட்டிகள் :

http://www.deccanherald.com/content/84222/food-grains-rot-fci-godowns.html

http://sikhsangat.org/2010/07/rs-800-cr-wheat-goes-waste-annually-why-not-let-farmers-exports-their-crops-in-a-democratic-way/

வயிற்றில் அடிக்கிறார்களே! - தினமணி தலையங்கம்

July 26, 2010

நலிவடையும் நகைத் தொழிலாளர்கள்!


முன்குறிப்பு : "செய்கூலி இல்லை; சேதாரம் இல்லை" என்கிற விளம்பரத்தைப் பார்த்தால், எப்பொழுதுமே எரிச்சல் வருகிறது. செய்வதற்கு ஏன் கூலி இல்லை? இதையே காரணம் காட்டி, நகை செய்யும் தொழிலாளர்களின் கூலியை குறைத்து தருகிறார்கள் என்று முன்பு ஒருமுறை ஒரு செய்தி கண்ணில்பட்டது. அதற்கு பிறகு, செய்திகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நகைக்கடை தொழிலாளர்கள் சிலர் தற்கொலை செய்தி படிக்கும் பொழுது இது தொடர்பாக தரவுகள் தேடி எழுத வேண்டும் என நினைத்ததுண்டு. தினமணியில் வந்த இந்த கட்டுரை நகைக்கடை தொழிலில் உள்ள சில பிரச்சனைகளை தொட்டுக்காட்டுகிறது. படியுங்கள். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

*****

நகைத் தொழிலை மற்ற தொழிலைப்போல சாதாரணமாகக் கருதிவிட முடியாது.​ அதிக நுட்பமும்,​​ வேலைப்பாடும் மிகுந்த இத் தொழில்,​​ தமிழகத்தில் பாரம்பரியமிக்க தொழிலாகவும்,​​கலையின் சிகரமாகவும் கருதப்படுகிறது.​ தமிழகத்தில் நகைத் தொழிலில் சுமார் 10 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.​ இவர்கள் நகைத் தொழிலைப் பாரம்பரியமாகச் செய்து வருபவர்களே.​ கலை சார்ந்தும்,​​ கலாசாரம் சார்ந்தும் இருக்கும் இத் தொழில்,​​ இப்போது அழிவை நோக்கி வேகமாகப் பயணிக்கிறது.

​ உலக அரங்கில் இந்திய நாட்டு நகைகளுக்கு அதிக மதிப்பும்,​​ நல்ல வரவேற்பும் இருக்கிறது.​ ஆனால்,​​ அதை உருவாக்கும் தொழிலாளர்களுக்கு மதிப்பும்,​​ வரவேற்பும் அண்மைக்காலமாகக் குறைந்து வருகிறது.​ நகைத் தொழிலில் பல ஆயிரம் கோடி பணம் புழக்கத்தில் இருந்தாலும்,​​ இந்தத் தொழில் ஈடுபடுகிறவர்கள் வறுமையிலேயே இருக்கின்றனர்.

​ நகைத் தொழிலாளர்கள் வாழ்க்கையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வளம்கூட இப்போது இல்லை.​ இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.​ முக்கியமாக,​​ ஆன்-லைன் வர்த்தகமும்,​​ இயந்திரமயமாக்கலும் இத் தொழிலில் ஈடுபடுகிறவர்களை வறுமைக்கு வேகமாக இழுத்துச் செல்கிறது.

​ பல சாகசங்களைச் செய்து ஒருவர் தொழிலை நிமிரச் செய்தாலும்,​​ ஒரு காலகட்டத்தில் அவர் பெரும் நஷ்டத்திலும்,​​ கடனிலும் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படுவதாக அத் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் கூறுகிறார்கள்.

​ கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கம் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து ​ வருவதால்,​​ சிறுதொழிலாகச் செய்த பலர், வேறு தொழிலுக்குச் செல்கின்றனர்.​ இன்னும் ​ சிலர் வேறுவழியின்றி இத் தொழிலைச் செய்து வருகின்றனர்.​ விலை உயர்வால் சாதாரண மக்களுக்குத் தங்கம் கனவாகி வருவதால்,​​ இவர்களுக்கு சாதாரணமாகக் கிடைக்கும் வேலைகள் குறைந்துள்ளன.​ இதன் காரணமாக முகூர்த்தம்,​​ பண்டிகை காலங்கள் தவிர்த்து மற்ற காலங்களில் தொழிலாளர்கள் வேலையின்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

​ 10 ஆண்டுகளுக்கு முன்புவரை இத் தொழிலில் ஒரு சில பெரிய நகைக் கடைகள் ​ மட்டுமே இருந்தன.​ ஆனால் இன்று அப்படியில்லை.​ தொழில் துறையில் பெரிய அளவில் கால்பதித்திருக்கும் தனியார் நிறுவனங்கள்,​​ நகை தயாரிப்புத் தொழிலிலும் போட்டிபோட்டு இறங்கி வருகின்றன.​ இந் நிறுவனங்களிடம் எந்தவிதத்திலும் போட்டியிட முடியாமல் சிறிய அளவில் நகைப் பட்டறை வைத்து,​​ தொழில் செய்து வந்தவர்கள் விழிபிதுங்கிய நிலையில் உள்ளனர்.

​ இது ஒருவகை நெருக்கடி என்றால்,​​ ஆன்-லைன் வர்த்தகம் மற்றொரு வகை நெருக்கடியைக் கொடுக்கிறது.​ தங்க வர்த்தகம் ஆன்-லைன் வர்த்தகத்தில் சேரும்வரை பண்டிகைக் காலங்கள்,​​ முகூர்த்தங்கள் போன்ற நாள்களில் மட்டுமே தங்கம் விலை உயர்ந்து வந்தது.​ ஆனால்,​​ இப்போது ஆன்-லைன் வர்த்தகத்தால் காலையில் ஒரு விலை,​​ மாலையில் ஒரு விலை என தங்கத்தின் விலை சூதாட்டம் போன்று நிலையில்லாமல் இருக்கிறது.​ பெரிய வியாபாரிகளுக்கு இந்த விலை உயர்வும்,​​ குறைவும் பொழுதுபோக்காக மாறியுள்ள நிலையில்,​​ நகைத் தொழில் மூலம் வாழ்க்கை நடத்திவந்த தொழிலாளர்கள் தெருவுக்கு வந்துள்ளனர்.

​ சொந்தமாக நகைப் பட்டறை வைத்து முதலாளியாக இருந்த பலர்,​​ இப்போது பெரிய நகைக் கடைகளில் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர்.​ மேலும்,​​ நகைத் தொழிலாளர்கள் பரம்பரையாகச் செய்து வந்த தங்களது தொழிலுக்கு வேறு வழியின்றி விடை கொடுத்து,​​ இன்று கட்டடத் தொழிலாளி,​​ ஹோட்டல் ஊழியர் என வேறு தொழிலுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது.

​ இத் தொழிலில் இப்போது இளைய தலைமுறையினர் குறைவான அளவே காணப்படுகின்றனர்.​ இதனால் நகைத் தொழிலின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.​ இத் தொழிலின் பெரும் பகுதி,​​ இப்போது பெரிய வணிக நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதால்,​​ நகைத் தொழிலாளர்கள் வாழ்க்கையும் அந் நிறுவனங்களை மையமாக வைத்தே சுழலத் தொடங்கியுள்ளது.

​ இதில் சில நகைத் தொழிலாளர்கள் கந்துவட்டிக்குக் கடன் வாங்கித் தொழில் செய்து,​​ கந்து வட்டியிலேயே தங்களது வாழ்நாள் சம்பாத்தியம் முழுமையையும் இழந்து வரும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.​ சிலர் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவமும் அண்மைக்காலமாக அதிகமாக நடைபெறுகின்றன.

​ நகைத் தொழிலில் இனிமேல் நல்ல எதிர்காலத்துக்கு வாய்ப்பு இல்லை எனக் கருதப்படுவதால்,​​ இத் தொழிலுக்கு முன்புபோல இளைய தலைமுறையினர் வருவது இல்லை.

இன்னும் சில ஆண்டுகளில்,​​ இளைய தலைமுறையினரே இத் தொழிலில் ஈடுபடாத சூழ்நிலை ஏற்படலாம்.

பெரிய வணிக நிறுவனங்கள் நகையைத் தயாரிப்பது,​​ விற்பது என முழுமையாக வாணிப நோக்கில் செயல்படுவதால்,​​ நகைத் தொழிலில் கலாசாரம் சார்ந்த விஷயங்கள் மறைந்து வருகின்றன.​

​ இத் தொழிலில் ஈடுபடுகிறவர்களை காப்பாற்ற,​​ தங்க விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்.​ ​ ஏற்கெனவே இருந்த தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

பொற்கொல்லர் நலவாரியத்தின் நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்த வேண்டும்.​ சிறு நகைத் தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்.​ இந் நடவடிக்கைகளை எடுத்தால்,​​ ஓரளவு இத் தொழிலில் ஈடுபடுகிறவர்களைப்​ பாது​காக்​க​லாம்.

​ அறிவியலின் வளர்ச்சியை வரவேற்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருந்தாலும்,​​ நமது கலையையும்,​​ கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமையும் நமக்கு உண்டு.​ நகைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு அவர்களோடு நின்றுவிடும் எனக் கருதிவிட முடியாது.​ அவர்கள் இன்று பாதிக்கப்படுகிறார்கள் என்றால்,​​ அந்தப் பாதிப்பு நாளை மற்ற தொழிலுக்கு வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.


- நன்றி : கே. வாசுதேவன், தினமணி, 23/07/2010

July 21, 2010

ஏழாம் நாளிலும் மார்ச்சுவரியில் காத்திருந்த ஜிதேந்தர்!


அரசு மருத்துவமனை. மனிதர்களின் அழுகுரல்களால் மார்ச்சுவரி சூழப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்த பொழுது, உடலில் புதிதான அதிர்வுகள் எழுவதை உணர்ந்தேன். இப்படியே திரும்பி போய்விடலாமா என நினைத்தேன். பார்த்தே ஆக வேண்டும்.

அருகே நெருங்கிய போழுது, அந்த இளம் உடல் குளிரில் நன்றாக விரைத்து கிடந்தது. முதல்நாள் பார்த்ததை விட, இன்று வித்தியாசமானதாக இருந்தது. உறவினர்கள் யாரும் வராததாலும், உரிய ஆவணங்கள் தரப்படாததாலும்.... ஆறாம் நாளிலும் மார்ச்சுவரிலேயே இருந்தது.

****

வழக்கமான வேலைகளில் மூழ்கியிருந்தேன். நுண்பகல் வேளை. என் முதலாளியிடமிருந்து அந்த அவசர அழைப்பு வந்தது. செய்தி சொன்னதும், அதிர்ச்சியாய் இருந்தது. நான் இந்த நிறுவனத்தில் வேலை சேர்ந்ததில் இருந்து, பல தொழிலாளர்களின் கைவிரல்கள், கை துண்டித்திருப்பதை எல்லாம் பார்த்திருக்கிறேன். கண் போனதை பார்த்திருக்கிறேன். முதன்முறையாக உயிர் போயிருக்கிறது. உடனே அந்த நிறுவனத்திற்கு போய் ஆக வேண்டிய வேலைகளை போய் பாருங்கள்! என்றார். உடனடியாக விரைந்தேன்.

****

அந்த தொழிற்சாலையில் இருபது, முப்பது பேர் குழுமியிருந்தார்கள். எல்லோர் முகத்திலும் இறுக்கம் பரவிகிடந்தது. கூட்டம் விலக்கி உள்ளே நுழைந்து பார்த்தேன். இருபது வயது இளைஞன் ஒருவனை அவசரம், அவசரமாக காரில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். மின்சார ஷாக்கினால், உடல் நிறம் மாறியிருந்தது. உடலில் உயிரே இல்லை. இருப்பினும் மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்கள். அவர் ஏற்கனவே இறந்து போனதாக மருத்துவர் உறுதிப்படுத்திய தகவல் இருபது நிமிடத்தில் வந்தது.

அந்த தொழிற்சாலை துவங்கி 7 ஆண்டுகள் தான் ஆகியிருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த வேலை செய்து கொண்டிருந்த மூவர் பல இரும்பு தகடுகள் சரிந்து விழுந்து இறந்து போனார்கள். இப்பொழுது மீண்டும் ஒரு விபத்து. அந்த தொழிற்சாலை எனக்கு இப்பொழுது கொலைக்களம் போல காட்சியளித்தது.

****

இந்த விபத்து குறித்து... நிறுவனங்களுக்காக இருக்ககூடிய அரசு தரப்பு ஆய்வாளர் அறிக்கையை பின்வருமாறு எழுதினார்.

"எந்தவித சுயபாதுகாப்பு சாதனமும் (Hand Gloves, Safety shoes and Googles) அணியாமலும், தகுந்த மேற்பார்வையாளரின் மேற்பார்வை இன்றியும் ஈடுபட்டதால்...இந்த மரண விபத்து ஏற்பட்டது. இந்த தொழிலாளி வட இந்தியாவை சேர்ந்தவர். போதிய தமிழறிவு இல்லாதவர். இது போன்ற தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் பொழுது, அவருக்கு போதிய தமிழறிவு
மற்றும் தொழிற்பயிற்சி இல்லாத காரணத்தினால் இம்மரண விபத்து ஏற்பட்டது. தற்காலிக மின் இணைப்பு பெற்று பணி மேற்கொள்ளும் காலங்களில் மின் இணைப்பைச் சார்ந்த ஸ்விட்ச் போர்டு, பிளக் மற்றும் ஒயர் இவை யாவும் ISO சான்றிதழ் உள்ளனவா, சரியாக பொருத்தப்பட்டுள்ளவையா தகுந்த installation செய்யப்பட்டுள்ளதா என்று அறியாமல் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இம்மரண விபத்து ஏற்பட்டுள்ளது. இம்மரண விபத்து மேற்காணும் பிரிவு 41வது விதி 61 & F யின் படி கடும் முரண்பாடாகும்"

*****

இறந்தவரின் பெயர் : ஜிதேந்தர் மோட் வயது : 20

முகவரி : , சுனேலா, இராம்நகர், கட்ராம்பூர் போஸ்ட், தியேரியா ஜில்லா, உத்திரப்பிரதேசம்.

***

ஜிதேந்தரை சேர்த்துவிட்ட ஒப்பந்தக்காரர் மூலமாக ஊருக்கு தகவல் அனுப்பியும், உடனடியாக பதில் ஏதும் இல்லை. இறந்தவருக்கு அப்பா இல்லை. மூன்று அண்ணன்கள். மூவரும் ஹரியானா, குஜராத், டெல்லி என தொலைதூரங்களில் வேலை செய்கின்றனர். தொடர்பு கொள்ளவே இரண்டு நாள்களாகிவிட்டது என பதில் சொன்னார்கள். ஊரில் இருப்பதோ, அம்மாவும், அண்ணனின் குடும்பங்கள் மட்டுமே.

****

தொடர்ச்சியாக முயற்சி செய்து, ஐந்தாம் நாள் உரிய ஆவணங்கள் தபாலில் வந்து சேர்ந்தன. அந்த குடும்ப ரேசன் அட்டையை பார்த்ததும்... மனம் கனத்துப் போனது






கமலா தேவி - தாயார் - வயது 60

சந்தோஷ்குமார் - மகன் - வய்து 30
மீனாகுமாரரி - மருமகள் - வ்யது 24
பிகாஸ் - மகன் - வயது 7
பிஜி - மகன் - வயது 3

ராஜ்குமார் - மகன் - வயது 25
தேவி - மருமகள் - வயது 22
நரேஸ் - மகன் - வயது 3
சமியா - மகள் - வய்து 1

தர்மேந்திரர் குமார் - மகன் - வயது 23
அலோகா - மருமகள் - வயது 21
ஆதித்தா - மகன் - வயது 2
மாதுரி - மகள் - வயது 1

ஜிதேந்தர் மோட் - மகன் வயது - 20

அல்கா - மகள் - வயது 15
கிரண் - மகள் - வயது - 12

மூன்று அண்ணன்கள், அண்ணன்களின் குடும்பங்கள், இரு தங்கைகள் என சொந்தங்கள் சூழ, குடும்ப அட்டையில் மத்தியில் இருந்தார். 15பேர் கொண்ட பெரிய குடும்பம் இருந்தும், ஆறு நாள் ஆகியும் ஒருவர் கூட வந்து சேரவில்லை. அனாதையாக மார்ச்சுவரியில் ஜிதேந்தர் மார்ச்சுவரியில் கிடக்கிறார்.

****

ஏழாம் நாள். மூத்த அண்ணன் மட்டும் டெல்லியிலிருந்து, ரயிலில் வந்து சேர்ந்தார். அப்படியே கையோடு அழைத்துப் போய், உடலைப் பெற்று, மின் தகனத்தில் எரித்தார்கள். இரவு 9 மணி அளவில், அலுவலகம் வந்து சேர்ந்தார்.

கொஞ்ச நேரம் அமைதி. ஏதும் பேச்சில்லை. பிறகு பேச ஆரம்பித்தார். "எவ்வளவு தருகிறீர்கள்?" ஒரு தொகை சொல்லப்பட்டு, அது கொஞ்சம் அதிகப்படுத்தப்பட்டு உடனடியாக தரப்பட்டது. பணம் தந்ததற்காகவும், இனி வேறும் ஏதும் கேட்கமாட்டோம் என உறுதியளித்து எழுதப்பட்டிந்த பத்திரத்தில் கையெழுத்திட்டார்.

ஜிதேந்தர் சம்பந்தமான கோப்பு மூடப்பட்டுவிட்டது.

***

சில நாட்கள் கழித்து... வேறு ஒரு தேவைக்காக அந்த கோப்பை திறந்து பார்த்த பொழுது... சில குறிப்புகள் பென்சிலால் ஒரு தாளில் குறிக்கப்பட்டிருந்தன. அவை :

Police cons. 2500
Police Diesel 1000
Po. writter 1500
Po. photo 500
Po. stationery 200

Po. Inspector 40***
Factory Inspector 50***

என பட்டியல் நீண்டு கொண்டு சென்றது.

****

பின்குறிப்பு : இந்த மரணம் நிகழ்ந்து... சில மாதங்களாகிவிட்டன. ஜிதேந்தர் குறித்த நினைவுகளிலிருந்து. என்னால் இன்றும் மீள முடியவில்லை. படித்த பிறகு, உங்களையும் பல மாதங்கள் நிச்சயம் தொந்தரவு செய்வான்.

July 18, 2010

இயல்பாய் நடந்த திருமணம்!

முன்குறிப்பு : சமீபத்தில் நடந்த ஒரு தோழரின் எளிமையான "வாழ்க்கைத்துணை ஏற்பு விழா"வில் கலந்து கொண்டேன். அந்த திருமணத்தைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். அதற்குள் தோழரின் அலுவலக நண்பரே அதைப் பற்றி எழுதிவிட்டார். உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள். அவருக்கு நமது நன்றிகள்.

****

கடந்த வாரம், எனது அலுவலகத் தோழனின் திருமணத்தில் கலந்துகொண்டது முதலே அதுகுறித்து ஒரு பதிவு போட வேண்டுமென மனது தூண்டிக்கொண்டே இருந்தது! (அதுக்கு வேற வேலை என்ன!). இன்றுதான் அதற்கான நேரம் வாய்த்தது.

அப்படியென்ன விஷேசம் அந்தத் திருமணத்தில் எனக் கேட்கத் தோன்றும். ஒரு விஷேசமும் இல்லையென்பதே அதில் விஷேசம்! ஆம். வாசலில் மணமக்களின் பெயர் இருந்தது, ஆனால், அதில் மணமகனின் பெயர் முதலாவதாக இல்லை! வரவேற்க வரவேற்பாளர்கள் இருந்தார்கள், ஆனால், மேளதாளங்கள் இல்லை! அருந்த குளிர்பானங்கள் கொடுத்தார்கள், ஆனால், அதில் கோக், பெப்சி இல்லை! மேடையில் புகைப்படக்காரர்கள் இருந்தார்கள், ஆனால், புரோகிதரோ, ஓமகுண்டப் புகையோ இல்லை! மணமக்கள் புத்தாடையில் வீற்றிருந்தார்கள், ஆனால், அதில் பகட்டோ, மினுமினுப்போ துளியும் இல்லை! மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டார்கள், ஆனால், தாலி கட்டவில்லை! அன்பளிப்பு வாங்கினார்கள், ஆனால், அதில் புத்தகங்களைத் தவிர வேறெதுவும் இல்லை!

அப்புறம், சொல்லிக்கிறமாதிரி அதில் என்னதான் இருந்தது? காதல் இருந்தது, பெற்றோரின் சம்மதமும் கலந்திருந்தது. அதற்குச் சாட்சியாக மணமக்களைப் பெற்றவர்களும் மணமக்களோடு மேடையில் அமர்ந்திருந்தார்கள். ஜாதி கடந்து, மதம் கடந்து, பெரியாரின் சுயமரியாதைப் பாதையிலே அத்திருமணம் நடைபெற்றது. மணமக்களை வாழ்த்திப்பேசிய மணமகனின் தாத்தா வாரியாரை நினைவுபடுத்தும் விதமாக நெற்றி நிறைந்த திருநீற்றுடன் இருந்தார். தனது பேரனின் திருமணத்தைப் பார்த்து, பரவசத்துடன் வாழ்த்துரை வழங்கினார். அவர் பேரனுக்கு அளித்த அன்பளிப்பு, காந்தியின் சுயசரிதைப் புத்தகம்!

பெரியவர்கள் வாழ்த்துரையுடன், மணமக்களின் உறுதிமொழியுடன், சமுதாயப் பெரியவர் தாலி எடுத்துக் கொடுத்து நிறைவுபெறும் தற்கால அரைகுறைச் சீர்திருத்தத் திருமணங்களைப் போலல்லாமல் முழுமையான சீர்திருத்தத் திருமணமாக நடைபெற்றது. ஆம், இத்திருமண விழாவில் மணமக்களும் ஏற்புரை நிகழ்த்தினார்கள். ஒவ்வொரு நிகழ்விலும், மணமகளுக்கு முன்னுரிமை தரப்பட்டது.

அரைகுறை சீர்திருத்தத் திருமணங்களில் புரோகிதர், ஓமகுண்டச் சடங்கு சம்பிரதாயங்கள் மட்டுமே புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால் இத்திருமணத்தில் வரதட்சணை புறக்கணிக்கப்பட்டுள்ளது. மேளதாளங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, தாலி புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் முதல்வர்போல மணமக்களுக்கு வழங்கப்படும் படாடோபங்கள், வெட்டிச் செலவுகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளன. வந்திருந்த அனைவருக்கும் மணமக்கள் வீட்டாரால் வழங்கப்பட்ட அறுசுவை விருந்து உபசரிப்புடன் விழா இனிதே நிறைவுபெற்றது. திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு தாம்பூலப் பைக்குப் பதிலாக சுயமரியாதைத் திருமணங்கள் ஏன் வேண்டுமென்ற, தந்தை பெரியாரின் கருத்துக்கள் அடங்கிய சிறு புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

திருமணத்தில் கலந்துகொண்ட பலரும், இத்திருமண விழா மிகவும் வித்தியாசமாக நடைபெற்று வருவதாக தவறாமல் குறிப்பிட்டார்கள். பின்பு ஏற்புரை நிகழ்த்திய மணமகன், இவ்விழா இயல்பாக நிகழும் திருமண விழா தான் என்றும், இது வித்தியாசமாகப்படுவது நம் சமூகத்தின் அவல நிலை என்றும் சுட்டிக்காட்டியது சிந்திக்கத்தக்கதாக இருந்தது. ஜாதி, மதங்களும், அவற்றின் சடங்கு சம்பிரதாயங்களும் பிற்காலத்தில் வடிவமைக்கப்பட்டவை என்பதையும் குறிப்பிட்டார். ஆண், பெண் வாழ்க்கைத்துணையாக இணையும் இயல்பான நிகழ்விற்கு, நாம் பண்ணுகின்ற பகட்டு, பந்தா, சடங்கு சம்பிரதாயமென்ற அழிச்சாட்டியங்களை உணர வைத்தது அவரது பேச்சின் சாரம். உண்மைதானே?

July 15, 2010

வாங்கப்படாத பிறந்த நாள் கேக்!


மதியம் 2 மணி.நல்ல பசி. அலுவல் வேலை தொடர்பான பயணத்தில் இருந்தேன்.கையில் சாப்பாடு இருந்தாலும், சாப்பிட முடியாது. இன்னும் சாப்பிட ஒருமணி நேரமாவது ஆகும். தற்காலிகமாக பசியை அடக்க வேண்டுமே! என யோசித்த பொழுது... ஒரு பேக்கரி கண்ணில்பட்டது. உள்ளே நுழைந்து.. ஷோகேசில் வரிசையாக இருந்த அயிட்டங்களை நோட்டம் பார்த்த பொழுது.. இரண்டு நாளைக்கு முந்திய (13/07/2010) தேதியிட்ட ஒரு பிறந்த நாள் கேக் தென்பட்டது. பிறந்த நாள் வாழ்த்துடன், 'சுஜிதா' என பெயர் எழுதியிருந்தது. அன்று முழுவதும் அந்த கேக்கும், கேக்குரிய குழந்தையைப் பற்றிய நினைவுகளும் மனதில் ஓடிக்கொண்டே இருந்தன.

ஆர்டர் கொடுத்த கேக்கை ஏன் வாங்கவில்லை? அந்த குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போயிருக்குமோ? நான் பார்த்திருந்த பிறந்த நாள் கேக்குகளிலேயே அளவில் ஆக சிறியதாக இருந்தது. அங்கிருந்த மற்ற கேக்குகளை விடவும் சிறியதாக இருந்தது. ஆகையால், அது வசதியில்லாத ஒரு தொழிலாளி வீட்டுக் குழந்தையுடையதாக இருக்க நிறைய வாய்ப்புண்டு.நம்முடைய இந்த மோசமான வாழ்க்கை சூழலில் பிறந்த நாள் கொண்டாட்டம் தேவை தானா என பெற்றோர்களிடையே சண்டை வந்திருக்குமோ? அல்லது கொண்டாடுவதற்காக ஏதும் பணம் எதிர்ப்பார்த்து... வராமல் போயிருக்குமா?

சென்னைக்கு வந்த புதிதில்... என் நண்பர் ஒருவர் "தன் உறவினர் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் சும்மா தானே இருக்கிறாய்! வா போய் வரலாம்" என அழைத்தார். நெருங்கிய சொந்தங்கள் கலந்து கொள்கிற எளிமையான பிறந்தநாள் நிகழ்வாக இருக்கும் என நினைத்து தான் போனேன்.

ஒரு தரமான ஹோட்டலில் வண்டியை நிறுத்தும் பொழுது கேட்டேன். "இங்க என்ன?" "வா இங்க தான் நிகழ்ச்சியே!" என்றான். திருமணமே நடத்துவதற்கான விசாலமான அறையாக இருந்தது. அந்த ஹாலில் 125 லிருந்து 150 பேர் வரை கூடியிருந்தார்கள். அறை நிறைய அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திருமணத்திற்கு வருவதற்கான முஸ்தீபுகளுடன் அங்கு வந்திருந்தவர்கள் இருந்தார்கள். ஆளுக்கொரு கனமான பரிசு பொருளுடன் இருந்தார்கள். ஒரு வயது குழந்தை என்பதால்.. ஒரு விளையாட்டு பொருளை வாங்கி கையில் வைத்திருந்தேன். அந்த கூட்டத்திலேயே என்னுடைய பரிசு தான் ஆக சிறியதாக இருந்தது.

சாப்பாடு தடபுடல் தான். பபே சிஸ்டம். விசாரித்தால்.. ஒரு சாப்பாடு ரூ. 125/ யாம். வந்திருந்தவர்களின் எண்ணிக்கை குத்துமதிப்பாக 125 என எண்ணிக்கை வைத்துக்கொண்டால் கூட...ரூ. 16000/- ஆகிவிடும். இந்த பணம் இருந்தால்.. எங்க பகுதியில் மூன்று வகை கூட்டு, பொரியலுடன், 600 பேருக்கு சாப்பாடு போட்டு ஒரு கல்யாணத்தையே முடித்துவிடலாமே என எண்ணினேன்.

இப்படி அப்பாவித்தனமாய் (!) நினைப்பதற்கு நான் வளர்ந்த வந்த பின்னணியும் ஒரு காரணம். நான் தென் தமிழகத்தில் ஒரு முக்கிய நகரம் சார்ந்தவன். இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழும் பகுதியில் பிறந்து வளர்ந்தவன். அங்கு எந்த தொழிலாளி வீட்டிலும் எந்த குழந்தைக்கும் பிறந்த நாள் கொண்டாடி பார்த்தது இல்லை. கேள்விப்பட்டது கூட இல்லை. கேக் என்பது கூட அவர்கள் வாழ்வில் எங்கும், எப்பொழுதும் கடந்து சென்றது இல்லை. அந்த பகுதியில் ஒரு பேக்கரி கூட கிடையாது. திரும்பிய பக்கமெல்லாம் தேநீர் கடைகள் உண்டு. அங்கு வடை சுடுவார்கள். ஆமை (கடலைப்பருப்பில் செய்யும் ) வடை என்போம். தொழிலாளர்கள் ஒரு வடை சாப்பிட்டு, தேநீர் குடித்தால்.. வேலை நேரத்தில் இரண்டு மணி நேரத்தை எளிதாக கடந்துவிடுவார்கள். மெது(உளுந்த)வடை குறைவாக தான் சுடுவார்கள். பக்கத்து ஏரியா நடுத்தர மக்கள் வாழும் பகுதி. அங்கு நண்பனை பார்க்கும் பொழுது, அங்குள்ள தேநீர் கடைகளில் கவனித்திருக்கிறேன். அங்கு ஆமை வடை குறைவு. மெதுவடை அதிகமாக சுடுவார்கள். வடையில் கூட வர்க்கம் இருக்கத்தான் செய்கிறது.

அங்குள்ள குழந்தைகள் பிறந்த நாள் கேக் எல்லாம், படங்களில் பார்த்தது தான். அங்கு வாழும் யாருக்கும் பிறந்த நாள் என்பதே மறந்து போன ஒன்று. வயது கேட்டால் கூட... குத்துமதிப்பாக தான் சொல்வார்கள். அங்கு வாழும் ஒரு தொழிலாளிக்கு ஒரு நாள் வாழ்வே சிரமமாய் நகரும்பொழுது, பிறந்த நாள் ஏது? கொண்டாட்டம் ஏது? வசதி, வாய்ப்பு உள்ளவர்களுக்கு தான் வாழ்க்கையை சந்தோசமாக நகர்த்த கொண்டாட்டங்கள் தேவைப்படுகின்றன.

கடைசியாய் ஊருக்கு சென்ற பொழுது எங்கள் பகுதியில் பேக்கரி ஒன்றைப் பார்த்தேன். காரணம் அவலமானது. எங்கள் பகுதியில் இருந்த லட்சகணக்கான கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் தொழில் நசிந்து போனதால்.. கரூர், ஈரோடு, வெள்ளக்கோவில், சென்னிமலை என இடம் பெயர்ந்துவிட்டார்கள். இப்பொழுது எங்கள் பகுதி, நடுத்தர மக்களும், கந்துவட்டிக்காரர்களும் வாழும் பகுதியாகிவிட்டது. வசதியுள்ளவர்கள் வந்துவிட்டதால், பேக்கரியும் வந்துவிட்டது.

இப்படி பல லட்சகணக்கான மக்கள் பிறந்ததற்காக வாழ்ந்து தொலைத்துக் கொண்டிருக்கும் நாட்டில் தான், பிரமாண்டமான பிறந்த நாள் கொண்டாட்டங்களும், மிக ஆடம்பரமான திருமண நிகழ்ச்சிகளும் எந்தவித கூச்சமும், அருவருப்பும் இல்லாமல் நடந்து கொண்டிருக்கின்றன.