> குருத்து: 2023

December 11, 2023

வருங்கால வைப்பு நிதி திட்டம் - நிறுவனமும், தொழிலாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!



பி.எப் குறித்து தொழில் உலகம் டிசம்பர் இதழில் வெளிவந்துள்ளது.
இனி தொடர்ந்து எழுதுவேன்!
இதழை அறிமுகப்படுத்தி, தொடர்ந்து எழுதுவதற்கும் உற்சாகப்படுத்தும் GSTPS சொசைட்டியின் தலைவர் திரு. செந்தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நன்றி.

****


வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF)   நிறுவனமும், தொழிலாளர்களும் அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான அம்சங்கள் என்னென்ன?

வருங்கால வைப்பு நிதி திட்டம் ஏன் உருவாக்கப்பட்டது?

தொழிலாளர்கள் தங்கள் வாழ்நாளில்  வேலை செய்யும் பொழுது எதிர்கால நலனுக்காக சேமிக்கவேண்டும்.  அப்பொழுது தான் ஓய்வு பெறும் காலத்தில் சேமிப்பு தொகை மொத்தமாக வரும் பொழுது, அவர்களுடைய அத்தியாவசிய தேவைக்கும், ஓய்வு காலத்தில் ஓய்வூதியமாக ஒரு தொகை கிடைப்பது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.


இந்த திட்டம் எப்பொழுது உருவாக்கப்பட்டது? எவ்வளவு தொழிலாளர்கள் பலன் பெறுகிறார்கள்?


தொழிலாளர்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக 1952லிலேயே உருவாக்கப்பட்ட திட்டம் இது. இந்த திட்டத்தில், ஆகஸ்ட் 2023 நிலவரத்தின் படி, இணைந்துள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை மொத்தம் 7,53,297.  பயன்பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 6,88,82,855.  ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 76,63,766.


வ.வை. நிதி திட்டத்தில் எப்பொழுது இணையவேண்டும்?

 

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை துவங்கிய நாளிலிருந்து என்றைக்கு 20 பேர் வேலை செய்கிறார்களோ, அன்றைய நாளில் இருந்து இந்த திட்டத்தில் நிறுவனம் இணைவது கட்டாயமாகும்.  இதை அரசோ, பி.எப் நிறுவனமோ கண்டுபிடித்து நமக்கு சொல்வதில்லை. நாமே பி.எப் விதிகளைப் புரிந்துகொண்டு இணைதல் வேண்டும்.  இதை நிறுவனம் தெரிந்தும், தெரியாமலும் பதிவு பெறாமல் கடந்து செல்லும் பொழுது,  அடுத்து வரும் சில மாதங்களிலோ, வருடங்களிலோ நிறுவனம் பி.எப்பில் பதிவு செய்யும் பொழுது, கடந்த வந்த காலங்களுக்கும் நிறுவனம் பி.எப் நிதியை தன்னிடம் வேலை செய்த அத்தனை தொழிலாளர்களுக்கும் பி.எப் நிதியை செலுத்தவேண்டிய நெருக்கடிக்குள்ளாகும். பல தொழிலாளர்கள் வேலையை விட்டு போயிருப்பார்கள்.  அந்த தொழிலாளர்களிடம் அப்பொழுது மொத்தமாக பிடித்தம் செய்வதும் முடியாது. ஆகையால், தொழிலாளர்கள் செலுத்தவேண்டிய பணத்தையும் நிறுவனமே செலுத்தவேண்டிய நெருக்கடிக்குள்ளாகும்.  ஆகையால், உரிய காலத்தில் பி.எப் திட்டத்தில் இணைவது நிறுவனத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது.


ஒரு நிறுவனத்தில் 20 தொழிலாளர்களுக்கு குறைவாக தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.  அவர்களும் பி.எப் திட்டத்தில் இணைய முடியுமா?

சம காலங்களில் ஒரு பெரும் நிறுவனங்களில் ஒரு நிறுவனம் வேலை கொடுக்க கேட்கும் பொழுது, “பி.எப், இ.எஸ்.ஐ இருந்தால் வேலை தருவோம். இல்லையெனில் வேலை தர முடியாது” என்பதை தெளிவாக சொல்லிவிடுகின்றன.  ஏனெனில், அப்படி வேலை கொடுத்தால்,  அந்த நிறுவனத்தில் வேலை செய்கிற தொழிலாளர்களுக்கும் பி.எப், இ.எஸ்.ஐ செலுத்தவேண்டிய பொறுப்பு முதன்மை முதலாளிக்கு (Principal Employer)  வந்துவிடுவதால், அந்த பொறுப்பை கவனமாய் ஏற்பதில்லை.


ஆக, தொழில் வாய்ப்புகளை பெருக்கவேண்டுமென்றால், 
ஒரு நிறுவனத்திற்கு பி.எப் திட்டத்தில் பதிவு செய்யவேண்டியது 
அவசியமாகிறது. இதற்காகவே, 20 தொழிலாளர்களுக்கும் குறைவாக இருந்தாலும், 
பி.எப். திட்டத்தில் இணையலாம் என சட்டம் சொல்கிறது.  
அதற்கு பெயர் தன்னார்வத்துடன் விரும்பி இணையும் திட்டமாகும். 
பி.எப் சட்ட பிரிவு 1 (4) இன் கீழ் பதிவு செய்யலாம்.  நிறுவனத்தின் 
முதலாளியும், நிறுவனத்தில் வேலை செய்கிற அனைத்து 
தொழிலாளர்களும் கையெழுத்திட்டு ஓப்புதல் தரும் பட்சத்தில் இணையலாம்.
 
பி.எப் திட்டத்தில் எவ்வளவு நிதி தொழிலாளர் செலுத்தவேண்டும்? 
நிறுவனம் எவ்வளவு செலுத்தவேண்டும்?
 
ஒரு தொழிலாளியின் சம்பளத்தில் அடிப்படை சம்பளம் (Basic Salary), 
பஞ்சப்படி (Dearness Allowance) இரண்டிலும் வேலை செய்த நாட்களுக்கு 
சம்பளம் கணக்கிட்டு,  12% பிடித்தம் செய்யவேண்டும்.  நிறுவனமும் 
அதே அளவிற்கு 12% செலுத்தவேண்டும்.
 
உதாரணம் :  ஒரு தொழிலாளியின் சம்பளம் 15000. 
(இதில் அடிப்படை சம்பளம் எவ்வளவு, பஞ்சப்படி எவ்வளவு என்பதை 
துறைவாரியாக அரசு நியமித்து  சட்டம் (The Minimum Wages Act, 1948) 
இயற்றியுள்ளது. 
 
அதன்படி ஒரு கடைநிலை ஊழியருக்கான அடிப்படை சம்பளம், 
பஞ்சப்படி என்பதை  இப்படிப் பிரித்துக்கொள்ளலாம்.

சம்பளம் ரூ. 15000
வேலை செய்த நாட்கள் 30
மொத்த சம்பளம் ரூ. 15000

இதில் அடிப்படை சம்பளம் + பஞ்சப்படி ரூ. 12500 என கணக்கிட்டால், 
அதில் 12%  ரூ. 1500 என பிடித்தம் செய்யவேண்டும்.
 
நிறுவனமும் அதே அளவு 12% கணக்கிட்டு ரூ. 1500 யும் சேர்த்து, 
தொழிலாளியின் கணக்கில் ரூ. 3000 செலுத்தவேண்டும்.

இன்னும் வளரும்!
 
 
 
 

 

 

 

 

Garudan (2023) மலையாளம்


ஒரு கல்லூரியில் பண்பாடு நிகழ்வு போட்டிகள் நடைபெறுகின்றன. நிறைய மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள். அதில் ஒரு பெண் தன் வீட்டுக்கு போகும் வழியில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள்.


எதைச்சையாக அந்த இடத்திற்கு செல்லும் நபர்களால் அந்த பெண் காப்பாற்றப்பட்டாலும், கோமாவிற்கு போய்விடுகிறாள்.

வழக்கு போடப்பட்டு, நாயகனான போலீசு அதிகாரி விசாரணையை துவங்குகிறார். உடனடியாக யாரையும் கைது செய்யமுடியவில்லை. கைது செய்ய சொல்லி போராட்டங்கள் நடக்கின்றன. கொஞ்சம் சுற்றி வளைத்து ஆதாரங்களைத் திரட்டி ஒரு பேராசிரியரை கைது செய்து குற்றத்தை நிரூபித்து ஏழு ஆண்டுகள் தண்டனையையும் பெற்றுத் தருகிறார்கள்.

நிற்க. இதெல்லாம் எழுத்துப் போடுவதற்கு முந்தைய கதை. பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து அந்த பேராசிரியர் வெளியே வருகிறார். மீண்டும் வழக்கை விசாரிக்க அனுமதி கேட்கிறார். ஆச்சர்யப்படுகிறார்கள். அவரே சிறையில் இருந்த காலத்தில் வழக்கறிஞராக தேர்ச்சி பெற்று இருக்கிறார். அவரே தனக்காக வாதாடவும் செய்கிறார். ஒவ்வொரு சாட்சியத்தையும் உடைக்க துவங்குகிறார். தான் குற்றமற்றவர் என்பதை நிருபித்தாரா? அதற்கு பிறகு என்ன சிக்கல்கள் எழுந்தது என்பதை திரில்லாக சொல்லியிருக்கிறார்கள்.
****

பொதுவாக ஒரு குற்றத்திற்கு தண்டனை கிடைப்பது எல்லாம் இரண்டாம் பட்சம் தான். அந்த வழக்குக்கு வாய்தா, வாய்தா என அலைவதெல்லாம் தான் அதிகப்பட்ச தண்டனையாக இருக்கும். இதை அரசும் நீதிமன்றங்களும் தெரிந்தே தான் செய்கிறார்கள்.

ஒரு சொந்தத்தின் வீட்டு விசேசத்தில், தண்ணியைப் போட்டு தகராறு செய்து, ஒருவரை இன்னொருவர் குத்திவிட்டார். சொந்தக்காரர்களே என அக்கறைப்பட்டு உள்ளே புகுந்து விலக்கிவிட்டவர் எங்க அப்பா. அவரையும் கலாட்டா செய்த கோஷ்டி வழக்கில் சேர்த்து, பல வருடங்கள் வாய்தா, வாய்தா என அலையவிட்டார்கள். ஒவ்வொருமுறை வாய்தாவிற்கு போகும் பொழுது, மில்லில் விடுமுறை எடுக்க முடியாத சிக்கல். எடுத்தால், சம்பளம் பறிபோகும். எங்க அம்மா திட்டிக்கொண்டே இருப்பார். ஒரு வழியாய் வழக்கு முடிவுக்கு வரும் பொழுது, ”குத்திட்டு செத்தே போங்கடா! நான் விலக்கிவிட மாட்டேன்டா!” என அப்பா முடிவெடுக்கும் நிலைக்கு நீதிமன்றம் தள்ளிவிட்டது எனலாம்.

ஆனால், திரைப்படத்தில் எல்லாம் விரைவாக நடக்கும். பாலியல் பலாத்காரம், கோமா, மக்கள் போராட்டம் என்பதால், வழக்கை விரைவாக நடக்கும் என நாம் ஆறுதல் சொல்லிக்கொள்ளலாம்.

கதை கொஞ்சம் திரிஷ்யம் சாயல் தான். கதையில் கொஞ்சம் மெனக்கெட்டு வேலை செய்து, எடுத்திருக்கிறார்கள். ஆகையால் சுவாரசியமாய் இருக்கிறது.

படத்தில் கருடனுக்கு விளக்கம் சொல்லும் பொழுது தான் கொஞ்சம் ஜெர்க்கானது. நேர்மையான போலீசு அதிகாரியாக சுரேஷ் கோபி. நேர்மையாக இருப்பதினாலேயே வரும் சிக்கல்களை நன்றாக நடித்திருக்கிறார். (ஒரு சின்ன சதவிதம் பேர் அப்படி இருப்பது உண்மையிலேயே துறையில் இருப்பது, சிக்கிக்கொள்வது போல தான்!) அலட்டிக்கொள்ளாத பேராசிரியராக பிஜூ மேனனும் அருமையாக செய்திருக்கிறார். மற்றவர்களும் துணை நின்றிருக்கிறார்கள்.

படம் நவம்பரில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, இப்பொழுது பிரைமில் இருக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்.

பார்க்கிங் – தமிழ் (2023)


கணிப்பொறியாளரான நாயகன் கர்ப்பிணியாக இருக்கும் தன் துணைவியாருடன் சென்னையில் அந்த வீட்டின் மாடி வீட்டுக்கு புதிதாக குடிவருகிறார். கீழே ஒரு அரசு அதிகாரியாக இருப்பவர் தனது துணைவியார், கல்லூரி செல்லும் மகளுடன் வாழ்ந்து வருகிறார்.


பரஸ்பரம் அறிமுகமாகி உறவு நன்றாக நகரும் பொழுது, நாயகன் தன் தேவைக்கு ஒரு கார் வாங்குகிறார். கீழே காரை நிறுத்தும் பொழுது அரசு அதிகாரி பைக்கை நிறுத்துவதிலும் எடுப்பதிலும் சிரமப்படுகிறார். இதில் எழும் சின்ன வாய்த்தகராறு, இருவருக்கும் எழும் ஈகோ சிக்கலினால் வெடிக்க துவங்குகிறது.

பிறகு நடக்கும் களேபரங்கள் தான் கதை.
***

ஒரு உறவை ”தூரத்து சொந்தம்” என்பது போல பக்கத்து வீட்டு உறவுகளை “நெருங்கிய தூரம்” எனலாம் என்கிறார் மருத்துவர் ருத்ரன் உடல்நிலை சரியில்லை, அவசர உதவிக்கு எல்லாம் உறவுக்காரன், நண்பன் எல்லாம் வருவதற்கு தாமதமாகும். அக்கம் பக்கத்து வீட்டுக்காரன் தான் அவசரத்துக்கு உதவுவான். இந்த புரிதல் எப்பொழுதும் இருக்கவேண்டும். அதன் உறவின் எல்லைகளை சரியாக புரிந்து வைத்து கையாளவேண்டும்.

இல்லையெனில் இந்தப் படத்தில் வருவது போல சிக்கல்கள் தினசரி வரத்தான் செய்யும். மன உளைச்சல்களுக்குள்ளும் சிக்கிக்கொள்வோம். செய்தித்தாள்களில் பார்க்கும் பொழுது அக்கம் பக்கத்து உறவுகளின் வாய்த்தகராறு, அடிதடி சண்டைகள் வழக்குகள் வரை செல்வதைப் பார்க்கிறோம். அதிகப்பட்சம் கொலை வரைக்கும் கூட போகின்றன.

இப்படியான கதைகளை ஒன்றிணைத்து தான் இயக்குநர் இராம்குமார் பாலகிருஷ்ணன் கதை எழுதி, தொய்வில்லாத திரைக்கதையாக்கி இயக்கியும் இருக்கிறார். ஆனால் இறுதி காட்சிகளில் “டேய் ரெம்ப ஓவராத்தான் போறீங்க!” என சொல்ல வைத்துவிட்டார்கள். எதார்த்தத்தில் அப்படியே நடந்தாலும், படத்திலும் அப்படியே வைக்கவேண்டியதில்லை.

எம்.எஸ். பாஸ்கர் கலக்கியிருக்கிறார். ஹரிஷ் கல்யாண் அவருக்கு ஈடு கொடுத்திருக்கிறார் எனலாம். மற்றபடி, இந்துஜா, ரமா, இளவரசு என எல்லோருமே நன்றாக செய்திருக்கிறார்கள்.

திரையங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பாருங்கள்.

November 30, 2023

Under the Shadow (2016) பெர்சியன் மொழி உளவியல் திகில் படம்




1980 களில் ஈரானில் நடக்கிறது கதை. நாயகி, தன் கணவன், ஏழு வயது மகளுடன் ஈரான் தலைநகரில் வசிக்கிறார். நாயகி மருத்துவ கல்லூரி மாணவியாக 80களில் அரசுக்கு எதிராக நடந்த இடதுசாரி போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக, கல்லூரி படிப்பை தொடர முடியாது என முதல்வர் உறுதியாக மறுத்துவிடுகிறார்.


இப்பொழுது ஈராக்கிற்கும், ஈரானிற்கும் சண்டைகள் நடந்துகொண்டிருக்கிறது. மருத்துவராக இருக்கும் கணவனுக்கு இராணுவத்தில் வேலை செய்தே ஆகவேண்டும் என உத்தரவிடுகிறது. அவனின் ”அம்மா வாழும் பகுதியில் போர் இல்லை. ஆகையால் அம்மாவோடு போய் இரு!” என சொன்னால், அவளுக்கு அதில் உடன்பாடில்லை. பிடிவாதமாக அங்கேயே இருக்கிறாள்.

போர் தீவிரமாகிறது. அவள் வாழும் பகுதி கடுமையாக பாதிக்கப்படுகிறது. அலாரம் சத்தம் வந்தால், கீழே ஒரு நிலவறையில் போய் ஒளிந்துகொள்கிறார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் மக்கள் அங்கிருந்து மெல்ல மெல்ல வேறு இடங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். இறுதியில் மிஞ்சுவது நாயகியும், அவளின் குட்டிப்பெண் மட்டும்!

இதற்கிடையில் அங்கு அமானுஷ்யமான விசயங்கள் நடக்க துவங்குகின்றன. முதலில் குட்டிப்பெண்ணுக்கு தெரிகிறது. பிறகு அவள் கண்களுக்கும் தெரிய வருகிறது. பிறகு என்ன ஆனது என்பதை கொஞ்சம் பயமுறுத்தி சொல்லியிருக்கிறார்கள்.
****

ஒருமுறை அமானுஷ்ய விசயங்கள் இவளுக்கும் தெரிய வர, குழந்தையை தூக்கிக்கொண்டு, போட்டிருந்த ஆடையோடு தெருவில் ஓடிக்கொண்டிருப்ப்பாள். அங்கு வரும் போலீசு, அவளை அழைத்துக்கொண்டு போலீசு ஸ்டேசன் கொண்டு போய்விடும். என்ன பிரச்சனை என்று கூட கேட்காமல், நீ ஏன் உடலை மறைக்கும் துணி அணிந்துவரவில்லை. இப்படி அணியாததால் தான், எல்லா தப்புகளும் நடக்கின்றன என முதலில் அந்த ஆடையை கொண்டு வந்து கையில் தந்து அணிய சொல்வார்கள். பிறகு ஒரு பெரியவர் வந்து மத போதனையை செய்வார். பிறகு பெரிய மனது வைத்து, வழக்கு போடாமல், “எச்சரித்து” மட்டும் அனுப்பிவிடுவார்.

போர் என்பது கொடுமையானது. எல்லா நல்ல விசயங்களையும் துடைத்தெறிந்துவிடும். வாழ்வதற்கு அடிப்படை விசயங்கள் கூட கிடைக்காத துயரம், பயம் என எல்லா மோசமானவற்றையும் கொண்டு வந்துவிடும். ஆகையால், அமானுஷ்ய அம்சங்கள் படத்தில் வந்தால் கூட, உண்மையில் பேய் தான் போர் என்பேன். போர் சூழல் மறைந்துவிட்டால், பேயும் கூட காணாமல் போய்விடும்.

நாயகியும், அந்த பெண்ணும் தான் பிரதான பாத்திரங்கள். இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நெட் பிளிக்சில் இருப்பதாக இணையம் சொல்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் பாருங்கள்.

November 6, 2023

My fault (2023) ஸ்பானிஷ் படம்


நாயகி உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறார். நடுத்தர வர்க்க குடும்பம். அப்பா குடும்பத்தை டார்ச்சர் செய்த வழக்கிலோ, வேறு ஒரு வழக்கிலோ கைதாகி சில ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்.


நாயகியின் அம்மா இப்பொழுது ஒரு பெரிய பணக்காரரை திருமணம் செய்கிறார். அவருக்கும் கல்லூரி செல்லும் வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

நாயகிக்கு அம்மாவின் முடிவில் கொஞ்சம் கசப்பு இருக்கிறது. தனது காதலன், நண்பர்கள் எல்லோரையும் விட்டுவிட்டு வருவதில் அவளுக்கு மனசேயில்லை. நாயகியின் குடும்பம் புதிய குடும்பத்தின் பெரிய வீட்டுக்கு இடம் பெயர்கிறார்கள்.

இருவருடைய பிள்ளைகளும் துவக்கத்தில் சண்டையிட்டு கொண்டாலும், அடுத்தடுத்து வரும் காட்சிகளில் இருவரும் தீவிரமாக ”காதல்” வயப்படுகிறார்கள்.

உள்ளூரில் சிலரோடு தகராறு. சிறையில் இருந்து நாயகியின் அப்பாவும் வெளியே வருகிறார்.

கடைசியில் என்ன ஆனது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
****

இப்படி ஒரு “காதல்” சமூகத்தில் நிலவுகிறது என்றால், அதை எடுத்து கையாளலாம். அதில் உள்ள உளவியல் குறித்து விவாதிக்கலாம். அப்படி எல்லாம் எதுவும் இல்லை. வழக்கமான ஒரு காதல் கதை. வித்தியாசம் அண்ணன், தங்கை காதல். அவ்வளவு தான். இதைப் படத்தில் இருவரும் தப்பு, தப்பு என அவ்வப்பொழுது உதிர்த்துக்கொண்டே”காதல்” செய்கிறார்கள். இயக்குநருக்கு கல்லா கட்ட, காதலில் இவர்களுக்கு ஒரு வெரைட்டி தேவைப்படுகிறது. அதனால் இப்படி எடுத்து வைத்திருக்கிறார்கள்.

”அண்ணன் தங்கையோடு உறவு கொண்டாலும், அம்மா, தன் மகனுடன் உறவு கொண்டாலும் எனக்கு கவலையில்லை. எனக்கு காண்டம் விற்றாகவேண்டும்” என முதலாளித்துவத்தின் இலாப வெறியை அம்பலப்படுத்திய ஒரு கவிதை முன்பு படித்தது நினைவுக்கு வருகிறது.

படம் நன்றாக ஓடி நன்றாக கல்லாக் கட்டியிருக்கிறது. ஆகையால், Your fault, Our fault என அடுத்தடுத்து படங்கள் எடுக்கும் திட்டமும் அவர்களிடத்தில் இருக்கிறது. பிரைம் வீடியோவில் இருப்பதாக இணையம் சொல்கிறது.

November 5, 2023

A hard day (2014) தென்கொரியா


ஒரு விபத்தும், தொடர் பிரச்சனைகளும்!

நாயகன் ஒரு போலீசு (Homicide) அதிகாரி. அவனின் அம்மா இறந்துவிட்டார். வேலை நெருக்கடியில் தாமதமாகிவிட, மிக வேகமாக அந்த நெடுஞ்சாலையில் காரில் போய்க்கொண்டிருக்கிறான்.

அவன் ஒரு லஞ்ச பேர்வழி போலீசு. அதே வேளையில் லஞ்ச போலீசு ஒழிப்பு அதிகாரிகள் அவன் அலுவல மேஜையை குடைந்துகொண்டிருக்கிறார்கள். அந்த தகவலையும் சக அதிகாரி சொல்கிறார்.

பதட்டம் அதிகமாக, கவனம் பிசகி சாலையில் ஒரு ஆளை தூக்கி அடித்து விடுகிறான். சோதித்தால், அடிப்பட்டவன் செத்துப்போய்விட்டான். போலீசு வண்டி ஒன்று வருகிறது. இருட்டில் மறைத்துவிடுகிறான். இங்கேயே உடலை விட்டுவிட்டால், மாட்டிக்கொள்வோம் என வண்டியின் பின்னால், தூக்கிப்போட்டு கிளம்பிவிடுகிறான்.


அந்த உடலை அவன் மறைப்பதற்குள் நாமே கூட்டு செய்து கொலை செய்தது போல வேர்த்து விறுவிறுத்துப்போய்விடுகிறோம்.

எல்லாம் முடிந்தது என ”நிம்மதி” அடைந்தால், “பாடியை என்னப்பா செய்தாய்?” என மிரட்டி போலீசு ஸ்டேசனுக்கே போனில் அழைப்பு வருகிறது. இவனே ஒரு லஞ்சம் வாங்குகிற ஆள். இவனை விட ஒரு பெரிய ஆள், கிரிமினல் பேர்வழி மிரட்டுகிறான்.

அடுத்தடுத்து அவன் நகர்த்தும் அதிரடி செயல்களால், இவனால் சமாளிக்க முடியாமல் திணறிப்போகிறான். இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பித்தானா? என்பதை விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.

****

போலீசை வைத்து நிறைய கதைகள் வந்திருக்கின்றன. போலீசுக்குள் நடக்கும் முரணை வைத்து தான் இந்த கதை. அதை துவக்கம் முதல் இடையில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும், பிறகு இறுதிவரை சுறுசுறுப்பாக இருக்கும்படி எடுத்திருக்கிறார்கள்.

”இப்படி ஒரு பாசமான மகனை பார்த்ததேயில்லை!” என சரியான நக்கலும் உண்டு. அம்மாவின் இறப்புகாக துக்கம் கேட்க வந்தவர்கள் “நம்ம எல்லோருடைய பணமும் உன் டிராயரில் மாட்டிக்கிடுச்சு! எங்களைக் காட்டிக்கொடுத்துவிடாதே! நீயே பழியை ஏத்துக்கோ!” என்பார்கள்.

உலகிலேயே சட்டத்தை மீறுபவர்கள் யார்? என கேடி, கிரிமினல்கள் என நமக்கு தோன்றும். என்னைக் கேட்டால், முதலிடத்தில் போலீசு தான் என்பேன். சட்டம், நீதிமன்றம், தண்டனை எல்லாம் மக்களுக்கு தான். தங்களுக்கு இல்லை என ஆழமாய் நம்புவர்கள் அவர்கள் தான். கேடி, கிரிமினல்களை கூட நாம் வாழ்நாளில் சந்திக்காமல் வாழ்ந்துவிடமுடியும். ஆனால், நிறைய அதிகாரம் உள்ள போலீசை நல்லது, கெட்டது என இரண்டிற்கும் வாழ்நாளில் எதிர்கொண்டே ஆகவேண்டும்.


போலீசின் சமூகப் பாத்திரத்தை சரியாக புரிந்துகொண்டதால் தான் ஒரு பேட்டியில் இயக்குநர் வெற்றிமாறன் ”என்னால் இயக்குநர் ஹரியை போல போலீசை நாயகனாக வைத்து படம் எடுக்க முடியவே முடியாது” என்றார்.

படத்தில் நடித்த நாயகன், வில்லன் என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். Kim Seong-hun இயக்கியிருக்கிறார். வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள். இணையத்தில் ஆப்பிள் ஓடிடியில் இருப்பதாக Justwatch தளம் சொல்கிறது.

November 2, 2023

Hathway தரும் தொல்லைகள்!


வீட்டிலேயே வாரம் இரண்டு நாட்கள் வேலை செய்ய நேரிடுவதால், இணையம் தேவை என தேடும் பொழுது, எதிர்த்த வீட்டுக்காரர் Hathway இப்பொழுது தான் இணைப்பு கொடுத்தேன். நன்றாக இருக்கிறது என பரிந்துரைத்தார். அவருடைய வேலையே இணையத்தில் தான் என்பதால், நானும் வாங்கிக்கொண்டேன்.


மூன்று மாதங்களில் அடுத்த தெருவுக்கு வீடு மாற வேண்டியிருந்தது. Hathwayக்கு தெரிவித்தேன். வந்து மாற்றிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள்.

ஆனால் அதற்கு பிறகு தான் பிரச்சனை. சிஸ்டத்தில் இணையம் பிரச்சனையில்லை. வீடு மாறும் பொழுது, டிஷ் ஆன்டானாவை விட்டுவிட்டு வந்துவிட்டேன். செய்திகள் மட்டும் தானே ! இணையத்தை வைத்து, யூடியூப்பில் பார்த்து சமாளித்துக்கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டேன். ஆனால், Hathway அதற்கு ஒத்துவரவில்லை. தொலைக்காட்சி நின்று நின்று ஓடிக்கொண்டிருந்தது. வீட்டில் இருப்பவர்கள் கடுப்பாகிவிட்டார்கள்.

இத்தனைக்கும் நான் வாங்கியது குறைவான வேகமெல்லாம் இல்லை. 300 Mbps வேகம் கொண்டது. சோதிக்கும் பொழுது தான் தெரிகிறது. 30ஐ கூட தொடவில்லை. அநியாயம்.


கஸ்டமர் கேர் எண்ணில் தொடர்புகொண்டால், என் எண்ணை ரீசார்ஜ் செய்ய சொல்கிறது. டேய் இதில் தானாடா ஊருக்கே பேசிக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு மட்டும் என்னடா தனி ரீசார்ஜ் என கடுப்பானேன். சென்னையில் அவர்களுக்கும் எங்கும் அலுவலகம் இல்லை. மின்னஞ்சலில் பிரச்சனையை எழுதினால், பத்து நாட்கள் கழித்து, பிரச்சனையை சரி செய்துவிட்டோம் என பதில் அனுப்பினார்கள். ஆனால், பிரச்சனை அதே அளவில் நீடித்தது. ஆக பொய் சொல்லியிருக்கிறார்கள்.

மீண்டும் மின்னஞ்சல் அனுப்பினேன். கண்டுகொள்ளவில்லை. பகுதிக்குள் Hathwayக்கு விளம்பரப்படுத்துவதற்காக, இரண்டுபேர் பிட் நோட்டிஸ் கொடுத்து கொண்டிருந்தார்கள். அதில் ஒருவரை அழைத்து, இவ்வளவு மோசமான சேவை கொடுக்கீறீர்களே! இதுக்கு பிறகும் விளம்பரம் கொடுப்பதெல்லாம், உங்க மன உறுதியை காட்டுகிறது! என கலாய்த்து பேசினேன். மறுத்து பேசவில்லை. போய்விட்டார்.

பத்து நாட்கள் கழித்து பிட் நோட்டிசில் இருந்த தொலைபேசி எண்ணை அழைத்தால், “நான் இப்பொழுது ஏர்டெல்லுக்கு மாறிவிட்டேன். அன்றைக்கு நீங்கள் என்னிடம் தான் பேசினீங்க! ஏர்டெல்லுக்கு மாறிக்கிங்க! Hathway அப்படித்தான்! ஏர்டெல் நல்லா இருக்கு சர்வீஸ்!” என்றார்.

வரச்சொன்னேன். உடனே கனெக்சன் கொடுத்தார்கள். தொலைகாட்சியும் நின்று நின்று ஓடுகிற பிரச்சனை சரியாகிவிட்டது. ஹாத்வேயை விட குறைவான கட்டணம் தான். அப்பாடா! என நிம்மதியடைந்தேன்.

அதற்கு பிறகு ஹாத்வேக்கு பணம் கட்டாமல் விட்டுவிட்டேன். அதற்கு பிறகு தான் தொல்லையே! ஒரு மணிநேரத்துக்கு ஒரு போன். “வேகமே இல்லை. புகார் செய்தாலும் கண்டுகொள்ள மறுக்கிறீர்கள். ஆகையால் ஏர்டெல்லுக்கு மாறிவிட்டேன்.” என பதிலளித்தேன்.

ஹாத்வேயில் அவர்களுக்கென ஒரு பிரத்யேக கஸ்டமர் கேர் சிஸ்டம் இல்லை போலிருக்கிறது. இப்படி துண்டித்துப் போன இணைப்புகளை பேசி சரி செய்து, மீண்டும் இணைய வைத்தால், அவர்களுக்கு நல்ல கமிசன் தருவார்கள் போலிருக்கிறது. நான் சொல்வதை கேட்கும் பொறுமை எல்லாம் அவர்களுக்கு இல்லை. ”பணம் கட்டுங்க! பணம் கட்டுங்க!” என கிளிப்பிள்ளை போல சொல்ல ஆரம்பித்தார்கள். பிறகு தெரியாத எண்களில் இருந்து அழைப்பு வருவதை தவிர்த்தேன்.


இப்பொழுது கோபம் எல்லாம் போய், ஹாத்வே என சொன்னால், நிதானமாக திட்ட ஆரம்பித்தேன். இது ஒரு நாலு நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்பொழுது இவன் பணம் கட்டமாட்டான் என முடிவுக்கு வந்துவிட்டார்கள். நேற்று ஒருவர் போன் செய்து, “மோடத்தை (Modem) திருப்பித்தாருங்கள்” என்றார். தரலைன்னா 2500 தரவேண்டும் என வாட்சப்பில் செய்தியும் அனுப்பினார்கள். வந்து ஒரு ரசீது தந்து ஒரு இளைஞர் வந்து வாங்கியும் சென்றுவிட்டார். இன்று காலையில் ஒருவர் போன் செய்து, அதே மோடத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார். நேற்று ஒருவர் வாங்கிப்போய்விட்டார் என்றேன் நிதானமாக. ”எத்தனை மணிக்கு வந்தார்? ” என கேட்டதும், “ஆமாம்பா! எத்தனை மணி, ஆள் எப்படி இருந்தார்? இன்னும் என்னென்ன கேள்விகள் கேட்பீங்க! நல்லா திட்டிருவேன்! போனை வைச்சிரு தம்பி! என்றேன். வைத்துவிட்டார்.

குறிப்பு : இந்த பதிவை எழுதிவிட்டு, புகைப்படங்கள் தேடும் பொழுது, என்னைப் போலவே தொல்லைகள் அனுபவித்தவர்கள் யூடியூப்பில் பேசியிருக்கிறார்கள். படங்களை பகிர்ந்திருக்கிறார்கள். அதைத்தான் மேலே பகிர்ந்துள்ளேன்.

October 31, 2023

இப்படி துவங்குகிறது ஒரு கொரிய‌ படம்.


அந்த இரவில் ஒரு நெடுஞ்சாலையில் அவன் வேகமாக காரில் வீட்டிற்கு போய்கொண்டிருக்கிறான். அவன் ஒரு போலீசு. அலுவலகத்தில் அவன் அலுவலக மேஜையை லஞ்ச ஒழிப்பு போலீசு படை குடைந்துகொண்டிருக்கிறது.


அவனின் அம்மா அன்றைக்கு இறந்துவிட்டார். உறவினர்கள் எல்லாம் வந்துவிட, அங்கு செல்லாமல் வேலை நெருக்கடியில் தாமதப்படுத்திக்கொண்டிருக்கிறான். அவன் தங்கை அவனை மோசமாக திட்டுகிறார்.

பொண்ணு ”எனக்காக சாக்லெட் கேக் வாங்கி வருவதாக உறுதி கொடுத்துள்ளீர்கள். வாங்கிட்டு வந்துவிடுவீர்கள் தானே!” என மழலையோடு போனில் கேட்கிறது.

மொபைலில் பேசிக்கொண்டே ஓட்டியதில், எதிரே வந்த மனிதனை கவனிக்கவில்லை. அடித்து தூக்கிவிடுகிறான். கவனித்தால், அவன் செத்துவிட்டான். காரின் முன் கண்ணாடியில் கொஞ்சம் சேதமாகியிருக்கிறது. ஒரு போலீசு வண்டி சைரனோடு வருகிறது. அந்த உடலை அவசர அவசரமாய் இருட்டில் தள்ளிவிடுகிறான். அந்த வண்டி கடந்து போய்விடுகிறது.

உடலை இங்கு விட்டால் ஆபத்து, என்ன செய்வது என பிறகு பார்த்துக்கொள்ளலாம் என‌ காரில் பின்னால் தூக்கிப்போட்டு கிளம்பிவிடுகிறான்.

போகிற வழியில்... இரவில் சோதனையில் ஈடுபடும் போலீசு நிற்கிறது. இவனையும் நிறுத்துகிறது. "தான் ஒரு போலீசு" என்கிறான். அவர்கள் அதை நம்பவில்லை. ஊதச் சொன்னால், "அம்மா இறந்துவிட்டார். ஆகையால், கொஞ்சமாய் குடித்திருக்கிறேன்" என்கிறான். முன் கண்ணாடி லேசாக சேதம் ஆகியிருப்பதை அந்த போலீசு பார்க்கிறது. டிக்கியை சோதனை செய்யப் போகிறது. அதையும் சமாளித்து வீட்டுக்கு போகிறான்.

வீட்டுக்கு போனால், சக போலீசு அதிகாரிகள் இறந்த அம்மாவிற்காக துக்கம் விசாரிக்க வருகிறார்கள். "உன் டிராயரில் சோதனையிட்டார்கள். பணம் முழுவதும் மாட்டிக்கொண்டது." என்கிறார்கள். "அது என்ன என் பணம் மட்டுமா! உங்களுடைய பணமும் தான் இருக்கிறது!" என கோபமாய் சொல்கிறான். "நீ பழியை ஏத்துக்கோ. எங்களை காப்பாற்று!" என்கிறார்கள்.

முதல் பத்து நிமிடம் இப்படி போகிறது.

படம் : A Hard day

தீபாவளிக்கு 16895 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - செய்தியும் கேள்வியும்!


தினசரி சென்னையில் இருந்து இயக்கக்கூடிய 2100 பேருந்துகளுடன், 3167 சிறப்பு பேருந்துகளுடன் சேர்த்து 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 9467 பேருந்துகள் இயக்க இருக்கிறார்கள் என சொல்லிக்கொண்டே போகிறார்கள்.


கூடுதலாக இயக்குகிற பேருந்துகள் பண்டிகைகளுக்கு மட்டும் எங்கிருந்து திடீரென வானத்தில் இருந்து குதிக்கின்றன என என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பேருந்து டிப்போவில் நிறுத்தி வைத்திருந்து, பண்டிகைகளுக்கு மட்டும் இயக்குவது என்பது சாத்தியமாகாது. வண்டி கெட்டுப்போகும்.

தனியார் பேருந்துகளை அதிகமாக்க வாய்ப்பில்லை. அவர்களும் அளவாகத்தான் வைத்து ஓட்டுவார்கள். கூடுதலாக வைத்திருக்கும் பேருந்துகளை ஆன்மீக சுற்றுலா, பிற சுற்றுலாவிற்கு அனுப்புவார்கள். அந்த பேருந்துகளின் ஆரோக்கியமும் பலவீனமாக தான் இருக்கும். சமீபத்தில் குன்னூர் மலையில் தொழில்நுட்ப பிரச்சனையால் ஒரு பேருந்து கீழே விழுந்தது, பலர் பலியானதை நினைவுப்படுத்திக்கொள்ளுங்கள்.

வேலூர், பாண்டிச்சேரி என நான்கு, ஐந்து மணி நேரத்திற்குள் போய்ச்சேரும் பேருந்துகளை கூடுதலாக இன்னொரு பயணம் போய்வரச்செய்யலாம். ஆனால், திருச்சியைத் தாண்டி விட்டால், போக ஒருமுறை, வர ஒருமுறைக்கே 20 மணி நேரம் தாண்டிவிடும். சாத்தியமில்லை. நகர் பேருந்துகளை தூரமாய் ஓட்டுவதற்கு அனுப்புவதற்கும் வாய்ப்பில்லை. அந்த பேருந்துகளின் ஆரோக்கியம் நாம் அறிந்தததே!

ஆக, இந்த அறிவிப்பில் பாதி பொய் இருக்கிறது. இல்லையெனில் ஏதோ மேஜிக் செய்தால் மட்டுமே இத்தனை கூடுதலான பேருந்துகளை இயக்குவது சாத்தியம்.

நீங்கள் இதுப்பற்றி சிந்தித்து இருக்கிறீர்களா? அல்லது இது உண்மை தான் என்றால், அதற்கான விளக்கத்தை கொடுத்தால் நல்லது. இல்லையெனில் விக்கிரமாதித்தன் கதையில் வேதாளம் சொல்வது போல உண்மை தெரிந்தும் சொல்லாமல், அமைதியாக கடந்து சென்றால், உங்கள் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும். :)

October 28, 2023

Equalizer – 3


ஒரு ஒயின் தொழிற்சாலையில் அதகளம் செய்துவிட்டு, வெளியே வரும் பொழுது, மாபியா கும்பலைச் சேர்ந்த ஒரு சிறுவனால் நாயகன் சுடப்படுகிறார்.


அங்கிருந்து அரை மயக்கத்தில் நகரும் அவரை ஒரு போலீசு காப்பாற்றி, இத்தாலிக்கு அழைத்து வந்து, மருத்துவம் பார்க்கிறார். மெல்ல மெல்ல தேறி வருகிறார். கடற்கரையோரம் உள்ள அந்த ஊரின் மக்களின் இயல்பும், அமைதியான வாழ்க்கையும் அவருக்கு மிகவும் பிடித்துப்போய்விடுகிறது.

அங்கு ஒரு மாபியா கும்பல் மக்களை அங்கு இருந்து காலி செய்ய வைத்து, தங்கும் விடுதி, சூதாட்டவிடுதி எல்லாம் கட்ட திட்டமிடுகிறார்கள். மிரட்டுகிறார்கள். வதைக்கிறார்கள். அதிகப்பட்சம் கொலை செய்கிறார்கள்.

நாயகன் சொல்லிப்பார்க்கிறார். பிறகு மோதலாகிவிடுகிறது. பிறகு என்ன ஆனது என்பதை ஆக்சன் காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார்கள்.
***

இப்படிப்பட்ட கதைகள் நம்ம ஆந்திராவிற்கு சர்வ சாதாரணம். இதுவரைக்கும் 200 படங்களாவது இப்படி வந்திருக்கும். நம்மூரிலும் இப்படி கதைகள் நிறைய உண்டு. இப்படி ஒரு கதையில் டென்சிலை நடிக்க வைத்திருப்பது ஆச்சர்யம்.

இடைவேளை வரை காயம்பட்ட நாயகன் ஊன்று கோலுடன் நடக்கிறார். அப்படித்தான் படமும் நகர்கிறது. இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் சுறுசுறுப்பாகிறது.

Equalizer தொடர்ச்சியில் இதுவே கடைசிப் படம் என படக்குழு அறிவித்திருக்கிறதாம். விமர்சகர் ஒருவர் சொன்னது போல, படத்தைப் பார்த்து இந்த முடிவுக்கு வந்து இருப்பார்கள் என்றார். உண்மை.

செப்டம்பரில் திரையரங்குக்கு வந்து, இப்பொழுது ஆப்பிள், அமேசானில் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.

டென்சிலை ரசிப்பவர்கள் பார்க்கலாம். மற்றபடி ஒரு வழக்கமான ஆக்சன் படங்களில் இதுவும் ஒன்று. அவ்வளவு தான்.

October 25, 2023

Marshland (2014) ஸ்பானிஷ் சதுப்பு நில கொலைகள்


1980 கால கட்டம். ஸ்பெயினில் ஒதுக்குப்புறமான கிராமத்தில் நடக்கிறது கதை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இளம் சகோதரிகள் திடீரென காணாமல் போகிறார்கள். விசாரிப்பதற்காக நகரத்தில் இருந்து இரண்டு போலீசு அதிகாரிகள் அங்கு வருகிறார்கள்.


விசாரிக்கும் பொழுது, அந்தப் பெண்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியேறி நகரத்திற்கு செல்லும் எண்ணத்தில் இருந்தவர்கள் என்றும், அவர்கள் பாலியல் ரீதியாக சீரழிந்தவர்கள் என பேசுகிறார்கள்.

இரண்டாவது நாளில் இரு பெண்களும் பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்து, ஒட்டுத்துணியில்லாமல் கால்வாயில் எறிந்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.

விசாரணையில், மெல்ல மெல்ல முன்னேறுகிறார்கள். இந்த கொலைகளுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? கொலையாளியை கண்டுப்பிடித்தார்களா என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

***

எந்தவித மிகையுமில்லாமல், கிராமப்புறத்தில் இயல்பாக ஒரு திரில்லர். பல விருதுகளை வென்று, பெயர் பெற்ற படமாகவும் இருக்கிறது.


80 காலக்கட்டம் என்பதால் அதற்கொரு நிறத்தில் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். அது ராவாக நன்றாக இருக்கிறது. அந்த ஊரின் நிலவியலை நன்றாக காட்டியிருந்தார்கள்.

இரண்டு போலீசுகளில் ஒருவர் 50+, இன்னொருவர் 30+ என இருக்கிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் புரிதல், விலகல் இரண்டையும் நன்றாக காட்டியிருக்கிறார்கள்.

இருவரில் மூத்த அதிகாரி ஸ்பெயினில் நிலவிய சர்வாதிகார ஆட்சியின் பொழுது ஒரு மூர்க்கமான அதிகாரியாக இருந்ததாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு இளம்பெண்ணை சுட்டுக்கொன்றவர் எனவும் படத்தின் இடையில் ஒரு பத்திரிக்கையாளர் குறிப்பிடுவார். அந்த சர்வாதிகார ஆட்சியைப் பற்றி தேடிப்படிக்கவேண்டும் என்ற ஆர்வம் பிறந்திருக்கிறது.

Alberto Rodríguez இயக்கியிருக்கிறார். நல்ல திரில்லர். பாருங்கள். இப்போதைக்கு எந்த ஓடிடியிலும் இல்லை. வேறு வகைகளில் முயலுங்கள்.

October 24, 2023

இறுகப்பற்று (2023)


“உறவு என்பது ரப்பர் பாண்ட் போல தான். கணவன் மனைவி இருவரும் எதிரெதிர் திசையில் இழுக்க, அறுபடத்தான் செய்யும். சிலர் அதை தூக்கிப்போட்டுவிட்டு, புதிது என நகர்ந்துவிடுகிறார்கள். சிலர் முடிச்சுப்போட்டு, மீண்டும் ஒட்டவைத்துக்கொள்கிறார்கள்.”


- படத்திலிருந்து...!

மூன்று இளம் ஜோடிகள். ஒரு உளவியல் மருத்துவர் தன்னிடம் ஆலோசனைக்காக வரும் தம்பதிகளுக்கிடையே நடக்கும் உரசல்களினால், பிரிவுகளினால்… தன் வாழ்க்கையிலும் அப்படி வந்துவிடும் என்ற பதட்டத்தில் தன் கணவனிடம் நடந்துகொள்ளும் அணுகுமுறையால் கசப்பு ஏற்படுகிறது.

ஒருவனுக்கு சொந்தமாய் தொழில் செய்யவேண்டும் என பெரும் ஆசை. ஆனால், அதற்காக அவன் குடும்பம் அதற்காக படிக்கவிடாமல், அதற்காக ஒத்துழைப்பு தராமல் அவனை கட்டாயப்படுத்தி, ”பாதுகாப்பான வாழ்க்கை” என வேறு வாழ்க்கைக்குள் தள்ளுகிறது. அந்த மன அழுத்தத்தில் அவன் செய்த செயல்களால் குடும்பத்திற்குள் என்ன ஆனது?

கணவன் – மனைவிக்குள் எழும் ஈகோ எப்படியெல்லாம் அவர்களை தொல்லை செய்கிறது? அதை புரிந்துகொண்டு, மாற்றிக்கொண்டார்களா? பிரிந்தார்களா என மூன்று ஜோடிகளின் வழியே உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்கள்.

***

தமிழ் பட உலகம் காதலை 360 டிகிரியிலும் காதலை விதவிதமாக எடுத்து தள்ளியிருக்கிறது. ஆனால் தம்பதிகளுக்குள் எழும் அக சிக்கல்களை விவாதித்தப் படங்கள் தமிழில் குறைவு. அதிலும் நல்ல படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இந்தப் படம் எடுத்துக்கொண்ட கதைக்களனைத் தாண்டி வேறு எங்குமே பயணிக்கவில்லை. அதே போல கணவன் மனைவி என பிரச்சனை என பழைய பஞ்சாயத்துகளை எடுத்து கையாளவும் இல்லை. இன்றைய இளம் தலைமுறைகளிடம் என்ன விதமான சிந்தனை எழுகிறது? எப்படிப்பட்ட புரிதல்களுடன் வாழ்கிறார்கள்? அதை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதை நன்றாக பதிந்திருக்கிறார்கள்.

நடிகர்கள் விக்ரம் பிரபு – ஷ்ரத்தா, விதார்த் – அபர்ணதி, ஸ்ரீ – சானியா என மூன்று ஜோடிகளும் நன்றாக நடித்திருக்கிறார்கள். தன் ஆசை, தன் வாழ்க்கை குறித்து விதார்த் தழுதழுத்து சொல்லும் இடம் அருமை. இப்படி சில இடங்கள் நல்ல அழுத்தமான காட்சிகளாக இருக்கின்றன. இயக்குநர் யுவராஜ் இரண்டு வடிவேல் படங்கள், இன்னொரு படம் என மூன்று படங்கள் இயக்கி தெரியாமல் போயிருந்தாலும், இந்த படம் அவருக்கு நிச்சயம் ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறது. வாழ்த்துகள்.

சமீபத்தில் சித்தாவுடன் வெளிவந்த படங்களில் இதுவும் நல்லபடம். இந்தப் படம் வெற்றி பெற்றதாய், ஒரு விழா கொண்டாடினார்கள். விரைவில் ஓடிடிக்கு வந்துவிடும். பாருங்கள்