ஒரு ஆள் பழைய சிந்தனை கொண்டவராய் இருந்தால், என்னப்பா ஹைதர் காலத்து ஆளாக இருக்கிறாயே?! என்பார்கள். உண்மையில், இந்த லால் பாக் திப்புச் சுல்தானின் அப்பா ஹைதர் அலியால் 1760ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. திப்புச் சுல்தான் இன்னும் விரிவுப்படுத்தியிருக்கிறார்.
நகரத்தின்
மையத்தில் 240 ஏக்கரில் பரந்து விரிந்து நிற்கிறது இந்த பூங்கா. வெளிநாடுகளில் இருந்து விதவிதமான மரங்கள், செடிகளை
பார்த்து பார்த்து வரவழைத்து கவனமாய் வளத்திருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் சிவப்பு
மலர்களை நிறைய வளர்த்ததால், சிவப்பு தோட்டம் (Lal bagh) என பெயர் காரணமாகியிருக்கிறது.
265 ஆண்டுகள் என்பது ஒரு நீண்ட பெரிய வரலாறு தான். அதனால் பெரிய, மிகப்பெரிய மரங்கள் இருக்கின்றன. 250 வருட ஒரு இலவம் பஞ்சு மரம் (silk tree) ஒன்று இருக்கிறது. மரமாய் இருந்து, கால ஓட்டத்தில் மில்லியன் ஆண்டுகள் கடந்து அது இப்பொழுது பாறையாய் இருக்கிறது. வேறிடத்தில் இருந்து இந்த இடத்திற்கு கொண்டு வந்து பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். நல்ல விசயம்.
ஒரு ஏரி உள்ளே
இருக்கிறது. அதன் அருகில் செயற்கையாய், மணிக்கு ஒருமுறை 1 முதல் 1.15. 2 முதல்
2.15 என்ற கணக்கில் கால் மணி நேரம் அருவி போல ஒன்றை செயற்கையாய் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
கண்ணாடி மாளிகை இருக்கிறது. இதில் குடியரசு தினத்திலும், சுதந்திர தினத்திலும்
சிறப்பாக மலர் கண்காட்சி நடத்துகிறார்கள்.
தமிழ் புத்தாண்டு
தினத்தில் உள்ளே போயிருந்தோம். குடும்பம் குடும்பமாய் ஒரே விதமான ஆட்கள் அவர்களுடைய
வண்ணம், பெரிய சிவப்பு பொட்டு வைத்துக்கொண்டு என ஆயிரக்கணக்கில் வந்துகொண்டே இருந்தார்கள்.
அசாம் மக்களாக இருப்பார்கள், அவர்களுக்கு இது விசேச நாள் என நண்பர் கணித்தார். ஆனால் பேட்டரி கார் ஓட்டியவர் இவர்கள் நேபாளத்துக்காரர்கள்.
அவர்களுக்கு இன்று புத்தாண்டு என எங்கள் குழப்பத்தை தெளிவுப்படுத்தினார். மகிழ்ச்சி.
விடுமுறை
நாட்களில் கூட்டம் அதிகம். வார நாட்களில் கூட்டம்
குறைவாக இருக்கும் என்கிறார்கள். ஆகையால் நாட்களை திட்டமிட்டு செல்லுங்கள்.
உள்ளே நுழைய கட்டணமாய் பெரியவர்களுக்கு ரூ. 50, சிறியவர்களுக்கு ரூ. 25 என்றும் விசேச நாட்களில் இன்னும் கூடுதல் விலை விற்கிறார்கள்.
மைசூரில்
நகரத்துக்கு உள்ளேயே ஒரு விலங்கியல் பூங்கா ஒன்றை நடத்தியது ஆச்சர்யம் தந்தது. நிறைய
விலங்குகளும் உற்சாகமாய் வலம் வந்தன. பர பரவென
இயங்கும் ஒரு மெட்ரோ நகரத்துக்கு மத்தியில் 250 ஏக்கரில் லால் பாக் பூங்கா மட்டும்
மெதுவாக சுவாசிக்க செய்கிறது எனலாம்.
- - இரா.
முனியசாமி
-
14/04/2026





0 பின்னூட்டங்கள்:
Post a Comment